30.4.26

வாசு சார்

 

இரண்டாவது மகனின் திருமணப்பத்திரிகை விநியோகத்தில் நேர்ந்த ஒரு சிறு சம்பவம்!  அல்லது இரு சம்பவம்!

வழியில் சாப்பிட, ப்ளஸ் குடிக்க எடுத்துக் கொண்ட (!!) தயிர் சாதம், மோர் காலியாக, இரவு டிஃபனுக்கு ஒரு ஹோட்டல் செல்ல தீர்மானித்து சிறிய உடுப்பி ஒன்றுக்கு செல்ல எண்ணியபோது பக்கத்து கடை மெடிக்கல் ஷாப்  என்று தெரிந்தது.  இடம் மேற்கு மாம்பலம் அயோத்யா மண்டபம் ஏரியா.  சில மருந்துகள் வாங்கவேண்டும் என்பதால் முதலில் அதற்குள் நுழைந்து அவற்றை வாங்கி கொண்டு பின்னர் ஹோட்டல் சென்றோம்.

சிறிய ஹோட்டல்.  ரோடைப் பார்த்தபடி இருந்தது.  அந்தக் கால ஹோட்டல் போலும்.  AC ஹால் இல்லாதது ஒரு மைனஸ் என்றால், அடுப்புக்கு அருகே எங்களுக்கு இடம் கிடைத்தது இன்னொரு மைனஸ்!

அங்கு அமர்ந்து மருந்துகளை எடுத்துப் பிரித்து ஓட்டுனருக்கு அவர் அவசரத்துக்கு வாங்கியிருந்த மாத்திரைகளை கொடுக்கலாம் என்று பிரித்தால் ஒரு மாத்திரை - ஒற்றை மாத்திரை - Albendazole 400 - மிஸ்ஸிங்.  அப்படியே அடுத்த கட்டிடம்தானே..   ஆனியன் ரவா ஆர்டர் செய்திருந்தேன்.  எப்படியும் தாமதமாகும் என்று பாஸ், அண்ணா, ஓட்டுனரிடம் காத்திருக்கச் சொல்லிவிட்டு பக்கத்து கடைக்குள் நுழைந்து கேட்டேன்.  

நான் மாத்திரை பெயரைச் சொன்னதுமே அதைக் கொடுக்கவில்லை என்பதை அந்த நடுத்தர வயதுப் பெண்மணி நெற்றியைத் தட்டிக்கொண்டு ஆமோதித்து விட்டு எடுத்துக் கொடுத்தார்.  "அதற்குள் இன்னொரு லேடி வந்தாரா..  டப்பாவை எடுத்தவள், அப்படியே வைத்து விட்டேன்'  'பில்லில் இதற்கும் சேர்த்துதானே பணம் வாங்கினீர்கள்?' என்று கேட்டேன்.  'இல்லை' என்றார்.  "ஒவ்வொரு ஐட்டமாக பார்த்துதானே விலை போட்டேன்?!"  'மாத்திரை எவ்வளவு?' என்றதும் 'எட்டு ரூபாய்' என்று சொல்லி வாங்கி கொண்டார்.

மறுபடி  உடுப்பிக்குள் நுழைந்து சாப்பிட்டோம்.  பில்லைக் கொடுத்த சர்வர், சட்டென பில்லை வாங்கி 'ஸாரி ஸார்..   சப்பாத்தி காஸ்ட் சேர்க்க விட்டுட்டேன்' என்று சொல்லி அதை தனி பில்லாக்கி கொண்டு வந்து கொடுத்தார்.ஒரு 270 பில், அப்புறம் ஒரு 145 பில். 500 ரூபாய் கொடுத்தனுப்பினேன்.  அவர் மிச்சம் கொடுத்ததை வாங்கி சர்வரிடம் 20 ரூபாய் டிப்ஸ் கொடுத்து விட்டு, மிச்ச பணத்தை பில்லின் நடுவில் பொதிந்து சட்டை பாக்கெட்டில் சொருகிக் கொண்டு, எழுந்து சென்று கை கழுவி, ரெஸ்ட் ரூம் சென்று வந்து, திடீரென ஒரு சந்தேகம் வந்து பில்லை எடுத்துப் பிரித்தால்..  ஆமாம்...   மிச்ச ரூபாய் 185 ரூபாய் கொடுத்திருந்தார்.  என்னையே பார்த்துக் கொண்டிருந்த சர்வரிடம் வந்து 'மிச்சம் தப்பா கொடுத்திருக்காரே' என்றதும் அவர் முகத்தில் பதட்டம் ஏற்பட்டது..  'இல்லையே..  நான் சரியாகத்தான் கொடுத்தேன்'  'நீங்க இல்லை' என்று சொல்லி கல்லாவை நெருங்கி,  'இப்பதான் இவர் மூலம் பில் செட்டில் செய்தேன்.  இரண்டு பில் கூட்டி மிச்சம் தரவேண்டும்....'  என்று நான் ஆரம்பிக்கும்போதே கல்லாவில் இருந்தவர் 'ஆமாம்..  100 ரூபாய் கூட கொடுத்துட்டேன்' என்று சொல்லி வாங்கி கொண்டார்!  அவ்வளவு உஷாரானவர் எப்படி தவறு செய்தாரோ..

என் நேர்மையை நானே மெச்சிக்கொண்டு காரில் ஏறி உட்கார்ந்து, மருந்து பில்லை தேடினேன்.  அவர் பில் எல்லாம் தரவில்லை.  மருந்துகளை போட்டுக் கொடுத்த கவரிலேயே விலை எழுதி இருந்தார்.  அதில் Albendazole என்று எழுதி 10 ரூபாய் என்று போட்டு வாங்கி இருந்தார்!

=======================================================================================


என் ஒன்று விட்ட இளைய சகோதரர் மற்றும் அவர் மனைவி இருவரும் அரசு பள்ளி ஒன்றில் உதவி தலைமை ஆசிரியர், ஆசிரியராக வேலை செய்கிறார்கள்.  சேவை செய்கிறார்கள் என்றே சொல்லலாம்.  அவர்கள் சொல்லும் அனுபவங்கள் நம்மை திகைப்படையச் செய்கின்றன.  சில உண்மைகள் சுடுகின்றன.  இந்தக் காலத்தில் ஆசிரிய பணி என்பது சிரமமானது.  'முன்னரே உன் அனுபவங்களை சொல்லி இருக்கலாமே' என்று சொன்னபோது அவர் சொன்னது.

