6.11.25

மனம் கவர்ந்த மாப்பிள்ளையின் அண்ணா...

 

தங்கை மாமனாரின் வருஷாப்தீக நிகழ்ச்சியில் சுபஸ்வீகரணம் நாளன்று -  கடந்த வெள்ளிக்கிழமை - சென்று வந்தேன்.  அங்கு கவனித்த ஒரு விஷயம் கவனத்தைக் கவர்ந்தது.சட்டென மனம் கவர்ந்தார் மாப்பிள்ளையின் அண்ணா..  வீட்டுக்கு மூத்தவர்.  75 வத்துக்கு மேல் ஆகிறது. தாசில்தாராக இருந்து ஓய்வு பெற்றவர்.  இன்னமும் அரசு  ஊழியர்களுக்கு துறைத் தேர்வுக்கு அவர்கள் தயாராக அங்கு சென்று வகுப்புகள் எடுக்கிறார்.

இந்த சுபஸ்வீகாரத்தில் இடம்பெறும் வைதீகக் காரியங்களில் ஒன்று சம்பந்தப்பட்ட வீட்டு அங்கத்தினர்கள் யாவரின் நட்சத்திரமும், ராசியும் சொல்வது.  எல்லோர் பெயர், நட்சத்த்திரம், ராசி சொல்லி அவர்களின் நல்வாழ்வுக்கு வேண்டுவது.  

சாதாரணமாக அது மாதிரி நிகழ்வில் அவரவர்களுடைய உறவின் விவரங்களை அவரவர்களே அளிக்க வேண்டி வரும்.  அவர்களுக்குத்தானே தெரியும்?  அவர்களே மனைவியின் நட்சத்திரத்தைக் கூட யோசிப்பவர்கள் நிறையபேர் உண்டு.  மருமகள், பேரனோ பேத்தியோ அவர்களின் விவரங்களை ஒருமுறை மகனிடமோ, மருமகளிடமோ கேட்டுக்கொண்டு பதில் சொல்வார்கள்.  ஜம்புலிங்கம் ஜடாதரா தேங்காய் மாதிரி மசால்வடா - மகாதேவா சொல்லி   "ம்ம்ம்.." உறுமலுக்குப்பின் சரியான வார்த்தை  சரியான விவரம் பெறப்படுவதும்  நடக்கும்.

இவர், தனது, தனது மனைவியின், மகன், மருமகள், பேரன், பேத்தியின் விவரங்களில் தொடங்கி இரண்டு தம்பிகளின் இதே போன்ற விவரங்கள் வரை சட்சட்டென்று அவரே சொல்ல்கி கொண்டு வந்தது வியப்பு.  அது மட்டுமில்லாமல் தம்பியின் மகனுக்கு அவர்கள் நட்சத்திரம் தப்பாகச் சொல்கிறார்கள் என்பதை அவன் திருமணத்தில் அதை தான் நோட் செய்ததாகக் கூறி அதையும் அவர்களுக்கு சரியாகச் சொன்னார். முதலில் இவர் நட்சத்திரம் சொன்னதும் தம்பி மனைவி 'இல்லை, அது இன்ன நட்சத்திரம்' என்று சொல்ல, இவர் மறுத்து வருஷம் தேதி நேரம் சொல்லி பூராடம் என்றார்.  சாஸ்திரிகளும் அதை உடனே சரி பார்த்து 'அண்ணா சொல்வது சரி' என்று தீர்ப்பளித்தார்.

மாதா மாதம் செய்யும் அமாவாசை தர்ப்பனிங்களிலேயே சமயங்களில் அம்மாவைப் பெட்ரா தாத்தா பாட்டி விவரங்களில் இரண்டாம் தலைமுரட்டையும் மூன்றாம் தலைமுறையும் குழம்பிவிடும்.  சிலருக்கு நினைவே இருப்பதில்லை.  சிலர் எழுதி வைத்துக் கொண்டு அதைப் பார்த்துதான் ஒவ்வொரு முறையும் செய்வார்கள்!

நடுவில் சிறிய இடைவெளி கிடைத்தபோது சபையிலே நான் இதைச் சொல்லி அண்ணாவைப் பாராட்டினேன்.  உடனே சாஸ்திரிகள் என்னை அடக்கினார்/  சபையில் நாலு பேருக்கு நடுவில் இதெல்லாம் சொல்லப்பபடாது என்றார்.  நான் மறுத்து, "பாராட்டை பப்ளிக்காதான் சொல்லணும், தவறைத்தான் தனியா சொல்லணும்"  என்றேன்.  எல்லோரிடமும் ஆட்சி செய்து கொண்டிருந்த வாத்தியாருக்கு நான் அவரை மறுத்துப் பேசியதில் வருத்தம் என்றாலும் கைகொடுத்தார்!  சமாளித்தார்.

இது மாதிரி நிகழ்வுகளிலும் இன்னும் வாத்தியாரை அழைத்து செய்யும் விசேஷங்களில் நான் இன்னொன்று கவனித்திருக்கிறேன்.

எந்த ஒரு சுப-அசுப விசேஷங்களும் தொடக்கத்தில் ஒரே மாதிரி அமையும்.  இறைவனைத் துதித்து சுக்லாம்பரதரம் சொல்லி ப்ராணாயாமத்துக்குப்பின் சுய அறிமுகம் நடக்கும்.

ஓரளவு இந்த இடம்வரை பெரும்பாலும் அனைவருக்கும் மந்திரங்கள் மனப்பாடம்.  அமாவாசை தர்ப்பணம் செய்வதால் கிடைக்கும் பலன்.

