டிரைவரின்
நல்லவராக இருக்கலாம். நல்லவராக இருக்க முயற்சிப்பதும், நல்லவராக காட்டிக் கொள்வதும்தான் எரிச்சல் தருகிறது. ஒருவருடைய இயல்பான குணத்தை மறைக்காமல் அப்படியே விட்டு விட்டால் நாமும் புரிந்து கொள்வோம், இவர் இப்படிதான் என்று. அதின்றி உள்ளே ஒரு முகம் வெளியே ஒரு முகம் என்று காட்டும்போதுதான் சங்கடம்.
ஒரு வகையில் எல்லோருமே அப்படிதான் என்றாலும் சில நேரங்களில் எல்லை மீறி படுத்துகிறது.
இன்னொரு சம்பவம்.
என் வீட்டிலிருந்து வெளியூர் செல்ல பைபாஸ் பிடிக்க இடதுபுறம் திரும்பிச் சென்றால் ஒரு சாலையை அடைந்து எதிர்ப்புறச் சாலையைப் பிடிக்க யு டர்ன் போட ரொம்ப தூரம் சென்று திரும்ப வேண்டும். வலது புறம் சென்றால் இதே சாலையை மறுபடி பிடித்து அதே போல சென்று திரும்ப வேண்டும், அல்லது தாண்டிச் சென்று கொஞ்ச தூரத்தில் இடது புறம் திரும்பினால் யு டர்ன் போடாமல் டோல் சாலையைப் பிடித்து விடலாம்.
நான் ஏதோ நினைவில் 'வலதுபுறம் சென்று செல்லலாம்' என்று சொன்னதும் ஒரு கணம் தயங்கி ஓ'கே சார்' என்று ஓட்டிக்கொண்டு வந்தார். திடீரென எனக்கு ஞானோதயம் வந்து 'இந்தப் பக்கமாகச் சென்றால் டோல் சாலையையே பிடிக்கலாமே' என்றேன். ".ஆமாம்ல. " என்றவர் சுதாரித்து, "அதுதான் சார் நானும் நினைத்தேன்.. நீங்கள் இந்தப் பக்கம் என்று சொன்னதும் உங்கள் விருப்பம் என்று வந்தேன்" என்றார்.
எரிச்சலை அடக்கிக் கொண்டு "இந்தப் பக்கமாகவே ஓட்டுங்கள். காலை நேரம் டிராஃபிக் இருக்காது. வண்டிகளும் இருக்காது. அப்படியே டோல் அருகே குறுக்கே க்ராஸ் செய்து கொள்ளலாம்" என்று சொன்னேன். "ஓகே சார்.. அது கூட நான் நினைத்தேன். நீங்கள் சொன்னால் சரிதான்" என்றார்.
நான் சொன்னேன், "இதோ பாருங்கள். நான் பயணி. நீங்கள் டிரைவர். தினசரி பல்வேறு ரூட்டுகளிலும் செல்லும் உங்களுக்குதான் பாதைகள் பற்றி நன்கு தெரியும். இதில் எஜமான-ஊழிய விசுவாசம் தேவையில்லை. நான் தவறாகச் சொல்லலாம். நீங்கள் சொன்னால் என் தவறை நான் ஒத்துக்கொண்டு திருத்திக் கொள்வேன்" என்றேன்.
"நீங்க சொன்னா சரிதான் சார்"
இன்னொரு டிரைவர் வருவார். தேவைக்கு மட்டும்தான் பேசுவார். ரொம்ப சிரிக்க மாட்டார். ரொம்ப பணிய மாட்டார். ஆனால் காசு அதிகமாய் வாங்குவார். சில அநியாய கட்டணங்கள் உண்டு.
- அனுபவங்கள் தொடரும் -
====================================================================================
வாலியின் வேண்டுகோளுக்காக பாடாத பாடலைப் பாடிய டி எம் எஸ் மற்றும் 'நீ வருவாய் என நான்' பாடல். காணொளியில் சொல்லாத தகவல் நான் பாடும் பாடல் படத்தில் இந்தக் காட்சி படமாக்கபப்ட்டிருக்கும்.
======================================================================================
சென்ற வார குறுக்கெழுத்துப் போட்டியின் விடை :
===========================================================================================
அறம் சார்ந்த நம்பிக்கைகள் பற்றி சோ..
=======================================================================================
'என்றென்றும் சிவாஜி' என்னும் FaceBook பக்கத்தின் இந்த அரிய படம் கிடைத்தது!
========================================================================================
MVV கதை விமர்சனம் ஒன்று - இணையத்திலிருந்து..
பைத்தியக்காரப் பிள்ளை..
