ஏஞ்சல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஏஞ்சல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

20.12.16

கேட்டு வாங்கிப் போடும் கதை :: வீடு



     எங்களின் இந்த வார "கேட்டு வாங்கிப் போடும் கதை" பகுதியில் இடம்பெறுவது சகோதரி ஏஞ்சலின் எழுதிய கதை.
     அவரின் தளம் காகித பூக்கள்.

     சகோதரி ஏஞ்சலின் நான்கு கால் செல்லங்களிடம் அன்பு கொண்டவர்.  எங்கள் ப்ளாக்கில் நான் எழுதிய நாய்மனம் கதையைப் படித்து விட்டு இவர் எழுதிய பின்னூட்டம்தான் எனக்குத் தெரிந்து முதல்!  மிகவும் உருகி எழுதி இருந்தார்.  படிக்கவே மனம் இல்லை என்று எழுதி இருந்தார்.

     இப்போதெல்லாம் வலைப் பக்கம் மிகவும் அளவாகவே எழுதுகிறார்.  ஃபேஸ்புக்கில் சுறுசுறுப்பாக இருந்தார்.  அங்கும் காணோம்.  ஒரு வழியாய் அவரைப் பிடித்துக் கதை கேட்டு வாங்கிப் போட்டிருக்கிறேன்!
     தொடர்வது அவரின் முன்னுரையை.  அப்புறம் அவர் எழுதிய கதை.


===============================================================



கேட்டுவாங்கிப்போடும் பகுதிக்காக என்னையும் அன்போடு அபார  நம்பிக்கை வைத்து கதை எழுதித்தருமாறு கேட்டுக்கொண்டதற்கு மிக்க நன்றி எங்கள் பிளாக் ஸ்ரீராம் சகோ ..

முன்னுரை 
==========

சிறுவயதில் வீட்டில் ஆடு மாடு கோழி மற்றும் பல செல்லங்களை வளர்த்து அவற்றோடு பழகியதாலோ என்னவோ எதையும் நாலுகால்களின்  மன எண்ண  ஓட்டமாகவே எனக்கு யோசிக்க தோன்றும் .அப்படி எங்கள்  ரோட்டில் சுற்றித்திரிந்த பூனை வாயிருந்தா இப்படி யோசித்திருக்கும், பேசியிருக்கும் என நினைத்து எழுதியது .


இங்கே இங்கிலாந்தில் பலவகை மனிதர்கள்.  சிலர் நாய் பூனைகளுக்காகவே சொத்தை எழுதி வைத்தவர்கள் ..சிலர் ஆசைப்பட்டு வாங்குவது பின்னர் வீடு மாறிச்செல்லும்போது வாயில்லா ஜீவன்களை அங்கேயே விட்டு செல்வது .சிலர் தங்கள் மன வக்கிரங்களை இந்த வாயில்லா ஜீவன்களிடம் காட்டுவது, சிலர் சாகும்வரை இந்த ஜீவன்களை பராமரிப்பது என பல வகை மனிதர்கள்.  


தினமும் வாக்கிங் செல்லும்போது ஒரு பெரியவரை சந்திப்பேன்.   அவருடன் மார்லி என்ற நாய் துணையாய் செல்லும்.  அந்த பெரியவர் wildlife rescue வை சேர்ந்தவர்.  அவர் சொன்னார் மார்லி ஒரு பிரிட்டிஷ் குடும்பத்தாரால் வளர்க்கப்பட்டு வந்ததாம். 


அவர்களுக்கு கோபம் வரும்போது குடிக்க விஸ்கி கிடைக்காதபோது இதை அடிப்பார்களாம்.  அல்லது இருட்டு அறையில் பூட்டி வைப்பார்களாம் ..பக்கத்து வீட்டிலிருப்போர் rspca வில் கம்ப்ளெயிண்ட் தரவும் இந்த மார்லியை மீட்டு  இவரிடம் கொடுத்தார்களாம்.  என்னிடம் அவர் பேசும்போது அவர் சொல்வதை கேட்டு முன்னங்காலால் தனது தலை மீது வைத்து காட்டியது மார்லி . "மார்லி நீ  இப்போ சந்தோஷமா இருக்கிறாயா?"  என்று அவர் கேட்கவும், இரு கரம் கூப்பி அவரை வணங்குவதுபோல் காட்டியது.