இந்த இடங்கள் வரும்போது என் சகோதரர் உட்பட பயோ டேட்டா போல வரும் மந்திரங்களை சாஸ்திரி உசிவஹரிக்கும் முன்னரே சொல்லி தன் புலமையை வெளிப்படுத்துவார்கள்.  ஆனால் அவை தாண்டி முக்கிய கட்டத்தில் நுழைந்தபின் சாஸ்திரிகள் உச்சரிக்கும் மந்திரிங்களை சமயங்களில் திரும்பிச் சொல்வதே கடினமாக இருக்கும்.  நமது முந்திரிக் கோட்டை தனத்தை கவனித்து சாஸ்திரி இரிடேட் ஆகி இருந்தால் கஷ்டமான இடங்களை நாம் சொல்லா விட்டால் நிறுத்தி ம்ம்ம்  என்று உறுமி மறுப்படி சொல்லி நம்மை திரும்பிச் சொல்லக் செய்வார்.

இது மாதிரி சந்தர்ப்பங்களில் வாத்தியாருக்கு எதிரே அமர்பவர்களுக்கு சாஸ்திர ஞானம் பிய்த்துக் கொண்டு போகும்.  தனக்கு எல்லாம் தெரியும் பாவமோ, தனக்கும் தெரியும் பாவமோ - இங்கு பாவம் என்பது sin அல்ல, Bhaavam என்று அறிக! - மு.கொ தனம் இருக்கும். அப்படி அமர்பவர்களுக்கு என்றில்லை.  சுற்றி இருப்பவர்களுக்கும்தான்.  ஆளுக்கொரு சாஸ்திரம் சொல்வார்கள்.

மூத்த மருமகளுக்கு  சீர் கொடுக்க வந்ததது ஒரு மூத்த தம்பதி.  அவர்கள் ஒரு தட்டில் ஒரு பருப்பு தேங்காய், பூ, பழம், வெற்றிலை, குங்குமம், மஞ்சள், வைத்து புடைவை, வேஷ்டி வைத்து  தயார் செய்து கொண்டிருந்தார்கள்.  இளைய மருமகள் அருகில் திரும்பி கிசுகிசுப்பாக, ஆனால் எல்லோருக்கும் கேட்கும்படி தப்பா வைக்கறாங்க...   இன்னிக்கி சுபம்..  ஒரு பருப்பு தேங்காய் வைக்கக் கூடாது.  இரட்டையாய் வைக்கணும் என்றார்.  இன்னொருவரும் இவர் ஆரம்பித்ததும் சட்டென புரிந்து கொண்டு அவரும் கூட கூட சாஸ்திரம் சொல்லத்தொண்டாகினார்.  

சாஸ்திரிகள் அவர்களை கையமர்த்தினார்.  "நான் இருக்கேன்ல...  நான் பார்த்துக்கறேன்..  நானும் பார்த்தேன்..  சொல்றேன்.." என்றார்.  எனக்கு இந்த இடத்தில ஒரு சந்தேகம் வரும், வந்தது!  ஒன்று சாஸ்திரிகள் அதை கவனிக்காமல் விட்டிருக்கலாம்.  அல்லது ஏதோ ஒன்று..  மூத்தவர்கள்..  செய்து விட்டு போகட்டும் என்று விட்டிருக்க வேண்டும். 

அப்புறம் சாஸ்திரிகள் அந்த மூத்த தம்பதியினரைப் பார்த்து மெதுவாகத் தொடங்கும்போது இதை 'முதலில் கண்டுபிடித்த; இரண்டு பெரும் கூடக்கூட  வாத்யார் குரலை மீறி குரல் கொடுத்தனர்.  சாஸ்திரி அவர்களைத் திரும்பிப் பார்த்தார் தவிர, வேறொன்றும் சொல்லவில்லை, சொல்ல முடியவில்லை.  "பருப்பு தேங்காய் இன்னிக்கி இரண்டாய் வைக்க வேண்டும்...  எங்கே போவீங்க ரெண்டாவதுக்கு..  என்று அவர்களே கேட்டு, அவர்களில் ஒருவர் ஒரு தீர்வும் சொன்னார்.  "இரண்டாய் கட் பண்ணி வச்சுடுங்க!!!!"  இந்த இடத்தில சாஸ்திரிகள் குறுக்கிட்டு இங்க பாருங்க அத்தை..  அந்த பொறுப்பு தேங்காயை ஸ்வாமி கிட்ட வச்சுடுங்க...   மத்ததை தட்டில் வச்சு கொடுங்க" என்றார்.  அது ஏற்றுக்கொள்ளப்பட்டது!  ஓரமாக இருந்த அந்த பருப்பு தென்காக் கடலை மிட்டாய்.  எனக்கு ஒரு வில்லால் கிடைக்குமா என்று மனம் கேட்டதை யாரிடமும் சொலல்வில்லை - பாஸைத் தவிர.  அவர் ஒரு முறைப்பில்  என்னை அடக்கி அங்கிருந்து அழைத்துக் கொண்டு போனார்.

​========================================================================================



கூரைக்கூச்சல் – 04
"சேட்டை" வேணுஜி 


அனுபவத்தொடரில், ஒரு தத்துவம் கூட சொல்லாமல் இருப்பது அனாச்சாரமாகி விடலாம் என்பதால்..

