செவ்வாய், 30 மார்ச், 2021

சிறுகதை : பாச வலை - கீதா சாம்பசிவம்

குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொண்டிருந்த வித்யாவையே பார்த்துக்கொண்டிருந்தார் ஸ்வாமிநாதன். அவர் மனதில் இவளிடம் எப்படி விஷயத்தை ஆரம்பிப்பது என்னும் எண்ணம் ஓடிக் கொண்டிருந்தது. வித்யா அவரின் மூத்த மருமகள்.

அடுத்த இரண்டாம் பையனுக்குச் சீக்கிரமாகவே கல்யாணம் ஆகி விட்டது. பையனும், அந்தப் பெண்ணும் நான்கு வருஷங்கள் ஒருவருக்கொருவர் பார்த்துப் பழகிப் பிடித்துச் செய்து கொண்ட கல்யாணம். ஆனால் பெண் ஸ்வாமிநாதனின் அக்கா பேத்தி. அவர் இரண்டாவது பிள்ளை சென்னைக்கு மாற்றலாகி வந்த போது ஸ்வாமிநாதனின் அக்கா பெண் வீட்டருகே தான் வீடு எடுத்துத் தங்கி இருந்தான். அடிக்கடி அத்தை பெண் வீட்டுக்குப் போனதில் அவங்க பெண்ணோடு பழக்கம். ஒருவருக்கொருவர் பிடித்து விட்டது. ஆகவே சிறியோர்கள் சம்மதத்துடன் அந்தக் கல்யாணம், பெரியோர்கள் ஆசிகளுடன் சுபமாக நடந்து முடிந்து விட்டது. இன்னும் அவர்களுக்குக் குழந்தை உண்டாகவில்லை. கல்யாணம் ஆகி எட்டு மாதங்கள் தான் ஆகி இருந்தன. இப்போது குழந்தை வேண்டாம்னு இருக்காங்களோ என்னமோ!


மூத்த பிள்ளைக்குக் கல்யாணம் ஆகிப் பத்து வருஷங்களுக்கு மேல் ஆகி இருந்தன. இரண்டு குழந்தைகள் அவனுக்கு! வித்யா கெட்டிக்காரப் பெண். சிறுகக் கட்டிப் பெரிசாக வாழ அவளைப் பார்த்துத் தான் கற்றுக்கொள்ளணும். எப்படியோ இந்தக் குடும்பத்தைக் கட்டிக் காத்ததோடு இல்லாமல் தானும் இரண்டு குழந்தைகளைப் பெற்றுக்கொண்டும், நாத்தனார்களுக்குச் சீர் செய்வது, கடைசி நாத்தனாரின் கல்யாணம், மைத்துனர்களின் படிப்பு என எல்லாவற்றையும் திறம்படச் சமாளித்து வந்தாள். ஆனால் இதனால் எல்லாம் ஸ்வாமிநாதனுக்கோ அவர் மனைவி விசாலத்துக்கோ சந்தோஷம் ஏதும் இல்லை. சொல்லப் போனால் விசாலத்துக்கு நாட்டுப் பெண் இத்தனை சாமர்த்தியமாக இருப்பதால் தன் பிள்ளையைத் தன்னிடமிருந்து பிரித்து விட்டதாகவே எண்ணம். எல்லோரிடமும் குறையாகவே சொல்லுவாள். அவளுக்கு எதுவுமே தெரியாது எனவும், ஏதோ தானாக இருப்பதால் அனுசரித்துக் கொண்டு இருப்பதாகவும் சொல்லுவாள்.

ஏற்கெனவே வித்யா  சங்கரன் கல்யாணத்தன்றே கல்யாணம் முடிந்து ஜோடியாக சங்கரனும், வித்யாவும் நமஸ்காரம் செய்ய வந்தப்போ நாட்டுப் பெண்ணின் கையைப் பிடித்துக்கொண்டு விசாலம் அழுது விட்டாள். மூத்த பிள்ளையை உயிருடன் தூக்கிக் கொடுத்துவிட்டோம் என்பதாக விசாலத்தின் எண்ணம். நாட்டுப் பெண்ணிடம் "என் பிள்ளையை என்னிடமிருந்து பிரிச்சுடாதே! அவனைத் திருப்பிக் கொடுத்துடு!" என்று அழுது விட்டாள். பத்தொன்பதே வயது ஆன  அந்தப் பெண்ணோ திகைத்து நின்றது. ஆனாலும் வித்யா போகப் போக எல்லாவற்றையும் சமாளித்துக்கொண்டு நிமிர்ந்து விட்டாள். 

இரண்டாவது நாட்டுப்பெண்ணை நடத்துவது போல் வித்யாவை அவர்கள் இருவருமே நடத்துவது இல்லை. இது அநேகமாக அனைவருக்கும் தெரியும். பலரும் இது தப்பு என்று சொல்லிவிட்டாலும், வித்யா என்னதான் குடும்பத்துக்காகப் பாடுபட்டாலும் ஸ்வாமிநாதனுக்கோ, விசாலத்துக்கோ வித்யாவின் அரவணைத்துப் போகும் சுபாவம் பிடிக்கவில்லை. வித்யாவிடம் பல திறமைகள் நிறைந்திருப்பதையும் பொருட்படுத்தாமல் வார்த்தைகளாலும், நடத்தையாலும் அவளைச் சிறுமைப் படுத்துவதோடு வேண்டுமென்றே சின்ன மருமகளை வித்யாவுக்கு ஒத்தாசை செய்யக் கூடாது என்றும் தடுத்து விடுவார்கள். ஆனால் வித்யாவோ எதையும் எதிர்பார்க்காமல் யாருடைய உதவியையும் கேட்காமல் இது தன் வீடு என்னும் எண்ணத்துடன் எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்து முடிப்பாள். மத்தவங்க ஏன் செய்வதில்லை என்று கூட அவள் கேட்பதே இல்லை.

இப்போது வித்யாவின் கணவன், ஸ்வாமிநாதனின் மூத்த பையன் வீடு கட்டுகிறான். அலுவலகத்தில் வீட்டுக் கடன் வாங்கித் தான் கட்டி வருகிறான். சங்கரனுக்கு மத்திய அரசு உத்தியோகம் என்றாலும் அவன் தலை எடுத்து இரு தங்கைகளுக்குத் திருமணம் முடித்தது, அவன் திருமணம், பிறகு தம்பியின் திருமணம் என அடுத்தடுத்துச் செலவுகள். சின்னவன் சேகரோ  தனக்கும் தன் மனைவிக்கும் எனச் சாப்பாட்டுக்கு மட்டும் கரெக்டாகப் பணம் கொடுப்பான். மற்றச் செலவுகள் பற்றி எதுவும் கேட்டுக் கொள்வதே இல்லை. எல்லாமே பெரியவன் தலையில். அப்படி இருந்தும் சாப்பாட்டுக்குப் பணம் கொடுப்பதுவே   விசாலத்துக்குக் கோபம். சொந்தத் தம்பியிடம் பணம் வாங்கிக் கொண்டு சாப்பாடு போடுகிறானே!  அவனுக்கு அந்த குணம் எல்லாம் இல்லை. எல்லாம் இந்த வித்யா சொல்லிக் கொடுத்துத் தான் செய்கிறான் என்று பகிரங்கமாகக் குற்றம் சுமத்துவாள். அது என்னமோ வித்யா கணவனிடம் பேசுவதோ, அவனோடு வெளியே செல்வதோ  அவனுக்குச் சாப்பாடு பரிமாறுவதோ இன்னமும் விசாலத்தால் ஏற்க முடியவில்லை.

வீடு கட்ட அலுவலகக் கடன் முதல் தவணை கொடுத்து அதற்கு மேல் செலவாகி விட்டது. கூரை போடும் அளவுக்கு வந்து விட்டது வீடு. கூரை போடக்கம்பி, சிமென்ட் எல்லாம் வாங்கணும். சாரங்கள் கட்டணும். ஆட்கள் கூலி, கலவை மிஷின் கூலி என எல்லாவற்றுக்குமாகச் சேர்த்துச் சுமார் அப்போதைய நிலவரப்படிப் பதினைந்தாயிரம் தேவைப்படுகிறது. வித்யாவிற்கு அவள் வீட்டில் போட்ட இரட்டை வடம் சங்கிலியை விற்றுப் பணம் வாங்க வேண்டும் என்று சங்கரன் கேட்டு அவளும் சம்மதித்து விட்டாள். கணவன், மனைவி இருவருமாக முதல் நாள் தான் சென்னையின் நகைக்கடைகள் அதிகம் இருக்கும் பகுதியான சௌகார்ப்பேட்டையில் போய்ச் சுற்றி விட்டு வந்ததில் அங்கு அடிமாட்டு விலைக்குக் கேட்பதால் நகையை வாங்கிய தன் ஊருக்கே போய்த் தான் நகையை விற்றுப் பணத்தைச் செக்காக வாங்கி வருவதாக வித்யா சொல்லவும் சங்கரனுக்கும் அது நல்ல யோசனையாகத் தெரிந்தது. வித்யா ஊருக்குப் போகப் பயணச் சீட்டு வாங்கத் தான் சங்கரன் போயிருக்கிறான். 

சங்கரன் எங்காவது தன்னிடம் பணம், சிமென்ட் என்று கேட்டுவிடுவானோ என்று பயந்தது போல் சேகரும் அப்போது தன் மனைவியின் யோசனையின் பேரில் அவனும் ஒரு சின்ன வீடு கட்ட ஆரம்பித்து விட்டான்.  ஆனாலும் வித்யாவுக்கும் சரி, சங்கரனுக்கும் சரி, சேகரிடமோ, ஸ்வாமிநாதனிடமோ பணம் வாங்கியோ அல்லது வித்யாவின் அப்பா மற்ற சொந்தங்களிடம் பணம் வாங்கியோ வீடு கட்ட இஷ்டம் இல்லை. இதை யாரும் புரிந்து கொள்ளவும் இல்லை. வித்யாவும் சங்கரனும் பணத்துக்குத் தவிப்பதைப் பார்த்து விட்டுக் கேலி செய்து கொண்டிருந்தார்கள்.

ஆனால் ஸ்வாமிநாதனுக்கு சங்கரன் கட்டும் பெரிய வீட்டின் அளவையும் அதன் அமைப்பையும் பார்த்ததில் இருந்து மனதில் ஓர் ஆசை. அவர் ஊரில் வீடு, நிலம் எல்லாவற்றையும் விற்று வந்த பணம் ரொக்கமாகச் சென்னையிலேயே ஓர் பாதுகாப்பான நிதி அலுவலகத்தில் முதலீடு செய்திருந்தார். அவருக்கு மாதா மாதம் வட்டியும் வங்கிக் கணக்குக்கு வந்து கொண்டிருந்தது. ஆனால் சேகருக்கு அப்பா தன் பணத்தை எடுத்துக் கொடுத்தால் தான் வங்கிக் கடன் வாங்காமல் வீட்டைக் கட்டலாம் என்னும் எண்ணம் இருந்தது. ஆனால் இதை அறிந்த வித்யாவோ 'பெரியவங்க உயிருடன் இருக்கும்வரை அந்தப் பணம் அவங்களுக்குத் தேவை. யாருக்காகவும் அதை எடுக்கக் கூடாது. அந்தப் பணம் தான் அவங்களுக்குப் பாதுகாப்பு! தெம்பு!' என்று திட்டவட்டமாகச் சொல்லி விட்டாள். ஆனாலும் இப்போது ஸ்வாமிநாதனுக்கு வந்திருக்கும் எண்ணம் வித்யாவுக்குத் தெரிய வந்தால் அவள் மறுப்பு ஏதும் சொல்ல மாட்டாள் என்றும், அவள் நகையை விற்கும்படி ஆகாது என்பதால் சந்தோஷமே படுவாள் என்றும் ஸ்வாமிநாதன் நினைத்தார். ஸ்வாமிநாதனுக்கு நிரந்தர வைப்புத் தொகையில் இருந்த அந்தப் பணத்தை எடுத்துத் தன் இரு பிள்ளைகளுக்கும் வீடு கட்டக் கொடுத்துவிட வேண்டும் என்னும் எண்ணம். 

