சனி, 18 பிப்ரவரி, 2023

"நானூறாவது பிள்ளை" மற்றும் 'நான் படிச்ச கதை'

 


=====================================================================================================================================


=========================================================================================================================================================




-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நான் படிச்ச கதை (JKC)

மரப்பாச்சி

உமா மகேஸ்வரி


பெண்ணிய எழுத்தாளர் அம்பையின்அம்மா ஒரு கொலை செய்தாள்என்ற கதையை வாசகர்களுக்கு பரிச்சயம் இருக்கும். நினைவில் நிற்கக் கூடிய சிறுகதைகளில் ஒன்று அது. சிறுமியாக இருந்தபோது கருப்பியாக இருந்தாலும் காக்கைக்கு பொன்குஞ்சாக அவள் மேல் அன்பையும் பாசத்தையும் பொழிந்த அம்மாஅவள் பூப்படைந்தவுடன்உனக்கு இந்த இழவுக்கு என்னடீ அவசரம்? இதுவேற இனிமே ஒரு பாரம்" என்று ஆதங்கப் படும்போது  அவள் கொல்லப்பட்டதாகவே உணர்கிறாள். அம்மாக்களுக்கே உண்டாகும்எப்படி இவளை கரை ஏற்றுவோனோஎன்ற கவலை அது.

உமா மஹேஸ்வரியும் ஒரு பெண்ணிய எழுத்தாளராகக் கருதப்படுகிறார். அவருடைய  “மரப்பாச்சிகதையும் மேற்கூறிய அம்பையின் கதையை ஒட்டியே இருக்கிறது. இந்தக் கதையில் வரும் அனுவின் அம்மாவுக்கும் அது போன்ற கவலை தோன்ற ஆரம்பிக்கிறது. ஆனாலும் ஒரு சிறு வித்தியாசம் உண்டு.

அனு  பூப்படையவில்லை. பூப்படையும் பருவத்தை எட்டியிருந்தாள். மாற்றங்கள் மாற்றங்கள். உடலிலும், மனதிலும் மாற்றங்கள் தோன்ற ஆரம்பித்திருக்கின்றன. முக்கியமாக  ஆணின் ஸ்பரிசம். அதுவரை எந்த ஆணுடைய  ஸ்பரிசமும் அவளுக்கு வித்தியாசமாய் தோன்றவில்லை. மரப்பாச்சியாய் இருக்கிறாள். ஆனால் தற்போது சிலருடைய ஸ்பரிசம் அவளுக்கு வெறுப்பை  உண்டாக்குகிறது. இந்தத்  தன்மையைத்தான் மரப்பாச்சி பொம்மையின் உருவகத்தில் கதாசிரியர் அறிமுகம் செய்கிறார்.

அப்பா பரணில் இருந்து ஒரு மரப்பாச்சி பொம்மையை எடுத்து அவளுக்கு கொடுக்கிறார். அது அவளுடைய பழைய அனுவாக அவளுக்குத் தோன்றுகிறது. அந்த மரப்பாச்சி பொம்மையும் அவளுக்கு வேண்டும்போது, அவள் விரும்பும்  ஆணாகவோ பெண்ணாகவோ மாறி அவளுடன் விளையாடுகிறது. அவளால் மரப்பாச்சியைப் பிரிந்து இருக்க முடியவில்லை. ஹும், குழந்தைத் தனத்தையும் விட முடியவில்லை.

விடுமுறையில் அத்தை வந்து அவளுடைய வீட்டிற்கு அனுவைக் கூட்டிச் செல்கிறாள். அத்தைக்கு குழந்தை இல்லை. ஆகவே குழந்தையாக அவளை சீராட்டுகிறாள். அப்படி அத்தையின் வீட்டிற்கு செல்லும்போது மரப்பாச்சி பொம்மையை விட்டு பிரிய நேர்கிறது.

அத்தையின் வீட்டில் மாமா அவளைப் பார்க்கும் பார்வை சரியில்லைமொட்டுக்களாக அரும்பி வரும் சிறு முலைகளை பிடித்து விடுகிறார். அந்த உணர்ச்சித் தூண்டல் அவளுக்கு ஜுரத்தை வரவழைக்கிறது. மனம் பழைய மரப்பாச்சியைத் தேடுகிறதுவீட்டுக்குத்  திரும்புகிறாள்.