தங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி, நன்றி, நன்றி. 

வாக்கு உற்றவன் வாத்தியார் என்பது பழமொழி. அத வக்கத்தவன் வாத்தியாரு என்று கேவலப்படுத்தி விட்டார்கள். அது வாக்கு உற்றவன் என்று கூறலாமா அல்லது வாக்கு கற்றவன் என்று கூறலாமா என தெரியவில்லை. 

எது எப்படியோ வாய் ஜாலம் இருந்தால் தான் எங்கள் தொழிலில் பிழைக்க முடியும்

வாசு ஸார் என்று அவருடைய மாணவர்களால் அன்போடு அழைக்கபப்டும் அவர் உருவாக்கியுள்ள பல மாணவச் செல்வங்கள் இன்றும் அவரை நன்றியோடு நினைவுகூர்கிறார்கள்.  அவர் செல்லுமிடங்களில் எல்லாம் அவரின் பழைய மாணவர் ஓரிருவராவது அவரை சந்தித்து ஆசி பெற்று நன்றியைச் சொல்கிறார்கள்.  அவர் வேலை செய்யுமிடங்களாக இருந்தால் அந்த பில் தொகையை தாங்கள் செலுத்தி விடுவதாகக் கூறுகிறார்கள்.  வாசு அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்.

வாசு சார் அவர்கள் இருக்கும் கடைகளுக்கு, நிறுவனங்களுக்கு சென்றால் அவர்களே பார்த்து விட்டு இவர் இருக்கும் இடம் ஓடி வந்து விடுவார்கள்.

சென்னை - பெங்களூரு சாலையில் உள்ள 'டிவைன் கேப்' ஹோட்டல் கொஞ்சம் பிரபலம்.  அந்தப் பக்கம் போகும்போதெல்லாம் உள்ளே நுழைந்து போட்டோ எடுத்து போடுவது வழக்கம்.  அந்த உணவகத்தின் தலைமை செஃப் வாசுவின் மாணவர். 

தற்சமயம் 40  ஆண்டு கால சர்வீஸ் முடித்திருக்கும் அவரைப் பாராட்டி அவர் ஊரில் போஸ்டர்கள் ஒட்டி கொண்டாடி இருக்கிறார்கள் மாணவர்கள்.  அவர் எங்கள் குடும்ப குழுமத்தில் எழுதியத்திலிருந்து சில பகுதிகளை அவர் அனுமதியுடன் இங்கே பகிர்கிறேன்.  முதலில் அவர் தந்த முன்னுரை...

என்னுடைய 40 ஆண்டுகால பணி நிறைவு குறித்து வாழ்த்துக்களையும் ஆசிரியர் பணியை பற்றிய நல்ல கருத்துக்களையும் என்னுடன் பகிர்ந்து கொண்ட உங்கள் அனைவருக்கும் என்னுடைய பணிவான வணக்கங்கள். 

26 4 1986 அன்று, ஒரு மாதமாக நான் பணிபுரிந்து கொண்டிருந்த தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணியை ராஜினாமா செய்து விட்டு உயர்நிலைப்பள்ளி ஆசிரியராக பதவி ஏற்று கொண்ட தினம். 

அன்றைய வட ஆற்காடு மாவட்டம் மிக மிகப் பெரியது. 

அதாவது ஐந்து கல்வி மாவட்டங்கள் அடங்கியது.

அனைத்து கல்வி மாவட்டங்களில் இருந்தும் எனக்கு பணி கிடைத்தது அதில் முதன்மையாக நான் பெற்ற திருவண்ணாமலை  கல்வி மாவட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணியில் 27/ 3/ 86 அதாவது தற்போது நான் செய்து கொண்டிருக்கும் பணிக்கு ஒரு மாதத்திற்கு முன்பே  அரசு பணியில் சேர்ந்து விட்டேன்.

அதில் ஒரு பெரிய சிக்கல் என்னவென்றால் தென்பெண்ணை ஆற்றை பாலம் எதுவும் இல்லாத அந்தப் பகுதியில் ஆற்றின் வழியாகவே கடந்து சென்று தொண்டமானூர் என்கிற அந்த ஊரில் ஒரு மாத காலம் பணிபுரிந்தேன்..

இந்த சமையத்தில்அப்பணி சற்று தாமதமாக வந்தாலும் reliefஆக அமைந்தது. அதாவது சாத்தனூர் டேமிற்கு அந்தப் பக்கத்தில் இருந்து சாத்தனூர் டேம் இருந்து இந்த பக்கம் இருக்கின்ற சொர்பணந்தல் என்கிற உயர்நிலைப் பள்ளியில் பணி கிடைத்தது. 

1986 -87 கல்வி ஆண்டில் என்னிடம் 10வகுப்பில் கணிதம் படித்த  நிறைய மாணவ மாணவியர் என்னை விட வயதில் மூத்தவர்கள் என்பதனை நான் attendance ரிஜிஸ்டர் மூலம் தெரிந்து கொண்டேன் அதிர்ந்தேன். 

ஆனாலும் அந்த காலத்து மாணவர்கள் மிகவும் obedientஆக இருந்தார்கள். இன்னமும் இருக்கிறார்கள்..... என்னுடன் அவர்கள் இன்னும் whatsapp குழு மூலம் தொடர்பில் இருக்கிறார்கள். 

இது எனக்கு மிகவும் புதுமையான அனுபவமாக இருந்தது. 

அடுத்து சில பல ஆண்டுகள் கழித்து அணைக்கட்டு என்கிற மகளிர் உயர்நிலைப் பள்ளிக்கு மாறுதல் பெற்று வந்தேன். பெண்கள் என்பதால் சற்று சத்தம் அதிகமாக இருக்கக்கூடிய சூழ்நிலை அதைத்தவிர மாணவிகளின் எண்ணிக்கையும் அங்கு அதிகம். 