மூன்றாவது பிள்ளை இப்போது தான் கல்லூரிப் படிப்பில் நுழைந்திருக்கிறான். அவன் படித்து முடித்து வேலைக்குச் செல்ல நாலைந்து வருடங்கள் பிடிக்கும். ஆகவே வித்யா கட்டும் வீட்டிற்குக் கூரை போட உதவியாகத் தன் பணத்தில் பாதியைக் கொடுத்துவிட்டால் அவளும் நகையை விற்க வேண்டாம். கூரை போட்டுக்கொண்டு மேற்கொண்டு கட்டிக் கொள்ளலாம். அதற்குப் பதிலாக அவர்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான். இந்தக் கூரை போட்டு முடித்ததும் மேலே கட்டப் போவதை  அவர்கள் வெறும் மொட்டை மாடியாக நிறுத்திவிடாமல்  கீழே இருப்பதைப் போல்  மேலேயும் கட்டிக் கொடுக்க வேண்டும். அதோடு அதை ஸ்வாமிநாதனின் இரண்டாவது, மூன்றாவது பிள்ளைகள் பெயரில் பத்திரப்பதிவு செய்தும் கொடுத்துவிட வேண்டும். வீட்டை வித்யாவோ, சங்கரனோ விற்பதாக இருந்தால் மற்ற இரு சகோதரர்களைக் கேட்காமல் விற்க முடியாது.

இது தன் மற்ற இரு மகன்களுக்கும் தன்னால் செய்து கொடுக்கப்படும் நல்ல ஏற்பாடு என்ற அளவில் ஸ்வாமிநாதனுக்குத் திருப்தி. பாதிப் பணம் சங்கரனுக்குக் கொடுத்ததும் மீதிப் பணத்தை சேகருக்குக் கொடுத்துவிட்டால் அவன் அளவில் ஒரு வீட்டைக் கட்டிக் கொள்ளட்டுமே! அதை அவன் வாடகைக்கு விட்டால் ஏதோ பணம் அவனுக்கும் கிடைத்துவிடும். ஸ்வாமிநாதனுக்கு மிகுந்த மனத் திருப்தி! தன் ஏற்பாட்டை வித்யா கட்டாயமாய் ஒத்துக்கொள்வாள். நகை கையை விட்டுப் போகாதே என சந்தோஷப்படுவாள். ஸ்வாமிநாதன் தனக்குள் சிரித்துக் கொண்டார். விசாலமும் அவரும் கண்களாலேயே பேசிக் கொண்டனர். விசாலம் சீக்கிரமாய் வித்யாவைக் கேட்கச் சொல்லி ஜாடை காட்டிக் கொண்டிருந்தாள். 


குழந்தைகளின் படிப்பில் மூழ்கி இருந்த வித்யாவுக்குத் தன் மாமனாரும், மாமியாரும் தன்னிடம் ஏதோ கேட்கவேண்டித் தான் இங்கேயே உட்கார்ந்திருக்கிறார்கள் என்பது புரிந்தது. ஆனால் என்ன என்று தெரியவில்லை. எப்போதுமே அவளால் ஏதாவது வேலை ஆகணும் போல் இருந்தால் இருவருமே குழைவார்கள். அப்போது குரலே மாறி இருக்கும். ஒரு முறை அவர்களிடம் வித்யா சொல்லக் கூடச் சொல்லிவிட்டாள். "நீங்க எது சொன்னாலும், செய்தாலும் நான் மாறப்போவது இல்லை. உங்களைக் கவனித்துக்கொள்வது என் கடமை! நீங்க எப்படி இருந்தாலும் நான் உங்களை விட்டுக் கொடுக்க மாட்டேன்." என்றே சொல்லி இருக்கிறாள். ஆனாலும் அவர்களுக்குத் தேவை எனில் இப்படித்தான் குழைகிறார்கள்.

குழந்தைகள் பாடங்களை முடித்துவிட்டு "ஓ"வெனக் கத்திக் கொண்டு விளையாட எழுந்தனர். வித்யாவும் தன் வேலைகளைக் கவனிக்கக் கிளம்பினாள். அப்போது மாமியார், "நீ உட்கார்ந்துக்கோ சித்த நாழி! நான் கவனிச்சுக்கறேன்!" என்றதுமே ஏதோ அவர்களுக்குத் தன்னால் ஆகவேண்டும் என்பதைப் புரிந்து கொண்ட வித்யா, மாமனாரைப் பார்த்து, "என்ன செய்யணும்?" என்று நேரிடையாகக் கேட்டுவிட்டாள். இது வித்யாவின் சுபாவம். ஒளித்து மறைத்துப் பேச வராது. ஆனால் அவள் மாமனார், மாமியாருக்கு இது பிடிப்பதில்லை. அதற்காகத் தன் சுபாவத்தை வித்யா மாற்றிக் கொண்டதில்லை. சங்கரன் வரும் நேரம் ஆகிவிட்டதால் வித்யாவிற்கு கை, கால்கள் பரபரத்தன. அதற்குள்ளாக ஸ்வாமிநாதன் வித்யாவிடம் மெதுவாகப் பேச்சை ஆரம்பித்தார். "நகையை விற்கச் சம்மதிச்சுட்டே போலிருக்கு!" என்றார்.

"வேறே வழி?" என்றாள் வித்யா!

"நீ நினைத்தால் நகையை விற்காமலேயே வழி கிடைக்கும்!" ஸ்வாமிநாதன் சொன்னார்.

"என்ன வழி? புரியலை!" என்றாள் வித்யா.

ஸ்வாமிநாதன் தொண்டையைச் செருமிக் கொண்டார். தன் தைரியத்தை எல்லாம் திரட்டிக் கொண்டவர் போல வித்யாவைப் பார்த்து மேலே பேச ஆரம்பித்தார்.

"இப்போ நீ கூரை போடக் கம்பி, சிமென்ட் எனப் பணத்துக்குத் திண்டாடுகிறாய் இல்லையா? அந்தப் பணம் எவ்வளவுனு சொல்! நான் என் பணத்திலே இருந்து கொடுத்துடறேன். அதிலே நீ கூரை போட்டுக் கொண்டு விடலாம். அதன் பின்னர் அலுவலகத்தில் வந்து பார்த்ததும் இரண்டாவது தவணையும் உனக்குக் கிடைத்து மேலே தொடரலாம்." என்றார்.

"உங்க பணம் எல்லாம் எதுக்கு மாமா எடுக்கணும்? அதெல்லாம் வேண்டாம்! அப்புறமா உங்களுக்குப் பிற்காலத்திலும் நீங்க முன்னால் போனாலும் சரி, அம்மா முன்னால் போனாலும் சரி அந்தப் பணத்தைத் தொடுவதில்லைனு நாங்க வைச்சிருக்கோம்! பின்னர் பார்த்துக்கலாம்." வித்யா பேச்சை முடித்தவளாக அந்த இடத்திலிருந்து நகர ஆரம்பித்தாள்.

"இரு!இரு!" என்றார் ஸ்வாமிநாதன். " அவசரப் படாதே!  மொத்தத்தையும் மூன்று சமபாகமாகப் பிரிச்சுடுவேன். ஒரு பாகம் உனக்கு. ஒரு பாகம் சேகருக்கு. இன்னொரு பாகம் கடைக்குட்டிப் பையனுக்கு! அவன் தலை எடுக்கும்வரை அது எங்களிடம் இருக்கும்." என்றார். "நல்ல யோசனை தானே?" என்றும் வித்யாவிடம் கேட்டார். ஆனாலும் வித்யா அதற்கு இணங்கவில்லை.  மீண்டும், மீண்டும் ஸ்வாமிநாதன் வற்புறுத்தினார். மேலும் தொடர்ந்து, "இதைப் பற்றி சங்கரனிடம் கூடப் பேசிட்டேன். அவனுக்குச் சம்மதம் தான். நீ சரின்னால் அவனும் சரி என்பான்." வித்யா துணுக்குற்றாள். சங்கரன் அவளிடம் இதைப் பற்றிப் பேசவே இல்லையே! இதில் அப்போ வேறு ஏதோ விஷயம் இருக்கு என்பதை உணர்ந்தவளாக, " இந்தப் பணத்தை வாங்கிக் கொண்டால் நான் செய்ய வேண்டியது என்ன?" என்று மீண்டும் நேரிடையாக மாமனாரைக் கேட்டாள். அவர் முகம் இப்போது மலர்ந்தது.

"அது ஒண்ணும் பெரிய விஷயமே இல்லை வித்யா! நீ மேலே கூரை போட்டதும் அதை வெறும் மொட்டை மாடியாக விடாமல் மேலே கட்டிடம் எழுப்பு! கீழே மாதிரி மேலேயும் கட்டிக் கொடுத்துடு!" என்று வெகு எளிதாகச் சொன்னார். வித்யாவுக்குத் தூக்கி வாரிப் போட்டது. அவர் கொடுப்பதாகச் சொல்லும் பணமே இந்தக் கூரைக்கு மட்டும் தான் வரும். அதுவே பெரிது. அதற்கு மேல் கூரையில் பூச்செல்லாம் பூசிச் சுற்றி லின்டெலில் அடுத்தபடியாக மொட்டை மாடிக்குக் கைப்பிடிச் சுவர் எழுப்புவது, இன்னும் மற்ற வேலைகள் இருக்கின்றன. இதிலே கீழே போல் மேலே கட்டிடம் எனில்? அஸ்திவாரம் இல்லைனு பெயரே தவிர்த்துக் கீழுள்ள கூரையின் மேலே தானே அடுத்த கட்டிடம் மேலே எழுப்பணும். கீழே என்ன ஆச்சோ அதே தான் மேலேயும் ஆகணும். அலுவலகத்திலிருந்து வரும் பணம் இதுக்கெல்லாம் பத்தாதே! இதென்ன இவர் இப்படி ஒரு குண்டைத் தூக்கிப் போடுகிறாரே1 திகைத்தவளாக வித்யா அவரையே பார்த்துக் கொண்டு நின்றாள்.

