25.4.26

வாரம் ஒரு பாசுரம் தொடர் பகுதி 17 - நான் படிச்ச கதை

 

 நாலாயிர திவ்யப் பிரபந்தம் – வாரம் ஒரு பாசுரம் தொடர்

நெல்லைத் தமிழன்

குரு பரம்பரை மற்றும் பாசுரம் – பகுதி 17

 

ஆளவந்தார், காஞ்சீபுரம் பேரருளாளன் கோயிலில் இளையாழ்வாரை தூரத்திலிருந்து பார்த்து கண்ணால் கடாக்ஷித்ததைச் சென்ற வாரம் பார்த்தோம். அப்போது, திருக்கச்சி நம்பியிடம் அவர், ‘ஆம் முதல்வன் இவன்’ என்று இளையாழ்வாரைக் காட்டிக்கொடுத்தார். அதன் பிறகு பேருளாளனிடம் இளையாழ்வாரை வைணவ தரிசனத்திற்குத் தந்தருளவேண்டும் என்று பிரார்த்தித்துக்கொண்டு திருவரங்கம் திரும்பினார் என்று பார்த்தோம். 

ஏற்கனவே பல நேரங்களில் இளையாழ்வாரின் சிறப்புகளைப் பார்த்த யாதவப்பிரகாசர், அவருடைய பெருமையை இன்னொரு சம்பவத்தில் அறிந்துகொண்டார்.  அந்தச் சம்பவம் இன்று. 

காஞ்சீபுரம் கோயிலில் மற்றும் திருப்புட்குழியில் தன் மாணவர்களுக்குக் கல்வி பயிற்றுவித்துக்கொண்டிருந்தார் யாதவப்பிரகாசர். அப்போது, அந்த ஊர் மன்னனின் மகளுக்கு பிரம்மராக்ஷஸ் பீடித்திருந்த து. (இந்த மன்னன் பாண்டிய மன்னன் என்று குறிப்பிடுகிறார்கள். யார் என்று தெரியவில்லை.)  ராஜாவும் அரண்மனை மந்திரவாதிகளைக் கொண்டு அதன் பிடியைப் போக்க முயன்றான். காரியம் வெற்றியடையாததைக் கண்டு, வருத்தமுற்று, காஞ்சீபுரத்தில் இருக்கும் யாதவப் பிரகாசர் என்பவருக்கு மந்திர தந்திரங்களில் பயிற்சி உண்டு என்பதை அறிந்து, தன்னுடைய ஆட்களை அவரிடம் அனுப்பி, மகளுக்கு இருக்கும் பிரச்சனையைச் சொல்லச் செய்தான். ராஜாவிடமிருந்து தனக்கு இந்த விஷயமாக ஆட்கள் வந்திருக்கிறார்கள் என்ற பெருமையில், அவர்களிடம், ‘யாதவப் பிரகாசன் சொன்னான், உடனே இளவரசியை விட்டுச் செல்வாயாக’ என்று அந்த பிரம்மராக்ஷஸ்ஸிடம் போய்ச் சொல்லுங்கள் என்றார். அவர்களும் உடனேயே அரண்மனைக்குத் திரும்பி, அந்த பிரம்மராக்ஷஸிடம் யாதவப் பிரகாசர் சொன்னதைச் சொன்னார்கள். அதற்கு அந்த பிரம்மராக்ஷஸ் சிரித்து, ‘அவனையே அங்கிருந்து நான் போகச் சொன்னேன் என்று சொல்லுங்கள் என்று திருப்பிச் சொன்னது (அதாவது அதனால் பீடிக்கப்பட்ட இளவரசி மூலமாகச் சொன்னது)  இதனை ராஜா உடனே யாதவப் பிரகாசரிடம் தெரிவிக்கச் செய்தான். 

இதைக் கேள்விப்பட்டதும் கோபடமடைந்த யாதவப் பிரகாசர், தன்னுடைய சிஷ்யர்களைக் கூட்டிக்கொண்டு ராஜாவின் இடத்துக்கே சென்றார். அங்கு மஹாமந்திரங்களை ஜபித்துக்கொண்டு தன்னுடைய முஷ்டியை ராஜாவின் மகளின் முன்பு நீட்டினார். 

பிரம்மராக்ஷஸ் தன் மடக்கின காலை முன்னே நீட்டி, “யாதவப் பிரகாசா… வா வா.. நீயா என்னை மீட்க வந்தாய்? நீ இந்த மந்திரத்தை அன்றோ ஜெபித்தாய். அது எனக்கு வராது என்று நினைத்தாயா? எனக்கு மந்திரங்களெல்லாம் தெரியாது என்று நினைத்தாயா? நீ ஜபித்த மந்திரத்தை நான் சொல்கிறேன் கேள்” என்று சொல்லி அந்த மந்திரங்களைச் சொன்னது. நான் உனக்கு அடங்கிப் போவேன் என்று நினைத்தாயா? உனக்கு உன் பிறப்பும் தெரியாது, என் பிறப்பும் தெரியாது என்று கூறியது. யாதவப் பிரகாசரும், "பிரம்மராக்ஷஸே, உனக்கு எல்லாம் தெரியுமென்றால் உன்னுடைய முற்பிறவியைப் பற்றியும் என்னுடைய முற்பிறவியைப் பற்றியும் சொல்லேன்" என்று சொன்னார். அதற்கு அந்த பிரம்மராக்ஷஸ், 

"இதற்கு முந்தைய பன்னிரண்டாம் பிறவியில் நீ ‘கங்கைக்கரை கண்டம்’ என்ற திருப்பதியிலே பெருமாள் கோயிலில் ஒரு கீரிப்பிள்ளையாகத் திரிந்துகொண்டிருந்தாய். அப்போது அந்தக் கீரிக்கு வேடன் ஒருவனால் ஆபத்து வரும்போது, அங்கு இருந்த பரம ஏகாந்தி ஒருவரின் திருக்கை ஸ்பரிசம் கிடைக்கப் பெற்றாய்.  பின்பு மதுராந்தகத்தின் ஏரிக்கரையில் இருந்த புற்றில் உடும்பாகப் பிறந்தாய். அப்படி இருக்கும் சமயத்தில், திருப்பதிக்கு யாத்திரையாக பெரும் ஸ்ரீவைணவர்கள் கூட்டம் செல்லும்போது அந்த ஏரிக் கரையில் அவர்கள் நீராடி, உணவு சமைத்து பெருமாளுக்கு ஆராதனம் செய்து சாப்பிட்டபோது, அவர்கள் இலையிலிருந்து சிந்திய மிச்ச பிரசாதத்தை நீ உண்டாய். அதுமாத்திரமன்றி, அவர்கள் பாதம் பட்ட தீர்த்தத்தையும் நீ அருந்தினாய். அதன் பலனாக புண்ணியமான பிராம்மண குலத்தில் பிறந்து யாதவப் பிரகாசன் என்று பெரிய வித்வானாகவும் விளங்குகிறாய்" என்று கூறியது. 

இதற்கான சாஸ்திரப் பிரமாணங்களையும் கூறிய பிரம்மராக்ஷஸ், தன்னைப் பற்றிக் கூறும்போது, தான் முற்பிறவியில் பிராம்மண குலத்தில் பிறந்து, மந்திரப் பிரயோகம் மற்றும் அதற்கான முறைகளின்போது ஏற்பட்ட பல்வேறு தவறுகளின் காரணமாக பிரம்மராக்ஷஸ் வடிவம் எடுத்துத் திரிகிறேன் என்றது. 

ராஜாவின் மகளைப் பார்த்து பிரம்மராக்ஷஸிடம் பேசியபோது யாதவப் பிரகாசரும் அவருடைய சீடர்களும் உடன் இருந்தனர். 

இதைக்கேட்ட யாதவப் பிரகாசர், "உன்னை எப்படி ராஜாவின் மகளிடமிருந்து வெளியேற்றுவது?" என்று கேட்க, "இதோ உங்கள் கூட்டத்தில் இருக்கிறாரே அவதாரமான இளையாழ்வார். அவர் சொன்னால் போகிறேன்" என்றது. 

இளையாழ்வாரும், பிரம்மராக்ஷஸைப் பார்த்து, "நீ எங்கே வசிக்கிறாய்" என்று கேட்க, நான் எப்போதும் இங்குள்ள அரசமரத்தில் இருப்பேன் என்றது. "அப்படியென்றால் இந்தப் பெண்ணை விட்டு நீ நிரந்தரமாகப் போய்விட்டாய் என்று எப்படித் தெரிந்துகொள்வது?" என்று கேட்க,  "நான் போகும்போது இந்த அரசமரத்தின் கிளை முறிந்துவிழும். ஆனால் தங்களுடைய திருவடித்தாமரை என் தலையில் பட்டால் ஒழிய நான் நீங்கமாட்டேன்" என்றது. உடனே இளையாழ்வாரும் முகம் மலர்ந்து தன் திருவடித்தாமரைகளை (பாதங்களை) பிரம்மராக்ஷஸின் தலையில் வைக்க (அதாவது ராஜாவின் மகளின் தலையில் வைக்க) பிரம்மராக்ஷஸ் அவளை விட்டு நீங்கியது. அதற்கு அடையாளமாக அருகிருந்த அரசமரத்தின் கிளை முறிந்து விழுந்தது. 

யாதவப் பிரகாசரும் அதனைக் கண்டு ஆச்சர்யம் கொண்டு, "இளையாழ்வீர்.. உமக்கு எல்லாம் தெரிகின்றதே" என்று பாராட்டி எல்லோருடனும் தன்னுடைய மடத்துக்குப் போய்ச் சேர்ந்தார். 

இப்படி நடந்துகொண்டிருந்த போது, திருவரங்கத்தில் ஆளவந்தாரும் பெரிய கோயிலில் திருவாய்மொழிக்கு விளக்கவுரை அருளிச் செய்துகொண்டிருந்த சமயத்தில், திருவாய்மொழி 4ம் பத்து, பத்தாம் பதிகத்திற்கு பொருள் விளக்கம் சொல்ல ஆரம்பிக்க, நமக்குப் பின்பு, இந்த தரிசனத்தின் அர்த்தங்களை விவரித்து பொருள் கூறி, பலரையும் நல்வழிப்படுத்தும் தலைவரை இன்னும் பெற்றிலனே என்று வருத்தப்பட்டு, இளையாழ்வாரை, யாதவப் பிரகாசருடனான உறவை அறுத்து நம் வைணவ குலத்தோடு சேர்ப்பார் உண்டோ என்று மனதில் விசனப்பட்டார். அப்படியே காஞ்சி பேரருளாளரை நினைத்துப் பிரார்த்தித்துக்கொண்டார்.

இன்றைய பாசுரம், அதுதான்.

##இலிங்கத் திட்ட புராணத்தீரும்* சமணரும் சாக்கியரும்*

வலிந்து வாது செய்வீர்களும்*  மற்றுநுந் தெய்வமும் ஆகிநின்றான்*

மலிந்து செந்நெல் கவரி  வீசும்* திருக்குருகூர் அதனுள்,*

பொலிந்து நின்றபிரான் கண்டீர்* ஒன்றும் பொய்யில்லை போற்றுமினே

இந்தப் பத்துப் பாசுரங்களில் திருக்குருகூர் என்று சொல்லப்படும் ஆழ்வார் திருநகரியில் கோயில் கொண்டுள்ள பெருமானைப் பற்றிப் பாடுகிறார் நம்மாழ்வார் (அவர் அந்த ஊரில் கோயிலின் அருகில் இருந்த திருப் புளியமரத்தின் அடியில் இருந்துதான் பாசுரங்களை இயற்றினார் என்றும் அவற்றை பட்டோலைப் படுத்தியவர் மதுரகவியாழ்வார் என்றும் முன்பே பார்த்தோம்) 

பொருள்: சிவபெருமானை ஏற்றிச் சொல்லும் இலிங்க புராணத்தைப் பின்பற்றுபவர்களும், சமண மதத்தைப் பின்பற்றுபவர்களும், பௌத்த மதத்தைப் பின்பற்றுவர்களும், தங்கள் மதமே உயர்ந்தது என்று வீண் வாதம் செய்கின்றார்கள். அவர்கள் வணங்கும் அந்தத் தெய்வங்களாகவும், அந்தத் தெய்வங்களுக்குள்ளே உறைந்து நின்று அருள் புரியும் பரம்பொருளும், செந்நெற்கதிர்கள் சாமரம் வீசுவதுபோன்ற வயல்கள் நிறைந்த திருக்குருகூரில் எழுந்தருளியிருக்கும் பொலிந்து நின்ற பிரான் என்ற பெயருடைய அந்த ஆதிநாதனே. இது சத்தியம்.

