வியாழன், 16 ஜனவரி, 2020

சென்னைக்காரர்கள் என்றால் மோசமா?


மின் ரயில் வண்டியில் அமர்ந்திருந்தான் அவன்.  அருகில் இருந்தவர் அலைபேசியில் பேசிக்கொண்டே வந்தவர், இவனிடம் தான் இறங்க வேண்டிய நிறுத்தம் பற்றிக் கேட்டு, அந்த இடம் வந்தால் சொல்லக் சொன்னதோடு, அடுத்தடுத்த நிறுத்தங்களில் சந்தேகம் கேட்டிருக்கிறார்.  "இன்னும் இருக்கு...   வந்தால் கண்டிப்பா சொல்றேன்" என்று இவன் சொல்லி இருக்கிறான்.

ஒருவர் செய்யும் வேலையைப் பார்த்தால் பார்த்துக் கொண்டிருப்பவருக்கும் அதையே செய்யத் தோன்றும்....  இது மனித இயல்பு.

நின்று கொண்டிருந்த ஒருவர், அவர் இவனிடம் சந்தேகம் கேட்பதைப் பார்த்துக் கொண்டிருந்தவர்,  தான் செல்ல வேண்டிய இடம் பற்றிக் கேட்டிருக்கிறார்.  ஒரு ஆரம்பம் இல்லாவிட்டால் எல்லோருக்குமே ஒரு தயக்கம் இருக்கும்போல!  அதேபோல பயணம் செய்கிறவர்களில் பாதிபேர் இடம் பற்றிய சந்தேகத்துடனேயே பயணிக்கிறார்களோ என்றும் இவனுக்கு தோன்றும்.

இவன் அவரை நிமிர்ந்து பார்த்தவன், வயதானவர் என்று தெரிந்ததும் முதலில் எழுந்து அவரை உட்காரவைத்து விட்டு அவரிடம் 'மின்வண்டி நீங்கள் சொல்லும் இடத்துக்குப் போகாது.   இன்ன நிறுத்தத்தில்  இறங்கி அங்கிருந்து இன்ன இன்ன எண் பேருந்துகளைப் பிடித்து அங்கு செல்லலாம்' என்று சொல்லி இருக்கிறான்.  அவர் மறுபடி மறுபடி கேள்விகள் கேட்டுத் தெளிந்து கொண்டார்.

அந்த அருகில் அமர்ந்திருந்தவர் அலைபேசுவதை இடைநிறுத்தி விட்டு "தம்பி...   நீங்கள் இந்த ஊரா?"  என்று கேட்டிருக்கிறார்.   இவன் "ஆம்" என்று சொல்லியிருக்கிறான்.  போன் பேச்சைத் தொடர்ந்தவர், மறுபடியும் நிறுத்தி இடைவெளி விட்டு, இவனிடம் "முதல்லேருந்தே சென்னைதானா?" என்று கேட்திருக்கிறார்.  இவன் "ஆமாம்..    நான் பிறந்ததே சென்னையில்தான்...   ஏன் இப்படி மறுபடி மறுபடி கேட்கறீங்க?" என்று கேட்டிருக்கிறான்.  "இல்லை..    சென்னைக் காரங்க என்றால் இப்படி  உதவ மாட்டார்கள்...   பொறுமையாகப் பேச மாட்டார்கள்...   அதுதான் கேட்டேன்" என்றாராம்.

"நீங்கள் எந்த ஊர் என்று அவரிடம் கேட்டாயா?" என்று இவனிடம் கேட்டேன்.  

அந்த இவன் என் மகன்!  

"இல்லை...   தோன்றவில்லை...   அவருக்கு என்ன அனுபவமோ...  சந்தேகமோ..   சென்னைக்காரர்கள் மேல் இப்படியொரு அவநம்பிக்கை...  ஆனால் கேப் விட்டு கேப் விட்டு ஏன் கேள்வி கேட்டாரோ....    போனில் இதைப் பற்றி பேசியது போலவும் தெரியவில்லை" என்றான்.

சென்னைக்காரர்கள் மேல் மற்ற ஊர்க்காரர்களுக்கு இப்படியொரு அவநம்பிக்கை இருக்கிறதா?  அல்லது எல்லாருக்குமே வெளியூர் செல்லும்போது அந்த ஊர்க்காரர்கள் மேல் இப்படி அவநம்பிக்கை தோன்றுமா?

நானே சமீபத்தில் பாரிஸ்கார்னர் சென்றபோது நான் போகவேண்டிய முகவரி இடத்தின் அருகிலேயே நின்று ஆனால் அது கண்ணில் படாததால் தெரியாமல் அங்கு ஓரிருவரைக் கேட்க, அவர்கள் நான் வந்த திசையைக் காட்டி அங்கே செல்லச் சொன்னார்கள்.  எதற்கும் இருக்கட்டும் என்று கூகுள் மேப் போட்டுக் கொண்டோம்.  அது தன் பங்குக்கு தானும் கொஞ்சம் எங்களைக் குழப்பியது.   

அருகிலிருந்த ஆட்டோக்காரரைக் கேட்க,  மொபைலில் ஏதோ சுவாரஸ்யமாகப் பார்த்துக் கொண்டிருந்தவர், எதிரே இருந்த வடைக் கடையைக் காட்டி, "அதோ வடை போடறாரே...    அவரைக் கேளுங்கள்...   சரியாய்ச் சொல்வார்" என்று சொல்லி விட்டு மறுபடி தன் வாட்ஸாப் வீடியோவில் ஆழ்ந்தார்.    அந்த வடைக் கடைக்காரரைக் கேட்டால் அவர் நாங்கள் எங்கிருந்து கிளம்பினோமோ அங்கேயே கை காட்டினார்.   அங்கே சென்றால் கண்முன்னே இருந்த கடையை விட்டுவிட்டு சுற்றி இருக்கிறோம் என்று தெரிந்தது!

