6.5.25

சிறுகதை : மகாராணி அவனை ஆளலாம்... -- ஜீவி

  

முன்குறிப்பு : 

வணக்கம்.  கடந்த 17-01-2025 அன்று திரு ராய செல்லப்பா நடத்தி, நாங்கள் பங்கு கொண்டு, எங்கள் சிறுகதைகளை தேர்ந்தெடுத்து புத்தகமாக்கிய விவரங்களை முன்னர் அறிந்திருப்பீர்கள். செல்லப்பா ஸாரின் அன்னையின் நினைவாக அவர் பெயரில் நடத்தப்படும் முதல் போட்டியில் முதலில் 10 பேர்களுக்கு தலா 5,000 ருபாய் பரிசு அறிவித்திருந்தார்.  அதில் இன்று வெளியாகும் ஜீவி ஸார் கதையும் ஒன்று.  

ரூபாய் பெரிதல்ல, பங்குபெறுதலும், நம் படைப்பு தேர்ந்தெடுக்கப்படுவதுமே பெருமை.  

வந்திருந்த 355 கதைகளில் முதல் 10 தேர்ந்தெடுத்தபின் இன்னும் ஏராளமான கதைகள் நன்றாக இருப்பதாக அவர் மனதில் பட, அங்கு அவர் எடுத்த முடிவுதான் ஆச்சர்யம்.  அவர் குடும்பமும் அதற்கு சம்மதம் தெரிவித்தது.  அதாவது மேலும் 25 கதைகளை, - மேலும் பத்து என்று கூட அவர் முடிவு செய்திருக்கலாம்... - ஆனால் 25 கதைகள் என்று சொல்லி தேர்ந்தேடுத்தார்.  அதில் என் கதையும் இடம்பெற்றது.  நான் போட்டி என்று கலந்து கொண்டது இதுவே முதல் முறை.  அதில் என் படைப்பு தெரிவு செய்யப்பட்டிருப்பது மிகுந்த சந்தோஷத்தைக் கொடுத்தது.

புத்தக வெளியீட்டு விழாவில் நேரில் அழைத்து கௌரவித்தார்கள்.  இந்தத் தெரிவில் முதல் தெரிவு 10, இரண்டாம் தெரிவு 25 ஆகமொத்தம் 35 கதைகள்.  இவற்றைப் படிக்க ஆவலாக இருப்பீர்கள்.  குவிகம் பதிப்பக வெளியீடான இந்த இரண்டு புத்தகங்களின் விவரம் கீழே தந்திருக்கிறேன்.  வாங்க விரும்புபவர்கள் ஆன்லைனிலும் வாங்கலாம்.  




முன்னர் நான் எழுதிய  "மார்ட்டின் வாத்யார்"  இரண்டாம் பரிசு கதையைப் பகிர்ந்தேன்.  


இன்று ஜீவி ஸார் எழுதிய - முதல் பரிசு பெற்ற கதை.  


===========================================================================================================================================



அன்னை ஸ்வர்ணாம்பாள் நினைவு சிறுகதைப் போட்டி -- 2024 - ல் முதல் பரிசு பெற்ற கதை 


மகாராணி அவனை ஆளலாம்...

-- ஜீவி - 

  ர்வர் கிட்டேவந்து 'என்ன வேணும்?"ன்னு கேட்கிகிறவரைகூட எனக்குப் பொறுமை இல்லே. பக்கத்து டேபிளில் விசாரித்துக் கொண்டிருந்தவனிடம்,  "ஒரு ஸ்ட்ராங் காப்பி கொண்டு வாப்பா"ன்னு இங்கிருந்தே ஆர்டர் கொடுத்துவிட்டு, கீழுதடை மடிச்சிண்டு 'உஸ்'ன்னு கழுத்துப்பட்டைக்கு காற்றை அனுப்பியவன் தலை நிமிர்கிறேன்.

மேலே மின்விசிறி ஓடலே. "சே! என்ன புழுக்கம்? ஃபேனை போடுப்பா!"என்று குரல் கொடுக்க நெனைச்சவன், வார்த்தைகளைத் தொண்டைக்குள்ளேயே விழுக்குகிறேன். 'பவர்கட்: மின்விசிறி இயங்காது'ன்னு வெள்ளை சாக்பீஸிலே மஞ்சள் அட்டைலே எழுதியிருக்கற எழுத்துக்கள் மூஞ்சிலே அறைஞ்ச மாதிரி இருக்கு. 'ஹூம்! இது ஒரு சாக்கு. மின்வெட்டு இல்லேனா மட்டும் இவங்க வாழ்ந்தாங்களாக்கும்'ன்னு முனகிக்கறேன்.

காப்பி வர்றத்துக்குள்ளே ஓட்டலைச் சுற்றி ஒருமுறை பார்வையைச் சுழலவிட்டவனுக்கு எரிச்சலா வர்றது. ஓ! இந்த ஒரு ஹாலுக்குள்ளே தான் எத்தனை விதவிதமான அறிவிப்புகள்?.. 'டபரா செட்டில் கை கழுவாதே', 'சர்வரிடம் பில் கேட்டு வாங்கவும்' 'பில்லுக்குச் சில்லரையாகக் கொடு', 'இங்கே கை கழுவு' என்று ஒரு அறிவிப்பிலாவது கொஞ்சமாவது பணிவோட கூடிய வார்த்தைச் சேர்க்கைகள்? ஊஹூம்! எல்லாத்திலேயும் ஒரு அதிகாரப் பதப்பிரயோகங்கள்!.. 

படம் இணையத்திலிருந்து

இந்த சமயத்திலே எனக்கு நேரே காலியாயிருந்த  நாற்காலியில் வந்து உட்கார்ந்தவர் பார்ப்பதற்குக் கொஞ்சம் அளவுக்கு மீறிய அப்பாவியாகத் தென்படறார். நாலு முழ வேஷ்டி-- சட்டை கதர்லே.   துவைத்துப் போட்டு வந்திருக்கார்னு வெளிப்படையா தெரியறது. நெற்றிலே பட்டையா திருநீறு; கைலே சாயம் போன குடை; குடையை தொடை இடுக்கிலே நிறுத்தி ரெண்டு கால்னாலேயும் அதைக் கவ்விண்டு மூக்குக் கண்ணாடியைக் கழட்டி கிளாஸைத் தொடைக்கறதுக்காக சட்டையோட கீழ்ப்பகுதியை அவர் தொடறச்சே சர்வர் வந்திடறான்.

எனக்கு எதிரே ஸ்ட்ராங்க் காப்பியை வைச்சிட்டு கதர்ச்சட்டைக்காரரை 'என்ன வேணும்'னு கேக்கற மாதிரி மேலோட்டமா ஒரு பார்வை பாக்கறான்.

"ஸ்ட்ராங்க் காப்பி ஒண்ணு கொண்டு வர்றீங்களா? ஸ்ட்ராங்கா"ன்னு அந்த 'ஸ்ட்ராங்கை' இன்னொரு தடவையும் அவர் அழுத்திச் சொன்னதை சர்வர் காதிலே வாங்கிண்டானோ இல்லையோ போயே பேயிடறான்.

ஸ்ட்ராங்க் காப்பிப் ப்ரியனான, இல்லே வெறியனான எனக்கு அவரும் ஸ்ட்ராங்க் காப்பியையே விரும்பிக் கேட்டது மனசிலே அவர்கிட்டே ஒரு அன்யோன்யத்தை ஏற்படுத்திடறது. அவர்கிட்டே பேச்சுக் கொடுக்கணும்னு ஆவல். சும்மா கேட்டு வைக்கறேன். "ஸாருக்கு ஸ்ட்ராங்க் காப்பினா உயிர் போல இருக்கு."

ஒரு அசட்டுச் சிரிப்பு.

"எப்படித் தெரிஞ்சிண்டேன்னு கேக்கிறீங்களா?.. அந்த ஸ்ட்ராங்கை இன்னொரு தடவை நீங்க அழுத்திச் சொன்னதிலேந்தே தெரிஞ்சிடுத்து. பாம்பறியும் பாம்பின கால்."

"ஓ! உங்களுக்கும் ஸ்ட்ராங்க் காப்பிதான் பிடிக்கும்னு சொல்றீங்களா?"

"ஆமாம். இல்லேனா தொண்டைக்குள்ளேயே எறங்காது." 

"எனக்குக்கூட அப்படித்தாங்க. என்னமோ அப்படி ஒரு கன்னங்கரேல் நெறத்திலே குடிச்சுத் தொலைக்கலேனா, காப்பி குடிச்ச மாதிரியே இருக்கறதில்லீங்க.."

சர்வர் வந்து அவருக்கு காப்பியையும் பில்லையும் வைச்சிட்டுப் போயே போய்டறான். அவர் எதிரே சர்வர் வைச்சிட்டுப் போன காப்பியைக் கண்டு நான் அதிர்ந்து போயிடறேன். வெள்ளை வெள்ளேரென்று பாலும், நீருமாய்! இதோ, இவரும் அதை எடுத்து எந்த முனகலும் காட்டாமல் குடிச்சிக்கிட்டிருக்காரே!

"என்ன, சார்!.. ஸ்ட்ராங்கா காப்பி கேட்டீங்க.. ஆனா..."

"என்ன செய்யறது, சார்?.. அவனை இப்போ கூப்பிட்டு, இதைத் திருப்பி அனுப்பிச்சாலும் மறுபடியும் எடுத்திண்டு வர்றது, நாம திருப்பி அனுப்பிச்சோம்ங்கற ஆத்திரத்திலே இதைவிட மட்டமாத்தான் இருக்கும். அதுவும் தவிர, இதுக்காக மெனக்கெட்டு இன்னொரு தடவை அவனைக் கூப்பிட்டு, இதைக் கொடுத்து அனுப்பி அவன் கொண்டு வந்து, இல்லேனா, இன்னும் கொஞ்சம் டிகாஷனைக் கொண்டு வரச்சொல்லி, அதுக்குள்ளாற கொண்டு வந்திருக்கிற இந்தக் காப்பியும் ஆறி..."

நான் சிரித்து விடுகிறேன். "ஸோ.. பிடிச்சாலும் பிடிக்காட்டாலும் தண்டமேன்னு இதையேக் குடிச்சிடலாம்னு தீர்மானம் பண்ணிட்டீங்க.."

"ரொம்ப சரி.."ன்னு சொல்லிண்டே வாய்ப்பக்கம் அவர் டம்ளரைக் கொண்டு போகும்போது, அழுக்கடைந்த உடையோடு அவர் மேலே இடிக்க மாட்டாத குறையோட அவர் அருகே நிற்கும் டேபிள்கிளீனர் ஒருவன், "கொஞ்சம் ஒத்திக்கோ, சார்"ன்னு சொன்னதோடு நிற்கவில்லை. உதடுக்கருகே கொண்டு போன காப்பியைக் குடிக்காமலேயே "இதோ.."ன்னு எழுந்திருந்து விலகி நிற்கும் அவர் மேல் இடித்துக்கொண்டே பக்கத்தில் காலியாக இருக்கும் ஸ்டூலை எடுத்து டேபிளின் மேல் வைத்து விட்டு, இந்த டேபிள் முழுவதையும் 'நோ சர்வீஸ்' ஆக்க முனைந்து நிற்கிறான். 

இதைப் பார்த்து எனக்கு ஆத்திரமாக வருகிறது. நான் அந்தக் கிளீனரைப் பார்த்துச் சீறுகிறேன். "ஏம்பா! அந்தப் பெரியவர் காப்பி குடிச்சுத்தான் முடிக்கட்டுமே.. அதுக்குள்ளாற  உனக்கென்ன அவசரம் வந்திடுத்து?"

"எனக்கு ட்யூட்டி முடிஞ்சி போயிடுச்சி.. சேர் எல்லாம் எடுத்துப் போட்டுட்டுப் போறேன். அதுக்கு நீ ஏன் சார் கோவிக்கறே?"

