ஆதித்த கரிகாலன் கொலையில் ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு துப்பு துலங்குகிறது!
பொன்னியின் செல்வன் அநேகமாக எல்லோருமே படித்திருப்போம். அப்புறம் விக்கிரமன் எழுதிய நந்திபுரத்து நாயகியும் சிலர் படித்திருக்கலாம். இந்த இரண்டு கதைக் களமுமே ஒன்றுதான். பாலகுமாரன் எழுதிய உடையார் கூட இதே களம்தான் என்றாலும் நான் படித்ததில்லை ! (இரண்டு பாகம் படிப்பதற்குள் பொறுமை போய் விட்டது!)
கடைசிப் புத்தகக் கண்காட்சியில் முன்னுரையைப் படித்து விட்டு தியாகு இந்தப் புத்தகத்தை வாங்கிப் படித்து விட்டு என்னிடம் கொடுக்க, நானும் ஒரே மூச்சில் படித்து விட்டேன்.
எந்தப் புத்தகம்?
முதலில் தியாகு, புத்தக அறிமுகம் அலைபேசியில் தந்து விட்டு புத்தகத்தைத் தர, ஆதித்த கரிகாலன் பற்றிய மர்மங்களை இந்தப் புத்தகத்தில் விடுவிப்பதாகப் படித்ததும் மிகுந்த சுவாரஸ்யம் ஏற்பட்டது.
(இதைப் படித்த எங்கள் ப்ளாக்கின் ஆசிரியர் ஒருவர் 'கடல் கொண்ட காதல்' என்ற புத்தகத்தையும் படிக்கச் சொல்லி சிபாரிசு செய்வதோடு அது பற்றித் தெரிந்தவர்கள் எந்த பதிப்பகம், எங்கு கிடைக்கும் என்று விவரம் சொல்ல வேண்டுகிறார்....முனைவர் தமிழரசி என்பவர் எழுதிய அந்தப் புத்தகத்தைத் தற்செயலாக ஒரு பயணத்தின்போது தான் படித்ததை நினைவு கூர்கிறார் அவர்)
இதன் ஆசிரியர் டி ஏ. நரசிம்மா, 'தி இந்து' பத்திரிக்கையின் தமிழ்நாட்டுப் பிரிவின் செய்தி ஆசிரியராகவும் சீனியர் அஸிஸ்டன்ட் எடிட்டராகவும் பணியாற்றி வருவதாக ஆசிரியர் அறிமுகம் சொல்கிறது. 91 க்கு முன் இந்தியன் எக்ஸ்பிரசிலும் அதற்கும் முன் ஒரு தமிழ் வார இதழிலும் பணியாற்றியுள்ள இவரின் கதைகள் பல வார இதழ்களில் வெளிவந்துள்ளதாகவும் சொல்கிறது. இவரது தந்தை 'சித்ராலயா' கோபு. தாய் நாவலாசிரியை கமலா சடகோபன்.
முன்னுரை ஆதித்த கரிகாலன் பேசுவதாக அமைந்துள்ள இந்தப் புத்தகத்தில் அந்த முன்னுரையே நமது ஆவலைத் தூண்டுவதற்குப் போதுமானது.
நான் பொன்னியின் செல்வன் மட்டுமே படித்திருக்கிறேன். நந்திபுரத்து நாயகி படிக்க வேண்டும்! அந்த ஆவல் இந்தப் புத்தகம் படித்த பிறகு தோன்றியது! அதில் (பொன்னியின் செல்வன்) ஆதித்த கரிகாலன் கொலையுண்ட விவரம் இருக்குமே தவிர, கொலை செய்தது யார் என்று குறிப்பிடப் பட்டிருக்காது. படிப்போர் ஒரு மாதிரி 'கொலை செய்தது பாண்டிய நாட்டு ஆபத்துதவிப் படைகள், ரவிதாஸன்' என்று யூகிக்கும் வண்ணம் கதைப் போக்கு அமைந்திருக்கும்.வரலாறும் அவ்வாறு அறியப் பட விரும்பியதாகவே அமைக்கப் பட்டிருப்பது போலத் தோன்றுவதைச் சில காரணங்கள், கல்வெட்டுகள், தர்க்கங்கள் கொண்டு மறுக்கிறார் சங்கதாரா ஆசிரியர் நரசிம்மா.
ரவிதாஸன் ஆதித்தகரிகாலனைக் கொன்றான் என்றால் அருண்மொழிக்கு முன்னால் ஆண்ட உத்தமச் சோழன் என்கிற மதுராந்தகன் ஆட்சியில் சோழ உயர் பதவி அவருக்கு ஏன் அளிக்கப் பட வேண்டும்? ராஜராஜ சோழன் ஆட்சிக்கு வந்ததும் ரவிதாஸன் சொத்துகளைப் பிடுங்கிக் கொண்டு ஏன் நாட்டை விட்டுத் துரத்த வேண்டும்?