தஞ்சாவூரில் நான் இருந்த காலத்தில் எங்கள் வாத்தியார் எஸ்  ஹரிஹரன் "அய்யம்பேட்டை வேலை செய்யறியா?" என்று கேட்பார்.  அதென்ன அய்யம்பேட்டை வேலை என்று கேட்டால்,  அது வடிவேலு நகைச்சுவை போன்றது.   இருவர் அல்லது இருவருக்கு மேற்பட்டவர்கள் பேசிக்கொண்டிருப்பார்கள்.   அவர்களில் ஒருவர் அங்கு தாண்டிச் செல்பவரைப் பார்த்து, அழைத்து நியாயம் கேட்பது போலப் பேசி அவரையே மாட்டி விட்டு விடுவார்கள்.  

================================================================================================

தோசை கடை :

இப்போதெல்லாம் யு டியூப் சேனல்கள் பெருகி விட்டன.  ஒவ்வொன்றுக்கும் சேனல், விளம்பரம்.  சமீபத்தில்  தோசைக்கடை பற்றி யு டியூபில் பார்த்தேன்.  வெறும் தோசை மட்டுமே தயாரித்து விற்பனை செய்கிறாராம்.  அவ்வப்போது கொஞ்சம் அடை.  படத்தில் தோசையின் தோற்றம் பார்க்கும்போது வீட்டு தோசை போலத் தோன்றுகிறது..   நீங்கள் சென்னை வாசியா?  மாம்பலத்துக்கு அருகில் வசிப்பவரா?  உங்களுக்கு உதவலாம்!



===================================================================================================

பேஸ்புக்கில் ஒரு தொடர்பதிவுக்கு ரேவதி வெங்கட் அழைப்பு விடுத்திருந்த போது பதிவிட்டது..  இது மாதிரி அவ்வப்போது சுவாரஸ்யமான அரட்டைகள் அங்கு இடம்பெற்றது உண்டு..   

பழைய படங்களில் படகில் சென்று கொண்டே பாடும் காட்சிகளைக் கொண்ட பாடல்கள் காதுக்கு விருந்தளித்தன. இந்த 'ஆஹா, இன்ப நிலாவினிலே, அப்புறம் 'முல்லை மலர் மேலே' 'உலவும் தென்றல் காற்றினிலே' போன்ற பாடல்கள்.  திறந்த மார்புக் கதாநாயகர்கள்!

இந்த ஆஹா இன்பநிலாப் பாடலை மூன்று ஜோடிகள் (ஒரே காட்சியில்) பாடுகிறார்கள்!  ஒரே குரலை,  ஒரே காட்சியில்,  ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் உபயோகித்துப் பாடும் காட்சி சினிமாவில் ரொம்ப அபூர்வம்!  ('காவியத் தலைவி' படத்தில் பி. சுசீலா குரல் இரண்டு பேருக்கு - ஒரே காட்சியில். ஆனால் ரெண்டுமே சௌகார் ஜானகி! இளம், மற்றும் வயதான!!). 

கண்டசாலா குரலில் இருப்பது காந்தக் கவர்ச்சி. சில பாடகர்களுக்குத்தான் இது போல அவர்கள் பாடிய பாடல்களில் 99% ஹிட் தர இயலும். இதே போல இன்னொரு பாடகர் ஜெயச்சந்திரன். அழகிய சாவித்ரி. ஒல்லி ரெங்காராவ்!

அப்புறம் வந்த நவீன, ஆனால் 'கருப்பு - வெள்ளை' படகுப் பாடல் 'வசந்த கால நதிகளிலே'. ஜெயச்சந்திரன் குரல் சுகம். கவர்ந்த அந்தாதி!

தியாகம் படத்தில் டி எம் எஸ் குரலில் 'நல்லவர்க்கெல்லாம்' பாடல் கேட்க சுகம். பாடல்வரிகள் அர்த்தம் நிறைந்தவை.
கருப்பு வெள்ளையில் பார்க்கும்  நீர்நிலைகளை வண்ணத்தில் பார்ப்பது(ம்) சுகம்.

இளையராஜா இசையில் 'வருது வருது இளங்காத்து' பாடல் எஸ் பி பி குரலில் மயக்கும். சத்யராஜின் முரட்டு அபிநயங்கள், குஷ்'ஷின் கவர்ச்சிகளையும் மீறி இளையராஜாதான் ரசிக்க வைப்பார்.

அப்புறம் 'எந்த தேசத்தில் தேசத்தில்' பாடல். 'பிரியமான தோழி'யில். என்னதான் மாதவஜோ கவர்ச்சி இருந்தாலும் 'மான் குட்டியே'யின் சுவாரஸ்யம் இதில் இல்லை. :)

Revathy Venkat கேட்டுக் கொண்டபடி! (முடிந்தவரைச்) சுருக்கமாக!

========================================================================================

2013 இல் பகிர்ந்த ஒரு கவிதை...  எத்தனையாவது முறை பகிர்கிறேனோ...   கவிதையைக் காணோமே என்று தேடும் நண்பர்களுக்காக...   குறிப்பாக பானு அக்கா!  




==========================================================================================

பொக்கிஷம் :

நெகட்டிவ் ப்ராபல்யம் அப்போதே இருந்திருக்கிறது!



ஜோக்!  சொல்லி விடவேண்டும் இல்லையா?  அப்புறம் சிரிப்பு வராவிட்டால் ஜோக் எங்கே என்று கேட்பார்கள்!

ஸ்விக்கியின் ஆரம்பப் புள்ளி!


110 கருத்துகள்:

  1. அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு...

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
  2. அனைவர்க்கும் அன்பின் வணக்கம்....

    பதிலளிநீக்கு
  3. அனைவருக்கும் உழவர் திருநாள் வாழ்த்துகள்..