இக்கதைத் திரு எம்.வி. வெங்கட்ராம் அவர்களால் இயற்றப்பட்டது. புதுமையாக இருந்தது படிப்பதற்கு. ஏனென்றால் இப்படியும் ஓர் தாய் இருக்க முடியுமா என்று படிப்பவரின் மனதில் ஓர் எண்ணம் உண்டாகும். ஏன் அவனது தாய் அப்படி மாறினாள் என்பதைத் தெளிவாகத் தன் எழுத்துக்கள் மூலம் நம் அனைவரின் மனதில் பதியும்படி கொடுத்திருப்பார்த் திரு எம்.வி.வெங்கட்ராம் அவர்கள். இக்கதையைப் படிக்கும் போது ஒருத் தகப்பனானவன் எப்படி நடக்கக் கூடாது என்பதையும் மற்றும் தாய் எப்படி இருக்கக் கூடாது என்பதையும் தன் எழுத்தின் மூலமாக ஆணித்தரமாக எடுத்துக் கூறியிருப்பார்.
ராஜம் கதையின் நாயகன் அவனுக்குத் தற்போது இருபத்தி ஐந்து வயது ஆகிறது. அவனுடன் மொத்தம் பிறந்தவர்கள் ஒன்பது பேர். அதில் நான்கு நபர்கள் ஆண் பிள்ளைகள் மற்றும் ஐந்து பேர்ப் பெண் பிள்ளைகள். இவரது தந்தைக்கு நெசவுத் தொழில். தினம் அவனது தந்தை கள்ளுக்கடைக்குப் பேய்க் கள்ளுக் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தன் மனைவியை மாடு அடிப்பது போல் அடித்துத் துன்புறுத்துவார். அவனது தாய்ப் பொருத்துப் பொருத்துப் பார்த்துப் பொறுமையின் எல்லையைக் கடந்தபின் தன் கணவனைத் திருப்பி அடிக்க, கடிக்க ஆரம்பித்தாள். அதற்குப் பிறகு சிறிது நேரம் கழிந்தவுடன் ராஜத்தின் தகப்பன் அவரது மனைவியைக் கொஞ்சுவதின் மூலம் ஒன்றன் பின் ஒன்றாகப் பிள்ளைகள் வரிசையாகப் பிறந்தனர். அனைவருக்கும் மூத்தவன் ராஜம்தான். தினம்தோறும் அவர்களது வீட்டில் சண்டையும் சச்சரவுமாகத்தான் இருக்கும். இதைப் பார்த்துப் பார்த்து வளர்ந்த ராஜம் தன் தாய் மீது இருந்த பாசத்தை முற்றிலும் குறைத்துக் கொண்டான். அவனின் தாயும் அதற்கு ஆமோதிக்கிற மாதிரி எப்போதும் அவனைத் திட்டித் தீர்ப்பாள். அவன் காலை எழுந்தவுடன் தன் தாய் மூஞ்சியைப் பார்த்துவிடக் கூடாது என்று எண்ணிக் கண்களை மூடிக்கொண்டு சுவரில் இருக்கும் கண்ணாடியைப் பார்ப்பது வழக்கமாக வைத்திருந்தான்.
ஒரு நாள் அப்படிதான் விடியற்காலைப் பக்கத்து வீட்டுச் சேவல் கூவுவதைக் கேட்டு எழுந்தான் படுக்கையை விட்டு. மணியைப் பார்த்தான் விடியற்காலை நாலே கால் ஆகியிருந்தது. எங்கே சத்தம் போட்டால் தன் தாயானவள் எழுந்துச் சண்டை இழுப்பாளோ என்று நினைத்து மெதுவாக வீட்டின் முகப்புப் பக்கம் வந்தான். காலையில் ஒரு காபிக் குடித்து விட்டு வேலைக்குச் செல்லலாம் என்று எண்ணினான். அப்போது அவனது தாய் எழுந்து அவனிடம் பஞ்சாமிக் கடையில் ஒரு தோசையும், டம்ளரில் சாம்பாரும் வாங்கிவரும்படி கூறினாள். இவன் முடியாது பஞ்சாமிக் கடையில் டம்ளரில் சாம்பாரெல்லாம் தரமாட்டார்கள் என்றான். இருவருக்கு இடையே வாக்குவாதம் அதிகமாக அது சண்டையில் முடிந்தது. அவனது அம்மா அவனிடம் பக்கத்து வீட்டுப் பெண்ணுடன் பேச முடியும் அவளுக்கு வேண்டும் என்று எனக்குத் தெரியாமல் சேலை, தாலி, ரூபாய் எல்லாம் சேர்க்க முடிந்த உனக்குஅம்மாவுக்கு தோசை மற்றும் சாம்பார் வாங்க மனம் மறுக்கிறது என்றாள். பிறகு இவளிடம் வாயைக்கொடுத்து வெற்றிகாண முடியாது என்று எண்ணி வீட்டினுள் அவனே போய் டம்ளரை எடுத்து வாசல் பக்கம்வந்தான்.