உமா மஹேஸ்வரி அடிப்படையில் ஒரு கவிஞர். ஆகவே கவிதையை உரைநடை கதையாக்க முயன்றிருக்கிறார்கதையில் fantasy (மிகையான கற்பனைப் புனைவு ?)   நிறைய இருக்கிறது. அப்படி இருந்தாலும் கதை சொல்லும் ஒழுங்கில் அம்பையைப் போலவோ, சூடாமணியைப் போலவோ கதையை ஒரு சீரான ஆற்றொழுக்கில் கொண்டு செல்வதில் வெற்றி பெற இயலவில்லை என்று தோன்றுகிறது

இங்கு நான் கதையை முழுதுமாகத் தரவில்லை. சுருக்கமாக சிறப்புப்  பகுதிகளை மாத்திரம் எடுத்துக் காட்டுகிறேன் அதுவே முழுக்கதையையும் விவரிக்கும். வழக்கம் போல் கதைச் சுருக்கம் கதையாசிரியரின்  வார்த்தைகளிலேயே  தரப்பட்டுள்ளது. கதையின் சுட்டி கடைசியில் கொடுக்கப் பட்டுள்ளது. பொறுமையும் கவிதை ரசிப்புத் தன்மையும்  இருந்தால் கதை உங்களுக்கு மிகவும் பிடிக்கும்…. நவீன உளவியல் சிறுகதைகளில் ஒன்றாக இக்கதையைக் கருதலாம் என்பது எனது கருத்து..

பரணில் எதையோ தேட ஏறிய அப்பா இறங்கும்போது வேறொரு பொருளைக் கையில் வைத்திருந்தார். அப்பா அனுவைக் கூப்பிட்டார் - எந்த நொடியிலும் விழுந்து சிதறுவதற்கான அச்சுறுத்தல்களோடு அவசர வாழ்வில் விளிம்பில் தள்ளாடும் அபூர்வமானதொரு குழந்தைக் கணத்தைத் தன்னிலிருந்து சேகரித்து அவளில் நட்டுவிட வேண்டும், உடனடியாக. ஒரு மாயாஜாலப் புன்னகையோடு அதை அனுவிடம் நீட்டினார்….. அவசர அவசரமாகப் பிரித்தபோது வெளியே வந்தது கரிய மரத்தாலான சிறிய பெண்ணுருவம். அதனுடைய பழமையே அனுவிற்குப் புதுமையானதாயிற்று.

இதமான பிடிமானத்திற்கு ஏதுவான சிற்றுடல்; நீண்டு மடங்கிய கைகள்; ஒரு பீடத்தில் நிறுத்தப்பட்ட கால்கள்; வாழ்தலின் சோகத்தை வளைகோடுகளுக்குள் நிறைத்த கண்கள்; உறைந்த உதடுகள். 'ஹை, பின்னல்கூட போட்டிருக்கப்பா.' அனு ஒவ்வொன்றாகத் தடவிப் பார்த்தாள் அதிசயமாக. 'ஒவ்வொரு அணுவிலும் இதைச் செதுக்கிய தச்சனின் விரல்மொழி, உளியின் ஒலி' என்று அப்பா முழங்கை, கால்கள் மற்றும் முகத்தில் இருக்கிற சிறுரேகைகளைக் காட்டிச் சொன்னார்.

அம்மா சமையல், கழுவுதல், துவைத்தல், துடைத்தல் என எந்த நேரமும் வேலைகளோடிருக்கிறாள். பிறகு தங்கச்சிப் பாப்பாவின் குஞ்சுக் கை, கால்களுக்கு எண்ணெயிட்டு நீவி, காலில் குப்புறப் போட்டுக் குளிக்கவைக்கிறாள். துவட்டிச் சாம்பிராணிப் புகை காட்டி, நெஞ்சோடு அணைத்துச் சேலையால் மூடி மூலையில் உட்கார்ந்திருக்கிறாள் நெடுநேரம்.

'அம்மா நான் உன் மடியில் படுத்துக்கட்டுமா?'

'இன்னும் சின்னக் குழந்தையா நீ?' நெஞ்சு வரை மேடேறிய கர்ப்ப வயிற்றோடு அம்மாவுக்குப் பேசினாலே மூச்சிரைக்கிறது. அவள் பகிர்ந்து தரும் அன்பின் போதாமை அனுவை அழுத்துகிறது.

'நான் யார்? பெரியவளா, சின்னவளா, நீயே சொல்' அனு கேட்கையில் மரப்பாச்சி மௌனமாய் விழிக்கும்.

'எனக்கு யாரிருக்கா? நான் தனி.' அனுவின் முறையிடல்களை அது அக்கறையோடு கேட்கும்….அவள் நிர்மாணிக்கிற பள்ளிகளில் மாணவியாக, தொட்டில்களில் பிள்ளையாக, சில நேரம் அம்மாவாக, கனவுலக தேவதையாக எந்த நேரமும் அனுவோடிருக்கும்.

மரப்பாச்சி புதிய கதைகளை அவளுக்குச் சொல்லும்போது, அதன் கண்களில் நீல ஒளி படரும். மரப்பாச்சி மரத்தின்  இதயமாயிருந்தபோது அறிந்த கதைகள், மரம் வானை முத்தமிட்ட பரவசக் கதைகள், மழைத்துளிக்குள் விரிந்த வானவிற் கதைகள்... அவள் எல்லா நாளும் ஏதாவது ஒரு கதையின் மடியில் உறங்கினாள்.

