28.11.25

போகிற இளமை மீண்டும் வருமா ஆடிடு பாடிடு இளமையில்

சென்ற வாரம் குழுவினர் பாடும் பாடல்கள் என்று வகைப்படுத்தி இருந்தேன்.  இன்று அதிலிருந்து சற்றே மாறுபட்டு போதைப் பாடல்கள் என்று வகைப்படுத்தி மூன்று குரல்களைச் சொல்கிறேன்.

முதலாவதாக 'அழகே உன்னை ஆராதிக்கிறேன்' படப் பாடல்.  வாணி ஜெயராம் குரல்.

1980 வெளியான இந்தப் படத்தில் எல்லாமே நல்ல பாடல்கள்தான்.  அதில் இன்றைய 'தீமு'க்காக நான் எடுத்துக் கொண்டிருக்கும் பாடல் 'நானே நானா யாரோதானா' என்னும் வாணி ஜெயராம் பாடிய பாடல்.  வாலியின் பாடல்.  இளையராஜாவின் இசை.  

இந்தப் படத்தில் இன்னொரு பாடல் 'டைட்டில் ஸாங்' எனப்படும் 'அழகே உன்னை ஆராதனை செய்கிறேன்' என்னும் ஜெயச்சந்திரன் பாடல்.  இரண்டே வரிதான் பாடல் வரிகள்.  மீண்டும் மீண்டும் வரும்.  இது மாதிரி சிறிய புதிய முயற்சிகள் அப்போது அடிக்கடி செய்தார் இளையயராஜா.  'மூடுபனி'யில் ஒரு சிறிய தாலாட்டுப் பாடல் "ஆசை ராஜா தாலேலோ' என்னும் பாடல் நாலு வரி அல்லது ஐந்து வரிகள்தான்.  உமா ரமணன் குரல் என்று நினைக்கிறேன்.  

 இந்தப் பாடல் இடம்பெற்ற படத்தில் லதா நடித்த வாணி கேரக்டர் ஜெய்கணேஷின் காதலை உண்மை என்று நம்பி ஏமாறும் கதை.  ஒருநாள் ஒரு பலவீனமான தனிமையில் ஜெய்கணேஷ் மதுவைக் கொடுத்து வாணியை உபயோகித்துக் கொண்டபின் காணாமல் போய்விடுகிறார்.  

மது தந்த போதையில் வாணி வாணி ஜெயராம் குரலில் பாடும் பாடல்தான் இது.

பாடலின் வரிகளிலேயே போதையின் இயலாமை, மனம் வெளிப்படுவது, காதல் ஏக்கம் வெளிப்படும் வகையில் வரிகள் என்றால் இளையராஜா....  அவரைப் பற்றி கேட்கவும் வேண்டுமா....  கதை தெரியாமல், காட்சியைப் பார்க்காமல் பாடல் கேட்டாலும் அந்த ஏக்கம், விரகம் சோகம் இயலாமை உங்களுக்குள் இறங்கும்.  அந்த ஆரம்ப இசையை கேளுங்களேன்....  பாடல் ஆரம்பித்ததும் இணையும் ரிதம்..


நானே நானா யாரோதானா மெல்ல மெல்ல மாறினேனா
நானே நானா யாரோதானா மெல்ல மெல்ல மாறினேனா
தன்னைத்தானே மறந்தேனே என்னை நானே கேட்கிறேன்
நானே நானா யாரோதானா மெல்ல மெல்ல மாறினேனா
ஒருவன் நினைவிலே உருகும் இதயமே
இதோ துடிக்க
உலர்ந்த உதடுகள் தனிமைக் கவிதைகள்
எதோ படிக்க
மதுவின் மயக்கமே உனது மடியில் இனிமேல்
இவள்தான் சரணம் சரணம்   -  நானே நானா