இவனது கடைசித் தங்கை பிறந்த சில காலங்களில் ராஜத்துடன் அப்பா தவறிவிட்டார். கள்ளுக் குடித்துவிட்டு வழக்கம் போல் தன் மனைவியிடம் சண்டை இருத்து மறுபடியும் அளவுக்கு அதிகமாகச் சாராயம் குடித்ததால் சுயநினைவை இழந்து மயங்கிக் கீழே விழுந்து உயிரைவிட்டார். அவர் மறைவுக்குப் பிறகு தறியை ஓட்டுவது ராஜம்தான். எப்படியோ மூன்று தங்கைகளுக்குத் திருமணத்தை நடத்திவைத்தான் ராஜம். மிஞ்சியிருப்பது இரண்டுத் தங்கைதான்.
வாசல் பக்கம் போன அவனிடம் சாரங்கன் என்ன ராஜம் காலையில் வெளியே கிளம்பிவிட்டாயா என்றான். எங்கே அவனது தாய்ப் போட்டச் சத்தத்தால்தான் சாரங்கன் எழுந்து இங்கு அமர்ந்திருக்கிறானோ என்று நினைத்தான். அவன் கேட்டக் கேள்விக்குப் பதிலாகக் கடைக்குப் போய் ஒரு காபிக் குடித்துவிட்டு வந்து தறிவேலையில் அமரலாம் என்று எண்ணி வெளியே கிளம்புகிறேன் என்றான். சாரங்கன் உடனே அவனிடம் கடைவீதியில் அவனுக்கு இரண்டு இட்டலி மற்றும் டம்ளரில் சாம்பார் வாங்கிவரச் சொன்னான்.
ராஜம் கடைவீதிக்குப் போய்க் காபிக் குடித்துவிட்டுச் சாரங்கனுக்கும் அவனது தாயுக்கும் வேண்டியதை வாங்கிக்கொண்டு வந்து வீடு சேர்ந்தான். ஆனால் அவனது அம்மாவோ அவன் வாங்கி வந்த தோசையை மற்றும் சாம்பாரைச் சாப்பிடாமல் மீண்டும் அவனுடன் சண்டையை ஆரம்பித்தாள். கொண்டுபோய் உன் பங்கஜத்திடமே கொடு நான் சாப்பிட மாட்டேன். தாயிக்குச் சாப்பாடு வாங்கிவரச் சொன்னால் என்னிடமே ரூபாய்க் கேட்கத் தோன்றுகிறது உனக்கு. அதுவே உனக்கு மனைவியா வற்றப்போகிறவளுக்குப் பெட்டியில் காசு, தங்கத்தாலி, புடவை அனைத்தையும் பூட்டிவைக்கத் தெரியும் என்றாள். இவனுக்குப் பெருத்த கோபம் வந்தது, தன்னிடம் கேட்காமலே தன் பெட்டியை எப்படித் திறந்துப் பார்க்கலாம் என்றான். அதற்கு இந்த வீட்டில் இருக்கும் பெட்டியைப் பார்ப்பதற்கு யாரிடம் கேட்கவேண்டும் என்றாள் அவனது தாய்.
பிறகு அவனது தங்கையை அழைத்துக்கொண்டு தறி நெய்வதற்குச் சென்றான். அவனது தங்கை அவனுடன் சேர்ந்து வேலைச் செய்து கொண்டிருக்கையில் . அவனது தாய் அவளது மகளைக் கூப்பிட்டாள். இரண்டு முறை கூப்பிட்டப் பிறகு தங்கை பயந்துகொண்டு தாய் இருக்கும் இடத்திற்குச் சென்றாள். இவன் ஏன் இவளை இப்படி வேலை நேரத்தில் கூப்பிடுகிறாய் என்றான். பக்கத்துத் தெருவில் இதே வேலைக்கு முன் பணமாக நூறு ரூபாய் தருகிறார்களாம். அதனால் இனிமேல் உன் தங்கை அங்குதான் வேலைக்குப் போகப் போகிறாள் என்றாள். இவன் நான்தன் இவளை என்னுடன் ஒத்தாசைக்காக வைத்திருக்கிறேனே பிறகு ஏன் இவள் மற்ற இடங்களில் போய் வேலைச் செய்ய வேண்டும்.
நீ எப்படி உன் திருமணத்திற்குப் பணம் சேர்த்து வைத்துள்ளாயோ அதேபோல் உன் தங்கை சம்பாதித்து என்னிடம் கொடுப்பாள். நான் அவளுக்கு வேண்டியதைச் சேர்க்கப் போகிறான் என்றார். ராஜத்துக்கு இவளது உள் நோக்கம் புரிந்தது. தன்னிடம் இருக்கும் பணம், தங்கம், அனைத்தையும் பெறுவதற்கு இப்படி ஒரு செயலைச் செய்கிறாள் என்று நினைத்து. தன்னிடம் இருக்கும் அனைத்தையும் தன் தங்கையிடமே கொடுத்துவிட்டான். பெட்டியின் சாவியை அவன் அவளிடம் கொடுத்து எல்லாம் உனக்கே என்று கூறி விரக்தியுடன் வெளியே போனான்.