மேலும் அவர் சொன்னார்,  சில நேரங்களில் வயதானவர்கள் மரணமடைந்துவிட்டால் அவர்கள்  வீட்டு செல்லங்களின் நிலை பரிதாபத்துக்குரியது.  pdsa இறந்தவரின் உறவினர்களை கேட்பார்கள் இந்த பூனை  /நாயை நீங்க வளர்க்கிறீர்களா என்று . அவர்கள் மாட்டேன் என்றால் மெர்சி கில்லிங்தான் :(

இதற்காகவே சிலர் அவர்கள் மறைவிற்குப் பின்னும் இச்செல்லங்களுக்கு இன்சூரன்ஸ் செய்து வைப்பார்கள்.   அப்போது  pdsa அல்லது RSPCA அந்த பணத்தை வைத்து இந்த ஜீவன்களை பராமரிக்கும்.  இப்போது இந்த கதை நாயகி மல்ட்டிக்கு  எங்க வீட்டில் அடைக்கலம் கொடுத்தாச்சு .


அது எங்க வீட்டில் நிம்மதியா தூங்குவதை பார்த்தபோது எனக்கு மனதே வலித்தது வீடில்லா ஒருவர் தனக்கு இருப்பிடம் கிடைச்சதும் எப்படி நிம்மதியா உறங்கியிருப்பார் என்பதை இதை பார்த்து உணர்ந்தேன் ..


இப்போ வீட்டுக்குள்ளே போவோமா ...


================================================================




வீடு 
====
 ஏஞ்சல் 
 
 
 
நானும் எத்தனை நாள்தான் இப்படியே சொந்தமாக ஒரு வீடு இல்லாமல் கிடைக்குமிடத்தில் கூடாரமடிப்பது? .அதுவும் இப்போதெல்லாம் வயதாவதாலோ என்னவோ, உடல்நிலை அடிக்கடி சுகமில்லாமல் போகிறது.  அம்மாவும் சொந்தமாக வீடு வாங்கவில்லை.  


அவர் மறைவுக்குப்பின் நான் குடியிருந்தவீட்டை விட்டு வெளியேறும் நிலை. வேறொருவர் அந்த வீட்டை வாங்கியதால் நான் அங்கு தங்க முடியவில்லை ..  எனக்கு மிக அவசரமாக தங்குவதற்கு வீடு ஒன்று வேண்டும்.  


உரிமையாளர்கள் இருந்தாலும் பரவாயில்லை.   நான் ஒரு அறையில் இருந்துகொள்வேன்.

தினமும் உணவு தேடி அலைந்து களைத்துப்போகிறேன்.  மனிதரில் பலவிதம் சிலர் மோசம்...   சிலர் மிக மோசம்.  ஆனால்  குடிகாரர்கள் மட்டும் மிக தாராளமானவர்கள்!  உணவை ரோட்டோரம் வீசி சென்று விடுவார்கள்.  அம்மா இறந்தபின்பு பசித்தபோது முதல்முறையாக ரோட்டோரம் கிடந்த சிக்கன் துண்டுகள், சிப்ஸ் தான் எனது பசியை  தீர்த்தது.  அப்படியே ஒவ்வொரு நாளும் கிடைத்ததை சாப்பிடுவேன். 


இரவு நேரங்களில்தான் வெளி வருவேன்.  பகலில் வாகனங்கள் அதிகம் செல்வதால் வெளியில் வராமல் புதர்களில் ஒளிந்திருப்பேன்.  சில சிறுவர்கள் கல்லால் அடிப்பார்கள்.  சிலர் ஏன்தான் இத்தனை வேகமாக காரோட்டுகிறார்களோ .?  இதற்கு பயந்தே நான் புதர்களில் இருப்பேன்.  சிலநேரம் பகலில் பசிக்கும்போது குப்பைத்தொட்டியில் மறைவில் இருந்து உணவு தேடுவேன்.

அப்போது பார்த்ததுதான் இந்த குடும்பம் அம்மா அப்பா மகள்.  மகள் எப்பவும் ரோட்டில் இருக்கும்.   பூனைகளை கண்டதும் தொட்டு விளையாடுவார்.  அவரது பெற்றோர் சிரித்துக்கொண்டே பார்ப்பார்கள்.  அவர் அருகில் செல்ல ஆசைதான்!  ஆனால் எனக்கு பயமாக இருக்கும் .

