வியாழன், 15 ஆகஸ்ட், 2019

கடவுளே வா வந்தென்னை ஒருதரம் சந்தி.... - தீவட்டி மனிதர்கள்!


அன்பர்கள், நண்பர்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்.   

நாம் அனைவரும் ஒற்றுமையுடனும், பலத்துடனும் வாழ இந்தியத் தாய் அருளட்டும்.  இன்று கொடியேற்றி மிட்டாய் தருவார்கள் என்பது மட்டும்தான் சிறுவயதில் தோன்றும்.  அட, இதற்காக இன்றும் ஸ்கூல் செல்லவேண்டுமா?  லீவ் வேஸ்ட் ஆகிறதே என்று தோன்றும்!  பின்னர் இதுமாதிரி நாட்களில் குடியிருப்பில் போட்டிகள், ஆடல், பாடல் கொண்டாட்டங்கள் நடக்கும்.  குதூகலமாக இருக்கும்.  நானும் கபடி, கிரிக்கெட் என்று பங்கேற்றிருக்கிறேன்!!  மாலை கலை நிகழ்ச்சிகள் களேபரமாக இருக்கும். 

கொடியேற்றுவதில் சில கட்டுப்பாடுகள் உண்டு.  அதைப்பற்றி முன்னர் எங்கள் தளத்தில் பகிர்ந்ததை பேஸ்புக்கில் இரண்டு பகுதிகளாய் பகிர்ந்திருந்தேன்.  அதைப் படிக்க விரும்புவோர் ஒன்று, இரண்டு என இரண்டையும் வாசித்து மகிழலாம்.


=============================================================================================
இரண்டு வாரங்களுக்கு முன்னால் எங்கள் ஆஸ்தான ஆட்டோக்காரர் கருப்பையா அண்ணன் தன் விருப்பத்தில் குபேரர் கோவில் செல்ல இருப்பதாகவும், நாங்களும் வரவேண்டும் என்றும் கோரினார்.  நாங்களும் சரி என்று ஒருநாள் கிளம்பினோம்.



வண்டலூரில் பாலத்துக்குக்கீழே விலங்கியல் பூங்காவை ஒட்டி இடதுபுறம் திரும்பினால் ரத்தினமங்கலம் சாலையில் செல்லலாம்.  அங்கு பாரத் பொறியியல் கல்லூரி அருகே திரும்பி சிறிது தூரம் சென்றால் லட்சுமி குபேரர் கோவில் வருகிறது.



ஒரு முறை சிவனைக் காணச் சென்ற குபேரர் அங்கிருந்த பார்வதியின் அழகில் ஸ்தம்பித்துப் போக, அதில் ஒரு கண் பிரமிப்பில் மூடித் திறக்கிறததாம்.  தண்னைப் பார்த்து குபேரர் கண் அடிப்பதாகக் கோபம் கொண்ட பார்வதி குபேரரின் அந்தக் கண்ணை வெடித்து வீணாகச் செய்கிறாள். கூடவே குபேரனுக்கு அழகில்லாத வடிவத்தையும் கொடுக்கிறாள்.  



குபேரர் சிவனிடம் தான் குற்றமற்றவர் என்று மன்றாடுகிறார்.  உண்மையுணர்ந்த பார்வதி குபேரனுக்கு அந்தக் கண்ணைத் திருப்பிக் கொடுத்தாலும் அது மறு கண்ணைவிட சிறிதாகவே இருக்குமாறு கொடுக்கிறாள்.   சிவன் குபேரனை வடதிசைக் காவலராக நியமிக்கிறார்.  பார்வதி குபேரருக்கு செல்வத்தையும் பொருளையும் கொடுத்து, அவரை வணங்குபவர்களுக்கு வளம் அருள வாழ்த்துகிறாள்.  செல்வத்துக்கு அதிபதி லக்ஷ்மி.   அந்த செல்வத்தை நிர்வகிப்பவர் குபேரர்.  எனவே இவர் லட்சுமி குபேரர் என்று அறியப்படுகிறார்.




இவரிடமிருந்து கடன் வாங்கிதிருமணம் செய்து கொண்ட திருப்பதி பெருமாள் இன்னமும் கடனைத் திருப்பிக் கொடுக்கவில்லையாம்.  வெறும் வட்டிதான் கட்டிக் கொண்டிருக்கிறாராம்.  யூ டூ பெருமாள்?  இதை என்ன விவரம் என்று கேட்டு  உச்ச நீதி மன்றத்தில்அல்லது உயர் நீதிமன்றத்தில்  யாரோ எப்போதோ சமீபத்தில் ஏதோ வழக்கு போட்டிருந்ததாய் நினைவு.  என்னாச்சோ?!!   தன் கடனையே வாங்க முடியாத குபேரர் எனக்கென்ன உதவி செய்வாரோ தெரியவில்லை!






நாலாயிரம் சதுர அடியில் அமைந்திருக்கும் இந்தக் கோவில் உள்ளே செல்ல சிறிய சில படிக்கட்டுகள்.  இடதுபுறமாக கம்பி நம்மை வழி நடத்திச் செல்கிறது. நூறு ரூபாய் டிக்கெட் எடுத்தால் இரண்டு பேர்களுக்கு லக்ஷ்மிகுபேரர் அர்ச்சனை என்று சொல்பவரிடம் டிக்கெட் வாங்கி கொண்டோம். அதைத் தாண்டிச் சென்றால் சிறிய பாதாள லிங்கம் ஒன்று இருக்கிறது.   அதை வலமாகச் சுற்றி திரும்பினால் மேடை போன்ற அமைப்பில் சுமார் பதினைந்து சிறிய விநாயகர் விக்ரகங்கள் இருக்கின்றன.  

கம்பி அதைத்தாண்டி நம்மை லட்சுமி குபேரர் சன்னதியை வலமாகச் சுற்றச் செய்து, அழைத்துச் செல்கிறது.  முக்கால் சுற்றில் டிக்கெட்டுக்கு இருவர் என்பதால் இருவருக்கான துணிப்பை ஒன்றும் ஒன்றிரண்டு புத்தகங்களும் அதில் போட்டுத் தருகிறார்கள். சன்னதிக்கு வந்தால் அங்கு நம்மை அழைத்து, நம் கையிலிருந்து பையை வாங்கி குபேரருக்கு அர்ச்சனை செய்து ஒரு பச்சைக் கயிற்றை நம் கையில் கட்டிவிடுகிறார் அர்ச்சகர்.  மீண்டும் பிரதட்சணமாக வலம் வந்தால் அங்கு இருக்கும் குபேரர் சிலையில் நாம் கொண்டு போயிருக்கும் நாணயத்தை அவர் கையில் (கீழே விழாமல்) வைத்து, தொந்தியில் தடவி பிரார்த்தித்து, எடுத்துக்கொள்ளச் செய்கிறார்கள். அவர் பிரதிஷ்டை ஆகி இருக்கும் சிறு குளத்தில் நாணயம் போடுபவர்களும் உண்டு. வெளியில் வரும் வழியில் உள்ளேயே கடைகள்.  புத்தகங்கள், கயிறுகள், குபேரர், வாஸ்து பகவான் சிறிய, நடுத்தர, பெரிய ப்ரதிமைகள்.... 

