வெள்ளி, 15 ஜூன், 2018

வெள்ளி வீடியோ 180615 : பார்த்துப் புளித்துக் கசந்த போதும் பழகிப்போன பந்தம்


     சென்ற வாரத்துக்கு முந்தைய வாரம் ஒரு அதிகாலைப் பாடல் பகிர்ந்திருந்தேன்.  இந்த வாரம் இன்னொரு 'அதிகாலை' பாடல்!


     1982 இல் வெளிவந்த "கல்யாண காலம்" திரைப்படத்தில் சங்கர் கணேஷ் இசையில் எஸ் பி பாலசுப்ரமணியம் பாடிய பாடல்.  பாடலை எழுதி இருப்பவர் வைரமுத்து.  ஜனகராஜ், சுஹாசினி ஆகியோர் நடித்த படம்.



     வைரமுத்து பாடல் எழுதி இருந்தும் பெரிய கவர்ச்சியான வரிகள் இல்லாத பாடல்.  இயல்பான வரிகள்.  ஆனாலும் முதல் மற்றும் மூன்றாம் சரணங்களை ரசிக்க முடிகிறது.  மத்திய தர வர்க்கத்தின் ஒரு அதிகாலை நேரத்தின்  காட்சிகள் பாடலாகி இருக்கின்றன.



     ஜனகராஜ் 1971 முதலே நடித்து வருகிறார் என்பது ஒரு ஆச்சர்யமான தகவல்.  ரவிச்சந்திரன் போன்ற நடிகர்களுடன் சிறு வேடங்களில் தோன்றி இருக்கிறாராம்.  கூட்டத்தில் ஒருவராக தோன்றி இருப்பார் போலும்.  ஆடிட்டர் ஜெனரல் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக வேலை செய்து வந்திருக்கிறார்.  அதே அலுவலகத்தில் வேலை செய்த டெல்லி கணேஷ் மூலம் நாடகங்கள், பின்னர் சினிமா  வந்திருக்கிறார்.




     நிழல்கள், பாலைவன ரோஜாக்கள் போன்ற படங்களின் மூலம் மேலே ஏறியவர் கைதியின் டைரி, ராஜாதி ராஜா போன்ற படங்களில் பெரிய வேடங்களில் கமல், ரஜினியுடன் நடிக்குமளவு முன்னேறினார்.



     நீண்ட நாட்களாகக் காணாமல் போன ஜனகராஜ் இப்போது வரப்போகும் படம் ஒன்றில் நடித்து வருகிறாராம்.  சினிமா விகடனில் படித்தேன்.  படம் பெயர் 96!



     இன்றைய பாடல் காட்சியில் அவர்தான் நடித்திருக்கிறார்.



அதிகாலையில் பனிக்காற்றுகள் வீசிடக் கண்டேன் 
குளிரே தீண்டாதிரு 

பூக்கள் விழித்து கண்கள் துடைத்து காலை வணக்கம் சொல்லும் 
தூங்கிக் கிடந்த சூரியன் எழுந்து சோம்பல் முறித்துக் கொள்ளும் 
குளிக்கும்போது தெறிக்கும் துளியில் கோடி வைரங்கள் மின்னும் 

அம்மா கொடுப்பாள் காபி கலந்து என்றும் அதுதான் இனிக்கும் மருந்து 
தோசை ஆறும் ருசியும் மாறும் முதலில் கைப்பற்ற முந்து 

பார்த்துப் புளித்துக் கசந்த போதும் பழகிப்போன பந்தம் 
உயிரில் நிறைந்து மனதில் வழிந்து சுகங்கள் வளர்க்கும் சொந்தம் 
கூட்டிப்பெருக்கிக் கழித்துப் பார்த்தால் வாழ்வில் அன்பே மிஞ்சும் 


36 கருத்துகள்:

  1. கல்யாண காலம்னு படம் வந்தது கொஞ்சம் கொஞ்சம் நினைவில் இருக்கு. பாடல் எல்லாம் தெரியாது.

    பதிலளிநீக்கு
  2. இன்னிக்கும் யாரும் இல்லையா?

    பதிலளிநீக்கு
  3. ஹெலோ யாராச்சும் வாங்க! ஶ்ரீராம் உடம்பு சரியில்லையா? ஊரில் இல்லையா? மத்தவங்கல்லாம் எங்கே? நான் கத்தறது காதில் விழலையா?

    பதிலளிநீக்கு
  4. இதோ வந்துட்டேன்...
    பயப்படாம இருங்கோ!...

