செவ்வாய், 20 மே, 2014

தஞ்சாவூர்



கல்யாணமகாதேவி வேலைகள் முடிந்தபின் அங்கிருந்து நேராக தஞ்சாவூர் என்றபோதே ஒரு மகிழ்ச்சி பரவியது மனதில்! "பள்ளி சென்ற கால முல்லைகளே" என்று பாடல் வரிகளை முணுமுணுத்தது உதடுகள்!

                                                 


எங்கள் குழுவில் ஒவ்வொரு ஊரிலும் வழி சொல்ல ஒருவர் இருந்தாலும் தஞ்சை பற்றி யாரும் அறியவில்லை என்பதால் வழி தேட அலைபேசியில் பேசத் தொடங்கியவர்களை இடைமறித்தேன். "இனி வழிக்கு நான் பொறுப்பு" என்றேன்! இத்தனைக்கும் நாற்பது வருடங்களுக்கு முன் தஞ்சையை விட்டுச் சென்றது.

பெரிய மாற்றமில்லை. பைபாஸ் ரோடிலிருந்து திரும்பிய இடம் நாஞ்சிக்கோட்டை ரோட் என்று அறிந்ததும் முதல் மகிழ்ச்சி. நான் படித்த பள்ளியைத் தாண்டித்தான் செல்ல வேண்டும். 


பள்ளியின் மேரிஸ் கார்னர் காம்பவுண்ட் கண்ணில் பட்டபோது சந்தோஷம் பொங்கியது! அந்த அருள் தியேட்டர் இன்னும் அங்கே! "நினைத்தாலே இனிக்கும்" பல லாரல் ஹார்டி நினைவுகளை உண்டாக்கியது அந்தத் தெரு.
இந்த சர்ச்சுக்குள் எத்தனை முறை சென்று வந்திருப்பேன். இந்த கேட்டுக்கு அருகில் எத்தனை குச்சி ஐஸ், பால் ஐஸ் சாப்பிட்டிருப்பேன்!
                    
உள்ளே சென்று திரும்பினேன்.

                


அங்கு நின்றிருந்தவரிடம் 'நீங்கள் இங்கு வேலை பார்க்கிறீர்களா?' என்று கேட்டபோது, மறுத்து, தான் ப்ளஸ் டூ பேப்பர் வேல்யுவேஷனுக்காக வந்ததாகச் சொன்னார்.


பள்ளிக்குள் சென்று புகைப்படம் எடுத்ததும், ப்ளஸ் டூ விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்றதால் அங்கிருந்த வெளி அலுவலர் ஆயுதம் தாங்கிய காவலருடன் வந்து மிரட்டியதும், என் உணர்ச்சிவசப்பட்ட நிலை கண்டு, என் தோளைத் தட்டிக் கொடுத்து விலகியதும்...

என்னுடைய ஆசிரியர்கள் என்று நான் நினைவு கூர்ந்த தொண்ணூறு சதவிகித ஆசிரியர்கள் காலமாகி விட்டதாக அலுவலக உதவியாளர் சொன்னபோது கஷ்டமாக இருந்தது. பின்னே இத்தனை வருடங்கள் இருப்பார்களா என்ன என்ற எண்ணமும் எழுந்தது.
                         

வசித்த ஓல்ட் ஹவுசிங் யூனிட், மருத்துவக்கல்லூரி சாலை, வ வு சி நகர் என்று தாண்டிச் செல்லத்தான் நேரம் இருந்தது. 
               

அந்தக் கலை அரங்கத்தில்தான் எத்தனை நிகழ்ச்சிகள் பார்த்திருக்கிறேன்... என் நண்பன் கலந்து கொண்ட மாறுவேடப் போட்டி முதல், எங்கள் பள்ளி ஆசிரியர் பாடிய இசை நிகழ்ச்சி வரை... அந்த உடைந்த பின் ஜன்னல் கூட சரி செய்யப்படவில்லை! இதன் நேர்பின்னே என் வீடு!