வாழ்க்கையில் இரண்டுவிதமாக பாடங்கள் கற்றுக்கொள்ளலாம். ஒன்று, அதாகவே வந்து சேரும் தவிர்க்கமுடியாத அனுபவங்களிலிருந்து பாடம் கற்றுக் கொள்வது. அன்றி, என்னைப்போல, ஆகாயத்தில் போகிற அடியை, ஏணி வைத்து ஏறி வாங்கிக் கொண்டு பாடம் கற்றுக் கொள்வது. ஓசூரில் ஓரளவு நிம்மதியாக இருந்த நான், வலியப்போய் ஒன்றுக்கு இரண்டு ஓணான்களை என் யூனிஃபார்முக்குள் விட்டுக்கொண்டது அப்படித்தான்.

டி.வி.எஸ். கேண்டீன் குறித்து எழுதியபோது, இரவு உணவுக்கு மட்டும் வெளியே பார்த்துக் கொள்ள வேண்டுமென்பதையும் எழுதியிருந்தேன். அப்படி, இரவு உணவுக்காக நான் தேடிக்கண்டுபிடித்த, என் பட்ஜெட்டுக்கு உகந்த ஒரு மெஸ்ஸில், தினசரி பார்த்த ஒரு நபர் மீது பரிதாபம் ஏற்பட்டது; இப்போதைக்குப் பெயர் ராமன் என்று வைத்துக் கொள்வோம்; அவனது பெயரில் ஒரு பாதி அதுதான். டி.வி.எஸ்ஸில் ஹெல்ப்பராகப் பணிபுரிந்து கொண்டிருந்தான்; சென்னைக்காரன். நானே முன்னூற்றுச் சொச்ச சம்பளத்தில் முழிபிதுங்குகையில், என்னைக் காட்டிலும் கணிசமான தொகை குறைச்சலாக சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தவன், திண்டாடிக் கொண்டிருக்கிறான் என்பதை சீக்கிரமே புரிந்துகொண்டேன். அவன் இருந்த இடத்துக்கு அதிக வாடகை கொடுத்துவந்ததால், மிகவும் சிரமத்துக்கு உள்ளாகியிருந்தான்.

இவனையும் நம் அறையில் தங்க வைத்தால், வாடகைச்செலவு பாதிகுறையும்; இவனுக்கும் உதவியாக இருக்குமே என்று ஒரு நல்ல எண்ணம் வந்து தொலைத்தது. The way to the hell is paved with good intensions – என்பது அப்போது என் களிமண்டைக்குப் புரியவில்லை. அவனும் குதூகலத்துடன் ஒப்புக்கொள்ள, முப்பது ரூபாய் மிச்சம்பிடிக்கப்போய் எவ்வளவு பெரிய சிக்கல்கள் வரப்போகின்றன என்பதை அறியாமல் நானும் மகிழ்ச்சியாகவே இருந்தேன்.

இந்த ராமனுக்கு இன்னொரு நண்பன்; பெயர் லட்சுமணன். (நிஜப்பெயரே!). அவனும் ஹெல்ப்பரே! நான் இருக்கும்போதும் இல்லாதபோதும் என் அறையில் இந்த ராமலட்சுமணர்கள் கூடிப்பேசுவார்கள். அந்த லட்சுமணனுக்குப் பால்வடியும் முகம். எப்படியென்றால், ஒரு டபராவில் டிக்காஷனும் சர்க்கரையும் போட்டு அவன் முகத்துக்கு நேராக நீட்டினால், இரண்டு டோஸ் டிகிரி காப்பி குடிக்குமளவுக்கு, அவ்வளவு பால் வடியும். பெருமாள், ஆராதனை, பிரபந்தம், தாயார் என்று அவன் வாய்திறந்து பேசினாலே, பக்திரசம் கடுகு உளுத்தம்பருப்பு கருவேப்பிலை தாளிப்போடு கொதிக்கக் கொதிக்கக் கொட்டும்.

என் அறையில் நான் ஒரே ஒரு குட்டி கன்னியாகுமரி பகவதி அம்மன் படத்தை வைத்து, எப்போதாவது கொஞ்சம் பூ வைத்து, ஒரு ஊதுபத்தி கொளுத்துவதோடு சரி. மற்றபடி மலைமேல் குடிகொண்டிருந்த சந்திரசூடேஸ்வரருக்கும் எனக்கும் நல்ல அண்டர்ஸ்டாண்டிங் இருந்தது. எங்கு போனாலும் ஏதாவது ஒரு ரூபத்தில் அண்ணாத்தே பிள்ளையார் எனக்கு தோஸ்த் ஆகிவிடுவார் என்பதால், சந்திரசூடேஸ்வரர் கோவிலில், திருவருட்செல்வர் சிவாஜி மாதிரி, கெத்தாக உட்கார்ந்திருந்த ராஜகணபதிக்கும் எனக்கும் நன்றாக ஜெல் ஆகி விட்டிருந்தது. போதாக்குறைக்கு, ஓசுர் முக்கிய சந்திப்பில் இருந்த பிள்ளையாருக்கு சல்யூட் அடிக்காமல் வேலைக்குப் போனதில்லை. என் பக்திச்சுருக்கம் இதுதான்.  

இந்த லட்சுமணன் என்பவனின் பக்தி, ஆசாரம், பேச்சு எல்லாமே சுத்த புரூடா, மகாமோசடி என்பதை நான் கண்டுகொள்ள அதிக நாள் பிடிக்கவில்லை. என் அறைக்கு எதிரே, சாலையின் எதிர்ப்புறத்தில் வசித்துவந்த அந்த தாவணிகளை வசியம் பண்ணத்தான் அவன் வந்திருக்கிறான் என்பதை அம்மணக்கண்களால் ஒரு நாள் கண்டுபிடித்தேன்.