"கோவிக்காம, பின்னே என்ன கொஞ்சவா செய்வாங்க?.. நீ என்ன காரியம் செஞ்சிருக்கே பார்! இதோ, இந்த வயசானவர் காப்பியை நின்னுகிட்டே..."

ஏதோ துவஜம் கட்டிக்கொண்டு நாங்கள் இறங்கியே விட்ட சண்டை ரசாபாசம் அடைவதற்குள் குறுக்கிட்டு, இதை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்து விடவேண்டிய அவசரம் கலந்த பதட்டத்துடன், "பரவாயில்லை.. நீங்க ரெண்டுபேரும் ஏன் இப்படி சண்டை போட்டுக்கிறீங்க?.. நான் காப்பி குடிச்சுகூட ஆச்சு" என்று பில்லை கையில் எடுத்துக் கொள்கிறார், அந்தக் கதர்சட்டைப் பெரியவர்.

ஹோட்டலுக்கு வெளியே வந்ததும் அந்தப் பெரியவர் என்னிடம் சொல்கிறார்: "பாவம், அந்தப் பையனோடு சண்டை போட்டீங்களே, அவனைக் கேட்டா ஆயிரம் நியாயம் சொல்வான். எட்டுமணி நேர வேலைன்னு பேரு.. மாடா உழைக்கணும். சம்பளம் கொறைச்சலானாலும், சாப்பாடு நிச்சயம். அதுக்காகவே இந்தத் தொழிலுக்குப் போட்டியும் அதிகமா இருக்கு. இந்த இவங்களோட இயலாமையை உபயோகப்படுத்திண்டு ஹோட்டல் முதலாளிகளும் இவங்களைக் கசக்கி வேலை வாங்கிண்டு..."

"அதெல்லாம் அந்தக் காலம் சார்! இப்போல்லாம் லேபர்ஸுக்கு ரொம்ப பாதுகாப்பு. 'ஹோட்டல் தொழிலாளர்கள் நலச் சட்டம்'ன்னு நேத்து புஸ்தகக் கடைலே ஒரு புஸ்தகமே பாத்தேனா, பார்த்துக்கங்க"

"யாரு.. தோழர் விருத்தகிரி எழுதின புஸ்தகம் தானே.."

"நான் புஸ்தகத்தோட தலைப்பைத்தான் பார்த்தேன்; எழுதினவர் யாருன்னு பாக்கலே.." என்று நான் சொல்லிக்கொண்டிருக்கும் போதே..

"என்ன தோழர்! இந்தப் பக்கம்.." என்று எங்களைத் தாண்டிச் செல்ல இருந்த ஒருவர் கதர்ச் சட்டைக்காரரிடம் விசாரிக்க வியப்புடன் பார்த்தேன்.. மரியாதையுடன், "நீங்கள்.." என்று கதர்சட்டைக்காரரைப் பார்த்து நான் தயங்க, அவரை விசாரித்தவர், "ஓ..தோழரைத் தெரியாமலேயா, அவர் கிட்டே பேசிண்டிருந்தீங்க.." என்று சிரித்துவிட்டு, "தோழர் தாங்க, விவசாய சங்கச் செயலாளர் சண்முகசுந்தரம்" என்றார்.

சுதந்திரப் போராட்டத் தியாகி தோழர் சண்முக சுந்தரத்தைப் பற்றி நான் நிறையக் கேள்விப் பட்டிருக்கிறேன். ஆங்கில ஏகாதிபத்திய காலத்தில் சிறையேகிய பல தியாகிகள்  பொதுவுடமைக்கட்சி சார்ந்து இருப்பதும் தெரியும். இப்பொழுதுதான் இவரது எளிமைக்கும், தொழிலாளர் நலனை பரிவாகப் பார்த்ததற்கும் காரணம் புரிந்தது.

ஆபீஸ் வந்து சேருகிற வரை வழியெல்லாம் தோழரைப் பற்றிய நினைவுதான். சைக்கிள் ஸ்டாண்டில் சைக்கிளை நிறுத்திவிட்டு உள்ளே நுழையறேன். ப்யூன் தணிகாசலம் "குட்மார்னிங்.."னு கையைத் தூக்கறான்.

"குட்மார்னிங்"னு இயந்திர கதிலே அவனுக்குப் பதில் சொல்லிவிட்டு உள்ளே வர்றேன்.

இன்னும் யாருமே வரலே.. என்னோட இந்த சீக்கிரப் பிரவேசமே தணிகாசலத்துக்கு ஆச்சரியமா இருக்கும். தினம் 'லைப்ரரி'க்கு போயிட்டு பேப்பரை மேஞ்சிட்டு பின்னாடிதான் ஆபிஸுக்கு வர்ற வழக்கம். 

இன்னிக்கு ஏனோ அங்கே போகலே.. பெடலை மிதிச்சிண்டே ஆபீஸ் காம்பவுண்டுக்குள்ளே நுழைஞ்ச உடனேதான் ஆபீஸூக்கு நேரே வந்துட்டேன்னு எனக்குப் புரிஞ்சது. இப்போத்தான் லைப்ரரிக்குப் போகாம வந்துட்டோமே, இன்னிக்கு காலை தினசரிகளையெல்லாம் பாக்காம வந்துட்டோமே, ஹிண்டு லெட்டர்ஸ் டு எடிட்டர், எக்ஸ்பிரஸ் தலையங்கம் இதையெல்லாம் படிக்காம வந்துட்டோமேன்னு ஞாபகம் வந்து அது ஒரு சோகம் கலந்த இழப்புணர்ச்சியாகவே எனக்குத் தோண்றது. சிலபேருக்குக் காலைலே எழுந்தவுடனேயே காப்பி குடிக்கலேனா பொழுதே விடிஞ்சமாதிரி தோன்றாதாம். எனக்கென்னவோ இந்த பேப்பர்களை ஒண்ணு ஒண்ணா எடுத்துப் படிக்கலேனா, ஒரே செய்தியை ஒவ்வொரு பத்திரிகையும் தங்களுக்கு ஏத்த மாதிரி 'பண்ணி' வைச்ச செய்திகளா ஜனக்கூட்டத்திற்கு தர்ற அந்த பிரசண்ட்டேஷன் ஜாலத்தை ரசிக்கலேன்னா எனக்குப் பொழுது விடிஞ்ச மாதிரியே தோண்றதில்லே.

இந்த ஹாலுக்கு வெளியே இருக்கற தணிகாசலம் அங்கே யாருக்கோ 'குட்மார்னிங்' சொல்றது இங்கே எனக்குக் கேக்கறது. ஓரக்கண்களால் ஹால் கோடியைப் பாக்கறேன். ஹெட்கிளார்க் கண்ணபிரான்!

நான் மனசுக்குள்ளேயே சிரிக்கறேன். 'ஓ! இந்த 'குட்மார்னிங்' சொல்றதிலேதான் எத்தனை விஷயங்கள் அடங்கியிருக்குங்கறதை நெனைச்சுப் பாக்கவே ஆச்சரியமா இருக்கு. ப்யூன் தணிகாசலம் போன்றவர்கள் யாரிடமும் முதலில் 'குட்மார்னிங்' வாங்கி அனுபவப்பட்டிருக்கவே மாட்டார்கள்! இவர்கள் முதலில் சொல்லித்தான் அதைத் திரும்பப் பெற்றுக் கொள்ளணும். யாருக்கு யார், கேவலம், இந்த 'குட்மார்னிங்' சொல்கிறார்கள் என்பதிலிருந்தே அந்த ரெண்டு பேர்க்கிடையான அந்தஸ்து உயர்வை மூணாவதா இருக்கக்கூடிய ஒருத்தர் புரிஞ்சிக்க முடியும்ங்கற அளாவிலே, நம்ம நாட்டிலே இந்த 'குட்மார்னிங்' ஒரு 'ஐடண்ட்டி' சொல்லா மாறிப்போயிருக்கிற அலங்கோலத்தை நெனைச்சுப் பாக்கறேன்.

நாளைக்குக் காலம்பற ஆபீசுக்குள்ளே நுழையறத்தே ப்யூன் தணிகாசலத்துக்கு முந்திண்டு அவனுக்கு நான் 'குட்மார்னிங்' சொல்லி அவனுக்கு திகைப்பேற்படுத்தி இந்த அலுவலகக் கட்டிடத்துக்குள்ளே யாரிடமுமே முதலில் 'குட்மார்னிங்' இதுவரை வாங்கியேயிராத அவனோட அவல அனுபவத்தை நாளைக்கு மாற்றிக் காட்டணும்ங்கற ஒரு வெறி எனக்குள்ளே ஏற்படறது..

இப்போ ஹெட்கிளார்க் கண்ணபிரான் உள்ளே வர்றார். ப்யூன் தணிகாசலத்திடம் 'குட்மார்னிங்'கை முதலில் வாங்கிண்ட நான் இப்போ அந்த 'குட்மார்னிங்'கை கண்ணபிரானுக்கு முதலில் போட்டு அதன் மூலமா அவர்--என் அந்தஸ்தை நான் எப்பவுமே மனசிலே புரிஞ்சிண்டிருக்கற மாதிரி காட்டிக்கணும்..

கண்ணபிரானுக்கு 'குட்மார்னிங்' சொல்ல உதடுவரை வார்த்தை வந்துடுத்து. இருந்தாலும் அதை, அந்த 'குட்மார்னிங்'கை வீம்புத்தனமா விழுங்கிண்டு அவரைத் தலைநிமிர்ந்து பார்த்திட்டு அடுத்த நிமிஷம் மெளனமாத் தலையைக் குனிஞ்சிக்கறேன். எங்கிட்டேயிருந்து எதையோ எதிர்பார்த்து-- எதையோ என்ன, இந்த 'குட்மார்னிங்கைத்தான்- அதுக்குப் பதில் 'மார்னிங்' சொல்லத் தன்னைத் தயார்படுத்திண்டு நான் சொல்லாதினாலே சடார்னு தன்னைச் சுதாரிச்சிண்டு தானும் சொல்லாம இந்த கண்ணபிரான் மெளனமாறது-- ஓ, இந்த ஒரு நிமிஷ மெளனமே ரொம்ப அர்த்தம் நெறைஞ்சதா எனக்குப் படறது...

"என்ன, சீக்கிரமே வந்துட்டாப்பலே இருக்கு"ன்னு கண்ணாபிரானே இந்த மெளனத்தை விரும்பாதவர் போல பேச்சை ஆரம்பிக்கிறார்.

"ஆடிட் கிளியரன்ஸூக்காக எண்ட்ரீஸையெல்லாம் லெட்ஜர்லே போட்டு முடிச்சிடலாம்னு கொஞ்சம் எர்லியாவே வந்தேன்." 

"ஓ.."ன்னு தலையாட்டறார் ஹெட்கிளார்க். கையிலே எடுத்திண்டு வந்த பிளாஸ்கையும், கைப் பையையும் சுவத்து மூலைலே இருக்கற கப்போர்ட்லே வைச்சிட்டு, நாற்காலியை இழுத்து போட்டுண்டு உக்காந்துக்கறார். ஒரு நிமிஷம் ஏதோ தியானத்தில் இருப்பவர் போல மேஜையையே வெறிச்சுப்பாக்கறவர், அடுத்த வினாடியே சட்டைப் பையிலிருந்து பொடி டப்பியை எடுத்து ஒரு சிமிட்டா பொடியை உறிஞ்சறார்.

நான் லெட்ஜர்லே ஆழ்ந்தவன் தான். "என்னப்பா--சாப்பாடு கொண்டு வர்லியா இன்னிக்கு?"ன்னு பக்கத்து டேபிள் கனகராஜ் கேட்டதும் தான், "ஓ! சாப்பாட்டு நேரம் வந்திடுத்தா"ன்னு எழுந்திருக்கறேன்..