தினமும் பார்க்கிறேன் இவர்களை..  அன்பான குடும்பம் போலிருக்கு.  நிச்சயம் ஒருநாள்  என்னையும் தொட்டு விளையாடுவார் அச் சிறுபெண் .  ஆனால் எனது உடலெல்லாம் புண்களாயிருக்கு...  தொடுவாரா என்னையும் ...   :( 

எனது அம்மா இருந்தவரை என்னை அன்போடு கவனித்தார்கள்.  இருக்க இடம் இல்லாததால் குப்பை கூளங்களில் படுத்து உடலெங்கும் தெள்ளுப்பூச்சி வந்து விட்டது என்ன செய்ய :(

.ஒரு நாள் அந்த குடும்பத்தலைவர் குப்பை தொட்டியை எடுத்து வர தோட்டக் கதவை திறந்து வைத்தார்.  நான்  மெதுவாக அவர்கள் பின் தோட்டத்தில் நுழைந்து விட்டேன் .

சில நாட்கள் பின்பு ....

அவர்கள் வீட்டு சிறுபெண் என்னிடம் பழகி விட்டார்.  யாருக்கும் தெரியாமல் எனக்கு தோட்டம் வந்து உணவு தருகிறார்.  அவர்கள் வீட்டிலும் ஒரு பூனை இருக்கிறது.  அதன் பெயர்  ஜெசியாம்.  எப்போதும் என்னை முறைத்தே  பார்க்கிறது.  அது பார்க்க மிக அழகாக சுத்தமாக இருக்கிறது.  நானும்  ஒரு காலத்தில் அம்மா வீட்டில் இப்படித்தான்  இருந்தேன்.   அம்மா சாமி கிட்ட போகலைன்னா நானும்  சுத்தமாக அழகாகவே இருந்திருப்பேன் என்று மனதில் நினைத்துக்கொண்டேன் .


இன்னும் சில நாட்கள் பிறகு ....

ஹையா ஜாலி!  அந்த பெண்ணின் அம்மாவும் இப்போதெல்லாம் எனக்கு உணவு தருகிறார்.  ஆனால் எதோ தயக்கம் போல என்னை தொட மாட்டார். 
ஒருநாள் அவர்கள் கிச்சன் பின் கதவு திறந்திருந்தது. நான் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு உள்ளே நுழைந்துவிட்டேன்.  
 
 



அவர் சமைத்து கொண்டிருந்தார்.  என்னை பார்த்ததில் அதிர்ச்சியோ தெரியலை.  ஆனால் என்னை துரத்தவில்லை.   என்ன நினைத்தாரோ, என்னிடம் கனிவுடன் பேசினார்.   உணவும் தந்தார்.  அங்கேயே ஒரு மூலையில் படுத்துவிட்டேன். அவர் என்னை துரத்தவில்லை.  ஆனால்  இரவு 10 மணிக்கு கதவை திறந்து என்னை வெளியே அனுப்பி விட்டார்.  
 
 



எனக்கு துக்கமாக இருந்தது.  அவர் சமைக்கும்போது சன்னலின் வெளிப்பக்கம் இருந்து பார்த்தேன்.  இது தினமும் தொடர்ந்தது.  'ஒருவேளை ஏதாவது பரிசுப் பொருள்எதிர்பார்க்கிறரா அம்மா' என்று நினைத்தேன்.  இரண்டு சுண்டெலிகளை பிடித்து பின் கதவு முன் வைத்து காத்திருந்தேன்.  
 
 
 



காலை கதவை திறக்கும்போது ப்ளெசென்ட் சர்ப்ரைசாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டேன்.  காலை கதவைதிறந்தவர் வீல் என்று அலறிவிட்டார்.  எலியை பார்த்து யாராவது  பயப்படுவார்களா!!!   அவர் சத்தம் கேட்டு  ஓடிவந்த அப்பா அந்த எலிகளை தோட்டத்தில் புதரில் விட்டுவிட்டார்.  அவர்களுக்கு எலி பிடிக்கவில்லை போலும்.  அடுத்தமுறை பெரிய புறாக்குஞ்சை பிடித்து கொடுக்கணும் .. 

ஆனாலும் நான்  கதவுக்கு வெளியே உக்கார்ந்திருப்பேன்.  காலை கதவு திறந்ததும் உள்ளே ஓடிவிடுவேன்.  அந்த பெண் என்னை மடியில் வைத்துக்கொள்வார்.  நானும் அவரை அணைத்துக்கொள்வேன்.  
 