    பதிலளிநீக்கு
  5. எபியோட கதவை சிமெண்ட் வெச்சு பூசியிருந்தா யார் என்ன செய்ய முடியும்?...

    பதிலளிநீக்கு
  6. பாவம் ... அந்தச் சின்னக் கொயந்தை பயந்து பூடிச்சு....

    முண்டக்கண்ணி அம்மன் கோயில்ல மந்திரிச்சு வேப்பிலை அடிக்கோணும்...

    பதிலளிநீக்கு
  7. அப்பாடா! அது சரி, ஶ்ரீராம் எங்கே போனார்? தி/கீதா வர முடியாது! மத்தவங்க யாரையும் காணலையே!

    பதிலளிநீக்கு
  8. அதானே, மீ ஒன்லி குழந்தை! போன மாசம் தானே பிறந்தேன்! தனியா விட்டுட்டு எல்லோரும் எங்கேயோ போயிட்டாங்க! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    பதிலளிநீக்கு
  9. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். ஆன்மீக சுற்று. குடந்தையில் உள்ளேன்.

    பதிலளிநீக்கு
  10. பொண்ணாப் பொறந்ததுக
    வீராங்கனைகளா இருக்கோணும்...

    இப்படியா பயந்து நடுங்குறது?...

    பதிலளிநீக்கு
  11. பாடல் அழகா இருக்கு. சின்னவயது சுஹாசினி,ஜனகராஜ் சூப்பர்.

    பதிலளிநீக்கு
  12. ஸ்ரீராம் கும்மோணத்துக்குப் போனாரு...

    சரி... எபியும் எதுக்கு போனது!?...

    பதிலளிநீக்கு
  13. நேற்றைய பதிவின் தொடர்பின்னூட்டங்களையே இப்போதுதான் படித்துமுடித்தேன். (கால்பந்து உலகக்கோப்பை இரவு 10 3/4 வரைப் பிடித்துக்கொண்டது.)

    ‘எங்கள் ப்ளாக் பப்ளிஷிங் ஹவுஸ்’ ஆரம்பித்தால், நம்ப ‘ஞானி’யின் புத்தகத்தோடு மங்களகரமாக ஆரம்பித்து, ’கிழக்கு’ மேற்கு போன்றவைகளை ஓட ஓட விரட்டிவிடலாம்..!

    குடந்தையில்போய் ஆன்மீகமா - பேசா
    மடந்தையாகிவிட்டீரே என நினைத்தேன்..

    பதிலளிநீக்கு
  14. குலதெய்வத்தை தரிசித்து 21 வருடங்களாகி விட்டன. அதுதான். கூடவே இங்கிரிக்கும் சில கோவில்களையும் தரிசிக்கும் முகத்தான்.....!!!

    பதிலளிநீக்கு
  15. இந்தப் படத்தில் கடைசியாக மண்டையைப் போட்டு ஒருவழியாக கல்யாணத்தை நிறுத்துவார்...

    மூக்கைச் சுருக்கிக் கொண்டு சுகாசினி சிரிப்பது நினைவுக்கு வருகிறது..

    பதிலளிநீக்கு
  16. சொல்ல மறந்துட்டேன்...

    கும்மோணாத்துக் கடத்தெருவுல உசாரு!...

    பதிலளிநீக்கு
  17. இந்தப்பாடல் கேட்டு இருக்கிறேன்.

    தில்லானா மோகனாம்பாள் படத்தில் நடிகர் செந்தாமரை நடித்து இருந்ததை பார்த்து எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  18. ஸ்ரீராம் ஆன்மீக சுற்றா?
    மகிழ்ச்சி அதுவும் குடந்தை!
    நிறைய கோவில்கள் தரிசனம் செய்யலாம்.

    பாடல் நன்றாக இருக்கிறது.
    இது போன்ற பாடல் இதே அம்மா காப்பி தருவது போல் காப்பியைப் பற்றி ஒரு பாடல் அதிகாலை வேளையில் உண்டே.
    அதுவும் பாலசுப்பிரமணியம் பாடியது தான்.
    பாலைவனச் சோலைக்கு பிறகு எடுத்த படம் போல் இருக்கிறது.


    பதிலளிநீக்கு
  19. பாடல் ரொம்ப சுமார். பாடல் வரிகள் நீங்கள் சொல்லியுள்ளதுபோல் மிக சுமார்.

    பதிலளிநீக்கு
  20. பாலைவனச் சோலை வெற்றிக்குப்பிறகு ராபர்ட் ராஜசேகர் இணைந்து இயக்கிய கடைசிப்படம். முதல் படம் பா.வ.சோ. நெஞ்சில் ஒர் ஆலயத்திற்குப் பிறகு ஒரே ஒரு செட்டில் படமாக்கப்படம் இது என்றார்கள். அப்போதெல்லாம் சுஹாசினி ஒப்பனை இல்லாமல் நடிப்பார்.

