செவ்வாய், 21 ஜூன், 2016

கேட்டு வாங்கிப் போடும் கதை :: பிரமி



          எங்களின் இந்த வார "கேட்டு வாங்கிப் போடும் கதை" பகுதியில் கற்றலும் கேட்டலும் தளம் வைத்திருக்கும் ராஜி எனப்படும் ரேவதி வெங்கட் அவர்களின் படைப்பு.   

          இப்போதெல்லாம் வலைத்தளத்தில் அவர் எழுதுவதில்லை என்றாலும் ஃபேஸ்புக்கில் சுறுசுறுப்பாகச் செயல் பட்டுக் கொண்டிருக்கிறார்.    வெண்பா எழுதுவார்.

          கதை பிறந்த கதை பற்றிய அவர் எழுத்துகளுக்குப் பின் அவர் படைப்பு.

 ========================================================================
கதை பிறந்த கதை :


ஒரு நாள் இரயிலில் பயணம் செய்ய நடைமேடையில் காத்துக் கொண்டிருந்த ஒரு மதிய வேளையில் கூட்டமற்று இருந்த அந்த இடத்தின் ஒரு பெஞ்சில் பள்ளிச் சீருடையில் பதின்ம வயதுப் பையனும் பெண்ணும் மிக நெருங்கி அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். பள்ளிக்குச் சென்றிருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் அவர்களின் பெற்றோரைப் பற்றி நினைத்துப் பார்த்தேன்.


அதற்கு நான் கேள்விப்பட்ட ஒரு சம்பவத்தையும் இதையும் பிணைத்து கற்பனையும் கலந்து நான் எழுதியதே இந்தக் கதை 

==========================================================================






பிரமிளா



 ரேவதி வெங்கட் 





அது பத்தாம் வகுப்பு முடித்து பதினொன்றில் அடியெடுத்து வைத்த காலம்.பத்தாம் வகுப்பில் நான்,கல்யாணி,பிரமிளா,கீதா நால்வரும் ஒரே வகுப்புப்பிரிவு என்பதால் பதினொன்றில் ஒரே பெஞ்சைத் தேர்வு செய்து கொண்டோம்.முதலில் கீதாவும் பின்னர் நானும் எனக்குப் பக்கத்தில் பிரமிளாவும் அவளுக்கு அடுத்து கல்யாணியும் என்று அமர்ந்திருப்போம்.பேச்சுக்கும் கேலிக்கும் கிண்டலுக்கும் அளவே இருக்காது.


கீதா எப்போதும் பாட்டு மட்டுமே உலகம் என்றிருப்பவள்.ஸ்கூலில் நடக்கும் பாட்டு சம்பந்தமான நிகழ்ச்சிகளில் பங்கேற்பதும் அது பற்றி பேசுவதுமே அவளுக்கு போதுமானது என்பதால் தேர்ச்சி அடையும்  அளவில் படித்தால் போதும் என்று எண்ணுபவள்.


நான்,கல்யாணி,பிரமிளா மூவரும் முதலிடத்தைப் பிடிப்பதில் நாட்டம் கொண்டவர்கள்.எனக்கும் கல்யாணிக்கும் பிரமிளா ஒரு சவாலாகவே இருந்தாள் என்று சொல்லலாம்.அதிக பட்சம் நானோ கல்யாணியோ ஓரிரு முறைதான் அவளை தாண்டியிருப்போம்.


ஒரு நாள் வகுப்பில் பிரமிளா வழக்கத்துக்கு மாறாக பாடத்தைக் கூட கவனிக்காமல் மிகுந்த உற்சாகத்தில் இருந்தாள்


“என்னடி!ரொம்ப உற்சாகமா இருக்கறாப்புல தெரியுது? “ என்று கல்யாணி ஆர்வம் தாங்காமல் கேட்டாள்
மத்தியானம் சாப்பாட்டு நேரத்துல சொல்றேன்” என்றாள் சற்றே பீடிகையுடன்.கொஞ்சம் வெட்கம் கலந்திருக்கிறதோ என்று எனக்கு சற்று சந்தேகம்


சாப்பாடு இன்னிக்கு க்ளாசில் வேண்டாம்.லைப்ரரி பின்னாடி போயிடலாம்” என்றாள்
கீதா எப்போதும் போல் மோர் சாதம் மாவடு எடுத்து வந்திருந்தாள்.இதற்காக எங்கள் மூவரைத்  தவிர வகுப்பு மொத்தம் அவளை தயிர் சாதம் என்ற நாமகரணம் சூட்டி அழைத்தது.கீதா இதற்கெல்லாம் கவலைப் படவோ அவமானப் படவோ மாட்டாள்.சொல்லப் போனால் எனக்கும் தயிர் சாதம் மாவடு நல்ல மதிய உணவு என்றே தோன்றும்.