படம் இணையத்திலிருந்து

டைனிங் ஹால்லே ராகவன், வாசுதேவன்கிட்டே, தான் நேத்து பாத்துட்டு வந்த அந்தத் தமிழ் படத்தைப் பத்தி ரொம்பத்தான் பீத்திண்டிருக்கான். அந்தத் திரைப்படம் ரிலீஸானதைத் தொடர்ந்து வந்த ரெண்டு மூணு பத்திரிகை 'ரெவ்யூ'க்களையும், அந்தப் படத்தை இயக்கிய டைரக்டர் அந்தப் படம் தொடர்பா வெவ்வேறு சந்தர்பங்களிலே பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டிகளிலே அங்கங்கே தனக்கு வேண்டிய செய்திகளை மட்டும் உருவி எடுத்திண்டு எல்லாத்தையும் ஒண்ணாக் கலந்து கதம்பமாக்கி புகழாரமா அந்தக் குறிப்பிட்ட பட இயக்குனருக்குச் சூட்டிண்டிருக்கான்.

மத்தியான டிபனுக்காக கொண்டு வந்திருந்த உப்புமாவை ஸ்பூனாலே வாயிலே போட்டபடி அசுவாரஸ்யமா நானும் அதைக் கேட்டிண்டிருக்கேன்.

"வாசுதேவன்! நீங்க அந்தப் படத்தைப் பார்க்கணும்! அது திரைப்படமில்லே; ஒரு காவியம்! தனனையே அழிச்சிண்டு ஒளிவிடற, மெழுகுவர்த்தியையும், வாசனை கொடுக்கற ஊதுபத்தியையும்தான் தியாகத்துக்கு எடுத்துக்காட்டாச் சொல்லுவாங்க. இனிமே இந்த உதாரணங்களோட இந்தப் படத்தோட கதாநாயகியோட பேரையும் சேர்த்துக்லாம்! தன்னோட மென்மையான முதுகிலே அந்தப் பெரிய குடும்பத்தோட பாரத்தைத் தூக்கமுடியாம தூக்கிச் சுமந்திண்டு, அந்தச் சுமையை தன்னோட பகிர்ந்துக்க அந்தக் குடும்பத்திலேயே யாராவது முன்வரமாட்டாங்களான்னு அவ தவிக்கிற தவிப்பும், அந்தக் குடும்பத்திலேயே இருக்கற மத்தவங்க அந்தப் பொறுப்பை ஏத்துக்கிறதிலேந்து நழுவி முன்வராம ஒதுங்கறதையும்--இவையெல்லாவற்றையும் ஒரு லய சுகத்தோட சொல்லிச் செல்கிற அடுத்தடுத்த காட்சிகளும்...க்ளாஸிக்!"

நான் டிபன் பாக்ஸை மூடி வைச்சிட்டு கை கழுவிக்கறேன். ப்யூன் தணிகாசலம் பக்கத்து ஓட்டல்லேந்து ப்ளாஸ்கில் வாங்கிண்டு வந்த காப்பியை வாசுதேவனுக்கும், ராகவனுக்கும் இடையே வைச்சிட்டு, "காப்பி வாங்கி வரட்டுமா,சார்!"ன்னு என்னைப் பாத்துக் கேக்கறான்.

"ஸ்ட்ராங்கா.."ன்னு சொல்லிட்டு கர்ச்சீப்பாலே உதடைத் தொடைக்கறத்தே, காலைலே ஓட்டல்லே சந்தித்த அந்தக் கதர்சட்டைத் தோழர் நினைவு வந்திடறது.. என்னோட புன்முறுவலைப் பார்த்திட்டு, "என்னா சார்?"ங்கறான்.

"ஒண்ணுமில்லே.. நீ போய்வா."

"சர்தான்.." அவன் போய்விட்டான். அந்தப் பெரியவர் மட்டும் ஸ்ட்ராங் காப்பி ஒண்ணு கொண்டு வாய்யா"ன்னு அதிகாரத் தோரணைலே மிடுக்கா உத்திரவிட்டிருந்தா நிச்சயம் அந்த சர்வர் வெள்ளை வெளேர்னு ஒரு காப்பியைக் கொண்டு வந்திருக்க மாட்டான். இவர் ரொம்பப் பணிவா,  'கொண்டு வர்றீங்களா?'ன்னு கேக்கப்போய்.. சே! நியாயமான சில விஷயங்கள் நடக்கறத்துக்குக் கூட எவ்வளவு முரட்டுத்தனமான நடைமுறைகள் வேண்டியிருக்கு'ன்னு நெனைச்சிக்கறேன். 

"என்ன ஸார்.. ராகவன் அப்படி 'ஓகோ'ன்னு புகழறாரே, நீங்க அந்தப்படத்தை பாத்துட்டீங்களா?"ன்னு ஸ்டெனோ சுமதி என்னைப் பார்த்துக் கேக்கறா. சமீபத்திலே கல்யாணமான கோமளா, நான் சுமதியோட இந்தக்கேள்விக்கு என்ன பதில் சொல்லப் போறேன்னு ஆவலோட எதிர்பாத்திண்டு நிக்கறதும், சுமதி என்னை இப்படிக் கேட்டதே எல்லாத்திலேயும் மாறுபட்ட பார்வை கொண்ட என்னை இந்தத் திரைப்படம் குறித்தும் சீண்டிப்பார்க்கவே போட்டத் தூண்டில்ன்னு எனக்குப் புரியறது. புரிஞ்சிண்டே அந்தத் தூண்டில்லே சிக்கறதிலே இருக்கற சுகத்தை அனுபவிக்கறதுக்காக நானும் அந்த பேச்சுக் கச்சேரிலே நுழையறத்துக்கு தொண்டையைச் செருமிக்கறேன்.

"என்ன மிஸ்டர் ராஜாராமன்! நீங்க அந்தப் படத்தை பார்த்திட்டீங்களோ?"ன்னு ராகவன் நிறுத்தி நிறுத்தி ரொம்ப ரசிச்சிண்டு அந்தத் தமிழ்ப் படத்தோட பேரை விட்ட தொடர்கதையை மீண்டும் தொடங்கற சுவாரஸ்யத்தோட சொல்றான்.

"பாத்துட்டேன்.."னு நானும் ரொம்ப சாதாரணமா அவனுக்குப் பதில் சொல்றேன்..

நான் சொன்ன பதிலே ராகவனுக்கு நம்ப முடியாம இருக்குங்கறதை வெளிப்படுத்தறமாதிரி என்னைப்பாத்து இப்படிக் கேக்கறான்: "என்ன பாத்திட்டீங்களா?.. பார்த்துமா அந்தப் படத்தைப் பற்றின 'பாராட்டு' எதையும் வெளிப்படுத்தாம இவ்வளவு மெளனமா உங்களாலே எப்படி இருக்க முடிஞ்சது?"ன்னு கேக்கறான். அப்படி அவன் கேக்கறதிலேந்து நேத்து இவன் பார்த்த அந்தப்படம் எந்த அளவுக்கு ஆழமா இவனைப் பாதிச்சிருக்குன்னு எனக்கு நன்றாகப் புரியறது. அதைப் புரிஞ்சிண்டே அவன்கிட்டே கேக்கறேன். "அந்தப் படத்திலே எதை பாராட்டணும்ங்கிறீங்க?"

"எதையா? ஏன் எல்லாத்தையும் தான்!"

"எல்லாத்தையும்தான்னு ஒட்டு மொத்தமா சொன்னா எப்படி?.. நீங்க உயர்வா நெனைக்கற ஏதாவது ஒண்ணைக் குறிச்சுச் சொன்னா---"

"ஒண்ணா, ரெண்டா அப்படிக் குறிப்பிட்டுச் சொல்றத்துக்கு? எல்லாக் காட்சிகளுமே, பிரேமுக்கு பிரேம் பிரமாதம் தான்! பொறுப்பில்லாம திரியற அந்தக் குடும்பத்துக்குத் தன் உடம்பையே ஓடாத் தேச்சிண்டு அந்தப் படத்தோட கதாநாயகி உழைச்சுக் கொட்றாளே, அந்தத் தியாகத்தைச் சொல்லுங்கோ."

"அதிலே சொல்றத்துக்கு என்ன இருக்கு, மிஸ்டர் ராகவன்?"ங்கறேன்.

"எல்லாருமே தான் அந்த வீட்லே உழைக்கிறாங்க. பட ஆரம்பத்திலேயே, விதவையா வீட்டுக்கு வந்து விட்ட கதாநாயகியோட சகோதரி அவளோட புடவைகளை இஸ்திரி போடற காட்சியை எடுத்துக்கோ. இந்தக் கதாநாயகியோட அம்மாவும், அண்ணியும் அடுப்பங்கரையிலே வெந்து வெந்நீராகிப் பொங்கிக் கொட்டலேன்னா, வேளாவேளைக்கு எல்லாரும் சாப்பிடுவது எப்படி?.. வீட்டிலே இருக்கறவங்க எப்படி உழைச்சுக் கொட்டினாலும் அது கண்ணுக்குத் தெரியாது; ஆனா ஆபீசுக்குப் போய் நாலு காசு சம்பாதிச்சிண்டு வந்திட்டா போதும், 'தாம்,தூம்'ன்னு குதிக்கறது. ஏதோ கோபுரத்தையே தான்தான் தாங்கிண்டு நிக்கறதா கோபுரக்கலசம் நினைக்குமாமே, அந்தக் கதைதான்! இந்த நாலு காசு சம்பாதிச்சிண்டு வர்றதுக்குள்ளே அவ ஆடற ஆட்டம் என்ன? பத்து மாசம் சுமந்து தன்னோட உயிரையே பணயமா வைச்சு, இவ உயிர் சுமந்து உலவறத்துக்கேக் காரணமா இருந்த, இவளை ஈன்றெடுத்தத் தாயாரை, ஈஸிசேரிலே சாஞ்சிண்டு, கால்மேலே கால் போட்டுண்டு இவ அதிகாரம் பண்ற தோரணை தான் என்ன?.. இவ கிட்டே எந்த விஷயம் குறிச்சும் பேசணும்னாலே இவளோட தாயார் நடுங்கற நடுக்கமும்.. சே! இதெல்லாம் என்ன புனிதமான ஒரு தாயார்--மகள் உறவாகவா இருக்கு?.. இந்த அகம்பாவம் பிடித்தக் கழுதைக்குப் பேர் தியாகி!" ன்னு கொதிக்கறவன் கோமளா--சுமதி பக்கம் திரும்பி, "என்னதான் சம்பாதிச்சிண்டிருந்தாலும் உங்க தாயார்கிட்டே நீங்கள்லாம் இப்படித்தான் நடந்துக்கிறீங்களா?"ன்னு கேக்கறேன்.

சுமதி பதிலே பேசவில்லை. அவள் கன்னத்திலே வழியற கண்ணீரே எனக்குப் பதில் சொல்றது. தன்னோட தாய்கிட்டே அவ்வளவு பாசம் அவளுக்குன்னு நான் புரிஞ்சிக்கறேன்.  கை திருப்பி மணி பார்த்திட்டு எழுந்திருக்கிறேன்.

நாலைஞ்சு டிராப்ட்ஸ் போட வேண்டியது பாக்கி இருக்கு. இப்போ ஆரம்பிச்சாத்தான் வேலை சரியா இருக்கும். வேலைலே என்னை மும்மரமா ஈடுபடுத்திக்கறேன். அந்த ஈடுபாட்டிலே நேரம் போனதேத் தெரியலே. ஆபீசை விட்டுக் கிளம்பரச்சே மணி ஐந்தரைக்கு மேலாயிடறது.

ஞாபகமா டிபன் பாக்ஸை எடுத்திண்டு பின்பக்கம் போய் 'வாஷ் பேஸின்'லே அலம்பிண்டு கைப்பையிலே வைச்சிக்கறேன். அதை எடுத்து வைச்சிக்கறத்தே, விமலா வெண்ணைய் வாங்கிண்டு வரச்சொன்னது ஞாபகத்துக்கு வர்றது.. வெண்ணெய் விக்கற விலையிலே வாங்க முடியாது தான்! என்ன செய்யறது?.. குழந்தைக்கு சாதம் பிசைஞ்சு வைக்கறச்சே நெய் ஊத்தாம இருக்க முடியாது; சீனுவுக்கு நெய் இல்லேனா, சாதமே எறங்காது. இவங்களைச் சாக்கிட்டு என்னாலே, விமலாவாலே ரெண்டு பேராலுமே நெய் ஊத்திக்காம இருக்க முடியறதில்லே. ஆனா பேரு என்னமோ, 'குழந்தைக்கு மறக்காம வெண்ணைய் வாங்கிண்டு வாங்கோ' தான்!