ராமனும் சாமானியப்பட்டவனல்ல. அவன் அறைக்கு வந்த சில நாட்களிலேயே, வீட்டு ஓனர் திடீரென்று எனது புகைபிடிக்கிற பழக்கம் குறித்து ஆட்சேபம் எழுப்ப ஆரம்பித்தார். இத்தனைக்கும் பல தடவை அவர் வாடகை வாங்க வரும்போதெல்லாம் என் அறை புகைமூட்டமாகவே இருந்தும் அவர் ஒருபோதும் ஆட்சேபித்ததில்லை. நான் பெங்களூருவிலிருந்து வாங்கி வைத்திருந்த ஆமை வடிவ ஆஷ்-ட்ரேயை அவர் வரும்போதெல்லாம் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்வார். அப்படிப்பட்டவர்…?

என்னாச்சு இந்த மனுஷனுக்கு என்று கொஞ்சம் நோண்டியதும், ராமன் என்னைக் கழற்றிவிட்டு, லட்சுமணனுடன் அந்த அறையில் இருக்கலாமென்று திட்டம் தீட்டியது புரிய வந்தது. இது தவிர, அறையைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டுமென்ற எனது கொள்கையில் நான் ஒருபோதும் சமரசம் செய்து கொண்டதில்லை. வாரத்துக்கு இரண்டு நாட்களாவது தரையை டெட்டால் போட்டு மெழுகுவது, சாம்பிராணி போடுவது, தினசரி கூட்டிப்பெருக்குவது, குளியலறையை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்வது என்பதெல்லாம் எனக்கு கட்டாயங்கள். ராமன் மிகப்பெரிய சோம்பேறி! அதுகூட பரவாயில்லை என்று விட்டால், எனது பொருட்களை கொஞ்சம்கூட வெட்கமின்றி உபயோகப்படுத்தத் தொடங்கினான். நான் எடுத்த முடிவு அடிமுட்டாள்தனம் என்பதை அப்போதுதான் உணர்ந்தேன்.

ஓனரிடம் ஒரு நாள் மனம்விட்டுப் பேசியபோது, ராமனுக்கு நான் சிகரெட் பிடிப்பது பிடிக்காததால், அவரிடம் போய் அவ்வப்போது புகார் அளித்திருக்கிறான் என்பதைக் கண்டுபிடித்தேன். அடுத்த நாள், ஷிஃப்ட் முடிந்து வந்ததும், ‘ஒரு வாரம் அவகாசம்; வேறு இடம் பார்த்துக் கொள். இல்லாவிட்டால், உன் சாமான்களை எடுத்து வெளியே வைத்து விடுவேன். நான் மெட்றாஸ்காரனில்லை; பட்டிக்காட்டான்,’ என்று எச்சரித்து, அத்துடன் அவனுடன் பேசுவதையே நிறுத்தினேன்.

இவன் நேராக எங்கள் பர்சனல் மேனேஜரிடம் சென்று முறையிட, அன்னார் என்னை அழைத்து விசாரித்தார். ஒரு கட்டத்தில், ‘என் அறையில் நான் யாரைத் தங்கவைப்பது என்பது என் விருப்பம். இதில் கம்பனி தலையிடக்கூடாது,’ என்று நான் கண்டிப்பாகச் சொல்ல, பர்சனல் மேனேஜருக்கும் எனக்கும் ஒரு இறுக்கம் தொடங்கியது. ஒரு வாரம் ஆனதும், நான் சொன்னபடியே ராமனின் எல்லாப் பொருட்களையும் எடுத்து, அறையின் வாசலில்கூட இல்லை; நேராக சாலையிலேயே வைத்துவிட்டு, பழைய பூட்டை மாற்றி, புதுப்பூட்டு வாங்கி மாட்டி விட்டேன். ராமன் நினைத்தாலும் அறைக்குள் நுழைய முடியாது. சினிமாவில் வருகிற மாதிரி, கொட்டும் மழையில் ராமன் எல்லா சாமானையும் எடுத்துக் கொண்டு போவதை பால்கனியில் நின்றபடி பார்த்துக் கொண்டிருந்தபோது, கிஞ்சித்தும் இரக்கம் ஏற்படவில்லை. ‘சனியன் ஒழிஞ்சது’ என்றுதான் தோன்றியது.

எதிர்வீட்டு பெண்களுக்கும் எனக்கும், அவர்களது அம்மாவின் மூலம் ஒரு ஆரோக்கியமான நட்பு ஏற்பட்டிருந்தது. அந்த அம்மா, சந்திரசூடேஸ்வரர் கோவில் மலையடிவாரத்திலிருந்த, அனுமார் கோவிலுக்கு அடிக்கடி வருவார். அந்தப் பரிச்சயம் காரணமாக, ராமனை நான் வெளியேற்றியதைத் தெரிந்துகொண்டு, நான் அறையில் இல்லாத நேரத்தில் லட்சுமணன் ஜன்னல் வழியாக அவர்கள் வீட்டையே உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தததை உடைத்தார். மறுநாளே, லட்சுமணனை அழைத்து ‘உன் ஃப்ரெண்டை துரத்திட்டேன். நீயும் என் ரூம் பக்கம் வராதே,’ என்று எச்சரித்துவிட்டேன்.