அவரோ மேலே தொடர்ந்து, "மேற்கொண்டு நீயும், சங்கரனும் செய்ய வேண்டியது ஒரே ஒரு விஷயம் தான்!" என்றார். "என்ன?" வித்யாவின் குரல் கிணற்றிலிருந்து கேட்பது போல் அவளுக்கே கேட்டது.  "இதோ பார்! வித்யா! நான் வெளிப்படையாகவே பேசுகிறேன். உனக்கும் விசாலத்துக்கும் ஒத்துக்கொள்ளவே இல்லை. அதே சேகரின் மனைவியோடு அம்மாவுக்கு எந்தவிதமான பூசல்கள் இல்லை. இப்போ நாம் எல்லோரும் சேர்ந்து இருப்பதால் உனக்குத் தான் வேலை அதிகம்னு எல்லோரும் பேசிக்கறாங்க. சேகரின் மனைவி சின்னப் பெண்! அவளை எப்படி வேலை வாங்கறது? நீயே சொல்! அதுக்காக அம்மாவால் செய்ய முடியுமா? அம்மாவாலும் முடியாதுங்கறச்சே நீ தானே செய்தாகணும்! அதை யாரு புரிஞ்சுக்கறாங்க? இதனால் பிரச்னைகள் வருது! இதை எல்லாம் தீர்க்கத் தான் நானும், விசாலமும் யோசிச்சு இந்த வழியைக் கண்டு பிடிச்சோம்." என்றபடி வித்யாவைப் பார்த்துப் புன்னகைத்தார்.

"நாங்க பாட்டுக்கு மேலே இருந்துப்போம். நீ கீழே இருந்துக்கலாம். நான், அம்மா, சேகர், அவன் மனைவி, கடைக்குட்டி எல்லோரும் மேலே இருந்துப்போம். சமையல், சாப்பாடு எல்லாம் தனித்தனியாக வைச்சுடுவோம். சமையலில் தானே அதிகம் பிரச்னை வருது? நீ உனக்கும், குழந்தைகளுக்கும் பிடிச்சதைச் செய்து சாப்பிட்டுக்கலாம். நாங்க கீழே வந்து தொந்திரவெல்லாம் பண்ண மாட்டோம். ஆனால் உனக்கு ஏதாவது எங்க உதவி தேவைன்னா மேலே வந்து எங்களைக் கூப்பிட்டுக்கலாம். கீழே ஒரு பக்கத்தை நீ வாடகைக்கு விட்டுப் பணம் சம்பாதிக்கிறதுன்னாலும் நாங்க தடை சொல்ல மாட்டோம்!" என்றார்.

"மாமா! இந்த இடம் உங்க பிள்ளை பெயரிலே இருக்கு! என் பெயரிலே இல்லை. அதோடு அலுவலகத்தில் கடன் வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கார்னு உங்களுக்குத் தெரியும் தானே!  ஏற்கெனவே கல்யாணக் கடன்கள் அரைகுறையா முடிஞ்சிருக்கிற நிலைமையிலே வீட்டை வேறே கட்ட ஆரம்பிச்சிருக்கோம். நீங்க என்னடான்னா இப்படிச் சொல்றீங்க? அப்படி மேலே கட்ட முடிஞ்சால் நாங்க கட்டி வாடகைக்கு விட்டாலும் பரவாயில்லை. நீங்க என்ன வாடகையா கொடுக்கப் போறீங்க? எனக்கு என்னமோ என் வீட்டில் வாடகைக்கு விட அனுமதி தரதா வேறே சொல்லிட்டு இருக்கீங்களே? இதன் உள் விஷயம் தான் என்ன? " என்றாள் வித்யா! 

ஸ்வாமிநாதனுக்குக் கோபம் மூண்டது! "தேவலையே ! நீ பேசறது வித்யா! சாமர்த்தியக்காரியா இருக்கியே! நான் பணமும் கொடுத்துட்டு உனக்கு வாடகையும் கொடுக்கணுமா?" என்றார்.  மேலும் தொடர்ந்து, "நீ தான் இந்த மாடி கட்டும்போதே அந்தப் பகுதி முழுதுக்கும் சேகரும், சின்னவனும் சொந்தக்காரங்க என எழுதிக் கொடுத்துடணும். அதை உன் ஆம்படையான் கிட்டேச் சொல்லி அதற்கான ஏற்பாடுகளைச் செய்யணும். முறையாப் பத்திரம் பதிவு செய்யணும். பின்னாடி பணத்தை வாங்கிட்டு நீயோ, உன் குழந்தைகளோ இல்லைனு சொல்லக் கூடாது அல்லவா?  ஒண்ணு புரிஞ்சுக்கோ!  நாங்க பெருந்தன்மையா உன்னைக் கீழே நீ வாடகைக்கு விட்டுக்கலாம்னு அனுமதிக்கிறோமே! அதற்கான நன்றி கூட உன்னிடம் இல்லையே!" என்றார் ஸ்வாமிநாதன்.

வித்யா அசரவில்லை. மாமனாரை நேருக்கு நேர் நிமிர்ந்து பார்த்தாள். "சேகருக்கும் ஒரு பங்குப் பணம் உண்டு இல்லையா?" என்றாள். "இல்லாமல் என்ன? அவனும் எனக்கு ஒரு பிள்ளை தானே! அவனும் தானே கடன் வாங்கி வீடு கட்ட ஆரம்பிச்சிருக்கான்!" என்றார் ஸ்வாமிநாதன். வித்யா உடனேயே முகமலர்ச்சியைக் கஷ்டப்பட்டு வெளிக் கொண்டு வந்து மாமனாரைப் பார்த்துச் சொன்னாள். "சரி மாமா! நீங்க சொல்வதற்கு நான் உடன்படறேன். அவரையும் சம்மதிக்கச் சொல்லிக் கேட்கிறேன். ஆனால் நீங்க எங்களை இங்கே மாடியைக் கட்டிக் கொடுத்துப் பத்திரமும் பதிவு செய்யும்படி சொன்னாப்போல் சேகர் வீட்டின் மாடிப்பகுதியையும் அவன் கீழே கட்டுகிறாப்போல் கட்டி எங்கள் நாலு பேர் பெயரிலும் பதிவு பண்ணித் தரச் சொல்லிடுங்க! எனக்கு இந்த ஏற்பாட்டுக்கு முழுச் சம்மதம்!" என்றாள் வித்யா.

ஸ்வாமிநாதன் திகைத்து நின்றார். தான் கோலத்தில் நுழைந்தால் இவள் தடுக்கில் நுழைகிறாளே! கோபத்துடன் வித்யாவைப் பார்த்தவர், "பேராசைக்காரி நீ! அடுத்தவங்க சொத்துக்கு ஆசைப்படறியே! நீ நல்லா இருப்பியா? அதான் உன்னைக் கண்டாலே எங்களுக்குப் பிடிக்கலை!" என்றார்.

"ரொம்ப நல்லது மாமா! பிடிக்காமலே இருக்கட்டும். நான் நாளைக்கு எங்க ஊருக்குப் போய் நகையை விற்றுக் கொண்டு வரப் போகிறேன். இது முடிவான பேச்சு! இனி இந்தப் பேச்சு என்னிடம் வேண்டாம். நான் சொன்னதுக்குச் சம்மதம்னா வாங்க , மேலே பேசலாம்!" என்றபடி அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.

ஸ்வாமிநாதனுக்குத் தலை சுற்றியது.

118 கருத்துகள்:

  1. யப்பாடி! இன்னும் யாரும் வரலை. வந்தவங்களும் பயந்துண்டு ஓடிட்டாங்க போல! இஃகி,இஃகி,இஃகி! ஜாலிலோ ஜிம்கானா! டோலிலோ கும்கானா!

    பதிலளிநீக்கு
  2. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்விலும் ஆரோக்கியம் மேலோங்கி மன அமைதியுடன் வாழப் பிரார்த்திக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  3. கொஞ்சம் தாமதிச்சுப் பார்த்தேன். யாரானும் ஒளிஞ்சுண்டு எட்டிப் பார்ப்பாங்களோனு! யாரையும் காணோம்! என்ன ஆச்சு எல்லோருக்கும்? இப்போல்லாம் சுறுசுறுப்பே காணோமே! ஒரு வேளை நான் சுறுசுறுனு கிளம்பறதாலேயோ?

    பதிலளிநீக்கு
  4. கதையை வெளியிட்டதுக்கு ஸ்ரீராமுக்கு நன்றி. இது ஓர் உண்மைக்கதை. முடிவையும் மாற்றாமல் நடந்ததை அப்படியே சொல்லி இருக்கேன். இந்த வித்யா தான் கடைசி வரை மாமனார், மாமியாரை வைத்துக் காப்பாற்றிக் கரை சேர்த்தார். இப்போ வெளிநாட்டில் வாசம்.

    பதிலளிநீக்கு
  5. ஹிஹிஹி, இன்னிக்கு நான் மட்டுமே தனியாட்சியா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லோரும் தேர்தல் மும்முரத்தில் இருக்கிறார்கள்! கட்சிகள் கொடுத்துள்ள பணத்தை எண்ணிக்கொண்டிருக்கிறார்கள் !!

      நீக்கு
  6. அன்பு கீதாமா, இனிய காலை வணக்கம்.
    அனைவர்க்கும் இனிய காலை வணக்கம்
    எல்லோரும் இனிதாக வாழ இறைவன் அருள்
    புரிய வேண்டும்.

    பதிலளிநீக்கு
  7. ஆஹா. நல்ல கதை. இப்படிப் பெண்கள் இருந்தாலே
    போதும். அன்பும் பண்பும் இருக்கும் மருமகளைப்
    பாடு படுத்தும் மாமியார் மாமனார் கொஞ்சம்
    நிதானமாக இருப்பார்கள்.

    கதை வெகு கச்சிதம்.
    என்னமா திட்டம் போட்டார் இந்த மாமனார்.
    இப்படிக்கூட இருப்பார்களோ?

    ஒரு பையன் மேல் கரிசனம் இன்னோரு
    பையன் மேல் காய்ச்சலா. அனியாயமாக இருக்கே.!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது உண்மையில் நடந்தது தான் வல்லி. மூத்த பிள்ளை பிறந்தப்போ அந்த அப்பாவிற்குக் கொஞ்சம் உடல் நலம் சரியில்லாமல் இருந்தது. இந்தப் பிள்ளை பிறந்த நேரம் தான் என்று அவர் எண்ணம். ஆனால் அதன் பிறகு கடைசி வரை அந்தப் பிள்ளை தான் குடும்பத்தைத் தாங்கினான் என்றூ நினைத்ததில்லை. அவன் மூத்தவனாய்ப் பிறந்துட்டான். செய்யவேண்டியது அவன் கடமை. தம்பிகளின் மேல் பொறுப்பைச் சுமத்துவானா? என்பார். ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு நியாயம்.

      நீக்கு
    2. // ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு நியாயம்.// ஆம். நானும் இந்த வகை மனிதர்களைக் கண்டதுண்டு.