பிறையில் வளர்வதும் பிறகு தேய்வதும்
ஒரே நிலவு
உறவில் கலப்பதும் பிரிவில் தவிப்பதும்
ஒரே மனது
பருவ வயதிலே இரவும் பகலும் விரகம்
நரகம் சரணம் சரணம்
நானே நானா யாரோதானா மெல்ல மெல்ல மாறினேனா
தன்னைத்தானே மறந்தேனே என்னை நானே கேட்கிறேன்
நானே நானா யாரோதானா மெல்ல மெல்ல மாறினேனா


=====================================================================================================


பிளாஷ்பேக் :  70 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பாடல் சர்ச்சை

இப்போது இளையராஜா பாடல்களை பயன்படுத்துவதில் பல்வேறு சர்ச்சை நடந்து வருகிறது. அடிக்கடி நீதிமன்றம் சென்று இளையராஜா தன் பாடல்களுக்காக வழக்கு தொடர்ந்து வருகிறார்.  

இந்த பாடல் சர்ச்சை ஒன்றும் புதிதல்ல. 1955ம் ஆண்டு வெளிவந்த படம் 'கணவனே கண்கண்ட தெய்வம்'. டி.ஆர்.ரகுநாத் இயக்கிய இந்த படத்தில் ஜெமினி கணேசன், அஞ்சலி தேவி நடித்திருந்தனர், பெங்காலி மற்றும் இந்திப் பட இசை அமைப்பாளர் ஹேமந்த் குமார் இசை அமைத்திருந்தார்.
150 படங்களுக்கு மேல் இசை அமைத்து 3 முறை சிறந்த இசை அமைப்பாளருக்கான தேசிய விருதும் ஒரு முறை சிறந்த பாடகருக்குமான தேசிய விருதையும் பெற்றவர். இவர் இசை அமைத்த ஒரே தமிழ் படம் 'கணவனே கண்கண்ட தெய்வம்'

இந்த படத்தில் முதலில் நாயகியாக நடித்தவர் பானுமதி. தான் நடிக்கும் படத்தின் பாடல்களை தானே பாடும் வழக்கம் கொண்டவர் பானுமதி. இதனால் இந்த படத்திற்காக 'உன்னை கண்தேடுதே..' என்ற பாடலை பாடியிருந்தார்.

ஒரு கட்டத்தில் என்ன காரணத்தாலோ படத்திலிருந்து விலகி விட்டார். இதனால் அவருக்கு பதிலாக அஞ்சலி தேவி நடித்தார். படத்தில் இருந்து விலகி விட்டதால் நான் பாடிய பாடலை அஞ்சலி தேவிக்கு பின்னணி பாடலாக மாற்றக்கூடாது என்று பிரச்னையை கிளப்பினார் பானுமதி, இதனால் அந்த பாடலை மீண்டும் பி.சுசீலா பாடினார்.

என்றாலும் பானுமதி விடவில்லை. பாட்டும், இசையும் இசை அமைப்பாளரின் உரிமை. ஆனால் பாட்டின் இடையே வரும் 'விக்கல்' சத்தம் என்னுடைய சிந்தனையில் வந்தது. அதை பி.சுசீலா பயன்படுத்தியது தவறு என்று அடுத்த சர்ச்சையை கிளப்பினர். பின்னர் ஒரு வழியாக தயாரிப்பு தரப்பு பானுமதியை சமாதானப்படுத்தி, பிரச்னையை முடிவுக்கு கொண்டு வந்தது. 

 தினமலர் 24/11/25

================================================================================================

குரு - 1980 ல் வெளியாகி 365  நாட்கள் தொடர்ந்தும் 1095 நாட்கள் வெவ்வேரு திரையரங்குகளிலும் மாறி மாறி தொடர்ந்து ஓடிய படம்.  கமல்-ஸ்ரீதேவி நடிப்பில் ஐ வி சசி இயக்கத்தில் வெளியானது.  1973 ல் தர்மேந்திரா  - ஹேமா நடித்த ஜூகுனு  ஹிந்திப் படத்தின் தழுவல்.  