அருண்மொழிக்கு எல்லாம் தெரிந்திருந்தது என்று குந்தவைக்குத் தெரியவில்லை. ராஜேந்திரச் சோழன் இதை பின்னால் புரச நாட்டுக் கல்வெட்டுகள் மூலம் (தற்போதைய மலேயா) அறிகிறார்.
குந்தவை என்ன நினைத்திருக்கிறாளோ அது தவறு என்பது வந்தியத் தேவருக்குத் தெரியும். ஆனால் அவர் அதைச் சொல்லவில்லை.
குந்தவையின் தோழி தெட்டக்கனி மட்டும் தான் சந்தேகப் பட்ட ஒரு விஷயத்தை ஆரம்பத்திலேயே சொல்லியிருந்தால் வரலாறே வேறு மாதிரி ஆகியிருக்கலாம்.
பதினாறு வயதில் ஆதித்த கரிகாலன் கொல்லப் பட்டதாக வரலாற்றில் பதிவாகியுள்ள தகவலே தவறு என்றும் அவர் கொல்லப் பட்டது அவரின் இருபத்தாறாம் அகவையில் என்றும் சொல்லப் படுகிறது.
'அருண்மொழியைப் போலவே நானும் அழகானவன்தான். ஏனோ சரித்திர ஆசிரியர்களுக்கு என்னைப் பிடிக்காமல் போய் விட்டது' என்று ஆதித்த கரிகாலன் சொல்வதாக எழுதியிருக்கிறார் நரசிம்மா. அரசு கட்டில் ஏற முடியாத சோழர்குல வாரிசுகளை ஆதித்த கரிகாலன் என்ன செய்தான் என்று அறியும்போதும், ரவிதாஸன் யார், இந்தக் கொலையில் அவன் பங்கு என்ன என்று அறியும் போதும் அல்லது படிக்கும் போதும் ஆச்சர்யம். குறிப்பாக ரவிதாஸன் பற்றிய விவரங்களுக்கு ஆசிரியர் பல ஆதாரங்கள் அடுக்குகிறார்!
கல்கி இந்த விவகாரங்களைத் தொடாமல் அல்லது தொட விரும்பாமல் இந்தப் பகுதிகளை நாசூக்காக ஓரமாக மட்டும் தொட்டுச் சென்று விட்டார் என்கிறது இந்தப் புத்தகம்.
சங்கதாரா என்பது சோழ மன்னர்கள் பட்டாபிஷேகத்தில் நீர் வார்க்கப் பயன் பட்ட ஒரு பஞ்சசன்னிய சங்கு. அது இருக்குமிடம் சங்கதாரா. புரச இலையை சிரசில் வைத்து, கரத்தில் புரசக் குச்சியைத் தந்து இந்தச் சங்கால் நீர் வார்த்து பட்டாபிஷேகம் நடைபெறும் என்று கல்வெட்டுகளிலிருந்து எடுத்துக் காட்டுகிறார்.
வீரபாண்டியன் தலையை வாங்கும்போது ஆதித்த கரிகாலன் வயது, குந்தவையின் வயது, நந்தினி என்று அழைக்கப் படும் நந்தா விளக்கு, உண்மையில் யார் மகள் நந்தினி, அருண்மொழி என்ற ராஜராஜ சோழன் உண்மையில் யார், வந்தியத் தேவன் நல்லவனா, கெட்டவனா....
நாம் படித்ததிலிருந்து ஏகப்பட்ட மாறுதல்களுடன் இந்த நாவல். ஆங்காங்கே வரலாற்று ஆதாரங்களையும் சொல்கிறார் என்றாலும் அது போதுமானதாக இருக்கின்றதா என்ற கேள்வியும் வருகிறது. குந்தவை, நந்தினி, வானதி, பழுவேட்டரையர்கள் இவர்களைப் பற்றிய எண்ணங்களும் கருத்துகளையும் கூட மாற்றுகிறது இந்த நாவல்.
ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார் என்று அறியும்போது ஓரளவு எதிர்பார்க்கும் அளவில் வைத்தாலும், சுவாரஸ்யம் குன்றாமல் திடுக்கிட முடிகிறது. சின்னச் சின்ன ஆனால் முக்கியமான திருப்பங்கள், ஆங்காங்கே சஸ்பென்ஸ் குறையாமல் கொண்டு வந்து கடைசியில் ஒவ்வொன்றாக அவிழ்க்கும்போது நாம் எதிர்பார்த்த சில, எதிர்பார்க்காத சில என்று சுவாரஸ்யம் கூட்டுகிறது நாவல். ராஜ ராஜ சோழன் உண்மையில் யார் உண்மையில் ராஜராஜ சோழன் பிறந்த தினம் எது, என்று அறியும்போதும் உண்மையா என்ற கேள்வி எழுகிறது. இதற்கு வரலாற்று ஆதாரம் என்று சரியாகக் காட்டாமல் ஒரு துப்பறியும் நிபுணரின் திறமையோடு அவற்றை நிலை நிறுத்துகிறார் ஆசிரியர். சில புதிய கேரக்டர்கள் உண்டு.