இதன் சுருக்கமான பொருள், பல்வேறு சமயங்களைப் பின்பற்றுபவர்களே, நீங்கள் வணங்குகின்ற அந்தத் தெய்வங்களாகவும், அவற்றின் உள்ளுறைபவனாகவும் இருப்பவன் நாராயணனே என்பது. 

எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான பரிபாடலில் திருமால் என்ற தலைப்பின்கீழ் வரும் பாடலில், 

பணிவில் சீர்ச்

செல்லிடைப் பாகன் திரிபுரம் செற்றுழி

கல்லுயர் சென்னி இமயவில் நாணாகித்

தொல்புகழ் தந்தாரும் தாம்   

என்று வருகிறது. அதற்கான உரையில், 

அளவிடமுடியாத பெருமையும் எருது வாகனத்தையும் உடைய சிவபெருமான் முப்புரங்களையும் அழித்தபோது, உயர்ந்த சிகரங்களுடைய இமயமலையை வில்லாக வளைத்தபோது அந்த வில்லுக்கு நாணாக இருந்து சிவபெருமானுக்கு ‘திருபுராந்தகன்’ என்ற அழியாப் பெருமையை அடையச் செய்தவர் திருமாலே ஆவார் என்று குறிப்பிடுகிறார். (அதாவது தெய்வங்களுக்குள் அந்தர்யாமியாக, உள்ளுறைபவனாக இருந்து காரியங்களை நடத்துவது அந்த நாராயணனே என்று பொருள்) 

இதைப் பற்றி மேலும் நிறைய வேத உதாரணங்களுடன் எழுதுவது படிப்பதற்குச் சோர்வை ஏற்படுத்தும் என்பதால் அவற்றை இங்கு எழுதவில்லை. 

இளையாழ்வார் திருப்புட்குழி விஜயராகவப் பெருமாள் கோயில் வெளிச்சுற்று மண்டபத்தில் யாதவப் பிரகாசரிடம் பாடம் கேட்டார். இந்தக் கோயில், ராமர் ஜடாயுவிற்கு ஈமக் கிரியைகள் செய்த இடமாகக் கருதப்படும் தலம். வைணவ திவ்யதேசத்தில் ஒன்று. இங்கு விஜயராகவப் பெருமாள் ஜடாயுவைத் தன் தொடைமீது அமர்த்திய கோலத்தில் காட்சி தருகிறார்.

அந்த திருப்புட்குழி கோயிலில் உள்ள மண்டபத்தில்தான் இளையாழ்வார் யாதவப் பிரகாசரிடம் கல்வி பயின்றார் என்பதற்காக அங்கு எழுதப்பட்டிருந்த அறிவிப்பு.

திருப்புட்குழியில் யாதவப் பிரகாசரிடம் இளையாழ்வார் கல்வி பயின்றார் என்று சொல்லியிருந்தேன். திருப்புட்குழி கோயிலில், அவர் கல்வி பயின்ற மண்டபம். தற்போது அங்கு கோயில் சம்பந்தமான பெட்டிகளை வைத்திருக்கிறார்கள். முந்தைய படத்தில் அங்கு வைத்திருக்கும் அறிவிப்பு நன்றாகத் தெரியும்.

திருப்புட்குழி விஜயராகவப் பெருமாள். வறுத்த பயிரை முளைக்க வைக்கும் தாயார். 

அடுத்த வாரம் தொடர்வோமா?...

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


நான் படிச்ச கதை

தோடி

கதையாசிரியர்: எஸ்.வி.விஜயராகவாச்சாரி (1880-1950)

எஸ். வி. வி.

தந்தியைப் படித்ததும் எனக்குப் பிரமை தட்டிப் போய் விட்டது. போன மாதம் தானே இங்கு வந்து விட்டுப் போனார்? நன்றாக இருந்தாரே அப்போது.

‘ஆவுடையப்ப பிள்ளைக்கு உடம்பு மோசமாகி விட்டது. உங்களைப் பார்க்க விரும்புகிறார்’ என்று அவர் மைத்துனர் அடித்திருந்த தந்தி அது. அதன் வாசகம் என் நெஞ்சத்தைக் குத்திக் குதறியது. கைகால்களெல்லாம் பதற ஆரம்பித்துவிட்டன எனக்கு,

எப்படியோ ரயிலேறினேன். மனத்தின் பதைபதைப்பு இன்னமும் அடங்காத நிலையில் பெஞ்சில் உட்கார மாட்டாமல் நிற்கவும் முடியாமல் நான் தவித்தேன்.

பிள்ளைக்கும் எனக்கும் இன்று நேற்றைய சிநேகிதமா? முப்பது வருஷங்களுக்கு முன்னால் மீனாட்சிபுரத்தில் கிராம முன்சீப்பின் புது வீட்டுக் கிருஹப் பிரவேசத்தன்று அவர் எனக்குப் பரிச்சயமானார். சங்கீதத்தில் நான் கொஞ்சம் பற்றுள்ளவன். அன்று அவருடய தவில் வாசிப்பு என்னைப் பிரமிக்கச் செய்து விட்டது. அதற்குப் பிறகு எங்கள் வீட்டில் எந்தக் கல்யாணமானாலும் சரி, எங்கிருந்தாலும் சரி அவர் வந்து வாசிக்காமல் போவதில்லை. அவ்வளவு பரஸ்பர ஈடுபாடு ஏற்பட்டிருந்தது எங்களுக்குள்.

அவரிடம் ஏதோ சத்தியத்துக்குக் கட்டுப்பட்டது போல நடந்து கொண்டது தாளம். சொற்கட்டுகளை அவர் கையாளும் லாவகமே அலாதிதான். தவிர குணத்திலும் மனுஷன் நிறைகுடம்! லயமும் நாதமும் அவருக்கு மூச்சுக் காற்று மாதிரி!

அப்பேர்ப்பட்டவர் அபாயத்தில் இருக்கிறாரா? சங்கீதத்தின் அதிதேவதையே ஸ்வரமயமான தன் தூதர்களை அனுப்பி அவரை ஆட்கொள்ள ஆசைப்படுகிறதோ?

மீனாட்சிபுரத்தில் அவர் வீட்டில் ;போய் உடனே குதித்து விடமாட்டோமா என்ற தவிப்புத் தான் எனக்கு உண்டாயிற்று. ஆனால் ரயில் என்னமோ மெதுவாகத்தான் போயிற்று.

திடீரென்று வேறொன்று என் நினைவுக்கு வந்தது. தங்கரத்தினம் இந்தச் சமயம் அங்கு வந்திருப்பானா? அவன் ஏன் வரப் போகிறான், தத்தாரிப் பயல்! தன்னை ஆதரவுடன் வளர்த்து, சங்கீதம் கற்றுக் கொடுத்த பெரியவரின் மனத்தை முறித்துக் கொண்டு ஓடிப் போன உதவாக்கரை தானே அவன்?

அவன் ஆவுடையப்ப பிள்ளைக்கு தூரத்து உறவு. இசையில் அவனுக்கு ஆர்வம் இருப்பதைக் கண்டு ஆசையுடன் அவனுக்கு நாயனம் கற்றுக் கொடுத்தார் பிள்ளை.

தங்கரத்தினம் துடியான பையன். சீக்கிரத்திலேயே அபாரமாக வாசிக்க வந்துவிட்டது அவனுக்கு. பிள்ளைக்கே ஆச்சரியந்தான். கொஞ்ச நாளைக்கெல்லாம் தாம் போகும் இடங்களுக்கெல்லாம் அவனையும் அழைத்துப் போனார் பிள்ளை. பெயரும் புகழும் அவனைத் தேடி வந்தன.

“முதலியார்வாள்! என் கண்ணே பட்டுடுமோன்னு எனக்குச் சந்தேகமாயிருக்கு. தம்பி வாத்தியத்தை எடுத்து ஊதினா நான் கூட தவுலை மறந்துட்டுக் கேட்டுக் கிட்டே நிப்பேன். அவ்வளவு அற்புதமா வாசிக்குது அது!” என்று பிள்ளை ஒரு முறை சொல்லிப் பெருமைப்பட்டுக் கொண்டார் என்னிடம்.

“கேட்க வேண்டுமா பிள்ளைவாள்! நீங்கள் வைத்த பயிர் தானே அது? அதுதான் அமோகமாக இருக்கிறது விளைச்சல்!” என்றேன் நான் புன்சிரிப்புடன்.

“அதெல்லாம் நம்மாலாகிறது ஒண்ணுமே இல்லீங்க! பையனுக்குப் பூர்வ ஜென்ம சுகிர்த பலம் இருக்குது. எப்பவோ விட்ட குறை. இப்போ நான் லேசாகத் தொட்டதும் ஊத்து மாதிரி பீறிட்டுக் கிட்டுக் கிளம்புது. என்ன ஞானம்? சங்கதிகளும், பிடிகளும் விழுகிற அநாயாசம் தான் என்ன? எனக்கே பிரமிப்பாகத்தானுங்க இருக்குது. தம்பி தோடி வாசிச்சு நீங்க கேட்டதில்லையே?”

“அந்த ராகம் எனக்கு ரொம்ப பிடித்தமானது. ஏன்? தம்பி நன்றாக வாசிக்குமா?”

“வாசிக்குமாவது! அது கிட்ட தோடி அவ்வளவு குளுமையா இருக்கும் தெரியுமா? ஆகா! மனசு அப்படியே மெழுகு மாதிரி உருகும். அதைக் கேட்டுக் கண்ணில தண்ணி தளும்பும். சோறு தண்ணியைக் கூட மறந்துட்டு கேக்க வைக்கும்!” என்றார்.

சில வருடங்களுக்குள்ளாகவே பிள்ளையின் சிஷ்யன் ‘தோடி தங்கரத்தினமென்று’ பெயர் வாங்கி விட்டான். ஆனால் எனக்கென்னவோ துரதிருஷ்டவசமாக இவனுடைய ஒரு கச்சேரியையாவது ஆற அமர இருந்து கேட்கக் கொடுத்து வைக்கவில்லை.


போன வருஷம் ஒரு நாள் மீனாட்சியம்மன கோவில் சந்நிதியில் நான் ஆவுடையப்ப பிள்ளையை சந்தித்தேன். மிகவும் இளைத்துப் போயிருந்தார் அவர்.

“தம்பி சௌக்யமா இருக்கிறதா?” என்று தான் நான் முதலில் கேட்டேன். ஆனால் ஏனோ சட்டென்று பிள்ளையின் முகம் விகாரமடைந்தது. எனக்கு ஒன்றும் புரியவில்லை.

“என்ன பிள்ளைவாள்! என்ன விஷயம்? ஏன் ஒரு மாதிரியாகி விட்டீர்கள்?” என்றேன் பரபரப்புடன்.

“அதை ஏன் கேக்கறிங்க முதலியார்வாள்! எந்தப் பாவியின் கண்ணோ பட்டுப் போச்சு!”

“பிள்ளைவாள்! கொஞ்சம் விவரமாகத்தான் சொல்லுங்களேன்!”

“கொஞ்சம் ஒதுக்குப்புறமாகப் போவோம் வாங்க!” என்றார் பிள்ளைவாள்.

ஆடி வீதியில் வைரத் தூணருகில் இருவரும் உட்காந்தோம். “தம்பி இப்ப என் கூட இல்லை. உங்களுக்குத் தெரியுமோ?” என்றார் பிள்ளை சோகம் தோய்ந்த குரலில்.

“பின்னே?”

“மரகதவடிவு கிட்டே இருக்குது அது!”

நான் திடுக்கிட்டுப் போனேன். “மரகதவடிவா? அவளிடம் எப்படிப் போய்ச் சிக்கிக்கொண்டான் தங்கரத்தினம்?”

பிள்ளை அந்தக் கதையைச் சொல்ல ஆரம்பித்தார்.