    மேழிச் செல்வமும் காளைச் செல்வமும்
    குறைவு படாது வாழ்க....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்துகளுக்கு நன்றி.   உங்களுக்கும் வாழ்த்துகள்.  ஆநிரைகளின் சிறப்பைதான் உங்கள் தளத்தில் படித்துக் கொண்டிருக்கிறேன்.  அங்கு சொல்லி இருக்கும் உங்கள் ஆதங்கத்தில் பங்கு கொள்கிறேன்.

      நீக்கு
  4. அடை, மடை, கடை, விடை..

    ஆகா இதுவல்லவோ நடை!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி.   அந்த வார்த்தையில் இருந்த ஒரு பிழையை மாற்றிவிட்டேன்!

      நீக்கு
  5. அமைதியான நதியினிலே ஓடம்..
    பாடலைப் படகுப் பாட்டில் மறந்ததேனோ!?....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்...  இந்தப் பாடல்களை அப்போது கமெண்ட்ஸில் சொல்லியிருந்தார்கள்.

      நீக்கு
  6. இன்னொன்று-

    ஆசையே அலை போலே
    நாமெல்லாம் அதன் மேலே!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாவற்றையும் நாமே சொல்லி விட்டால் எப்படி..    படிப்பபவர்களுக்கும் சொல்ல ஒரு பங்கு தரவேண்டுமல்லவா?!!

      நீக்கு
    2. இன்னும் நிறையவே இருக்கின்றன
      படகுப் பாடல்கள்..

      இன்னொரு இனிய பாடல்...
      மேகம் கறுக்கையிலே... (வைதேகி காத்திருந்தாள்..)

      அப்போதெல்லாம் நிறைய பாடல்களின் நடுவே ஓடக்காட்சிகள் இருக்கும்...

      இயற்கை எனும் இளைய கன்னி...
      ஓடக் காட்சியில் தான் இந்தப் பாடல் தொடங்கும்...

      இந்தப் பாடல் எதிர்வரும் வாரத்தில் விருப்பப் பாடலாக வரட்டுமே!...

      நீக்கு
    3. //..நாமெல்லாம் அதன் மேலே!...

      மேலே இருக்கிறவரை ஆபத்தில்லை!

      நீக்கு
    4. ஆமாம்...
      நீந்தத் தெரிந்தவன் தண்ணியில இருந்தால் ஆபத்து தான்!...

      நீக்கு
  7. ...பழைய படங்களில் படகில் சென்று கொண்டே பாடும் காட்சிகளைக் கொண்ட பாடல்கள் காதுக்கு விருந்தளித்தன... திறந்த மார்புக் கதாநாயகர்கள்!//

    ஓ! கண்ணுக்கும் விருந்தாகிவிட்டனரோ..!

    பதிலளிநீக்கு
  8. அனைவருக்கும் காலை வணக்கம். இன்று குடும்ப ஒற்றுமைக்காகவும்,உடன் பிறந்தவர்களின் குறிப்பாக சகோதரர்களின் நலத்திற்காக சகோதரிகள் வேண்டும் நாள். எ.பி.சகோதரர்களின் நலத்திற்காகவும், எ.பி.குடும்ப ஒற்றுமை ஓங்கவும் சூரிய பகவானை வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி.   சகோதரர்களின் நலத்துக்காக சகோதரிகளா?  அது வேறு நாள் இல்லையோ?  இன்று என் உடன்பிறந்த சகோதரிகளை அழைத்து நாங்கள் தருவோம்; தந்தோம்.  கலவை சாதம் செய்து கொண்டாடினோம்.

      நீக்கு
    2. கனுப்பொடி வைப்பதே சகோதரர்களின் நலனுக்காகத் தான். அதான் வேண்டிப்பாங்க. கார்த்திகை, கனுப்பொடி இரண்டுமே சகோதரர் நலனுக்காக சகோதரிகள் வேண்டிக்கொள்வது. சரி, சரி, நீங்க சீரை ஞாபகமா அனுப்பி வைச்சுடுங்க! நான் இன்னிக்கு இப்போத் தான் கொஞ்ச நேரத்தில் வைக்கப் போறேன்.

      நீக்கு
  9. ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது படத்தில் கூட "மேகம் கருக்கையிலே உள்ள தேகம் குளிருதடி.."என்று ஒரு படகு பாடல் உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "மேகம் கருக்கையிலே புள்ள தேகம் குளிருதடி.." பாடல் இடம் பெற்ற படம் : வைதேகி காத்திருந்தாள்.

      நீக்கு
  10. தேனிலவு படத்தில் இடம் பெற்ற படகுப்பாடலை படமாக்கிய பொழுது படகிலிருந்து தவறி ஏரியில் விழுந்த வைஜயந்தி மாலாவுக்கு சிகிச்சை அளிக்க வந்த டாக்டர் பாலியைத்தான் பின்னாளில் அவர் மணந்து கொண்டார்.

    பதிலளிநீக்கு
  11. வாழ்க்கை எனும் ஓடம்..
    வழங்குகின்ற பாடம்...

    KB சுந்தராம்பாள் அவர்கள் பாடியது...

    படம் இந்நேரம் நினைவுக்கு வந்திருக்குமே...

    பதிலளிநீக்கு
  12. நல்ல கவிதைக்கு நன்றி. சென்னையை பூர்வீகமாக கொண்டவர்கள் குறைவுதான். பெரும்பான்மையோருக்கு சென்னையைத் திட்டாமல் இருக்க முடியாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சென்னைக்கு வந்த புதிதில் நான் ரொம்பப் பேருங்க கிட்ட ஏதேனும் வழி கேட்டு, ஒரே பதிலைப் பெற்றதுண்டு. " எனக்குத் தெரியாது. நான் ஊருக்குப் புதுசு" என்று சொல்லி நழுவிவிடுவார்கள்.