தீபாவளி அன்று கோவில் அல்லகல்லோலப்படுமாம்.  அன்று இவரைத் தரிசிப்பதும், அர்ச்சனை செய்வதும் ரொம்ப விசேஷமாம்.  செல்வம் அள்ளித் தருவாராம்.  அக்ஷய திரிதியை அன்று கேட்கவே வேண்டாம்.  சாதாரணமாக புதன், வெள்ளி ஞாயிறு ஆகிய தினங்களில் கூட்டம் அள்ளுமாம்.  நாங்கள் சென்றது சனிக்கிழமை காலை ஏழு மணி.  அப்போதுதான் ஒவ்வொரு பஸ்ஸாக வந்து பக்தர்கள் இறங்கிக்கொண்டிருந்தார்கள்.  கோவில் முழுவதும் பச்சை வண்ண மயம்.





நிறைய செல்லங்கள் சுற்றிலும்.  வரும் பக்தர்கள் அவற்றைக் கண்டு கொள்வார்கள் என்று நன்றாய்த் தெரிந்து வைத்திருக்கின்றன.  கடைக்காரர்களும் அதற்குத் தக்க பிஸ்கட் பாக்கெட் வைத்திருக்கிறார்கள்.  ஒரு செல்லம் நான் அந்த கோவில்களை வீட்டுக் கிளம்பும்வரை கூடவே வந்து பிஸ்கட் கலெக்ஷன் செய்து கொண்டிருந்தது.

வெளியில் வந்து விடலாம்.

அங்கிருக்கும் தகவல் பலகை ஒன்று அரைக்காசு அம்மன் கோவில் செல்லும் வழி என்று சொல்லி அரைகிலோமீட்டர் என்று தூரமும் சொல்கிறது.  நாங்கள் அங்கு செல்லவில்லை.  சென்றிருந்தால் ரொம்ப விசேஷமாம்.  பின்னர் வண்டலூர் வாழ் தோழி சொன்ன தகவல் இது.



ஆனால் குபேரர் கோவிலை ஒட்டியே வலது பக்கம் இருக்கும் தெருவில் ஒரு காளி கோவில் இருக்கிறது.  பவதாரிணி சக்ரகாளி கோவில். 




திருவக்கரை பத்ரகாளி அம்மன் கோவிலிலிருந்து வந்த ஒரு மகானுக்கு சொல்வாக்கு இருந்திருக்கிறது.  அதனால் தலைக்கனம் ஏறிவிட்டதாம் அவருக்கு.  அதனால் அவர் சக்தி  ,அவரை விட்டுப்போக, ஊரை விட்டு வெளியேறி எங்கெங்கோ சுற்றி, கடைசியில் இந்த குபேரர் கோவில் பக்கம் வந்தபோது காளி அவர் கனவில் தோன்றி இந்தக் கோவிலைக் கட்டப் பணித்திருக்கிறாள்.  இடம் தர மறுத்த நில உரிமையாளர் கனவிலும் காளி தோன்றி இடம் தரச் சொல்லிக் கேட்டிருக்கிறாள்.  அவரும் தர,  கிட்டத்தட்ட 2002 அல்லது 2003 இல் இந்தக் கோவில் கட்டப்பட்டுள்ளது. அந்த மகான் அம்மன் எதிரே ஒரு ஆசனத்தில் அமர்ந்து பூஜைகளைப் பார்த்துக் கொண்டிருப்பாராம்.  வரும் பக்தர்களுக்கு நல்வாக்கு சொல்வதும் உண்டாம்.  இரண்டு மூன்று வருடங்களுக்கு முன் அவர் மறைந்துவிட,  அந்த ஆசனம் மட்டும் அங்கேயே இருக்கிறது.

இங்கு பூஜையின்போது மந்திரங்களை சிடியில்தான் ஒலிக்க விட்டார்கள்.  காளிக்குரிய பீஜ மந்திரம் நடுவில் மறுபடி மறுபடி உச்சரிக்கப்பட்டபோது நடுமுதுகில் ஒரு சிலிர்ப்பு தோன்றியது.   

எதிரே ஒரு பாபா கோவிலும் இருந்தது.  தியானைக்கூட  இடத்துடன் இருந்த கோவில்.

திரும்பி வரும் வழியில் ஒரு வண்டியிலிருந்து எட்டிப்பார்க்கும் அந்தத் செல்லம் கண்ணுக்குத் தெரிகிறதா?!!



=================================================================================================


சமீபத்தில் ஃபேஸ்புக்கில் பகிர்ந்ததுதான் இதுவும்.

கடவுளே

த்ரேதாயுகம் த்வாபரயுகம் 
என்கிறார்கள் 
அந்தக் காலத்தில் நான் இருந்தேனா அறியேன் 

அந்தக் காலத்தில் 
நேரில் வந்தவன் நீ என்கிறார்கள்
கடவுளே என்றழைத்தவனுக்கு 
உடனே 
கஷ்டம் தீர்த்தாயாம்.
சொல்லக் கேள்வி.

விரல்காட்டி வித்தைகள் 
புரிந்து 
விந்தைகள் செய்தாயாம் 

அப்போதுதான் கஷ்டங்களா? 
இப்போதில்லையா?

குன்றம் ஏந்திக் குளிர்மழைக் காத்தவனே
வெயில் மறைத்து வெப்பம் தணிக்க மாட்டாயா?
குன்றம் விலக்கி ஆறு குளம் நிரப்ப மாட்டாயா?

விண்ணுலகம்தான் உன்னுலகமா?
சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்
மேகங்களின் ஓரங்களில் 
தேடுகிறேன் 
சரிகை வேட்டியுடன் நீ அங்கு 
தென்படுகிறாயா என்று 

இருட்டில் ஒருநாள் 
ஒளியாய் வருவாய் 
என நான் 
இன்னமும் காத்திருக்கிறேன்

உனைக் கண்டேனென்று
நீ 
விரும்பவில்லை என்றால் 
விண்டிலேன் ஒருவரிடமும் 

வாயேன்...

நம்பு நம்பு என்று படுத்தாமல் 
வந்துவிடேன் ஒருதரம் நேரில்

விஞ்ஞான விளக்கமும் 
உன்னோட விளக்கமும் 
சரிபாதியாய் 
சரியாய்தான் இருக்கிறது 
எது நீ? எங்கே நீ?
விஞ்ஞானம் உன்னை மறுக்கிறது 
என் ஞானமோ 
இரண்டுக்கும் நடுவில் தவிக்கிறது
ப(க)ட்டாடை உடுத்தி 
வந்தால்தான் தெய்வமா?
பராரியாய் வந்தால் மாறுவேஷமா?

நீ கொடுப்பதுதானாமே... 
கஷ்டங்கள் நானும் வைத்திருக்கிறேன் 
கண்ணீரை நாளும் மறைத்திருக்கிறேன் 
கடவுளே வா 
வந்தென்னை ஒருதரம் சந்தி.


========================================================================================================================


உங்களுக்கு அப்படித் தோன்றினால் எனக்கு இப்படித் தோன்றுகிறது!




============================================================================================

தீவட்டி மனிதர்கள்!






======================================================================================

கீழ்க்காணும் படத்துக்கு உங்களுக்குத் தோன்றுவதை கவிதையாகவோ வசனமாகவோ இரண்டு வரி சொல்லுங்களேன்!




