புடலை மிளகூட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புடலை மிளகூட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

31.10.16

"திங்க"க்கிழமை 161031 :: புடலை மிளகூட்டு - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி



புடலை மிளகூட்டு

மிளகூட்டு என்பது எங்கள் வீட்டில் இரண்டு வாரத்துக்கு ஒரு தடவையாவது பண்ணுவது உண்டு. இதில் மிளகு சேர்த்திருப்பதால் உடம்புக்கு மிகவும் நல்லது என்பது ஒரு காரணம் (பகைவன் வீட்டுக்கு பத்து மிளகோடு செல் – பழமொழி. அனேகமான அர்த்தம். ஒருவேளை உணவில் விஷம் கலந்திருந்தால் மிளகு சாப்பிட்டால் விஷத்தை முறிக்கும் தன்மை உண்டு என்பதால். உடனே சந்தேகம்லாம் கேட்கக்கூடாது. பழமொழியை ரொம்பவும் ஆராயக்கூடாது). இன்னொரு காரணம், கோஸையும் புடலையையும் கறியமுதாகச் சாப்பிடுவதில் எனக்கு அவ்வளவு விருப்பம் இருப்பதில்லை. மிளகூட்டு என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். இங்கெல்லாம், கடைகளில் புடலங்காய் உபயோகப்படுத்துவது குறைவு. (விலை அதிகம். வேறென்ன காரணம் இருக்க முடியும்). பொதுவாகவே எல்லா உணவகங்களிலும், கோஸ் அல்லது கோஸ் + கேரட் சேர்ந்த பொரியல் நிச்சயமாக மதியத்துக்கு இருக்கும். ஒண்ணு விலை குறைவு. இன்னொண்ணு, ஆள் வரத்துக்கேற்ப, இரண்டாவது தடவை விரைவாகப் பண்ணிக்கொள்ளலாம். இப்போது செய்முறை. (எப்படிச் செய்யணும் மாமூ.. ‘நினைவுக்கு வருகிறதா?)




1 ½ அடி புடலைக்கு ¼ டம்ளர் பாசிப்பருப்பு என்பது கணக்கு. புடலையின் அளவைப் பொறுத்து, பாசிப்பருப்பின் அளவு மாறுபடும். பாசிப்பருப்பு அளவு அதிகமானா நல்லதுதான். பாசிப்பருப்பை, சாதம் வைக்கும்போது மேல் தட்டில் வைத்து தளிகைப்பண்ணிக்கொள்ளவும்.



 
புடலையைக் கழுவிக்கொண்டு, அரை வட்டமாகத் திருத்திக்கொள்ளவும். சின்ன வயசுல புடலையின் உள்ளே விதைகளை எடுக்காமல் கூட்டு சாப்பிட்டதால், எனக்கு உள்பகுதியை சுத்தம் செய்யாவிட்டால் பிடிக்காது. இள புடலங்காய்க்கு, சுத்தம் செய்யவேண்டியதில்லை என்று சொல்வார்கள். கூட்டும் கொஞ்சம் அடர்த்தியாக இருக்கும். இருந்தாலும், விதை கூட்டில் அகப்பட்டால் நன்றாக இருக்காது. 




4 மிளகாய்ப் பழம், 2 மேசைக்கரண்டி உளுத்தம்பருப்பு, துளி பெருங்காயம், 15 மிளகு இவற்றைச் சிறிது எண்ணெயிட்டு வாணலியில் சிவப்பாக வறுத்து (மிளகை எப்படி சிவப்பாக வறுப்பது என்று கேட்கக்கூடாது. சிவப்பு, உளுத்தம்பருப்புக்குச் சொன்னது. கறுத்துவிட்டால், கூட்டின் ‘நிறம், சுவை குறையும்) ஒரு தட்டில் இட்டு ஆறவைக்கவும். காரம் பிடிப்பவர்கள் (என்னைப் போன்றவர்கள்), 6 மிளகாய்ப் பழம், 20 மிளகு எடுத்துக்கொள்ளலாம்.  2 அல்லது 3 ஸ்பூன் தேங்காய்த் துருவலை எடுத்துக்கொள்ளவும்.




சூடு ஆறினபின்பு, வறுத்த மிளகாய்ப்பழம் போன்றவற்றையும், தேங்காய்த்துருவலையும் மிக்ஸில அரைக்கவும்.  இதற்கு முன்பே, திருத்திய புடலையை, கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். புடலை ஓரளவு வெந்தால் போதும். அத்துடன், அரைத்த மிக்ஸ், வெந்த பாசிப்பருப்பு, தேவையான உப்பு சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க விடவும். பாசிப்பருப்பு சேர்த்திருப்பதால், கூட்டை அவ்வப்போது கிளறிவிடவேண்டும். இல்லாட்டா அடி பிடித்துவிடும்.


அப்புறம், கடுகு, உளுத்தம்பருப்பு, ஒரு ஆர்க்கு கருவேப்பிலை திருவமாறி கூட்டில் சேர்த்துவிடவேண்டியதுதான். நெய்யில் திருவமாறினால், வாசனையாக இருக்கும்.





இது பருப்புக் குழம்பு, சாத்துமது சாதம் இவற்றுடன் நன்றாக இருக்கும். நான் பெரும்பாலும், மிளகூட்டும், சாதமும் மட்டும் சாப்பிடுவேன். தொட்டுக்கொள்ள உருளைக் கறி அல்லது சேப்பங்கிழங்கு ரோஸ்ட் நன்றாக இருக்கும். அன்றைக்கு நான் பண்ணின உருளை கட் கறியமுது சுருக்கமாக.

உருளையை சிறிய சதுரமாக கட் செய்துகொண்டு, உப்பு போட்ட தண்ணீரில் நன்கு கொதிக்கவிடவும். அது வெந்ததும், தண்ணீரை இரத்து (இது புதிய வார்த்தை.. நாங்கள் உபயோகப்படுத்துவது), காயில், பெருங்காயப்பொடி, சிவப்பு மிளகாய்ப்பொடி போன்றவற்றைத் தேவையான அளவு போட்டு பிசிறிக்கொள்ளவும். வாணலியில், எண்ணெய் சிறிதுவிட்டு, கடுகு, உ.பருப்பு திருவமாறி, அதில் உருளைக்கிழங்கைப்போட்டு நன்கு பிரட்டி எடுக்கவேண்டியதுதான்.  முதலிலேயே தளிகைப்பண்ணிவிடுவதாலும், காரம், பெருங்காயம் போன்றவற்றைப் பிசிறிவிடுவதாலும், நான் குறைவாகத்தான் எண்ணெய் சேர்ப்பேன். நிறைய எண்ணெய் சேர்த்தால் கறியமுது நன்றாகத்தான் இருக்கும். ஆனால் அவ்வளவு நல்லதல்ல.