23.4.26

தீமா தீமா என்றால் என்ன அர்த்தம்?

சுஜாதா எழுத்தில் மீண்டும் ஒரு வர்ணனை..  கதை : பெண் இயந்திரம் 

வெந்நீர் அவள் உடலைத் தொட்டது. ஜன்னல் கண்ணாடியை ஒரு கோணத்தில் திருப்பினாள். அப்படித் திருப்பினால் லேசாக அவள் பிம்பம் தெரியும்.. தெரியக்கூட வேண்டாம். அவள் உடலில் ஒவ்வொரு தோற்றமும் அவளுக்கு நெட்டுரு!'

வித்யா ஐந்தடி நாலு அங்குலம், 54.5 கேஜி. 'உங்கள் வாழ்வின் அடுத்து அமையும் கட்டம் மிகுந்த பொறுப்புடனும் புதிய சினேகிதர்களுடனும் ...'  நட்டநடுவே வகிடெடுத்து அதிகம் அடர்த்தியில்லாத ஆனால் சற்று நீளமான தலை மயிர் கறுப்பு என்று சொல்ல முடியாது. நெற்றி நிறைய பெரிதாகப் பொட்டிட்டால் ஏதோ ஒரு தாசித்தனம் வந்துவிடுவதாக நினைப்பு!   எப்போதும் சின்னதாகத்தான் பொட்டிடுவாள்.  நெற்றிப் புருவங்களை ஒரு காலத்தில் சின்ன ட்விஸர் வைத்துச்செப்பனிட்டுக் கொண்டிருந்தாள்.

இப்போது அதற்கெல்லாம் சமயமில்லை. மேலும், அதெல்லாம் எதற்கு என்று ஒரு சின்னக் கேள்வியும் அவளுள் புறப்பட்டுவிட்டது. அதே காரணத்திற்காக, அவள் மேலுதட்டில் மிக லேசாகத் தென்படும் ரோமங்களையும் ஆன்ஃப்ரெஞ்சால் மழிப்பதில்லை. கழுத்து சற்று நீளமானதுதான். பூசிவிட்டாற்போல புஷ்டி. சின்ன மார்பகங்கள். பதிந்த இலைபோல வயிறு. ஓர் ஓட்டக்காரியின் கை கால்கள்... மறுபடி தன் முகத்தை நோக்கினாள். மூக்கு கொஞ்சம் எகிப்தியத் தனத்துடன் நேராக, மிக நேராக... அந்தக் கீழுதட்டில் ஓர் அழுத்தம் பிறப்பதற்கு முன் யாரோ கடைசி நிமிஷத்தில் 'பச்' என்று ஓர் அழுத்து அழுத்தி அனுப்பி வைத்தாற்போல. அதே சமயம் இந்த இரண்டு அம்சங்களும் தன் முகத்திற்கு ஒரு பிரத்தியேக... பிரத்தியேக... என்ன சொல்லலாம்... கவர்ச்சியா? சே என்ன இது ? எப்பப் பார்த்தாலும் உடம்பைப் பற்றியே நினைப்பு.

குளித்துவிட்டுப் போர்த்துக்கொண்டு ஒரே எட்டில் எதிர் அறைக்கு வந்து கதவைச் சாத்திக்கொண்டாள். கொடியில் தொடர்ந்து ஏதோ ஒரு ஸாரியைத் தேர்ந்தெடுத்து - ஏதோ ரவிக்கையைத் தேடினாள்.

=======================================================================================

ஒரு புதிய பாடல் ஒன்று இந்த வாரம்.  எனக்குப் பிடிக்காத ஹீரோவின் படம்.  அதிகம் ரசிக்காத அனிருத் இசையில் பாடல்.  அவரே பாடி இருக்கிறார்.  ஆனால் பாடல் என்னை மிகவும் கவர்ந்து விட்டது.  கேட்டு விட்டுச் சொல்லுங்கள்.  பத்துப் பதினைந்து நாட்களுக்குள் ரிலீசாகி இருக்கும் படம்.  இவ்வளவு புதிய படத்திலிருந்து இதுவரை நான் பாடல் பகிர்ந்ததில்லை என்று நினைக்கிறேன்.  படம் பெயர் LIK.  பிரதீப் ரங்கநாதன் படம்.  அனிருத் இசை.  பாடலை எழுதியவர் விக்னேஷ் சிவன். இந்தப் படத்துக்காக அவர் எழுதிய பாடல் அல்ல.  அவர் தன் குழந்தைகளை பற்றி அவ்வப்போது எழுதி வைப்பாராம்.  அனிருத் அதை எடுத்து சேர்த்து வைத்து தான் போடும் டியூனுக்கு எதுவும் பொருந்துமா என்று பார்ப்பாராம்.  அப்படி பொருந்திய பாடல் இதுவும்.  என்னவோ ஒரு ஈர்ப்பு எனக்கு இந்தப் பாடலின்மேல் ஏற்பட்டது.