படம் - இணையத்திலிருந்து

சர்வோதையாவிலே வெண்ணை வாங்கிண்டு  வெளியே வந்து சைக்கிள் பெடல்லே காலை வைக்கறச்சே, பிர்மாண்டமா நிறுத்தி வைச்சிருக்கற சிகரெட் விளம்பர பானர் ஒன்று--அதிலே புட்பாலை எம்பிக் காலாலே ஒதைக்கற தோரணைலே போஸ் கொடுத்திண்டிருக்கற--ஓ, இது சிதம்பரத்தோட படம் இல்லே!.... 

புதுசா நிறுத்தியிருக்கற இந்தப் பானரை இப்போத்தான் பாக்கறேன். ரொம்ப நாளைக்கு முன்னாடி நா பாத்தப்போ சிதம்பரம் எப்படி இருந்தானோ அப்படியே அதே இளமையோட இருக்கான். ரோடிலே இங்கேயும் அங்கேயும் திரிஞ்சிண்டிருக்கற மற்றவர்களுக்கெல்லாம் இல்லாத ஒரு நெருக்கத்தோட இப்போ எனக்கு இந்த பானர் தென்படறது. இன்னும் கிட்டே நெருங்கி பிர்மாண்டமா வரைஞ்சிருக்கற சிதம்பரத்தோட உருவத்தை--- கால் பகுதிலேந்து தலைஉச்சி வரை நெட்டக்குத்தலா-- பாக்கறேன். இவ்வளவு கீழேயிருந்து மேலே அவனைப் பாக்கறதே புது அனுபவமா இருக்கு. பயல் வாழ்க்கைலேதான் என்னமாய் உசந்திட்டான்!..

காற்றிலே எங்கிருந்தோ பறந்து வந்த பேப்பர் ஒண்ணு கால்லே சிக்கிண்டு படபடக்கறது. எறும்பைத் தவறிப்போய் நசுக்கிவிட்டு அதுக்காகப் பரிதாபப்படற மாதிரி உடனே நெஞ்சுக்குள்ளே ஒரு பதட்டம்! அம்மாதான் அடிக்கடி சொல்வா,காகிதம் காலிலே மிதிபடக்கூடாதுன்னு.. சரஸ்வதியாம்... காகிதம் கால்லே மிதிபட்டா படிப்பே வராதாம்!  ஹூம்.. அம்மா... எனக்குனே வாழ்ந்த அம்மா... நார்மடிப்புடவையும், வீபூதிக் கீற்றுகளுமாய்... அவளும் போய்ச்சேர்ந்துட்டா...

சாயந்திர நேரத்திலே கூட என்னை இங்கே அங்கே போகவிடமாட்டா அம்மா.. சூரியன் மலைவாய்லே விழற நேரமாயிடுத்து, காலைக் கையை அலம்பிண்டு, விபூதி இட்டுண்டு சுவாமிக்கு விளக்கேத்திட்டு புஸ்தகத்தை எடுத்து வைச்சிண்டு உட்காருடான்னு தொணதொணத்திண்டே இருப்பாளே...

எனக்கு அப்போல்லாம் எரிச்சலா பத்திண்டு வரும். போதாக்குறைக்கு வாசல் பக்கம் கோடிவீட்டு சிதம்பரம்---வேறே யாருமில்லே, இந்த சிகரெட் பானர் சிதம்பரம் தான்-- புட்பாலும் கையுமா 'வர்றையாடா'ன்னு சைகை காட்டிண்டு நிப்பான். 'ப்ளே கிரவுண்டு'க்கு அப்படியே பறந்து போயிட மாட்டோமா' ன்னு மனசு கிடந்து அடிச்சிக்கும்.. இந்த அம்மாவுக்கு யானைப் பார்வை தான். சிதம்பரம் வந்து வாசல்பக்கம் நின்னுண்டு சைகை காட்டறது எப்படித்தான் இவளுக்கு மூக்கிலே வேர்க்குமோ தெரியாது.. "போங்கடா.. ஊர்சுத்திகளா.. விளையாட்டுப் பசங்களா.."ன்னு அவனை விரட்ட வரிஞ்சு கட்டிண்டு வாசல்பக்கம் போவா..

ஊர்சுத்தி... அம்மாவும் தீர்க்க தரிசனத்தோட சரியாத்தான் சொல்லியிருக்கா.. நேத்திக்கு 'ஹிண்டு'லே பாத்தேன்.. புட்பால் சேம்பியன் ஆப் இந்தியா.. இந்தியாவோட சார்பா இண்டர்நேஷனல் புட்பால் மீட்லே கலந்துக்கற டீமோட தலைவன்... இன்னிக்கு ஜெர்மனின்னா நாளைக்கு பாரீஸும் அடுத்த நாள் லண்டனுமா இருக்கான்... ஊர்சுத்தி...

அம்மா வாயாலே ஆசிர்வதிக்கப்பட்டவன், இதோ இப்போ ஊருக்கு முக்கியமான டிராஃபிக் செண்டர்லே சிகரெட் பானர் ஓவியமா நிலையா நின்னிண்டிருக்கான்...

ஒவ்வொருத்தனுக்கும் சின்ன வயசிலேந்து எதிலே 'டேஸ்ட்'ங்கறதைக் கண்டுபிடிச்சு, அந்தந்தத் துறைலே அவங்கவங்களை 'ப்ரீயா' விட்டுடணும்னு தோண்றது... ரஷ்யாலேல்லாம் அந்த மாதிரிதான் செஞ்சாங்களாம்.

துள்ளி குதிச்சு விளையாட வேண்டிய நேரத்திலெல்லாம் புஸ்தகத்தைக் கட்டி அழுதிருக்கேன்.. அம்மாவோட கண்ட்ரோல் அப்படியே இப்பவும் படிஞ்சு போயிடுத்து. அச்சடிச்ச எந்தக் காகிதத்தையும் படிக்காம விடறதில்லே. தெரியாத விஷயமில்லே.. ஒவ்வொண்ணுலேயும் தனி நோக்கு; எனக்குன்னு ஒரு தனிப் பார்வை. லாவோஸ் பிரச்னைலேந்து லாண்டரி கடைக்காரன் அயர்ன்பாக்ஸ்லே போடற கரியோட தராதரம் வரைக்கும் என்னோட கருத்தைத் தெரிஞ்சிக்கறதிலே ஆபீஸிலே இருக்கற எல்லாருக்குமே ஒரு தனி குஷி; போகப்போக அவங்களுக்கு இது ஒரு பொழுதுபோக்காவே இப்போ உருமாறியிருக்கு.. 'ராஜாராமன்! இது பத்தி என்ன நெனைக்கிறீங்க..'ன்னு உசுப்பேத்தினதுமே, நாம் ரொம்ப சின்ஸியரா ஒவ்வொண்ணையும் அலசி ஆராய்ந்து..

அவங்களுக்கே சில சமயங்களிலே ஆச்சரியமா இருக்கும்.. இவங்க பூஜித்து தலைலே தூக்கி வைச்சிண்டு ஆடற ஒண்ணை, 'அட, சரித்தான்'ங்கற தோரணைலே பேசிடுவேன்;

சாதாரணமா மற்றவர்கள் நெனைக்கற ஒண்ணை நுணுகி நுணுகி ஆயிரம் கோணங்களிலே பார்த்து அதை பத்தி அவங்க மத்திலே ஒரு பிரமையை ஏற்படுத்திடுவேன். இப்பேர்ப்பட்ட கல்யாண குணங்களையே 'நானா'கக் கொண்டிருக்கிற நான்---

இதோ வீடு வந்திடுத்து. தெருக்குள்ளே சைக்கிள் நுழையறச்சேயே தெருவிலே 'ஓடிப்பிடித்து' விளையாட்டு விளையாடிக்கொண்டிருக்கிற தெரு வானரங்களுக்கிடையே ஒரு கூக்குரல்.. "டேய், சீனு! சீனூ!.. உங்கப்பா வந்தாச்சுடா!....."

சீனு என்கிற என்னோட சீமந்த புத்திரன் என்னைப் பாத்து இளிச்சிண்டு என் சைக்கிளுக்கு குறுக்கேயே ஓடறான்..

வீட்டுப்படிகள் மேலே சைக்கிளைத் தூக்கி ஏற்றி, நடு ஹால்லே சுவரோரத்தில் சாய்த்து  நிறுத்தறேன்;  நிறுத்திட்டு சுவத்து ஜன்னலோட சாசுவதமா கட்டியிருக்கற கயிறை எடுத்து சைக்கிளோட சேர்த்து பிணைக்கிறேன். சின்னவன் ரெண்டு வயசு பாலு சைக்கிளை மேலே தள்ளிக்காம இருக்க இந்த ஏற்பாடு..

சைக்கிள் சத்தத்தைக் கேட்டு 'ஏன் இவ்வளவு நேரம்'ங்கற கேள்விக்கணையோடு என்னை எதிர்கொள்கிறாள் என் சகதர்மிணி.

நான் ஏதோ சொல்ல வாயைத் திறக்குமுன்னேயே, "விளையாடறேன் பேர்வழின்னு உங்க பிள்ளையும் வெளியே திரிஞ்சிண்டிருக்கானே--- வர்றத்தே அவனையும் நாலு அறை அறைஞ்சு இழுத்திண்டு வரக்கூடாதா?"ன்னு ஓலமிடறா...

எனக்கு வாய்ச்ச அம்மாவைப் போலவே, இதோ சீனுவுக்கும் ஒரு அம்மா! புஸ்தகத்தை எடுத்து வைச்சிண்டு ஒழுங்காய்ப் படிச்சு என்னைப் போலவே அவனும் குமாஸ்தாக்களுக்கே உரிய ஒரு குமாஸ்தா பொழைப்பு நடத்த வேண்டாமோ...

தனக்கு மேலே இருக்கறவங்களுக்கு 'குட்மார்னிங்' சொல்லிண்டு--- கீழே இருகறவங்க கிட்டே 'குட்மார்னிங்' வாங்கிண்டு, அவனும் ஆபீஸ் போய் வர வேண்டாமோ?.. அவனும் நாலைஞ்சு பெத்து எடுத்திண்டு, ரேஷன் பையைத் தூக்கிண்டு, வெண்ணெய் கடை ஏறி இறங்கி.. உருப்படியா ஒரு குழந்தை தன்போக்கில் வளரத்தான் எத்தனை தடைக்கற்கள்?.. அட சட்!...

சிதம்பரத்தைப் பத்தி நெனைச்சவுடனேயே அவனைப் பத்தி, டிராஃபிக் கார்னர்லே பாத்த சிகரெட் விளம்பர பானர் பத்தி, எல்லாத்தைப் பத்தியும் இவளுக்குச் சொல்லணும்னு நெனைக்கறேன்.. 'ஆரம்பிச்சிட்டீங்களா, உங்க லெக்சரை' ன்னு இவள் ஆரம்பிச்சிடுவாளேன்னு வாய்க்குள்ளேயே வார்த்தைகளை விழுங்கிக்கறேன். எல்லாரும் ரசிக்கற என்னோட சமத்காரமான பேச்சு, வாதத்திறமை, எல்லா விஷயங்களையுமே புதுக்கோணத்திலே பாக்கற விவேகம்---ஆகிய எனக்கே சொந்தமானதா நெனைச்சிண்டிருக்கற இந்த அயிட்டங்களெல்லாம் இவளுக்கு ஏன் கசக்கின்றனங்கறது எனக்கு இதுவரை புரியாத புதிர்.