      நீக்கு
  13. பெங்களூரில் 99 தோசாஸ் என்று ஆட்டோவில் மொபைல் சிற்றுண்டி சாலை போல அமைத்திருப்பார்கள். தோசைப் பிரியனான என் மகனுக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் அவையெல்லாம் பெரும்பாலும் இருட்டான இடத்தில்தான் அமைந்திருக்கும். அதனால் அதன் சுத்தத்தைப் பற்றி எனக்கு சந்தேகம் என்பதால் தவிர்க்கப் பார்ப்பேன். விநாயகம் தெருவில் உள்ள தோசைக்கடை பற்றி அவனிடம் சொல்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தோசை என்ற பெயரிலேயே கடைகள் உள்ளன.  சொல்லப்போனால் தோஷை!  அதில் விதம்விதமாய் கிடைக்கிறது.

      நீக்கு
  14. சிவந்த மண்ணில் வரும் "ஒரு ராஜா ராணியிடம்.." பாடல், பழைய நினைத்தாலே இனிக்கும் படத்தில் வரும்,"பாரதி கண்ணம்மா..." பாடல்களில் வரும் படகுகள் வெளிநாட்டு படகுகள்.

    பதிலளிநீக்கு
  15. கவிதை நன்று
    எல்லா ஊரிலும் நல்லவர்களும், கெட்டவர்களும் உண்டு.

    பதிலளிநீக்கு
  16. அனைவருக்கும் இனிய கனு நாள், மாட்டுப்பொங்கல் நாள் வாழ்த்துகள் அன்பு சகோதர்கள்
    அனைவரின் வாழ்க்கையும் வளம் பெற வேண்டும்.

    சென்னையில் எல்லோரும் அப்படி இல்லை. பழகின இடமாயிருந்தால் பயமில்லை.
    புது இடம் என்றால் முன்பு உதவி செய்தார்கள். இப்பொழுது எப்படியோ.

    கவீதை வரிகள் நன்றாக இருந்தது.
    நம் உடலே மஹா பாரதமும் ராமாயணமும் இணைந்தது என்பது நேற்றைய உபன்யாசம்.
    துரியோதனனும், ராவணனும் மனதில் இருந்து ஆட்டி வைப்பார்களாம்.:)
    அதற்கேற்றர்ப்போல் இந்திரியங்களும் அடக்கா விட்டால் ஆடுமாம்.

    பதிலளிநீக்கு
  17. ஓடம் நதியினிலே..ஒருத்தி மட்டும் கரையினிலெ
    காத்திருந்த கண்கள் பாடல்.

    உலவும் தென்றல் காற்றினிலே ஓடமிதே பாடல்
    மிக மிகப் பிரசித்தம். படம் மந்திரி குமாரி

    இன்னும் நினைவுக்கு வந்தால் சொல்கிறேன்.


    பதிலளிநீக்கு
  18. வெஸ்ட் மாம்பலம் தோசைக் கடை, யூ டியுபில்
    பார்த்திருக்கிறேன். நன்றி மா.

    பதிலளிநீக்கு
  19. எப்பொழுதுமே நிருபர்கள் பத்திரிக்கையாளர்கள்
    ஒரு துளி நியூஸ் என்றாலே ஊதிப் பெரிதாக்குவார்கள்.
    அமெரிக்கர்களும்,இங்கிலாந்துக் காரர்களும்.
    இப்படி ஒரு ஜூசி நியூஸ் கிடைத்தால் கேட்பானேன்.
    ஆஸ்வால்ட் பற்றி, அவனைக் கொன்றவனைப் பற்றி எல்லாம் புஸ்தகங்கள் வந்த வண்ணம் இருந்தன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்போது சுவாரஸ்யமாய் இருந்திருக்கும் இல்லையா?

      நீக்கு
  20. ஓட்டலிலிருந்து வரவழைப்பது, இல்லைன்னால்
    எடுப்பு சாப்பாடு அவசரத்துக்கு உதவிய காலங்கள்
    maamoth size Tiffin carriers எல்லாம்
    அப்போதிலிருந்தே வந்து விட்டன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது சரி அம்மா..   அதெல்லாம் நாம் சென்று அல்லவா வாங்கி வரவேண்டும்?

      நீக்கு
    2. ஸ்ரீராம்... பஹ்ரைன்ல நான் போயிருந்தபோது, நம்பூதிரி மெஸ் என்று ஒன்று உண்டு. அதில் சேர்ந்துவிட்டால், ரொம்பப் பெரிய டிஃபன் கேரியர் இரண்டு வாங்கிக்கணும். ஒவ்வொரு நாளும் அவங்க டெலிவரி பண்ணிட்டு இன்னொரு டிஃபன் கேரியரை எடுத்துச் செல்வார்கள். நாங்க எல்லாருமே ஒரு சாப்பாட்டை இரண்டு, மூன்று பேர் பகிர்ந்து சாப்பிடும்படி, மிக மிக அதிகமாக அந்த மெஸ் காரர் நம்பூதிரி தருவார். அந்தக் காலமெல்லாம் நினைவுக்கு வருது, டிஃபன் கேரியர் என்ற பேச்சு வந்தாலே