சத்தமாக பேசாமல் மெதுவாக பேச பழகிக் கொள்ளுங்கள் என்பதை அடிக்கடி வலியுறுத்திக் கொண்டே இருந்தேன். 

ஒரு நாள் வகுப்பறையில் ஒரு சிறிய பாம்பு ஒன்று நுழைந்தது. அதனை ஒரு மாணவி என்னிடம் வந்து மிக மிக மிக மெல்லிய குரலில் சார் பாம்பு வந்திருக்கு சார் என்று என்னுடைய காதில் விழாதவாறு கூறிக் கொண்டே இருந்தாள்...

சற்று உரக்க கூறுமாறு நான் கேட்டுக் கொண்டதன் பெயரில் என் காதில் மட்டும் விழுகின்ற அளவுக்கு சார் பாம்பு வந்திருக்கு என்று கூறினாள்.

அய்யய்யோ பாம்பா வந்திருச்சு ஏம்மா கொஞ்சம் சத்தமா சொல்ல கூடாதா என்று ஓடிப்போய் நான் அந்த பாம்பை வகுப்பை விட்டு வெளியேற்றினேன். 

இப்படியாக நிறைய அனுபவங்கள் என்னுடைய இந்த 40 ஆண்டு பணி காலத்தில்....

Latestஆக தொரப்பாடி பள்ளியில் கஞ்சா விற்பனை செய்பவனை பிடிக்கச் சென்று சுவர் ஏறி குதித்தது ..

காதல் விவகாரத்தில் என்னுடைய மாணவனை வெளியில் இருந்து ஒருவன் பாட்டிலை உடைத்து வயிற்றில் குத்த சென்ற பொழுது அதை தடுத்தது ....

இதுபோல .....

நிறைய நினைவில் வராத விஷயங்கள் அதிகம். 

ஒரு நாள் திடீரென்று அருகிலுள்ள சிறைச்சாலைக்கு வருமாறு எனக்கு தகவல். 

என்ன ஏது என்று கேட்கும் பொழுது 

சார் நீங்க senior most teacher என்பதால் Central prison க்கு teachersஐ recruit பண்ணனும்... Chief Education Officer உங்கள தான் ரெகமெண்ட் பண்ணாங்க. தயவு செய்து வாங்க என்று superintendent of prison னிடமிருந்து Phone.

இப்படியாக என்னுடைய பணி teaching என்பதையும் தாண்டி சென்று கொண்டிருக்கிறது. 

2027 டிசம்பர் மாதம் முடிய சர்வீஸ் இருக்கிறது. இன்னும் மீதமுள்ள காலங்களில் என்னென்ன அனுபவங்கள் கிடைக்கப் போகிறதோ...

எது எப்படியானாலும் மாணவர்களுடைய psychology தெரிந்துகொண்டு அவர்களிடம் அன்புடன் பேசி பழகினால் நாம் அவனை நல்வழிக்கு எடுத்துச் செல்ல முடியும் என்பது மட்டுமே உண்மை. கறார் கண்டிப்பு இவையெல்லாம் இரண்டாம் பட்சம் மட்டுமே... 

========================================================================================


கல்கியின் முன்னுரை ஒன்றிலிருந்து சில பகுதிகள்  - பானுமதி வெங்கடேஸ்வரன் 


பாங்கர் விநாயக்ராவ் என்னும் தன்னுடைய நூலுக்கு கல்கி எழுதியிருந்த நீ..ண்..ட முன்னுரையிளிருந்து(9அத்தியாயங்கள்) சில பகுதிகள்:

ராஜாஜி “சென்னையில் வேலையில்லாமல் இருந்தால் கெட்டுப் போவாய்!” என்று சொன்னது எனக்கு அளவுக்கடங்காத வியப்பையும் திகைப்பையும் அளித்தது. நம்முடைய சமாசாரம் ராஜாஜிக்கு எப்படித் தெரிந்தது என்றுதான் வியப்பு.

சென்னை ராயப்பேட்டையில் நான் இருந்தபோது ஒரு நாள் இரவு சந்திரக் கிரகணம் பிடித்தது. கிரகணம் பார்ப்பதற்கும் ஸ்நானம் செய்வதற்கும் திருவல்லிக்கேணி கடற்கரைக்குப் போயிருந்தேன். இரவு ஒரு மணிக்கு கிரகணம் விட்டதும் ஸ்நானமும் முடிந்தது. ராயப்பேட்டைக்குக் குறுக்கு வழியாகப் போக எண்ணித் திருவல்லிக்கேணி சந்து ஒன்றில் புகுந்தேன். போகப் போகப் புதிய புதிய சந்தும் பொருந்தும் வந்து கொண்டிருந்தனவே தவிர, ராயப்பேட்டையைக் காணவேயில்லை. “ராயப்பேட்டை கெட்டுப் போய் விட்டதா? அல்லது நான்தான் காணாமற் போய்விட்டேனா?” என்ற யோசனை உண்டாகிவிட்டது. கடைசியில் நான் வந்திருந்தது மயிலாப்பூர் மந்தைவெளி என்று தெரிந்தது. அங்கிருந்து டிராம் ரோட்டைப் பிடித்துக் கொண்டு காலை நாலு மணிக்கு ராயப்பேட்டை சேர்ந்தேன்!

எனவே, சென்னையில் இருந்தால், அதுவும் சும்மா வேலையின்றி இருந்தால், நான் கெட்டுப் போகக் கூடியவன்தான் என்பது எனக்கு முன்பே தெரிந்திருந்தது! ராஜாஜியும் இதையே சொல்லவே ஒரு நிமிஷம் கூடத் தாமதிக்கக் கூடாது என்று மறுநாளே வீட்டைக் காலி செய்து விட்டுப் புறப்பட்டேன். (அடாடா! அந்தக் காலி வீடு மட்டும் இப்போது காலியாகவே இருந்தால்...!)