எலுமிச்சை சாதத்தை ஒரு வாய் போட்டுக் கொண்டே “என்ன இன்னிக்கு வித்தியாசமா இருக்க?என்னவோ சொல்றேன்னயே “ என்று கல்யாணி ஆர்வம் தாங்காமல் ஆரம்பித்தாள்
என் டப்பாவில் இருந்த தக்காளி சாதம் பிரமிளா சொல்லப் போகும் விஷயத்தின் ஆர்வத்திற்கு சமமாக வாய்க்குள் இறங்கியது.


கீதாவோ ப்படியும் சொல்லத்தான போகிறாள் என்ற அலட்சியத்துடன் மோருஞ்சாத்தை மாவடுவுடன் ஒரு கை பார்த்துக் கொண்டிருந்தாள்.


பிரமிளா டப்பாவைத் திறக்காமல் அதன் மேல் என்னவோ கிறுக்கிக் கொண்டு குனிந்து அமர்ந்திருந்தது அவள் இயல்புக்கு பொருந்தாமல் எங்களை ஒருவரையொருவர் பார்க்க வைத்தது.


” என்னடி!அவ கேக்கறா? நீ என்னவோ பேசாம உக்காந்திருக்க?” என்றேன் நான்


“இல்ல ராஜி ! எப்பிடி சொல்றதுன்னு தெரியலை.வந்து....”


“ பெல்லடிக்கறதுக்கு முன்னாடி சொல்லிடுவதானே ?” என்றாள் கீதா


“ நான் லவ் பண்றேன்” பளிச்சென்று உடைத்தாள்


கீதா வாயருகே கொண்டு போன தயிர் சாதத்தை அப்படியே வைத்துக் கொண்டு ஆ வென்று பார்த்தாள். நானும் கல்யாணியும் பீதியாய் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம்


“என்னடி உளறல்? ஏதோ எவனோ எவளையோ சைட்டடிக்கறத பத்தி வம்பு சொல்லுவயா இருக்கும்னு பாத்தா..”


”இல்லடி நெஜமாதான்.”


”சரி யாரைன்னு சொல்லித் தொலை” என்றாள் கல்யாணி கடுப்பாய்.


எங்க ஒண்ணு விட்ட அத்தை பையந்தான் .இந்த தடவ லீவுக்கு ஊருக்கு வந்திருந்தான்.ஏற்கனவே ஊர்ல திருவிழாக்கு போயிருந்தப்பலாம் பாத்திருக்கம்.ஆனா இப்பதான் ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சு லவ் பண்றம்”


“ப்ரமி! இதெல்லாம் படிக்கற வயசுல சரியா வராதுடி.வேணாம்.விட்டுடு” என்றேன்


“இதெல்லாம் ஒரு கவர்ச்சிதாண்டி. வாழ்க்கைல இதெல்லாம் தாண்டி எவ்வளவோ இருக்கு” என்று தன் பங்குக்கு கல்யாணி அரற்றினாள்


கீதாவோ பயத்தின் உச்சத்திலிருந்தாள்


அதனுடன் பெல்லடிக்க என்னவென்று சொல்ல முடியாத உணர்வுடன் எல்லோரும் வகுப்பறை சென்றோம்.அதன் பின் அன்று பிரமிளா மட்டுமல்ல நாங்கள் நால்வருமே வகுப்பை கவனிக்கவில்லை
அடுத்து வந்த மாதாந்திர தேர்வில் பிரமிளாவை நானும் கல்யாணியும் தாண்டியிருந்தோம். மதிப்பெண் அட்டையை  வாங்கும்போது நானும் கல்யாணியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம். இருவர் மனதிலும் பிரமிளாவின் எண்ணமே ஓடியது.