வருடங்கள் அவளை உருக்கிப் புதிதாக வார்த்தன. நீண்டு, மினுமினுக்கிற கைகள்; திரண்ட தோள்கள்; குழைந்து, வளைந்த இடுப்பு, குளியல் அறையில் தன் மார்பின் அரும்புகளில் முதன் முறையாக விரல் பட்டபோது பயந்து, பதறி மரப்பாச்சியிடம் ஓடி வந்து சொன்னாள். அது தனது சிறிய கூம்பு வடிவ முலைகளை அவளுக்குக் காட்டியது.

பள்ளிக்குக் கிளம்பும் நேரம் இப்போதெல்லாம் மேலாடையைச் சரியாகப் போடுவது அம்மாதான், சாயங்காலம் அவள் வர பத்து நிமிடம் தாமதித்தால், வாசலில் அம்மா பதறித் தவித்து நிற்கிறாள். எங்கே போனாலும் அம்மாவின் கண்களின் கதகதப்பும் மிருதும் அடைகாக்கிறது.

தன் அயர்விலும் ஆனந்தத்திலும் மரப்பாச்சி மங்குவதையும் ஒளிர்வதையும் கண்டு அனு வியக்கிறாள். தன்னை அச்சுறுத்தவும் கிளர்த்தவும் செய்கிற ததும்பல்களை மரப்பாச்சியிடமும் காண்கிறாள். கட்புலனாகாத கதிர்களால் தான் மரப்பாச்சியோடு ஒன்றுவதை உணர்கிறாள்.

சிறுமிகள் அனுவை விளையாடக் கூப்பிட்டு உதடு பிதுக்கித் திரும்புகிறார்கள்…..அனு கட்டில் ஓரத்தில் சுருண்டிருப்பாள்.

மேஜையில் இருக்கும் மரப்பாச்சியின் கண்கள் அவளைத் தாலாட்டும் மெல்லிய வலைகளைப் பின்னுகின்றன. அதன் முலைகள் உதிர்ந்து மார்பெங்கும் திடீரென மயிர் அடர்ந்திருக்கிறது. வளைந்து இடுப்பு நேராகி, உடல் திடம் அடைந்து, வளைந்த மீசையோடு அது பெற்ற ஆண் வடிவம் விசித்திரமாயும் விருப்பத்திற்குரியதாகவும் இருக்கிறது. அது மெதுவாக நகர்ந்து அவள் படுக்கையின் அருகில் வந்தது. அதன் நீண்ட நிழல் கட்டிலில் குவிந்து அனுவை அருந்தியது.

அம்புலிமாமா கதைகளில் அரசிளங்குமரிகளை வளைத்துக் குதிரையில் ஏற்றுகிற இளவரசனின் கைகள். சினிமாக்களில் காதலியைத் துரத்தி ஓடுகிற காதலனின் கால்கள். தொலைக்காட்சியில் கண் மயங்கிய பெண்ணின் கன்னங்களில் முத்தமிடுகிற உதடுகள்…. கனவு

அபூர்வமான லயங்களில் குழைந்து கூடி உருவாகிறான் ஒருவன். அவள் ஒருபோதும் கண்டிராத, ஆனால் எப்போதும் அவளுள் அசைந்தபடியிருந்த அவன், அந்த ஊடுருவல் தனக்கு நேர்வதைத் தானேயற்று கவனம் கொள்ள முடிவது என்ன அதிசயம்? தனக்கு மட்டுமேயாகவிருந்த அந்தரங்கத்தின் திசைகளில் அவன் சுவாதீனம் கொள்வது குளிர்ந்த பரபரப்பாகப் பூக்கிறது. அந்த இரவு, காலையின் அவசரத்திலும் உடைபடாது நீண்டது. அனு வேறெப்போதும் போலன்றி தன் உடலை மிகவும் நேசித்தாள். கனவின் ரகசியத்தைப் பதுக்கிய மிதப்பில் பகல்களிருந்தன.

போர்வைக்குள் அனுவின் கைப்பிடியில் இருக்கிற மரப்பாச்சியை அம்மா பிடுங்க முயற்சித்தால், தூக்கத்திலும் இறுகப் பற்றிக் கொள்கிறாள். அதன் விரிந்த கைகளுக்குள் தன்னைப் பொதிந்தும், மார்பு முடிகளைச் சுருட்டி விளையாடியும் மீசை நுனியை இழுத்துச் சிரித்தும் தோள்களில் நறுக்கென்று செல்லமாய்க் கிள்ளியும் அவள் நேரங்கள் கிளுகிளுக்கும். தாபங்களின் படிகளில் சுழன்றிறங்குகிறாள் அவள்.