      நீக்கு
    3. எங்க வீட்டில் அப்பாவுக்கு வேறே மாதிரி நியாயம். பிள்ளைக் குழந்தைகள் எனில் சம்பாதித்துப் போடுவார்கள். பெண் குழந்தை வீட்டில் இருப்பதை எல்லாம் தூக்கிக் கொண்டு போய்விடுவாள் என்பார். அதனாலேயே அண்ணா, தம்பிக்கு உள்ள சலுகைகள் எனக்குக் கிடைத்தது இல்லை! :)))))) ஆனாலும் நாம புரட்சிக்காரியா இருந்தோமுல்ல! :)))))))

      நீக்கு
  8. வித்யா அசரவில்லை. மாமனாரை நேருக்கு நேர் நிமிர்ந்து பார்த்தாள். "சேகருக்கும் ஒரு பங்குப் பணம் உண்டு இல்லையா?" என்றாள். "இல்லாமல் என்ன? அவனும் எனக்கு ஒரு பிள்ளை தானே! அவனும் தானே கடன் வாங்கி வீடு கட்ட ஆரம்பிச்சிருக்கான்!" என்றார் ஸ்வாமிநாதன். வித்யா உடனேயே முகமலர்ச்சியைக் கஷ்டப்பட்டு வெளிக் கொண்டு வந்து மாமனாரைப் பார்த்துச் சொன்னாள். "சரி மாமா! நீங்க சொல்வதற்கு நான் உடன்படறேன். அவரையும் சம்மதிக்கச் சொல்லிக் கேட்கிறேன். ஆனால் நீங்க எங்களை இங்கே மாடியைக் கட்டிக் கொடுத்துப் பத்திரமும் பதிவு செய்யும்படி சொன்னாப்போல் சேகர் வீட்டின் மாடிப்பகுதியையும் அவன் கீழே கட்டுகிறாப்போல் கட்டி எங்கள் நாலு பேர் பெயரிலும் பதிவு பண்ணித் தரச் சொல்லிடுங்க! எனக்கு இந்த ஏற்பாட்டுக்கு முழுச் சம்மதம்!" என்றாள் வித்யா.!!!!!!!!!!



    இத்தனை தீர்க்க அறிவுள்ள பெண்ணைப் பகைத்துக் கொண்டார்களே
    பெரியவர்கள். ஆனாலும் அவள் விட்டுக் கொடுக்காமல் பார்த்துக்
    கொண்டிருப்பாள். அவள் யாருக்கும் அஞ்சாத
    நல்ல பெண்.
    அன்பு கீதாமா வெகு அருமையாக
    கதையை நகர்த்தி,
    விதயாவைச் சூழ்ச்சியில் சிக்காமல்
    விடுவித்து விட்டீர்கள்.
    தைரியமான பெண். அவளுக்கு மீனாக்ஷி என்றல்லவா
    பெயர் வைக்கணும்!!!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதனால் தான் அவங்களுக்குப் பிடிக்கலை. எல்லாவற்றையும் சமாளிக்கும் திறமை இருந்தது. விட்டுக் கொடுத்தது இல்லை. ஆனாலும் கடைசிக் காலத்தில் தான் மாமனார் புரிந்து கொண்டார். மாமியாரோ புரிந்து கொள்ளவே இல்லை. பின்னர் புரிந்தபோது தாமதம் ஆகிவிட்டது.

      நீக்கு
    2. எங்கள் வீட்டில் ,புக்ககத்தில் இது இருந்தது.
      பாட்டிக்கு மூத்த மகனிடம் கண்மூடித்தனமான பாசம்.
      மற்றவர்கள் அவ்வளவு
      கவனம் இல்லை. எனக்குப் பார்க்கும் போது வேதனையாக
      இருந்தது.
      மாமியார் மிக சாமர்த்தியமாக வீட்டை நிரவகித்தார்.
      நானும் அவரும் தான் கடைசி காலத்தில்
      துணை இருந்தோம்.
      என்னவோ நடக்கிறதுமா.
      உங்கள் கதை பல இடங்களில் எதிரொலிக்கும்.
      அன்பு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

      நீக்கு
    3. பல குடும்பங்களில் நடப்பதுதான் போலிருக்கு.

      நீக்கு
    4. உண்மைதான் கௌதமன் சார். எங்க உறவினர்கள் சிலர் வீடுகளில் மூத்த பிள்ளை எனில் முழு அதிகாரமும். அடுத்தவர்கள் அடங்கி ஒடுங்கிப் போகணும்! மூத்த பிள்ளை சொல்வது தான் சட்டம். இப்படியும் உண்டு.

      நீக்கு
    5. தான் பெற்ற குழந்தைகளிடையேயே இப்படி மாறுபாடு பார்ப்பார்களா என்றால், ஆம், எனக்குத் தெரிந்த குடும்பங்களிலும் இது நிறைய உண்டு.

      நீக்கு
  9. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...
    நலமே வாழ்க எங்கெங்கும்...

    பதிலளிநீக்கு
  10. ஆகா.. கீதாக்கா அவர்களது கைவண்ணமா!.. நிச்சயமாக ஏதாவது படிப்பினை இருக்கும்... சற்று பொறுத்து வருகிறேன்...

    பதிலளிநீக்கு
  11. வாழ்க்கையை எப்படி மோசமாக்கிக்கொள்வது, தன் பிள்ளைக்கே எப்படி கெடுதல்கள் செய்வது, நல்லவர்களை எப்படி சாமர்த்தியமாக ஏமாற்ற நினைப்பது... இவற்றில் சுவாமிநாதனும் அவர் மனைவி விசாலமும் பி எச் டி முடித்திருப்பாங்க போலிருக்கே.

    கூட்டுக் குடும்பத்தின் பேராசை, மகன்களுக்கிடையில் பேதம் பார்த்து தங்களின் நிலையைத் தாழ்த்திக்கொள்வது என நல்ல குடும்பச் சிக்கல்கள் உள்ள கதை. நன்றாக இருந்தது கீசா மேடம். பாராட்டுகள்

    ஆனால் இவ்வளவு ஓபனாகவா, நான் உமி தர்றேன், நீ அரிசி வாங்கி சாதம் வடித்தபின் மூன்றில் ஒரு பங்கு நீ எடுத்துக்கொண்டு மூதியை எங்களுக்குத் தா என்று சொல்வார்களா?

    அதே சமயம் பெற்றோர் சம்பாதித்த பணத்தை, சொத்தை தனக்குப் பிடித்த மகனுக்குக் கொடுப்பது என் வாழ்விலும் நிகழ்ந்திருக்கிறது. அதற்கான நியாயங்களும் உண்டு, எல்லோராலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனினும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விளக்கமான விமரிசனக் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
    2. வாங்க நெல்லை, கெடுதல்னு இல்லை. அவங்களால் சமாளிச்சுக்க முடியும் என்னும் எண்ணம். அதோடு இரண்டாவது பிள்ளையிடம் அதிகப் பாசம்! பொதுவாகப் பல குடும்பங்களில் பெற்றோர்களாலேயே மகன்களுக்கிடையே சண்டை மூழ்வது உண்டு. தெள்ளத் தெளிவாக அவங்க சொன்னதைத் தான் நான் இங்கே சொல்லி இருக்கேன். இன்னும் சொல்லப் போனால் நடந்த பேச்சு வார்த்தையின் சூட்டைக் குறைத்துக் காட்டி இருக்கேன். குறிப்பிட்ட பேச்சு வார்த்தையை மட்டுமே எடுத்துக் கொண்டேன். பூர்விக சொத்தில் கூட அந்தத் தகப்பன்/தாய்க்கு மூத்த பிள்ளை, மருமகள், குழந்தைகளுக்குக் கொடுக்கும் எண்ணம் வரவில்லை. இரண்டாவது பிள்ளையிடமே கொடுத்தாங்க. கடைசியில் ஏமாந்து போய் நிர்க்கதியாக/உண்மையாகவே நிர்க்கதியாய்ப் பெரிய பிள்ளையிடம் வந்தாங்க!

      நீக்கு
  12. உண்மை கதை தங்கு தடங்கல் இல்லாமல் அப்படியே சொல்லி விட்டீர்கள்.
    இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களே!

    //நீங்க எங்களை இங்கே மாடியைக் கட்டிக் கொடுத்துப் பத்திரமும் பதிவு செய்யும்படி சொன்னாப்போல் சேகர் வீட்டின் மாடிப்பகுதியையும் அவன் கீழே கட்டுகிறாப்போல் கட்டி எங்கள் நாலு பேர் பெயரிலும் பதிவு பண்ணித் தரச் சொல்லிடுங்க! எனக்கு இந்த ஏற்பாட்டுக்கு முழுச் சம்மதம்!" என்றாள் வித்யா.//

    இப்படி புத்திசாலிதனமாய் பேசி இருக்காவிட்டால் நன்றாக ஏமாற்றி இருப்பார்கள் போலவே!

    இக்கதையின் நாயகி யார் என்று தெரிந்து விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹாஹா, நீங்க நினைப்பவர் இல்லை. அது மட்டும் நிச்சயம். மற்றபடி வித்யா புத்திசாலி தான்! தன் வாழ்க்கையைத் தானே காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்னும் எண்ணம் நிறைய உண்டு அவளிடம்.

      நீக்கு
    2. உண்மைக கதையா?
      எனில் பலே வித்யா.

      நீக்கு
  13. பாசவலை கதைக்கு பொருத்தமாய் பெயர் வைத்து இருக்கிறீர்கள்.

    //ஏதாவது வேலை ஆகணும் போல் இருந்தால் இருவருமே குழைவார்கள். அப்போது குரலே மாறி இருக்கும்//

    எப்படி எல்லாம் மனிதர்கள் !
    குழந்தைகளுக்கு வித்யா பாடம் சொல்லி தரும் இடத்திற்கு பொருத்தமாக படம் வரைந்து இருக்கிறார் கெளதமன் சார். மாமா, அத்தையின் பேச்சை கேட்க முகம் திரும்பி இருக்கிறார் வித்யா அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்பாடி - முதல் ஆள் - படத்திற்கு பாராட்டு -- நன்றி.

      நீக்கு
    2. பெயர் ஶ்ரீராம் வைத்தது கோமதி. காலையில் அவசரத்தில் சொல்ல மறந்துட்டேன். படத்தை நானுமே காலையில் பார்த்தேன். வித்யாவின் முகம் கோபத்துடன் ஜ்வலிக்கிறாப்போ இருக்கு!

      நீக்கு
  14. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் சகோதரி

    இன்று நீங்கள் எழுதிய கதையாகத்தான் இருக்குமென்று நினைத்து வந்தேன். அப்படியே நீங்கள்தான். எனக்கு என்னவோ இன்று கொஞ்சம் உடல் அசதியில் எழுந்திருக்கவே தாமதமாகி விட்டது.

    கதையை கோர்வையாக நன்றாக சொல்லியிருக்கிறீர்கள். எவ்வளவு சுயநலம் அந்த ஸ்வாமி நாதனுக்கு. தன் மூன்று பிள்ளைகளையும் ஒன்றாய் பார்க்க வேண்டாமோ? இத்தனைக்கும் பெரியவனால்தான் மற்ற குழந்தைகளுக்கு நன்மைகள் நடந்துள்ளது என்பதைக்கூட உணராமல் வக்கிரமான மனதுடன் வித்யாவிடம் இப்படியெல்லாம் எப்படி கேட்கத் தோன்றியது?

    உலகத்தில் எப்படியெல்லாம் மனிதர்கள் இருக்கிறார்கள். மனித மனமே பொதுவாக சுயநலங்களில் ஈடுபாடு கொண்டவைதான்.அதற்காக ஒரு நியாயம், தர்மம் இல்லாமல் இப்படியா? இப்படியெல்லாம் அவர் சகுனி மூளையில் யோசித்து எப்படி? ஆச்சரியமாக உள்ளது. நல்லவேளை அந்தப் முதல் மாட்டுப்பெண் வித்யா அந்த இடத்தில் சற்று சுதாரிக்கவில்லையென்றால், இன்று மிகவும் சிரமபட்டிருப்பாள். இறைவன் அவள் நல்ல மனதிற்கு தகுந்த பரிசு தந்து விட்டான். இனியாவது அவள் வாழ்வில் கணவர், குழந்தைகளுடன் அவள் நிம்மதியாக இருக்க வேண்டும்.