நாட்கள் ஓடிக் கொண்டிருந்தது.ஓரிரு முறை பிரமிளாவை நாங்கள் கண்டித்ததை அவள் விரும்பவில்லை.
இந்த நேரத்தில் பன்னிரண்டாம் வகுப்பு ஆரம்பித்து, காலத்துடன் அந்த வருடம் போட்டியிட ஆரம்பிக்க அவரவருக்கும் பேச கூட நேரமில்லாது மதிய உணவு நேரம்  கூட சுருங்கி, வகுப்பை விட்டு வெளியில் சாப்பிட தடை வந்து இந்த விஷயம் கிட்டத்தட்ட கவனத்திற்கு அப்பாற்பட்ட விஷயமாக எங்கள் மூவருக்கும் ஆனது.


ஆனால் நாங்கள் எதிர்பாரா வண்ணம் இது ஒரு நாள் பூதாகாரம் எடுத்தது.பன்னிரண்டாம் வகுப்பு அரையாண்டில் முதல் முறையாக பிரமிளா கணக்கில் தோல்வி அடைந்தாள்.


என்ன ஏது என்று அவளை நாங்கள் விசாரிக்கையில் அவள் எங்களை விட்டு ஒதுங்க விரும்பினாள்.
அத்துடன் முடிந்திருந்தால் கூட பரவாயில்லை.பொதுத் தேர்விற்கு முதல் நாள் ஒரு கலந்தாய்வு போல இருந்த வகுப்பின் முடிவில் பிரமிளா எங்களை சந்தித்து பேச விரும்பினாள்
“என்னடி! எப்பிடி படிச்சிருக்க?”

ராஜி! நான்... நான்...”


”என்ன சொல்லு ப்ரமி! “ என்றாள் கல்யாணி


அவள் சொன்னது எங்களுக்குள் பெரிய இடியையே இறக்கியது


பிரமிளா என்ன சொல்லப் போகிறாள் என்று அவளையே பார்த்துக் கொண்டு நாங்கள் மூவரும் பொறுமை காத்தோம்


“எனக்கு ..எனக்கு ..இந்த மாசம்...பீரியட்ஸ் வர்ல” என்றாள் நடுக்கமான குரலில்


“அதனாலென்ன?உனக்கு எப்பயுமே அப்டியும் இப்டியுமாத்தானே இருக்கும்? இதுக்கு எதுக்கு இவ்ளோ டென்ஷன்?பரீட்சை சமயத்துல இது வேற ஒரு தொந்தரவுன்னு யோசிக்கறயா? “ என்று கீது அப்பாவித்தனமான ஒரு கேள்வி கேட்டாள்


நானும் கல்யாணியும் லேசான கலக்கத்துடனும் அப்படி எல்லாம் இருக்காது, இருக்கக் கூடாதே என்ற கவலையுடனும் அவளைப் பார்த்தோம்.


ஆனால் எது இருக்கக் கூடாது என நினைத்தோமோ அதை அவள் சொல்லியே விட்டாள்


”போன மாசம் ஒரு நாள்...” என்று அவள் கூறியதை நான் என் வாழ் நாளிலிருந்தே எடுக்க முடிந்தால் நன்றாகத்தான் இருக்கும்


கீதா என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் கையிலிருந்த தண்ணீர் பாட்டிலின் தண்ணீர் மொத்தத்தையும் ஒரே மூச்சில் குடித்து தன்னை நிலைப்படுத்த முயன்றாள்


சொல்லி முடித்தவளோ அழுது கொண்டிருக்க நானும் கல்யாணியும் என்ன செய்வதென்றே தெரியாமல் ஸ்தம்பித்து நின்று கொண்டிருந்தோம்.