கிருஸ்துமஸ் லீவ் சமயம் அத்தை வந்தபோது அனு கவுனை கால்களுக்கிடையில் சேகரித்து, குனிந்து, கோல நடுச்சாணி உருண்டையில் பூசணிப் பூவைச் செருகிக்கொண்டிருந்தாள். 'அனு எப்படி வளர்ந்துட்டே!' அத்தை ஆச்சரியத்திற்குள் அவளை அள்ளிக் கொண்டாள்

அனுவை லீவிற்குத் தன்னோடு அனுப்பும்படி அத்தை கேட்டதும் அம்மாவின் முகத்தில் திகிற் புள்ளிகள் இறைபட்டன. 'அய்யோ மதினி, இவளை நாங்க கடிச்சா முழுங்கிடுவோம்? அப்படியே இவள் ஆளாகிற முகூர்த்தம் எங்க வீட்டில் நேர்ந்தால் என்ன குத்தம்? எனக்கும் பிள்ளையா குட்டியா? ஒரு தரம் என்னோட வரட்டுமே' அத்தை அவளைத் தன்னருகில் வாஞ்சையாக இழுத்துக் கொண்டாள்.

அம்மாவின் வேதனை கண்டு அனு மருண்டாள். துணிகளை அடுக்கிய பெட்டியில் மரப்பாச்சியை வைக்கப் போனபோது அத்தை, 'அங்கே நிறைய பொம்மை இருக்கு' என்று பிடுங்கிப் போட்டதுதான் அனுவுக்கு வருத்தம்.

அம்மா வற்புறுத்தி உடுத்திவிட்ட கரும்பச்சைப் பாவாடையில் அனுவின் வளர்த்தியை மாமாவும் வியந்தார். பார்த்த கணத்திலிருந்தே மாமாவிடம் இருந்து தன்பால் எதுவோ பாய்வதை உணர்ந்து அவள் கூசினாள்.

 'எப்படி மாறிட்டே? மூக்கொழுகிக்கிட்டு, சின்ன கவுன் போட்டிருந்த குட்டிப் பொண்ணா நீ?' என்று அவள் இடுப்பைத் திமிறத் திமிற இழுத்துக் கொஞ்சியபோது மூச்சின் அனலில் அது ஊர்ந்தது. 'சட்டை இந்த இடத்தில் இறுக்குதா?' கேட்டு தொட்டுத் தொட்டு மேலும் கீழும் அழுத்தித் தேடிய உள்ளங்கையில் இருந்து அது நசநசவென்று பரவியது. மாமாவின் கைகளில் இருந்து தன்னை உருவிக்கொண்டு ஓடினாள் அனு.

அத்தை பிரியமாயிருந்தாள். திகட்டத் திகட்ட கருப்பட்டி ஆப்பம், ரவை பணியாரம், சீனிப்பாலில் ஊறிய சிறு உருண்டையான உளுந்து வடைகள் என்று கேட்டுக்கேட்டு ஊட்டாத குறைதான்.

அம்மா ஒளிந்துவைத்த அன்பின் பக்கங்கள் அத்தையிடம் திறந்து புரண்டன. அனு எந்நேரமும் அத்தையை ஒட்டி, இரவில் சுவர் மூலையில் ஒண்டிப் படுத்து, அத்தையின் சேலை நுனியைப் பார்த்தபடியே தூங்க முனைவாள்.

அவ்வளவு தூரத்தையும் ஒரு விரல் சொடுக்கில் அழித்துவிட்டு, மரப்பாச்சிக்குள்ளிருந்து கிளம்பி வருகிறான் அவன். அத்தைக்கும் அனுவிற்கும் நடுவே இருந்த சிறிய இடைவெளியில் தன்னை லாவகமாகச் செலுத்திப் பொருத்திப் படுக்கிறான். உறக்கத்தோடு அனுவின் தசைகளிலும் நரம்புகளிலும் கிளர்ந்து கலக்கிறான். அவனும் அவளும் இடையறாத மயக்கத்தில் இருக்கையில் ஒரு அன்னியப் பார்வையின் திடீர் நுழைவில் அத்தனையும் அறுபடுகிறது. அனு உலுக்கி விழிக்கிறாள். மிகவும் அவசரமாக கழிப்பறைக்குப் போகவேண்டும் போலிருக்கிறது.