மீண்டும் தனியாக வாழத்தொடங்கினேன். ஒரு நாள், ஜெனரல் ஷிஃப்டில் வேலைபார்த்துவிட்டு வந்து, மலைக்கோவிலுக்கும் போய்விட்டு வந்து, தூக்கம் வராமல், இரவுக்காட்சி சினிமாவுக்குப் போனேன். ‘ நல்ல நாள்’ என்று ஞாபகம். விஜய்காந்த், தியாகராஜன், நளினி நடித்தபடம். படம் பார்த்துவிட்டு வெளியேறியபோது, பக்கத்தில் பர்சனல் மேனேஜர்.

‘நைட்ஷோ பார்த்திட்டு எப்படி நீ நாளைக்கு ஜெனரல் ஷிஃப்ட்டுல வேலை பார்ப்பே?’ என்று அதிகார தோரணையில் கேட்க, ’ நீங்க மட்டுமென்ன மார்னிங் ஷோவுக்கா வந்திருக்கீங்க?’ என்று நான் பதிலுக்குக் கேட்க, மனைவியுடன் வந்திருந்த பர்சனல் மேனேஜர் ஆகப்பட்டவர் டர்சனல் மேனேஜரானார்.

இப்போது எப்படியென்று தெரியவில்லை; அப்போதெல்லாம் டிவி.எஸ்ஸில் மேலாளர்களை எதிர்த்துப் பேசுவது என்பதற்கெல்லாம் உடனடி டிஸ்மிஸ் என்பதுதான் உபாயமாக இருந்தது. நான் அந்தாளின் மூக்கை உடைத்ததை, யாரோ கேட்டுவிட, அடுத்த ஓரிரு நாட்களுக்கு பஸ்ஸில் பார்த்தவர்கள் எல்லாரும் வந்து கைகொடுத்தார்கள். ‘சரியாக் கொடுத்தேடா! இவனுக்கெல்லாம் இதுதான் சரி!’

ராமனும் லட்சுமணனும் சும்மாயிருக்கவில்லை. அவர்கள் புரொடக்‌ஷனில் பணிபுரிந்ததால், அவர்களுடைய மேலாளரான சூப்பரிண்டெண்டிடம் என்னைப் பற்றி வத்தி வைத்தார்கள். மிகவும் கரிசனத்துடன் என்னுடன் பேசுவதை வழக்கமாக வைத்திருந்த அவரும் திடீரென்று உப்புப்பெறாத விஷயத்துக்கெல்லாம் என்மீது எரிந்து விழ ஆரம்பித்தார்.

டிவி.எஸ்-50 வண்டியில் அட்ஜெஸ்ட்மெண்ட் நட் என்று ஒரு பொருள் உண்டு. குட்டியாக, ஓட்டைபோட்ட பெப்பர்மிண்ட் போலிருக்கும். ஒரு முறை, அது 2000 வந்திருக்க, நான் தவறுதலாக 22,000 என்று வரவுவைத்து, ஸ்டாக்கில் ஏற்றி விட்டேன். திடீரென்று ஒரு நாள், என் தவறு கண்டுபிடிக்கப்பட, அடுத்த நாள் உற்பத்திக்கு அட்ஜெஸ்ட்மெண்ட் நட் போதாது என்பது கண்டறியப்பட்டது. இந்த சிறிய தவறு, மேலிடம் வரை கொண்டுசெல்லப்பட்டது. ராமச்சந்திரன் சாரும், ஸ்ரீசைலன் சாரும் என்னைக் கடிந்துகொண்டாலும், இந்த ஒரு தவறுக்காக என் மீது நடவடிக்கை கூடாது என்று எனக்கு உறுதுணையாக நின்றார்கள்.

இது தொடர்பாக நடைபெற்ற ஒரு விசாரணை மாதிரி நிகழ்வில், ஒரு குறிப்பிட்ட அதிகாரி, டிவி.எஸ் நிறுவனங்களில் சர்வசாதாரணமாகப் புழங்கும், தென்மாவட்டங்களில் அடிதடி, வெட்டுக்குத்து வரை கொண்டு செல்லும், ஒரு மிக நாராசமான வார்த்தையால் என்னைத் திட்ட, நான் ‘mind your tongue’ என்று சற்றும் யோசிக்காமல் பதிலுக்குச் சொல்லிவிட்டேன். அது ஒழுங்குமீறலாக மாறி, எனக்கு மெமோ கொடுக்குமளவுக்குப்போனது. அதாவது, பர்சனல் டிபார்ட்மெண்ட் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. பர்சனல் மேனேஜருக்குக் கொண்டாட்டமோ கொண்டாட்டம்! திரும்பத் திரும்ப என்னை அழைப்பார்; காத்திருக்க வைப்பார்; அதுவும் நின்றபடி.

‘அந்த வசையை பொறுத்துக்கொள்ளாமல்தான் திருப்பிப்பேசினேன்.  அதுவும் அவரை மரியாதைக் குறைவாக எதுவும் பேசவில்லை,’ என்று எழுத்துவடிவத்தில் விளக்கம் கொடுக்க நேரிட்டது. ராமசந்திரன் சாரும் மற்ற ஸ்டோகீப்பர்களும் எனக்கு உறுதுணையாக உறுதியுடன் இருந்தார்கள். ஆகவே, முதலும் கடைசியும் என்று எச்சரிக்கப்பட்டு என் மீது மேல் நடவடிக்கை எடுக்காமல் விட்டார்கள். ஆனால், முதல் கரும்புள்ளி என் கோப்பில் வைக்கப்பட்டு விட்டது.