முதலில் சுதாரித்தது கல்யாணிதான்


“சரி.இப்ப அழுது என்ன ப்ரயோஜனம்? அப்ப புத்தி எங்க போச்சு.சொன்னப்பவாவது காது கொடுத்து கேட்டயா? என்று கத்தினாள்


”இப்ப என்ன செய்யறது” என்றாள் கீதா வெகுளியாய்


“இப்ப அவளைக் கத்தி என்னடி ஆகப் போறது?பேசாம அவங்க வீட்டில சொல்ல சொல்லிடலாம்” என்றேன்


“அறிவிருக்கா உனக்கு? மக்கு.மட சாம்பிராணி. நாளைக்கு பரீட்சையை வச்சுக்கிட்டு இன்னிக்கு போயி அவ வீட்டுல சொன்னா அவ வாழ்க்கையே போயிடும்” என்று என்னையும் காய்ச்சினாள் கல்யாணி
”வேற என்ன செய்ய?” என்று நானும் கண்களில் குளம் கட்ட ஆரம்பிக்க, கல்யாணி இன்னும் உச்சஸ்தாயிக்குப் போனாள்


“ஏண்டி ! நீ எதுக்குடி இப்ப ஒப்பாரி ஆரம்பிக்கற? நாளைக்கு பரிட்சையை வச்சுக்கிட்டு எல்லாம் கூத்தடிங்கடி” என்று தன் அதிர்ச்சியை எங்களிடம் கொட்டிக் கொண்டிருந்தாள்


சிறிது நேர அமைதிக்குப் பின் கல்யாணியே ப்ரமியைத் தேற்றி “இப்ப பேசாம மூஞ்சி அலம்பிண்டு வீட்டுக்குப் போ.பரீட்சைக்குப் படி.எல்லா பரீட்சையும் முடிஞ்சப்பறம் பாத்துக்கலாம். எழுந்திரு வா” என்றாள்


வாசலுக்கு வந்த போது ப்ரமியை அழைத்துச் செல்ல வந்திருந்த அவளின் அப்பா வெள்ளந்தியாய்ச் சிரித்து “என்னம்மா!எல்லாரும் பரிட்சைக்கு ரெடியாய்ட்டீங்களா ?” என்று கேட்க எனக்கு வயிற்றைப் பிசைந்து கொண்டு கண்ணில் வெளிப்பட, கல்யாணி என் கையை சமிஞ்யையாய் பிடித்தாள்.கீதா எங்களுக்குப் பின்னே புதைந்தாள்


வீட்டிற்குப் போனதும் என் பேயறைந்த முகம் பார்த்த அம்மா கேட்டவுடன் தாங்கமுடியாமல் கொட்டி விட்டேன். ”சரி பரீட்சைக்கப்பறம் அவளை சொல்ல சொல்லிக்கலாம்” என்று அம்மாவும் சமாதானம் செய்து அப்போதைக்கு முடிந்தது.


தேர்வுகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகுப்பில் அமர்ந்து எழுத வேண்டியிருந்ததால் முடிந்த பிறகு கலந்தாலோசிக்கும்போதுதான்  பார்க்கும்படி ஆயிற்று.ஆனால் அதற்கு பிரமி வராமலே எங்களுக்கு முன்பே சென்று கொண்டிருந்ததால் அவளை பார்க்கவே முடியாமல் போனது.


விடுமுறையிலும் ஆளுக்கு ஒரு திக்கு செல்ல பரீட்சை முடிவு வெளிவரும் நாளும் வந்தது.லேசாக நாங்கள் பயந்தபடி ப்ரமி அதில் தோல்வியுற்றாள்.வீடு தேடி சென்று பார்க்க அந்த வயதில் பயமாக இருந்தது.


வருடங்கள் உருண்டோடி எனக்குத் திருமணாமாகி பிள்ளை பிறப்புக்கு வந்த போது என்னைப் பார்க்க கீதா வந்திருந்தாள்.திருமணமாகி டெல்லியிலிருப்பதாகவும், கல்யாணி மாமாவின் பையனை மணமுடித்து அதே டெல்லியில் வசிப்பதாகவும் கூறினாள்.தயிர் சாதம் மாவடுவின் அடையாளமற்று டெல்லி வாழ் வாழ்வின் அடையாளங்களைச் சுமந்திருந்தாள்.


“ப்ரமியைப் பாத்தயா? அவளைப் பத்தி ஏதாவது தெரியுமா?” என்றாள்


“ஒருமுறை போனேன் .அவ அம்மாதான் இருந்தாங்க.வேலைக்குப் போயிருக்கான்னு சொன்னங்க.எப்ப வருவா? எப்ப பாக்க முடியும்னு கேட்டேன்.அவங்க சரியா சொல்லல. நாம பாக்கறதை அவங்க விரும்பலையோன்னு தோணுச்சு.அதுக்கப்பறம் போகலை.