“போன விசாகத்தும் போது திருச்செந்தூரிலிருந்து தங்கரத்தினத்துக்கும் எனக்கும் அழைப்பு வந்திருந்தது. அன்னைக்கு ராத்திரி கோவில் வாசலிலே இருந்த பெரிய பந்தலிலே தம்பி வாசிக்கணுமின்னு ஏற்பாடு. பந்தல்லே நின்னு பார்த்தா, நேரே மூலஸ்தானத்திலே ஆறுமுகம் தரிசனம் கிடைக்கும். வாத்தியத்தை எடுத்து ஆண்டவன் முன்னிலையிலே வாசிச்சு நிறையப் பழக்கம் தம்பிக்கு. கச்சேரி பிரமாதமாக அமைஞ்சு போச்சுங்க! பிலஹரியிலே ‘ஸ்ரீ பாலசுப்ரமண்யா’ கீர்த்தனையை எடுத்து வெளுத்து வாங்கிருச்சி. ராப்பொழுதாயிருந்தாலும் ராகம் பிரமாதமா இருந்து ‘களை’ கட்டிப் போச்சு. எனக்கு ரொம்ப சந்தோஷம். “தம்பி! சூடா தோடியை எடுன்னேன்.” எதனாலோ தங்கரத்தினத்தின் உடம்பு நடுங்கிச்சு. “அண்ணாச்சி! இன்னைக்கு ஒருநாள் தோடி வேண்டாம். என் மனசு ஏனோ கலவரப்படுது” என்றது தம்பி. இதுக்குள்ளே ‘தோடி, தோடி ன்னு ஒண்ணு ரெண்டு குரல் கேட்டுது கும்பலிலேயிருந்து. “அடப்பைத்தியக்காரப் பிள்ளே! இங்க தான் நீ நல்லா வாசிச்சுப் பெயரெடுக்கணும், தைரியமா வாசி!” என்று சொன்னேன். தம்பிக்கு அரை மனசுதான். தயங்கியபடியே ஆரம்பிச்சுது. தைரியமில்லாம வாசிக்கிறாப்போலத் தோணுதே, ராகம் சரியா அமையணுமேன்னு உள்ளூர உதைப்பு எனக்கு.

“ஆனால் அது அன்னைக்கு வாசிச்ச வாசிப்பு! ஆகா! அப்படியே என் எலும்புக்குள்ள பாய்ஞ்சு பரவசப்பட வெச்சுது. முன்னேல்லாம் கேட்டத விட அருமையான அபூர்வமான பிடிங்களெல்லாம் வந்து விழுந்துச்சு. சமுத்திரம் கூட அலையடங்கிப் போய் மௌனமாகக் கேட்டுக் கிட்டு நின்னது போல எனக்கு ஒரு பிரமை! அப்படியே ஒரு கால் மணி நேரம் எல்லாரையும் எங்கேயோ வான லோகத்துக்கு அழைச்சுக்கிட்டுப் போயி வேடிக்கை காட்டிட்டு தம்பி மெதுவா பூமியில இறக்கிவிட்டது. உடனே படபடான்னு என்ன கைதட்டல் என்கிறீங்க? தம்பியை அப்படியே கட்டி அணைச்சுக்கிடணும் போல என் மனசு துடிச்சது. அதுக்கு வர பெருமை எனக்கு சந்தோஷம் இல்லையா?”

“தம்பி ராகத்தை முடிச்சுட்டு ஏதோ ஒரு பக்கம் ;பார்த்தது. அப்படியே அதன் கண்ணு ரெண்டும் நிலைகுத்திப் போனாப் போலே ஆயிருச்சு. என்ன விஷயம்னு நானும் அந்தப் பக்கம் திரும்பினேண்_. பளீர்னு மின்னலடிச்சாப் போல வடிவு அங்கே நின்னுக்கிட்டிருந்தா! லேசா ஒரு புன்சிரிப்புக் கூடச் சிரிச்ச மாதிரி இருந்தது தம்பியைப் பார்த்து. எனக்கு அப்பவே பகீர்னு ஆயிப் போச்சு!

“அப்புறம் அன்னைக்குக் கச்சேரி முடிகிற வரைக்கும் நான் வயித்தில நெருப்பைக் கட்டிக்கிட்டுத்தான் இருந்தேன். ஏன்னு கேட்டீங்கன்னா, வடிவைக் பத்தி நான் நெறையக் கேள்விப் படிடிருக்கேன். தம்பி என்ன தான் எனக்கு அடங்கினவனா இருந்தாலும் வயசுப் பிள்ளையாச்சே!

“கச்சேரி முடிஞ்சு தங்கியிருந்த வீட்டுக்குத் திரும்புபோது வெளி மண்டபத்திலேயே வடிவு காத்துக் கிட்டு ஒயிலா நிக்கிறதைப் பார்த்தேன். நாங்க நெருங்கினதும்` தைரியமா ரெண்டெட்டு முன்னால வச்சு தம்பி கிட்டே “தோடி ரொம்ப அழகாயிருந்துச்சு. நான் கேட்டு அப்படியே சொக்கிப்போயிட்டேன். அந்த ராகப்பிரஸ்தாரம் காதிலே இன்னமும் ரீங்கரிக்குது. அதை வாசிச்ச கையை இப்படிக் கொடுங்கன்னு” பவ்யமாப் பேசி, வலுவிலே தம்பியின் கைகளைப் பிடிச்சுத் தன் கண்ணிலே ஒத்திக்கிட்டா. எனக்கு ஏதோ நாடகம் பாக்குற மாதிரி இருந்திச்சு. வடிவின் கண் வீச்சுப்பட்டால் சும்மாவா? தம்பியை வீட்டுக்கு அழைத்து வர நான் பட்ட பாடு கொஞ்சநஞ்சம் இல்லை.

“ராத்திரி பூரவும் என்னவோ பைத்தியம் பிடிச்ச மாதிரி தான் இருந்தது தம்பி. தானே சரியாகப் போயிடுமின்னு நான் கொஞ்சம் கண் அசந்துட்டேன். காலையில் கண் விழிச்சா ‘தங்கரத்தினத்தைக் காணோம்’ ன்னு தவசுப் பிள்ளை சொன்னான் உடனேயே எனக்கு பொக்குனு போயிடுச்சு. அது எங்கே போயிருக்குமின்னு எனக்குத் தெரியாதா?

“ஆள் மூலம் நான் நயமாவும் பயமாவும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். அப்புறம் வெக்கம் மானத்தை விட்டு நானே போனேன் வடிவின் வீட்டு வாசலுக்கு. கெஞ்சினேன். அந்தப் பொண்ணு அசைஞ்சிருக்குமா? “அவங்க வந்தாக் கூட்டிக்கிட்டுப் போங்க!” என்கிறா. அவனோ நகர மாட்டேன்னுட்டான்.

“அன்னைக்கி கோவிலே வடிவைப் பாரத்ததுமே என் மனசிலே ஏதோ கிளுகிளுப்பு ஏற்பட்டது அண்ணாச்சி! முன்னே எப்போவோ ஒரு பிறவியிலே அதோடே ரொம்ப இணஞ்சு இருந்த மாதிரி ஒரு ஞாபகம் உண்டாச்சு. “தோடி எடு”ன்னு நீங்க சொன்னதும் சட்டுனு அவ நினைப்புதான் எனக்கு வந்துச்சு. உடனே மனசு நடுங்க ஆரம்பிச்சது. வாசிக்கத் தைரியமே இல்லை. உங்க பேச்சுக்குக் கட்டுப்பட்டு எங்கே கண்ணைத் திறந்தா வடிவு பேரிலே கவனம் போயிடுமோன்னு கண்ணு ரெண்டையும் இறுக மூடிக்கிட்டுத்தான் வாசிச்சேன். அந்த தோடி தான் வடிவு மனசை இளக்கிடுச்சு. எந்த ஜன்மத்திலேயோ சேர்ந்திருந்து பிரிஞ்சு போன எங்க ரெண்டு பேரையும் தோடி தான் பழையபடியே சேர்த்து வெச்சது போல என் மனசுக்குள்ளே ஏதோ சொல்லுது” இந்த மாதிரி ஏதேதோ உளறிக்கிட்டிருந்தான் தங்கரத்தினம். முடிவிலே, “நீ வரப் போறியா இல்லையா?”ன்னேன். “அண்ணாச்சி மன்னிச்சிடுங்க”ன்னு தலையைக் குனிஞ்சிக்கிட்டு கையைப் பிசைஞ்சான்.

அப்புறந்தான் நான் நிதானத்தை இழந்துட்டேன். கன்னா பின்னான்னு கத்தினேன். ஆத்திரத்திலே திட்டினேன். அவனை முகலோபனமே பண்ணமாட்டேன். அவன் வாத்தியம் என் காதிலே விழப்படாதுன்னெல்லாம் சபதம் வச்சிட்டு கோபத்தோடே ஊர் திரும்பிட்டேன். அன்னையிலிருந்து பிடிச்சுது அனர்த்தம். தம்பி அங்கேயே ஐக்கியமாயிட்டுது. இப்போ நினைச்சுப் பார்த்தா நான் அவ்வளவு தூரம் பொறுமை இழந்து போய்ப் பேசியிருக்கக்கூடதுன்னு தான் தோணுது. ஆனால் உயிராட்டம் ஒட்டிக்கிட்டிருந்தவனை அப்படிக் கணத்திலே அந்த மாய்மாலக்காரி இழுத்துக் கிட்டாங்கிறதை யோசனை பண்ணினாத்தான் எனக்கு ஆறவேயில்லீங்க முதலியார்வாள்!”

பிள்ளைவாளின் முகம் வெளிறிப் போய் கிடந்தது. நடந்ததைக் கேட்டு நானே கலங்கிப் போய் விட்டேன். பிள்ளைவாள் துரும்பாக இளைத்துப் போயிருந்ததன் காரணத்தை அப்போது தான் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. மீனாட்சியம்மன் கோவிலை விட்டு நாங்கள் அன்று கிளம்பும் போது நடுராத்திரிக்கு மேலேயே ஆகிவிட்டது.

திருநெல்வெலி ஜங்ஷன் ஒரு வழியாக வந்தது. பிள்ளையின் வீட்டில் நான் போய் இறங்கியபோது என் பாபரப்பு உச்சத்தில் இருந்தது. அங்கே ஹாலில் சுவரில் ஷண்முக பிள்ளையின் பெரிய படம் மாட்டியிருந்தது. தீபங்கள் எரிந்து கொண்டிருந்தன. ஒரு இடத்தில் கட்டிலில் ஓர் உருவம் கிடந்தது. ஆ! தவுல் ஆவுடையப்பப் பிள்ளையா அது?

“பிள்ளைவாள்!”

துடிதுடித்துப் போய் அவர் அருகில் நின்றேன். அந்த எலும்புக்கூட்டை அணைத்துக் கொண்டேன். முப்பது வருஷத்துப் பழக்கம், பாந்தவ்யம் என் கண்ணிலிருந்து கண்ணீராக வெளிப்பட்டது.

திணறித் திணறி மூச்சு விட்டுக் கொண்டே ஆவுடையப்ப பிள்ளை பேசினார், “முதலியார் வாள்! என் காரியம் அவ்வளவுதான்! இதோ முடிஞ்சு போயிடும் சீக்கிரமாவே. அதுக்கு முன்னே உங்களைப் பார்க்கணுமின்னு மனசு கெடந்து தவிச்சுது. அதான் தந்தி கொடுக்கச் சொன்னேன்.”

“மோசம் செய்து விட்டீர்களே, பிள்ளைவாள்! உடம்பு ஸ்திதி இவ்வளவு கேவலமாக ஆகும் வரையில் எனக்குத் தெரிவிக்காமல் இருந்து விட்டீர்களே! நான் இருந்து தான் என்ன பிரயோசனம்?”

“ஒங்க கிட்டே சொல்றதுக்கென்ன முதலியார்வாள்! தம்பியைப் பார்த்து ஒரு வருஷத்துக்கு மேலே ஆவுது. அதும் வாத்யத்தைக் கேட்டு லயிச்சுப் போகிற எனக்கு இந்த ஒரு வருஷமா அந்த பாக்கியம் கிட்டலே. அந்த வேதனை தான் இப்போ எனக்கு வியாதி!”

“அவ்வளவுதானே? ஒரு தந்தி கொடுத்து தங்கரத்தினத்தை வரவழைக்கட்டுமா?” அவரை தைரியப்படுத்த வேறொன்றும் சொல்ல எனக்குத் தெரியவில்லை.