இத்தனை வருடங்கள் கழித்தும் நிறம் மாறாத, கூரை மாறாத பாலர்பள்ளி, அருகிலேயே லைப்ரேரி... இந்த லைப்ரேரி எத்தனை நினைவுகளை மீட்டெடுக்கிறது எனக்குள்! நானே லைப்ரேரியைப் பார்த்துக் கொண்ட நாட்கள், கையெழுத்துப் பத்திரிக்கை நடத்திய நாட்கள்...இன்னும் இன்னும்...

              


மருத்துவக்கல்லூரி சாலையில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவில் மறுநாள் அதிகாலை சென்றால், அங்கு ஏற்கெனவே காத்திருந்த பக்தர்கள், கோவில் இன்னும் திறக்கவில்லை, இன்னும் அரைமணி நேரம் ஆகலாம் என்றனர். நான் இருந்தபோது சாலைகள் மிகவும் குறுகலாக இருக்கும். இப்போது நல்ல முறையில் இருந்தது. இந்த ஆஞ்சநேயர் கோவிலுக்கும், அருகிலேயே இருக்கும் மசூதிக்கும் அடிக்கடி வருவோம். இரண்டுக்கும் இடையேதான் எங்கள் ரேஷன் கடை இருந்தது. அந்தக் கடையை ஒட்டி சந்தில் நடந்தால் ராஜேந்திரா (டூரிங்) டாக்கிஸ் வரும்!
           



கொஞ்சம் அஜாக்கிரதையாக சைக்கிள் ஓட்டினால் ஓரத்தில் இருக்கும் சரிவில் விழுந்து கீழே சென்றுவிடும் அபாயமாக இருந்த மேம்பாலம் இப்போது நான்கு வழிச்சாலையாக அழகாக இருந்தது. எங்கள் 'வெண்சங்கு' பஸ் ஒருமுறை இந்த மேம்பாலத்திலிருந்து கவிழ்ந்து விழுந்திருக்கிறது!

                                        


மேலவீதியில் நண்பரைப் பார்க்க சங்கர மடம் சென்றபோது காமாட்சி அம்மனின் அற்புதத் தரிசனம் கிடைத்தது. 


மேம்பாலம் கிட்டத்தட்ட ராணி பேரடைஸ் தியேட்டர் தாண்டி முடிவைடைகிறது. பெரிய கோவிலைச் சுற்றி வந்தோம். மாலை 6.30 மணிக்கு மேல் ஆகி விட்டதால் நிறைய புகைப்படங்கள் இங்கு எடுக்க முடியவில்லை.

                            



சிவகங்கைப் பூங்கா செல்லும் ஆசையும் நேரமின்மை காரணமாக முடியாமல் போனது. சென்ட்ரல் லைப்ரேரி, திருவள்ளுவர் தியேட்டர் வழியாக (ஓல்ட்) பஸ் ஸ்டேண்ட் சென்று திரும்பி கும்பகோணம் செல்லும் சாலையைப் பிடித்தோம்.




முன்பு சாந்தி ஸ்டோர்ஸ் எதிரே, ஆனந்தபவன் அருகே இருந்த ரயில்வே ஸ்டேஷன், இப்போது மேரிஸ் கார்னரில் இருந்தது ஆச்சர்யம். அந்தப்பக்கமாகச் சென்று ஈவினிங் பஜார், சாந்தப்பிள்ளை கேட், யாகப்பா தியேட்டர், ஞானம் தியேட்டர் (இப்போது ஹோட்டலாக மாறியிருக்கிறதாம்) ராஜா கலையரங்கம் தியேட்டர், மங்களாம்பிகா ஹோட்டல், மணிக்கூண்டு இவற்றை மனக்கண்களால் பார்த்தபடியே கும்பகோணம் சாலையில் விரைந்தோம்!