காந்தி ஆசிரமத்துக்கு நான் போய்ச் சேர்ந்தது முதல் சில மாத காலம் வரை கணக்கு எழுதுவதில் ஈடுபட்டிருந்தேன். ஆசிரம வாழ்க்கை ஆனந்தமாகத்தான் இருந்தது. அதிகாலையில் ஐந்து மணிக்கு எழுந்து பிரார்த்தனைக்குப் போய் உட்காருவது மட்டும் ஆரம்பத்தில் கஷ்டமாயிருந்தது. சில நாள் காலைப் பிரார்த்தனை செய்த பிறகு மறுபடியும் போய்ப் படுத்துக் கொண்டு விடுவேன். கொஞ்ச நாளைக்குப் பிறகு காலையில் எழுந்திருப்பது பழக்கமாகிவிட்டது.

காலைப் பிரார்த்தனையைக் காட்டிலும் மாலை ஏழு மணிப் பிரார்த்தனை எப்போதும் சுவாரஸ்யமாயிருக்கும். மகாத்மாவின் சத்தியாகிரஹ ஆசிரமத்தில் நடப்பதை ஒட்டி, பகவத் கீதை பாராயணம், நாமாவளி பஜனை முதலியவை நடைபெறும். அவற்றோடு “முக்திநெறி அறியாத” என்னும் திருவாசகமும், “மாற்றறியாத செழும் பசும் பொன்னே!” என்னும் அருட்பாவும் பாடப் பெறும். பாடப்பெறும் என்று சம்பிரதாயமாக தான் சொல்கிறேன். அந்தப் பாட்டுகள் இன்னும் உயிரோடு இருப்பது மாணிக்கவாசகர், ஸ்ரீராமலிங்க ஸ்வாமிகள் ஆகியவர்களின் தபோ வலிமையினால் தான். மகாத்மா நடத்தும் மாலை பஜனைகளில் ஸ்ரீமதி மீராபென் என்னும் பெயர் பூண்ட மிஸ் ஸ்லேட் அம்மையார் மீராபாயின் கீதங்களைப் பாடுவதுண்டு. அவ்வளவு துரதிர்ஷ்டத்தை மாணிக்கவாசகர் செய்யவில்லையென்று சொல்லலாம். ஆனால் அடுத்தபடி துரதிர்ஷ்டக்காரர் என்றே சொல்ல வேண்டும். ஆசிரமத் தொண்டர்களின் சாரீரம் அவ்வளவு சுகமாயிருக்கும்! ஆசிரமத்தில் எனக்கு ஏதாவது கஷ்டம் இருந்ததென்றால், அது மேற்படி தமிழ்ப்பாடல்களைத் தொண்டர்கள் பாடக் கேட்பதொன்றுதான்.

==============================================================================================

ஒரு நேர்மறைச் செய்தி -  பானுமதி வெங்கடேஸ்வரன் 


மதுரையைச் சேர்ந்த பத்மாவதி என்ற அந்தபெண்ணிற்கு பட்டப்படிப்பு படிக்க வேண்டும் என்ற ஆசை, ஆனால் 17 வயதிலேயே திருமணம் ஆகி விட்டதால் இல்லறக் கடமைகளில் மூழ்கியிருந்த அவரால் தன்னுடைய 45வது வயதில்தான் அந்த பட்டதாரி கனவை நிறைவேற்றிக் கொள்ள முடிந்தது. மதுரை காமராஜ் பல்கலைகழகத்தில் பி.காம். பட்டப்படிப்பை முடித்தார். அவருடைய ஈடுபாட்டையும், உழைப்பையும் பார்த்த ஆடிட்டர் C.V.S. மணி என்பவர் இவரை சி.ஏ. படிக்கச் சொல்லியிருக்கிறார். இவர் எம்.காம்., சி.ஏ. இரண்டையும் தேர்ந்தெடுத்திருக்கிறார். எது சுலபமாக இருக்கிறதோ அதைத் தொடரலாம் என்று நினைத்தாராம். இரண்டையுமே தொடர்ந்திருக்கிறார். 45 வயதில் சி.ஏ.வில் சேர்ந்த அவர் 50வது வயதில் அதை முடித்தாராம். தற்போது 86 வயதாகும் இவர் இப்போதும் பட்டய கணக்காளராக(chartered Accountant) பணியாற்றி வருகிறார்.  

====================================================================================

சுதந்திரபோராட்ட காலத்தில் அந்தமான் சிறை வாழ்க்கையை அனுபவித்தவர்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று தாமோதரன் கதையை படமாக்கிக் காட்டி இருந்தார் இயக்குனர் ப்ரியதர்ஷன்.  மோகன்லால், பிரபு, தபு ஆகியோர் நடித்திருந்த அந்தப் படத்தின் பெயர் ஷிர்க்கைச்சாலை.  வெளிவந்த ஆண்டு 1996.  தமிழ் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய அனைத்து மொழிகளிலும் டப் செய்து வெளியிடப்பட்டது.  அறிவுமதியின் பாடல்களுக்கு இளையராஜா இசை.

அந்தப் படத்திலிருந்து இரண்டு அற்புதமான பாடல்கள்.

இந்தப் பாடலில் இளையராஜாவையும் பாலசுப்ரமணியத்தையும் சித்ராவையும் ரசிக்கலாம்.  காட்சியையும் ரசிக்கலாம்.  அற்புதமான உணர்வுகளுடன் கூடிய பாடல்.

அடுத்த பாடலும் இதே படம்.  அழகான படப்பிடிப்பில் மறுபடியும் தலைவர் குரலில்..


====================================================================================





தாளிப்பு

பொடி

சிகரெட்டும் சுருட்டும் பொடியும் புகையிலையின் குழந்தைகள்தான்.  ஆனால் பொடிக்கு உலகில் ஒரு அந்தஸ்து கிடைத்துள்ளது.  பொடி நுழையாத இடம் கிடையாது.  'பத்மபூஷன்' விருது அளிக்கும் நிகழ்ச்சியில் ஜனதிபதி சாட்சியாகப் பொடி போடலாம். ஈ வே ராவின் போராட்டத்தை நம்பி நிற்காமல் எப்போதோ  கர்ப்பகிரகத்தில் பொடி நுழைந்து விட்டது.    பொடிக்கு அடிமையானவர்கள் ஏராளமானவர்கள்.  