"என்ன நான் சொன்னது காதிலே விழலியா--- அந்தச் சீனுவை..."

"அடடா! 'ஃப்ரீ ஏர்லே' அவன் தான் வெளிலே கொஞ்சம் விளையாடிட்டுத்தான் வரட்டுமே! மணி என்ன ஆயிடுத்து?.. இப்போலேந்து புஸ்தகத்தைப் பிரிச்சா..."

"நன்னா இருக்கு, நீங்க பையனை வளர்க்கற லட்சணம்! நாலு எழுத்துப் படிச்சு பாஸ் பண்ணினாத்தானே அவனுக்கும் நாளைக்கு வேலைன்னு ஒண்ணு ஆகி--- டேய், சீனூ..."ன்னு கத்திண்டே இவ வாசப்பக்கம் போறா!...

"ஓ! இவ குமாஸ்தா பொழைப்பைப் பத்தி பேச ஆரம்பிச்சிட்டா. இந்த சமயத்திலே இவளுக்கு சிதம்பரத்தைப் பத்தி சொன்னா என்ன புரியும்னு நா மெளனமாறேன்.

புரியறது இருக்கட்டும், சொன்னாத் தான் ஏத்துக்கப் போறாளா, என்ன?.. ஏதோ ஆயிரத்தில் ஒருத்தர் சிதம்பரம் மாதிரி வரலாம்.. எல்லாருக்கும் அப்படி அமையுங்கறது என்ன நிச்சயம்ன்னு இவ பாட்டுக்கு ஆயிரம் நியாயங்களை நீட்ட ஆரம்பிச்சுடமாட்டாளா, என்ன?..

நான் பேசாம காலை அலம்பிக்க கொல்லைப்புறம் போறேன். பின்பக்கம் தெரு ஓட்டலில் 'லவுட்ஸ்பீக்கர்' அலறுகிறது:

மகாராஜன் உலகை ஆளலாம்--- இந்த

மகாராணி அவனை ஆளுவாள்...

மகாராஜன் உலகை ஆளலாம்....

--- நான் மனசுக்குள்ளேயே சிரிச்சிக்கறேன்...

 

69 கருத்துகள்:

  1. வணக்கம் ஜீவி ஸார்...   பாடல் வரி 'இந்த மகாராணி அவனை ஆளுவாள்.'  

    நீங்க 'ஆளலாம்' என்று எழுதி இருப்பது காரணமாகத்தானா?  இல்லை அதுதான் பாடல் வரி என்று நினைத்தீர்களா? 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் காரணமாகத்தான், பாடல் வரிகளையும் நானே கொடுத்திருப்பதால் தெரியாமல் செய்ததில்லை இந்த மாற்றம்.

      நீக்கு
  2. வெண்ணெய் வாங்கணும் என்பது நினைவில் வருகிறது வரை படிச்சிருக்கேன். கதை எதை நோக்கிப் பயணிக்குது என்றே தெரியவில்லை. அம்மா சென்டிமென்டா, பெண்கள் சென்டிமென்டானு தெரியலை.

    ஆனால் அதுவரை (படித்த வரை) கதையின் நடை, சம்பவங்கள் கருத்தைக் கவர்கிறது. வித்தியாசமான நிகழ்வுகளைக் கோர்த்திருக்கிறார். இதுவரை டெம்ளட் கதை இல்லை என்பது புரிகிறது.

    பதிலளிநீக்கு
  3. /சாதாரணமா மற்றவர்கள் நெனைக்கற ஒண்ணை நுணுகி நுணுகி ஆயிரம் கோணங்களிலே பார்த்து அதை பத்தி அவங்க மத்திலே ஒரு பிரமையை ஏற்படுத்திடுவேன். இப்பேர்ப்பட்ட கல்யாண குணங்களையே 'நானா'கக் கொண்டிருக்கிற நான்// துவக்கத்தில் என்ன சொல்ல வருகிறார் என்று கணிக்க முடியவில்லை, ஆனால் மேற்கண்ட பாராவில் புரிந்து விடுகிறது. அழகான நடை.

    பதிலளிநீக்கு
  4. கதையில் குறிப்பிடப்பட்டிருக்கும் படம் 'அவள் ஒரு தொடர்கதை' தானே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படம் தான் என்பது நேற்றுதான் எனக்கு ஸ்ரீராமின் மூலம் தெரிந்தது.

      கதையை வாசித்த போது அந்தக்காலப் படம் கதாநாயகி தியாகச் சித்திரமாகப் படைக்கப்படும் படம் என்பது மட்டும் புரிந்தது ஆனால் என்ன படம் என்பதை எல்லாம் என்னால் அனுமானிக்கமுடியவில்லை. வரிகளை வாசித்த போதும் கூட!!!!!

      கீதா

      நீக்கு
  5. உவமை தப்புன்னு நினைக்கறேன்.  கோபுரத்தைத் தாங்கறதா கோபுரத்தின் கீழே இருக்கும் பொம்மைகள்தான் நினைக்கும்.  உச்சியில் இருக்கும் கலசம் அல்ல.

    பதிலளிநீக்கு
  6. நான் ஈனுடன் பணிபுரிந்த அடிப்படை ஊழியர்கள் உட்பட எல்லோருக்கும் நானே முதலில் முகமன் கூறுவது வழக்கமாகக் கொண்டிருந்தேன்.  

    பதிலளிநீக்கு
  7. நான் எப்போதுமே முந்திக் கொண்டு எல்லோருக்கும் முகமன் கூறும் பழக்கம் இருந்ததனால் நான் ஒருநாள் சொல்ல தாமதப்படுத்தினாலும் அவர்கள் நிமிர்ந்து பார்க்கும்போதே முகமன் கூறி விடுவார்கள் - உயர் அதிகாரிகள் உட்பட.

    பதிலளிநீக்கு
  8. கதை நடந்த காலம் அறுபது எழுபதுகள் என்று கொள்ளவேண்டும் என்று நினைக்கிறேன்.  இப்போதெல்லாம்  ஏது ஹெட்க்ளார்க்? கோமளா என்கிற பெயர்தான் ஏது?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. ​ஸ்ரீராம் என்ன இது? ரங்கனை திட்டு என்று அங்கெ சொல்கிறீர்கள். கோமளா என்ற பெயர் தான் எது? என்று இங்கே சொல்கிறீர்கள். யாரை இப்படி மறைமுகமாக வம்புக்கு இழுக்கிறீர்கள்?

      Jayakumar

      நீக்கு
    2. நாராயண.... நாராயண....

      நீக்கு
    3. ஹாஹாஹா ஜெ கே அண்ணா!!!! அப்படி போடுங்க!!!!!!!

      ஆனா ஒன்று, அண்ணா, ஸ்ரீராம் என்னை நேரடியாகவே வம்புக்கு இழுத்திருப்பாரே. அவருக்குக் கோமளா என்ற பெயர் நினைவில் இருந்திருக்காது. இப்ப நீங்க சொன்னப்புறம்தான் அவருக்கே நினைவு வந்திருக்கும்!!

      கீதா

      நீக்கு
    4. JKC Sir சொன்னபிறகு எனக்கு லேஸாய்  நினைவுக்கு வந்தது.  ஆனால் கதையில் ஒரு கேரக்டர் பெயர் கோமளா.

      நீக்கு
  9. "எனக்கே சொந்தமாயிருக்கற... "  

    இந்த மாதிரி ஒவ்வொருவருக்கும் சொந்தமாயிருக்கற நிறைய ப்ளஸ்கள் சுற்றியிருக்கும் சொந்தங்களால் கவனிக்கப்படுவதே  இல்லை.  கவனித்தால் அல்லவா பாராட்டுவதற்கு!

    பதிலளிநீக்கு
  10. ஜீவி ஸார் எப்பவுமே பிரம்மாண்டம் என்கிற வார்த்தையை பிர்மாண்டம் என்றுதான் எழுதுவார்.  எனக்குத் தெரிந்து நான் எங்குமே அந்த வார்த்தையை அப்படி ஒரு ஸ்பெல்லிங்கில் படித்தது இல்லை, பார்த்ததும் இல்லை. 
    ஒருதடவை கேட்டபோது அப்படியும் சொல்லலாம் என்று அவர் சொல்லியிருந்ததாய் நினைவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
  11. ஜீ வி அண்ணா எழுத்து நடை நன்றாக இருக்கிறது. அதைச் சொல்லத் தேவையே இல்லை. முதலில் ஆரம்பத்தில் சொல்லும் பல இடங்கள்,, அந்த சுதந்திர தியாகியைப் பற்றி நினைப்பது உட்பட, அக்தாபாத்திரத்தின் இயலாமையையும், அலுவலகத்தில் தமக்கு மேலில் இருக்கும் அதிகாரிகள் கீழ் இருக்கும் ஊழியர்கள் என்று இந்த முகமன் கூறும் வழக்கம், அதை ஒட்டிய எண்ணங்கள், தான் நினைப்பதை செயல்படுத்த முடியாததனால் எழும் எரிச்சல்கள் என்று சொல்லியிருக்கும் இடங்கள் அக்கதாபாத்திரத்தின் மன நிலையைச் சொல்லிவிடுகிறது.

    அதன் பின் அலுவலகத்தில் சாப்பாட்டு அறையில் நடக்கும் ஒரு சினிமாவைப் பற்றிய பேச்சுகள் வரும் இடம் இது, கதாபத்திரத்தின் அன்றைய நிகழ்வாகவா இல்லை, கதையோடு தொடர்புடையதா என்றும் தோன்றுகிறது. ஆனால் அன்றைய நிகழ்வாகக் கொள்ளலாம்.

    கதாபாத்திரத்தின் மனநிலை படிப்படியாகக் கட்டப்படுகிறது. அதற்கான காரணம் என்ன என்பதுதான் உளவியல் ரீதியான ஹைலைட்!

    அடுத்த கருத்திற்கு வருகிறேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
  12. இந்த 'குட்மார்னிங்' சொல்கிறார்கள் என்பதிலிருந்தே அந்த ரெண்டு பேர்க்கிடையான அந்தஸ்து உயர்வை மூணாவதா இருக்கக்கூடிய ஒருத்தர் புரிஞ்சிக்க முடியும்ங்கற அளாவிலே, நம்ம நாட்டிலே இந்த 'குட்மார்னிங்' ஒரு 'ஐடண்ட்டி' சொல்லா மாறிப்போயிருக்கிற அலங்கோலத்தை நெனைச்சுப் பாக்கறேன்.//

    எனக்கு அலுவலத்தில் பணி புரிந்த அனுபவம் இல்லை என்றாலும், பல வருடங்களுக்கு முன்னர், இங்குள்ள hierarchy நடைமுறைக்கும், அமெரிக்காவில் உள்ள நடைமுறைக்கும் வித்தியாசம் அறிய நேர்ந்தது. அங்கு உள்ள அலுவலகத்தில் கழிவறையை சுத்தம் செய்தவரையும் கூட மேலதிகாரி முகமன் சொல்லி எப்படி இருக்கிறீர்கள் என்று சொல்வதை அறிந்தேன். எனக்கு அது ஆச்சரியம்.

    வீட்டில் கூட hierarchy பிரச்சனைகள் உண்டே!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  13. இந்த இடத்தில் நம்ம ஸ்ரீராம் நினைவுக்கு வருகிறார். அவர் தன் அலுவலகத்தில் எல்லோருக்கும் குட்மார்னிங் சொல்லிக் கொண்டே அதாவது தன் கீழ் பணி புரிபவர்கள் மேலே பணிபுரிபவர்கள் என்ற வித்தியாசம் இல்லாமல், கூடவே கடைநிலை ஊழியர்கள், ஆட்டோக்காரர் வரை நட்பு கொண்டாடும் மன நிலை உடையவர். அதை அவர் முன்பு பதிவுகளிலும் அறியலாம் நிகழ்வுகளை எழுதும் போது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஊபர் புக் செய்திருப்பேன்.  அவர் அழைப்பார்.  காசு அதிகம் கேட்கவோ, அட்ரஸ் எங்கு என்று கேட்கவோ, அழைப்பார்.  வண்டி புக் ஆகும் முன்பே அவர் பேயரும் வந்திருக்கும்.  எனவே போனை எடுத்து "வணக்கம் முபாரக்..  சொல்லுங்கள்" என்று எப்பவும்போல நேற்று கூட சொன்னேன்.