“நீங்க எதுக்குங்க வீணா சிரமப்படுறிங்க? அது எங்கே வரப் போகுது. வடிவு விட்டு விடுவாளா?” என்றார் பிள்ளை ஹீனமான குரலில். ஆனால் அவனைப் பார்த்தால்தான் அவர் மனது நிம்மதியடையும் என்று நான் புரிந்து கொண்டு விட்டேன்.

“பிள்ளைவாள்! வருவது வரட்டும்! நானே இப்போது கிளம்பித் திருச்செந்தூருக்குப் போகிறேன். தம்பியைக் கையுடன் அழைத்து வருகிறேன்!”

என் துணிச்சலைக் கண்டு பிள்ளை ஆச்சரியப்பட்டுப் போனார். அங்கே நின்றால் அவர் தடுத்து நிறுத்தி விடுவார் என்கிற பயத்தில் உடனேயே நான் புறப்பட்டு விட்டேன். பிள்ளையின் மைத்துனரைக் கேட்டதில் அன்று இரவு தாண்ட வேண்டும் என்று வைத்தியர் கெடு வைத்திருப்பது தெரிய வந்தது. இருட்டுவதற்குள் திரும்பி விடுவது என்கிற தீர்மானத்துடன் ஸ்டேஷனுக்கு ஓடினேன்.

மரகதவடிவு வீட்டுக்கு ஒரு பர்லாங்கு தூரத்துக்கு இப்புறமேயே நாதஸ்வர நாதம் கேட்டுக் கொண்டிருந்தது. வாசலில் போய் நின்றதும் வந்த காரியத்தை மறந்து சில நிமிஷங்கள் அந்த இசை வெள்ளத்தில் கட்டுண்டு மெய்ம்மறந்தேன். ஆகா! இத்தகைய அருமையான வாசிப்பைக் கேட்காமல் பிள்ளை ஏங்கியதில் ஆச்சரியமே இல்லை என்று எனக்குத் தோன்றியது.

தெருவில் போய் வந்து கொண்டிருந்த சிலர் என்னை வெறிக்கப் பார்த்தனர். சுதாரித்துக் கொண்டு கதவைத் தட்டினேன்.

“தங்கரத்தினம்!”

சில விநாடிகளில் கதவு திறந்தது. ஆச்சரிய பாவத்துடன் வடிவு தான் நிலைப்படியில் நின்று கொண்டிருந்தாள். அப்பா! என்ன அழகு!

“தம்பியைப் பார்க்க வேண்டும்!”

“நீங்க யாரு?” அவள் புருவங்கள் நெரிந்தன.

“தங்கரத்தினத்திடம் சில வார்த்தைகள் பேச வேண்டும். வரச்சொல்லு!” எஎன் தைரியம் எனக்கே வியப்பாக இருந்தது. அதற்குள் அவனே வந்து விட்டான் குரல் கேட்டு.

“நீங்களா?”

அந்த இடத்தில் வடிவுடன் அவனையும் செர்த்து நான் பார்த்து விட்டதனால் அவன் முகம் வெட்கத்தில் சுருங்கியது.

“என்னைத் தெரிகிறதா?”

“தெரியாம என்னங்க? அண்ணாச்சி சௌக்யமா இருக்காங்களா?”:

“ஓஹோ! அவர் ஞாபகம் கூட இருக்கிறதா உனக்கு?”

“என்னங்க அப்படிச் சொல்லிப் போட்டீங்க? …இப்படித் திண்ணையிலே உட்காருங்க!”

“உட்கார நான் வரவில்லை. உன்னை அழைத்துப் போக வந்தேன்!”

கேள்விக்குறி போடும் பார்வையுடன் என்னை உற்று நோக்கினான் தங்கரத்தினம். “ஆமாம்! அங்கே உன் அருமை அண்ணாச்சி சாகக் கிடக்கிறாரப்பா!”

ஹா! இருவரும் பதறினார்கள். மரணம் என்ற சொல்லுக்குத் தான் எத்தனை சக்தி!

“நெசமாவா?”

“இப்போது நீ வந்தால் ஒருவேளை அவர் பிழைக்கலாம். இல்லை. இறந்தாலும் மனச்சாந்தியுடன் மடியலாம். உன் நினைவிலேயே அவர் துடித்துக் கொண்டிருக்கிறார்!”

சித்திரவதை செய்யப்படும் விலங்கு போலத் தவித்துக் கொண்டிருந்தான் தங்கரத்தினம். கண்களில் நீர் முட்டிற்று.

“அப்போ நான் போய்ப் பார்க்கணும் வடிவு!”

நான் அவள் முகத்தைப் பார்த்தேன்.

“நிச்சயமா நீங்க போகத்தான் வேணுங்க! அநியாயமா உங்களை அந்தப் பெரியவர் கிட்டேயிருந்து பிரிச்சது போதும். அவர் சாகிற காலத்தில் உங்களைப் போகக் கூடாதுன்னு தடுக்கிற பாவம் வேறே வேண்டாம் எனக்கு!”

மரகதவடிவா பேசுகிறாள்? அவள் கண்களில் கூடவா நீர் ததும்புகிறது? நான் வியப்பில் வாயடைத்து நின்றேன்.

“அம்மணி! நீ நன்றாக இருப்பாய். இந்த உதவிக்கு முருகன் என்றென்றும் உனக்குக் கருணை காட்டுவான்!” வார்த்தைகள் தடுமாறி, சிதறி வந்தன என்னிடமிருந்து.

“தம்பி! கிளம்பு, சீக்கிரம்!”

ஒரு கணம் நான் நிதானித்தேன்.

“தங்கரத்தினம்! நாதஸ்வரத்தைக் கையோடு கொண்டு வா!” என்றேன்.

அவன் திகைத்தான். மறு விநாடியே போய் எடுத்துக் கொண்டு விரைந்து வந்தான்.

நாங்கள் வந்து சேரும்போது சந்திரன் மேலே நன்றாகக் கிளம்பிவிட்டது. எப்படியிருக்குமோ என்னவோ என்கிற பயத்துடன் தான் ஓடி வந்தோம். நல்லவேளை! என் நம்பிக்கை வீணாகவில்லை!

கட்டிலில் கிடந்த ஆவுடையப்ப பிள்ளையைக் கண்டதும் தங்கரத்தினம் அலறி விடான்.

“அண்ணாச்சி!”

“தம்பி! வந்துட்டியா?”

இருவருடைய கண்ணீரும் மற்றவருடைய கன்னத்தைக் கழுவியது.

“அண்ணாச்சி! என்னை மன்னிச்சிடுங்க. நான் பாவி!” தங்கரத்தினம் தேம்பினான் சிறு குழந்தை மாதிரி.

“தம்பி! அப்படி எல்லாம் ஒண்ணும் சொல்லாதே. அப்போ நடந்ததெல்லாம் அந்தத் தோடி ராகத்தின் மயக்குகிற சக்தி. அது தான் உன்னை வடிவு கிட்டே சேர்த்தது. இப்போ உன்னைப் பார்த்ததே எனக்கு சந்தோஷம். இனிமே நான் போகலாம் நிம்மதியாக!”  ஒரு கணம் கோரமான அமைதி.

“தமிபி! வாத்தியம் கொண்டு வந்திருக்கியா?”

தங்கரத்தினம் வியப்புடன் என்னையும் அவரையும் மாறி மாறிப் பார்த்தான். உடனேயே தாவி எழுந்து நாயனத்துடன் அவர் எதிரே அமர்ந்தான். பிள்ளை கண்களை மூடியவாறே மெதுவான குரலில் பேசினார்.

“தம்பி! அன்னிக்குத் திருச்செந்தூரிலே வாசிச்சியே அதே மாதிரி இப்போ மறுபடியும் வாசி! உன் வாத்தியத்தைக் கேட்டு எத்தனை நாளாச்சு!”

தங்கரத்தினம் கொஞ்சம் தயங்கினான்.

“ஒங்க இஷ்டத்தை நிறைவேத்தாம நான் வாத்தியம் எடுத்து தான் என்ன பிரயோசனம்? இதோ உங்க பிரியப்படியே வாசிக்கிறேன்.”

நாயனம் அடுத்த கணமே அவன் உதடுகளில் படிந்தது. மதுரமான ஒலி அதிலிருந்து பிறந்தது. தங்கரத்தினம் தோடி வாசிக்க ஆரம்பித்தான். பிள்ளை கண்களை மூடியபடி ரஸித்துக் கொண்டிர்ந்தார்.

தங்கரத்தினம் வாசிக்கவில்லை. கண்களை மூடியபடி ஏதோ ஒரு அமானுஷ்ய வெறியுடன் ஊதினான். பிடிகள் பரபரவென்று விழுந்தன. அண்ணாச்சியின் கடைசி ஆசையை நிறைவேற்றி விட வேண்டுமென்ற ஒரு வேகம் அவனை இயக்கிற்று. அந்தத் துடிப்பில் விரல்கள் துளைக்கருவியின் மேல் மின்னல் வேகத்தில் நர்த்தனமாடின. ராகம் தன் முழு ஜீவனுடன் வெளிப்பட்டு அங்கு நிறைந்தது.

உள்ளத்தை உருக்கும் அந்த வாசிப்பு என் இதயத்தைத் தொட்டது. கண்கள் குளமாகி நின்றன. ஆவுடையப்ப பிள்ளையின் முகத்தைப் பார்த்தேன். மலர்ச்சியுடன் ஆனால் அயர்ந்து தூங்குபவர் போல அவர் தோன்றினார். சங்கீத தேவதை தோடியின் மூலம் அவரை ஆட்கொண்டு விட்டது என்பதைப் புரிந்து கொண்டபோது என் மெய் சிலிர்த்தது.

எஸ்.வி.விஜயராகவாச்சாரி

எஸ்.வி. விஜயராகவாச்சாரியார் (செவிலிமேடு வேணுகோபாலாச்சாரியார் விஜயராகவாச்சாரியார்; எ.ஸ்.வி.வி: ஆகஸ்ட் 25,1880 - மே, 31, 1950) தமிழின் முன்னோடி நகைச்சுவை எழுத்தாளர். 40/50-களில் விகடனில் இவருடைய  கதை, கட்டுரை, நாவல்களைப் படிக்காதவர்கள் இருந்திருக்க முடியாது. பொது வாசிப்புக்குரிய நூல்கள் பலவற்றை எழுதியவர். ஆங்கிலத்திலும் பல நகைச்சுவைக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். திருவண்ணாமலையில் வழக்குரைஞராகப் பணியாற்றினார். தம் வாழ்வின் இறுதிக்காலம் வரை ஹிந்து மற்றும் ஆனந்த விகடன் இதழ்களுக்காகவே எழுதிய எஸ்.வி.வி., உடல்நலக்குறைவால்…

இவரைப் பற்றி 11.08.1940 ஆனந்த விகடனில் அமரர் கல்கி எழுதியதிலிருந்து…

`நான் சென்னைக்கு வந்த புதிதில், `இந்த எஸ்.வி.வி யார்… உங்களுக்குத் தெரியுமா?’ என்று சென்னையில் நான் சந்தித்தவர்களை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்தேன். அப்படி என்னைக் கேட்கும்படியாகச் செய்தது அப்போது புதிதாக வெளியாகியிருந்த `ஸோப் ப்ளஸ்’ என்கிற புத்தகம்தான். இந்தப் புத்தகத்தில் முதல் விஷயம் `கோவில் யானை’ என்னும் கதைதான். இதைப் படித்தபோது நான் சிரித்ததை இப்போது நினைத்தால்கூட வயிற்றை வலிக்கிறது. புத்தகத்தைப் படிக்கையில் இப்படிச் சிரிப்பும் சந்தோஷமுமாய் இருந்தது. படித்து முடித்த பிறகோ, பெருமை பொத்துக்கொண்டு போயிற்று. `நம்முடைய தமிழ்நாட்டில் இப்படி எழுதக்கூடிய ஒருவர் இருக்கிறாரே?’ என்று நினைக்க நினைக்க கர்வம் ஓங்கி வளர்ந்தது. தமிழ்நாட்டைக் குறித்து முன் எப்போதும் இல்லாத கௌரவ உணர்ச்சியும் உண்டாயிற்று. `தமிழ்நாட்டின் இலக்கிய ஊற்று’ என்பது அடியோடு வற்றிப்போய்விட்டது என நினைத்ததெல்லாம் சுத்த தவறு. இவ்வளவு நகைச்சுவையுடன் எழுதக்கூடிய மனிதர் ஒருவர் இருக்கும்போது, தமிழ்நாட்டில் ஜீவசக்தி இல்லை என்று சொல்ல முடியாது…… மேலும் அறிய

ஸ்.வி.வி.