மனிதன் எவ்வளவு ஆபத்தானவன் என்ற பாடத்தின் முதல் அத்தியாயத்தை, அனுபவரீதியாகக் கற்றுக் கொண்டேன்

=================================================================================================

புத்தக வெளியீட்டு பரிதாபங்கள்


ஆட்சியாளர்களையும், 'பபாசி' நிர்வாகத்தையும் புகழ்ந்து பேசினால் தான் புத்தகங்களை விற்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளதால், மாவட்ட புத்தக கண்காட்சிகளுக்கு செல்லும் பதிப்பாளர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.  தமிழகத்தில் புத்தக வாசிப்பை பரவலாக்கும் வகையில், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கமான, 'பபாசி'யும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து, மாவட்ட அளவிலான புத்தகக் கண்காட்சிகளை நடத்துகின்றன. இதற்காக தமிழக அரசின் சார்பில், மதுரை, நெல்லை, கோவை, திருச்சி, ஈரோடு, சேலம், திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்குத் தலா, 30 லட்சம் ரூபாய்; வேலுார், துாத்துக்குடி, தஞ்சாவூர், திண்டுக்கல், நாகர்கோவில், கடலுார், கரூர் மாவட்டங்களுக்கு தலா, 25 லட்சம் ரூபாய்; மற்ற மாவட்டங்களுக்கு தலா, 20 லட்சம் ரூபாய் என ஆண்டுக்கு, 8.45 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது.   இந்த நிதியானது, மாவட்டத்தில் மக்கள் கூடும் முக்கிய இடங்களில் அரங்குகள் அமைப்பது, பிரதான சாலைகளில், 'பிளக்ஸ் பேனர்'கள் வைப்பது, வாகனங்களில், 'ஸ்டிக்கர்'கள் ஒட்டுவது, அந்தந்த பகுதி வானொலி, 'டிவி'களில் விளம்பரம் செய்வது உள்ளிட்டவற்றுக்காக செலவிடப்படுகிறது. இவ்வளவு வசதிகள் செய்தும், ஆளும் கட்சியினரையும், 'பபாசி' நிர்வாகிகளையும் புகழ்ந்து, 'கவனி'த்தால் தான் புத்தகங்கள் விற்க முடியும் என, முன்னணி பதிப்பகத்தினர் புலம்புகின்றனர். அவர்கள் கூறியதாவது:  தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட தென்மாநில மொழிகளின் புதிப்பாளர்கள், சென்னையில் தான் இயங்கினர். அவர்களை ஒருங்கிணைக்கவும், புத்தக விற்பனையின் சந்தையாகவும், வாசகர்களின் மையமாகவும் சென்னையை மாற்றும் வகையில், 50 ஆண்டுகளுக்கு முன், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் உருவாக்கப்பட்டது.  

உழைப்பே காரணம் :  அப்போதைய முன்னணி பதிப்பாளர்களால் துவங்கப்பட்ட புத்தக கண்காட்சி, இதுவரை, 48 ஆண்டுகள் நடத்தப்பட்டுள்ளது. உலகில் வேறெங்கும் இல்லாத வகையில், சென்னையில் லட்சக்கணக்கானோர் கூடும் இடமாக புத்தகக் கண்காட்சி மாறியுள்ளதற்கு, தொடர் உழைப்பே காரணம். இந்நிலையில் தான், தனியார் அமைப்பு நடத்தும் ஒரு கண்காட்சிக்கு, பாதுகாப்பு அளிப்பது முதல் ஆம்புலன்ஸ் வசதி செய்து தருவது, கழிவு மேலாண்மை செய்வது என, அனைத்திலும் அரசும் பங்களிக்கிறது.  புத்தக வாசிப்பில் ஆர்வமுடைய முன்னாள் முதல்வர் கருணாநிதி, இந்த புத்தக கண்காட்சியை அறிவுத் திருவிழாவாக மாற்றும் வகையில், 1 கோடி ரூபாய் வைப்புத் தொகையாக வழங்கினார். அதிலிருந்து சிறந்த எழுத்தாளர்களுக்கு விருதுகளும் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், புத்தக வாசிப்பில் ஆர்வமான ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், அமைச்சர்களின் முயற்சியால், முக்கிய நகரங்களில் புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டது. பின், தமிழக அரசே, அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் கண்காட்சியை நடத்த நிதி உதவியும் செய்கிறது. இது, வேறு எந்த மாநிலத்திலும் நடக்காதது.  ஆனாலும், 'பபாசி'யின் முக்கிய பொறுப்புகளில் உள்ளோர், ஆளுங்கட்சியினரை தவறாக வழிநடத்தி, இந்த திட்டத்தை சிதைக்கும் வகையிலான செயல்களில் ஈடுபடுகின்றனர். நல்ல எழுத்தாளரின் எழுத்தை கண்டறிந்து, எழுத்தை பெற்று, அச்சிட்டு, தரமான புத்தகமாக்குவதற்கு பலரின் உழைப்பு தேவைப்படுகிறது. அப்படி அச்சடிக்கப்பட்ட புத்தகங்களை, தற்போது வாசகர்களிடம் சேர்க்க முடியவில்லை. இதற்கு காரணம், பபாசியின் தலைமை பொறுப்பில் உள்ளோர், தங்களுக்கு தெரிந்தவர்களை பினாமிகளாக வைத்து, பல்வேறு பெயர்களில், 400க்கும் மேற்பட்ட போலி பதிப்பகங்களை உருவாக்கி, ஸ்டால்களை பெறுவது தான்.  அவர்கள், ஒரே பதிப்பகத்தின் நுால்களை விற்க, பல்வேறு பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர்களின் பெயர்களில் அரங்குகளை பெறுகின்றனர். உதாரணமாக, தற்போது களத்தில் இல்லாத, 'தாழையான் பதிப்பகம், ஓம்சக்தி இன்டர்நேஷனல்' உள்ளிட்டவற்றை இருப்பதாகக் காட்டி, போலி உறுப்பினர்களை சேர்த்துள்ளனர். அவ்வாறான போலி பதிப்பகங்களின் சார்பில், பிரபல பதிப்பக நுால்களை, 10 சதவீத தள்ளுபடியில் பெற்று, கண்காட்சியில் இரட்டை அரங்குகளை அமைத்து விற்பனை செய்கின்றனர்.

