17.11.25

"திங்க"க்கிழமை : சேனைக்கிழங்கு ஃப்ரை - ஸ்ரீராம்

 

புதுசாக ஒன்றுமில்லை.  இன்றைக்கு இது நான் செய்தேன்.  அவ்வளவுதான்.

சேனை என் பெரியவனுக்கு ரொம்பப் பிடிக்கும்.  ரொம்ப சாப்பிடாதீங்க என்று சொன்னாலும் அவன் தன் பங்கையும் மீறி ஓரிரு பீஸ் கூட போட்டுக் கொள்வான்.  ஆனால் ஒன்று, சேனைக்கிழங்கின் இயல்பு சற்றே கடினமாக இருக்கும் என்பதை ஒத்துக் கொள்ளாமல் சரியாக வேகவில்லை என்பான்!

எண்ணெயில் பொறித்து எடுக்கும் ஐடியா பெரும்பான்மை இல்லாததால் வாக்கெடுப்பில் தோற்றது.  பாஸுக்கு மட்டுமே ஏழு வோட் உண்டு.  அதைத்தவிர வீட்டோ (ட) அதிகாரமும் உண்டு.  மறுபேச்சு எது?!!  எங்கள் வீட்டில் மாமியாராய்ச் சேர்க்காமல் ஐந்துபேர்.

எனவே எண்ணெயில் பொரிக்காமல், தவாவில் போடு எடுப்பது என்று முடிவானது.

போதாக்குறைக்கு இதைச் செய்த நாள் காலை துளசி டீச்சர் வேறு கீழ்க்கண்ட பதிவைப் போட்டிருந்தார்.  அது இன்னும் கொஞ்சம் டெம்ப்ட் ஏற்றி விட்டது!

பாஸ் வழக்கம்போல சிடுசிடுத்தார்.  "நாளைக்கு ஹோமத்தை வச்சுக்கிட்டு இதென்ன நேரத்தை இழுக்கற வேலை?  நிறைய வேலை இருக்கு"

நானும் வழக்கம்போல அதைக் காதில் வாங்காமல் நறுக்க ஆரம்பித்து விட்டேன்.  மருமகளிடம் சொன்னால், அவர் வேறு வழியில்லாமல் மரியாதை கருதி எதிர்க்க முடியாமல் சொன்னதைச் செய்வார்.  செய்தார்.  

அதே சமயம், பாஸுக்கும் அவர் அம்மாவுக்கும் அவர் வேண்டுகோளின்படி வழக்கம்போல சின்னதாக நறுக்கி தனியாகக் கொடுத்து விட்டேன்!  டைமண்ட் டைமண்டாக நறுக்கவில்லை.



நறுக்கி எடுத்துக் கொண்ட சேனைக்கிழங்கு துண்டங்களை பானில் போட்டு கொஞ்சம் புளி கரைத்த நீரில் உப்பும் கொஞ்சம் சேர்த்து அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்த உடன்  சிம்மில் வைத்து அரை வேகல் வெந்ததும் இறக்கியுமாச்சு.  குக்கரில் வைத்தால்தான் மாவாகப் போய் விடுகிறதே!  அப்புறம் மறுபடி மறுபடி கோஃப்தாதான் செய்ய வேண்டும்!



ஒரு பாத்திரத்தில் கார்ன் மாவு, காரப்பொடி, பெருங்காயப்பொடி, அரிசி மாவு ரெண்டு ஸ்பூன், கடலை மாவு ரெண்டு ஸ்பூன்,  உப்பு  சேர்த்துக் குழைத்து தோசை மாவு போல வைத்துக் கொண்டாச்சு.
துண்டங்களை கார்ன்மாவில் புரட்டி தவாவில் இட்டு, திருப்பிப் போட்டு,  திருப்பிப் போட்டு, திருப்பிப் போட்டு, திருப்பிப் போட்டு, திருப்பிப் போட்டு, ஓகே என்னும்போது இறக்கி பாத்திரத்தில் போட்டு விட வேண்டியதுதான்.



எனக்கு இதையும் விட இன்னும் பெரிய துண்டுகளாய் போடவேண்டும் என்று ஆசை.  அதன் முழு அகலத்தில் நறுக்கி செய்ய வேண்டும் என்று ஆசை.  எபப்டியோ நழுவிப் போகிறது.

அடுத்தமுறை வேறு ஐடியா வைத்திருக்கிறேனாக்கும்!

6 கருத்துகள்:

  1. சேனைக்கிழங்கு ஃப்ரை நல்லா வந்திருக்கு. ரொம்பவே பொறுமை வேண்டும்.

    சில சேனைகள் ரொம்பவே வெந்து குழையும். அது நம் லக்கைப் பொறுத்ததுன்னு நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை..  முன்பு குழைந்துபோய் வேறு வேறு மாதிரி எல்லாம் செய்திருக்கிறேனே...

      நீக்கு
  2. கோவிட்டுக்கு முன்னால் கிலோ 30 ரூபாயாக இருந்தது பிறகு விலை ஏறி, இப்கோது ஐம்பது ரூபாய்க்குக் கிடைத்தாலே மிக்க் குறைந்த விலை என்று தோன்றச் செய்துவிட்டது.

    நாங்கள் பெரும்பாலும் சிறிது சிறிதாக கட் செய்து கறியமுது செய்துவிடுவோம் (சேனை ரோஸ்ட் என்றால் புரியாது என்பதால்). டயட்டில் இருப்பவர்களுக்கு கிழங்கு கூடாதாமே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முன்பு முப்பது ரூபாய்க்கு கிடைத்ததா நினைவில்லை.  ஆனால் இப்போது கிலோ எழுபதுக்கும் மேல்.. 

      டயட்டில் இருப்பவர்களுக்கு கிழங்கே கூடாதுதான்.  எப்படியும் எனக்கு உருளைக்கிழங்கு அவ்வளவு இஷ்டமில்லை.  கொஞ்சமாய் சாப்பிடுவேன்.  இது வித்தியாசமாய் செய்யும் நாளில் முன்னபின்ன எடுத்துப்பேன்!  சிறிதாக கட்செய்து செய்வதுதான் வாழ்நாள் பூரா இருக்கே...!

      நீக்கு
  3. சேனைத் துண்டுகள் பிகாசோ ஓவியம் போலத் திருத்தியருக்கிறீர்களே.

    சதுரம் சதுரமாகத் திருத்த பொறுமை இல்லையா?

    பதிலளிநீக்கு
  4. சதுரம் சதுரமாய் வரவேண்டும் என்றால் நிறைய வேஸ்ட் ஆகும்.  சேனையின் ஷேப் அப்படி.  ஓரங்களைத் திருத்தினால் அதை தனியாகச் செய்ய வேண்டும் அல்லது தூக்கிப் போடவேண்டும்.  முழு சேனையாக வாங்கி அதை பாதியாக நறுக்கி அதை தோல்சீவி, அதை முடிந்த வரை பெரிய துண்டுகளாக நறுக்கியது.சதுரம் சதுரமாய் வரவேண்டும் என்றால் நிறைய வேஸ்ட் ஆகும்.  சேனையின் ஷேப் அப்படி.  ஓரங்களைத் திருத்தினால் அதை தனியாகச் செய்ய வேண்டும் அல்லது தூக்கிப் போடவேண்டும்.  முழு சேனையாக வாங்கி அதை பாதியாக நறுக்கி அதை தோல்சீவி, அதை முடிந்த வரை பெரிய துண்டுகளாக நறுக்கியது.

    // பிகாசோ ஓவியம் போல //

    :))

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!