82 கருத்துகள்:

  1. அப்போது, அந்த ஊர் மன்ன னின் மகளுக்கு பிரம்மராக்ஷஸ் பீடித்திருந்த து. //

    இதே போன்ற சம்பவம் ஹொய்சாள அரசன் BittiDeva மகளுக்கும் நடந்ததே நீங்களும் முன்னர் அதை அப்பகுதி கோயில்கள் பற்றிய பதிவில் சொல்லியிருந்தீங்க, நானும் என் பதிவில் -தலக்காடு - சொல்லியிருந்த நினைவு. எப்படி இங்கு வைணவம் வந்தது என்று

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா ரங்கன். ஆம் இன்னும் சில இடங்களிலும் இதைப்போன்ற நிகழ்வு வருகிறது. ஆனால் இங்குதான் பிரம்மரக்ஷஸ் முற்பிறவி போன்றவற்றைச் சொல்லுவதாக உள்ளது.

      நீக்கு
    2. ஆமாம் முற்பிறவி பற்றி....அதைச் சொல்ல நினைத்து விட்டுப் போச்சு. அடுத்ததுக்குத் தாவிவிட்டேன், நெல்லை

      கீதா

      நீக்கு
  2. ஜடாய் என்றதும் எங்க ஊரும் கொஞ்சம் தொடர்புடையது என்று ஜடாயுபுரம்னு சொல்றாங்களே!!! ஊர்ல ஆற்றங்கரையில் இருக்கும் பகுதி. நேற்றுதான் எங்க ஊரின் அப்பகுதியை நான் எடுத்த படங்கள் எல்லாம் பார்த்து பதிவுகககத்ட் தொகுத்துக் கொண்டிருந்தேன்..ஹிஹிஹி

    நெல்லை சொல்வது என் காதுக்குக் கேக்குது!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு எழுதுங்க. நானும் பயணங்கள் சென்றுவந்த உடனே புதிய பயணப்பகுதியை எழுதுவோம், சோழர் காலம் எப்போனாலும் எழுதிக்கலாம் என நினைப்பேன்.

      நீக்கு
    2. நான் ஊருக்குப் போய் வந்து ஆச்சே 5-6 வருஷம்!!!

      கீதா

      நீக்கு
  3. பாசுரம் பொருள் எல்லாம் நல்லாருக்கு நெல்லை.

    கூடவே எட்டுத்தொகையும் குறிப்பிட்டு உட்படுத்தியதும் உட்பட சிறப்பு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கீதா ரங்கன். பழந்தமிழ் இலக்கியத்திலும் நம் சனாதன தர்மம் உண்டு என்பதற்காக எடுத்துக்கொண்டேன்.

      நீக்கு
    2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    4. தீராவிஷங்களுக்கு இது தெரியாமல் தான் இவன் வடக்கன், இவன் தமிழன் எனப் பாகுபாடு.

      நீக்கு
    5. உங்களை மாதிரி பழைய ஆட்கள்தான் இப்படிச் சொல்லுவாங்க. அதுனால தமிழ் பாடத்துல எந்த இலக்கியமும் சொல்லித்தர மாட்டாங்க, அதுல 'மதச்சார்பின்மை' என்ற வார்த்தை வரணும் பார்த்துக்குங்க.

      நீக்கு
  4. படங்களும்...இளையாழ்வார் கல்வி பயின்ற இடம்...எல்லாம் அருமை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில இடங்களுக்கு, குரு பரம்பரை நிகழ்வுகள் தெரிந்த பிறகு செல்லும்போது சிலவற்றை புகைப்படம் எடுப்பேன். அதையெல்லாம் தொடரில் உபயோகிக்கிறேன்.

      நீக்கு
  5. அந்தக் குட்டி சிற்பம் பார்த்ததும் இளையாழ்வார்தான் தண்டம் ஏந்தி இருக்கிறாரோ என்று நினைத்தேன் அப்புறம் தெரிகிறது அது யாதவப்பிரகாசர், நிற்பவர் இளையாழ்வார்?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். பிற்காலத்தில் நிலைமை முற்றிலும் மாறும்.

      நீக்கு
  6. தோடி ராகம் என்றதும் கதையை ஆர்வத்துடன் வாசிக்கத் தொடங்கினேன்.

    //தம்பி தோடி வாசிச்சு நீங்க கேட்டதில்லையே?”//

    இதை வாசித்ததும் நிஜத்தில் தோடி வாசிபப்தில் வல்லுநரான நாதஸ்வர கலைஞர் டி ஆர் ராஜரத்தினம் பிள்ளை நினைவுக்கு வந்தார்.

    கீதா

    பதிலளிநீக்கு
  7. உண்மையிலேயே மேலெஏ சொன்ன அந்த வரிக்கு அடுத்து வரும் பாரா டிட்டோ அப்படியே பொருந்தும் ராஜரத்தினம் பிள்ளை அவர்களுக்கு

    கீதா

    பதிலளிநீக்கு
  8. இக்கதையைத்தான் தோடி ராகம் என்று படம் எடுத்தாங்களோ? கொஞ்ச்ம அப்படிக்கா இப்படிக்கா மாத்தி?

    “மரகதவடிவு கிட்டே இருக்குது அது!”//

    அதிலும் சேஷகோபாலன் கர்நாடக இசைக்கலைஞராக வாய்ப்பாட்டு கலைஞராக வருவார் என்று படம் பற்றிய கதை வாசித்த நினைவு. தோடியில் கில்லாடியாக இருந்தவர் இப்படிப் போய் என்று வரும்....

    நிஜமாகவே அவர் தோடி பாடுவதில் கில்லாடிதான். ரொம்ப அழகாகப் பாடுவார். அப்படத்தில் கூட ஒரு பாட்டு வரும்

    "தோடியில் பாடுகின்றேன் ஓடி நீ வருவாய் முருகா" என்று

    இக்கதையை வாசிக்கும் போது சிலற்றோடு தொடர்புபடுத்திப் பார்க்க வைக்குது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல வேளை இந்தக் கருத்தைப் படித்துவிட்டேன். சேஷகோபாலன் நடித்த தோடி ராகம் பற்றி ஏன் சொல்லவில்லை, ஶ்ரீராமும் பாட்டைப் பகிரவுல்லையே என முந்தைய உங்கள் கருத்துக்கு எழுத நினைத்தேன்.

      நீக்கு
    2. தோடி ராகம் படத்தை சேஷகோபாலனே மறக்கப் படாத பாடு பட்டுக் கொண்டிருக்கிறாராம் (சுதா ரகுநாதன் இண்டர்வியூவில் கேட்ட ஞாபகம்). அதைப் போய் நினைவு படுத்துகிறீர்களே நெல்லை!

      நீக்கு
    3. அதேதான்.  அதேபோல சேஷகோபாலன் நான் ரசிக்கும் பாடகர் இல்லை.  அவரை மதுரையில் நெருக்கத்தில் பார்த்திருக்கிறேன்.  நானும் அவரும் அருகருகே அமர்ந்து ஹோமியோபதி டாக்டர் கே வி அனந்தநாராயணன் ​அழைப்புக்குக் காத்திருப்போம்.

      அங்கு அன்னம் என்றொரு பெண் வேலை செய்து வந்தார்.  அவர் ஒவ்வொரு பெயரையும் உச்சரிக்கும் ஸ்டைலே.... 

      இவரையும் ராகம் போட்டு பெயரை மட்டும் சொல்லி அழைப்பார்.  இவ்வளவுப்பிரபலமானவராச்சே அருகில் வந்து அழைக்கலாமே அதுவும் பெயர் சொல்லாமல் என்று எனக்குத் தோன்றும்.

      நீக்கு
    4. ஹாஹாஹா நெல்லை....அப்படம் நான் பார்க்கவே இல்லை!!!! கதை மட்டும் தெரியும் ...ஹிஹிஹி பார்க்கவே மாட்டேனே ஃப்ரீயா நெட்டில் கிடைச்சாலும்

      கீதா

      நீக்கு
    5. /ஹிஹிஹி பார்க்கவே மாட்டேனே ஃப்ரீயா நெட்டில் கிடைச்சாலும்/
      நளினி ஓரளவுக்கு நன்றாக நடித்திருப்பார் அந்தப் படத்தில்...அவர் திரையுலகுக்கு வந்த புதிதில் நடித்த படம். தமன்னா, அனுஷ்காவுக்கு பக்தர்கள் இருக்கிறார்கள் எ.பி யில். நளினிக்கு யாரும் கிடையாதா?

      நீக்கு
    6. நளினியை பத்திரிகைகள் குதிரை மூஞ்சி என விமர்சித்தது நினைவுக்கு வருது. அவரை உருகி உருகி ராமராஜன் காதலித்து மணந்துகொண்டார் (ராமராஜன் துரதிருஷ்டம் அவருக்குக் கிடைத்த எம்பி பதவி விரைவில் காலாவதியாயிற்று). நான் லண்டன் பட காமெடிக் காட்சிகளை ரசிப்பேன்.

      நீக்கு
    7. நான் சேஷ கோபாலன் அவர்கள் கச்சேரியை நேரில் பஹ்ரைனில் கேட்டிருக்கிறேன். மூன்று மணி நேரம் என்றால் கொஞ்சம்கூட இடைவெளி விடாமல் நிறைவாக நிறையப் பாடினார். அந்த சின்சியாரிட்டி எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

      நீக்கு
    8. சேஷு ஓ ஸாரி - சேஷகோபாலன் அவர்களோடான பரிச்சயம் எங்கள் ஊர்லயே தொடங்கிவிட்டது. தூரத்துச் சொந்தம்னும் சொல்வாங்க. என் மூன்றாவது மாமா திருவனந்தபுரம்லயே இருந்ததால் அவர் மூலம் எங்கள் குடும்ப வாத்தியார் சேஷ வாத்தியாரின் கஸின் தான் சேஷகோபாலன் என்பதால், அப்படி ஊரில் திருவிழா கச்சேரிக்கு ஏற்பாடு செய்திருந்தார். 1970 களில் சென்னைக்குப் போயாச்சு என்று நினைவு. எங்கள் ஊர்க்கச்சேரிக்கு வந்தப்ப நான் 8-9 ஆம் வகுப்பு. அப்ப நம்ம வீட்டில்தான அவருக்குச் சாப்பாடு. வயலின் சந்திரசேகரன் அவர்களும் அவர் மகள் பாரதியும் வந்திருந்தாங்க. அப்போதுதான் முதல் முறை நேரில் கச்சேரி கேட்டது. சந்திரசேகர் அவர்களின் வயலின் வாசிப்பு ரொம்பப் பிடித்துவிட்டது. அவரும் நம்ம வீட்டில்தான் சாப்பிட்டார். அப்ப நானும் கூடவே பரிமாறியது நல்ல நினைவு.

      அப்போதெல்லாம் நம்ம வீட்டில் கூட்டுக் குடும்பமாச்சே. என் திறமைகளோ ஆர்வங்களோ கணக்கில் கொள்ளப்படமாட்டாது என்பதோடு சங்கீதம் சோறுபோடாது என்ற கொள்கையுடைய பாட்டியிடம் நம்ம ஆர்வம் எங்க செல்லுபடியாகும். முரண் பாருங்க நம்ம வீட்டுலதான் சேஷகோபாலன், சந்திரசேகர் அவங்களுக்குச் சாப்பாடு. சங்கீதத்தில் சம்பாதித்துக் கொண்டிருந்தவர்கள்!!!!!

      கச்சேரியில் அவர் பாடிய நானொருவிளையாட்டு பொம்மையா அதற்கு சந்திரசேகர் அவர்களின் அற்புதமான வாசிப்பு (அவர் நன்றாகப் பாடவும் செய்வார் பாடிக் கொண்டே வாசிப்பதும் அவர் வழக்கம்) அது என் மனதில் ஓடிக் கொண்டே இருந்தது. டக்கென்று பாடிவிட்டு நாக்கைக் கடித்துக் கொண்டேன்....வீட்டில் திட்டிடுவாங்களேன்னு!!! இன்று தோடி என்றதும் என்னவெல்லாமோ வருது பாருங்க...