      நீக்கு
    2. ஆமாம் தெரியும் ஸ்ரீராம், நீங்களும் சொல்லியிருக்கீங்க. அந்த முகமன் அந்த எதிராளியின் மனம் ஒரு நிமிடம் தன்னையும் மதித்துச் சொல்லும் ஒருவர் இருக்கிறார் என்ற ஒரு சின்ன மகிழ்ச்சிக்குச் செல்லும். ஒரு பாசிட்டிவ் வைபை ஏற்படுத்தும். இதற்கு நேரெதிர் ஆட்களும் உண்டுதான்.

      அது போல இறங்கியதும் நன்றி சொல்லும் போது அவர்களுக்கு எற்படும் மகிழ்ச்சியையும் நான் கண்டிருக்கிறேன் நேரில். ஏறும் போதே வணக்கம் சொல்லி ஏறுவது, இறங்கும் போது நன்றி சொல்வது...

      கீதா

      நீக்கு
  14. கதாபாத்திரத்தின் இயலாமை எங்கு தொடங்குகிறது என்று சொல்லும் அந்த இடம் தான் கதையின் ஜீவன்...ஹைலைட். அந்த விளம்பரம், நண்பர் சிதம்பரம்.....கதாபாத்திரத்தின் மனதில் அது எழுப்பும் அந்தச் சலன அலை....சிறு வயதிலேயே நம் சூழலும், வளர்ப்பும், பெற்றோரின் செயல்பாடுகளும் காரணமாக அமைவதைச் சொல்லிய இடம் அக்கதாபாத்திரத்தின் குணாதிசயத்தின் வேர்.....நான் எதிர்பார்த்த ஒன்றை அண்ணா அழகாகச் சொல்லிவிட்டார்.

    (அந்த இடத்தில் என்னையும் பொருத்திப் பார்க்க முடிந்தது.)

    அந்த இயலாமை, அலுவலகத்திலும், திருமணம் ஆனபிறகும் தொடர்கிறது என்பதுதான் கதாபாத்திரம். அதனால் யாரெல்லாம் அக்கதாபாத்திரத்தை ஆள்கிறார்கள்! வீட்டிலும்...

    //ஒவ்வொருத்தனுக்கும் சின்ன வயசிலேந்து எதிலே 'டேஸ்ட்'ங்கறதைக் கண்டுபிடிச்சு, அந்தந்தத் துறைலே அவங்கவங்களை 'ப்ரீயா' விட்டுடணும்னு தோண்றது...//

    சூப்பர். டிட்டோ, இதை ரொம்பவே ஆதரிப்பேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  15. ​1960-1970 களின் கதை. இந்தக்கால Z ஜெனெரேஷன் கட்டாயம் குப்பை என்று சொல்வார்கள். 1940-1960 களில் பிறந்த பேபி பூமெர்ஸ் மட்டும் 'ஆஹா கதை பிரமாதம்' என்று சொல்வார்கள். ரசனை அப்படி. ஆக கதை இக்காலத்திற்கு பொருந்தவில்லை. (யார் சார் சைக்கிளில் ஆபிஸ் போய் வருகிறார்கள்).

    புதுமைப் பித்தன் போன்று (கடவுளும் கந்தசாமி பிள்ளையும்) காப்பி குடிப்பதில் ஆரம்பித்து, 'இது தாண்டா ஆபிஸ் ஜோதிர்லதா கிரிஜா வின் ஹெட் கிளெர்க்' போன்று ஆபீஸ் அரட்டையை விவரித்து, மதியம் உப்புமா வை சாப்பிடவைத்து, என்று பல அவசியம் இல்லாத ஆணிகள் இருந்தாலும், அவற்றை இமிடேஷன் டயமண்ட்ண்டுகளாக மாற்றி அழகுற அமைத்ததில் தான் ஜீவி சாரின் தனித்தன்மை திலங்குகிறது. அதற்குத் தான் பரிசு, அல்லாது கதையின் கருவிற்க்கோ, அதை சொல்ல ஒரு மஹாராணியையும் கொண்டு வந்ததற்க்கோ அல்ல.

    மொத்தத்தில் கதை என்றோ எழுதி மூட்டை கட்டி போட்டிருந்ததில் இருந்து உருவி எடுத்து செப்பனிடப்பட்டு போட்டிக்கு அனுப்பியது போன்று தோன்றுகிறது.

    இந்த கதை இன்று வெளியாகும் என்பதின் ட்ரைலர் தான் நேற்று (திங்க கிழமை) பின்னூட்டத்தில் மகாராணி விட்டார்களா? என்ற குசலம் விசாரித்ததும், பாரதியின் பெண்மையை போற்றும் பாடல்களையும் எழுதினீர்கள் என்பது இப்போது புரிகிறது.

    1. குழந்தைகளை வளர்ப்பதில் அன்னையின் பங்கு தான் மிக மிக மிக அதிகம். அவர்கள் தான் மகன் எந்த நிலைக்கு வருவான என்ற முடிவை தன்னை அறியாமல் புகுத்துகிறார்கள்.

    2 வீட்டுக்கு ராணி மஹாராணி. செஸ் மஹாராணி போன்று நிர்வாகத்தில் சர்வ வல்லமை படைத்தவர் அவரே.

    இவை இரண்டில் எது சார் கதையின் முக்கிய கரு? இரண்டுமேவா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் புரிந்து கொண்ட வகையில், கதாபாத்திரத்தின் இயலாமை, அதாவது தன் எண்ணங்களை ஆளுமைப்படுத்த முடியவில்லை. அலுவகலத்திலும் சரி வீட்டிலும் சரி. அதற்குக் காரணம் கதாபத்திரத்தின் சிறுவயதில் வளர்க்கப்பட்ட முறை, அது வளர்ந்த பிறகும் மனதில் தங்கி தன் கருத்தை எங்கும் சொல்ல முடியாமல் தவிக்கும் நிலை. அதைத்தானே கதையில், ஜீவி அண்ணா அந்த ஹோட்டலில் இருந்து தொடங்குகிறார்....அங்கும் அதன் பின்னானதிலும் கதாபாத்திரத்தின் எண்ண வெளிப்பாட்டிலிருந்து இயலாமை வெளிப்படுகிறது. அது அந்த விளம்பரம் பேனரைப் பார்த்ததும் தன் சிறு வயது வளர்ப்பு எழுந்து, காரணத்தைச் சொல்லி, அது வீட்டிலும் தொடர்கிறது. தன் எண்ணங்களை வெளிப்படுத்த முடியாமை, மற்றும் தன் எண்ணங்களைப் புரிந்து கொள்ளாதது. சினிமா பற்றிய உரையாடலில் கதாபாத்திரத்தின் தனித்தன்மையை அலுவலகத்தில் ஒருசிலர் புரிந்து கொள்வது போல் சொல்லபப்ட்டிருந்தாலும்.....

      இயலாமை கதாபாத்திரம். தன்னால் வீட்டில் தன் எண்ணங்களைப் பிரதிபலிக்க முடியவில்லை என்பதுதான். அம்மா வளர்த்த போதும் சரி தற்போதும் சரி.

      என் புரிதலை, ஜீவி அண்ணா இதற்கு என்ன சொல்லுவாரோ தெரியவில்லை!!!!!

      கீதா

      நீக்கு
    2. கதைக்கு கோனார் உரை போடுவது படைப்பாளருக்கு வேலையல்ல.  சரியும் அல்ல.  வாசகர்கள் என்ன புரிந்துகொள்கிறார்களோ, தங்கள் தங்கள் அனுபவங்களை ஒட்டி என்ன புரிந்து கொள்கிறார்களோ அதுதான் படைப்பு.

      ஆனால்,

      பொதுவான சில விஷயங்களை பற்றி படைப்பாளி பேச முடியும்.

      நீக்கு
    3. கதாபாத்திரங்களின் மனோ உணர்வுகளை வெளிப்படுத்தியவை அந்தக் காலத்திய பத்திரிகைக் கதைகள். நான் எபியில் செவ்வாய்க் கிழமைகளுக்கு எழுதிய அத்தனை கதைகளும் அவ்வகைத்தானவை தாம். சொல்லப்போனால் அதற்காகத் தான் நான் கதைகள் எழுதவே செய்கிறேன். அவைகளெல்லாம் குப்பையா என்ன?

      நீக்கு
    4. ஸ்ரீராம் உங்கள் கருத்தை கன்னாபின்னாவென்று ஆதரிக்கிறேன். சும்மா புட்டு புட்டு வைக்கக் கூடாது. வாசகர்களின் புரிதல் தான் மிக மிக அவசியம்.

      கீதா

      நீக்கு
    5. ஜீவி அண்ணா உங்கள் கருத்தையும் அப்படியே ஆதரிக்கிறேன். ஆமாம் கதாபாத்திரங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தல் அது ஒரு கலை.

      கீதா

      நீக்கு
  16. சாதாரணமா மற்றவர்கள் நெனைக்கற ஒண்ணை நுணுகி நுணுகி ஆயிரம் கோணங்களிலே பார்த்து அதை பத்தி//

    எல்லாரும் ரசிக்கற என்னோட சமத்காரமான பேச்சு, வாதத்திறமை, எல்லா விஷயங்களையுமே புதுக்கோணத்திலே பாக்கற விவேகம்---ஆகிய எனக்கே சொந்தமானதா நெனைச்சிண்டிருக்கற இந்த அயிட்டங்களெல்லாம்//

    ஹாஹாஹா.....இப்படியான நம் குணாதிசயங்கள் 99% கவனிக்கப்படுவதே இல்லை என்பதுதான் நிதர்சனம். அப்படி எல்லாம் கவனிக்கப்பட்டால், பாராட்டும் மனம் உள்ளவங்களும் இருந்தால் நாம் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்! ஆனால், ஹிஹிஹி அதற்கு நேரெதிதான்!

    பாராட்டும் மனம் பலருக்கும் வருவதில்லை என்பதே நான் கண்டது. சும்மா நோண்டி நோண்டி குற்றம் கண்டுபிடிக்கும் எதிர்மறையை விட, சின்ன விஷயம்தான் ஆனால் அதைப் பாராட்டித் தட்டிக் கொடுக்கும் போது எவ்வளவு நேர்மறை சக்திகள் அங்கு வலுப்பெறுகின்றன என்பது பலருக்கும் தெரிவதில்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
  17. முடிவில், மனைவி அமைவதெல்லாம்.....தாய் அமைவதெல்லாம் என்பவை மனதில் தோன்றின.

    மனைவியின் புத்திசாலித்தனத்தால் கணவன்மார்கள் வெற்றியடைந்ததையும் பார்க்கலாம், இல்லை குத்திக் குத்திக் காட்டும் மனைவிகளால், கணவன் மனம் நொந்து வாயடைத்து, சுயசிந்தனை இல்லாமல், முதுகெலும்பு இல்லாமல் போவதையும் பார்க்கலாம்.

    கதையில் சொல்லும் கதாபாத்திரத்திற்கும் ஆளுமைத் திறன் குறைவு அதைச் சாதகமாக்கிக் கொள்ள வசதியாக மனைவி கதாபாத்திரம்

    கீதா

    பதிலளிநீக்கு
  18. கதை எழுதிய விதத்தைப் பார்க்கும் போது பழைய வருடங்களில் நடக்கும் சம்பவம் என்று கொள்ளலாம். அலுவகலம் அங்கு நடைபெறும் சினிமா பற்றிய பேச்சு பழையபடங்களில்தானே கதாநாயகி தியாகச் சித்திரங்களாகப் படைக்கப்படுவார்கள். இப்போதைய மன நிலைகள் பல மாறிவிட்டனதான்.