நீ இசைக் ல்லூரியில படிச்சயே.இப்ப என்ன பண்ணிண்டிருக்க”


“பாட்டு கூத்தெல்லாம் வேணாம்னு எங்காத்துக்காரரும் மாமியாரும் சொல்லிட்டாங்க.இப்ப அதெல்லாம் எதுவுமில்லை “ என்று சொல்லியபடி கிளம்பிய கீதாவைப் பார்க்க கஷ்டமாக இருந்தது.தயிர் சாதம் மாவடுவே அவளை சந்தோஷமாக வைத்திருந்ததாக எனக்குப் பட்டது.


இன்னும் இரண்டு வருடங்கள் கழித்து ஒரு நாள் அம்மாவிடமிருந்து ஃபோன். ”உனக்கு ஒரு கல்யாணப் பத்திரிக்கை நம்மாத்து அட்ரஸ்க்கு வந்திருக்கு.யார்கிட்டேருந்து தெரியுமா?” என்றாள்


 “எங்கேருந்தும்மா வந்துருக்கு?”


“யார்கிட்டேருந்து வந்துருக்குன்னு கேளு.பத்திரிக்கை தபால்ல லாம் வரல. நேர்ல வந்து குடுத்துட்டு போனா”


“சரிம்மா.உன் சஸ்பென்ஸ் போதும்.யார் குடுத்தா? யாருக்கு கல்யாணம்?”


“பிரமிளாக்கு கல்யாணம்டி.அவளே நேரில வந்து குடுத்துட்டுப் போனா”


“யாரு?ப்ரமிளாவா? “ பரபரத்தேன் .” அவளே வந்தாளாமா? அவளை நீ பாத்தியா? பத்திரிக்கை குடுக்கும் போது அவ முகத்தை பாத்தியா? சந்தோஷமா இருந்தாளாம்மா? 

“ நீ உன் கல்யாணத்தின் போது புது மனுஷாள் கூட எப்பிடி இருக்கப் போறோம்னு விளக்கெண்ணெய் குடிச்சாப்புல முகத்தை வச்சிருந்தயே,அதை விட சந்தோஷமாவே இருந்தா எல்லாம்” அந்தப் பக்கத்தில் அம்மாவின் கடுப்பு நன்றாகவே புரிந்தது.


போஸ்ட்டில் அம்மா அனுப்பி வைத்த பத்திரிக்கையைப் பார்த்தேன்.என் இருபத்தைந்தாவது வயதில் நான் அப்படி ஒரு விலையுயர்ந்த பத்திரிக்கையை நாலைந்து தரம் பார்த்திருந்தால் அதிகம்.  ஆர்வமாக மணமகனின் பெயரைப் பார்த்தேன்.சதீஷ் குமார் என்று போட்டிருந்தது.அவனா? எனக்கு அவன் பெயர் தெரியாது.பெயரின் பக்கத்தில் பிரமாதமான படிப்பும் அதைச் சார்ந்த உத்தியோகமும் போட்டிருப்பதைப் பார்த்தால் அவனில்லையோ என்று சந்தேகம் வந்தது.


சில சந்தர்ப்பங்களின் பொருட்டு தஞ்சாவூரில் நடந்த அந்த கல்யாணத்திற்கு நான் போக இயலாமல் போனது.ஆனால் நான் போகாமல் இருந்ததைத்தான் பிரமிளா விரும்பினாள் என்றும் அவள்  தன்  நல் வாழ்க்கைப் பாதையின் அடையாளத்தை எனக்கு தெரிவிக்கவே பத்திரிக்கை அனுப்பி இருப்பதையும் தெரிந்து கொள்ள எனக்கு ஒரு சந்தர்ப்பம் வாய்த்தது.


சரியாக ஒரு வருடத்திற்குப் பின் உடல் நலம் சரியில்லாத உறவினர் ஒருவரை பார்க்க நான் அந்த ஹாஸ்பிடலுக்கு சென்றேன்.பார்த்து விட்டு வெளியில் நடந்து வரும்போது பிரமியின் அம்மாவைச் சந்தித்தேன்.என்னைப் பார்த்ததும் அவர் முகம் வெளுப்பதைப் புரிந்து கொண்டாலும் ப்ரமியைப் பற்றி அறியும் உந்துதல் அதிகமாயிருந்தது.