    ஒன்று மட்டும் நிச்சயமாக புரிகிறது. பணம் மனிதர்களை தன் வலையால் பின்னிப் பிணைக்கிறது. கூடவே சுயநலம் என்கிற கயிறும் அதை இறுக்கி கட்டுவதற்கு அதற்கு ஒத்துழைக்கிறது. கதையின் தலைப்பு பொருத்தமானதுதான். நன்றாக எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    கதைக்கு பொருத்தமான ஓவியம் வரைந்த சகோதரர் கொளதமன் அவர்களுக்கும் பாராட்டுக்கள். நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா, பொதுவாக அந்தக் கால மனிதர்களுக்கே குழந்தைகள் நிறைய இருக்கையில் மூத்த பிள்ளை பொறுப்பை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றே எதிர்பார்ப்பார்கள். அதிலும் இங்கே ஸ்வாமிநாதனுக்குப் பொறுப்பு அறவே பிடிக்காது. மூத்த பிள்ளை கல்யாணம் செய்து கொண்டதிலேயே இருவருக்கும் அவ்வளவு சம்மதம் இல்லை. எல்லாப் பொறுப்பும் அவனிடம் இருக்கும்போது பொறுப்பைத் தட்டிக் கழித்துவிட்டான் என்றும் சொல்லுவார். மூத்த பிள்ளை கஷ்டப்பட்டுக் கொண்டாவது இரண்டாவது, மூன்றாவது பிள்ளைகள், மற்றும் சகோதரிகளைக் கவனித்திருக்க வேண்டாமா? இப்படிக் கல்யாணம் செய்து கொண்டு தன் பாட்டைப் பார்த்துக் கொண்டு போய்விட்டானே என வெளிப்படையாகச் சொல்லும் குணம் உள்ளவர்.

      நீக்கு
  16. என்னவொரு தெளிவான உறுதியான முடிவு... அருமை...

    பதிலளிநீக்கு
  17. மாமனார் கிடுக்கிப்பிடி கிருஷ்ணன் மாதிரி பேசுகிறாரே...?

    கதையின் தொடர்ச்சி சமீபத்தில் எனது தளத்தினல் சொன்ன உண்மை நிகழ்வுதானோ ?

    ஒரு கண்ணில் வெண்ணை, மறு கண்ணில் சுண்ணாம்பு இப்படியும் பெற்றோர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், கில்லர்ஜி, அன்றே எழுதி வைச்சேன் அந்த நிகழ்வை! அதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாய் விரிவாக்கம் செய்தேன். இப்போவும் அப்படிப் பல பெற்றோர்கள் உண்டு. ஒரு பிள்ளை, ஒரு பெண் இருந்தால் பெண்ணுக்கு மட்டும் அதிகச் சலுகை, அதிகமான கொடுக்கல்/வாங்கல், பிள்ளையைத் தொந்திரவு செய்து பெண்ணுக்குச் செய்யச் சொல்வது என்று இருக்கும் பெற்றோர் இப்போதும் இந்தக் காலத்திலும் உண்டு.

      நீக்கு
  18. சுயநலம் மிக்க மனிதர்கள் எங்கெங்கும் நிறைந்திருக்கிறார்கள். நல்ல கதை. பாராட்டுகள் கீதாம்மா.

    பதிலளிநீக்கு
  19. பாச வலை உறுதியாக பின்னப் பட்டிருக்கிறது. அதில் தப்பித்த விலாங்கு மீனாக வித்யா. பல குடும்பங்களில் பார்த்திருக்கிறேன் யார் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறிர்களோ அவர் தலையில்தான் மேலும் மேலும் சுமை ஏற்றப்படும். இயல்பான நடை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பானுமதி, இயல்பாக நடக்கும் ஒரு விஷயத்தை நன்கு கவனித்துப் புரிந்து கொண்டதற்கு நன்றி.

      நீக்கு
  20. கீதாம்மா, உங்க கதையா இன்னிக்கு?.. ஜமாயுங்க.. வாசித்து விட்டு வருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா, வாசித்துவிட்டு வாருங்கள். ஆனால் மாமியார்/மாமனாரின் இயல்பைச் சொன்னதை உங்களால் ஏற்க முடியாதே! :)))))))

      நீக்கு
    2. உங்கள் யூகம் சரியே. :)) அதற்கு இயல்பான காரணமும் சொல்லியிருக்கிறேன், கீதாம்மா. நேர்மறைச் சிந்தனையில் விளைந்தது தான் அதுவும்! உங்களின்
      அடுத்த படைப்பு நிஜம் கலந்த கற்பனையாக இருந்து வாசிக்க ஆசை!..

      நீக்கு
    3. ஜீவி சார், மாமனார்/மாமியார் நல்லவங்களா இருந்தாலும் அதையும் ஏற்க முடியாத மருமகள்கள் உண்டு. நீங்க அனைவரையும் நல்லவங்களாவே பார்க்கறீங்க. தப்பே செய்ய மாட்டாங்கனு நம்பறீங்க. என்னோட வாழ்க்கையில் இரண்டு பக்கங்களையும் பார்த்துட்டேன். நல்ல மாமனார்/மாமியாரை ஏமாற்றிய மருமகளையும் பார்த்தேன்/பார்க்கிறேன். அதே போல் நல்ல மருமகளைக் கொண்டாடாத மாமனார்/மாமியாரையும் பார்த்தேன்/பார்க்கிறேன். ஆகவே நடந்ததை நடந்தபடித் தான் என்னால் சொல்ல முடிகிறது. கற்பனை வளம் என்பதே என்னிடம் இல்லைனு நினைக்கிறேன்.

      நீக்கு
    4. நேர்முறை/மறைச் சிந்தனைகள் இருப்பதற்கும் இதுக்கும் சம்பந்தம் இருப்பதாய்த்தெரியவில்லை ஐயா! நேர்மறைச் சிந்தனைகள் இருந்தால் தான் ஒருத்தரை நல்லவராய்க் காட்ட முடியுமா? அனுபவங்கள் வேறே/சிந்தனைகள் வேறே! என்னதான் நல்லதையே நினைத்தாலும்/நல்லதையே செய்தாலும் நமக்குக் கெடுதலே செய்கிறவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள்.

      நீக்கு
  21. அன்புள்ள கீதாம்மா, அருமையான கதை! இது போல நிஜத்திலும் கண்டதுண்டு! எப்பொழுதும் கூடவே இருப்பவர்களின் அருமை புரிவதில்லை!வித்யா போன்ற சமர்த்தியமான பெண்ணாக இல்லயென்றால் , அவர்களின் பிள்ளைகளின் கதி?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வானம்பாடி, உண்மை நிலவரத்தைச் சரியாகப் புரிந்து கொண்டு இப்போதும் இருப்பதைச் சொன்னதுக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  22. என்ன அப்பா அம்மா பாச வலை பின்னாமல் மோசவலை பின்னுவதற்கு ஆயத்தம் செய்தார்கள் நல்ல மருமகள் இது கூடவா புரிந்துகொள்ள முடியாதவர்கள் உலகம் இப்படியும் இருக்கிறது செய்பவர்கள் ஏமாளியாக இருக்கக்கூடாது என்பதற்கு இது ஒரு உதாரணம் கதை உண்மையாக இருப்பதால் நம் அனுதாபமும் அதிகம் ஏற்படுகிறது நன்றாக எழுதி இருக்கிறீர்கள் அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அம்மா, செய்பவர்கள் தலையிலேயே மேலும் மேலும் சுமையை ஏற்றுபவர்களே அதிகம். பாராட்டுக்கு நன்றி அம்மா.

      நீக்கு
  23. வாசித்து விட்டேன்.

    செவ்வாய் கிழமை ஆயிற்றே? எபியில் சிறுகதை அல்லவோ வெளிவரும் நாள் இது?
    ஒரு கதையைத் தான் வாசித்தோம், கருத்துச் சொல்லலாம் என்று பார்த்தால், பின்னூட்ட ஆரம்பப் பகுதியிலேயே 'இது ஓர் உண்மைக்கதை.. முடிவையும் மாற்றாமல் நடந்ததை அப்படியே சொல்லி இருக்கேன்' என்று சொல்லியிருக்கிறீர்களே? ஏன் அப்படி
    சொல்லி கதையாக்கும் என்று வாசித்த ஆர்வத்திற்கு ஏமாற்றம் அளித்தீர்கள், சொல்லுங்கள்.

    உண்மைக் கதை என்று ஏதும் இல்லை, கீதாம்மா. உண்மை நிகழ்வு தான் உண்டு. நிகழ்ந்த ஒரு உண்மை நிகழ்வைக் கருவாகக் கொண்டு அதில் நம் கற்பனையை நாம் விரும்புகிற விகிதத்தில் கலந்து கதை 'பண்ணுவதை' கால வழக்கில் உண்மைக் கதை என்று சொல்ல ஆரம்பித்தனர். அதுக்கு அர்த்தம், முழுதும் கற்பனை அல்ல. நடந்த நிகழ்வு ஒன்றின் அடிப்படையில் நடக்காத ஒன்றின் கற்பனை முலாம் பூசிய கதை இது என்றே அர்த்தம்.

    சொல்லப்போனால் எல்லாக் கதைகளின் அந்தரங்க ஆத்மாவும் இது தான். அந்த அளவுக்கு முழுக் கற்பனை என்று எதுவும் இருபதற்கு அடித்தளம் இல்லாது போய் விட்டது. கற்பனை என்பதே நிகழ்ந்த ஒன்றின் மேலான நம் கற்பனை வலை பின்னல் தான். மாயாஜாலக் கதைகள் மட்டுமே முழுக் கற்பனையாக இருக்க சாத்தியக் கூறுகள் உண்டு. விஞ்ஞானக் கதைகளுக்குக் கூட ஒரு அறிவியல் உண்மை அடித்தளமாக இருக்க வேண்டும் என்ற நியதி உண்டு.

    எப்பவுமே நடந்த ஒன்றுக்கு கருத்து சொல்வது கஷ்டமான காரியம். ஏனென்றால் அது இயற்கையாகவே நடந்த ஒன்று என்ற நிஜ விஷயம் என்பதினால் நம் அபிப்ராயம் தேவையில்லாது போகிறது...

    இன்னொன்று. நடந்த ஒரு விஷயத்தை ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி சொல்லலாம். அது உண்மையே ஆயினும் எந்த ஒரு நடந்த விஷயமும் சொல்பவரைப் பொறுத்து நடந்த நிஜத்தில் லேசான மாற்றங்கள் கொண்டிருக்கும்.

    உதாரணமாக இங்கு சொல்லப்பட்டிருக்கும் இந்த நிகழ்வு அந்த மூத்த மருமகள் வித்யா சொல்கிற மாதிரி இருப்பதாக நிறையவே யூகிக்க முடிகிறது. இதையே அந்த வித்யாவின் மாமனார், மாமியார் சொல்வதாகக் கேட்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அது வேறு மாதிரியாக இருக்கும். எந்த நிகழ்விற்கும் பலத்த ஒரு பின்புலம் இருக்கும். அவர்கள் சொல்லும் பொழுது அந்தப் பின்புலத்தையும் சேர்த்துச் சொல்வார்கள். அவ்வளவு தான்.

    நீங்களே விவரித்த இந்த உண்மை நிகழ்வில் ஏதாவது 'உங்கள் கற்பனையாக' கதைக்காக சேர்த்திருக்கிறீர்களா? சொல்லுங்கள். சேர்த்திருந்தால் அப்பொழுது தான் இது கதை ரூபம் கொள்கிறது என்பதால் ஆர்வத்தோடு கேட்கிறேன்.