மதுராந்தகன் என்ற உத்தமச் சோழனைப் பற்றிய குறிப்புகளில் மட்டும் ஒரு சிறு குழப்பம். தளிக்குளத்தார் கோவில் இருந்த இடத்தில்தான் அதை இடித்துத் தரைமட்டமாக்கி விட்டு, பிரகதீஸ்வரர் ஆலயம் கட்டப் பட்டது என்றும் அதற்கான காரணமும் மனித மனதின் அழுக்குகளைச் சொல்கிறது. அதை விளக்கும் வகையில் அந்தப் பகுதிக்கு ஆசிரியர் கொடுத்திருக்கும் தலைப்பு "பெரிய கோவில்; சிறிய புத்தி"
ஆங்கிலப் புத்தகங்களையே படித்துக் கொண்டிருந்த நரசிம்மா தன் மனைவி கொண்டு வந்த புத்தகக் களஞ்சியங்களில் பொன்னியின் செல்வன், கடல் புறா எல்லாம் கிடைக்க, படித்து மகிழ்ந்தாராம்.
"அமரர் கல்கி ஒரு காவியத்தைப் படைத்திருக்கிறார். ஆனால் தனது பயணம் வெற்றிகரமாக அமைய வேண்டும் என்பதற்காக, சோழர் சரித்திரம் என்னும் பெருங்கடலில் இருந்த 'சுழல் பகுதிகளை' ஆபத்தானவை என யூகித்து தனது 'கற்பனை' எனும் பாயமரக்கப்பலை, ஆபத்தில்லாத பக்கமாகச் செலுத்தி, சுழல் பகுதிகளைத் தவிர்த்து, எச்சரிக்கையுடன் தனது கலத்தைச் செலுத்தியுள்ளார். மற்ற சரித்திர நாவலாசிரியர்களும் அவரைப் பின்பற்றி ஆபத்தான பகுதிகளைத் தவிர்த்து விட்டனர். எனக்கு எவ்விதக் கட்டாயமும் இல்லை.பெரிய நாவலாசிரியர் என்ற பெயர் வாங்குவதற்காக நான் எழுதவில்லை. எனது பத்திரிகைப் பணியின் பாரத்தைக் குறைக்கவும் உண்மைகளை அறியும் ஆர்வத்தினாலும்தான் எழுதுகிறேன்...." என்கிறார் ஆசிரியர் நரசிம்மா.
இந்தப் புத்தகத்தைப் படித்த பிறகு இவரது மற்ற இரண்டு படைப்புகளான 'காலச்சக்கரமும்', 'ரங்கராட்டினமு'ம் படிக்கும் ஆவல் உண்டாகிறது. "இந்த நாவலை எழுதியதற்காகவே உங்களுக்கு மோட்சம் கிடைக்கும்" என்று ஒரு மூதாட்டி திருவரங்கத்திலிருந்து கதறியபடி தொலைபேசியதாகச் சொல்கிறார் நரசிம்மா, தனது 'ரங்கராட்டினம்' நாவலைப் பற்றி.
பொன்னியின் செல்வனைக் கூட இப்போது ஒருமுறை எடுத்து மறுபடி ஒருமுறைப் படிக்க வேண்டும் என்ற ஆவலையும் ஏற்படுத்துகிறது இந்தப் புத்தகம்!
இந்தப் புத்தகம் சொல்லும், விளக்கும், விடுவிக்கும் பலப் பல மர்மங்களைச் சொல்வது நியாயமாகாது. சுவாரஸ்யத்துக்கு நான் கியாரண்டி! கண்டிப்பாகப் படிக்க வேண்டியப் புத்தகம்!
'சங்கதாரா'
ஆசிரியர் : 'காலச்சக்கரம்' நரசிம்மா.
வானதி பதிப்பகம்
450 பக்கங்கள்.
விலை : 150.00
பின் குறிப்பு: இந்தப் புத்தகத்தை ஆன்-லைனில் வாங்க, உடுமலை.காம் என்ற வெப்சைட்டில் பதிவு செய்து வாங்கலாம். இந்தியாவுக்குள் வாங்க முப்பது ரூபாய் தபால் செலவு சேர்த்து நூற்று எண்பது ரூபாய் ஆகும். பணத்தை, புத்தகம் கைக்கு வந்ததும் கொடுக்கலாம்.