நெப்போலியன் நெல்சன் முதல் அண்ணா வரை எத்தனையோ வி ஐ பி க்கள் பொடிப்பித்தார்களாக இருந்திருக்கிறார்கள்.

லண்டன் பாராளுமன்றத்தில் ஒரு அழகிய பொடிடப்பி உள்ளது.  சர்க்கார் செலவில் தலைமை காப்பாளர் அதை நிரப்பி வைக்கிறார்.  சபைக்குள் போகும்போது ஒரு சிட்டிகை எடுத்துக் கொள்கிறார்கள் பல எம் பி க்கள்.

பிரதம மந்திரியாய் இருந்த வின்ஸ்டன் சர்ச்சில் பொடிப் பிரியராம். 1941 ஆம் ஆண்டு அந்த பொடி டப்பி காணாமல் போய்விட்டது.  சர்ச்சில் தன் சொந்தக் செலவில் ஒரு பொடிடப்பியை வாங்கி கொடுத்தாராம்.  இன்றும் அதே டப்பிதான் ஆட்சி புரிந்து கொண்டிருக்கிறது.

பொடிப்பழக்கத்தை எதிர்த்தும் பல இயக்கங்கள் தோன்றியுள்ளன.  ஒரு பாப் கூட அறிக்கை விட்டாராம். 

நம் ஊர்களில் எல்லாப் பொடிகளுக்கும் 'பட்டணம் பொடி' என்று பெயர் வைத்து விடுகிறார்கள்.  லண்டனில் உள்ள பிரபல பொடிக்கடையான ஜி ஸ்மித் அண்ட் சன்ஸ் 41 வித பொடிகள் தயாரிக்கிறார்கள்.  காபி வாசனை, அத்தர் வாசனை ஆகியவை மிகப் பிரபலமாம்.பொடிகளுக்கு விதவிதமான பெயர்கள் வைத்திருக்கிறார்கள்.  டவுன் கிளார்க், நான்காம் ஜார்ஜ் ஆகியவற்றிற்கு நல்ல கிராக்கி என்கிறார்கள். 

பொடி டப்பிகள் தயாரிப்பதையும் கலையாக்கி விட்டிருக்கிறார்கள்.  பொடிதாஸர்கள் செல்வத்தின் செழிப்பைக் காட்ட வெள்ளி, பொன் வைரம் ஆகியவற்றைக் கொண்டு செய்தனர் பலர்.

1962 ஆம் ஆண்டு லண்டனில் ஒரு ஏலத்தில் ஒரு பொடி டப்பி இரண்டாயிரம் பவுனுக்கு விலை போயிற்று.  
பொடியை வைத்துப் பல் தேய்க்கிறார்கள் பலர்.  ரத்தத்தை உறிஞ்சும் அட்டையிலிருந்து விடுபட ஒரு துளி பொடி போட்டால் போதும்.

பொடி டப்பியைப் பற்றிய ஒரு ஜோக் (ஆசிரியர், இன்ஸ்பெக்டர், உலகத்தின் அமைப்பு, மாணவன் பதில்) பொடியை விடப் பிரபலமானது ஆகவே அதை இங்கு எழுதவில்லை!

கொடுமை, கொடுமை
அப்பாவித்தனமானகேள்வி மாதிரி இருக்கும்.  ஆனால் கேட்கப்பட்ட சமயம், விதம், நபர் காரணமாக கொடுரமாக அமையும்.  அமெரிக்காவில் ஒரு காலத்தில் இத்தகைய கொடுமை வாக்யங்களைக் கண்டு பிடிப்பது பெரிய பொழுது போக்காக இருந்ததாம். உதாரணத்திற்கு:

ஆபிரகாம் லிங்கன் தன் மனைவியுடன் நாடகம் பார்த்துக் கொண்டிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டது தெரித்த சேதி,
இரண்டு நாள் கழித்து லிங்கனின் மனைவியிடம் இப்படி ஒரு கேள்வி கேட்டால் எப்படி இருக்கும்... "ஏதோ நடந்து விட்டது. போகட் டும். நாடகம் எப்படி? பிடித் திருந்ததா?

நாமும் (நகைச்கவையுடன்) சில  கொடுமை வாக்க்கியங்களைத் தயாரிக்க  முயற்சிக்கலாமே! வாசகர்கள் எழுதி அனுப்பலாம்.


வியப்பு

அப்பாடி' எத்தனை எத்தனை ஜோக்குகள்!

எப்படித்தான் இத்தனை நினைவில் வைத்திருக்கிறார்!

ஆச்சரியமான ஞாபக சக்தி!

ஆனால் அவற்றை

எத்தனை எத்தனை தரம் என்னிடம் சொன்னார்

என்பதை மறந்து விடுகிறாரே!

ஆச்சரியமான மறதி!

கடுகு

தினமணி கதிர் - 1971 -  கடுகு தாளிப்பு பகுதி 

=======================================================================================

அதிர்ச்சி சம்பவம்
கணவர் மீது சிமென்ட் ஊற்றி மூடிய மனைவி - வலிக்காமல் இருக்க மயக்க மருந்து கொடுத்துக் கொடூரச் செயல்
எகிப்தின் பாரம்பரியப் பண்டிகையான 'ஷாம் நசீம்' கொண்டாட்டத்திற்குத் தன்னை அழைத்துச் செல்லாததால், யாஸ்மின் என்ற பெண் தனது கணவர் இசாம் மீது அதீத கோபமடைந்துள்ளார்.
இந்தக் கோபத்தின் உச்சத்தில், அவர் செய்த செயல் உலகையே உலுக்கியுள்ளது.
முதலில் கணவருக்குத் தேநீரில் மயக்க மருந்து கொடுத்து அவரை ஆழ்ந்த உறக்கத்திற்குச் செல்ல வைத்துள்ளார் யாஸ்மின்.
பின்னர், இரண்டு மூட்டை சிமென்ட்டைத் தயார் செய்து, மயக்கத்தில் இருந்த கணவரின் உடல் முழுவதும் ஊற்றிப் பூசியுள்ளார்.
சிமென்ட் கலவை உடல் முழுவதும் இறுகும் வரை காத்திருந்து கணவரைச் சித்திரவதை செய்துள்ளார் அந்தப் பெண்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர், பாறை போல இறுகிய சிமென்ட் கலவைக்குள் இருந்து இசாம் என்பவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
தற்போது அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக யாஸ்மினை கைது செய்துள்ள எகிப்து போலிசார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.!
- தகவல் உமாசெல்லமுத்து
நன்றி: முருகேசன் பொன்னையா R. கந்தசாமி