    அப்படிச் சேர்த்திருப்பீர்களானால், நீங்கள் கலந்திருக்கும் கற்பனை எந்த அளவுக்கு இந்த உண்மை நிகழ்வுக்குப் பொருந்தி வருகிறது, அல்லது பொருந்தி வரவில்லை என்பதைப் பற்றி ஒரு கதைக்கான பின்னூட்டம் மாதிரி கருத்துச் சொல்ல வாய்ப்பேற்படும் என்பதற்காகத் தான் இதைச் சொல்லவும் தோன்றியது.

    இந்த செவ்வாய் ஒரு கதையை வாசிக்காவிட்டாலும், ஒரு உண்மை நிகழ்வை வாசிக்கக் கொடுத்தமைக்கு நன்றி, கீதாம்மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கற்பனைக்காக எதையும் புதிதாய்ச் சேர்க்கவில்லை. சொல்லப் போனால் நடந்த நிகழ்வின் பயங்கரத்தைக் குறைத்திருக்கிறேன். இன்னும் கடுமையாக நடந்து கொண்ட மாமனார்/மாமியாரை இங்கே சூழ்ச்சிக்காரர்களாக மட்டும் காட்டி இருக்கேன். இதான் உண்மை. ஆனால் பல குடும்பங்களில் குடும்பப் பொறுப்பை ஏற்பவர்களின்/ஏற்றவர்களின் பாடு எப்போதும் திண்டாட்டம் தான். மற்றவர்கள் பொறுப்பில் பங்கேற்க வரமாட்டார்கள். மாமனார்/மாமியார் சொல்லும்படி எழுதி இருந்தாலும் இதான் உண்மை. இதைத் தான் குறிப்பிட்டிருக்க வேண்டும் அவர்கள் பார்வையிலும். நாங்க பணம் கொடுக்கிறோம்னு சொல்லியும் அவ அகங்காரத்துடன் வேண்டாம்னு சொல்லிட்டா என்று சொல்லிக் கொண்டிருந்ததாய்ச் சொல்வார்கள். தாங்கள் செய்தது அவர்கள் வரையில் நியாயம் என்னும் எண்ணமும் உண்டு. பெரிய பிள்ளை/மருமகள் பொறுப்பு இருப்பதால் அனைவருக்குமே செய்ய வேண்டும்/செய்து கொண்டிருக்க வேண்டும் என்னும் எண்ணமும் நிறையவே உண்டு. சின்னப் பிள்ளை சாப்பாட்டிற்குப் பணம் கொடுப்பதையே தப்பு என நினைப்பவர்கள் அவர்கள். அவர்களால் நியாயமான எந்தக் காரணத்தைக் காட்டி இருக்க முடியும்? அவன் பெரியவன்! எல்லோருக்கும் செய்ய வேண்டியவன் அவன் தான். கல்யாணம் பண்ணிக் கொண்டு குழந்தைகள் பெற்றதால் கூடப் பிறந்தவங்களை எப்படி ஒதுக்கலாம்? இதுவே அவங்க கேள்வி!

      நீக்கு
  24. ஆஆஆஆ இன்று கீசாக்கா கதையோ.. படிக்கும்போதே இது உண்மைக் கதையாகத்தான் இருக்கோணும் என நினைத்தே படித்தேன் அப்படியே ஆகியிருக்கு.

    ஆனா பொதுவாக இப்படி மருமகளோடுதான், மாமா மாமி ஒட்டுவார்கள் ஆனா வித்தியா கதையில் இது மாறி நடந்திருக்கிறதே...

    அழகாக, கதையைத் தொகுத்து வழங்கிட்டீங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க யூ ரியூப் செஃப் அதிரடி அதிரா, பார்க்கவே முடியலை இப்போல்லாம். இப்படி மருமகள் நல்லவளாக இருந்துவிட்டால் அவங்க குணாதிசயங்களை மாற்றிச் சொல்லிக் கிட்டத்தட்ட character assasination பண்ணும் மாமனார்/மாமியார் உண்டு. உலகம் பலவிதம் எனில் மனிதர்கள் அதில் பலப்பல விதம். அதிலே இது ஒரு விதம். பாராட்டுக்கு நன்றி.

      நீக்கு
  25. “பாசவலை”
    தலைப்புப் பார்த்த கணம், என் நினைவுக்கு வந்த பாட்டு இது..

    https://www.youtube.com/watch?v=qAORy0ZZw90

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தலைப்பு ஶ்ரீராமுக்குச் சொந்தம். அவர் என்னமோ தெரியலை 3,4 நாட்களாகப் பதிவுகள் பக்கமே வரலை. ரொம்ப பிசி போல எங்க குஞ்சுலுவைப் போல்! :)))))

      நீக்கு
    2. இல்லையே...  இன்று கூட புதுப்பதிவுகள் யாவும் படித்துக் கருத்திட்டு விட்டேனே...!!!

      நீக்கு
    3. அதிரா...  

      https://www.youtube.com/watch?v=d_dFv1_g-ao

      இந்தப் பாடல் நினைவுக்கு வரவில்லையா!

      நீக்கு
    4. ஹய்யோஓஒ   ஹாஹா .ஒரு போஸ்ட் எழுதி அதில் லாஸ்ட் வரி உங்களை ரெண்டு பேர் பற்றி எழுதினேன் ரெண்டு நாள்முன்னே இன்னிக்கு ப்ரூவ் பண்றீங்க :)) நான் என்ன எழுதினேனோ அதை இன்று 

      நீக்கு
    5. அப்படியா ஶ்ரீராம்! அப்போ எங்கள் ப்ளாக் பதிவுகளுக்கு மட்டும் வரலை போலிருக்கு! ஞாயிறன்றும், நேற்றும் உங்களைக் காணோம். இன்று இப்போத் தான் எட்டிப் பார்த்திருக்கீங்க.

      நீக்கு
    6. ஏஞ்சல்.. என்னையும் பற்றியா? என் கண்ணில் படலையே...

      நீக்கு
    7. போஸ்ட் இன்னும் வெளியிடலை :)) ட்ராப்டில் இருக்கு நாளைக்கு அதீஸ்பேலஸ் அப்டேட்டோடுதான் வரும்ம்ம்ம் :))))))))))))))

      நீக்கு
    8. அவ்வ்வ்வ்வ்வ்வ் ஸ்ரீராம்.. ஹா ஹா ஹா உங்கட பாட்டை இப்போதான் கேட்கிறேன்.. எனக்கு இப்படியான சங்கீதப் பாடல்கள் பெரிதாகப் பிடிப்பதில்லை:))))..

      அஞ்சு ட்ரெயிலர் விட்டிருக்கிறா:)) ஹா ஹா ஹா..

      நீக்கு
  26. இப்படியும் பெற்றோர்  ஒருபிள்ளைக்கு  சாதகமா இருப்பாங்களானு சிலருக்கு தோணும் .ஆனா இதுதான் உண்மை .நிறைய சுவாமிநாதன்கள் விசாலம் போன்றோர் இருக்காங்க :) வித்யா போன்ற தெளிந்த குணமுள்ள சிந்திக்கும் திறமையுள்ள பெண் கிடைக்க அவர்கள்கொடுத்து வைத்திருக்கணும் .சில பெற்றோர் ஒருபட்சமாய் இருப்பது உண்மையில் வேதனை .
    அழகான குடும்பக்கதை கீதாக்கா .எல்லாப் பெண்களும் வித்யா போல தெளிவா இருந்தா பிரச்சினைகள் வராது .பிரச்சினை செய்ய நினைப்போருக்கு நோஸ் கட் :)நம் வாழும்வாழ்க்கையில் மன்னிப்பு என்பது முக்கியத்துவம் உள்ள தெய்வ குணம் .கதையின் உண்மை நிகழ்வில் அந்த மாமியார் மாமனாருக்கு ஏற்பட்ட அனுபவம் அவர்களை திருத்தியிருக்கும் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெண்கள் 2,3 பேர் இருந்தால் அவர்களில் கூட வேற்றுமை காட்டும் பெற்றோர் உண்டு. ஒரு பெண்ணுக்கு அதிகச் சலுகை, திருமணம் போன்றவற்றில் செய்வதும் அதிகம், இன்னொரு பெண்ணுக்கு இதுவும் போதும்/அதுவும் போதும் என்னும் மனப்பான்மை. பிடிக்காத பெண்ணிடம் வேலை வாங்குவது!இப்படியும் அம்மாக்கள் உண்டு. அம்மாக்களை தெய்வ நிலைக்கு உயர்த்தி வைத்துவிட்டதால் நான் சொல்லும்போது அது பலருக்கு ஜீரணிக்கக் கஷ்டமாக இருந்தாலும் இது தான் உண்மை! சத்தியம்! எங்க சுற்றங்களிலேயே பார்த்துக் கொண்டிருக்கேன். மாமனார் என்னவோ கடைசிக் காலத்தில் உணர்ந்தார் தான். ஆனால் மாமியார்? அப்படி உணர்ந்ததாகத் தெரியலை.

      நீக்கு
    2. //பெண்கள் 2,3 பேர் இருந்தால் அவர்களில் கூட வேற்றுமை காட்டும் பெற்றோர் உண்டு///
      வேதனையான உண்மைக்கா .எனக்கு தெரிஞ்சவங்க பெண் அவளுக்கு இரண்டு அக்கா ஒரு அண்ணன் மற்ற சிஸ்டர்ஸுக்கு விதவிதமா மத்திய உணவு கட்டித்தரும் அம்மா இவளுக்கு மட்டும் வெறும் உப்புமா வைப்பர் :( இவள்தான்  தைரியமா ஒற்றைப்பெண்ணா குடும்பத்தை தாங்கி பிடிச்சா ஆனாலும் அவளை காட்டுச்செடி போலத்தான் கவனிச்சாங்க அவளும் தானே எப்படியோ முன்னேறி யாரையோ லவ் பண்ணா அப்புறம் என்னாச்சுன்னு தெரில .இது பல  வருஷம் முன்  நடந்தது .அம்மாக்களும் மனுஷங்கதான்க்கா அதேபோல் ஆசிரியர் தினம் வரும்போது எல்லாரும் ஆசிரியர்களை ஆஹா ஒஹோன்னுவாங்க .எனக்கு தெரிந்த சிலர் அவ்ளோ கேவலமா ஒருதலையா நடந்த ஆசிரியர்களுமுண்டு .நானும் பேசாமல் வாயைமூடிட்டு இருப்பேன் அம்மாக்கள் அப்பாக்கள் ஆசிரியர்கள் எல்லாருமே கடவுள் இல்லை அவங்களும் நம்மைப்போல் ஆசாபாசங்களை உட்பட்டவங்க .ஆனா பாருங்க விதிவிலக்குகளை யாரும் ஏற்பதில்லை :(  
      பாலகுமாரன் கதையில் வரும் அம்மாக்கள் போல் எத்தனையோ அம்மாக்களை நான் கண்டதுண்டு .இப்படியெல்லாம் நடக்க வாய்ப்பேயில்லைன்னு யாரும் சொல்லவே முடியாத அளவுக்கு நடந்திருக்கு உலகில் .