========================================================================================================

95 கருத்துகள்:

  1. அன்பின் சுதந்திர தின நல்வாழ்த்துகள்.... ஜெய்ஹிந்த்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள், வாங்க,, வாங்க...

      நீக்கு
  2. அன்பின் ஸ்ரீராம்..
    கீதாக்கா/கீதா, வல்லியம்மா மற்றும் அனைவருக்கும் நல்வரவு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வரவேற்று வழிமொழிகிறேன்.

      நீக்கு
    2. வரவேற்ற துரைக்கும் வந்திருக்கும் ஸ்ரீராம், பானுமதிக்கும் நல்வரவு, வாழ்த்துகள், வணக்கம் பிரார்த்தனைகள். வரப்போகும் அனைவருக்கும் நல்வரவும் வாழ்த்துகளும், பிரார்த்தனைகளும், வணக்கமும்.

      நீக்கு
  3. அனைவருக்கும் காலை வணக்கம். இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள். காலை வணக்கம். வாங்க,, வாங்க...

      நீக்கு
  4. அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துகள். இன்று ஆவணி அவிட்டம் கொண்டாடும் சகோதரர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். பெரியோருக்கு நமஸ்காரங்கள், சிறியோருக்கு ஆசிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா அக்கா... வணக்கம். வாழ்த்துகளுக்கு நன்றி.

      நீக்கு
  5. இந்தக் குபேரர் கோயில் பற்றி எனக்குப் பல வருடங்கள் முன்னால் பதிவர் எல்கே மூலம் தெரியும். ஆனாலும் போனதில்லை. மற்றக் கோயில்கள் பற்றி இங்கே தான் அறிந்து கொண்டேன்.

    ஸ்ரீராமின் "கடவுளே வா!" கவிதை முன்னர் படித்தேனோ? நல்ல கவிதை! அப்படியானும் கடவுள் வந்து அனைவர் துன்பத்தையும் தீர்க்கட்டும். முக்கியமாய் மழை பொழிய வைக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேஸ்புக்கில் படித்து கருத்தும் சொல்லி இருந்தீர்கள்.

      நீக்கு
  6. படங்கள் எல்லாமும் அருமையாகப் பச்சை பச்சையாகவும் வந்திருக்கின்றன. செல்லங்கள் இல்லாத இடமும் உண்டோ? அரைக்காசு அம்மன் கோயில் புதுக்கோட்டையில் பிரபலம். போனோம்னு நினைக்கிறேன். வண்டியில் இருந்து எட்டிப் பார்க்கும் செல்லமும் அழகு.

    பதிலளிநீக்கு
  7. எஸ்.எம்.எஸ். தத்துப்பித்துவம் படித்த நினைவு இல்லை. சொல்லப் போனால் ஸ்ரீராமின் முகநூல் பதிவுகள் எப்போவானும் தான் வருகின்றன. :) இத்தனைக்கும் close associate என்பதற்கான ஆப்ஷன் கொடுத்திருக்கேன். இஃகி,இஃகி,இஃகி.

    பாபர் எழுதியதாகச் சொன்னவை படித்திருக்கேன். வேறு யாரோ இதை எடுத்துக் காட்டியிருந்த நினைவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேஸ்புக்கில் ஏகப்பட்ட ப்ரெண்ட்ஸ் இருந்தால் எவ்வளவுதான் முதலில் வரும்? அதனால் பார்க்க முடியாமல் போயிருக்கலாம்.

      நீக்கு
  8. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் காலை வணக்கங்களுடன் இந்நாள் இனிமை நிறைந்ததாக இருக்கவும் வேண்டி ஆண்டவனை பரிபூரணமாக பிரார்த்திக்கிறேன்.

    அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா...

      ப்ரார்தனைகளுக்குநன்றி. உங்களுக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்.

      நீக்கு
  9. குபேரன் கோவிலுக்கு நான் ஒரு முறை சென்றிருக்கிறேன். அங்கு கொடுக்கும் குங்குமம் கூட பச்சை நிறத்தில்தான் இருக்கும். இதை நீங்கள் ஏன் குறிப்பிடவில்லை?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் பானு அக்கா... அதைச் சொல்ல விட்டு விட்டேன்!

      நீக்கு
  10. உங்களுக்கு சுதந்திர தினம் என்றால் மிட்டாய் நினைவுக்கு வருகிறது. எனக்கு..? சில சமயம் வரலக்ஷ்மி விரதம், ஆவணி அவிட்டம் போன்ற பண்டிகைகள் ஆகஸ்ட் 15 அன்று வந்துவிடும். பள்ளி, கல்லூரியில் அன்று வராவிட்டால் காலாண்டுத் தேர்வு எழுத விடமாட்டோம் என்று மிரட்டுவார்கள். வீட்டிலோ பண்டிகை நாளில் வீட்டில் இல்லாமல் அப்படி என்ன ஸ்கூல்/காலேஜ் என்று கத்துவார்கள். அவஸ்தை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், பண்டிகைகளும் அந்த நாளில் வந்து விட்டால் கொண்டாட்டம் குறைந்து விடுகிறது!

      நீக்கு
  11. முதலையின் தாகம் தீர்க்குமா இச்சிறுநீர்?

    அவசரம் பயம் அறியாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விலங்குகளுக்கு தாகம் என்றாலும் அதற்கும்
      இவ்வுலகில் ஆண் வேண்டியிருக்கிறது
      ஆணின்றி அமையாது உலகு. ஹாஹாஹா

      நீக்கு
    2. தாகம் தீர்க்குமோ, இல்லையோ... சில சமயங்களில் பசி தீரும்!!!

      நீக்கு
    3. நெல்லை... நீரின்றி அமையாது... ஆணின்றியும் அமையாதா?

      நீக்கு
  12. குபேரர் கதை - புதிது...!

    மகான் - செல்வாக்கு - தலைக்கனம் - வியப்பு...!

    கடவுளே...

    நானிருக்கும் நிலையில் உன்னை என்ன கேட்பேன்...?
    இன்னும் நன்மை செய்து துன்பம் வாங்கும்
    உள்ளம் கேட்பேன்...
    நன்மை செய்து துன்பம் வாங்கும்
    உள்ளம் கேட்பேன்...


    ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே கண்ணா...
    ஆசை என்னும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணா...

    கடலளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன்...
    அது கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன்...

    உள்ளத்திலே உள்ளது தான் உலகம் கண்ணா...
    இதை உணர்ந்து கொண்டேன் துன்பம் எல்லாம் விலகும் கண்ணா...
    உணர்ந்து கொண்டேன் துன்பம் எல்லாம்
    விலகும் கண்ணா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க DD... நீங்கள் சொல்லியிருக்கும் பாடல் குபேரருக்குப்பொருந்தும். அவரைப்பார்க்கச் செல்பவர்களுக்குப் பொருந்தாது!!

      நீக்கு
    2. எவ்வளவோ பாடல்கள் இருந்தாலும், எனது மனதில் நினைத்ததை... அப்படியே உங்களின் கருத்துரையாக...

      அசந்து விட்டேன்...!!!

      நீக்கு
  13. அந்த முதலைப் படம் செயற்கை என்றே நினைக்கின்றேன்....