    பதிலளிநீக்கு
  21. படம் பார்க்காமல் பாட்டுக் கேட்கிறேன்.. நன்றாகவே இருக்கு, இதன் ஆரம்ப வரிகள் மட்டும் கேட்ட நினைவாக இருக்கு...

    அது சரி இதில் கிழக்கு எங்கே காணமே?:)...

    பதிலளிநீக்கு
  22. ஏகாந்தன் Aekaanthan ! said...
    நேற்றைய பதிவின் தொடர்பின்னூட்டங்களையே இப்போதுதான் படித்துமுடித்தேன். (கால்பந்து உலகக்கோப்பை இரவு 10 3/4 வரைப் பிடித்துக்கொண்டது.)
    ////

    ஆவ்வ்வ்வ் ஏகாந்தன் அண்ணன் நீங்களும் பார்க்கிறீங்களோ? எங்கள் வீட்டில் எல்லோருமே ஃபுப்போல் பிரியர்கள்... எனக்குப் பிடிக்காவிடினும் கும்பலில் கோவிந்தா போடுவேன்ன் .. என்னை விட்டுவிட்டு மச் பார்த்திட முடியுமோ வீட்டில்..

    நீங்க லைவ்வா தானே பார்ப்பீங்க.. ரெக்கோர்ட் பண்ணிப் பார்க்க மாட்டீங்களே? ஏனெனில் இனிப் பார்க்கும்போது ஏகாந்தன் அண்ணனும் எதிர் ஸ்ரேடியத்தில் 4 வது வரிசையில் இருப்பதாக நினைச்சுக் கொள்கிறேன்ன்:))

    ///‘எங்கள் ப்ளாக் பப்ளிஷிங் ஹவுஸ்’ ஆரம்பித்தால், நம்ப ‘ஞானி’யின் புத்தகத்தோடு மங்களகரமாக ஆரம்பித்து, ’கிழக்கு’ மேற்கு போன்றவைகளை ஓட ஓட விரட்டிவிடலாம்..!///

    ஹா ஹா ஹா ஞானிக்குப் புத்தகமோ? கை ஏடுகூடக் கிடையாதே:)).. இந்த ஞானி ஒரு முற்
    றுரும் துறந்த முனிவர்... சிரட்டை கூடக் கையில இருக்காது.. ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
  23. பாடல் காணொளி இல்லாம இனிமையா இருக்கு .
    ஜனகராஜ் படத்தில் எனக்கு சிந்துபைரவி ரொம்ப பிடிக்கும் .
    ஜனகராஜ் நியூ காலேஜில் படிச்சார்னு அங்கிள் ஒருவர் சொன்னார் .ஒரு ஆக்சிடண்டில் கண்ணுக்கு அருகில் போட்ட தையல் காரணமா ஒரு கண்ணு பெரிசா இருக்கும் மற்றது சுருங்கி .அதுவே அவருக்கு சினி பீல்டில் அட்வாண்டேஜானதாம் .

    இந்த பாட்டில் மட்டுமில்லை எந்த பாட்டனாலும் சுஹா தலை விரிச்சி ப்ரஷ் பண்ற காட்சி அடிக்கடி வரும் :)
    கூடவே ஒரு அசட்டு புன்னகை :)

    பதிலளிநீக்கு
  24. ஜனகராஜ் என்றாலேயே தங்கமணி ஊருக்குப் போயிட்டாதான் நினைவுக்கு வருகிறது ஒவ்வொருவருக்கு ஓரோர் பாணி இந்தப் படம் பாடல் வரும் படம் ரிலேடிவ்லி பழையதாக இருந்தாலும் நான்பார்க்காதது

    பதிலளிநீக்கு
  25. @ athira: //ஆவ்வ்வ்வ் நீங்களும் பார்க்கிறீங்களோ? எங்கள் வீட்டில் எல்லோருமே ஃபுப்போல் பிரியர்கள்...//

    பார்க்கிறீர்களாவா! டிவிக்குள் தலையை விட்டுக்கொண்டு உட்கார்ந்து விடுவது வழக்கம். உருகுவே-எகிப்து மேட்ச்சிலிருந்து இப்போது கொஞ்சம் வெளிவந்து எபி நுழைந்து பார்க்கையில்தான் உங்கள் கமெண்ட் மேலே..