      கீதா

      நீக்கு
    9. அதன் பின் ஓரிரு உறவுகளின் விசேஷங்களில் பார்த்திருக்கிறேன் திருவனந்தப்புரத்தில்.

      அப்புறம் என் வாழ்க்கை ஊர் சுற்றி சென்னைக்கு வந்தப்ப என் மகன் அப்ப 5 ஆம் வகுப்பு. வீட்டில் நான் அப்பப்ப பாடிக் கொண்டே இருந்ததால் அவனுக்குச் சிறுவயதிலேயே ஆர்வமும் வந்தது. அவனுக்கு mind body coordination ற்காக பாட்டு கற்றுக் கொடுத்ததுண்டு பாட்டும் தாளமும் என்று பயிற்சி....

      வீட்டில் கேசட் போடுவேன். அப்ப சேஷகோபாலன் அவர்களின் "காக்கைச் சிறகினிலே கேட்டதும் அவன் அவரிடம் தான் பாட்டு கற்றே ஆகணும் என்று பிடிவாதம். அப்ப நாங்க இருந்தது அசோக்நகரில் 7-8 நிமிட நடையில் அவர் வீடு மேற்குமாம்பலத்தில்.

      சரி என்று அவர் வீட்டுக்குப் போனதும் மாடியில் அவர் வகுப்பு எடுப்பார், கீழே மாமி எடுப்பார். கீழே மாமியிடம் சொன்னதும் (தூரத்துச் சொந்தத்தையும் சேஷ வாத்தியாரையும் சொன்னதும்) அவர் உடனே மாடிக்குப் போய் மாமாகிட்ட அவன் பாடிக்காட்டி அவர் என்ன சொல்றார்ன்னு கேட்டுண்டு வாங்க ன்னு சொன்னதும் மாடிக்குப் போனோம். அங்கு அட்வான்ஸ்ட் க்ளாஸஸ். அல்லது நன்றாகப் பாடுபவர்களுக்கு ஞானம் உள்ளவர்களுக்கு அடிப்படையிலிருந்தே அங்கு.

      மகனை "ஸ ப ஸ" பாடச் சொன்னார்...நம்ம பையனுக்கு "ப" ஸ்ருதி சேரலை. முயற்சி செய்த பின்னரும் கூட....(இத்தனைக்கும் வீட்டில் அவனுக்கு பயிற்சி கொடுத்திருந்தாலும் நான் முக்கியத்துவம் கொடுத்தது பாட்டும் தாளமும் ஒரு சேர என்று)....

      அவர், கீழே மாமியிடம் கற்றுக் கொண்டு அங்கு பாஸானதும் மேல இங்க கூட்டிண்டு வாங்கோன்னு சொல்லிட, கீழே மாமியிடம் குழந்தைக்காக நானும் சேர்ந்து கொண்டேன். கும்பலோடு கோவிந்தாதான். 20, 25 குழந்தைகள் இருப்பாங்க நான் தான் சீனியர்!!!!!! அவ்வப்போது தனித்தனியயகப் பாட வைப்பார் எல்லோரையும். ஜண்டைவரிசை தாண்டி அலங்காரம் வந்த சமயம். ஒரு நாள் திடீரென்று ஜண்டை வரிசையில் ஒன்றை தனித்தனியாகப் பாடச்சொன்னதும், என் மகன் கொஞ்சம் திணறினான்.. உடனே அவங்க பாரு உங்க அம்மா எவ்வளவு நன்னா பாடறா, கத்துக்கோன்னு சொன்னதும் என் மகனுக்கு அங்கேயே துக்கம் தொண்டையை அடைத்துவிட்டது. வீட்டிற்கு வந்ததும் அடுத்த வகுப்பிற்கு வரமாட்டேன் என்று சொல்லிவிட்டான். நானும் வற்புறுத்தவில்லை. அவனது தன்னம்பிக்கை கெடாமல் இருக்க வேண்டும் என்பதில் மட்டும் குறியாக இருந்தேன். சரி வாய்ப்பாட்டு வேண்டாம், ஏதேனும் instrumental கத்துக்கறியா என்று கேட்டு அவன் வீணை (அதற்கு இன்ஸ்பிரேஷன் சிட்டிபாபு, ராஜேஷ் வைத்யா!!!! ) பின்னர் சில ட்விஸ்ட் அண்ட் டர்ன்ஸ் வாழ்க்கையில். அடையாருக்கு குடியேறியதும் அப்ப அவன் 8 ஆம் வகுப்பு அருகில் ஹம்ஸத்வனி பள்ளியில் அவனுக்கு வீணை கற்க சேர்த்ததும், அவன் ஞானம் புலப்பட்டது. எந்த ஒரு கர்நாடக இசை சார்ந்த சினிமா பாட்டிற்கும் (ராஜேஷ் வைத்யா தான்!!! காரணம்) அவன் வீணையில் ஸ்வரங்கள் எடுத்துவிடுவான். கீர்த்தனை வரும் சமயம் அவன் +2 வா அப்ப நின்றன வகுப்புகள்....

      கீதா

      நீக்கு
    10. ஒருவரைப் பற்றி முழுமையாகத் தெரிய வேண்டுமென்றால்,அவர் சம்பந்தப்பட்ட பலரின் அனுபவங்கள் உபயோகமாக இருக்கும்.

      எப்போதுமே பலரும், கனிவு என்பதை மறந்துவிடுகிறாங்க இல்லையா? மேதைகளுக்கு எதுக்கு பாட்டு சொல்லிக்கொடுக்கணும்?

      நீக்கு
    11. சொல்லலாமானு தெரியலை. சேஷகோபாலனுக்கு அப்பா இல்லை. அம்மா மட்டும் தான். ஒரே பிள்ளை. என் அண்ணாவின் வகுப்புத் தான் அவரும். என் அண்ணாவும் நன்கு பாடுபவரே. ஆனாலும் மேடையில் பாடினால் ஒரே சொதப்பல். ஒருவேளை அப்பாவின் அதீதக் கட்டுப்பாடு காரணமாகக் குரல் எழும்பாமல் இருந்திருக்கலாம். சேதுபதி உயர்நிலைப்பள்ளியில் தான் இரண்டு பேருமே ஒரே வகுப்பில் படிச்சுட்டு இருந்தாங்க. சின்ன வயசில் நிறையத் தரம் எங்க வீட்டுக்கு அண்ணாவைப் பார்க்க வருவார். இவரும் அவர் நண்பர் ஒருத்தர் ஏ.ஸ்ரீநிவாசன் என்பவரும் அண்ணாவுக்கு நெருங்கிய சிநேகிதர்கள். சேஷகோபாலனோ அண்ணாவொ தினமும் பள்ளியில் காலையில் இறைவணக்கத்தில் பாடுவார்கள். அண்ணா பாதி பாடும்போதே பயத்தில் நிறுத்திடுவார். சேஷகோபாலன் கணீரென்ற குரலில் எடுத்த உடனே உச்சஸ்தாயியில் பாடுவதைக் கேட்ட ஒரு சிறப்பு விருந்தினர் அவர் மேல் பரிவு கொண்டு அவர் பின்புலம் அறிந்து அவரைத் தன் மகன் போலவே வைத்து எல்லா உதவிகளும் செய்தார். அவர் மதுரையில் திருப்புகழ்ச் சங்கம் வைத்து நடந்திக் கொண்டிருந்தார். திருப்புகழ் மணி அவர்களின் சீடர்னு நினைவு. அந்த சபையில் என் அத்தை பையர் ஒருத்தரும் இருந்தார். அவருக்கும் சேஷகோபாலனை ரொம்பப் பிடிச்சுப்போய் இருவரும் கிட்டத்தட்ட தத்து எடுத்துக் கொண்டாற்போல் அக்கறை காட்டினார்கள். பள்ளிப்படிப்பை முடித்ததும் டிவிஎஸ் காரங்களோட ஆதரவில் முறைப்படி இசையும் கல்லூரிப் படிப்பும் முடித்தார்னு நினைவு. பின்னர் வந்தவை நிஜமாகவே வரலாறு. ஆரம்பத்தில் வாரச் சாப்பாடு சாப்பிட்டுக் கொண்டு இருந்திருக்கார். இதை எழுதலாமானு தெரியலை. சிலவற்றைப் பொதுவெளியில் சொல்லக் கூடாது.

      நீக்கு
  9. தெளிவான நடையில் அருமையாக எடுத்துரைத்தீர் நெல்லை! நன்றி.
    சில minor பிழைகள். இப்போதே திருத்திக்கொண்டால் நூல் வடிவில் வரும்போது சௌகர்யம் என்பதால் சொல்கிறேன்
    1) நான்காம் வரி முதல் பாரா: /அதன் பிறகு பேருளாளனிடம் இளையாழ்வாரை/ பேரருளாளன் என்றிருக்க வேண்டும்
    2) /இதைப் பற்றி மேலும் நிறைய வேத உதாரணங்களுடன் எழுதுவது படிப்பதற்குச் சோர்வை ஏற்படுத்தும் என்பதால் அவற்றை இங்கு எழுதவில்லை. / இரண்டு முறை ரிப்பீட் ஆகியுள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க முன்னாலேயே படிச்சுருப்பீங்கன்னு நினைக்கறேன்.  இந்தப் பிழைகளையும் வேறு சில பிழைகளையும் கூடவே பேச்சுக்கான "..."  குறிகளையும் இட்டு விட்டு இப்போதுதான் வந்தேன்!!

      நீக்கு
    2. வாங்க சூர்யா சார்.. நான் அழகி எழுத்துரு உபயோகிக்கிறேன். அதில் சில தவறுகள் (சாஃப்ட்வேரில்) உண்டு. தட்டச்சு செய்தபின் திருத்துவேன். அதில் சில பிழைகள் விட்டுப்போய்விடுகின்றன.

      தட்டச்சு பற்றி பிறகொரு சமயம் எழுதுகிறேன். இறைவன் ஒவ்வொரு காரணம் இல்லாமல் ஒரு திறமையைக் கொடுப்பதில்லை என என்னை உணரவைத்தது அது.

      நீக்கு
  10. “நிச்சயமா நீங்க போகத்தான் வேணுங்க! அநியாயமா உங்களை அந்தப் பெரியவர் கிட்டேயிருந்து பிரிச்சது போதும். அவர் சாகிற காலத்தில் உங்களைப் போகக் கூடாதுன்னு தடுக்கிற பாவம் வேறே வேண்டாம் எனக்கு!”//

    மனுஷங்க...கடைசில வரும் இப்படியான எண்ணங்கள்....இதற்கு முன்னரே ஏன் வரவில்லையோ?!!

    கீதா

    பதிலளிநீக்கு
  11. சங்கீத தேவதை தோடியின் மூலம் அவரை ஆட்கொண்டு விட்டது என்பதைப் புரிந்து கொண்டபோது என் மெய் சிலிர்த்தது.//

    முடிவை நயத்தோடு சொல்லியிருப்பது நல்லாருக்கு.

    எஸ் விவி அவர்களைப் பற்றி இப்போதுதான் தெரிந்து கொள்கிறேன், ஜெ கே அண்ணா. நன்றி. கதையும் நல்லாருக்கு

    இவரது வேறு கதைகளை வாசிக்க வேண்டும். கல்கியே தேடியிருக்கார் பாருங்க.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், கல்கி இவரைத் தேடிப்பிடித்து விகடனில் எழுத வைத்தார். அலயன்ஸ் வெளியீடாக இவரது நூல்கள் வந்திருக்கின்றன. வெங்காய சாம்பார் பற்றி இவர் எழுதி இருப்பது படிச்சால் அந்தக் காலகட்டத்தில் சாப்பாட்டில் இருந்த கட்டுப்பாடுகள்(குறிப்பாக வைணவர்களுக்கு) புரிஞ்சுக்கலாம்.