=======================================================================================

விஜயகாந்த் 

அவருக்குப் பெற்றோர் வைத்த பெயர் ‘நாராயணசாமி’. அது அவருடைய தாத்தாவின் பெயர். தனக்குத் தானே ‘விஜய் ராஜ்’ என்று பெயர் சூட்டிக்கொண்டார். அதுவே மதுரையில் அவரது நண்பர்கள் மத்தியில் ‘விஜி’ என்று பிரபலமானது. அவரை இப்போதும் ‘நாராயணா..’ என்றழைப்பது அவருடைய அக்கா டாக்டர் விஜயலட்சுமி மட்டும்தான்.
மதுரை மாகாளிபட்டியில் அப்பாவின் அரிசி ஆலையைக் கவனித்துக்கொண்டார். பகலில் ரைஸ் மில், மாலையில் நண்பர்களுடன் அரட்டை, இரவில் சினிமா என்று ஜாலியாக வலம் வந்த இளைஞர். அவரது நண்பர்கள் குழுவுக்கு ‘இரவு ராஜாக்கள்’ என்கிற தனிப் பட்டம் உண்டு.
படத்திலிருந்து நீக்கம்: அப்பாவுக்குப் பிடித்த தலைவர் காமராஜர். மகனுக்கு எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர். மன்ற உறுப்பினரும்கூட. ‘விஜயராஜ் & கோஷ்டி’ மாலை ஆகிவிட்டால், மதுரை சேனாஸ் ஃபிலிம்ஸ் அலுவலகத்தில் ஒன்றுகூடி அரட்டை அடித்துக் கொண்டிருப்பார்கள்.
அது மதுரையின் பெரிய விநியோகஸ்தர் முகம்மது மஸூரின் அலுவலகம். இவர்தான் விஜய்ராஜுக்கு சினிமா வாய்ப்பினைப் பெற்று தந்தவர். விஜயகாந்தின் முதல் படம் ‘சட்டம் ஒரு இருட்டறை’ என்பார்கள். அது அவரது 6வது படம். முதல் படம் ‘இனிக்கும் இளமை.’
ஆனால் அதற்கும் முன்பு அவர், ரஜினிக்கு தம்பியாக ’என் கேள்விக்கு என்ன பதில்’ என்கிற படத்தில் தான் முதலில் 101 ரூபாய் முன்பணம் வாங்கிக் கொண்டு நடித்தார். ‘அட யாருப்பா இந்த ஆள்! நல்லா நடிக்கிறானே..!’ என்று செட்டில் பேச்சுக் கிளம்பியது. மூன்று நாள் மட்டுமே நடித்திருந்த நிலையில் படத்திலிருந்து நீக்கப்பட்டார்.
கொதித்த விஜய்ராஜ், நேரே அந்தப் பட நிறுவனத்தின் அலுவலகத்துக்குச் சென்று தயாரிப்பாளரிடம் நியாயம் கேட்டு சண்டை போட்டார். “உங்கள் முன்னாலேயே சினிமாவில் ஜெயித்துக் காட்டுகிறேன்” என சவால் விட்டுத் திரும்பினார்.
‘அகல் விளக்கு’ அனுபவம்: அதன் பின்னர், தனது புகைப்பட ஆல்பத்துடன் கோடம்பாக்கம் முதல் விருகம்பாக்கம் வரை சினிமா கம்பெனிகளில் ஏறி இறங்கினார். சென்ற இடமெல்லாம் கிண்டலும் கேலியும்தான். ஒரு வாய்ப்பு கூடக் கிடைக்கவில்லை. மீண்டும் கை கொடுக்க முன் வந்தார் விநியோகஸ்தர் மஸூர்.
அப்போது எம்.ஏ.காஜா இயக்கிக் கொண்டிருந்த ‘இனிக்கும் இளமை’ படத்தில் விஜய்ராஜுக்கு வாய்ப்புத் தந்தால் மதுரை ஏரியாவை வாங்கிக் கொள்வதாகச் சொல்லி, அந்தப் படத்தில் வில்லன் வேடம் பெற்றுத் தந்தார். திருப்பூர் பனியன் கம்பெனி நண்பர்கள் கொடுத்த ஆடைகளை அணிந்து நடித்தார். விஜயராஜை ‘விஜய்காந்த்’ என்று பெயர் மாறினார் இயக்குநர் எம்.ஏ.காஜா.
கதாநாயகனாக இரண்டாவது படம் ‘அகல் விளக்கு’. அந்தப் படத்தின் முதல் நாள் படப்பிடிப்புக்கு அதிகாலையே அழைத்துச் சென்று, விஜய்காந்துக்கு மேக்கப் போட்டு உட்கார வைத்திருந்தார்கள். படத்தின் நாயகி ஷோபா அன்றைக்கு முன்னணிக் கதாநாயகி. “அவர் எப்போ உள்ளே நுழையுறாரோ, அடுத்த நிமிஷமே ஷாட் ரெடியா இருக்கும். அப்போது ‘காம்பினேஷன்’ ஷாட்களை ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் எடுத்துவிட வேண்டும்.
அவர் நமக்கு 2 மணி நேரம் நடித்துவிட்டு, வேறொரு படத்தின் ஷூட்டிங் போகிறார். நீங்க மேக்கப்போடு ரெடியா இருங்க” என்று விஜயகாந்துக்கு உத்தரவு போட்டு உட்கார வைத்து விட்டார்கள். காலை நீண்டு மதியம் ஆகியும் ஷோபா வந்தபாடில்லை. விஜயகாந்துக்கோ வயிற்றைக் குடைகிற மாதிரி பசி. எழுந்து சாப்பிடப் போனார்.
“இப்பச் சாப்பிட போகாதீங்க. ஹீரோயின் அந்த ஷூட்டிங்லேர்ந்து கிளம்பி விட்டார். இப்போது வந்து விடுவார் எனத் தடுத்து விட்டார்கள். பிற்பகல் மூன்று மணி ஆகிவிட்டது. பசி தாங்க முடியாத விஜயகாந்த், கோபமாக எழுந்து போய் உணவைத் தட்டில் வைத்து ஒரு வாய் அள்ளிச் சாப்பிடும்போது வேகமாக ஓடி வந்த புரொடக்சன் மேனேஜர் விஜயகாந்தின் கையைப் பிடித்து எழுப்பினார். “சார் சாப்பாடு எங்கயும் ஓடிராது.. போய் சட்டுன்னு கைகழுவிட்டு ஷாட்டுக்கு வாங்க.. ம்ம்.. சீக்கிரம். ஹீரோயின் வந்தாச்சு.. அவங்க சீனை நடிச்சு முடிச்சுட்டு உடனே கிளம்பிடுவாங்க.. ரீடேக் வாங்க மாட்டாங்க” என்றார்.