    முதலையின் நிழல் விழுவதைப் போல சிறுவனின் நிழல் கீழே விழவில்லையே!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிறுவன் நிழலுக்குள்ளேஅடங்கி விட்டான். என்றாலும் இந்தப் படம் நம்பும்படி இல்லை தான்!தனித்தனியாக எடுத்துச் சேர்த்திருக்கலாம்.

      நீக்கு
    2. இணையத்தில் வரும் பாதி விஷயங்கள் செயற்கைதான். அதை உருவாக்கியவர் ரசனையானவர் போல!

      நீக்கு
  14. //குபேரர் சிவனிடம் தான் குற்றமற்றவர் என்று மன்றாடுகிறார். உண்மையுணர்ந்த பார்வதி குபேரனுக்கு அந்தக் கண்ணைத் திருப்பிக் கொடுத்தாலும் அது மறு கண்ணைவிட சிறிதாகவே இருக்குமாறு கொடுக்கிறாள்//

    இப்படி எல்லாம் கதைவிட நமது மூதாதையர்களை மிஞ்ச உலகில் ஆளில்லை.

    இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள் ஜி

    முதலைப்படம் உண்மையானது அல்ல!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // பார்வதியின் அழகில் ஸ்தம்பித்துப் போக... //

      // குபேரர் சிவனிடம் தான் குற்றமற்றவர் என்று மன்றாடுகிறார் //

      சிவனை நினைத்து கடுந்தவம் புரிந்த குபேரன், சிவபார்வதி தரிசனம் கிடைத்தவுடன், "இப்படியொரு தேவியை இதுநாள் வரை துதிக்கவில்லையே..." என்று நினைத்து, ஒரு கண் சிறிது துடித்து அடங்க... பிறகு கண் வெடிக்க... மன்னிப்பு கேட்க... பெருந்தன்மையுடன் சக்தி மன்னிப்பு கொடுக்க... மேலும் அறிய : கீழ் உள்ள இணைப்பை சொடுக்கவும்...

      அருள்மிகு லட்சுமி குபேரர் திருக்கோவில்

      நன்றி...

      நீக்கு
    2. ​பார்வதிக்கும் பதட்டமா? !!

      ஆமாம்... பொருத்தமாய் ஏதாவது கதை தயார் விடுகிறார்கள்!

      நீக்கு
    3. ஆமாம் DD.. இங்கு மட்டுமல்ல.. சென்ற பயணக்கட்டுரையிலும் நிறைய விவரங்கள் இணையங்களில் நிறைய இடங்களில் பார்த்துதான் எழுதினேன். எல்லாம் எனக்கு முன்னரே தெரிந்திருக்குமா என்ன? வெள்ளி விடீயோக்களும் விவரங்கள் சேகரித்தே எழுதுகிறேன். ''இப்போது விவரங்கள் தேடும்போதுதான் இவற்றை பார்க்காமல் விட்டேன்'' என்று பயணக்கட்டுரையில் குறிப்பிட்டும் இருக்கிறேன். அதனாலேயே முதலில் பாசிட்டிவ்வாய்ச் சொன்ன பயண ஏற்பாட்டாளர்களைப் பற்றி பின்னர் குறையும் சொன்னேன்.

      சரியாய்ப் படித்திருந்தால் அதைப் பார்த்திருப்பீர்கள்!

      நன்றி.

      நீக்கு
    4. // பதட்டமா? //

      இதை யாருமே இங்கு சொல்லவில்லையே...

      வாசிப்பவர்கள் அந்த இணைப்பை சொடுக்கி, வாசிக்க வேண்டும் என்பதே என் விருப்பம்...

      நீக்கு
  15. குபேரர் கோயில் இப்போதுதான் அறிகிறேன். இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  16. இனிய சுதந்திர தின நாள் நல்வாழ்த்துகள் அனைவருக்கும்..

    கீதா

    பதிலளிநீக்கு
  17. லங்காவிலிருந்து குபேரன் சென்ற பிறகு அவனுக்கு அழிவு வந்தது என்பது போன்று சமீபத்தில் ராஜியின் தளத்தில் இதே போன்று ஒரு தேவி பெயர் மறந்து போச்சே...அத்தேவி இலங்கையை விட்டுப் போனதும் ராவணனுக்கு அழிவு வந்தது என்று ஒரு கதை சொல்லியிருந்த நினைவு...நிறைய வெர்ஷன்ஸோ?

    குபேரன் கோயில் ஒரே ஒரு முறை சென்றதாக நினைவு. அந்தச் சாலையில் பயணித்த போது அறிந்து சென்றதுண்டு. பல வருடங்களுக்கு முன்னால் அப்போது அந்தச் சாலை இன்னும் காடாக இருந்தது. வண்டலூர் விலங்கியல் பூங்கா ஒட்டிச் செல்லும் சாலை..பூங்காவின் ஒரு கேட்டும் அங்கு உண்டு. அந்தச் சாலையில்தான் கொஞ்ச தூரம் சென்றால் இப்போது வி ஐ டி யும் வந்திருக்கு. அதே ரோட்டில் இடது புறம் குன்று இஒன்று இருக்கும் அதன் மீது ஆஞ்சு கோயில் உண்டு. வீர ஆஞ்சநேயர் கோயில் புதுப்பாக்கம். அழகான கோயில். இப்போது கோயில் செமையா ஆகியிருக்கு என்று கேள்விப்பட்டேன். அந்த ரோடு கேளம்பாக்கத்தில் சென்று சேரும். அதன் முன்னே ஒரு ஆசிரமம் அதனைச் சார்ந்த ஒரு பள்ளி எல்லாம் உண்டு. அவரைப் பற்றி நம்ம துளசிகோபால் அக்கா கூட எழுதியிருந்தாங்க. அவங்க அவரைச் சந்தித்தது பற்றியும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிவசங்கர் பாபாவின் ஆசிரமத்தைச் சொல்கிறீர்களோ? துளசி மற்றும் நியூசிலாந்தில் சிலருக்கு இவர் தான் ஆன்மிக குரு!

      நீக்கு
    2. நான் தி/கீதாவைக்கேட்டேன்.

      நீக்கு
  18. குபேரர் பார்வதி கதை இப்போதுதான் அறிகிறேன் ஸ்ரீராம்.

    அதைத் தாண்டிச் சென்றால் சிறிய பாதாள லிங்கம் ஒன்று இருக்கிறது. அதை வலமாகச் சுற்றி திரும்பினால் மேடை போன்ற அமைப்பில் சுமார் பதினைந்து சிறிய விநாயகர் விக்ரகங்கள் இருக்கின்றன. //

    ஸ்ரீராம் நீங்க பாசாகிட்டீங்க!!!! ஹா ஹா ஹா..நல்லா விவரணம் நோட் பண்ணி வந்து சொல்லியிருக்கீங்க!!!..பானுக்கா யுவர் ஆனார்! நோட் திஸ் ஸ்ரீராம் பிரசாதம் எல்லாம் நினைத்துக் கொண்டே செல்லவில்லை!!! கரெக்டா பிள்ளையார் எங்கிருக்கிறார் என்று சொல்லிவிட்டார். ரைட்டா லெஃப்டானு எல்லாம் கேட்கப்படாது...!! ஹிஹிஹி..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா... ஹா... ஹா... சென்று மூன்று மாதங்கள் ஆகிறது கீதா.... சும்மா நினைவிலிருந்து எழுதினேன்.