      நீக்கு
  21. கவிதையில் பொருட்குற்றம் உள்ளது. 1. சாப விமோசனம் தேவர்கள் தருவது இல்லை. சாபம் சொல்பவர்கள்தான்  விமோசனத்திற்க்கான வழியை சொல்வார்கள். 2. பாண்டவர்கள் 5 பேர். கவுரவர்கள் 100 பேர். இவர்கள் எப்படி பாதிப் பாதியாய் கலப்பது.3. நீ ஒரு இந்து நீ ஒரு முஸ்லீம் நீ ஒரு கிறிஸ்தவன் நீ ஒரு ஆன்டி இந்தியன்  என்று பிரித்து சண்டையிடும் நாட்கள் வந்து விட்டன. இதில் இயல்பாய்  இருப்பவர்கள் யார். எல்லோரும் ஏதேனும் ஒரு  விதத்தில் பிரித்து அறியப் படுகிறார்கள். எனவே கவிதை சரியில்லை என்பது எனது கருத்து. Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாபவிமோசனம் சாபம் கொடுத்தவர்கள்தான் தருவார்கள்.  ரைட்டு.  சமயங்களில் சிவபெருமான் கொடுத்த சாபங்களை விஷ்ணு நேர் செய்வார்!  பாண்டவர்களும் கௌரவர்களும் என்பது குணாதிசயங்களை வைத்து...  ஆக, இப்படிதான் எல்லாம் கன்னாபின்னா என்றிருக்கும் இயல்பாய் இரு என்கிறது கவிதை!   ஆனாலும் உங்கள் ஆட்சேபத்தை ஏற்கிறேன் ஜேகே ஸார்!

      நீக்கு
  22. வழிப்பிரச்சனை வந்தால் சென்னைக்காரர்கள் மதுரைக்காரர்களுக்கு நிச்சயம் நேர்எதிரிகளே...சுயஅனுபவம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ரமணி ஸார்...   மதுரையில் பெரும்பாலான இடங்களை தியேட்டர் பெயரை வைத்தே அடையாளம் சொல்வார்கள்.

      நீக்கு
  23. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு

  24. நல்லவர்கள், கெட்டவர்கள் எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள். உதவும் குணம் சிலருக்கு பிறவிக்குணம். சிலருக்கு மெத்தனபோக்கு பிறவிக்குணம்.

    எத்தனைவிதமான பொடிகள்! சட்னிகள் மனிதர் கையால் எல்லாம் எடுத்து போட்டு தன் கைமணத்துடன் நளபாகம் செய்கிறார்.

    தினம் இதை எல்லாம் தயார் செய்து கொண்டு வந்து ஒரே ஆளாக உதவிக்கு யாரும் இல்லாமல் இப்படி உழைப்பது! அவருக்கு உயர்வை தரும்.

    பதிலளிநீக்கு
  25. படகில் போகும் போது உள்ள பாடல்கள் அருமை. வெண்ணிலவே கொஞ்ச நேறம் நில்லு பத்மினி, ஜெமினி படகில் போகும் போது பாடும் பாடல் நன்றாக இருக்கும் சோகப்பாடல். வஞ்சிக்கோட்டை வாலிபன் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  26. ///சென்னைக்காரர்கள் என்றால் மோசமா?///

    ஆஆஆ இன்று தலைப்பே வம்புக்கு இழுக்குதே என்னை?:)).. இதுக்கு நான் ஆமா என்பதா? இல்லை அப்பூடிச் சொல்லக்கூடா ஸ்ரீராம் என்பதா?:))... பீஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஆராவது யெல்ப் மீ யெல்ப் யெல்ப்:)) ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
  27. கவிதை இயல்பாய் இருக்க சொல்வது அருமை.

    பொக்கிஷப்பகிர்வால் விஷயம் தெரிந்து கொண்டேன்.

    ஜோக் நன்றாக இருக்கிறது கண்வருக்கு பிடித்த உண்வுகள் கிடைக்கும் கடையை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று அந்தக்காலத்திலேயே வருதே!
    இப்போது கடையில் உணவுகளை ஆர்டர் செய்கிறார்கள் பெண்கள் என்று அவர்களை குற்றம் சொல்லக்கூடாது.

    பதிலளிநீக்கு
  28. //ஒரு ஆரம்பம் இல்லாவிட்டால் எல்லோருக்குமே ஒரு தயக்கம் இருக்கும்போல! ///

    இது 100 வீதம் உண்மைதான். சில கொமெண்ட்களில்கூட இப்படி நடப்பதுண்டெல்லோ... ஒருவர் சொல்லிட்டால், பின்பு எல்லோரும் அதையேதான் நானும் நினைச்சுச் சொல்லாமல் விட்டிருந்தேன் என்போமெல்லோ ஹா ஹா ஹா... சண்டைகள் கூட சில இடங்களில் பார்த்திருக்கிறோம், ஒருவர் அடிக்க ஆரம்பிக்கும் வரை எல்லோரும் வாய்ப்பேச்சுடன் நிற்பினம்... நல்ல அனுபவம் தான்..


    உதவும் மனப்பான்மை என்பது ஊர்களில் இல்லை, அவரவர் வளர்ப்பில் தானே உள்ளது.

    ஆனா இங்கு வெளிநாடுகளில் யாரும் யாரையும் எடுத்தோம் கவித்தோம் என நம்புவதில்லை என்பதால், பப்ளிக்கில் இப்படி கேள்வி கேட்டால் முறைப்போரும் உண்டு.. பொதுவாக இங்கிலாந்துப் பக்கம்.. அட்ரஸ் கேட்டால் நம்மவர்கள் வெள்ளையிடம்.. முறைப்போர்தான் அதிகம்... ஏனெனில் நம்மவர்கள்[பொதுவா வெளிநாட்டவர்கள்] பண்ணியிருக்கும் சில வேலைகள் அப்படி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அதிரா...   பொதுவெளியில் ஒரு அநியாயம் நடப்பது கூட யாரும் தம்மை தட்டிக் கேட்க மாட்டார்கள் என்கிற தைரியம்தான்.  அதேபோல ஒருவர் தட்டிக் கேட்டுவிட்டால் ஓரிருவராவது சட்டென முன்னே வந்து விடுவார்கள்!