அடிவயிற்றில் முட்டும் சிறுநீர் குத்தலெடுக்கிறது. மெல்ல எழுந்து அத்தைக்கும் முழிப்புக் காட்டாமல், கொலுசு இரையாமல் பூனைபோல நடந்து, சாப்பாட்டு மேஜையில் இடித்துச் சமாளித்து, இருட்டில் தடவி சுவிட்சைப் போடுகிறாள். கதவில் சாவியைத் திருகும் சிற்றொலி நிசப்தத்தின் மென்மைக்குள் பெரிதாக வெடிக்கிறது. அத்தை புரள்வது கேட்கிறது. 'ரொம்ப இருட்டாயிருக்குமோ?' பயந்து, நடுங்கி, அடித்தாழை ஓசையிட நீக்கி, கதவைத் திறந்தால் பளீரென்று நட்சத்திரங்களின் கலகலத்த சிரிப்பு.

நிலவின் மழலையொளி. கழிவறைக் கதவின் கிறீச்சிடல்கூட  இனிமையாக. சிறுநீர் பிரிந்ததும் உடலின் லகுத்தமின்மை. இந்த மருதாணிப் புதர்கிட்டே உட்கார ஆசையாயிருக்கே. அய்யோ அத்தை தேடுவாங்க. திரும்பி வருகையில் அனு தான் தனியாக இல்லாததை உணர்ந்தாள். உடல் மீது நூறு விழிகள் மொய்த்து உறுத்தின.

அனிச்சையாக ஓடத் தொடங்கியபோது எதன் மீதோ மோத, கடினமான கைகள் அவளை இருக்கின, காலையில் உணர்ந்த அதே சுடு மூச்சு. 'ச்சீ, இல்லை; என்னை பேய் பிடிச்சிடிச்சோ?' கரிய, நரை முடியடர்ந்த நெஞ்சில் அவள் முகம் நெருக்கப்படுகிறது. கொட்டும் முத்தங்கள் - கன்னத்தில், உதட்டில், கழுத்தில், அவளுள் தளிர் விடுகிற அல்லது விதையே ஊன்றாத எதையோ தேடுகிற விரல்களின் தடவல், மாறாக அதை நசுக்கிச் சிதைக்கிறது. சிறிய மார்பகங்கள் கசக்கப்பட்டப்போது அவள் கதறிவிட்டாள். வார்த்தைகளற்ற அந்த அலறலில் அத்தைக்கு விழிப்புத் தட்டியது. காய்ந்த கீற்றுப் படுக்கைமீது அனுவின் உடல் சாய்க்கப்பட்ட போது அவள் நினைவின்மையின் பாதாளத்துள் சரிந்தாள். கனமாக அவள் மேல் அழுத்தும் மாமாவின்  உடல்.

அத்தை ஓடிவரவும் மாமா அவசரமாக விலகினார். அத்தையின் உலுக்கல்; 'அனு, என்ன அனு!' அவளிடம் பேச்சு மூச்சில்லை. 'பாத்ரூம் போக வந்தப்ப விழுந்துட்டா போல.' மாமாவின் சமாளிப்பு. அத்தை மௌனமாக அவளை அணைத்துத் தூக்கிப் படுக்கையில் கிடத்துகிறாள்.

'அய்யோ அனு, மேல் சுடுதே. இந்த மாத்திரையாவது போட்டுக்கோ' அத்தை வாயைப் புடவையால் போர்த்திக்கொண்டு விம்முகிறாள். மாமாவின் அறைக்கு ஓடி என்னவோ கோபமாய்க் கத்துகிறாள்.

'நான் இனி நானாயிருக்க முடியாதா? மாமாவின் தொடல் என் அப்பாவுடையது போலில்லை. அப்பா என்னைத் தொட்டே ஆயிரம் வருடம் இருக்குமே! என் முதல் ஆண் இவனா! என் மேல் மோதி நசுக்கிய உடலால் என்னவெல்லாம் அழிந்தது? பலவந்தப் பிழம்புகளில் கருகி உதிர்ந்த பிம்பங்கள் இனி மீளுமா? மாமா என்னிலிருந்து கசக்கி எறிந்தது எதை? எனக்கு என்னவோ ஆயிடிச்சே. நான் இழந்தது எதை? தூக்கம் ஒரு நனைந்த சாக்குப்போல் இமைமீது விழுந்தது. அனு உறங்கினாள்.

காலையில் தேய்ந்த ஒலிகள். அடுப்படியில் லைட்டரை அழுத்தும் சத்தம், பால் குக்கரின் விசில், டம்ளரில் ஆற்றும் ஓசை. விழித்தபடி படுத்திருந்த அனுவிடம், 'இந்தா காப்பியைக் குடி அனு' என்கிறாள் அத்தை.

'வேணாம், எனக்கு இப்பவே அம்மாகிட்டே போகணும்'

அத்தையின் கெஞ்சல்களை அனு பொருட்படுத்தவில்லை. மாமா பேப்பரை மடித்துவிட்டு பக்கத்தில் வருகிறார். மறைக்க முடியாத குற்ற உணர்வு அவர் முகத்தில் படலமிட்டிருக்கிறது அசிங்கமாக.