“இன்னும் ரெண்டு வாய் சாப்பிட்டுவிட்டு வந்துடுறேன். ரொம்பப் பசிக்குது” என்கிறார். அதெல்லாம் ஆகிற கதையில்ல” என்று கையைப் பிடித்து இழுத்து சென்றார். “ஏங்க மனுஷன் கஷ்டப்படுறது.. சம்பாதிக்கிறது எல்லாமே வயிறாரச் சாப்பிடத் தானேங்க?” என்று அழாத குறையாகக் கேட்டார். எதுவும் காதில் விழாத மாதிரி விஜயகாந்தை இழுத்துப்போய் ஷாட்டில் நிறுத்தினார் அந்த மேனேஜர். பசியை மறைத்துக்கொண்டு நடித்தார்.
“சினிமால எதுக்கு இந்தத் தேவையில்லாத அடாவடித்தனம்.. அதுவும் பசி விஷயத்துல” என்று யோசித்த விஜயகாந்த், அப்போது மனதில் ஒரு சபதம் எடுத்துக்கொண்டார். ‘நான் சினிமா கம்பெனி தொடங்கினால் யாரையும் பட்டினியாக வேலை செய்ய அனுமதிக்க மாட்டேன்’. இன்றைக்கும் ‘விஜயகாந்த் கம்பெனியில் நல்ல சாப்பாடு போடுவார்கள்’ என்று சக நடிகர்களும் சினிமா தொழிலாளர்களும் சொல்லும்படி சாதித்துக் காட்டினார் விஜயகாந்த்.
மனித நேய மனிதர்: அவர் நடித்த முதல் 5 படங்கள் கைகொடுக்கவில்லை. ‘சட்டம் ஒரு இருட்டறை’ திரும்பிப் பார்க்க வைத்தது. ஓவர் நைட்டில் 10 படங்களில் ஒப்பந்தமானார். அவற்றில் சில வென்றன. சில தோல்வியின் விரல் பிடித்து நின்றன. அன்றாடச் செலவுகளுக்கே திண்டாட்டம். அந்தக் காலகட்டத்தில் விஜயகாந்துடன் 10 பேர் இருந்தார்கள். அவர்களுக்குச் சாப்பாடு போட வேண்டிய பொறுப்பும் அவருடையது தான்.
இந்தச் சூழ்நிலையில்தான் ‘முரட்டுக்காளை’ படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க அழைப்பு வந்தது. அப்போது உடன் இருந்த உயிர் நண்பரான இப்ராஹிம் “விஜி.. என்ன கஷ்டம் வந்தாலும் பரவாயில்லே.. நீ வில்லனா நடிக்காதே. நமக்குன்னு ஒரு காலம் வரும்” என்று நம்பிக்கை கொடுத்தார். நண்பனின் பேச்சை விஜயகாந்த் மீறவில்லை. ‘சட்டம் ஒரு இருட்டறை’ மூலம் திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தார் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரன். அவரே அதன் பின்னர் விஜயகாந்துக்குத் தாறுமாறான ஏறு முகம்தான்.
‘பெரிய ரஜினின்னு நினைப்பா?’ என்று முகத்தில் புகைப்படங்களை வீசிய இயக்குநர் விஜயகாந்தை வைத்து வெற்றிப் படம் கொடுத்தார். அவருடன் நடிக்க மறுத்த ஹீரோயின்கள் தேடி வந்து வாய்ப்பினைக் கேட்டுப் பெற்று நடித்தார்கள். அதிரடி ஆக் ஷன் நாயகனாக ரஜினிக்கு அடுத்த நிலையில் விஜயகாந்தை தூக்கி வைத்தனர் ரசிகர்கள். திரையில் மாபெரும் மாஸ் கதாநாயகனாகத் திகழ்ந்த அளவுக்கு அரசியலில் அமைந்த வாய்ப்பு, அடுத்த கட்டத்தை எட்ட முடியாமல் போனதற்குக் காரணம், அவருக்குச் சரியான ஆலோசகர்கள் இல்லாததே.
சினிமாவில் அவருக்காகச் சிந்தித்தவர், கதை கேட்டவர், மேனேஜராக இருந்தவர் எல்லாம் அவருடைய நண்பர் இப்ராஹிம் ராவுத்தர். எம்.ஜி.ஆர். பாணியில் விஜயகாந்துக்கு கதைகள் அமைக்கச் சொல்வார். ரசிகர் மன்றங்களையும் அவ்வாறே உருவாக்கினார்.
தனது ஒவ்வொரு பிறந்தநாள் அன்றும் எளிய மக்களுக்கு நல உதவிகளை வழங்குவதுடன் சமூக நல்லிணக்கம் தழைத்தோங்கக் கூறும் ஓர் அறிக்கையும் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் விஜயகாந்த். அவரால் கல்வி உதவி பெற்று பலர் டாக்டர்களாக, இன்ஜினியர்களாக, வழக்கறிஞர்களாக, ஏன் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளாகக்கூட ஆகியிருக்கிறார்கள்.
90களில் திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்குக் கதவு திறந்து விட்டு அவர்களின் திறமையைப் பயன்படுத்திக்கொண்டார். அவர் நடித்த படங்களில் ‘வைதேகி காத்திருந்தாள்’, ‘உழவர் மகன்’, ‘புலன் விசாரணை’ ஆகியவை வெள்ளி விழா கண்டன. 100 நாள் படங்களின் பட்டியல் பெரியது. வருமான வரி செலுத்துவதில் அத்துறையிடமிருந்து பாராட்டுப் பெற்றவர் விஜயகாந்த்.
நன்றி: இந்து தமிழ் திசை - R. கந்தசாமி