“என்னம்மா !எப்பிடி இருக்கீங்க? என்னைத் தெரியுதா? நாந்தான் ராஜி!ப்ரமி எப்பிடி இருக்கா ? எங்க இருக்கா?”


பக்கத்து அறையின் உள்ளிருந்து வந்த பெண் இதைக் கேட்டு “ நீங்க அவ சினேகிதியா? நான் அவ நாத்தனார்.அவளுக்கு நேத்துதான் இங்க பொண்ணு பொறந்திருக்கு” என்றார்


“வாங்க” என்றபடி உள்ளே கூட்டிப் போனார். நீ...ண்ட இடைவெளிக்குப் பின் ப்ரமியின் சந்திப்பு.என்னைப் பார்த்ததும் ஆச்சர்யத்தில் பூரித்து முகம் மலர்வாள் என்ற எதிர்பார்ப்பில் நெருங்கினேன்.அவள் முகம் திகைத்து கடுகடுவென மாறியது. நான் அதிர்ந்து போனேன்.ஆனாலும் காரணமும் உடனே புரிந்து போனது.


“இவங்க ப்ரமி ஃப்ரண்டாம்” என்று ப்ரமியின் கணவனுக்கு அந்தப் பெண் அறிமுகம் செய்தாள்.கையில் வைத்திருந்த குழந்தையை என்னிடம் காட்டியபடி அவன் சிரித்தான்.குழந்தையும் கூட சிரித்தாற் போலிருந்தது.ஆனால் என் ப்ரமி என்னைப் பார்த்து ......


சற்று நேரம் பேசிக் கொண்டிருந்த போது அவளின் கண்களில் தெரிந்த தவிப்பின் அர்த்தம் எனக்கு நன்றாகவே  புரிந்தது..இறுதியாக ஒருமுறை ப்ரமியை நோக்கினேன். ஆமாம். நான்  இனி அவளை பார்ப்பதில்லை என தீர்மானித்தேன்.அவள் கடந்த கால வாழ்வின் கசப்பை நினைவூட்டும்படி நான் அவளைச் சந்தித்தோ பேசியோ அவளது இனிமையான வாழ்வின் நல்ல பக்கங்களுக்குள் போக முயற்சித்து அவளை நோகடிக்க மாட்டேன்.


வெளியில் வந்தேன்.என் ஜாதகத்தில், இனி ப்ரமியை நேருக்கு நேர் முட்டிக் கொள்வது போல் பார்த்தாலும் எனக்கு அவளைத் தெரியாது என்று எழுதினேன்.


29 கருத்துகள்:

  1. தெரியாமல் போவதே நல்லது :)

    பதிலளிநீக்கு
  2. முன்பே படித்து இருந்தாலும் மீண்டும் ஒருமுறை படித்து விட்டேன். ஆஹா ரேவ்ஸ்!

    பதிலளிநீக்கு
  3. முன்பே படித்து இருந்தாலும் மீண்டும் ஒருமுறை படித்து விட்டேன். ஆஹா ரேவ்ஸ்!

    பதிலளிநீக்கு
  4. அருமையான கதை. பருவ வயதில் ஏற்படும் சலனத்தையெல்லாம் காதலென்று குழப்பிக்கொண்டு தன்னையும் தன்னைச்சார்ந்தவர்களையும் கதி கலங்க வைக்கும் இளசுகள் நிதர்சனத்தை உணர வேண்டும்.

    பதிலளிநீக்கு
  5. கலக்கம்.நல்ல முறையில் பதிவாக்கி இருக்கிறீர்கள் ரேவதி.

    பதிலளிநீக்கு
  6. ஞாபகச்சுவடுகளே வேண்டாம். அடி வயிற்றில் கனல் இருந்து கொண்டே இருக்கிறது போலும். அன்புடன்

    பதிலளிநீக்கு
  7. ஏற்கனவே படித்திருந்தாலும் மீண்டும் வாசித்தேன்...பிரமாதம்..