கண்ணதாசன், பஞ்சு அருணாசலம், கங்கை அமரன் பாடல்களை எழுதி இருந்தார்.  இளையராஜாதான் இசை.  இந்தப் படத்தின் போதைப் பாடலை எஸ் ஜானகி குரலில் கேட்கலாம்.  காட்சியில் நீரில் நனைந்த ஸ்ரீதேவி!  ஒரு பார்ட்டியில் அஷோக்குக்கு அதாவது கமலுக்கு அவர் பெயரைக் கெடுக்க எண்ணி மோகன் பாபுவால் தரப்பட்ட மதுவை ஸ்ரீதேவி குடித்து விட, தன்னை மறந்த போதையில் ஸ்ரீதேவி போடும் ஆட்டம்தான் பாடல். 

வாணி ஜெயராம் குரலில் போதைப் பாடலைத் தொடர்ந்து ஜானகி அம்மா குரலில் போதைப் பாடல்..  இந்தப் பாடலை எழுதி இருப்பவர் கண்ணதாசன்.

ஸ்ரீதேவிக்கு இந்த நடிப்பெல்லாம் ஜுஜுபி.  கமல் அவருக்கு ஈடு கொடுத்து நடிக்க வேண்டும்!

பா பபப பா பா பபப பா பா பா  
பப பா பா  பாப  பா பா பா பா பா  
எந்தன் கண்ணில் ஏழுலகங்கள்
வாராய் கண்ணா வா
எந்தன் கண்ணில் ஏழுலகங்கள்
வாராய் கண்ணா வா
நான் இன்று நானும் இல்லை
என் நெஞ்சில் நாணம் இல்லை
பபபா எந்தன் கண்ணில் ஏழுலகங்கள்
வாராய் கண்ணா வா
ரோஜா மலர்ந்தது துவண்டது
ராஜாவின் கைகள் ஏந்தட்டுமே
ரோஜா மலர்ந்தது துவண்டது
ராஜாவின் கைகள் ஏந்தட்டுமே
இங்கே இவள் சொர்க்கம் எது
இன்பம் தரும் சங்கம் எது நீ
எந்தன் கண்ணில் ஏழுலகங்கள்
வாராய் கண்ணா வா
நான் இன்று நானும் இல்லை
என் நெஞ்சில் நாணம் இல்லை
வானம் விழுந்தது வளைந்தது
நமக்கென்ன பாவம் போகட்டுமே
வானம் விழுந்தது வளைந்தது
நமக்கென்ன பாவம் போகட்டுமே
சுகமே என்ன சுகமோ இது
தள்ளாடிடும் ரகமோ இது வா
எந்தன் கண்ணில் ஏழுலகங்கள்
வாராய் கண்ணா வா
எந்தன் கண்ணில் லாலலலல
வாராய் கண்ணா வா
நான் இன்று நானும் இல்லை
என் நெஞ்சில் நாணம் இல்லை
பப பா பா  பாப  பா பா பா பா பா

========================================================================================



ஜெய்சங்கர் :


எல்லா நடிகைகளுமே நூறு படம் நடிச்சதும் விழா எடுப்பாங்க. பெரும்பாலும் அந்தந்த நடிகர்களே ஏற்பாடு செய்து, பெருமளவு அவர்கள் செலவும், கொஞ்சம் வேறு யாராவதும் செலவு செய்வார்கள். நானும் நூறாவது படம் முடிச்சதும் விழா எடுத்தேன். ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக செய்தேன். நான் நூறு படங்களுக்கு மேல் கதாநாயகனாக நடிக்கக் காரணமாயிருந்த திரு ஜோசப் தளியத்துக்கு ஒரு பாராட்டு விழாவாக நடத்தி, அதில் அவருக்கு  மாலைகள் போட ஏற்பாடு செய்தேன்.