========================================================================

புலியைப் பார்த்து பூனை போட்டுக்கொண்ட சூடு

கடந்த டிஸம்பரில் செல்வாண்ணா தளத்தில் அவர் பகிர்ந்திருந்த திருவெம்பாவை பாடலுக்கு அதுபோலவே இன்றைய வார்த்தைகளில் எழுத முயற்சித்தபோது..!

பாதந்தொழுதால் பாவம் தீர்ப்பார் புலியினுரிதோலார் 
அமுதே அவன் கனியே அவன் என எங்களையும் 
உணர வை திரு உத்தரகோசமங்கையுறை 
திருப்பெருந்துறை சிவபெருமானே - உனைப் 
பணியும் பண்பு கொடு, அன்பு காட்டு உன்னருள் வேண்டி 
அடிதொழுகிறோம் அருள்கொடு ஆண்டவனே...


=============================================================================

OTT  பக்கம் 


ஜியோ ஹாட்ஸ்டாரில் தமிழில் ஜீத்து சதீசன் மங்கலத்து இயக்கத்தில் இந்த மலையாளப் படம் பார்த்தேன்.  நல்லதொரு த்ரில்லர்.  டைம் லாப்ஸ் படம்.  காட்டுக்குள் ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் செல்பவர்களுக்கு அங்கு அவர்கள் கழிக்கும் சில மணிநேரங்கள் அல்லது சில நாட்கள் வெளியில் இருப்பவர்களுக்கு இருபது முப்பது வருடங்கள்.

விருப்பமில்லாமல் நாயகனின் வற்புறுத்தலுக்காகவும் மேலதிகாரியின் கட்டளைக்காகவும் காட்டுக்குள் செல்லும் கடுகடு ரெஜி ஒரு பிணத்தைப் பார்த்து, தன்  குழுவினருக்கு அதை ஆராய கட்டளை இட்டு விட்டு உள்ளே செல்ல, சில காட்சிகளுக்குப் பின் அந்த உடல் ரெஜியின் பிணம்தான் என்று ஆராய்பவர்களுக்கு தெரிய வருகிறது.  

உள்ளே வாக்கி டாக்கியில் உதவி கேட்கும் குரலுக்கு சொந்தக்காரன் பற்றி வெளியில் உள்ள போலீசிடம் விவரம் விசாரித்தால் அவர் முப்பது வருடங்களுக்கு முன் இந்த கானகத்தில் காணாமல் போனவர் என்று தெரிய வருகிறது.  நாயகனின் அப்பா இறந்த உடன்தான் நாயகன் பிறக்கிறான்.  ஆனால் நாயகன் அந்த கானகத்துக்குள்ளிருந்து தன் அப்பாவை மீட்கிறான்.  ஒருவழியாய் சிக்கல்களை முடிச்சவிழ்த்து நாயகன் மீளும்போது..  ஆம்,  புதிய எதிர்பாரா திடுக்கிடும் சிக்கல் வருகிறது..  அது என்ன என்று இரண்டாம் பாகம் வந்தால் தெரியும் என்று காத்திருக்க வேண்டும்.

சிக்கலான கதை.

பார்த்து குழம்புங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்!

=============================================================================












4 கருத்துகள்:

  1. இன்றைய வியாழன் பகுதியில் நிறைவான பல பகுதிகள் இருக்கின்றன. ஆசிரியர் வரைதான் படித்திருக்கிறேன்.

    நேர்மறைச் செய்தி தலைப்பைப் பார்த்ததும் ஒரு காலத்தில் சனிக்கிழமையின் பாதிப் பகுதியை அத்தகைய செய்திகள் எடுத்துக்கொண்டது நினைவுக்கு வந்தது

    பதிலளிநீக்கு
  2. பில்லையும் பொருட்களையும் சரி பார்ப்பது நல்ல வழக்கம். இல்லையெனில் ஏமாற நேரிடும்.

    இரண்டு நாட்கள் முன்புதான் நேரில் பத்திரிகை கொடுப்பது எவ்வளவு சிரம்ம் மற்றும் என் அனுபவத்தைச் சொல்லிக்கொண்டிருந்தேன்.

    நல்லவேளை... உள்ளூர்.. காலாகாலத்துக்கு சட்னு ஹோட்டலில் நுழைந்து சாப்பிட்டுவிடலாம்.

    பதிலளிநீக்கு
  3. நல்ல ஆசிரியர் மாணவன் நினைவிலிருந்து என்றும் மறைய மாட்டார், நம்மை அந்தச் சமயத்தில் நம் தவறுகளுக்காக வெளுத்திருந்தாலும்.

    ஆசிரியப் பணி அறப் பணி. அவரது அனுபவங்கள் ரசனை. இதைப் பற்றி பிறகு வந்து எழுதுகிறேன்.

    பதிலளிநீக்கு
  4. கூறாமல் சன்னியாசம் கொள் என்பதை அந்த எகிப்திய கணவன் அறிந்திருக்கவில்லை போலிருக்கிறது.

    அழகிய பெண். நாகத்தின் நச்சு எண்ணம்.

    நம்மூரிலும் கணவன் செய்யும் அறமற்ற செயல்களை, நல்லவேளை பெண்கள் பொறுத்துக்கொண்டு செல்கிறார்கள். இல்லைனா நம் எல்லோருக்கும் என்னென்ன அனுபவங்கள் கிடைத்திருக்குமோ..

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!