"தஞ்சைக்கு மறுபடி வரவேண்டும்"

25 கருத்துகள்:

  1. ஹிஹிஹி, சங்கர மடத்தைத் தான் சங்கர மேடம் னு உணர்ச்சி வசப்பட்டு எழுதி இருப்பீங்க போல! :))) இம்பொசிஷன் ஆரம்பம். :)

    பதிலளிநீக்கு
  2. // ஆனந்தபவன் அருகே இருந்த ரயில்வே ஸ்டேஷன், இப்போது மேரிஸ் கார்னரில் இருந்தது //

    அடப்பாவிகளா.. ரயில்வே ஸ்டேஷனையே மாத்திட்டாங்களா ?

    பதிலளிநீக்கு
  3. ஊர் நினைவுகள் என்றாலே மகிழ்ச்சிதான்! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  4. உங்கள் ஊருக்குச் சென்ற மகிழ்ச்சி என்னையும் தொற்றிக் கொண்டது.ஒவ்வொரு வரியிலும் உங்கள் சந்தோஷம் பளிச்சிடுகிறது. பெற்றதாயும் பிறந்த மண்ணும் என்று இதைதான் சொல்கிறார்கள் போல.

    பதிலளிநீக்கு
  5. படங்களைப் பார்க்கப் பார்க்க எனக்கும் மகிழ்ச்சியாய இருந்தது, ஸ்ரீராம்!

    தஞ்சையில் 'ராணி வாய்க்கால் தெரு' என்று பெயர் கொண்ட தெருவில் அரண்மனை மாதிரி படிகள் கொண்ட வீட்டில் சில காலம் இருந்தோம். எனது 'ஆத்மாவைத் தேடி' பதிவில் இந்த வீடு பற்றிய என் நினைவுகள் பதிந்திருக்கின்றன.

    ஹூம்!.. 'நெஞ்சம் மறப்பதில்லை; நினைவுகள் அழிவதில்லை!'..

    பதிலளிநீக்கு
  6. //ஹிஹிஹி, சங்கர மடத்தைத் தான் சங்கர மேடம் னு உணர்ச்சி வசப்பட்டு எழுதி இருப்பீங்க போல! :))//

    ஹஹ்ஹா.. நகைச்சுவை உணர்வு கீதாம்மாவுடன் கூடப்பிறந்தது..
    கொடுத்து வைத்தவர்கள்!..

    பதிலளிநீக்கு

  7. சங்கர மடத்தில் சர்வாலங்கார பூஷிதையாக காமாட்சி அம்மனைக் கண்டதும் விரல்கள் தானாக மடத்தை மேடம் ஆக்கி விட்டது போலும்! கீதா மேடம் திருத்தி விட்டேன்! இங்கே இம்போசிஷன் எழுதினால் காமாட்சி அம்மன் வருத்தப் படுவார்கள்!

    மாதவன்.. நீங்கள் மன்னார்குடி என்பதால் தஞ்சை வந்து சென்றிருப்பீர்கள் இல்லையா! இந்த மாற்றம் எனக்கும் ஆச்சர்யமாகத்தான் இருந்தது.

    நன்றி 'தளிர்' சுரேஷ்!

    நன்றி RR மேடம்...

    நன்றி வல்லிம்மா..ரொம்ப சந்தோஷமான நிமிடங்கள் அவை... வயது குறைந்து விட்டது போல உணர்வு!

    ஜீவி ஸார்... நீங்கள் சொல்லியிருக்கும் இடம் எது என்பது சரியாக நினைவில் இல்லை. சில இடங்களின் பெயர்களே மறந்து போய்விட்டது! பதிவை இன்னும் நீட்டி எழுத ஆசைதான்.... ஆனால் யார் படிப்பார்கள்! அதனால் சுருக்கி விட்டேன்!

    பதிலளிநீக்கு
  8. ஒவ்வொரு நிகழ்விலும் இனிய நினைவுகள் + ஆதங்கத்துடன்...

    பதிலளிநீக்கு
  9. Thanks for bringing latest photos of Thanjavur. Its always awesome, with childhood memories.