அது மட்டுமல்லாமல் அந்த நாளில் சில அனாதை ஆஸ்ரமங்களுக்கும் மெர்சி ஹோம்களுக்கும் உதவி கிடைக்கும்படி ஏற்பாடு செய்தேன். அந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்க அப்போதைய ஆளுநரை அழைத்திருந்தேன். ஆளுநர் அப்படி எல்லாம் வெளி விழாக்களில் கலந்து கொள்ளும் வழக்கம் இல்லை என்றாலும் அவர் வர சம்மதித்த நிலையில் ப்ரோட்டோகால் காரணமாக அவர் வரமுடியாமல் போனது. 

நான் உடனே திரு ஏ வி எம் செட்டியாரை அழைத்து தலைமை தாங்கச் செய்தேன். எப்பொழுதோ ஒருமுறை அவரை நேரில் பார்த்ததோடு சரி, அவரும் அவர் இடத்திலிருந்தே, தான் எடுக்கும் படங்களின் திருத்தங்களை சொல்லி செய்யச் சொல்லி விடுவார். எனவே அவரும் நான் உட்பட வேறு யாரையும் பார்க்கும் வாய்ப்பு குறைவு.  இந்த நிகழ்ச்சியில் நான் உதவி இல்லங்களுக்கு உதவி செய்ததும் அவரும் சில உதவிகள் செய்தார். பின்னர் ஒருநாள் என்னை அழைத்தார். தனக்கு அந்த நிகழ்ச்சி மிகுந்த மனநிறைவு அளித்தது என்றும், தானும் அதில் பங்கு கொண்டது மிகுந்த மனநெகிழ்ச்சியை அளித்தது என்றும் கூறினார். யாரும் இப்படி இதுவரை செய்ததில்லை என்றும் சொன்னார்.

இப்போது என் தம்பிகள், இப்போதைய நாயகர்கள் இதை பினபற்றுவது உண்மையிலேயே எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

ஒரு காணொளியிலிருந்து....

=========================================================================================

இப்போது சென்ற வார தீமின் தொடர்ச்சியாகவும் இந்த வார போதைப்பாடலின் தொடர்ச்சியாகவும் வரும் பாடல் P சுசீலா குரலில்..

சிலர் சுசீலாம்மா 'பொண்ணுக்கு தங்க மனசு' படத்தின் பாடல் பதிவில் இளையயராஜாவை உதாசீனம் செய்ததால், பின்னர் இசை அமைப்பாளராக உயர்ந்த இளையராஜா சுசீலாம்மாவுக்கு போதுமான அளவில் வாய்ப்புகள் தரவில்லை என்று சொல்வார்கள். பழைய இளையராஜா இசையில் சுசீலாம்மா பாடிய பாடல்களைக் கேட்கும்போது எனக்கு அப்படி தோன்றுவதில்லை. பல நல்ல பாடல்களை சுசீலாம்மாவுக்குக் கொடுத்திருக்கிறார் இளையராஜா.

இந்தப் பாடல் குழுவினர் வகையில் என்ன புதுமை என்றால் பல்லவி மட்டுமே சுசீலாம்மா.  சரணங்கள் குழுவினர் குரலில்.  போதையை நிதானமாக வெளிப்படுத்துவது மெலடி வகையிலேயே பாடலை அமைத்திருப்பது.  'எனக்கு மூன்று வரிகள்தானா' என்று கேட்காமல் அவரும் வந்து பாடிக் கொடுத்திருக்கிறார்.  போதாக்குறைக்கு பல்லவியிலும் பாதியில் வந்து இணைந்து விடுகிறது குழு என்னும் கோரஸ்!

இப்படி பல்லவி மட்டும் தனித்துப் பாடும் காட்சியில் தோன்றுபவர் பல்லவி!