      நீக்கு
  19. குபேரர் வியந்து கண் கொட்டாமல் பார்த்து ஒரே ஒரு கண்ணை அசைத்ததுக்கே பார்வதி தேவி இம்மாம்பெரிய பனிஷ்மென்ட் கொடுத்துட்டாங்களே...அவர் மேல தப்பே இல்லைனாக் கூட!!! பார்வதி தேவிக்கு ஏன் அவர் தப்பான அர்த்தத்தில் இமை அசைக்க வில்லை என்று முதலில் தெரியவில்லையோ!!

    இப்ப பாருங்க ஒரு பொண்ணை ஒருத்தன் இத்தனை நொடிகள் பார்த்தாலே ஏதோ பனிஷெம்ன்ட் அப்படினு கேரளத்துல சொல்லிக் கேட்டேன்...ஆனா அப்பவே இந்த நேரடி பனிஷ்மென்ட் எல்லாம் இருந்திருக்கு...

    அப்படிப் பார்க்கும் போது பெண்களைத் த்வறான முறையில் அணுகும், பாலியல பலாத்காரம் செய்யும் ஆண்களுக்கு எந்த தண்டனை வேண்டுமானாலும் கொடுக்கலாம் கொடுக்க வேண்டும்.

    இந்தக் கதை சொல்லும் பாயின்ட் அதுதானோ

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடேங்கப்பா...! இதுவல்லவோ சிறந்த கருத்துரை...

      // பார்வதி தேவிக்கு ஏன் அவர் தப்பான அர்த்தத்தில் இமை அசைக்க வில்லை என்று முதலில் தெரியவில்லையோ!! //

      இப்படியே சிந்தித்து இருந்தால், ஸ்ரீராம் சார் கூட எழுதிய விதம் தவறு என்று நினைக்கக்கூடும்...

      ஆனாலும்... இதுவல்லவோ சிறந்த கருத்துரை...

      வாழ்க நலம்... ஐயோ இன்னொரு பீபீபீ-என்று யாரையும் சொல்லவில்லையாக்கும்...! புரிந்தால் நலம்...

      நீக்கு
    2. இருக்கலாம் கீதா... ஒவ்வொரு கதையையும் அப்படியே நேரான பொருளில் எடுத்துக் கொள்ளவும் முடியாது இல்லையா?!!

      நீக்கு
  20. யூ டூ பெருமாள்?//

    ஹா ஹா ஹா ஸ்ரீராம் இதை நான் அடிக்கடி அவர்கிட்டேயே கேட்பேன். ஹா ஹா ஹா..

    இதை என்ன விவரம் என்று கேட்டு உச்ச நீதி மன்றத்தில்அல்லது உயர் நீதிமன்றத்தில் யாரோ எப்போதோ சமீபத்தில் ஏதோ வழக்கு போட்டிருந்ததாய் நினைவு. என்னாச்சோ?!! //

    ஓ அப்படியுமா? இதுக்கு யார் ஸ்ரீராம் கோர்ட்டுல வந்து நிப்பாங்க? பதில் சொல்லுவாங்க..மெய்யாலுமா? ஆச்சரியமா இருக்கு...இது புது தகவல் மீ க்கு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த வழக்கு என்ன ஆச்சு என்று தெரியவில்லை. என்ன, தள்ளுபடி செய்திருப்பார்கள்...!

      நீக்கு
  21. தன் கடனையே வாங்க முடியாத குபேரர் எனக்கென்ன உதவி செய்வாரோ தெரியவில்லை!//

    ஹா ஹா ஹா ஹாஹ் ஆ..சிரித்துவிட்டேன். நான் கேக்கற கேள்வி எல்லாம் நீங்களும் கேட்டுருக்கீங்களேனுதான் ஹிஹிஹி...அப்படியாச்சும் குபேரருக்கு ரோஷம் வந்து அருளட்டும் ஸ்ரீராம்! உங்கள் பிரச்சனைகள் விரைவில் தீர்ந்திட பிரார்த்தனைகளும்...

    நாணயத்தை அவர் கையில் (கீழே விழாமல்) வைத்து, தொந்தியில் தடவி பிரார்த்தித்து, எடுத்துக்கொள்ளச் செய்கிறார்கள். //

    ஓ! இதுவும் புதுசு.

    இதே போலத்தானே சைநீஸ் லாஃபிங்க் புத்தாவின் தொந்தியைத் தடவினால் செல்வம் வரும் என்று என் உறவினர்களில் சிலர் வீட்டில் வைத்திருக்காங்க.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அங்கு அப்படிதான் சொன்னார்கள். வாஸ்து பகவான் குபேரர், லாஃபிங் புத்தா... எல்லாம் ஒரே மாதிரி!

      நீக்கு
  22. படங்கள் எல்லாம் செமையா வந்திருக்கு ஸ்ரீராம்..பளிச்சென்று.

    நம்ம செல்லங்கள் அழகோ அழகுதான். அவங்க மலைக்கு மேல ஆளே இல்லாத இடத்தில கூட இருக்காங்க. எப்படி இந்த உயரம் வரை வந்திருக்கு என்று கூட நான் வியந்ததுண்டு. எப்படி என்ன சாப்பாடு கிடைக்கும் என்றெல்லாம் யோசித்ததுண்டு.

    அந்த மூன்றாவது ஃபோட்டோவில் உள்ளவர் ஏதோ எதிர்பார்க்கிறார் போலும். பொதுவாகவே கோயில்கள், கடைத்தெரு பக்கத்தில் உள்ளவர்களுக்கு மக்களும் ஏதேனும் கொடுக்கிறார்கள். பரவாயில்லை மக்கள் நல்ல மனதுடன் இருக்கிறார்கள் என்று நினைத்துக் கொள்வேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  23. அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய சுதந்திர தின நல்வாழ்துக்கள் கோமதி அக்கா... வாங்க... வாங்க...

      நீக்கு
  24. இங்கும் கூட நந்தினி பால் பூத் வைத்திருப்பவர் தினமும் ட்ரேயில் ஒழுகியிருக்கும் பாலை செல்லங்களுக்குக் கொடுக்கிறார். சில கடைகளில் பிஸ்கட் போடுகிறார்கள். அல்லது வருபவர்கள் கூட வாங்கிப் போடுகிறார்கள். இங்குள்ளவைகள் எல்லாம் இங்கு தட்பவெப்பமும் நன்றாக இருப்பதாலோ என்னவோ நல்ல கொழுக் மொழுக்கென்று இருக்கிறார்கள்.

    அதிசயம் என்னவென்றால் இங்கு வந்த முதல் நாள் கண்ணழகியை வெளியில் கூட்டிச் சென்ற போது எந்த பைரவரும் சரி பைரவியும் சரி சண்டைக்கு வரவில்லை. சென்னையில் அப்படியில்லை. பல மாதங்கள் ஆயிற்று இருந்தாலும் அங்கு எங்கள் தெருவில் ஒரு பைரவர் ரொம்பவே துரத்துவார். அவரை ரொம்பவே அடக்க வேண்டியதானது. லஞ்சம் கூட செல்லுபடியாகவில்லை!!!!!!!!!!!!!!!! ஹா ஹா ஹா

    இங்குள்ளவர்கள் அமைதியாகப் போனாலும் நம்ம வீட்டது கொர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று உதார்விடுவாள். ஆனால் பேஸ்மென்ட் வீக்கு!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செல்லங்களுக்கு எங்கேயும் ஆதரவிருக்கிறது என்று தெரிகிறது.