    பதிலளிநீக்கு
  10. அட! நாலாவது படத்தில் இரட்டை இலைக்காரர் தாமரையை இரசித்துக்கொண்டிருக்கிறாரே! அம்மாவுக்கு இது தெரிந்தால் என்ன ஆகும்!

    பதிலளிநீக்கு
  11. படித்த பள்ளிக்குப் பல ஆண்டுகள் கழித்துச் செல்லும் போது ஏற்படும் உணர்வுகளை அத்தனை எளிதில் வார்த்தைகளில் வடித்து விட முடியாதுதான். ஒவ்வொரு இடமும் நமக்குத் தரும் இனிய நினைவுகளோடும் நெஞ்சு நிறைய நன்றியோடும் திரும்பும் அனுபவம்.

    பதிலளிநீக்கு
  12. சிறந்த பயணப் பகிர்வு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  13. உங்கள் பதிவில் உங்கள் சிறு வயது பளிச்செனத் தெரிகிறது. உற்சாகம் கொப்பளிக்க வந்து விழுந்திருக்கின்றன எழுத்துக்கள். மிகவும் அருமையாக பகிர்ந்து கொண்டுள்ளீர்கள் அதுவம் நீங்கள உணர்ச்சி வசப்பட்டு துப்பாக்கிக் காவலரையே சமாதானப்படுத்த வைத்து விட்டீர்களே
    நன்றி ஸ்ரீராம் சார் பகிர்விற்கு.

    பதிலளிநீக்கு
  14. சொந்த ஊருக்குப் போனால் எல்லோருக்குமே 'திரும்பி இன்னொரு முறை வரவேண்டும்' என்று தான் தோன்றும்.

    அருமையான நினைவுகள்.

    ஆமாம், பொன்னியின் செல்வன் நினைவுக்கு வரவில்லையா?

    நாங்கள் ஒருமுறை தஞ்சாவூர் சென்றபோது எங்கள் மாமா, குந்தவையும் ராஜராஜனும் இந்த வழியாகத் தானே நடந்து சென்றிருப்பார்கள் என்று கேட்க, அத்தனை பெரும் அப்படியே மௌனத்தில் ஆழ்ந்துவிட்டோம்!

    பதிலளிநீக்கு
  15. நாம் படித்த, வளர்ந்த ஊருக்குச் செல்வதில் தான் எவ்வளவு ஆனந்தம். உங்களுக்குக் கிடைத்த மன நிறைவு உங்கள் பதிவில் தெரிகிறது....

    பதிலளிநீக்கு
  16. ஆட்டோக்ராப் பார்ட் 2 பார்த்தது மாதிரி இருந்தது..

    பதிலளிநீக்கு
  17. உங்கள் பேனா வழியாக தஞ்சையைப் பார்ப்பது வித்தியாசமாக இருந்தது!

    இப்போதும் ரயில்வே ஸ்டேஷன் சாந்தி ஸ்டோர்ஸ் எதிரே முன்பு இருந்த பத்மா ஹோட்டல் அருகே தான் உள்ள‌து. மேரீஸ் கார்னர் அருகேயுள்ள தொலைபேசி நிலையம் அருகேயுள்ள‌ சாலையில் நடந்து என்றால் ரயில்வே ஸ்டேஷனின் பின்பக்கம் வரும். 4, 5, பிளாட்ஃபார்ம் அடையலாம். அங்கேயிருந்து முகப்பிற்குச் செல்லலாம்.

    நானும் கரந்தை ஜெயக்குமார் சாரும் மருத்துவக் கல்லூரி சாலையில் தான் இருக்கிறோம். ஒரு ஃபோன் செய்திருந்தால் நாம் சந்தித்திருக்கலாம்!!

    இந்த பாலர் பள்ளி எங்கிருக்கிறது?

    பதிலளிநீக்கு
  18. நன்றி DD

    நன்றி ராமுடு... நீங்கள் தஞ்சாவூரா!

    கே ஜி ஜி....! :)))

    சரியாகச் சொன்னீர்கள் ராமலக்ஷ்மி... நன்றி!