படமே போதைக் கடத்தல், போதை பரவல் பற்றியதுதான்.  சூரசம்ஹாரம்.  கமல் நிரோஷா நடிப்பில் சித்ரா லக்ஷ்மணன் எழுதி இயக்கி இருக்கும் வெற்றிப்படம்.  1985 ல் வெளியான 'விட்னஸ்' என்கிற ஆங்கிலப்படத்தின் தழுவல் கதை என்று சொல்லப்பட்டாலும் சித்ரா அதை மறுத்தாராம்.  ஆனால் அதி வீர பாண்டியன் என்று கங்கை அமரன் கமலை வைத்து ஒரு படம் இயக்குவதாய் இருந்தது.  வெளியில் வரவில்லை.  இந்தப் படத்தில் கமல் பெயர் அதிவீரபாண்டியன்.   

இந்தப் படத்தில்தான் நெப்போலியன் என்கிற இயற்பெயரை உடைய அருண்மொழி பாடகராக அறிமுகமானார். ஆனால் அவர், தனக்கு பாடுவதைவிட Flute வாசிப்பதே இன்பம் என்று அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். என்றாலும் பல இனிமையான பாடல்களைக் கொடுத்திருக்கிறார் அருண்மொழி.

கமலின் சகபோலீஸ் அதிகாரி நிழல்கள் ரவியின் சகோதரி பல்லவி போதையில் ஆடும் காட்சி இந்தப் பாடல்.

இந்தப் பாடலைக் கேட்கும்போது குழுவினர் மட்டும் பாடும் பாடல் மணிரத்னத்தின் 'அஞ்சலி' படத்தில் கூட இருக்கிறதே என்று நினைவுக்கு வருகிறது.

P. சுசீலா : ஆடும் நேரம்
இதுதான் இதுதான்
வாவா வாவா
பாடும் நேரம்
இதுதான் இதுதான்
வாவா வாவா

P. சுசீலா : போகிற இளமை மீண்டும் வருமா
ஆடிடு பாடிடு இளமையில்
தேடிய இனிமை திரும்ப வருமா
கூடிடு பாடிடு தனிமையில்

குழு : பூவல்ல…..தேனல்ல….
நானின்று நானல்ல ஆஆ…..

P. சுசீலா : ஆடும் நேரம்
குழு : இதுதான் இதுதான்
வாவா வாவா

குழு : மேலோகம் பூலோகம் மாறும்
மாறாது தாகங்கள்தான்
நூலாகும் பூந்தேகம் ஏங்கும்
நாள் தோறும் மோகங்கள்தான்

குழு : ஆடும் போது தேகம் தேயும்
பார்க்கும் போது பார்வை சாயும்
எங்கெங்கும் இன்பம் வந்து கூடாதோ…..
வா…..இங்கே…..இங்கே…….

P. சுசீலா : ஆடும் நேரம்
குழு : இதுதான் இதுதான்
வாவா வாவா

குழு : நானென்று நீயென்று ஏது
பேதங்கள் இங்கே இல்லை
வீடென்று நாடென்று ஏது
போதைக்கு எல்லை இல்லை

காலை ஏது மாலை ஏது
காணும்போது காலம் ஏது
ஆனந்தம் நம்மை விட்டு போகாது……
வா….இங்கே…..இங்கே….

P. சுசீலா : ஆடும் நேரம்
குழு : இதுதான் இதுதான்
வாவா வாவா

P. சுசீலா : மற்றும் குழு :

P. சுசீலா : போகிற இளமை மீண்டும் வருமா
ஆடிடு பாடிடு இளமையில்
தேடிய இனிமை திரும்ப வருமா
கூடிடு பாடிடு தனிமையில்

பூவல்ல…..தேனல்ல….
நானின்று நானல்ல ஆஆ…..

P. சுசீலா : : ஆடும் நேரம்
குழு : இதுதான் இதுதான்
வாவா வாவா

P. சுசீலா : பாடும் நேரம்
குழு : இதுதான் இதுதான்

வாவா வாவா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!