      நீக்கு
  25. ஒரு செல்லம் நான் அந்த கோவில்களை வீட்டுக் கிளம்பும்வரை கூடவே வந்து பிஸ்கட் கலெக்ஷன் செய்து கொண்டிருந்தது.//

    ஹா ஹா ஹா ஹா செமையா சிரித்துவிட்டேன்....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் பையில் வைத்திருக்கும் பிஸ்கட்டின் வாசனை முடியும்வரை கூடவே இருந்தது.

      நீக்கு
  26. குபேரர் கோவில் , அரைக்காசு அம்மன், பவதாரிணி சக்ரகாளி கோவில். , சாய் கோவில் எல்லாம் பார்த்து இருக்கிறோம்.

    குபேரர் கோவில் எதிரில் தான் கொடி மரம் விற்று கொண்டு இருந்தார்கள் அதை வீட்டில் வைத்து வழி பட்டால் நல்லது என்றார்கள் என்று உங்கள் பதிவில் முன்பு குறிப்பிட்டு இருக்கிறேன்.

    உங்கள் குடும்பத்தில் யார் வீட்டிலோ நடந்த விழாவிற்கு அந்த கொடிமரம் பரிசாக வந்தாக நீங்கள் கூட குறிப்பிட்டீர்கள்.

    (ஒரு பதிவில் அல்லது கீதா சாம்பசிவம் அவர்கள் பதிவு பின்னூட்டத்தில் குறிப்பிட்டு இருந்தீர்கள்.)

    பவதாரிணி சக்ரகாளி நல்ல பெரிய உருவமாய் அழகாய் இருப்பார் அன்னை.ஸ்ரீ சக்ர காளி வழிபாட்டு மையம் என்று அப்போது புதிதாக ஆரம்பித்து இருந்தார்கள்.2012 ம் வருடம் போனோம்.

    சாரின் அண்ணா அழைத்து சென்ற கோவில்கள இவை. அஷ்டமி பூஜை மிக சிறப்பாக நடக்கும் என்று அஷ்டமி பூஜை நடக்கும் நாள் குறித்த அட்டையும், அர்ச்சனை குங்குமமும் கொடுத்தார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அக்கா. நினைவிருக்கிறது... என் தங்கை வீட்டு கிரகப்ரவேசத்தில் கொடிமரம் பரிசு வந்திருந்தது பற்றிச் சொல்லி இருந்தேன். நீங்களும் சென்று தரிசித்திருக்கிறீர்களா? ஓகே... ஓகே...

      நீக்கு
  27. திருவக்கரை பத்ரகாளி அம்மன் கோவிலிலிருந்து வந்த ஒரு மகானுக்கு சொல்வாக்கு இருந்திருக்கிறது. அதனால் தலைக்கனம் ஏறிவிட்டதாம் அவருக்கு.//

    இது இப்படிச் சிலருக்கு வந்துவிடும் போல!!!!! கொஞ்சம் வித்வத், புகழ், காசு என்று வந்துவிட்டால்....சமீபத்தில் கூட வியாழன் பதிவில் வந்தவர் அன்பே சிவம் என்பதில் ஒரு பகுதியைத் தன் பெயரில் வைத்திருப்பவர்...(ஹிஹிஹி இதுவா கிசு கிசு?!!!!!!) இப்படித்தான்...மனிதர்கள் செய்யும் தவறுகளுக்கு இறைவன் இவர் வாயில் மாட்டிக் கொண்டார். தேவையற்ற வார்த்தைகள் அவை. இவரும் தன் நாவை அடக்கிக் கொண்டு ஆரம்பகாலத்தில் இருந்தது போல தன் பேச்சாற்றலைப் பயன்படுத்திக் கொண்டால் நல்லது.

    அப்போது இந்தக் காளி கோயிலுக்குச் செல்லவில்லை. தெரியவும் இல்லை.

    காளிக்குரிய பீஜ மந்திரம் நடுவில் மறுபடி மறுபடி உச்சரிக்கப்பட்டபோது நடுமுதுகில் ஒரு சிலிர்ப்பு தோன்றியது. //

    வாவ்!!! ஆஹா!!!

    கீதா




    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோவிலுக்குள் நுழையும்போது செயற்கையாக இருந்தது. கோவில் என்ற உணர்வு இல்லை. ஆனால் கோமதி அக்கா சொல்லி இருந்தபடி பெரிய அம்மன் ப்ரதிமைகள்.

      நீக்கு
    2. ஓம் நற்பவி

      ஓம் ஸ்ரீ மஹா கண்பதயே நமஹ
      ப்ம் ஸ்ரீ குருப்யோ நமஹ
      ..................................


      ஓம் க்லீம் தும் துர்(க்)கே துர்(க்)கே
      ரக் ஷணி ரக் ஷணி ஸ்வாஹா
      ஓம் க்லீம் க்ரீம் காளிகே காளிகே

      ரக் ஷணி ரக் ஷணி ஸ்வாஹா
      ஓம் காலவிநாசனி காளிகே
      நமஸ்தே நமஸ்தே
      ஓம் துக்க நிவாரணி துர்(க்)கே
      நமஸ்தே நமஸ்தே

      பவதாரணி கோவிலில் ஒலிக்கும் மந்திரம்.

      நீக்கு
  28. உங்கள் கவிதைகள் நன்றாக இருக்கிறது.
    வருவார், ஆறு குளம் நிரம்ப வைப்பார்.
    எல்லோரும் ஊமைகளாக தெரிந்தால் நல்லது தான் வம்பில்லை.
    பாபர் எழுதியதை படித்து இருக்கிறேன்.

    செல்லங்கள் படமும் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  29. வண்டியிலிருந்து எட்டிப் பார்க்கும் செல்லம்...ஆஹா!! செமையா இருக்கு..கூடவே வெளியில் பாய்ந்துவிடக் கூடாதே என்ற கவலையும். ட்ராஃபிக் ரோடாச்சே...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதற்கு இல்லாத ஜாக்கிரதை உணர்வா கீதா? பத்திரமாக நின்றுகொண்டிருந்தது. நேருக்கு நேராய் போட்டோ எடுக்க முனைந்து வண்டி நகர்ந்துகொண்டே இருந்ததில் இப்படிதான் எடுக்க முடிந்தது.

      நீக்கு
  30. செம செம ஆஹா! கடவுளே!!!!!!!!!!!!

    கடவுளே!! ஸ்ரீராம் எழுதியதைப் பாருங்க. எப்படி அழகா எழுதியிருக்கிறார். அதுக்காகவேனும் அவர் பிரார்த்திக்கும் பரிசைக் கொடுத்து இதன் மூலம் உன்னைச் சந்திக்கிறேன்னு சொல்லக் கூடாதா?!!!!

    ப(க)ட்டாடை உடுத்தி
    வந்தால்தான் தெய்வமா?
    பராரியாய் வந்தால் மாறுவேஷமா?//

    ஆமாம் அதானே!!! இயற்கையும்தானே! அதை மிஞ்ச நம்மால் இயலுமோ.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடவுளை நாம் பார்க்கப் போகும் நிலையிலிருந்து கடவுளை என்னை வந்து பார்க்கும்படி அழைக்கும் அந்த திமிர் வரிகள்தான் முதலில் மனதில் தோன்றியது.