      நீக்கு
  12. பேய், பிசாசு, ப்ரும்ஹராக்ஷஸ் இருக்கின்றது என்றே வைத்துக் கொள்வோம். யாராவது மனிதரைப் பிடிப்பதால் அவைகளுக்கு என்ன பிரயோஜனம்? ஏன் ஒரு குறிப்பிட்டவரை மட்டும் பிடிக்கின்றது? அவருடைய கெட்ட காலமா? முன் ஜென்மப் பயனா? காஞ்சனா / அரண்மனைப் படங்களைப் பார்த்துத் தெறிந்து கொள் என்று சொல்ல வேண்டாம். காஞ்சனா / அரண்மனை எல்லா பாகங்களும் பார்த்து விட்டேன். இன்னும் சந்தேகம் தீரவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒருவகை மன வியாதியை பேய் பிசாசு, பிரம்மராக்ஷஸ் என்கிறார்கள்! 

      நீக்கு
    2. சூர்யா, ஸ்ரீராம் சொன்ன அதே கருத்துதான், இதைப் பத்தி சொல்லணும்னா நிறைய எழுதணும்...ஹிஹிஹி

      கீதா

      நீக்கு
    3. வாய்ப்பு கிடைத்தால் எழுதுங்களேன் கீதா.

      நீக்கு
    4. ஹையோ எல்லாருக்கும் போரடிக்கும்ங்க!!

      கீதா

      நீக்கு
    5. முன் ஜென்ம பயன் என்பதுதான் என் கருத்து.

      மாடர்னா இதை சைக்காலதி. பிஸியாலஜி, மனோவியாதி என்றெல்லாம் ஜல்லியடிப்பவர்கள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. மன வியாதி என்றால் என்ன என்பதை அறிவியலால் விளக்க முடிவதில்லை.

      மலையாளத்தில் இந்த மாதிரி மாந்திரீகக் கதைகளைப் படித்தால் ரொம்பவே ஆச்சர்யமாக இருக்கும்.

      அது சரி... நீங்க 'குட்டிச்சாத்தானிடம் உங்கள் பிரச்சனைக்குத் தீர்வு காண வாருங்கள்' என்ற விளம்பரம் பார்த்திருக்கீங்களா?

      நீக்கு
  13. /வறுத்த பயிரை முளைக்க வைக்கும் தாயார்/
    தாயாரின் பெயர்க் காரணம் (ஊகிக்க முடிகிறது...இருந்தாலும் eager to hear from the horse's mouth) என்னவோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குழந்தை வரம் வேண்டி வருபவர்கள் இங்கு தாயார் சன்னிதியில் குறிப்பிட்ட நாளில் (அமாவாசை அதிகாலையில் என்று நினைவு) வறுத்த பயிறை (தட்டைப் பயிறா இல்லை பச்சைப் பயிறா என நினைவு இல்லை) பிரசாதமாக குழந்தை வரம் வேண்டி, குளத்தில் குளித்துவிட்டு வருபவர்களுக்குக் கொடுப்பர். அதனை மடியில் கட்டிக்கொண்டு இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை சிறிது நீர் விட்டு வருவர். மறுநாள் முளைக்கும் என்ற நம்பிக்கை. அப்படி முளைத்தால் தாயார் வரம் கொடுத்துவிட்டார் என்ற பொருள்.

      முடியாதவற்றை முடித்துவைக்கும் தாயார் என்று புரிந்துகொள்ளலாம். இந்த திருப்புட்குழி மரகதவல்லித் தாயாருக்கு மாத்திரம்தான் இந்தப் பெயர்.

      நீக்கு
    2. பச்சைப் பயிறு.

      நீக்கு
    3. என் இனிய நண்பர் வயதில் இளையவர் ஆனாலும் இந்த மாதிரியான ஆன்மிகச் செயல்களைப் பகிர்ந்து கொள்ளும் திரு கேசவபாஷ்யம் வி.என். தினமும் திருப்புட்குழி மரகதவல்லித் தாயாரையும் காஞ்சிப் பேரருளாளனையும் நினைத்த வண்ணம் இருப்பார். காஞ்சிபுரத்துக்காரர். தினமும் வேலை நிமித்தம் சென்னை வரார்னு நினைக்கிறேன்.

      நீக்கு
  14. /அந்த வில்லுக்கு நாணாக இருந்து சிவபெருமானுக்கு ‘திருபுராந்தகன்’ என்ற அழியாப் பெருமையை அடையச் செய்தவர் திருமாலே ஆவார் என்று குறிப்பிடுகிறார்./
    சிவன் வில்லை உபயோகிக்காமல் தன் சிரிப்பாலேயே திரிபுரங்களையும் எரித்தார் என்று ஒரு கருத்து உண்டு. அப்பர் பெருமானின் பதிகம் ஒன்றை அதற்குச் சான்றாகக் கூறுவர் (ஆறாம் திருமுறை 64ஆம் பதிகம் எட்டாம் பாட்டு)
    முடித்தவன்காண் வன்கூற்றைச் சீற்றத் தீயால்
    வலியார்தம் புரமூன்றும் வேவச் சாபம்
    பிடித்தவன்காண் பிஞ்ஞகனாம் வேடத் தான்காண்
    பிணையல்வெறி கமழ்கொன்றை அரவு சென்னி
    முடித்தவன்காண் மூவிலைநல் வேலி னான்காண்
    முழங்கிஉரு மெனத்தோன்றும் மழையாய் மின்னி
    இடித்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
    ஏகம்பன் காண்அவன்என் எண்ணத் தானே
    சம்பந்தர் தேவாரம் (1.124.6) ஒன்றையும் சுட்டிக் காட்டுவதுண்டு
    அன்றினர் அரியென வருபவர் அரிதினில்
    ஒன்றிய திரிபுரம் ஒருநொடி யினிலெரி
    சென்றுகொள் வகைசிறு முறுவல்கொ டொளிபெற
    நின்றவன் மிழலையை நினையவ லவரே.
    (சிறுமுறுவல் - புன்னகை.)
    Of course, இது போன்று வேறு வேறு கருத்துகள் இருப்பது சகஜமே! இதுதான் உண்மை என்று நிர்ணயம் செய்ய இயலாது. அவரவர் இஷ்ட தெய்வத்தை சிலர் உயர்த்துவதும், எல்லா தெய்வங்களும் ஒன்றுக்குள் ஒன்று இருக்கின்றன என்ற ஒற்றுமையுணர்வை ஏற்படுத்தும் வகையில் சிலர் சொல்வதும் பல பக்தி இலக்கியங்களில் உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமையான உதாரணங்களை நீங்கள் கொடுத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இதுபற்றி இன்று எழுதுகிறேன். இனித்தான் நோகா போகணும், ஐந்து நிமிடங்கள் லேட்.

      நீக்கு
    2. துரை செல்வராஜு சாருஎக்கு பதில் கருத்தைப் பார்த்தேன்.

      பக்தி இலக்கியங்களில் பல்வேறு எஓணங்களையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும். அவற்றை எழுதியவர்கள் மலை போன்ற பெரியவர்கள் என்றால் நாம் மடுவை விடச் சிறியவர்கள். விவாதம் என்பது இதில் கிடையாது. மிகப் பெரிய சக்தி பூமண்டலங்களையும் அதில் உள்ள உயிரிகளையும் இயக்குகிறது.

      ஆற்றல் அழிவதில்லை. வேறொரு உருவாக மாறுகிறது என்பதைப் போல, சமீபத்தில் என் ஆசிரியர் (84 வயது) சொன்னது நினைவுக்கு வருகிறது. உலகில் உள்ள ஆத்மாக்களின் எண்ணிக்கை (பரம்பொருள் தவிர) மாறுவதே இல்லை. ஒரே எண்ணிக்கைதான். கர்ம வினைகளுக்கு ஏற்றார்ப்போல் பல்வேறு பிறவிகள் எடுக்கிறது.

      நீக்கு
    3. சூர்யா சூப்பருங்க!!!

      கீதா

      நீக்கு
    4. முதல் பாடல் நீங்கள் சொல்ல வந்ததைச் சொல்லவில்லை. ஆனால் இரண்டாவது பதிகம் அப்படிச் சொல்கிறது.

      வைணவ பிரபந்தங்களில், அப்படி சிவனை திரிபுரம் எரிக்க வைத்தவன், காரணமாக இருந்தவன் நாராயணனே என்று வருகிறது.

      இப்படி சமயங்களில் வித்தியாசமாகக் குறிப்பிட்டுள்ளவை பற்றி நாம ரொம்ப அலட்டிக்கக் கூடாது. அதன் தாத்பர்யத்தைத்தான் புரிந்துகொள்ளணும் என்பது என் எண்ணம் (நான் அப்படித்தான் எடுத்துக்கொள்வேன்). பலர் இப்படி எண்ணுவதில்லை. சமயங்களையும் திமுக அதிமுகவாக எண்ணி கட்சி கட்டறாங்க (வடகலை தென்கலை பிரச்சனையும் அப்படியே).

      சாதாரண மனிதர்களான நமக்கு உலக வாழ்க்கைப் பிரச்சனைகளுக்குத் தீர்வாகத்தான் ஆன்மீகத்துக்கு, சமயத்துக்கு, இறைவனிடம் செல்கிறோம். நம் நம்பிக்கை எவர் பால் பட்டதோ, அவர் சொல்லும் வழியை நாம் பின்பற்றுவதுதான் சரியே தவிர, என்னுடைய சமயம்தான் உயர்ந்தது, என்னுடைய இறைவன் மிக உயர்ந்தவர் என்ற வாதங்கள் நாம் முன்னேற ஒரு அணு கூட உதவாது என்பது என் அபிப்ராயம்.

      உடம்பு சரியில்லை என்று ஒரு டாக்டரிடம் சென்று அவர் கொடுத்த பிரிஸ்கிரிப்ஷனை உபயோகித்து நம் உடல் நிலையைச் சரியாக்கிக்கொள்வது சிறந்ததா அல்லது இந்த டாக்டர் அவரை விடப் பெரியவர் என்று பலரிடம் கட்சி கட்டுவது உபயோகமா?

      அன்றினர் அரியென வருபவர்... பதிகத்தில் அப்படிப்பட்ட சிவபெருமான் திருவீழிமிழலையில் நின்றுகொண்டிருக்கிறார். அவரை நினைப்பவர்கள் எல்லாப் பகைவர்களையும் வெல்லும் வல்லமை பெற்றவராவார் என்று எப்படி அருமையாகச் சொல்லியிருக்கிறார் திருஞான சம்பந்தர்.

      திருநாவுக்கரசர், கச்சியில் இருக்கும் ஏகாம்பரேஸ்வரன், மூன்று இலைகளைக் கொண்ட சூலாயுதத்தை ஏந்தியவன் என்பதை, மூவிலை நல் வேலினான் காண் என்று குறிப்பிட்ட நயம் அருமை.

      நல்ல பகிர்வு சூர்யா சார்.

      நீக்கு
    5. திரிபுரம் எரித்த சிரிப்பு அட்டகாசம் எனப்படும்.

      நீக்கு
    6. /முதல் பாடல் நீங்கள் சொல்ல வந்ததைச் சொல்லவில்லை./

      சொல்கிறதே நெல்லை!
      "சாபம் பிடித்தவன்காண்" என்பதுதான் கீ ஃப்ரேஸ். சாபம் என்றால் வில். உரையாசிரியர்கள் கூறுவது என்னவென்றால் "சாபம் - வில். ` பிடித்தவன் ` என்றது, அவ்வில் பயன்படாதே நின்றதைக் குறித்தது".

      /என்னுடைய சமயம்தான் உயர்ந்தது, என்னுடைய இறைவன் மிக உயர்ந்தவர் என்ற வாதங்கள் நாம் முன்னேற ஒரு அணு கூட உதவாது என்பது என் அபிப்ராயம்/
      டிட்டோ....100% கரெக்ட்

      நீக்கு
  15. பதில்கள்
    1. சரணம் சண்முகா... வாங்க துரை செல்வராஜு சார்.

      நீக்கு
  16. தேவாரத் திருப்பாடல்களுடன்
    திரு சூர்யா அவர்களது கருத்து சிறப்பு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி துரையண்ணா. அதை ஒரு விவாதமாக நான் எழுதவில்லை. நெல்லை எழுதிய கருத்துக்கு சம்பந்தமாக பக்தி இலக்கியத்தில் இன்னொரு ஆங்கிளும் உண்டு என்ற கோணத்திலேயே எழுதினேன் என்பதைத் தெளிவு படுத்த இந்த சந்தர்ப்பத்தை உபயோகித்துக் கொள்கிறேன்.