    பதிலளிநீக்கு
  8. ஏற்கனவே படித்திருந்தாலும் மீண்டும் வாசித்தேன்...பிரமாதம்..

    பதிலளிநீக்கு
  9. இந்த வயதில் தான் படிக்க வேண்டும். இந்த வயதில்தான் காதலும் வரும். எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை பெற்றோர்கள் இந்த வயது சிறுவர் சிறுமியரிடம் எடுத்துச் சொல்லவேண்டும். நம்மூரில் பெற்றோர்கள் இதுபற்றிப் பேச தயங்குகிறார்கள். இதுவே இந்த மாதிரி நடக்கக் காரணம்.
    பிரமீளாவின் கடந்த காலம் அப்படியே நினைவிலிருந்து மறைந்து விடுவதே நல்லது. அவளது மனசாட்சி அவளை சும்மா விடாது.
    நல்ல கதை, ராஜி. பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  10. அதனால் என்ன?.. அது ஒரு விபத்து. அவ்வளவு தான்.

    ரோடில் நடக்கும் ஏதோ சிலர் தான் விபத்தில் மாட்டுகிறார்கள். நடந்த விபத்தையே நினைத்துக் கொண்டிருந்தாலும் ரோடில் நடக்கவே முடியாது போய்விடும்.

    வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
    வாசல் தோறும் வேதனை இருக்கும்
    வந்த துன்பம் எது வந்தாலும்
    வாடி நின்றால் ஓடுவதில்லை

    முகம் கடுகடுக்காமல் ப்ரேமி, ராஜியை சந்தோஷத்தோடு எதிர்கொள்கிற மாதிரி கதையெழுதிய ராஜி எழுதியிருந்தால் கதை அற்புதமாக அமைந்து ப்ரேமி தன் மனரணத்திற்கு தானே மருந்து தடவிக் கொண்ட இதம் கிடைத்திருக்கும்..

    ப்ரேமி மட்டும் என்ன?.. தனக்கு அமைந்த கணவனை தோண்டித் துருவிப் பார்த்தா கல்யாணம் பண்ணிக் கொண்டாள்?..


    பதிலளிநீக்கு
  11. ஆண்களுக்கு காதல் ஒரு அத்தியாயம் என்றும் பெண்களுக்கு அதுவே வாழ்வென்றும் சொல்லக் கேட்டிருக்கிறேன் இந்தக்கதை நாயகி வித்தியாசமானவராக இருக்கிறார் கற்றலும் கேட்டலும் தளம் பார்த்த நினைவு இருக்கிறது ஆசிரியைக்கு மாறு பட்ட சிந்தனைக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  12. முன்பே வாசித்து இருந்தாலும் மீண்டும் வாசிக்க ....அருமை சகோ
    தம +1

    பதிலளிநீக்கு
  13. அருமையான சிறுகதை (நிஜம்?)

    பதிலளிநீக்கு
  14. இவரோட எழுத்தை முதல்முறையாகப் படிக்கிறேன். அருமையான ஓட்டம்! பிரமிளாவின் பயம் சரியானது தான் என்றாலும் சிநேகிதியிடம் நம்பிக்கையும் இருந்திருக்கலாம்! எப்படியோ அவளுக்கும் ஓர் நல்ல வாழ்க்கை அமைந்ததே! அதுவரை சந்தோஷம்!

    பதிலளிநீக்கு
  15. மறந்து விடுவதே நல்லதுதான் மனதை வருடி விட்டது கதை பலரது வாழ்விலும் நடந்துகொண்டுதான் இருக்கின்றது.... பருவத்தின் கோளாறு வேறென்ன ?

    பதிலளிநீக்கு
  16. மறதி நல்லது
    அருமையாய் நகரும் கதை
    நன்றி நண்பரே
    தம +1

    பதிலளிநீக்கு
  17. முன்பு பிளாக்கில் அடிக்கடி வாசிப்பேன் ரேவதி வெங்கட் கதைகளை ..
    உங்கள் பிரமீ ..அதிர வைத்தாள் ரேவதி .அருமையான கதை
    இந்த கதை போன்ற சம்பவம் எனது பள்ளி வாழ்க்கைலயும் நடந்திருக்கு ..இதேபோலத்தான் எனது தோழியும் என்னை தெரிந்ததாக காட்டிக்க விரும்பலை நானும் அவளை மறந்தேபோனேன் ..இந்த கதை வாசிக்கும் வரைக்கும் ....மறுபடியும் மறந்திடறேன் :)
    வாழ்த்துக்கள் ரேவதி .பகிர்வுக்கு நன்றி எங்கள் பிளாக்

    பதிலளிநீக்கு
  18. சிறப்பான கதை! சிநேகிதியிடம் துவேஷம் காட்டாமல் இருந்திருக்கலாம் ப்ரமீளா!