வெளியே போனவன் வீடு திரும்பினானா? அவன் எண்ணிய மாதிரி பங்கஜத்தை கைப்பிடித்தானா? என்ன நடந்தது ராஜத்துக்கு? முழுவதையும் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
-பாலமுருகன்.லோ-
======================================================================================
கவிதைப் பக்கம் : கண்ணதாசன்
மலைகள் உண்டு அதனை மறைக்கின்ற முகில்கள் உண்டு
கொடிகள் உண்டு அதையும் வளைக்கின்ற இடைகள் உண்டு
மின்னி மின்னி துடிக்கின்ற விழிகள் உண்டு
பின்னி பின்னி இழுக்கின்ற இதழ்கள் உண்டு
எண்ண எண்ண ஆசைகள் பிறப்பதுண்டு
இன்னும் சொல்ல நினைத்தால் தணிக்கை உண்டு
கடைசி வரியை கவனியுங்கள்!
இன்னும் சொல்ல நினைத்தால் தணிக்கை உண்டு
கண்ணதாசன்.
உள்ளத்தில் பாசம் உண்டு ஊமைக்குத் தெரியும்
ஊமையின் பாஷை இங்கு யாருக்குப் புரியும்?
காட்டு மனமிருந்தால் கவலை வளர்ந்துவிடும்
கூட்டை திறந்து விட்டால் அந்த குருவி பறந்து விடும்
காலில் விலங்கும் இட்டோம் கடமை என அழைத்தோம்
நாலு விலங்குகளில் தினம் நாட்டியம் ஆடுகின்றோம்..
கூட்டை திறந்து விட்டால் அந்த குருவி பறந்து விடும்
காலில் விலங்கும் இட்டோம் கடமை என அழைத்தோம்
நாலு விலங்குகளில் தினம் நாட்டியம் ஆடுகின்றோம்..
எண்ணம் என்ற ஏடெடுத்து எழுதும் பாடலிலே தலைவி
இல்லறத்தில் நல்லறத்தைத் தேடும் வாழ்க்கையிலே துணைவி
அன்பு என்ற காவியத்தின் நல்ல ஆரம்பமே வருக
முன்னுரைத்த காதலையே உந்தன் முடிவுரையாய் தருக
=================================================================================
பாஸ்கர தொண்டைமான்
ரிவின்யூ டிபார்ட்மெண்டில் எது எடுத்தாலும் தாமதம். எல்லாம் சிவப்பு நாடா செய்கிற காரியம் என்றெல்லாம் புகார் சொல்பவர்கள் இருக்கிறார்கள். உண்மைதான் விஷயங்களை மனிதத் தன்மையோடு அணுகத் தெரியாதவர்களே இந்த சிவப்பு நாடாவைச் சுவைத்துச் சுவைத்து இன்பம் காண்கிறவர்களாயிருப்பார்கள்.
அவிழ்க்க முடியாத முடிச்சுடன் போராடுவதை விடுத்து அதை வெட்டி எறியத் தெரிந்தவர்களே உத்தியோகத்தில் வெற்றி காணத் தெரிந்தவர்கள் என்று கூறுவேன் நான். ஒரு கிராமத்தில் பிள்ளைகளுக்குப் பள்ளிக்கூடம் இல்லை. ஒன்றரை மைல் தூரத்திலுள்ள அடுத்த கிராமத்தில் உள்ள பள்ளிக்கூடத்திற்கே பிள்ளைகள் எல்லாம் சென்று வரவேணும். ஊருக்கு மேல்புறம் ஒரு பெரிய ஏரி. அந்த ஏரியின் மறுகால் ஊரை அடுத்து இருக்கிறது.
அதில் வருஷத்தில் எட்டு மாதங்கள் முட்டளவு தண்ணீர் இருக்கும். இந்தத் தண்ணீருக்குள் இறங்கியே சிறு குழந்தைகள் எல்லாம் அடுத்த கிராமத்தில் உள்ள பள்ளிக்குச் செல்ல வேணும். இந்த மறுகாலில ஒரு சிறு பாலம் கட்ட கிராமத்தார் பத்து வருஷ காலமாக முயல்கிறார்கள். ஜில்லா போர்டில் அந்தக் கிராமத்தில உள்ளவர்கள் செல்வாக்குடையவர் களாக இல்லாத காரணத்தால் பாலம் கட்டப்படவில்லை. பின்னர் வட்டார அபிவிருத்தித் திட்டத்தின் கீழும் இப்பாலம் கட்ட முயன்றிருக்கிறார்கள். வட்டார அபிவிருத்தி அதிகாரி பாலத்தின் அவசியத்தை உணர்ந்திருக்கிறார்.