 
 



அவருக்கு எதோ எக்ஸ்சாமாம்  அவரது அம்மாவிடம் சொல்வது கேட்டது  //அம்மா இந்த பூனையை மடியில் வைத்தால்  ஸ்ட்ரெஸ் எல்லாம் போவது போன்ற உணர்வு .நான் படிக்கும்போது மட்டும் என்னுடன் இருக்கட்டும் .// உங்களுக்கு தெரியுமா அந்த அக்கா பரிட்சையில் முதல் மதிப்பெண்ணாம்.  எனக்கு மட்டுமே தெரியும் அந்த வசூல் ராஜா கட்டிப்புடி வைத்தியம் மகிமைதான்.  நான் தான் ஸ்ட்ரெஸ் ரிலீவர் அவருக்கு .

அம்மாவும் அக்கா சந்தோஷமே முக்கியம் என விட்டு விட்டார்.  அவரின் அப்பா ஒன்றும் சொல்ல மாட்டார் .  இப்படியே தினமும் இரவில் மட்டும் என்னை வெளியே விடுவார்கள்.  பகலில் நான் மேசை கீழே படுத்து தூங்குவேன்.  ஒரு நாள் அவர்கள் சோபாவில் உறங்கினேன்.  மிக மென்மையாக கதகதப்பாக இருந்தது.

ஒரு நாள் எனக்கு உடலுக்கு மிகவும் முடியாமற்போனது.  வெளியில் இரவு விடும் போது அந்த பெண்ணின் அம்மா அழுதாற்போலிருந்து.  எனக்குத் தெரியும்,  இரவு நேரங்களில் என்னை வெளியே விடும்போது அவர் தினமும் அழுகிறார்.  அன்று ஏதோ கணவரிடம் பேசினார்.  அவரும் சரி என தலையசைத்தார்.

இரவு சோபாவில் ஒரு துணியை விரித்து என்னை படுக்க வைத்தார் இந்த புது அம்மா .

எத்தனை சந்தோஷம் தெரியுமா?  எத்தனை காலம்  கழித்து ஒரு வீட்டில் பாதுகாப்பாக உறங்கினேன்...  இப்போதெல்லாம் தினமும் உறங்குகிறேன். அவர்கள் வீட்டு பூனை மட்டும் அடிக்கடி என்னை அடித்துவிட்டு செல்லும்.  பரவாயில்லை என்று விட்டு விடுவேன் ..

அவர்கள் ஜெசியை தூக்கிக் கொஞ்சும்போது, என்னையும் அப்படி என்று  கொஞ்சுவார்கள் என ஏக்கத்துடன் நினைப்பேன்.  எனக்கு பெயர் இன்னும் வைக்கவில்லை.  தற்சமயம் மல்ட்டி என்று கூப்பிடுகிறார்கள்.  பல நிறங்கள் என் உடலில் இருப்பதால் இந்த பெயராம்..

பெயரில் என்ன இருக்கு? எனக்கு ஒரு வீடு கிடைத்து விட்டது ..


இப்போதெல்லாம் மிக சந்தோஷமாக இருக்கிறேன்.  அம்மா என் தலையை தடவி விட்டார்.  என்னைக் குளிப்பாட்டி பவுடர் போட்டு  விட்டார்.  எனது புண்களெல்லாம் ஆறி வருகிறது ..
 ..
என்  புது அம்மா பெயர் ஏஞ்சல்.  அப்பா ஜேம்ஸ், அக்கா பெயர் ஷாரன்.  தங்கச்சி பெயர் ஜெஸ்ஸி ..

புது வீடும் அன்பான உறவுகளும் கிடைத்ததில் அளவில்லா சந்தோஷத்தில் நான் இருக்கின்றேன்.  இனி மேல் குப்பைத்தொட்டிகளை தேட வேண்டாம். வாகனங்களை பார்த்து பயப்படவேண்டியதில்லை.

யாரும் கல்லெடுத்து அடிப்பார்களோ என்று அஞ்ச வேண்டியதில்லை. நிம்மதியாக உறங்க ஒரு இருப்பிடம்  நல்ல வீடு கிடைத்துவிட்டது மல்ட்டிக்கு...