செவ்வாய், 15 செப்டம்பர், 2009

எங்கள் இதயபூர்வமான அஞ்சலி

சென்னை : கர்நாடக மாநிலம் பெங்களூரு ராமச்சந்திரா புரத்தில் வசிக்கும் தொழிலதிபர் சேகரின் மகள் அபிராமி(9). இவருக்கு, கடந்தாண்டு செப்டம்பர் 23ல், சென்னை முகப்பேரில் உள்ள, "பிராண்டியர் லைப் லைன்' மருத்துவமனையில், இதயேந்திரனின் இதயம் பொருத்தப்பட்டது. டாக்டர் செரியன் தலைமையிலான டாக்டர்கள், 45 நிமிடம் போராடி, சிறுமி அபிராமிக்கு இதய மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனர். தொடர்ந்து ஒரு மணி நேரம் சிறுமிக்கு இதய துடிப்பு, ரத்த அழுத்தம் உட்பட பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டன. தொடர் கண்காணிப்புக்குப் பிறகு சிறுமி அபிராமி, மீண்டும் சுட்டிக் குழந்தையாக இவ்வுலகை வலம் வந்தாள். இச்சம்பவத்திற்கு பிறகு, தமிழகம் முழுவதும் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு பன்மடங்கு பெருகியது.

கடந்த மாதம் வரை பட்டாம்பூச்சியாய் பறந்து திரிந்த அபிராமிக்கு, 10 நாட்களுக்கு முன், பழைய முறையிலான நோய் அறிகுறிகள் தென்பட்டன. உடனே, சென்னைக்கு வரவழைக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து இரவு பகலாக டாக்டர்கள் அவளைக் கண்காணித்து வந்தனர். ஆனால், பொருத்தப்பட்ட இதயம் ஒத்துழைக்காததால், நேற்று முன்தினம் இரவு, சிகிச்சை பலனின்றி அபிராமி இறந்து போனாள். இடைவிடாத முயற்சியினால், அபிராமியின் உயிரை மீட்டெடுத்த அவளது பெற்றோருக்கு அவளது மரணம், பேரிடியாக இருந்தது. அதையும் அவர்கள் தாங்கிக்கொண்டு, கண்ணீரோடு, அபிராமியின் கண்களை எழும்பூர் கண் மருத்துவமனைக்கு தானமாக கொடுத்தனர். அன்று நள்ளிரவே அவளது உடலை பெங்களூரு கொண்டு சென்றனர். இறந்தும் கண்களை தானமாக விட்டுச் சென்ற அபிராமி, மீண்டும் தமிழக மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்றுவிட்டாள். ஆனால், அவளின் திடீர் மரணமோ, இதய மாற்று அறுவை சிகிச்சையில் ஈடுபட்ட டாக்டர்கள் மற்றும் உறுப்பு தான விழிப்புணர்வாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்திருக்கிறது.

DIVYA NCM

4 கருத்துகள்:

  1. Jaya TV news said that she came for regular check up?

    பதிலளிநீக்கு
  2. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தோல்வி. தானம் பெற்ற இதயம் வேலை செய்யவில்லை. வேதனையான அந்த நேரத்திலும் கண்களை தானம் செய்தது நெகிழ்ச்சி. வெற்றியில் தோல்வியா..தோல்வியில் வெற்றியா...

    பதிலளிநீக்கு
  3. கடவுளுடைய கணக்கு சில சமயம் நமக்குப் புரிவதில்லை.

    http://kgjawarlal.wordpress.com

    பதிலளிநீக்கு
  4. என்னதான் இதய மாற்று உறுப்பு மாற்று சிகிச்சையில் நாம் வெற்றி கண்டு விட்டதாக நினைத்துக் கொண்டாலும், இன்னும் இயற்கையின் ஒவ்வாத விஷயத்தை ஒதுக்கும் இயல்புக்கு மாற்றுக் காண வில்லை என்பது ஒரு வியப்பு. இப்படியிருக்கும் போது விரும்பத்தகாத பலப்பல இயல்புமீறல்கள் நமக்குள் புகுந்து நம்மை வதைப்பதைப் பார்க்கும் போது ஏன் எதிர்ப்பு இயல்பு இவற்றை வெற்றி கொள்ள முடியவில்லை என்ற சோகமும் தலை தூக்குகிறது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!