ஆனால் அதற்கு வட்டார அபிவிருத்திப் பணத்தில் ஐம்பது சதவிகிதம்தான் செலவு செய்தல் கூடும். மீதப் பாதியைக் கிராமத்தார் இருபத்து ஐந்து சதவிகிதமும் ஜில்லா போர்ட் இருபத்து ஐந்து சதவிகிதமும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது சட்டம். அந்த ஜில்லா போர்டிலோ வரவுக்கு மேல் செலவு. ஆதலால், எந்த வேலைக்கும் ஜில்லா போர்டார் உதவித் தொகை கொடுத்தல் கூடாது என்பது சர்க்கார் உத்தரவு. இது காரணமாக எனக்கு முன்னிருந்த கலெக்டர் ஜில்லா போர்டாரிடம் உதவித்தொகை கேட்டு கலெக்டர் ஹோதாவில் கடிதம் எழுதுவார். பின்னால் அவரே ஜில்லா போர்ட் ஸ்பெஷல் ஆபிசர் ஹோதாவில் சர்க்கார் உத்திரவைக் குறிப்பிட்டு உதவித் தொகை கொடுத்தல் இயலாது என்று கலெக்டருக்குப் பதில் எழுதுவார். இப்படியே சிவப்பு நாடா வேலை செய்து கொண்டிருந்தது
இந்த விவகாரத்தில். நான் வேலை ஏற்ற பின் ஒருநாள் இந்தக் கிராமத்திற்குச் சென்றிருந்தேன். பாலம் கட்டவேண்டிய அவசியத்தை உணர்ந்தேன். ஆபீஸ் கட்டுகளைப் புரட்டி இதுவரை நடந்திருந்த விவகாரங்களையும் படித்துப் பார்த்தேன். வட்டார அபிவிருத்தி அதிகாரியும், மற்றவர்களும் "ஜில்லா போர்ட் உதவித் தொகை இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது” என்றனர். அந்தத் தொகையையும் சேர்த்துக் கிராமத்தார்களே கொடுத்தல் இயலாது என்பதையும் கண்டேன். ஓர் இரவு முழுவதும் யோசித்தேன்,
மறுநாள் காலையில் எஞ்சினீயரைக் கூப்பிட்டு அனுப்பினேன்.
ஆமாம், இந்த வேலையை வட்டார அபிவிருத்தி வேலையாகச் செய்ய வேண்டாம் ஜில்லா போர்ட் வேலையாகச் செய்ய ஏதாவது ஆக்ஷேபனை உண்டா? என்றேன்.
ஆக்ஷேபணை இல்லை. ஆனால் அதற்குரிய எட்டாயிரம் ரூபாயை ஜில்லா போர்டிலிருந்து கொடுத்தல் இயலாதே என்றார்.
சரி, எஸ்டிமேட்டை என்னிடம் கொடுங்கள் என்றேன்.
கிராமத்துக்காரரில் ஒரு பெரிய பிரமுகரைக் கூப்பிட்டனுப்பினேன்.
அவரிடம் கண்டிராக்டை ஒப்புவிப்பதாகச் சொன்னேன். கிராமத்தார் சேர்த்து வைத்திருக்கும் இரண்டாயிரம் ரூபாய் பெறுமான கற்களையும் எடுத்துக்கொண்டு, ஜில்லா போர்டிலிருந்து ரூ 4000 மும் பெற்றுக் கொண்டு வேலையை முடியும் என்றேன்.
அப்படியே வேலையும் இரண்டு மாத காலத்தில் முடிந்துவிட்டது. பாலத்தின் திறப்பு விழாவையும் 'ஜாம் ஜாம்' என்று நானே முன்னின்று நடத்திவிட்டேன்.
இதையெல்லாம் பார்த்த எஞ்சினீயர் சொன்னார் “சார், நாங்கள் எல்லாம் காலுக்குத் தக்கபடி செருப்பைத் தறி" என்றோம். தாங்களோ செருப்புக்குத் தக்கபடி காலைத் தறி என்று சொல்லிக் காரியத்தை முடித்துவிட்டீர்கள் என்று குறைபட்டுக் கொண்டார்.
"சரிதான் ஐயா! சிவப்பு நாடாவை வெட்டித் தள்ளத் தெரியவேண்டும். அதற்கு மனிதாபிமானம் வேண்டும். அந்த மனிதாபிமானம் உடையவர்களாய் அதிகாரிகள் வாழ வேண்டும். அதுவே வெற்றியின் ரகசியம்" என்றேன்.
ஒரு நல்ல காரியத்தை எப்படியோ செய்து முடித்தோம் என்ற திருப்தி இருந்தது எனக்கு. அது போதாதா?