    ஆனால் மகாராணி ஆள்வது இப்போதைய தலைமுறையிலும் கூடத் தொடர்வதாகத் தெரிகிறது. பெண்கள் மேலோங்கி இருப்பதாகத்தான் தெரிகிறது. அது நேர்மறையாக இருந்தால் நல்லது. அந்த ஆளுமை. இல்லைனா ஊத்திக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  19. கதையை முழுமையாகப் படித்தேன்.

    கதையின் நடை, சம்பவங்கள் எல்லாமே புதுக் கதையைப் படிக்கும் உணர்வைத் தந்தது.

    கதை என்ன சொல்ல வருகிறது? கணவன் எத்தனையோ விஷயங்கள் தெரிந்த அறிவுஜீவி என்றாலும் அவன் மனைவிக்கு, அவன் சாதாரண புருஷன்தான், அவன் திறமைகள் அவளுக்கான உலகில் பிரையாரிட்டி அல்ல என்பதைச் சொல்ல வருகிறதா?

    கங்கை அமரன் என் திறமைகளை மனைவி புரிந்துகொள்ளவில்லை, அங்கீகரித்ததில்லை என்று சொல்லியிருப்பார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அல்லது இந்த மாதிரிக் கதையை ஆழமாகப் புரிந்துகொள்ளும் திறமை எனக்கு இல்லையா?

      நீக்கு
    2. நெல்லை, மனைவியும் புரிந்து கொள்ளவில்லை என்பது ஒரு புறம், தான் இப்படி வாயடைத்து தன் எண்ணங்களைச் சொல்லக் கூடிய ஆளுமையும் இல்லை என்ற ஒரு உணர்வு. அம்மாவிடமும் முடியவில்லை மனைவிடமும் முடியவில்லை. அம்மாவும் புரிந்து கொள்ளவில்லை மனைவியும் புரிந்து கொள்ளவில்லை.

      (இதுகதைக்கு அப்பாற்பட்டது. அப்படிப் புரிந்து கொள்ளும் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளும் ஜோடிகள் இருந்தால், மனைவியின் வெற்றியில் கணவன் மகிழ்வதும், கணவனின் வெற்றியில் மனைவி மகிழ்வதும்....அமைவது எல்லாம் வெகு அபூர்வம்.

      என் நெருங்கிய நட்பு வட்டத்திலும் கூட இப்படி உண்டு. மனைவி கணவனின் திறமையை புரிந்து கொள்ளாமல் அதே சமயம் தன் விருப்பங்களை எண்ணங்களைப் பூர்த்தி செய்துகொள்வது. ஆனால் அதை வெளியில் தெரியாமல் செய்வதுதான் ஸ்மார்ட்னெஸ். வெளியில் பார்க்கறப்ப ஆஹா எப்படியான ஜோடி என்று.....

      கீதா

      நீக்கு
    3. கதை எதையும் சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை, நெல்லை! வாசிக்கும் கால்மணி நேரத்தில் இந்தண்டை -- அந்தண்டை கவனம் அலைபாயாமல் எதிலிலோ நம் கவனம் குவிகிற மாதிரி பிடித்து வைத்திருக்கிறதே, அந்த அனுபவம் ஒன்றே போதும்! இதுவே ஒரு பானைக்கு ஒரு பருக்கையாய் நல்ல கதைக்கு அடையாளம்!

      நீக்கு
  20. வணக்கம் சகோதரரே

    கதை நன்றாக உள்ளது. அருமையான வரிகளை சேர்த்து ஒரு கதையை (மனித உணர்வுகளை) எப்படி கையாள்வது என்று தெளிவாக சொன்ன சகோதரர் ஜீவி அவர்களுக்கு என் பணிவான நன்றி.

    /எல்லாரும் ரசிக்கற என்னோட சமத்காரமான பேச்சு, வாதத்திறமை, எல்லா விஷயங்களையுமே புதுக்கோணத்திலே பாக்கற விவேகம்---ஆகிய எனக்கே சொந்தமானதா நெனைச்சிண்டிருக்கற இந்த அயிட்டங்களெல்லாம் இவளுக்கு ஏன் கசக்கின்றனங்கறது எனக்கு இதுவரை புரியாத புதிர்./

    உண்மை. இது ஒரு புதிர்தான். வாழ்க்கையில் இணையும் சொந்தங்களுக்கிடையே இந்த மாதிரி ஒருவரின் எண்ணங்களை மற்றவர் புரிந்து கொள்ளாத போது, மெளனமாக அதை கடந்து விடுவதும் ஒரு புத்திசாலித்தனம். இல்லையென்றால், வீண் விவாதங்கள் மனதை துன்புறுத்தி பார்க்கும். காயங்களை ஏற்படுத்தி, இவன் பொறுத்துக் போகிறானா , இல்லை வலியினால் துவண்டு போகிறானா என சோதனைகளை வைத்துப் பார்க்கும்.

    கதையில் நிறைய வரிகளை ரசித்துப் படித்தேன் . அருமையான கதைக்கு மிக்க நன்றி சகோதரரே. நல்லதொரு கதை பகிர்வுக்கு பாராட்டுக்கள். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை! உண்மை! இளம் வயதினருக்கு அருமையான ஆலோசனை. 'இவன் பொறுத்துப் போகிறானா, இல்லை வலியினால் துவண்டு போகிறானா' என சோதனைகளை வைத்துப் பார்க்கும். ஹம்மாடி! நீயும் நானும் ஒன்று என்பது
      தம்பதிகளுக்கிடையே ஒன்றாயினும், மனம் என்பது இரண்டாகத் தனித்தனியாய் பிரிந்து ஒன்றை இன்னொன்று வீழ்த்துவது எப்படி என்று சமயம் பார்க்கும். அதை மட்டும் 'ச்சீ.. சும்மா இரு' என்று அடக்கும் கலை கைவந்து விட்டதெனறால், ஒரு சமயம் இல்லை என்றாலும் இன்னொரு சமயம் ஒத்திசைவுக்கு கைகொடுக்கும். இரு மனம் கலக்கும் திருமண வாழ்வில் வெற்றி பருவதற்குள் இடை இடையிடையே எத்தனை சோதனைகளடா, இறைவா!

      நீக்கு
  21. எங்களுக்கு இப்பொழுது காலை. மணி 0645.
    அதனால் கொடுத்து வைத்த அன்பான எபி வாசக சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  22. ஜெயகாந்தன் சொல்வார்: என் கதை தான் வாசகர்களோடு பேச வேண்டுமே தவிர, நானல்ல, என்று.

    இந்த உணர்வில் தான் இப்பொழுது நான் இருக்கிறேன். எழுத்தாளன்
    எதையும் எழுதும் பொழுது சிந்தனையின் அல்லாட்டத்தில் வார்த்தைகள் அதன் அதன் போக்கில் அமைந்து வரிகளாகி எண்ணங்கள் எழுத்துக்களாகும். எல்லாவற்றையும் எழுதி முடித்த தருணத்தில் வேண்டுமானால் எழுத்தாளன் இத்தனை நேரம் வேறொரு உலகத்தில் ஆழ்ந்திருந்ததின் வெளிப்பாடாக உருவான எண்ணச் சிதறல்கள் குறித்து
    கொள்ளும் பெருமிதத்தில் மிதக்கலாம்.

    அப்படி எழுதிய ஒன்று பத்திரிகை பிரசுரமாகி வாசகர் மத்தியில் உலா வரும் பொழுது எழுத்தாளன் அர்த்தபூர்வமான ஒரு மெளனத்தில் ஆட்பட்டு விடுகிறான். தான் எழுதியது எந்த விதத்தில் வாசகர்களைப் போய்ச் சேர்ந்திருக்கிறது என்று தெரிந்து கொள்வதில் தான் அவன் சிந்தனை தாவி விடும். இந்தத் தடவை சொன்னது ஆழப் பதியவில்லை என்றால்
    வேறு எந்தந்த விதங்களில் புதுப்புது அவதாரங்கள் எடுத்து தன் எண்ணங்களை எழுத்தில் கொண்டு வருவது என்பது பற்றி அவன் யோசனைகள் நீளும்.

    இதுவே தன் எழுத்தின் ஆளுமைக்கு முக்கியத்துவம் கொடுக்கும்
    எந்த எழுதத்தாளனின் யோசனையாய் இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல கருத்துகள் ஜீவி அண்ணா. உண்மையான வரிகள்.

      கீதா

      நீக்கு
  23. ஒரு விஷயத்தில் நமக்கு தெளிவு வேண்டும்.

    பின்னூட்டக் கருத்துக்கள் என்பது அவரவர் வாசிப்பில் உணர்ந்ததின் வெளிப்பாடே தவிர நிச்சயம் அதை எழுதியவனின் உணர்வல்ல.
    குறிப்பிட்ட விஷயத்தில் வாசிக்கும் ஒவ்வொருவரும் வெவ்வேறு அனுபவங்களைப் பெறுவதால் தான் வாசித்த ஒன்று பற்றி வாசித்த
    வாசகர்கள் மத்தியிலும் அபிப்ராய பேதங்கள் ஏற்படுகின்றன.

    வாசித்த ஒன்று தான்கு நெருக்கமாகும் பொழுது
    வாசகரை அந்த வாசித்த விஷயம் ஆட்கொண்டு விடுகிறது. எவ்வளவு உண்மை இது என்று அதற்காக வாதாடத் தோன்றுகிறது. இதெல்லாம் நல்ல ஆழ்ந்த வாசிப்புணர்வு மட்டும் அல்ல வாழ்க்கையின் வெவ்வேறு விஷயங்களில் நாம் கொள்ளும் ஈடுபாடுகளின் பிரதிபலிப்புமாகும்.
    அரசியல் கட்சிகஓ, அவற்றின் கொள்கை செயல்பாடுகளில் வகை வகையாக மனித உள்ளங்கள் ஈடுபாடு கோவதற்கும் இதன் காரணம். ஆன்மீக எண்ணங்களிலும் இப்படியான உணர்வுகள் தாம் பிரதான பங்கு வகிக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //தான்கு நெருக்கமாகும் பொழுது..//
      வாசித்த ஒன்று தனக்கு நெருக்கமாகும் பொழுது -- என்று திருத்தி வாசிக்க வேண்டுகிறேன்.

      நீக்கு
  24. அப்பாடா கதையைப் படிச்சு முடிச்சுவிட்டேன்...
    ஆரம்பமே, தேத்தண்ணிக் கடையில் நடக்கும் சாதாரண நிகழ்வைக்கூட மிக அழகாக வர்ணித்த விதம், நாமும் கடைக்குள் இருப்பதைப் போன்ற உணர்வைத் தருகிறது.

    குடும்ப உறுப்பினரின் சம்பாசனைகள், அதை ஒவ்வொருவரும் எடுக்கும் விதம், தாண்டிச் செல்லும் விதம் அனைத்தும் ரசிக்க முடிகிறது. நல்ல கதை, பரிசு கிடைத்தமைக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அப்பாடா! கதையை படிச்சு முடிச்சுட்டேன்.//

      ஹி..ஹி.. ஆசுவாசப்படுத்திக் கொள்ளுங்கள், சகோ.
      ஸ்ரீராம் இந்தக் கதையை இரண்டு பகுதியாய் இரண்டு வாரங்களுக்குப் போடட்டுமா என்று கேட்டார். 'வேண்டாம், ஸ்ரீராம்! கதையின் கன்டினியூட்டி ஆர்வம் வாசிப்பவர்களுக்கு சிதைந்து விடும். வேண்டாம். நீளமாக இருந்தாலும் ஒரே வாசிப்பில் முடித்தால் தான் கடைசிப் பகுதியின் தொடர்பு இணைந்து வரும்' என்று நான் தான் மறுத்து விட்டேன்.

      நீக்கு
  25. //முன்னர் நான் எழுதிய "மார்ட்டின் வாத்யார்" கதையைப் பகிர்ந்தேன்.