'என்னாச்சு? உடனே திரும்பிட்டீங்க? அம்மா இடுப்புக் குழந்தையோடு ஓடி வருகிறாள். அனுவைப் பாய்ந்து தழுவும் அவள் பார்வை. அத்தை வரவழைத்துக்கொண்ட புன்னகையோடும் கலங்கி வருகிற கண்ணோடும்.

'ஒரு நாள் உங்களைப் பிரிஞ்சதுக்கே உங்க பொண்ணுக்குக் காய்ச்சல் வந்துடுச்சு' எனவும் அம்மாவின் விழிகள் நம்பாமல் அனு மீது நகர்ந்து தடவுகின்றன - கை தவறி விழுந்தும் உடையாமல் இருக்கிற பீங்கான் சாமானைப் பதறி எடுத்துக் கீறவில்லையே என்று சரி பார்ப்பதுபோல.

அனு ஒன்றும் பேசாமல் உள்ளே ஓடுகிறாள். வீட்டின் நாற்புறமும் தேங்கிய துயரம். அமானுஷ்யமான அமைதி அங்கே பொருக்குக் கட்டியுள்ளது. 'என் மரப்பாச்சி எங்கே?' அனு தேடுகிறாள். கூடத்தில் தொலைகாட்சிப் பெட்டிமீது, அடுக்களையில் பொம்மைகளிடையே, பாப்பாவின் தொட்டிலில், எங்கும் அது இல்லை. 'அது கீறி உடைந்திருக்கும். நூறு துண்டாக நொறுங்கிப் போயிருக்கும். அம்மா அதைப் பெருக்கி வாரியள்ளித் தூர எறிந்திருப்பாள். அனுவின் கண்களில் நீர் கோர்த்தது. அழுகையோடு படுக்கையில் சரிந்தபோது மரப்பாச்சி சன்னலில் நின்றது. ஆனால் அது அனுவைப் பார்க்கவேயில்லை. அவளையன்றி எங்கேயோ, எல்லாவற்றிலுமோ அதன் பார்வை சிதறிக் கிடந்தது. அனுவின் தொடுகையைத் தவிர்க்க அது மூலையில் ஒண்டியிருந்தது. அதனோடான நெருக்கத்தை இனி ஒருபோதும் மீட்க முடியாதென்று அவள் மனம் கேவியது. உற்றுப் பார்த்தபோது மரப்பாச்சியின் இடை வளைந்து, உடல் மறுபடியும் பெண் தன்மையுற்றிருந்தது. மீண்டும் முளைக்கத் தொடங்கியிருந்த அதன் முலைகளை அனு வெறுப்போடு பார்த்தாள்.

கதையின் சுட்டி 

மரப்பாச்சி - உமா மகேஸ்வரி


ஆசிரியர்: 


உமா மகேஸ்வரி (1971) போடிநாயக்கனூரை அடுத்த திருமலாபுரத்தில் 1971ல் பிறந்தார். மதுரை பாத்திமா கல்லூரியில் ஆங்கில இலக்கியம் பி.ஏ படித்தபின் மதுரை காமராஜ் பல்கலைகழகத்தில் எம்.ஏ. ஆங்கில இலக்கியம் பயின்றார். 

தற்போது ஆண்டிப்பட்டியில் வசித்து வருகிறார். 

‘அன்றாட வாழ்க்கையின் சாதாரண நிகழ்வுகளில் இருந்து அசோகமித்திரன்  உன்னதமான மனித உயர்வுகளைக் கொண்டு வருவது போல் உமாவும் சாதாரண விஷயங்களில் இருந்து பெண் பார்வையை  அழுத்தமாக வெளியிடுகிறார்.’ ஞாநி 

'உமா மகேஸ்வரிதான் எனது தலைமுறையின் பெண் புனைகதையாளர்களில் முதன்மையானவர். அவருடைய கவிதைகளும், மொழியின் அழகும், உணர்வுத்தளமும் சந்திக்கும் அழகிய வரிகளாலானவை. ஆழ்ந்த உணர்ச்சிகரம் கொண்ட படைப்புக்கள் அவருடையவை’ ஜெயமோகன்..



38 கருத்துகள்:

  1. காணவில்லை. 
    கட்டுரையின் கடைசி பக்கம் விடுபட்டு போயிருக்கிறது. அது இல்லாமல் கட்டுரை முழுமை பெறவில்லை. விடுபட்ட பகுதியை மெயிலில் அனுப்பி இருக்கிறேன். சேர்க்க முடியமா? 

