கள்ளனுக்குக் கள்ளன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கள்ளனுக்குக் கள்ளன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

9.9.13

அலுவலக அனுபவங்கள் - பெஞ்சமினும் சீனுவும்



அமைதியான ஒரு அலுவலக வேலை நாள். சிறிய சலசலப்பான குரல்களுடன் அலுவலகம் இயங்கிக் கொண்டிருந்தது.

திடீரென பக்கத்துக் கட்டத்திலிருந்து அழுகுரல் கேட்டது.

அதுவும் எங்கள் அலுவலகத்தின் பகுதிதான்.

"ஸார்....ஸார்... கேஷியர் பெஞ்சமின் செத்துப் போயிட்டார் ஸார்..." பியூன் கோவிந்த் ஓடிவந்து சொன்னான்.


'என்னடா இது.. கேஷியர் செத்துப்போனதுக்கு ஆஃபீஸ் மக்கள் இவ்வளவு அழுகிறார்களா?' அலுவலகத்திலேயே நிகழ்ந்திருக்கும் அவர் திடீர் மரணத்தை விட, இந்தக் கேள்வி மனதில் தலை தூக்கியது. ஏனென்றால் சனிக்கிழமையும், ஞாயிற்றுக் கிழமையும் செத்துப்போன அலுவலக நண்பர்கள் வீட்டுக்கு வந்த சக ஊழியர்கள் அளவை விரல் விட்டு எண்ணி விடலாம்!

எப்போதும் அவரைச் சுற்றி நாலு பேராவது இருந்து கொண்டே இருப்பார்கள். அந்தப் பிரியம்தான் போலும்.


பெஞ்சமின் 'டர்ன் டியூட்டி' பார்க்கும் நாட்களில் உடன் வேலை செய்யும் ஊழியர்களுக்கு சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி என்று வாங்கிக் கொடுப்பார் என்று கேள்விப்படும்போது ஆச்சர்யமாக இருக்கும். 

மற்றவர்கள் அவரைப்பற்றிச் சொல்லும்போது 'நீங்கள் அப்படி எல்லாம் வாங்கித் தருவது இல்லை' என்ற மறைமுகக் குற்றச்சாட்டு இருக்கும்.
என்ன செய்ய... எப்படி இருந்தாலும் இதற்காக என்னால் இப்படி எல்லாம் செலவு செய்ய முடியாது! அதனால் பெஞ்சமினை நினைத்து ஆச்சர்யமாக இருக்கும்.

பெஞ்சமின்....

கலகலப்பாகப் பேசுவார். பாக்கு மென்றுகொண்டே இருப்பார். யாரைப் பார்த்தாலும் சத்தமாக அவர் பெயர் சொல்லி அழைத்து ஏதாவது குசலம் விசாரிப்பார். எல்லோர் குடும்ப விவரமும் அவருக்கு அத்துபடி.

சம்பவ இடத்துக்குச் சென்றபோது பெஞ்சமின் உடல் ஒரு அறையில் கிடத்தப்பட்டிருக்க - 'மாஸிவ் அட்டாக்' காம் ஸார்... இப்போதான் டாக்டர் வந்து போனார்" பியூன் கோவிந்த் - அழுபவர்கள் வேறு அறையில் தனியாக அழுது கொண்டிருந்தனர். காரணமும் தெரிய வந்தது!

எல்லோருமே பெஞ்சமினுக்குக் கடன் கொடுத்தவர்கள். ஒவ்வொருவரும் புலம்பியதிலிருந்து ஒருவாறாக விஷங்கள் வெளிவந்தன.
சிக்கன் பிரியாணியும் மட்டன் பிரியாணியும் வாங்கித் தந்தது வசியம் பண்ணத்தான் என்று தெரிந்தது.

"குமார்... இந்த மாசத்தோட உன் சொஸைட்டி லோன் முடியுது... ஒண்ணு பண்ணு... புது லோன் அப்ளை பண்ணு.. அட, தலையைச் சொறியாதே.. உனக்கில்லை.. நான் வாங்கிக்கறேன். மாசாமாசம் உனக்குப் பிடித்தமாகிற தொகையை நான் உனக்குக் கொடுத்து விடுகிறேன். யார் கிட்டயும் சொல்லாதே...."
                                                  
                                                           

"வள்ளி! தீபாவளி முன்பணம் வேண்டாமா... நல்லது! நீ அப்ளிகேஷன் எழுதிக் கொடு. நான் எடுத்துக்கறேன். மாசா மாசம் தவணையை நான் உன் கையில் கொடுத்து விடுகிறேன். யார் கிட்டயும் சொல்லாதே..."

"ஹுசைன்..  இந்த மாசத்தோட ரிடையர் ஆகப் போறே... என் கையில் ரெண்டு லட்சம் ரூபாய் கொடு. மாசம் பத்து பெர்சண்ட் வட்டி தர்றேன். எல்லார் கிட்டயும் சொல்லிடாதே... எல்லாருக்கும் இதுமாதிரி என்னால தர முடியாது..ஏதோ உனக்காகத்தான்.."

இந்த 'யார் கிட்டயும் சொல்லாதே.. உனக்காகத்தான்' என்கிற மந்திர வார்த்தைகள்தான் சம்பந்தப்பட்டவர்களை யாரிடமும் சொல்லாமல் வைத்திருக்க வைத்தது போலும்!

இப்படி எல்லோரிடமும் வாங்கியிருக்கிறார் என்று தெரிந்தது. மிகவும் உஷார் பார்ட்டி என்று அறியப்பட்ட கீதா, ராஜி, ரஞ்சனி எல்லோரும் கூட எப்படி ஏமாந்தார்கள் என்று ஆச்சர்யமாக இருந்தது. 

இந்நிலையில் சீனு மட்டும் அசந்தர்ப்பமாகச் சிரித்துக் கொண்டிருந்தது ஆச்சர்யமாக இருந்தது. 

"என்ன சீனு சிரிக்கறே..?"
                                        
                                                            
                                        [ குடிப்பழக்கம் உடல்நலத்திற்குத் தீங்கானது ]

"நேற்றுதான் ஸார் 'பார்'ல வச்சு பெஞ்சமின் ஸார் கிட்ட பத்தாயிரம் வாங்கினேன். யாரும் இல்லை பக்கத்துல...இப்போ தர வேண்டியதில்லை பாருங்க!"

"என்ன சீனு... தப்பில்லை?"

"அவர் செஞ்சது...?"

பின்னாட்களில் பெஞ்சமின் மனைவி யாருக்கும் பணம் தரச் சம்மதிக்கவில்லை என்று தெரிந்தது. 'எனக்கு ஒன்றும் தெரியாது. என்கிட்டே அவர் அப்படி எதுவும் சொன்னதுமில்லை. பணம் தந்ததுமில்லை. சொஸைட்டி கடன் அவர் பேரிலா இருக்கு? உன் பேர்லதான... நான் எப்படித் தர முடியும்? தீபாவளி முன்பணம் உன்பேர்லதான போட்டே... நான் எப்படித் தரமுடியும்?' என்று சொல்லி விட்டாளாம்!