    பதிலளிநீக்கு
  19. தேனை உண்ணத்தான் வண்டு பூ வைத்தேடி வருகிறது என்பது பூவுக்குத் தெரியாவிட்டாலும் கவலையில்லை! ஆனால் பூவையர்க்குத் தெரியாவிட்டால் ...! விளைவு விபரீதம் தானே! இன்று என்வலையில் வந்த பதிவு!

    பதிலளிநீக்கு
  20. நல்ல கதை. முன்பே படித்திருந்தாலும் மீண்டும் படித்தேன்.

    வலைப்பூவில் தொடர்ந்து எழுத வேண்டும் ராஜி.....

    பதிலளிநீக்கு
  21. அருமையான கதை. நடை உட்பட. புதிய தளம். எங்களுக்குப் புதியவர்.

    இது போன்ற நிகழ்வுகள் குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்கள் நல்ல நண்பர்களைப் போல இருந்தால் குழந்தைகள் பெற்றோரிடம் மனம்விட்டுப் பேசவும் முடியும் பெற்றோரும் நல்ல கலந்தாய்வு செய்ய முடியும்.

    இதுவும் ஒரு விபத்தே. மனம் கலங்கினாலும் இதை நினைத்துத் தேவையற்றதைப் பேசிப் பேசி, க்ழ்வைச்தில சமூக சட்டத்திட்டங்கள் அடங்கிய சட்டத்திற்குள் நம்மை வைத்துக் கொண்டு வாழ்வைத் தொலைப்பதை விட தைரியமாக முன்னோக்கிச் செல்வதே நல்லது.

    அந்த விதத்தில் அருமை கதை. இறுதியில் ப்ரேமி தன் தோழியிடம் பேசியிருக்கலாமோ அவளிடம் மனம்விட்டுப் பேசி அந்த நட்பைப் புதுபித்திருக்கலாமோ என்று தோன்றியது.

    வாழ்த்துகள் பாராட்டுகள் ரேவதி வெங்கட் அவர்களுக்கும் பகிர்ந்தமைக்கு எங்கள் ப்ளாகிற்கும்

    பதிலளிநீக்கு
  22. நல்ல சரளமான நடை. உபதேசம் செய்யாமல், புலம்பாமல், இது இப்படி நடந்தது என்று எழுதுவது கடினம். நானும் சில பிரிமிக்களை சந்தித்து இருக்கிறேன். அவளுக்கு நேர்ந்தது ஒரு விபத்து. எல்லா விபத்துகளில் சிக்கியவர்களும் மீண்டுதான் வந்தாக வேண்டும்.

    பதிலளிநீக்கு
  23. ஏற்கனவே படித்துள்ள கதைதான் இது.

    மீண்டும் படிக்க வாய்ப்பளித்துள்ள கதாசிரியருக்கும் எங்கள் ப்ளாக்குக்கும் என் பாராட்டுகள் + நன்றிகள்.

    ஏற்கனவே நான் 30.03.2014 அன்று, அங்கு கொடுத்துள்ள பின்னூட்டம் இதோ:

    வை.கோபாலகிருஷ்ணன் said...
    அறியாத பருவத்தில் தெரியாமல் நிகழ்ந்த விபத்தாகத்தான் இதை எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு கெட்ட கனவாக நினைத்து மறந்து விடுவதுதான் நல்லது. இப்போது ஏற்பட்டுள்ள புதிய வாழ்க்கையாவது பிரமிக்கு நல்லபடியாக இருக்கட்டும்.

    இன்றைய ராணியில் வெளி வந்துள்ளதற்கு பாராட்டுக்கள். வாழ்த்துகள்
    March 30, 2014 at 11:07 PM

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!