      நீக்கு
    2. மகிழ்ச்சி... நன்றி சூர்யா

      நீக்கு
  17. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ப்ரார்த்தனைக்கு நன்றி கமலா ஹரிஹரன் மேடம். இட்லி ஆறிவிட்டதே

      நீக்கு
    2. ஹா ஹா ஹா. ஆறிய இட்லியும் ஒரு வகை ருசிதான். வேண்டுமானால் நேரம் கிடைக்கும் போது சூடாக வார்த்தால் போச்சு. :)) நன்றி.

      நீக்கு
  18. வாரம் ஒரு பாசுரம் பகுதி வழக்கம் போல் சிறப்பு! கதையை இனிமேல்தான் படிக்க வேண்டும்.
    சந்தடி சாக்கில் சொல்லி விடுகிறென். வியாழன் பதிவுக்கு ஈடு கட்டுவது போல வெள்ளி பதிவு அமைந்திருந்தது. எல்லா பகுதிகளுமே சிறப்பாக இருந்தன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பானுமதி வெங்கடேஸ்வரன் மேடம். நன்றி

      நீக்கு
  19. சைவமும் வைணவமும் நாணயம் ஒன்றின் இரு பக்கங்களைப் போல என்பதே எனது கருத்து...

    ஆழ்வார்களும் நாயன்மார்களும் அவரவர் நெறியில் வழுவாது சென்றிருக்கின்றனர்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /சைவமும் வைணவமும் நாணயம் ஒன்றின் இரு பக்கங்களைப் போல என்பதே எனது கருத்து../

      உண்மை. எனது கருத்தும் இதே.. ஹரியும், ஹரனும் ஒன்றே. இதை உணர்த்(ந்)த இறைவனும், என் ஆரம்ப பெயரோடு பத்தொன்பதாவது வயதோடு என்னோடு இணைந்து இருப்பதற்கு அந்த இறைவனுக்கு என்னுடைய இந்தப்பிறவியில், கோடானுகோடி நன்றிகளை தெரிவித்து கொண்டேயிருக்கிறேன். 🙏.

      நீக்கு
    2. துரை அண்ணா அன்ட் கமலாக்கா...டிட்டோ. எல்லாம் ஒன்றுதான் மாபெரும் சக்தி

      கீதா

      நீக்கு
    3. என்னைக் கேட்டால், அறுவகை சமயமும் நம்மை அந்தப் பெரும் சக்தியை நோக்கித்தான் அழைத்துச் செல்கின்றன. கடவுளர்களுக்குள்ளே பேதம் கற்பிப்பது, கற்றறிந்த அறிஞர்களிடையே பேதத்தை உண்டாக்குவது என்பதெல்லாம் சிறுபிள்ளைத்தனமானது.

      அந்த சமயங்களில் நமக்கு எதில் விருப்பமோ, அல்லது எதை நம் பெற்றோர் அல்லது முன்னோர் கடைபிடித்தனரோ அதில் சென்று நம் பூர்வ கர்ம வினைகளைக் குறைக்க முயல்வதுதான் நம் நோக்கமாக இருக்கவேண்டும்.

      இது பற்றி ஒரு நாள் எழுதுகிறேன். ஒரு கல்லை நட்டு, இதுதான் என் கடவுள் என்று நாம் வணங்குவோமாகில் அந்தக் கல்லிலே தான் குடிகொள்வதாக இறைவன் தெரிவிக்கிறார்.

      நீக்கு
  20. @ கமலா ஹரிஹரன்

    தாங்களும் இந்த சமயத்தில் எனது தளத்தைப் புறக்கணிக்கின்றீர்களோ என்ற ஆதங்கத்தில் சற்றே மனம் குழம்பி பிழையாக நினைத்து விட்டேன்...

    இன்று எனது தளத்தில் தங்களது விரிவான கருத்தினைக் கண்டு மனம் வருந்தினேன்...

    தட்டுத் தடுமாறி பதிவுகளைத் தயாரிக்கின்ற எனது பிழையை மன்னிக்கும்படி திருமதி கமலா ஹரிஹரன் அவர்களைப் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      உங்கள் பதிவுகளுக்கு என்ன குறை. அழகான படங்களுடன் தினமும் எங்களுக்கு ஆன்மிக தரிசனங்கள், ஒவ்வொரு கோவில் இருப்பிட விபரங்கள், அருமையான பழங்கால/புதிய நல்ல செய்திகள் என நாள்தோறும் தெய்வீக வழிபாடுகள்தாம் உங்கள் பதிவில் படித்து / செய்து வருகிறோம். தாங்கள் மனம் தளர வேண்டாம். தினமும் இவ்விதமே பதிவுகளை தாருங்கள். தெய்வத்தின் அருள் தங்களுக்கு நிறைய இருக்கிறது. கவலை வேண்டாம். கடவுள் என்றும் நம் அருகிலேயேதான் என்றும் (அதுவும் பக்தியுடன் இருக்கும் உங்களைப் போன்றவர்கள் அருகில் ) நிற்பார்.

      எனக்கும் கைப்பேசியில் தட்டச்சும் போது, நிறைய பிழைகள் வருகிறது. காது கேளாமை குறையோடு, இப்போது கண்களும் சற்று பார்வை மங்கலாகி விட்டது. நீண்ட நேரங்கள் கைப்பேசியை கையிலேயே வைத்துக் கொள்ள இயலாமல் போகும் குடும்ப சூழ்நிலைகள் என பல பிரச்சனைகள். இருப்பினும் "அவன்" அருளைதான் நாடி நிற்கிறேன். அனைவரின் குறைகளையும் இறைவன் சரி செய்து விடுவார். நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    2. //இந்த சமயத்தில் எனது தளத்தைப் புறக்கணிக்கின்றீர்களோ என்ற ஆதங்கத்தில்// துரை செல்வராஜு சார்... நாம அப்படி எப்போதும் நினைக்கக்கூடாது என்பது என் எண்ணம்.

      சில சமயங்களில் பல தளங்களில் உள்ளவற்றை உடனுக்குடன் படிக்க இயலாமல் போய்விடுகிறது. சில நேரங்களில், இனி படித்து கருத்திட்டால் அது பாலைவனத்தில் பூக்கும் ரோஜாவாகப் போய்விடும் என்ற எண்ணமும் வந்துவிடுகிறது.

      நீக்கு
    3. //காது கேளாமை குறையோடு, இப்போது கண்களும் சற்று பார்வை மங்கலாகி விட்டது. நீண்ட நேரங்கள் கைப்பேசியை கையிலேயே வைத்துக் கொள்ள இயலாமல்// கமலா ஹரிஹரன் மேடம்... எல்லாப் பிரச்சனைகளும் தீரும். சில காணொளிகளில் காதில் ஹெட்செட் வைத்துக்கொண்டு பாடலோ இல்லை காணொளிகளோ கேட்டால் டமாரமாகும் என்கிறார்கள். லேப்டாப்பைப் பார்த்துக்கொண்டிருந்தால் கண் பணால் என்கிறார்கள். நேற்று என் பையன், பழம், ஸ்வீட்ஸ் போன்ற எல்லாவற்றிலும் இனிப்பு அதிகம், தவிர்க்கணும் என்கிறான். அப்போ என்னதான் செய்யறது?

      நீக்கு
    4. ஆமாம், இந்த மருத்துவர்களும் தக்காளி சாப்பிடாதே, புளி சேர்க்காதே என்கின்றனர். ஆனால் ப்ரொடின் மட்டும் இருக்கணுமாம். அதிலும் துவரம்பருப்பெல்லாம் கூடாது. வெறும் பாசிப்பருப்பில் எதைப் பண்ணிச் சாப்பிடுவது? வெஜிடபுள் ஸ்டூ பண்ணிச் சாப்பிடு என்கிறார். தினமும் அதையேவா சாப்பிட முடியும். இந்தக் காதில் வாங்கி அந்தக் காதினால் வெளியே தள்ளிட்டேன்.

      நீக்கு
  21. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே.

    இன்றைய வாரம் ஒரு பாசுர பகுதியில், இன்றைய பாசுரமும், அதன் விளக்கமும் நன்றாக உள்ளது. இளவரசியை பிடித்த பிரம்மராக்ஷஸ் நிகழ்வும், அதை இளையாழ்வார் விரட்டிய செய்கையும் படித்தறிந்தேன் . அதன் முன் பிறவி கதைகளும் படித்து தெரிந்து கொண்டேன். இறைவனின் அடியார்கள் என்றுமே இறையருள் பெற்று, அனைத்தையும் வென்றிட பிறந்தவர்கள்தாமே..! மேல்கோட்டை செல்வநாராயணர் கோவிலும், அதன் புராதான கதைகளும், நம் நெஞ்சில் பசுமையாக நிலைத்திருப்பவைதான். எல்லா ம் இறைவனின் விருப்பம். அவனன்றி ஒர் அனுவும் அசையாது. நம் அன்றாட செய்கைகளும், விருப்பங்களும் அவனது விருப்பந்தானே.! சுவாரஸ்யமாக இந்தப்பதிவுகளை ஒவ்வொரு வாரமும் திரட்டி எழுதி வரும் தங்களுக்கும் தெய்வத்தின் அருள் நிறைய உள்ளது. வாழ்த்துகள். வாழ்க வளமுடன் என நானும் வேண்டிக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா ஹரிஹரன் மேடம்.. மிக்க நன்றி... பயணக் களைப்பு தொடர்கிறதா? காரணம், பெண்கள் வீட்டிற்கு வந்தால்,வேலையும் தொடர ஆரம்பிக்கும். அசதியைக் காரணம் காட்டும் வாய்ப்பு, ஆண்களுக்கு உள்ளதுபோலக் கிடையாது. அதனால் கேட்டேன்.

      நீக்கு
  22. திருமதி கமலா ஹரிஹரனின் தெளிவான
    பதில்... நெஞ்சம் நெகிழ்ந்தது...

    எல்லாருக்குமான குறைகள்
    தீர்வதற்கு பிரார்த்தனைகள்
    .
    மகிழ்ச்சி
    அன்பிற்க்கு நன்றியம்மா

    பதிலளிநீக்கு
  23. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். நல்லதே நடக்கட்டும்.

    வாரம் ஒரு பாசுரம் - பாசுரம், அதற்கான விளக்கம் இரண்டுமே சிறப்பு. பிரம்மராக்ஷஸ் கதையும் நன்று.

    எஸ்.வி.வி. அவர்களின் கதை - மனதைத் தொட்டது.

    பதிலளிநீக்கு
  24. எஸ்.வி.வி. யை எனக்கு அறிமுகம் செய்து வைத்தவர் என் தாத்தா அம்மாவின் அப்பா. அவரும் ஓர் வக்கீல் தான். சேதுபதி ராஜாவின் லீகல் அட்வைசர். இவருடைய தொடர்கள் பலவும் படிச்சிருக்கேன். சிவராமன் அதில் மிகவும் பிரபலம். நகைச்சுவைக்கட்டுரைகளும் படிச்சிருக்கேன். இப்போக் கூட உல்லாச வேளை படிச்சுட்டு இருக்கேன். சரளமான தங்கு தடையில்லாமல் சீரான நதியோட்டம் போன்ற நடை. மத்ததுக்குப் பின்னர் வரேன்.

    பதிலளிநீக்கு
  25. பாசுரம் அதற்கான விளக்கமும் நன்று. எமக்கு இவை புதியன.

    கதை நன்றாக இருக்கிறது.முடிவு மனதை இளகவைத்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மாதேவி அவர்கள். உங்கள் வெகேஷன் பயணம் நன்றாக இருந்ததா?

      நீக்கு
  26. படங்கள் அருமை நெல்லை. ஆசுரமும், எட்டுத்தொகையிலிருந்து எடுத்த பரிபாடலும் சிறப்பாகச் சொல்லி இருக்கிறீர்கள். எல்லாமே தமிழில் இருந்தாலும் இப்போதைய தமிழர்கள் (தம்பளர்கள்) இவற்றை எல்லாம் சிறிதும் மதிப்பதே இல்லை. இப்படி எல்லாம் மனிதர்கள் வாழ்ந்திருக்காங்க என்பதே இப்போதைய வளரும் பிள்ளைகளுக்குத் தெரியாமல் கவனமாக டாஸ்மாக், போதை தவிர்த்து வேறே எதுவும் தெரியாமல் வைச்சிருக்காங்க. :(((((

    பதிலளிநீக்கு
  27. கருத்திட்டதைக் காணவில்லையே...!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!