      நீக்கு
    3. உண்மைதான் ஏஞ்சல். நானும் எங்க சுற்றங்களிலே பார்த்திருக்கேன். ஒரு அம்மாவுக்கு 3 பெண்கள், ஒரு பிள்ளை. 3 பெண்கலில் முதல் பெண் நல்ல வெள்ளை நிறம். நடுப்பெண் நல்ல கறுப்பு நேர்மாறாக. கடைசிப் பெண் செல்லமோ செல்லம் அப்பாவுக்கு. பிள்ளை ஒரே பிள்ளை என்பதால் என்ன கேட்டாலும்/செய்தாலும் யாரும் எதுவும் சொல்லக் கூடாது. நடுப் பெண் தான் பாய்லருக்குச் சாணியில் கரித்துண்டுகளைப் போட்டு விராட்டி தட்டணும். வெயிலில் அவள் தான் போய் நின்று ரேஷன் வாங்கணும். அம்மாக்காரி சொல்லவே சொல்லுவாங்க. நீ கறுப்பா இருக்கிறதாலே இதுக்கு மேலே கறுத்துப் போக முடியாது. அதனால் நீயே போ! என்பார். பிள்ளைக்கு எது செய்தாலும் அந்தப் பெண் தான் செய்யணும். குளிப்பாட்டுவது, கழிவறை கூட்டிச் சென்று சுத்தம் செய்வது என! ஆனால் கல்யாணம் ஆகிப் போன இடத்தில் கணவர் நல்லவராக அமைய அவளுக்கு இப்போ ராஜபோக வாழ்க்கை. அம்மாவையும், தம்பியையும் அவள் மேற்பார்வையில் தான் பார்த்துக் கொள்கிறாள். மற்ற இரு பெண்களும் அவரவர் குடும்பச் சூழ்நிலையில் கவனிக்க முடியவில்லை. எந்தப் பெண்ணை அம்மா ஒதுக்கினாளோ அவள் தான் இப்போது அம்மாவைத் தாங்குகிறாள்.

      நீக்கு
    4. எங்கட அப்பா அம்மாவுக்கும் என்னிலதான் அதிகம் பாசம், ஒரு வீதம் என்றாலும் கூட:)) ஹா ஹா ஹா ஹையோ சொல்லிடாதையுங்கோ:)))).. அது கடைசிப் பிள்ளை என்பதாலயோ என்னமோ..

      நீக்கு
  27. கதை/நிஜம் வேகமாகச் சென்று சடன் ப்ரேக்கில் திகைத்து நின்றுவிட்டது!

    அவ்வளவு உறுதியான மருமகளா? எளிதில் கிழங்கள் ஒத்துக்கொண்டதுகளா? இருந்தும் கதை ஒரே ஸ்ட்ரெய்ட் லைனில் போகிறதே... நம்பக் கஷ்டமாக இருக்கிறது. இன்னும் குழப்பியிருக்குங்களே பெரிசுகள். பிள்ளையிடம் போய் ’எங்கள என்னடா பண்ணச்சொல்றே? ஒம் பொண்டாட்டிதான் இப்படிச் சொன்னா’ என்றும், ’அவன் சம்மதிச்சிட்டான்.. ஒனக்கென்னடி திமிரு? நீந்தான் இங்க பிரச்னையே..’ என்று மாட்டுப்பெண்ணிடம் கொளுத்திப்போட்டும் தகிடுதத்தங்கள் (அனுபவ வீரர்கள் அல்லவா!) நிறைய செய்திருப்பார்களே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேரில் பார்த்தாப்போல் சொல்லிட்டீங்க. உண்மைதான். அமர்க்களம் ஆனது அதன் பின்னரும் பின்னரும். மருமகள் உறுதியானவள் என்பதே ஓர் பிரச்னையாக ஆகிவிட்டது. நம்பித் தான் ஆகணும். இந்தக் குறிப்பிட்ட விஷயத்தை மட்டும் எடுத்துக்கொண்டு அந்த சம்பாஷணைகளை மட்டும் கொடுத்ததால் இப்படித் தோணுதோ? இன்னும் விபரமாக எழுதுவது எனில் சரியா இருக்காது. இதுவே நீளமாகப் போய்விட்டது. பிள்ளை சம்மதிச்சுட்டான் என அவங்க சொன்னதே பொய்! இப்போதைக்கு இது மட்டும்!

      நீக்கு
    2. பொதுவாகப் பெண்களுக்கு நகைகளில் மோகம் அதிகம். அதிலும் பிறந்த வீட்டுச் சொத்து எனில் அதை ஓர் பொக்கிஷமாக மதிப்பார்கள். ஆகவே பெரிசுங்க இரண்டும் நகைக்காக எதை வேண்டுமானாலும் செய்து விடுவாள் எனத் தப்புக் கணக்குப் போட்டுக் கொண்டு செய்த வேலை. வித்யா மசியலைனதும் கோபம்/ஆத்திரம்!

      நீக்கு
  28. இது தான் யதார்த்தம். உதவி செய்பவர்களைத் தான் அதிகம் செய்ய சொல்வார்கள். நான் வித்யா கருத்தையே வழிமொழிகிறேன்.

    பதிலளிநீக்கு
  29. பாசவலை யதார்த்தம். சிக்கிக் கொள்வது மூத்த பிள்ளைகள்தான்.

    பதிலளிநீக்கு
  30. ஸ்ரீராம் பொருத்தமாக கதை தலைப்பை தேர்ந்து எடுத்து இருக்கிறார்.
    அந்த மாமனார் அன்பு வைத்து இருந்தால் எல்லோரையும் சமமாக நினைத்து இருப்பார். சிலரிடம் அதிக பாசம் வைத்து இருப்பதால் அவர்களுக்கு மட்டும் நல்லது செய்ய நினைத்து இருக்கிறார். அன்பு வலை இனிது. பாசவலை தவறவைக்கும்.
    கண்மூடித்தனமான அன்பை பாசம் என்பார்கள். பாசவலையில் சிக்காமல் அன்பால் அவர்களை கடைசி வரைக்கும் பார்த்து கொண்ட வித்யா வாழ்க! வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்குத் தெரிந்து நாலைந்து குழந்தைகள் இருக்கும் பெற்றோர் யாரானும் ஒரு குழந்தையிடம் தான் அதிகப் பாசம் வைக்கிறார்கள். என் மாமனார்/மாமியாருக்குக் கடைசி நாத்தனார் தான் ரொம்பவே செல்லம். எது ஒன்றும் அவர் வந்து செய்தால் தான் அவங்களுக்குத் திருப்தி.

      நீக்கு
  31. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  32. கட்டுரை கட்டுரையாய்
    கருத்துரைகள்..
    கதையின் கனம் சொல்லும்
    சிறப்புரைகள்..

    அன்பே அனைத்தையும்
    சிறக்க வைக்கும்..
    பாடம் அதுவோ
    சறுக்க வைக்கும்..

    வலை எனும் நிகழ்வொன்று
    வலைத்தளத்தில்..
    கதை எனும் கைவண்ணம்
    மனத்தகத்தில்..

    வாழ்க வாழ்க தங்கள்
    திறன் வாழ்க..
    இன்னும் பலகதை தரும்
    நலன் வாழ்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமையான பாடலால் சிறப்பித்தமைக்கு நன்றி துரை. பெருமைப் படுத்தி விட்டீர்கள்.

      நீக்கு
  33. இது உண்மைக் கதை என்று மற்றவர்கள் வாசித்துக் கருத்திடும் முன்பே சொல்லியிருக்கக் கூடாது நீங்கள். வாசகர்கள் என்ன சொல்கிறார்கள் என்று கணித்த பிறகு வேண்டுமாநால் சொல்லியிருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான்.சொல்லி இருக்கக் கூடாதோ? நுணலும் தன் வாயால் கெடும்.

      நீக்கு
  34. அல்லது சொல்லாமலேயே இருந்திருக்கலாம் அதைச் சொல்ல வேண்டிய அவசியம் என்ன வந்தது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லைதான். என்னமோ சொல்லத் தோன்றியது. சொல்லிவிட்டேன்.

      நீக்கு
  35. சாரி.. கீதாம்மா.
    நேற்றைக்குப் பூராவும் மனசு சரியில்லை.
    ஏன் பொதுத் தளத்தில் இதையெல்லாம் சொல்ல வேண்டும் என்று மருகிப்போனேன்.
    ராத்திரி எதுவும் கேட்க வேண்டாம் என்று இருந்து விட்டேன்.
    காலையில் பொறுக்க முடியாமல் கேட்டு விட்டேன்.
    சென்னையில் இப்பொழுதெல்லாம் ஒரு நல்ல பழக்கம்.
    கடை கண்ணி, ஆட்டோ எங்கும் வயசானவர்களைப் பார்த்தால் 'அப்பா' என்று தான் அழைக்கிறார்கள். அந்தளவிற்கு அன்பும், நெகிழ்ச்சியும் கூடியிருக்கிறது.
    என்னவோ மனசில் அடைத்துக் கொண்டிருந்ததைக் கொட்டி விட்டேன்.
    இனி லேசாகி விடும்.
    உங்கள் பதிலுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பரவாயில்லை ஐயா! எனக்கும் மனது பல்வேறு குழப்பங்களில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. ஒரு சிக்கலில் மாட்டிக்கொண்டு வெளிவருவோமா எனக் கவலையுடன் இருக்கோம். ஆனாலும் இங்கே பொதுத்தளத்திற்கு வருவது என்பதை என்னைப் பொறுத்தவரையில் என் பல்வேறு விதமான கவலைகளுக்கு ஓர் வடிகால். ஆகவே உங்கள் கேள்வியோ என் பதிலோ எனக்கு எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்த வில்லை. சென்னையில் இப்போதில்லை என் மாமனாரையுமே எங்க வீட்டில் வேலை செய்பவர்கள், வீடு கட்டும்போது வேலை செய்த மேஸ்திரி, கொத்தனார், சித்தாட்கள் அனைவரும் அப்பா என்றே கூப்பிடுவார்கள். மாமியாருக்குப் பிடிக்காது. ஆகவே அவரை மாமி(பெரிய மாமி) என்பார்கள். என்னைச் சின்னம்மா/சின்ன மாமி என்பார்கள். இது பல வருடங்களாகச் சென்னை மக்களிடம் நான் கண்டு அனுபவித்த ஒன்று. இப்போ இங்கேயும் என்னையும் என் கணவரையும் அப்பா/அம்மா என அழைக்கும் நபர்கள் உண்டு.

      நீக்கு
    2. இப்போது என்றில்லை... நாற்பதாண்டுகளுக்கு முன்பே - தஞ்சை பட்டுக்கோட்டை வட்டாரங்களில் அனைவரையும் உறவு முறை கொண்டாடி அழைக்கும் வழக்கம்...

      தஞ்சை கரந்தையில் DTP / Project works செய்து கொண்டிருந்த போது அருகிலுள்ள உமா மகேஸ்வரனார் கல்லூரி மாணவ மாணவியர் அப்பா அப்பா.. என்றழைத்து மகிழ்ந்ததை எண்ணி மகிழ்கின்றேன்...

      என் மகளின் தோழியர்க்கும் மகனின் நண்பர்களுக்கும் நாங்கள் அப்பா அம்மா தான்...

      சென்ற மாதம் வீடு மாற்றியபோது கூட என் மகனின் தோழர்களாகிய அன்புப் பிள்ளைகள் தான் எல்லா உதவிகளையும் செய்திருக்கின்றனர்...

      இந்த கலாச்சாரம் இப்போது தான் சென்னையில் பரவியிருக்கின்றது..