இன்னும் ஒரு சந்தர்ப்பம் நான் வேலை பார்த்த மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் தோல் பதனிடும் தொழில் சிறப்பாக நடந்தது. அங்கு முதலாளிமார் எல்லாம் முஸ்லீம் சகோதரர்கள். கூலி வேலை செய்பவர்கள் எல்லாம் ஹரிஜனங்கள்
இருவருக்கும் இடையே எவ்வளவோ தகராறுகள். பல வருஷங்களாக 'போனஸ்' கொடுபடவில்லை. இதற்கெல்லாம் தொழிலாளிகள் லேபர் கோட்டுக்குப் போவார்கள். அவர்களுக்கு அனுகூலமாகத் தீர்ப்புக் கூறப்படும். அதை எதிர்த்து முதலாளிகள் அப்பீல் பண்ணுவார்கள். அப்பீல் முடியும்வரை தொழிலாளர் குறைகள் நீங்காது. இந்த நிலையில் தொழிலாளர்கள் ஒரு நாளைக் குறிப்பிட்டு அன்றிலிருந்து வேலை நிறுத்தம் பண்ணப் போவதாக நோட்டீஸ் கொடுத்துவிட்டார்கள். இதைச் சாக்காக வைத்துக்கொண்டு அக்கிராமத்தில் இந்து முஸ்லீம் கலகம் ஏற்படலாம் என அரசியல்வாதிகள் பீதியை வேறே கிளப்பிவிட்டுவிட்டனர்.
நான் கிராமத்திற்குச் சென்றேன். நிலைமையை அறிந்தேன். முதலாளிமார் கையாளும் கோர்ட்டு நடவடிக்கைகளையும் புரிந்துகொண்டேன். இரண்டு கட்சிக்காரர்களையும் தனித்தனியே அழைத்து அவர்கள் வாதப் பிரதிவாதங்களையும் கேட்டேன். பின்னர் முதலாளிமார் பிரதிநிதிகளைச் சந்தித்து இருக்கும் நிலையை விளக்கினேன். கோர்ட்டு நடவடிக்கைகளைக் காட்டிக் காட்டி போனஸ் கொடுப்பதை நாலு வருஷம் தள்ளிப் போட்டது தவறு என்றேன். இரண்டு வருஷத்து போனஸையாவது உடனடியாகக் கொடுக்க ஒப்புக் கொண்டால் நான் தலையிட்டு தொழிலாளர்களை வேலைநிறுத்தம் நோட்டீசை வாபஸ் பெறச் சொல்கிறேன் என்றேன். முதலாளிமார் இந்த ஏற்பாட்டிற்கு இணங்கினார்கள்.
"சமாதான உடன்படிக்கையின் ஷரத்து தெரியாமலே எப்படி சார் தொழிலாளர்கள் பணிமுடக்கம் நோட்டீஸை வாபஸ் பெற்றார்கள்" என்று அதிசயித்தார்.
"உன்படிக்கை ஷரத்து என்ன என்று தெரியலாமோ" என்று என்னிடம் கேட்டார்.
அவருக்குமே 'பெப்பே' என்று சொல்லிவிட்டேன். ஏமாற்றத்தோடேயே திரும்பினார் என்றாலும் போகும் போது 'இது உங்களுக்கு ஒரு பெரிய வெற்றி சார்' என்று சொல்லிவிட்டே சென்றார்.
சும்மா சட்டத்தையே சுட்டிக்காட்டிக் கொண்டிருக்காமல் மனிதாபிமானத்தையே முக்கிய குறிக்கோளாகக் கொண்டு காரியங்களைக் கவனித்தால் எந்தச் சிக்கலையும் எளிதாகத் தீர்க்கலாம் என்பது என் நம்பிக்கை.
இன்னும் மோட்டார் ரூட்டிற்குப் பெர்மிட் வழங்குதல், சினிமாக் கொட்டகைக்கு லைசென்ஸ் வழங்குதல், ரைஸ் மில்களுக்கு லைசென்ஸ் வழங்குதல் எல்லாம் கலெக்டர்களுக்கு இப்போது எவ்வளவு தலைவலியைக் கொடுக்கிறது, அதில் அரசியல்வாதிகளின் தலையீடு எவ்வளவு தூரம் நியாயம் வழங்குவதை பாதிக்கிறது என்பதைப் பற்றி எல்லாம் விரிவாகவே நான் கூறுதல் கூடும்.
என்றாலும் அவைகளைப் பற்றி இக்கட்டுரையில் ஒன்றும் கூறுவதாக இல்லை. நான் ஓய்வு பெறவதற்கு ஒன்றிரண்டுமாதங்களுக்கு முன்னே நான் நடத்திய ஒரு நாடகத்தைப் பற்றி மட்டும் ஒரு சில வார்த்தைகள் சொல்லிவிட்டு நிறுத்திக் கொள்கிறேன்.