    Jayakumar

    பதிலளிநீக்கு
  2. கதையின் சுட்டி

    மரப்பாச்சி - உமா மகேஸ்வரி

    Jayakumar

    பதிலளிநீக்கு
  3. உமா மகேஸ்வரியை இங்கு தரிசிக்க நேர்ந்ததில் சந்தோஷம். சமகாலப் பெண் எழுத்தாளர்களில் (பெண்ணியம், ஆணியம் என நான் குறிப்பிட விரும்பவில்லை. அதெல்லாம் இங்கு முக்கியமில்லை எனத் தோன்றுவதால்..) உன்னதமான எழுத்தினை மெல்ல வெளிக் கொணர்பவர். ’கற்றதும் பெற்றதும்’ தொடரின் ஒரு கட்டுரையில் சுஜாதா, உமாவின் கவிதையின் தளம் ஒன்றைக் குறிப்பிட்டு கொஞ்சம் சொன்னார். மேற்கோளிட இங்கு நினைவுக்கு வர மறுக்கும், சாதாரணமாகக் காட்சியளிக்கும் வரி.. வாழ்வில் பெண்ணின் தீராத வலியை அழுத்திச் சொல்வது.

    அவரது நாவலொன்றின் தலைப்பே, இம்மண்ணில் மனித வாழ்க்கையின் சாரத்தைக் கூறிவிடும்: யாரும் யாருடனும் இல்லை.

    தமிழினி, வம்சி புக்ஸ் ஆகிய பதிப்பகங்கள் வெளியிட்டுள்ளன. வம்சியின் பதிப்பு சற்று அதிக விலை. பனுவல் பக்கம் போனால் ’ஸ்டாக் இல்லை’ என்கிறது. காமன்ஃபோக்ஸில் கிடைக்கிறது. www.commonfolks.in

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏகாந்தன் ஸார்...   நிறைய நிறைய நிறைய தேடித்தேடிப் படிக்கிறீர்கள்.  கதை, கவிதை, கட்டுரை என்று வெரைட்டியாக படிக்கிறீர்கள்.  நீங்கள் படித்தவற்றில் சிலவற்றை ஏன் இங்கு சனிக்கிழமைகளில் பகிரக்கூடாது?

      நீக்கு
    2. ஆமாம் ஸ்ரீராம், ஏகாந்தன் அண்ணா அவர் தளத்தில், அதன் பின் இப்ப ஜெகே அண்ணா இங்கு என்று பல அறிமுகங்கள் கிடைக்கின்றன.

      நானும் வாசிக்கிறேன் தான். ஆனால் புத்தகங்கள் வாங்கி வாசிக்க முடிவதில்லை. இணையத்தில் கிடைப்பவைதான். அது இலவசம்...எனவே பல சமயம் மனம் குறுகுறுக்கிறது. எவ்வளவு கஷ்டப்பட்டு எழுதியிருக்காங்க அதை நாம இப்படி வாசிக்கிறோமே என்று. ஆனால் என்ன செய்ய?

      வாசித்தாலும், நான் படித்த கதை/புத்தகம் என்று எழுத நினைக்கிறேன் தான் ஆனால் ஹிஹிஹி......போன பதிவு முடித்ததிலிருந்து அடுத்த பதிவு போட இன்னும் தயார் செய்து கொண்டேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ இருக்கிறேன். அந்த மாதிரியான நிலை...

      கீதா

      நீக்கு
    3. எத்தனை மாச இடைவெளி சகோதரி?

      நீக்கு
    4. நிறைய வாசிக்கவில்லை. செலெக்டிவாக அவ்வப்போது கொஞ்சம் படிக்க நேர்கிறது தமிழில். எழுதுவது வெகுவாகக் குறைந்திருக்கிறது. கொஞ்சம் சரி செய்யவேண்டும்..

      நீக்கு
  4. இதய நோய் தீர்க்கும் இதயங்கள் வாழ்க வாழ்க..
    அவர்தம் பாதங்களுக்கு வணக்கம்...

    பதிலளிநீக்கு
  5. இன்றைய நவீன மருத்துவத்தின் முகம் அச்சம் ஊட்டுவதாகத் தான் இருக்கின்றது..

    பதிலளிநீக்கு
  6. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  7. உதவும் நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  8. முன்பு அழியா சுடரில் படித்து இருக்கிறேன்.
    அதனால் மீண்டும் படிக்க மனம் துணியவில்லை.

    பதிலளிநீக்கு
  9. காலையில் நல்ல செய்திகள் எதுவும் இந்தப் பதிவில் இல்லை. நான் படித்த கதை பகுதி மாத்திரம் இருந்தது. அதனால் மற்ற தளங்களுக்குச் சென்றுவிட்டேன் (அம்பை பற்றில்லாம் இருந்ததுனால சனிக்கிழமை காலை மற்ற பதிவுகளைப் படிக்கச் சென்றுவிட்டேன்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சற்றே உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இரவு சரிபார்க்க விட்டுப்போனது.  காலையும் தாமதமாக எழுந்ததால் பின்னர் சரி செய்யப்பட்டது பதிவு!