    பதிலளிநீக்கு
  26. சுகாசினிக்கு பருவவயதிலேயே ஒரு ‘மாமி’ லுக் (இதைப் படித்தாரானால், உடனே கேஜிஜி கீசு-வின் அம்மா படத்தைத் தேடி ரெஃப்ரெஷ் பண்ணிக்கொள்ள முயற்சிக்ககூடும்!)

    ஜனக்ராஜ் திறமையான நடிகர். இயக்குனர்கள் எவ்வளவு லட்சணமாக அவரைக் கையாண்டிருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து அவரது பர்ஃபார்மன்ஸ் அமையும். நாயகனில் அவர் அபாரமாக வெளிப்பட்டுள்ளார். கார்த்திகாவுடன் வரும் சீனிலும் அந்தப்பாட்டிலும் (!) (நிலா அது வானத்து மேலே..பலானது ஓடத்து மேலே.. (இளையராஜா ஆல்ரவுண்ட் சாகஸம்)

    வைரமுத்துவின் வரிகளில் நான் கவிதையை அபூர்வமாகத்தான் பார்க்கிறேன். அங்கங்கே வாலைப்பிடித்து, ஆளைப் பிடித்து அவார்ட் வாங்க அலைய ஆரம்பிட்த அந்த நாளில் கவிதா தேவதை அவரைவிட்டுப் பறந்துவிட்டது.

    இருப்பினும் இங்கே குறிப்பிடுகிறேன்: ராஜபார்வையின் ’அந்திமழை பொழிகிறது.. ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது..’ அபாரம்-ஒரு எக்ஸப்ஷன் எனக் கொள்க. அதற்கப்புறம் அவர் எழுதிய லட்சணத்தைப்பார்த்தால் பா.விஜயே பரவாயில்லை என்பேன்.

    பதிலளிநீக்கு
  27. வணக்கம் சகோதரரே

    ஜனகராஜ் ஒரு நல்ல நடிகர் காமெடியை விட குணச்சித்திர பாத்திரத்தில் நன்றாக பிரகாசிப்பார். இந்த பாடல் கேட்டதில்லை. படமும் கேள்வி பட்டதில்லை. இப்போது கேட்டதில் நன்றாகவே இருந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி. தாமதமான வருகை தந்தமைக்கு வருந்துகிறேன்.

    நேற்றைய பதிவின் பின்னூட்டங்களை அனைத்தும் படித்தேன். அனைவரின் கருத்துக்களும். தங்களின் பதில் கருத்துக்களும் அருமை.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  28. வணக்கம் 🙏.

    இதுவரை கேட்டிராத பாடல். அத்தனை ஈர்க்கவில்லை.

    பதிலளிநீக்கு
  29. @ஏகாந்தன் ஸார் :))

    // இதைப் படித்தாரானால், உடனே கேஜிஜி கீசு-வின் அம்மா படத்தைத் தேடி ரெஃப்ரெஷ் பண்ணிக்கொள்ள முயற்சிக்ககூடும்!)//#


    ஹாஹாஆ :))) கீசுவோட பாட்டி இன்டெர்வியூ ஒன்னு பார்த்தேன் பாட்டி செம்ம கியூட்


    சுஹா படிச்சி முடிச்சி அசிஸ்டன்ட் டைரக்டரா இருக்கும்போதுதான் நடிக்க வந்தாங்க ஆனா கீசுவோட மம்மி ஸ்கூல் படிக்கும்போதே நடிக்க வந்தாச்சு :)

    பதிலளிநீக்கு
  30. துளசி: இந்தப் படம் நான் நாகர்கோவிலில் இருந்த போது பார்த்திருக்கிறேன். பாடல் நினைவில்லை கேட்டதும் ஓரளவு நினைவு வந்தது.

    கீதா: இப்படி ஒரு படம் வந்ததே தெரியாது ஹா ஹா ஹா ஹா ஹா...பாடல் கேட்டிருக்கிறேன். ஆனால் இந்தப் படம் என்பதெல்லாம் தெரியாது. இப்பத்தான் இப்படி ஒரு படம் அதில்தான் இந்தப் பாடல் அப்படினு தெரிஞ்சுச்சு... ஆரம்பம் சங்கர்கணேஷ் இசை என்பதைக் காட்டிக் கொடுக்கிறது.

    பதிலளிநீக்கு
  31. மிகவும் நன்றி. அம்மா கொடுப்பாள் காபி கலந்து... இந்த ஒரு வரி நீண்ட நாட்களாக தலையை குடைந்து கொண்டு இருந்தது தீர்வு கொடுத்ததற்கு நன்றி!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!