நாடகத்திற்குத் தலைமை தாங்க முதலமைச்சரை அழைத்தேன். நாடகத்தை நானே எழுதினேன். 'சர்க்கார் சேவகம் அன்றும் இன்றும்' என்று நாடகத்திற்குப் பெயர் சூட்டினேன். அன்று அதிகாரிகள் எல்லாம் மக்கள் பேரில் அதிகாரம் செலுத்தி ஆண்டார்கள் என்பதை விளக்கிய தோடு, இன்று மக்கள் எப்படி அதிகாரிகள் பேரில் குதிரை ஏறுகிறார்கள், அதற்கு அரசியல்வாதிகள் எப்படி எப்படி எல்லாம் உதவுகிறார்கள், நிர்வாகத்தில் அவர்கள் தலையிட்டு எப்படி குட்டையைக் குழப்பு கிறார்கள் என்றெல்லாம் காட்டினேன். ஏன்? சொல்லப்போனால், நானே ஒரு ரிட்டயர்டு தாசில்தார் வேடம் தாங்கி நடித்தேன்.
நாடகம் இரண்டு மணி நேரம் நடந்தது. வந்திருந்த மக்கள் எல்லாம் சிரித்துச் சிரித்து வயிறு புண்ணாயினர். கடைசியில் நான் பேசும் போது “நாங்கள் எல்லாம் வருஷம் 365 நாளும் ஆபிஸ் பேப்பர்களையே கட்டிக்கொண்டு அழுகிறவர்கள். அப்படி அழப் பிறந்தவர்கள் ஒரு நாளாவது சிரித்து மகிழலாமே என்று எண்ணினோம். நாங்கள் சிரிப்பதுடன் உங்களையும் சிரிக்க வைக்கலாமே என்றுதான் விரும்பினோம். எங்கள் எண்ணம் எவ்வளவு தூரம் நிறைவேறி இருக்கிறது என்பதை நீங்கள் சிரித்துச் சிரித்து எங்களுக்கு உற்சாக மூட்டியதிலிருந்து தெரிந்து கொண்டேன். நாடகத்தில் நல்ல நடிப்பு இருந்தது என்றால் பாராட்டுகளை நடித்த நண்பர்களுக்குக் கொடுத்து விடுங்கள். ஏதாவது குறையிருந்தால் அதை எனக்குத் தள்ளுங்கள். நான்தான் இந்த நாடகம் எழுதியவன்" என்று கூறினேன்.
தலைமை வகித்த முதலமைச்சர் நடிகர்களை எல்லாம் பாராட்டி விட்டுச் சொன்னார். "தொண்டைமான் சிறந்த ஒரு எழுத்தாளர், பேச்சாளர் என்பதை எல்லோரும் அறிவோம். ஆனால் அவர் ஒரு சிறந்த நடிகரும் கூட என்பது எனக்குத் தெரியாது. மிகவும் நன்றாக நடிக்கிறார். மற்றவர்களையும் நடிக்கப் பழக்கியிருக்கிறார். இப்படி ஒரு நாடகத்தை எழுதி அதை நடிக்க வெறும் திறமை மட்டும் போதாது. மிக்க துணிச்சலும் வேண்டும். அது அவரிடத்தில் நிறைய இருக்கிறது. இந்த எழுத்தாளர் கலெக்டரை நான் பாராட்டுகிறேன்" என்று முடித்தார்.
பி.கு. அப்போது முதலமைச்சராக இருந்தவர் பெருந்தலைவர் காமராஜர்.
=========================================================================
இரண்டு குறிப்புகளுடன் தான் பால்யத்தில், அதாவது திருமணத்துக்கு முன் எழுதிய கவிதையை எடுத்து அனுப்பி இருந்தார் அப்பா.
பாஹே பக்கம் :
மிஸ்ஸியம்மா - இனி இதுபோல வருமா? நிறைய காபி அடித்து எடுத்திருந்தாலும் மிஸ்ஸியம்மா மிஸ்ஸியம்மாதான்!
1955 ம் வருடம் வெளிவந்த சூப்பர் டூப்பர் ஹிட் படம். இப்போது வெளியானாலும் ஹவுஸ்ஃபுல்லாக ஓடும்.
இந்தப் படத்தின் எல்லா பாடல்களுமே இனிமை, அருமை, ஹிட். எல்லோரும் ப்ருந்தாவனமும், மாயமே நானறிவேன், எனை ஆளும், பழகத்தெரிய வேணும், அறியா பருவமடா,வாராயோ வெண்ணிலாவே பற்றி எல்லாம் சொன்னாலும் இந்தப் பாடலை எத்தனைபேர் ரசித்திருக்கிறீர்கள்?
நான் ரசிக்கும் பாடல். S. ராஜேஸ்வரராவ் இசை. தஞ்சை ராமையா தாஸ் பாடல்.