      நீக்கு
  29. பல்சுவைப் பதிவு பிரமாதம். சென்னைவாசிகளிடம் எப்போதும் ஒரு அலட்டல் அல்லது அலட்சியப் போக்கு இருக்கும்தான். ஆனால் உதவுவதில் குறை வைப்பதில்லை. இது என் அனுபவம். பழையகாலப் படகுப் பாடல்கள் மீண்டும் பார்க்கவும் கேட்கவும் தூண்டுகின்றன. கவிதை சூப்பர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீண்ட இடைவெளிக்குப் பின் வருகை.  நன்றி கீதமஞ்சரி.

      நீக்கு
  30. //தோசை கடை ://

    ஆஆஆ ஸ்ரீராம் விளம்பரமும் ஆரம்பிச்சிட்டார்ர்ர்ர்ர்:)).

    பழைய படங்களில்தான் படகுக் காட்சிகள் அதிகம் வரும். இப்போதைய படங்களில் பார்த்ததாகவே நினைவில்லை.

    //'வசந்த கால நதிகளிலே'. ஜெயச்சந்திரன் குரல் சுகம். கவர்ந்த அந்தாதி!

    தியாகம் படத்தில் டி எம் எஸ் குரலில் 'நல்லவர்க்கெல்லாம்' ///

    இரு பாட்டுக்களும் எனக்கு மிகவும் பிடித்தவை.. மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விளம்பரம் செய்து என்ன லாபம் பார்க்கப் போகிறேன்?!!  சுவைக்க உதவுகிறேன்!
      பாடல்கள் இரண்டுமே நல்ல பாடல்கள்.

      நீக்கு
  31. கவிதை கற்பனை அழகு....

    பாண்டவர்களும் கெளரவர்களும் பாதியாக கலந்திருக்கிறார்கள் என்பதைக் காட்டிலும் ஒவ்வொருவருள்ளும் பாதி பாதியாக இருக்கின்றனர் எனக்கூட எடுத்துக் கொள்ளலாம் போல இருகே இக்காலத்தில்..

    அந்நேரம் திருமதி கெனடிக்கு வெள்ளி துலாவில போலும்:)).. சனி மாற்றம் உச்சம் பெற்றிருக்கிறது வியாழன் வந்து வீட்டிலேயே இருந்திருக்கிறார்:)).. ராகு கேது கூரையைத் தட்டியிருக்கிறார்கள்:)). அதனால அப்பூடிக் குமிஞ்சிருக்கு:)).. அதிராவுக்கும் சே..சே பூந்தளிர் அதிராவுக்கும் இந்த 24 ம் திகதி சனி அங்கிள் உச்சம் பெற இருப்பதால்ல்.. பணம் பதவி அந்தஸ்து பெயர் புகழ் கெளரவம் எல்லாம் உச்சிக்குப் போகப்போகுதாமே:)).. இனி எல்லோரும் அதிரா மேடம்:)) அப்பூடின்னுதான் கூப்பிடப்போகினம் என்னை ஹா ஹா ஹா:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருமதி கெனடி? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! பதிவை ஒழுங்காப் படிக்கிறதே இல்லை. மறுபடி போய்ப் படிங்க! இந்த அழகில் பூந்தளிர் வேறேயா? :)))))))

      நீக்கு
    2. நீங்கள் சொல்வதும் சரி அதிரா...  ஒவ்வொருவருக்குள்ளும் கடவுள் பாதி, மிருகம் பாதி இருக்கிறார்கள்!

      நீக்கு
    3. @பூந்தளிர், அதிரடி, சந்தடி சாக்கிலே ஆஸ்வால்ட் மனைவியை கெனடி மனைவினு நீங்க குறிப்பிட்ட அதிர்ஷ்டத்தை விடவா ஆஸ்வால்ட் மனைவிக்குக் குவிஞ்சிருக்கும்? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், பொறாமையா இருக்கே! :))))

      நீக்கு
    4. ஸ்ஸ்ஸ் கீசாக்கா உப்பூடிப் பொயிங்கக்கூடா:) பிபி ஏறிடும்:)..... மேலே படிச்சிட்டுக் கீழே வந்தேனா.... பெயர் மாறிடுச்சூஉ:) ஹா ஹா ஹா..

      நீக்கு
  32. ///ஸ்விக்கியின் ஆரம்பப் புள்ளி!///

    ஹா ஹா ஹா அக்காலத்தில் இல்லாத எதையும் இக்காலத்தில் மக்கள் செய்யவில்லை என்பதே என் ஆணித்தரமான கருத்து, கொலை கொள்ளை கற்பழிப்பு, சின்னவீடு பெரியவீடு.. உட்பட அனைத்தையும்..

    ஆனா எதற்கெடுத்தாலும் அக்காலம்தான் சிறந்தது என்கின்றனர். அது எந்த வகையில நியாயம் எனத் தெரியவில்லை.. அக்காலத்தில் ஒரு பிரச்சனை எனில் அந்த ஊருக்குள் மட்டுமே தெரிஞ்சிருக்கும்.. செவி வழி மட்டும்தானே பரவும், ஆனா இக்காலத்தில் நவீன வசதியால உலகமெல்லாம் பரவுவதால, எல்லோருக்கும் தெரியும்போது நிறையச் சம்பவம் நிகழ்வதுபோல உணர்கிறோம்.. அதனால இக்காலம் மோசம் எனத் திட்டுகிறோம்.. என்னைப் பொறுத்து, எந்த நல்ல பழக்கமோ கெட்ட பழக்கமோ அனைத்தையும் நம் முன்னோர்கள் பழக்கிப்போட்டுச் சென்றதைத்தான் நாம் தொடர்கிறோம்... அதனாலதான் இக்காலத்தில் ஒரு தப்பு நடக்கும்போது அதிகமாக திட்ட மனம் வருவதில்லை ... அனைத்தும் நம் பரம்பரை ஜீன்ஸ் இல்தானே இருக்குது என நினைக்கத் தோணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி இல்லை.   அன்று இந்த மாதிரி  குற்றங்கள் குறைவாக இருந்தன.   வெளியில் சொல்ல போதுமான ஊடக வசதி இல்லை என்று சொல்வார்கள்.  ஆனால் அதுவே நல்லதும் கூட...   இதுவே விளம்பரத்தைக் குறைக்கும்.