      நீக்கு
  10. மரப்பாச்சி படித்ததில்லை.நெஞ்சை தொடட்ட கதை. நல்லதோர் எழுத்தாளர்.

    உதவும் கரங்களை வாழ்த்துவோம்.

    பதிலளிநீக்கு
  11. அனைத்து பாசிட்டிவ் செய்திகளும் மிக அருமை. இதயம் பற்றிய முதல் செய்தியிலிருந்து அடுத்த இறு செய்திகளும் இதயம் உள்ள செய்திகள்.

    இரண்டாவது செய்தியில் ஒரு இதயம் செயலிழப்பு ஆனால் இரு இதயங்கள் உதவி!

    கீதா

    பதிலளிநீக்கு
  12. உமா மகேஸ்வரி கதை இது தான் முதல் முறை எழுத்தாளர் பற்றி அறிகிறேன் ஜெ கே அண்ணா.

    கதை அருமை....ரொம்ப நல்லா எழுதியிருக்காங்க உமா. நீங்கள் சொன்னது போல் கவித்துவ நடை.

    குழந்தையின் மன உணர்வுகளின் வெளிப்பாடு அழகு. அதுவும் பருவ வயதைத் தொடும் போது.

    கடைசி வரி நச். முடிவு மிகவும் பிடித்தது. எந்த மரப்பாச்சியுடன் உணர்வு பூர்வமாகப் பேசிக் கொண்டிருந்தாளோ அந்த மரப்பாச்சியை வெறுக்கும் நிலை.

    நீங்களே சொல்லிட்டீங்க உளவியல் ரீதியான கதை என்று ஆம். அதேதான். அது போல கொஞ்சம் கற்பனை தூக்கல்.

    ஆனால் எழுதிய விதம் சூப்பர்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் அப்பாவின் ஸ்பரிசமே கூடாது என்பார்கள்..

      நீக்கு
    2. தொடுதல் தானே ஸ்பரிசம்? ஸ்பரிசம் தானே தொடுதல்?
      இல்லை, இரண்டுக்கும் நுண்ணிய வேறுபாடு உண்டா?
      (புதன் கேள்வி அல்ல)

      நீக்கு
    3. ஆமாம் ஸ்ரீராம். ஆனால் இப்பல்லாம் அப்படி இல்லை...

      கீதா

      நீக்கு
    4. சில தொடுதல்கள் ஸ்பரிசமாக மாறலாம்.  கலைஞரின் 'வாழ தகுதி இலலாதவர்கள்' சிறுகதை போல..!!!!

      நீக்கு
    5. தொடுதல் என்பது கையால் செய்வது. கையால் தொட்டான். 

      ஸ்பரிசம் என்பது தேகம் உரசுவதும் ஆகும். உரசல்கள் மாத்திரம் இல்லை, சில  சமயங்களில் மற்ற சகவாசமும் ஸ்பரிசம் என்று விவரிக்கப்படும். 

      Jayakumar

      நீக்கு
  13. முழுக்கதையும் வாசித்தேன்.

    பெண் குழந்தை பருவ வயதைத் தொடும் போது அம்மாவின் அணைப்பு மிகவும் தேவைப்படும் சமயம். என்பதோடு கதையில் அக்குட்டிப் பெண் மரப்பாச்சியுடன் மட்டுமே பேசிக் கொண்டிருப்பது போன்று வருவதும், நட்புகளுடன் விளையாடச் செல்லாததும் குழந்தை ஏன் அப்படிச் செய்கிறாள் என்ற கேள்வி எழுகிறது. அச்செய்கை கவனிக்கப்பட வேண்டிய விஷயம் அதாவது மன ரீதியாக. அதையும் ஆசிரியர் மறைமுகமாகச்சொல்கிறாரோ என்று தோன்றுகிறது.

    அவள் வளர்ந்து வரும் போது அம்மாவின் பயம்..ஆனால் பயத்திற்குப் பதிலாக இக்குழந்தையிடம் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாமே என்று தோன்ற வைக்கும் இடங்கள்....இரண்டாவது குழந்தை...அதற்குக் கவனிப்பு...என்று

    என்னவோ மிஸ்ஸிங்கோ?

    கீதா

    பதிலளிநீக்கு
  14. முழுக்கதையை அனைவரும் வாசிக்க வேண்டும்.

    'மாமாக்கள் மாறும் வரை
    அனுப்ப மறுக்கும்
    அம்மாக்களைப்
    புரிந்து கொள்ளும் அத்தைகளும்
    வேண்டியிருக்கிறது.
    அத்தைகள் எவரும்
    மாமாக்களின் வண்டவாளங்களை
    அறிந்து கொண்டிருப்பதில்லை.

    ---- என்று கவிதையாய்
    பின்னூட்டத்தில் பாரதிராஜா என்ற அன்பர் இட்டிருந்த பின்னூட்டம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!