      நீக்கு
  36. இங்கு .பெரிசு' என்றும் 'கிழம்' என்றும் சில வார்த்தைகள் உபயோகிக்கப்பட்டன.
    அது தொட்டு இன்றைய சென்னை நிலைமை நினைவுக்கு வந்து சொன்னேன்.

    பதிலளிநீக்கு
  37. அந்தப் பெண் வித்யா தன் இரட்டை வடம் செயின் நகையுடன் தன் பிறந்த வீட்டிற்குள் நுழைகையிலேயே, "வாம்மா,வித்யா. நேற்று தான் மாப்பிள்ளை இங்கே வந்துட்டுப் போனார். எல்லா விஷயத்தையும் சொன்னார்.. நீ வருவேன்னும் நீங்க தான் வித்யாவுக்கு அவளுக்குப் புரியற மாதிரி எல்லாத்தையும் சொல்லணும்ன்னும் சொன்னார். இதோ நீயே வந்துட்டே.. " என்று அவள் அப்பா முகமலர்ச்சியுடன் அவளை எதிர்கொண்டார்.

    --- என்று இந்தக் கதையின் தொடர்ச்சியை ஆரம்பிக்கறதா நேற்று ஒரு எண்ணம் இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கான பதிலை ஓர் பதிவாகக் கொடுத்துடறேன். இங்கே எழுதினால் ரொம்பப் பெரிசா ஆயிடும்.

      நீக்கு
    2. கே.வா.போ. கதைப் பகுதியில் வழக்கமாக எழுத்தாளர்கள் எழுதும் கதைகளைத் தான் வெளியிடுவது வழக்கம். உங்களதும் அப்படித்தான் என்று நீங்கள் எழுதித் தந்திருந்த கதையை வெளியிட்டிருப்பார்கள்.நான் கூட இது ஒரு கதை தான் என்று படித்து விட்டு அதற்காகப் பின்னூட்டம் போட நினைக்கும் பொழுது தான் உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்தேன். அது கதை என்று நான் வாசித்ததற்கு சுதந்திரமாக என் கருத்தைச் சொல்ல முடியாமல் இடைஞ்சலாக இருந்தது. கொஞ்சமானும் இந்தக் கதையில் கற்பனை சம்பந்தப்பட்டிருக்குமா என்று உங்களிடமே கேட்டுத் தெரிந்து கொள்ள ஆனானப்பட்ட பாடுபட்டேன்.
      எனக்கு ஏமாற்றமாக இல்லவே இல்லை என்று சொல்லி விட்டீர்கள்! முடிவு கூட அப்படியே நடந்தது தான்னு அடிக்கோடு இட்டுச் சொல்லீட்டீங்க..

      வித்யாவின் பாத்திரப்படைப்பு சரியாக அமையும் விதத்தில் நீங்கள் எழுதவில்லை என்று என் கருத்தைப் பின்னூட்டமிட்டால் அவ்வளவு நன்றாக இருக்காது என்று தயங்கினேன். ஏனென்றால் இது ஏதோவிதத்தில் உங்கள் சம்பந்தப்பட்ட சொந்த விஷயம். அதை ஒரு கதை என்று நினைத்து ஒரு கதை அமைப்புக்கான கருத்தை சொல்வது சரியாக இருக்காது என்று நான் தயங்கியதை எனக்கு விளைந்த ஏமாற்றமாக என் முதல் பின்னூட்டத்திலும் குறிப்பிட்டிருந்தேன்.

      இதே விஷயத்தை ஒரு கதை போல எழுதினால் எப்படியிருக்கும் என்று அடுத்த நாள் யோசனையோடியது. அதைத் தான் மேற்கண்ட என் பின்னூட்டத்தில் குறிப்பிட்டு இப்படித் தொடங்கலாம் என்று நான் நினைத்ததைக் குறிப்பிட்டும் இருந்தேன்.

      நான் இந்த மாற்றுக் கதையை எழுதி முடிப்பதற்கு முன்னாலேயே நீங்கள் பதில் கொடுத்தால் அது சரியாக இருக்காது. வித்யா பாத்திரப்படைப்பை சரி பண்ணி
      (வித்யாவின் பெயரைக் கூட ராணி என்று மாற்றி) (வித்யா ராணி?) நீங்க இந்தக் கதை சம்பந்தப்பட்ட மாதிரின்னு கொஞ்சம் கூட நினைக்காத படிக்கு இந்தக் கதைக்கு சம்பந்தப்படாதவாரே இன்னொரு கதை எழுதி இதே பகுதியில் வெளியிட முயற்சிக்கிறேன். அப்பொழுது அந்தக் கதை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று சொல்லுங்கள். அது தான் பொருத்தமாக இருக்கும். சரியா?

      (எ.பி. ஆசிரியர் குழுவிற்கு) எல்லாக் கதைகளும் ஏதோ பொறி போல எழுதத் தூண்டும் ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் தான் அமைகின்றன. ஆனா இப்படி 'இது உண்மை சம்பவம்' என்று கதை எழுதினவங்களே குறிப்பிட்டுட்டா, எப்படி?.. எப்படி சுதந்திரமா நாங்க பின்னூட்டம் போடுவோம்? இப்படித் தான் நீங்க இதுக்குப் பின்னூட்டம் போடணும்ன்னு ஒரு கட்டுப்பாடு தன்னாலே அதனாலே ஏற்பட்டுறது இல்லையா?.. அதுக்குத் தான் சொன்னேன்.

      அப்படீன்னா, கே.வா.போ.கதைகளுக்குக் கூட சில கண்டிஷன்கள் போடணுமோ?.. ஆமாங்க.. யோசிச்சுப் பாருங்க. செய்யுங்க. நன்றி.

      நீக்கு
    3. தாராளமா உங்களுக்குத் தெரிஞ்ச உண்மைக் கதைகளை எழுதுங்க.. ஆனா அதை உண்மைக் கதைன்னு எழுதின நீங்களே சொல்லிட வேண்டாம்.. என்கிற மாதிரி.

      நீக்கு
    4. பலரும் உண்மைக்கதைகளை எழுதுகின்றனர் திரு ஜீவி அவர்களே! நம் துரை கூட அவர் பள்ளி நண்பர் ஒருவரை இன்னொரு சிநேகிதியின் அம்மா அவர் குணத்துக்காகவே ஜாதி வித்தியாசம் பார்க்காமல் மாப்பிள்ளையாக ஏற்றதைச் சிறுகதையாக வடித்து அது மிக்க பாராட்டுகளைப் பெற்றது. அவரும் சொல்லி இருந்தார் தன் பள்ளிப் பருவத்துக் கதை அது என. அதே போல் திருமதி சியாமளா வெங்கட்ராமன் அவர்களும் ஓர் உண்மைக்கதை எழுதி இருந்தார். பலரும் தங்கள் அனுபவங்களைத் தான் கதையாக எழுதுகின்றனர். என் சித்தப்பாவின் "பதினெட்டாவது அட்சக்கோடு" "தண்ணீர் தண்ணீர்" "ஒற்றன்" எல்லாமும் அவர் சொந்த அனுபவங்களின் வெளிப்பாடே! கதையின் கருத்துரைக்குப் பதில் சொல்கையில் தான் நான் உண்மைக்கதை எனச் சொல்லி இருக்கேன். சில நாட்கள் முன்னர் எழுதின "மயக்கமா? கலக்கமா?" என்னும் கதையைக் கூடக் கில்லர்ஜி உண்மைக்கதையா? சொந்த அனுபவமா? என்று நேரிடையாகவே கேட்டிருந்தார். சில அனுபவங்கள் நமக்குச் சுற்றி இருப்பவர்களால் ஏற்படும்போது நாமும் அதனால் பாதிக்கப்படுகிறோம். அந்தப் பாதிப்பைக் கதையாக எழுதும்போது சொந்த அனுபவம் போன்ற தோற்றம் வருகிறது.

      நீக்கு
    5. இது வரைக்கும் யாருமே சொந்த அனுபவங்களை உண்மைக்கதையாக எழுதாதது போலும் முதல் முதலாக நான் தான் எழுதி இருப்பது போலவும் நீங்கள் எங்கள் ப்ளாக் ஆசிரியக்குழுவிற்குக் கண்டிஷன்கள் போடச் சொல்லி இருக்கீங்க. அது உங்க பாடு/அவங்க பாடு! ஆனால் பெரும்பாலோர் தங்கள் அனுபவம் அல்லது தாங்கள் கண்ட/கேட்ட நிகழ்வுகளையே கதையாக்குகின்றனர். உண்மை சில சமயங்களில்/பல சமயங்களிலும் கற்பனையைவிடக் கொடுமையாக இருக்கும்.

      நீக்கு
    6. ,????
      சொந்தக் கதையை அப்படியே எழுதுவது உண்மைக் கதையல்ல. அது உண்மை நிகழ்வு. எத்தனை தடவை தெரியாத மாதிரி ஏன் இப்படித் திருப்பித் திருப்பிக் குழப்பறீங்க?

      நீக்கு
    7. சொந்த அனுபவங்கள் திணித்தால் கதைகள் சற்று சுவாரசியமாக "உண்மை" போல் இருக்கும் என்று நினைக்கிறேன். உண்மைக்கதைக்கு உண்மை நிகழ்வுகள் தொடுத்த புனைவுக்கும் வித்தியாசம் இருப்பதாக நினைக்கிறேன். அதைத் தான் சொல்றாரோ ஜீவி? உதாரணத்துக்கு இப்படி எடுப்போமா?
      இது உண்மைக் கதையென்றால் பலே வித்யா.
      இது உண்மை நிகழ்வின கதையென்றால் பலே கீதா சாம்பசிவம்.

      நீக்கு
    8. இவ்ளோ கும்மிய்டிச்சிருக்காங்க... மிஸ் பண்ணிட்னே..

      நீக்கு
  38. ஏதோ வித்யா விவ்ரமான பெண்ணாகவும், தைரியமாக பிரச்சனையை எதிர்கொண்டதாலும் அவங்க் குடும்பம் தப்பிச்சது.. இல்லைனா எவ்வளவு பெரிய ஏமாளியா ஆகியிருக்கணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க எழில். முதல்முறையாக என்னோட எழுத்தை விமரித்துப் பாராட்டியதுக்கு நன்றி.

      நீக்கு
    2. ஒரு வித்யாவுக்கு பல அசடுகளை நம்மைச் சுற்றிக் காணலாம்.

      நீக்கு
  39. இது போன்ற சில மாமியார்களை நான் அறிவேன் (மாமனார்களும் அப்பாக்களும் சற்று விவேவகம் குறைந்தவர்கள் என்று நினைக்கிறேன்). நல்ல பதிலடி.. வைரத்தை வைரத்தால் அறுப்பது இது தானா?


    சென்னையில் நகைக் கடைகள் தி.நகரில் தான் அதிகம் என்று நினைத்திருந்தேன்.

    பதிலளிநீக்கு
  40. இது போன்ற சில மாமியார்களை நான் அறிவேன் (மாமனார்களும் அப்பாக்களும் சற்று விவேவகம் குறைந்தவர்கள் என்று நினைக்கிறேன்). நல்ல பதிலடி.. வைரத்தை வைரத்தால் அறுப்பது இது தானா?

    சென்னையில் நகைக் கடைகள் தி.நகரில் தான் அதிகம் என்று நினைத்திருந்தேன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!