      நீக்கு
  33. சென்னை வாசிகள் பற்றி அபிப்பிராயம் இல்லை நான் மும்பையில் ஒரு அக்மார்க் தமிழரிடம் விலாசம் கேட்க அவர் ஹிந்தியில் மாலும் நஹி என்றது இப்போது நினைவுக்கு வருகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவரை ‘அக்மார்க்’ என நீங்கள் கணித்ததில்தான் தவறு !

      நீக்கு
    2. ஆம்... ஏகாந்தன் ஸார் சொல்வதுபோல அவரை எப்படி அக்மார்க் என்று சொல்லமுடியும் ஜி எம் பி ஸார்?  நன்றி.

      நீக்கு
  34. முதலில் மகனுக்கு பாராட்டுக்கள் பொறுமையா வழி சொன்னதற்கு.எனக்கு பொதுவாவே இன்னார் இப்படின்னு ஊர் இடம்லாம் பற்றி சொல்வதில் இஷ்டமில்லை.அப்புறம் நாம் யாருமே சென்னையை பூர்விகமா கொண்டவங்களுமில்லையே :)))))))) 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்பாடி...    மகனைப் பாராட்டிய முதல் ஆள்!  நன்றி ஏஞ்சல்! ஆம், சென்னையில் வசிபபவர்கள் 99 சதவிகிதம் வெளியூர் ஆட்களே...

      நீக்கு
  35. படகு பாடலில் பாய்மர கப்பல் வருமா ? ஒரே ஓர் ஊரிலன்னு ஒரு பாட்டு அதையும் சேர்த்திருக்கலாம் :))))

    பதிலளிநீக்கு
  36. மெரினா ஓஸ்வால்ட் பேப்பர் கட்டிங் உங்களோடதா ?அப்பாவும் இப்பவும் எப்பவும் நெகட்டிவ் பிரபல்யத்துக்கு வரவேற்புண்டு .ஸ்விக்கி :)))))))))ஹாஹா 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வரவேற்பு மட்டுமா?   காசுமழை கொட்டியிருக்கிறதே!

      நீக்கு
  37. பொதுவாச் சென்னை வாசிகள், அதாவது ஆரம்ப காலத்தில் இருந்து இருப்பவர்கள்/இருந்தவர்கள் கொஞ்சம் ஒரு மாதிரித் தான் பேசுவார்கள், நடந்து கொள்வார்கள். ஆனால் அது இப்போதைய சென்னைக்குப் பொருந்தாது. பல ஊர்கள், மாநிலங்களில் இருந்தும் மக்கள் வந்து வசிக்க ஆரம்பித்து எல்லோருக்கும் எல்லோருடைய பழக்கங்களும் கலந்து விட்ட இந்த cosmopolitan நகரில் இப்போதைய இளைஞர்கள் உதவி செய்வது ஆச்சரியமே இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சென்னை வந்த புதிதில் பல வாக்கியங்களுக்கு அர்த்தம் தெரியாமல் விழித்ததுண்டு. ஐயே என்றால் ஊம் கொட்டுவது, ஆமாவா என்றால் அப்படியா என்பது போன்ற விளக்கங்களை என்னுடைய தங்கையிடம் (எனக்கு சீனியர் சென்னைவாசி!) கேட்டுதான் தெரிந்துகொண்டேன்.

      நீக்கு
    2. வாங்க கீதா அக்கா...    இப்ப இருக்கற சென்னை மக்கள் பரவாயில்லை என்றுதான் நினைக்கிறேன்!

      நீக்கு
    3. /ஐயே என்றால் ஊம் கொட்டுவது, ஆமாவா என்றால் அப்படியா என்பது போன்ற விளக்கங்களை //

      ஆமாம்...   ஊரூருக்கு இப்படி சில வார்த்தைகள் ட்ரேட்மார்க்!

      நீக்கு
  38. நான் கல்யாணம் ஆகி முதலில் வில்லிவாக்கத்தில் குடித்தனம் வைச்சப்போ அந்த வீட்டைக் காலி செய்கையில் வீட்டுக்காரர்கள் சண்டையைப் பார்த்துப் பயந்திருக்கேன். அடாவடியாக நடந்து கொண்டனர். அதே போல் அம்பத்தூரில் வீடு வாடகைக்கு எடுத்ததில் குடி வந்ததும் முதலில் ஒருத்தரிடம் பால் வாங்கினேன். பின்னர் வீட்டுக்கு எதிரேயே ஒருத்தர் பால் கறந்து கொடுத்துக் கொண்டிருந்ததால் முதல் பால்காரரிடம் பாலை நிறுத்திவிட்டு வீட்டுக்கு அருகே இருப்பவரிடம் வாங்க ஆரம்பித்தேன். முதல் பால்காரர் அவரிடம் சண்டைக்குப் போய் மாட்டை வெட்டும் அளவுக்குப் போய் விட்டது. அப்புறமா முதல் பால்காரரை அழைத்து அவரிடம் பேசிப் புரிய வைப்பதற்குள் போதும் போதும்னு ஆகிவிட்டது என்றாலும் நான் செய்த முதல் மத்யஸ்தமும் ஒருத்தரிடம் பேசிப் புரிய வைத்ததும் அதான் முதல். இத்தனைக்கும் அப்போ 19 வயசு தான். உள்ளூர பயம் இருந்தாலும் வெளியே காட்டிக்கலை. அப்புறம் அந்த முதல் பால்காரர் காட்சியில் இருந்து விலகி விட்டார். அப்பாடானு இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சென்னைத் தமிழில் 'பால் மாறுவது' என்றால் இதுதான் போலிருக்கு.