எவ்வளவு இளமையான, ஒல்லியான சாவித்திரி, R. கணேஷ் பாருங்கள்.





.png)


கவிதைப் பக்கத்தில் தெய்வத்தின் பேரைச் சொல்லி தேவியைத் தேடு பாடலில் வரும் வரிகள் வருகின்றனவா?
பதிலளிநீக்குவாங்க நெல்லை... இல்லை.. அது பாட்டும் பரதமும். இது அவன்தான் மனிதன்.
நீக்குகண்ணதாசன் பாடல்களில் மிகப் பிடித்த பாடல் மன்னிக்க வேண்டுகிறேன்.
பதிலளிநீக்குபல ப வரிசைப் படங்களில் கண்ணதாசன் மட்டுமே எழுதி இருப்பார்.
வாங்க வல்லிம்மா.. ஆமாம்.. அது ஒரு வலிய கண்ணதாசன் காலம்.
நீக்குஎங்களுக்கும் சென்னை வந்த போது அமைந்த
பதிலளிநீக்குஓட்டுனர், படுத்தி எடுத்துவிட்டார். வாய் ஓயாத பேச்சு. இல்லாவிட்டால் வாய் நிறையப்
புகையிலை. அவசரமாகப் பேச வேண்டிய குடும்ப விஷயங்களில் அவரும் ஒபினியன்
கொடுப்பார்:)
பிறகு கம்பெனிக்குத் தொலைபேசி, மாற்றினோம்.
எங்கள் டிரைவரிடமும் இதே பிரச்னை இருக்கிறது. ஆனால் குறுக்கிட மாட்டார். திடீரென வண்டியை நிறுத்தி "இதோ.. மேடம் கேட்ட கடை... என்மேல தப்பில்லைப்பா.. (என்னைச் சொல்கிறாராம்) அப்புறம் மேடம் கோச்சுப்பாங்க.."
நீக்குவரும் எரிச்சலைக் காட்டிக் கொள்ள முடியாதாக்கும்.. ஏனெனில் அநியாய டிரைவர் கிடைக்கும் இந்நாளில் இப்படி அசட்டு டிரைவர் கிடைத்தாலும் நியாயமாக இருப்பார் சில விஷங்களில். நம்பத் தகுந்தவர்.
மிஸ்ஸியம்மா ஒரு பதினைந்து தடவையாவது பார்த்திருப்பேன்.
பதிலளிநீக்குமாயா பஜார் மாதிரி இன்னோரு சந்தோஷ சாவித்திரி படம்.
ஆமாம்... ஆனால் அம்மா... பதினைஞ்சு தடவைதானா?!!
நீக்குசும்மா. அதயும் விட நிறைய தடவை இருக்கலாம். மனசு இறுக்கம் இருந்தால் சாவித்ரி ஜெமினி படம் தான். கடன் வாங்கி கல்யாணம், மனிதன் மாறவில்லை.களத்தூர் கண்ணம்மா இப்படீ ஈஈஇ
நீக்குகல்யாணி மேனனின் மகன் தானே ராஜீவ் மேனன்?மின்சாரக் கனவு.
நீக்குபக்கத்துக் காம்பவுண்டில் தான் இருந்தார்.
ஷூட்டிங்க் கூட நடக்கும்.
பாவம் கல்யாணி மேனன். நல்ல குரல். சுஜாதா படம்
சரிதா எல்லாம் நினைவில்.
டி எம் எஸ் கதையும் பரிதாபம். நானொரு ராசி இல்லா ராஜா
நீக்குபாடல் பாடி, தன் பங்க்களிப்பை முடித்துக் கொண்டார்.
ஆமாம். கல்யாணி மேனன் மகன்தான் ராஜீவ் மேனன்.
நீக்குஆமாம் . அதுதான் அறம் சொல்லும் வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது என்று சொல்கிறார்கள்!
நீக்குதிரு பாஸ்கரத் தொண்டைமான் பக்கங்கள் விகடனில் வரும் காலங்கள் அருமை. சிற்பி படம் வரைவார். அந்தச் சிலை தெற்குக் கோவில்களில்
பதிலளிநீக்குநிறைய காணப்படும். குறத்தி காலடியில் இன்னோரு குழந்தை இருக்கும். அந்தக் கூடையில் வேலைப்பாடு அபூர்வம்.
ஆமாம். அது தென்னாட்டு தலங்கள் என்று நினைக்கிறேன்.
நீக்குஅம்மா.. சென்ற வாரமும் இவரின் ஒரு பகுதி வெளியிட்டிருந்தேன்.
முருகா சரணம்
பதிலளிநீக்குவாங்க செல்வாண்ணா... வணக்கம்.
நீக்குஅடேங்கப்பா.... கனத்த பதிவு..
பதிலளிநீக்குஹிஹிஹிஹி.. வழக்கம்போல...
நீக்கு