      வா... வந்தென்னை சந்தி...!

      அப்புறம்தான் மற்ற வரிகளை அமைத்தேன்!

      நீக்கு
  31. போட்டிருக்கும் கோலத்தை மிதித்தபடி யாராவது நின்றிருந்தால் எனக்கு எக்கச்சக்க கோபம் வரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ... நான் அதை கவனிப்பதில்லை ஜீவி ஸார்...

      நீக்கு
    2. சரியாக கோலத்தின்மீது அந்த மடையன் நிற்கிறானே.. இவர்களுக்கெல்லாம் சுரணை என்பதே இல்லையா ..என்று காலையில் முதலில் அதைப் பார்த்தபோது நினைத்தேன். ஜீவி சொல்லிவிட்டார்.

      நீக்கு
    3. அவன் எட்டாவது படிக்கும் சிறுவன் ஏகாந்தன் ஸார். வியாபாரம் செய்யும் கடை வாசலில் கோலம் மீது யாரும் நிற்கக்கூடாது என்றால் எப்படி!!!!!

      நீக்கு
  32. எட்டிப்பார்க்கும் அந்தத் செல்லம் கண்ணுக்குத் தெரிகிறதா?!!//
    தெரிகிறதே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா... ஹா... ஹா...

      வேடிக்கை பார்த்துக்கொண்டே சென்றது செல்லம்!

      நீக்கு
  33. எஸ் எம் எஸ் வாசகம் .
    காது கேட்கும் திறன், பேசும் திறன் இல்லை என்றால் வம்புகளும் இல்லை ஒரு புறம் என்றாலும் வேதனைதான். பார்வைத் திறன் அற்றவர்களைக் காணும் போது இன்னும் வேதனை..

    பாபர் எழுதியதை எப்போதோ எங்கோ வாசித்திருக்கும் நினைவு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாம் ஒருவரைப் பற்றி ஒன்று நினைக்கிறோம். அதே சமயம் அந்த ஒருவருக்கு நம்மைப்பற்றியும் ஏதாவது தோன்றும் இல்லையா?!! அதுதான்.

      நீக்கு
  34. //..இந்தியாவைப்பற்றி முஸ்லீம் மன்னர் பாபர்.. (தினமலர் அறிவுக்களஞ்சியம் !)..//

    கோவில்களை இடித்துத்தள்ளிவிட்டு அதன் மீது மசூதிகளைக் கட்டிச்சென்றவன் வேறென்ன பெரிதாக எழுதிவிடப்போகிறான் இந்தியாவைப்பற்றி? அவன் கண்ணில் வேறென்ன பட்டிருக்கும்?
    இந்தியப்பிரதேசத்தின் கலாச்சாரம்பற்றிக் கேள்விப்பட்டு 4-ஆம் நூற்றாண்டில் தென்னிந்தியா நோக்கிவந்த க்ரேக்க மாலுமி மெகஸ்தனிஸோ (Megasthenes), சீனாவிலிருந்து கால்நடையாகவே 5-ஆம் நூற்றாண்டில் இந்தியாவுக்குப் பயணித்த சீன பௌத்த அறிஞன் ஃபாஹியானோ ( Faxian ) அல்ல, பாபர். அவன் ஒரு ஆக்ரமிப்பாளன் .. கொடுங்கோலன். அவ்வளவே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏகாந்தன் சார்... பழைய தஞ்சை பெரியகோவில் படங்களிலும் இதனை நாம் காணலாம். நாம் உடைக்கு பாரம்பர்யமாக பெரிய முக்கியத்துவம் கொடுத்ததில்லை. அதனால் அது ஒரு பெரிய குற்றமாகாது. நமக்கு இருந்த inner satisfaction, பேராசைப்படாமை (பொதுவா) இவைகளைப்பற்றியும் எழுதியிருக்காங்களே ஆங்கிலேயர்கள்.

      நீக்கு
    2. இந்தியாவில் தாங்கள் பார்த்த, அவர்களுக்கு அபூர்வமாகத் தோன்றிய பல நல்ல விஷயங்களை, ஆங்கிலேயப் பயணிகள் சிலரும் பயணக்குறிப்புகளில், நூல்களில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.அவர்களைப்போலத்தான் மெகஸ்தனிஸ், ஃபாஹியான் போன்றோரைக் கோடிட்டேன்.

      நீக்கு
  35. முதலையின் அருகில் குட்டிப் பையன் நிற்க முடியுமா? ஒரு வேளை முதலைகளுடன் விளையாடிய க்ராக்கடைல் ஹண்டர்...ஸ்டீவ் இர்வின் அவர்களின் மகனாக இருக்குமோ? மிகப் பழைய ஃபோட்டோ போன்று இருக்கிறது. ஸ்டீவ் இர்வின் இப்போது இல்லை.

    உப்பு நீர் முதலை எனக்கே உப்பு நீரா

    என்று வாயைப் பிளந்து கேட்குதோ!!

    ஊப்பு நீர் முதலைகள் தான் அளவில் மிகப் பெரியதாக இருக்கும். நன்நீர் முதலைகள் கொஞ்சம் சிறியதாக இருக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஊப்பு நீர் முதலைகள் தான் அளவில் மிகப் பெரியதாக இருக்கும். நன்நீர் முதலைகள் கொஞ்சம் சிறியதாக இருக்கும்.// உப்பு நீர் முதலைகள் பெரிது என்பதும் நன் நீர் முதலைகள் சிறிது என்பதும் எனக்குப் புதிய செய்தி!

      நீக்கு
  36. "செல்லம்"னுலாம் நீங்க எழுதறீங்க (பலரும் அப்படியே குறிப்பிடுகிறார்கள்). இரண்டு வாரங்களுக்கு முன்னால் லிஃப்ட் ஓபன் ஆனதும் அதிலிருந்து பெரிய ஓநாய் போன்ற நாய் திமிறிக்கொண்டு வரப்பார்த்தது. கையில் கயிற்றை வைத்திருந்தவரிடம் கோப முகம் காட்டினே. அந்தப் பெண், இது கடிக்காது, பயமில்லை என்றார். எனக்குச் சுதந்திரம் இருந்திருந்தால் பளார்னு விட்டிருப்பேன் (அந்தப் பெண்ணை). இங்க அடையாரில், நாய் வளர்க்கிறவங்க அனேகமா, பாத்ரூம் ரோட்டில் போகட்டும் என்றுதான் நாயை நடத்திச் செல்கிறார்கள். அவர்களுக்கு அவர்கள் நாயின்மேல் உள்ளது போலி அன்பு என்பது புரிந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்லும் காட்சியை கற்பனை செய்து பார்க்க முடிகிறது நெல்லை.. அது மாதிரி சமயங்களில் அவற்றிடமிருந்து நானு விலகியே இருப்பேன்.

      நீக்கு
  37. கோவில் என்றாலேயே கூடவே கதையும் இருக்கும் நேற்று கட்டின கோவில் ஆனாலும்

    பதிலளிநீக்கு
  38. வணக்கம் சகோதரரே

    இவ்வார பதிவு சுவாரஸ்யமாக இருக்கிறது. குபேரன் கோவிலும், அது உருவாகிய விபரங்களும் அருமை. படங்கள் கண்டு குபேரனை தரிசித்து கொண்டேன்.தொடர்ந்த காளியம்மன் கோவில் படங்களும் செய்திகளும் அறிந்து கொண்டேன்.