      நீக்கு
    2. haahaahaahaa சொன்ன பேச்சை மாற்றுவதைத் தான் அப்படிச் சொல்வார்கள் என என் பெரியப்பா (திருவல்லிக்கேணி வாசி) சொல்லுவார்.

      நீக்கு
    3. பால்மாறாமல் என்பது சோம்பேறித்தனம் படாமல் என்கிற அர்த்தத்துக்குதான் பெரும்பாலும் வரும்.

      நீக்கு
    4. கீதா அக்கா நீங்கள் சொல்லி இருக்கும் சண்டைவகை எல்லா ஊர்களிலும் வழக்கமுண்டு.

      நீக்கு
    5. பால் மாறுதல் என்றால், கட்சி மாறுதல் / சொன்ன பேச்சை அல்லது வாக்கு கொடுத்துவிட்டு பிறகு மாறுவது என்ற பொருளில்தான் சொல்வார்கள். 'அப்பால மாறிவிட மாட்டாய் அல்லவா ' என்று கேட்டது பால் மாறுதல் என்று சுருங்கியிருக்கலாம்.

      நீக்கு
  39. அம்பத்தூர் குடி வந்து 2 மாதங்களில் நான் வேலைக்குச் சேர வேண்டிய அலுவலகம் இடம் தெரியாமல் செல்லும் வழி தெரியாமல் தவித்தப்போ உதவியது சென்னைவாசிகள் தான். அதிலும் ராயபுரத்தைச் சேர்ந்த ஓர் அம்மா, கரன்ட் பில் கட்டும் ஆஃபீஸ் தானே எனக்குத் தெரியும் வா என்று சொல்லி அழைத்துப் போய் அலுவலகத்தில் கொண்டு விட்டார். நானும் அவரை முழுதாக நம்பிக் கூடச் சென்றேன் என்பதும் இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புறநகர்ப் பகுதிகளில் உதவுபவர்கள் சற்று அதிகம். நான் சொல்வது மத்திய சென்னைப் பகுதி.

      நீக்கு
    2. ராயபுரம் பகுதியைப் புறநகர்னு சொல்ல முடியாதே! உண்மையில் ராயபுரம், தண்டையார்ப்பேட்டை, தங்கசாலை, பாரிஸ்கார்னர் ஆகிய இடங்களும் அதைச் சுற்றிய பகுதிகளும் தானே உண்மையான சென்னை! இல்லையா?

      நீக்கு
    3. ராயபுரம் எல்லாம் வடசென்னை. தெலுங்கு பேசும் மக்களும், மலையாளம் பேசும் மக்களும் அதிகம்.

      நீக்கு
    4. உங்கள் அம்பத்தூர் டு ஆபீஸ் அனுபவம் படித்திருக்கிறேன் கீதா அக்கா...     அம்பத்தூர், குரோம்பேட்டை, தாம்பரம் ஆவடி போன்றவைதான் புறநகர்ப் பகுதிகள்!

      நீக்கு
  40. வணக்கம் சகோதரரே

    கதம்பம் அருமை. பொறுமையாக இறங்கு மிடங்களைக் கூறி பேருந்தின் நம்பர்களையும் கூறி பதிலளித்து பேசிய தங்கள் மகனுக்கு பாராட்டுக்கள்.

    ஓரிடத்தின் விலாசம் கேட்கும் போது தவறுதலாக பதிலளிப்பவர்களும், தெரியாது என முகத்தில் அடித்தாற்போல சொல்பவர்களும் எந்த ஊரிலும் இருக்கிறார்கள். சிலர் ஏமாற்று பேர்வழிகளாக இருந்தால் கஷ்டம். சில பேர்கள் நல்லவர்களாக இருந்தால், தாமே வந்து சகோதரி கீதா சாம்பசிவம் அவர்கள் கூறுவது போல் அந்த இடம் வரை விட்டுச் செல்வார்கள். இதில் பலதும் இருக்கிறது. அது நம் விதியின் வசமும் இருக்கிறது.

    தோசை காணொளி கண்டேன் ஏற்கனவே பார்த்துள்ளேன். அவர் தனியாளாக பம்பரமாய் சுழன்று வேலை செய்கிறார்.

    கவிதை அருமை. படகு பாடல்கள் பார்க்கவும், கேட்கவும் இதமானவை. பொக்கிஷம் அறியாத விஷயம் சுவாரஸ்யமாக உள்ளது. ஜோக் நன்றாக உள்ளது. அப்போதும் கணவருக்கு ஹோட்டல் உணவுதானா? அனைத்தையும் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா...
        
      விலாசம் அவர்கள் சொல்வது சரியா, தவறா என்று தெரியாமலேயே அதைச் சோதனை செய்து பார்க்கவேண்டும்!
      பாராட்டுகளுக்கு நன்றி.

      நீக்கு
  41. சாபம் தர முனிவர்களும்
    இல்லையாதலால்
    சாப விமோசனம் என்ற சொல்லே
    வழக்கிழந்து போயிற்று
    பாண்டவர்களும் கெளரவர்களும்
    கெளரவப் பாண்டவராய்
    பரிமாணம் கொண்டிருக்கையில்
    அர்ஜூனனே கெளரவர் பக்கம் சேர
    தருணம் பார்க்கும் நேரத்தில்
    நீ யார் பக்கம் என்பதில்
    சுவாரஸ்யம் இல்லை தான்.

    பதிலளிநீக்கு
  42. நல்லதொரு பகிர்வு.

    சென்னைவாசிகள் - :) அவருக்கு ஏதோ மோசமான அனுபவம் கிடைத்திருக்கும் போல.

    கவிதை - நன்று.

    ஜோக் - :)))

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!