விற்க முடிவதில்லை  :  மேலும், கிலோ கணக்கில் பழைய ஆங்கில நுால்களை பெற்று, பல அரங்குகளில், 50 சதவீதத் துக்கு விற்பனை செய்கின்றனர். இதனால், புதிய நுால்களை அச்சிட்ட வர்களால், விற்பனை செய்ய முடிவதில்லை. மேலும், ஒற்றை அரங்கு பெறும் பதிப்பாளர்களுக்கு, புத்தகங்களை எடுத்துச் செல்வது, வேலையாட்களை தங்க வைப்பது உள்ளிட்டவற்றுக்கான செலவு அதிகம்.   புத்தக விற்பனை மந்தம் என்பதாலும், அடுத்தடுத்த மாதங்களில் அருகருகே உள்ள மாவட்டங்களில் புத்தகக் கண்காட்சி நடத்துவதாலும், புத்தக விற்பனையில் நஷ்டம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், பல அரங்குகளை பெற்று அதிக லாபம் பெறுவோர், அந்தந்த மாவட்ட ஆளுங்கட்சி பிரமுகர்களின் வாயிலாக, மாவட்ட செய்தி துறை அதிகாரிகளை சரிசெய்கின்றனர். அதன்பின், மாவட்ட கலெக்டர்களின் அனுமதியை பெற்று, மாவட்ட, பஞ்சாயத்து, கட்சி நுாலகங்களுக்கான கொள்முதலையும் பெற்று விடுகின்றனர்.

இதனால், முன்புபோல நுாலக ஆணைக் குழுவால், பொது நுாலகத் துறையின் வாயிலாக, வெளிப்படையாக புத்தகங்கள் வாங்கப்படுவதில்லை. எனவே, நல்ல நுால்கள், வாசகர்களின் கைகளுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. இதை சமாளிக்க வேண்டும் எனில், தற்போதைய, 'பபாசி' நிர்வாகத்தாருக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்தும் , அந்தந்த ஊரில் உள்ள ஆளும் கட்சியினரை புகழ்ந்தும் பேசினால் தான் புத்தகம் விற்க முடியும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

- தினமலர் - 

=============================================================================================


வறண்டு கிடந்த
மனக்குளத்தில்
அன்பின் வரிகளை
விதைக்கிறாய்
விதைகளைக்
கவிதையாக்கும்
மாய உயிர் நீ... 
2014


இதற்கு ரிஷபன் ஸார் கொடுத்திருந்த கமெண்ட்  :  "பூக்கிறது மனசு"

***********************

2010, 2011, 2012 ல் எல்லாம் தமிழ்நாட்டில் எப்போது கர்தண்ட் போகும் எப்போது வரும் என்றே தெரியாது...  அப்போது சுஜாதா கற்றதும் பெற்றதும் பகுதியில் கொடுத்திருந்த ஒரு கவிதையை உல்ட்டா பண்ணி எழுதியது...




==============================================================================================

இணையத்திலிருந்து -  படித்தது - ரசித்தது  - பகிர்வது 

"என்ன வேணாலும் நடந்துட்டு போகுதுயா.. மொதல்ல அந்த நிறுவனத்தை மூட சொல்லி உத்தரவு போடு.." 1962 ஆம் ஆண்டு இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையில் போர் நடந்தது. துரதிர்ஷ்டவசமாக அந்த போரில் நாம் தோல்வியைத் தழுவ நேர்ந்தது. அப்போதைய பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள், இந்த தோல்வியால் மிகவும் மனமுடைந்து காணப்பட்டார். அந்த சமயம் நமது தமிழ்நாடு முதலமைச்சராக இருந்தவர் நமது காமராஜர் ஐயா..
காமராஜர் நேருவிடம் கேட்டார்.
"ஏன்.. எதனால் நாம் தோல்வி அடைய நேர்ந்தது?" என்று கேட்டார்.
அப்பொழுது நேரு சொன்னார்.
"நமக்கு இருக்கக்கூடிய இரணுவ ஆயுதங்கள் எதுவும் அவ்வளவு வலிமையானதாக இல்லை. நாம் நவீன இராணுவ ஆயுதங்கள் எல்லாம் வாங்கி நம்முடைய இராணுவத்தை வலிமைப்படுத்தினால் தான், நாம் ஜெய்க்க முடியும்..!" என்று நேரு சொன்னார்.
"அப்டினா, முதல்ல அத பண்ணுங்க.. தேசத்தோட பாதுகாப்புதான ரொம்ப முக்கியம். உடனே அந்த இராணுவ ஆயுதங்கள் எல்லாம் வாங்கி இராணுவத்தை வலிமைப்படுத்த வேண்டியது தான..." என்று கேட்டாராம் காமராஜர்.
நேரு சொன்னார், "நாம் அமெரிக்காவிடம் இருந்து நவீன ஆயுதங்கள் எல்லாம் வாங்கிவிட்டோம்.. ஆனால், அதில் ஒரு சின்ன சிக்கல்" என்றார்.
"என்ன சிக்கல்?"- காமராஜர்,
"அந்த இராணுவ ஆயுதங்கள் அனைத்தையும் இந்தியாவிற்கு கொண்டு வர வேண்டுமென்றால், 'அங்கு அமெரிக்காவில் இருக்கக்கூடிய ஏதாவது ஒரு பேங்க் நமக்கு ஜாமீன் கையெழுத்து (அதாவது சூரிட்டி) போட்டால் தான் நமக்கு அந்த ஆயுதங்களை அனுப்பி வைப்போம்' என்று அமெரிக்கக்காரன் சொல்லிவிட்டான். ஆனால், நம் இந்தியாவை நம்பி அங்கிருக்கக்கூடிய எந்த வங்கியும் 'Assurance' உறுதியளிக்க தயாராக இல்லை. அதான் என்ன பண்றதுனு தெரியல" என்று மிகவும் கவலையோடு நேரு காமராஜரிடம் சொன்னார்.
காமராஜர் தன்னுடைய ஆட்சியில் பத்துக்கும் மேற்பட்ட அணைகளை கட்டியவர். அப்பொழுதே ஏகப்பட்ட நீர்மின் நிலையங்கள், மதிய உணவுத் திட்டம் என்று நிறைய வித்தியாசமான ஐடியாக்களை புகுத்தியவர் காமராஜர். அவருக்கா ஐடியாவிற்கு பஞ்சம் இருக்கப் போகிறது. காமராஜர் வழக்கம்போலவே சிறிது வித்தியாசமாக யோசித்தார்.