    இன்று ஜீவி ஸார் எழுதிய கதை.///

    ஶ்ரீராம், இந்த வரிகள் குழப்பமாக இருக்கெனக்கு. இதில் ஶ்ரீராமின் கதையும் உள்ளதோ மேலே???

    பதிலளிநீக்கு
  26. இவையெல்லாமே மனித உணர்வுகளுக்கு சம்பந்தப்பட்டவை ஆதலால் ஆளாளுக்கு மாறுபடுகின்றன. மனோவியலை ஒரு சயின்ஸாக பாடம் கற்ற சகோ தி.கீதா சட்டென்று கதாபாத்திரங்களோடு ஒன்ற முடிந்தது இதனால் தான்.

    எதை வாசித்தாலும் அதோடு ஒன்ற முடியாமல் விமர்சன கண்ணோட்டத்துடன் வாசிப்பதை அணுகுவதால் ஜெஸி ஸாருக்கு வாசிப்பு என்பது வெறும் வாசிப்பாகவே அமைந்து அதை அனுபவிக்க முடிதாமல் செய்து விடுகிறது. வாசிப்பு விஷயங்களின் உணர்வுகளில் சிக்கினால் அவரும் கதைகள் எழுதத் தொடங்கி விடுவார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​என்னுடைய பின்னூட்டம் பற்றி ஜீவி அய்யாவின் கருத்துக்களை ஏற்றுக்கொள்கிறேன். இந்த போக்கிற்கு காரணம் என்னுடைய 37 வருட அலுவலக வேலை. என்னுடைய தொழில் குற்றங்களைக் காண்பது என்றாகி விட்டது..... Software debugging and quality assurance. தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பது போல் வாசிப்பு என்றவுடன் செல்லும் இத்தகைய மனவோட்டங்களை தவிர்க்க இயலவில்லை. மன்னிக்கவும்.

      Jayakumar

      நீக்கு
    2. மன்னிக்க ஒன்றுமில்லை, ஐயா. வாழ்க்கையின் போக்கில் எல்லாமே நம்மில் படியும் வார்ப்புகள் தாம். இந்தக் கதையில் வரும் தோழர் விருத்தகிரி அவர்களுடன் என் இளம் பருவத்தில் குன்னூரில் பணியாற்றிய போது பழகியிருக்கிறேன். கடுகடுப்பாக இருப்பது போல தோற்றம் கொண்டாலும் வாத்ஸல்யம் மனம் பூராவும் மண்டிக் கிடக்கும் பெரியவர் அவர். ஹோட்டல் தொழிலாளர் நல சட்டங்கள் என்பது நிஜமாலுமே அவர் எழுதிய புத்தகத்தின் பெயர். சென்னையிலிருந்து வெளிவந்த மார்க்சீய ஒளி என்ற இதழின் ஆசிரியராகவும் அவர் இருந்தார்.

      நீக்கு
  27. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  28. ஜீவி சார் எழுதி பரிசு பெற்ற கதை நன்றாக இருக்கிறது.
    அந்த காலத்தில் அரசாங்க உத்தியோகம் மிகவும் பெரிதாக பேசபட்ட காலம். ஓட்டல் அமைப்பு , அங்கு எழுத பட்டு இருக்கும் வாசகங்கள் எல்லாம் பழைய காலத்து நடைமுறைதான்.

    விவசாய சங்கச் செயலாளர் சண்முகசுந்தரம் ஓட்டலில் நடந்து கொண்ட முறை அவரின் பெருமை தெரியாமல் ஓட்டலில் சர்வர் நடந்து கொண்ட முறை எல்லாம்.

    //நியாயமான சில விஷயங்கள் நடக்கறத்துக்குக் கூட எவ்வளவு முரட்டுத்தனமான நடைமுறைகள் வேண்டியிருக்கு'ன்னு நெனைச்சிக்கறேன்.//

    பணிவு தேவையில்லை, அதிகார தோரணை இருந்தால் நல்லது என்றும் நினைப்பது.

    அலுவலகத்தில் காப்பி கொண்டு வரவா என்று கேட்ட போது காலை ஓட்டலில் சந்தித்த தியாகியின் நினைப்பு வந்து புன்னகை புரிய வைப்பது .

    கதையில் நிறைய விஷயங்களை சொல்கிறார்.

    அலுவலகத்தில் வணக்கம் சொல்லும் முறை, காலை எழுந்ததும் பத்திரிக்கை வாசிக்கும் பழக்கம் .
    அலுவலகத்தில் சாப்பாட்டு அறையில் திரைவிமர்சனம், அதில் தன் கருத்தை அடித்து சொல்வது, அங்கு இருக்கும் பெண்களிடம் கேள்வி கேட்பது , ஒரு பெண் தன் அம்மாவை நினைத்து கண்ணீர் விடுவது என்று கதையில் நிறைய சொல்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகச் சிறந்த எழுத்தாளர் உஷா சுப்பிரமணியம் அவர்கள் (இவரது
      'மனிதன் தீவல்ல' நாவல் வாசித்திருக்கிறீர்களோ?) இந்தக் கதையை எடுத்துக் கொண்டு அவர் ரசித்த இடங்களைச் சுட்டிக்
      காட்டிப் பேசினார். 'இந்த நியாயமான விஷயங்களை சாதிப்பதற்குக் கூட' அவர் ரசித்துக் குறிப்பிட்ட இடங்க்களில் ஒன்று.

      நீக்கு
  29. வணக்கம் சகோதரரே

    கொஞ்சம் வாயில்லா பூச்சியாக (வாழ்வில் எதையுமே அனுசரிப்பவர்களுக்கு அப்படி ஒரு பெயர் உண்டே...! ) இருந்து விட்டால், அவர்களை பார்த்ததுமே அவர்களின் அகத்திலுள்ள குணம் முகத்தில் தெரிந்து விடும் எனபதற்கு அந்த காஃபி அருந்தும் சம்பவங்கள் உதாரணம். அவர் (எதிரில் வந்தமர்ந்தவர்) மட்டும் சற்று அதிகாரமாக கேட்டிருந்தால், அவருக்கும் நல்ல ஸ்டாராங்கான காஃபி கிடைத்திருக்கும் என பிறகு கதையின் நாயகர் அதை நினைத்து யோசிப்பது நல்ல இடம்.

    அது போலவே இவரும் சிறுவயதில் தன் தாயின் பேச்சுக்கு கட்டுப்பட்டு வளர்ந்தனால்தான், தன் குணத்தை மணமான பிறகும் மாற்றிக் கொள்ள இயலவில்லை என்பதை தன்னைத்தானே உணர்ந்தறிந்து விமர்சித்துக் கொள்ளும் போது அதை நம்மாலும் உணர முடிகிறது. இப்படி வாழ்வின் யதாரத்தங்களை விவரிக்கும் விதமான வார்த்தைகளை ரசித்தேன். சிறு கதை போட்டியில் இக்கதைபரிசு பெற்றதற்கு என் மனப்பூர்வமான வாழ்த்துகள் சகோதரரே. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்வின் யதார்த்தங்கள்! லஷ்மண ரேகா மாதிரி! மனத்திற்குள்
      கோடு போட்டுக் கொண்டால் தாண்டி வருவதற்குள் ஆயிரம் யோசனைகள் வந்து அமுக்கி விடும். வாழ்த்துக்கு நன்றி, சகோ.

      நீக்கு
  30. அலுவலகம் வேலை முடிந்ததும் , மனைவி வெண்ணை வாங்கி வர சொன்னது , என்ன விலை விற்றாலும் "நெய்யில்லா உணவு பாழ்"
    நெய் சாப்பிட வேண்டிய அவசியம்.நண்பரின் உயர்வு அவர் இஷ்டபட்ட வாழ்வுக்கு அம்மாவின் ஆசீர்வாதம் ஒரு காரணம்

    அம்மாவின் நினைப்பு அவர்கள் சொன்ன நல்ல விஷயம் நினைவுக்கு வருவது எல்லாம் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  31. //சாதாரணமா மற்றவர்கள் நெனைக்கற ஒண்ணை நுணுகி நுணுகி ஆயிரம் கோணங்களிலே பார்த்து அதை பத்தி அவங்க மத்திலே ஒரு பிரமையை ஏற்படுத்திடுவேன். இப்பேர்ப்பட்ட கல்யாண குணங்களையே 'நானா'கக் கொண்டிருக்கிற நான்---//

    தன்னை அறிதல் முக்கியம் .

    தாயிடம் தன் விருப்பங்களை சொல்லமுடியாமல் போய் விட்டது, இப்போது மனைவியிடமும் மந்தில் நினைத்ததை சொல்லமுடியவில்லை. தன்னை போலவே தன் மகனும் இருக்க வேண்டி இருக்கிறதே! என்ற மன தவிப்பும் தெரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா.. அருமை. எத்தனை கோணங்க்கள் எத்தனை பார்வைகள்!

      நீக்கு
  32. வாசித்தவர்கள் மேலோட்டமாகக் கவனிக்காத எழுதுதல் சம்பந்தமான ஒன்றை அவர்களுக்குக்கும் உதவலாம் என்ற கோணத்தில் குறிப்பிடத் தோன்றுகிறது.
    என் எழுத்து ஆசான்களில் முக்கியமான ஒருவர் குமுதம் ஆசிரியர் திரு. எஸ்,ஏ.பி. அவர்கள். அவர் எழுதும் முறைகளைகளில் பல புதுமைகளைச் செய்ய வேண்டும் என்ற ஆவல் கொண்டவர். 'ஓவியம்' என்ற பெயரில் நாவலொன்று குமுதத்தில் எழுதியிருந்தார், அந்த நாவல் முழுக்க முழுக்க நிகழ்கால நடையில் எழுதப்பட்ட ஒன்று.
    இந்தச் சிறுகதையும் அப்படித்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மற்ற ஏதாவது கதைகளோடு ஒப்பிட்டு 'நிகழ்கால நடை' என்பதை விளக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

      நீக்கு
    2. அபுரி.. மற்ற கதைகள் என்றால்?..

      நீக்கு
    3. ​டைரிக்குறிப்பு போல கதை எழுதுவதா? இன்று இந்த இந்த காரியங்கள் நடைபெற்றன என்று பட்டியலிட்டு கதையை நகர்த்தும் முறை ?

      Jayakumar

      நீக்கு
    4. கதைகளின் விதவித சொல்லும் விதங்கள் பிரமிக்கவைப்பவை.
      எதையும் தெரிந்து கொள்ள ஆர்வம் இல்லாதவர்களுக்கு கண்டதே காட்சி கொண்டதே கோலமாகத் தான் இருக்கும்.

      நீக்கு
  33. ஸ்ரீராம்,
    இந்தச் சிறுகதையை பரிசுக்கான கதையாகத் தேர்ந்தெடுத்து வெளியிட்ட பெரியவர் இராய, செல்லப்பா அவர்கள் கொடுத்தக் குறிப்பின் படி "அன்னை ஸ்வர்ணாம்பாள் நினைவு சிறுகதைப் போட்டி - 2024 இல் முதற் பரிசு பெற்ற கதை" என்ற குறிப்பை தலைப்புப் பகுதியில் குறிப்பிட்டு விடுங்கள்.

    இது குறித்து பெரியவர் செல்லப்பா ஸாரின் குறிப்பை வாட்ஸாப் மூலம் தங்களுக்கு அனுப்பியிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  34. இந்தக் கதை வாசிப்பை அனுபவித்துப் பாராட்டிக் கருத்தைப் பதிந்த அன்பு உள்ளங்களுக்கு அனைவருக்கும் நன்றி. தனித்தனியாக தங்கள் சம்பந்தப்பட்ட பின்னூட்டங்களில் என் நன்றியைத் தெரித்ததாக கொள்ள வேண்டுகிறேன்.
    அன்புடன்,
    ஜீவி

    பதிலளிநீக்கு
  35. முன் குறிப்பிலுள்ள 19 எண் எதைக் குறிக்கிறது?

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!