    நன்றி ஜீவலிங்கம் காசிலிங்கம்

    நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் மேடம்..

    ரஞ்சனி மேடம்.. வந்தியத்தேவன் நினைவுக்கு வராமல் இருப்பாரா... ராஜராஜனை தாராசுரத்தில் நினைவு கூர்ந்தோம்.

    உண்மைதான் வெங்கட். நன்றி.

    கோவை ஆவி.. நல்லாயிருக்கு என்கிறீர்களா.. வேறு ஏதாவதா! :)))


    மனோ மேடம்... உங்கள் தொலைபேசி எண் என்னிடம் இல்லையே... மேலும் நீங்கள் தஞ்சையில் இருக்கிறீர்களா, வெளிநாட்டில் இருக்கிறீர்களா என்றும் தெரியாது. (நீங்கள் தஞ்சை என்று தெரியும்)

    நாங்கள் நாஞ்சிக் கோட்டை ரோடிலிருந்து இடதுபுறம் திரும்பி ஈஸ்வரி நகர் வந்து விட்டோம். திரும்பச் செல்லும்போது மேரிஸ் கார்னர் வழியாக செல்ல வேண்டும் என்ற விருப்பம் இருந்தாலும் நேரமில்லாததால் மேம்பாலம் வழியாக பஸ் ஸ்டேன்ட் அடைந்ததால் சாந்தி ஸ்டோர், யாகப்பா தியேட்டர் எல்லாம் பார்க்க முடியாமல் போனது!

    இந்த பாலர் பள்ளி தஞ்சை ஓல்ட் ஹவுசிங் யூனிட்டில் இருக்கிறது!

    பதிலளிநீக்கு
  19. மலரும் நினைவுகள் மிக அருமை.
    ஊரு இப்போது எல்லாம் அடிகடி மாறி விடுகிறது, ஒருமுறை பார்த்தமாதிரி அடுத்தமுறை இருப்பது இல்லை. பழமைமாறி விட்டால் பழமையை எதிர்ப்பார்த்து போனால் ஏமாற்றம் தான் மிஞ்சும் நமக்கு.
    ஆனால் பள்ளியில் உடைந்த பின் ஜன்னல் சரி செய்யப்படாமல் அப்படியே இருப்பது ஆச்சிரியம் தான்.

    பதிலளிநீக்கு
  20. ஸ்ரீராம் சார்! நான் கடந்த 4 மாதங்களாக தஞ்சையில் தான் இருக்கிறேன் ஒரு வீடு கட்டுவதற்காக!

    எங்களின் தற்போதுள்ள இல்லத்திலிருந்து [ மருத்துவ கல்லூரி சாலை] பழைய ஹவுஸிங் யூனிட் செல்லும் வழியில் பாலர் பள்ளியை பார்த்ததாக ஞாபகம். அதனால் தான் கேட்டேன். பதிலுக்கு அன்பு நன்றி!!

    பதிலளிநீக்கு
  21. #வெளி அலுவலர் ஆயுதம் தாங்கிய காவலருடன் வந்து மிரட்டியதும், என் உணர்ச்சிவசப்பட்ட நிலை கண்டு, என் தோளைத் தட்டிக் கொடுத்து விலகியதும்...#
    நல்ல வேளை தப்பித்தீர்கள் ...பழைய நினைப்பில் மூழ்கி விட்டீர்களே!

    பதிலளிநீக்கு
  22. பழைய நினைவில் மூழ்குவதைக் காட்டித்தான் சமாளித்தேன்! :)))))

    பதிலளிநீக்கு
  23. நன்றி மனோ மேடம், மீள் வருகைக்கு

    நன்றி கோமதி அரசு மேடம்... பள்ளியின் உடைந்த ஜன்னல் அல்ல, கலை நிகழ்ச்சிகள் நடக்கும் கலை அரங்கின் ஜன்னல்! :))))))) அந்த மண்ணை மிதித்தபோது நேற்றுவரை கூட அங்குதான் இருந்தது போல உணர்வு!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!