"ஒன்னும் பிராப்ளம் இல்ல நேரு. அமெரிக்க வங்கியில் கிளை ஏதாவது இந்தியாவில் இருக்கிறதா..?" என்று கேட்டார் காமராஜர்,
"இருக்கு. அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் பேங்க் கிளை இந்தியாவில் இருக்கு"
உடனே காமராஜர் ஐயா, "இங்கிருக்கக்கூடிய அந்த அமெரிக்க வங்கியை முதலில் மூட உத்தரவு போடு" என்றார் காமராஜர்.
நேரு பதறிப் போய் "என்னது.. அமெரிக்க நிறுவனத்தை நாம் மூட வேண்டுமா? அப்படி செய்தால் உலகளவில் பிரச்சனை வந்துவிடும்" என்று பயந்தார் நேரு.
"என்ன வேணாலும் நடந்துட்டு போகுதுயா.. மொதல்ல அந்த நிறுவனத்தை மூட சொல்லி உத்தரவு போடு.." என்றார் காமராஜர்.
காமராஜர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்று நேருவும் அந்த அமெரிக்க நிறுவனத்தை அழைத்து "நீங்கள் எங்களுக்கு உதவி பண்ணாத காரணத்தால், சீக்கிரம் உங்கள் கடையை மூடிவிட்டு உங்கள் நாட்டுக்கு நடையைக் கட்டுங்கள்" என்றாராம்.
உடனே அந்த வங்கியில் மேலாளர் பதறிப்போய் அமெரிக்காவைத் தொடர்புக் கொண்டு விஷயத்தைக்கூறி, அந்த அமெரிக்க அதிகாரிகள் உடனே பதறிப் போய் இந்தியாவிற்காக சூரிட்டி கையெழுத்துப் போட்டு அடுத்த பதினைந்தாவது நாளில் அந்த நவீன ஆயுதங்கள் இந்தியாவிற்கு வந்து இறங்கின.
இதுதாங்க காமராஜர் ஐயாவின் மாத்தி யோசிக்கும் திறன்.!
'அவனுடைய கடையை இங்கு மூடினால், அவன் வழிக்கு வருவான்' என்ற அந்த மாத்தி யோசிக்கும் திறன் தான், நம் தேசத்தின் பாதுகாப்பையே நிர்ணயம் செய்திருக்கிறது.
நீங்களும் காமராஜர் ஐயாவைப் போல் கொஞ்சம் வித்தியாசமாக யோசியுங்கள். முதலில் உங்களையும், பிற்பாடு இந்த நாட்டையும் பலப்படுத்துங்கள்.

================================================================================

பொக்கிஷம் :

KGG சமீபத்தில் சென்னை வந்து சென்றபோது சில பழைய பைண்டிங் புத்தகங்கள் கொடுத்தார்.  அதில் ஒன்று நடுப்பக்க ஜோக்ஸ் மட்டும் தொகுத்தது.  84  விகடன் என்று நினைக்கிறேன்.  கொஞ்ச நாளைக்கு இது தொடரும்!

'சிரிக்கா விட்டால் விடமாட்டேன்' என்று புனிதன் மாதிரி சொல்ல மாட்டேன்.  சிரிப்பு வந்தால் சிரியுங்கள்.


மேலே இடது பக்கம் இருப்பது ஆர்ட் அல்ல.  கரையான் தின்றது போக மீதி!

கரையான் மிச்சம் வைத்திருக்கும் பகுதிகளைப் படித்து இன்புறுங்கள்!


நல்ல ஐடியா...  பொட்டுக்கு பதில் நாமம் போட்டுவிட்டால் இன்னும் பொருத்தமாய் இருக்கும்!

இது சென்ற தேர்தலில் ஒரு முக்கிய கட்சி சார்பில் நடைமுறைப்படுத்தப்பட்டது என்று நினைவு!

இதில் என்ன ரகசியம் வேண்டி கிடக்கிறது!

இதையும் சேர்த்து மூன்று!




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!