    தெய்வத்தின் அருள் அபரிமிதமாக வந்தாலும், மனித மூளைக்குள் தலைக்கணம் மறு நிமிடம் கூடவே வந்து விடும் போலிருக்கிறது. திருந்தவும்,மறுபடி தெய்வம் அனுகிரஹக்கிறது. கடந்த பிறவியின் பாவ புண்ணியங்கள் போலும்.

    செல்லங்கள் படங்கள் நன்றாக உள்ளது தாங்கள் அதற்கு உணவாக பிஸ்கட் அளித்தது மகிழ்ச்சிதான். வண்டிக்குள் இருந்து குதித்து விடுவேன் என யாரை மிரட்டுகிறது?

    கடவுள் கவிதை அருமை மிகவும் ரசித்தேன். நாம்

    / மேகங்களின் ஓரங்களில்
    தேடுகிறேன்
    சரிகை வேட்டியுடன் நீ அங்கு
    தென்படுகிறாயா என்று

    இருட்டில் ஒருநாள்
    ஒளியாய் வருவாய்
    என நான்
    இன்னமும் காத்திருக்கிறேன். /

    எனக்கு இந்த வரிகள் மிகவும் பிடித்திருக்கிறது. நாம் ஒவ்வொருவரும் இப்படித்தான் அவனை அழைக்கிறோம். அவன் யாரை நோக்கி முதலடியை எடுத்து வைப்பான்? அதனால்தான் அவன் இன்னமும் மேகக் கூட்டங்களிடையே மறைந்தே நிற்கிறானோ ! நல்லதொரு கவிதையை தந்தமைக்கு பாராட்டுகள்

    கேட்காத கவிதையும் அருமை. ஆம்.. காது கேட்காத ஒவ்வொருத்தருக்கும், அவன் முன் நிற்பவர்கள் ஊமையர்கள்தானே! மிகவும் ரசித்தேன்.

    பாபர் சொன்னதை படித்த மாதிரி உள்ளது. ஆனாலும் மீண்டும் ஒருமுறை மனதில் ஏற்றிக் கொள்ள உதவியதற்கு நன்றி.

    முதலைக்கண்ணீர்....(தலைப்பு)
    ÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
    கடலின் பெரு நீரை விட்டு
    கரையேறி வந்த ஒரு சில துளி
    கணங்களுக்கு பரிசா!! நீ
    கண்ணிமைக்கும் நேரத்தில்
    தந்த சிறு நீரின் திவாலைகள்..
    இல்லை
    பசியின் பயங்கர வேகத்தில் சீறிப்
    பாய்ந்து நான் வாய் திறக்க
    பச்சைப் பாலகனான உனது இந்த
    பயமில்லா செயல்தான் இன்று எனது
    பட்டினிக்கும் உகந்த நீராகரமோ!
    இல்லை
    பானகமோ! பாழும் எம்மினம் செய்த
    பாவங்களின் வினையாகத்தான் இந்த
    பரிகாரமோ! பார்வைக்கு பயமூட்டியும்
    பசியுடன் பரிதவிக்கும் என் மனதை இச்சிறு பாலகன் சிறிதேனும் அறிவானா!!

    அன்றொரு நாள் கொடும் பசிப்பிணியில்,
    அவஸ்தையுடன் என் இனம் தவிக்க
    அழைத்த கஜேந்திரனுக்கும் சேர்த்து
    ஆறுதலும் தந்திங்கு முற்பகையை அகற்றிடவே அரங்கனும் அரவத்தோடு
    அருகில் விரைந்து வந்தான்! இந்த
    அர்த்தமதை விவரித்துரைக்க இங்கு
    ஆள் அரவம் எவருமில்லை!மறுபடி அந்த
    ஆதிமூலத்தை அழைத்திங்கு பயனுமில்லை! .
    ÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
    நானும் ஏதோ இருக்கிற மூளையை கசக்கி உளறி கொட்டி விட்டேன்.தங்கள் கவிதைகள் என் மனச்சுதந்திரமாய் வந்து விட்ட இந்த வரிகளைப் பார்த்து "இதற்கும் சுதந்திரம் வந்து விட்டதா!!" என ஏளன இளநகை செய்ய போகிறது. ஹா. ஹா. ஹா. கவிதை நன்றாக எழுதி அனுபவம் இல்லை.. திருத்தம் இருந்தால் சொல்லவும். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா...

      பொறுமையாய் அனைத்தையும் படித்து சிறப்பான கருத்திட்டமைக்கு மிக்க நன்றி.

      அட... அட அந்தப் படத்துக்கு நீளமான ஒரு கவிதையே வடித்து விட்டீர்கள். உப்பு நீராயினும் உவப்புடன் ஏற்றுக்கொள்கிறதோ...

      நன்றி கமலா அக்கா.

      நீக்கு
    2. கமலாவுக்கு கவிதையும் அருமையாக எழுத வருகிறது.
      வாழ்த்துக்கள் கவிதைக்கு.

      நீக்கு
  39. அனைவருக்கும் தாமதமாக சுதந்திர தின வாழ்த்துகள் அனைவரும் மன சந்தோஷத்துடன்,
    பாரம் இல்லாமல்
    நிம்மதி நிறைந்த வாழ்க்கையை இறைவன் அளிக்க வேண்டும்.
    குபேரன் கோவிலைப் பற்றியும்,
    மற்ற விவரங்களையும் அறியக் கொடுத்ததற்கு ஸ்ரீராமுக்கு
    மிக மிக நன்றி.
    பலவருடங்களாகவே இந்த லக்ஷ்மி குபேர காலண்டர்
    வந்து கொண்டிருக்கிறது.
    குபேரனுக்குக் கண் கொடுத்திருக்கலாம் அம்பாள் .
    எல்லாருக்கும் பாரபட்சம் இல்லாமல் தனம் அளிப்பாரே.

    கேளம்பாக்கம் சென்றிருக்கிறோம்.
    துர்க்கை பிரமாதமாக இருப்பார்.
    அப்புறம் செல்ல தோன்றவில்லை.

    அருமையான கவிதைகளுக்கு நன்றி ஸ்ரீராம். மனதில்
    இருந்து வரும் வார்த்தைகளுக்கு
    எப்பொழுதும் மனதை ஈர்க்கும் சக்தி உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லிம்மா...

      வணக்கம். ஊர் சென்று திரும்பி விட்டீர்கள் என்று பேஸ்புக்குமூலம் அறிந்தேன். உங்கள் அனுபவங்களை எழுதுங்கள்.

      பாராட்டுகளுக்கு நன்றி.

      நீக்கு
  40. தீவட்டி மனிதர்கள் - :(((

    கடவுளே வந்தென்னைச் சந்தி.... வந்தால்... :))

    //தியானைக்கூட இடத்துடன்// தியானக் கூட இடத்துடன்.

    குபேரன் கோவில் - நல்லதே நடக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  41. குபரேர் கோயில் தகவல்களும் தரிசன விவரங்களும் படங்களும் அருமை.

    கடவுளை வந்து சந்திக்குமாறு அழைக்கும் கவிதை நன்று.

    நல்ல தொகுப்பு.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!