 தீமா தீமா என்றால் என்ன அர்த்தம்?  தெரியாது!  இருதய பலவீனமுள்ளவர்கள் காட்சியைப் பார்க்காமல் பாடலை மட்டும் கேளுங்கள்.  நெல்லைக்கு இவரைப் பிடிக்கும்.  ஆனால் பெரும்பாலும் அவர் பாடல்கள் கேட்பதில்லை என்பது வேறு விஷயம்.


=================================================================================

கொத்திக் கொத்தி 
காயப்படுத்தினாலும்
மரம்  
மரங்கொத்திக்கு மனமுவந்து 
அளிக்கிறது 
பொதிந்துகொள்ள 
தன் வயிற்றில் ஒரு இடம்.

குருமா ரசிகரா கூட்டு ரசிகரா
என்று கேட்டால் நான்
பாட்டுக்கு சொல்லி விடுவேன்
கூட்டு ரசிகன்தான் என்று
மசாலா மாசத்துக்கு ஒரு முறை
சேர்க்கலாம்
ஆசைக்கு எப்போதும் கூட்டு தான்
லேசில்
செய்து விடமாட்டார் பாஸ்
செய்து விட்டாலோ
சமையல் அன்று மாஸ்

======================================================================================

ஒவ்வொன்றும் ஒருரகம்!

போனவாரம் உங்களைப்பற்றி நீங்களே ஒரு கமெண்ட் கொடுத்துக் கொள்ள வேண்டுமென்றால் என்ன சொல்வீர்கள்?  ஒரு வரி விமர்சனமாக உங்களையே நீங்கள் என்ன சொல்லிக் கொள்வீர்கள்  என்று கேட்டிருந்தேன்.  யாரும் ஒன்றும் சொல்லவில்லை!

இந்த வாரம் ஒரு விஷயம்...

நீங்கள் யாருக்கோ போன் செய்கிறீர்கள்..  அல்லது உங்களுக்கு போன் வருகிறது.  என்ன செய்வீர்கள்?  அங்கேயே உட்கார்ந்து அட்டென்ட் செய்து பேசுவீர்களா இல்லை எழுந்து தனியாக போய்விடுவீர்களா?  வரும் போனைப் பொறுத்து சில தனியாக பேச வேண்டி இருக்கும்தான்.  ஆனால் எல்லாவற்றையுமா?!  சமயங்களில் அப்படி என்ன தனியாக பேசவேண்டிய விஷயம் இருக்கும் என்று மனதுக்குள் ஒரு கேள்வியும் பிறக்கும், சுவாரஸ்யம் வரும்!!

ஒவ்வொருவருக்கு இப்படியான சில தனி குணங்கள் இருக்கின்றன.  என் மருமகள் போன் வந்தாலே அதை எடுத்துக் கொண்டு  இங்கும் அங்கும் நடந்து கொண்டே பேசுவார்.  அலுக்காமல் நடப்பார்.  என்னுடன் பணிபுரிந்த ஹேமாவும் அப்படிதான்.  வேலைக்கு நடுவில் போன் வந்தால், கூட இருப்பவரை உட்கார்த்தி வைத்து விட்டு எழுந்து வெளியே செல்வார்.  ஜன்னல் வழியே பார்த்தால் இங்குமங்கும் நடந்து கொண்டே பேசிக்கொண்டிருப்பார்.  என் இளையவன் போனை எடுத்துக் கொண்டு எங்கு போனான் என்றே தெரியாமல் காணாமல்போய் பேசி விட்டு வருவான்.  பாஸ் போனுடன் தனியாக ஒதுங்கி விடுவார்.  ஏதோ வேலையாக அவர் பக்கம் சென்றால் அவர் குரல் தழைந்து விடும்.  சிறு இடைவெளி கூட விழும்.  நாம் மறுபடி நகர்ந்து இங்கு வந்தபின் பேச்சு தொடரும்!  

அப்போதுதான் எனக்கும் சந்தேகம் வரும், சுவாரஸ்யம் பிறக்கும்!  'அப்படி என்ன பேசுகிறார்?'

நானும் சரி, என் பெரிய மகனும் சரி இருக்கும் இடத்திலேயே போன் பேசுவோம்.  என் நண்பர் ஒருவர் இடம் பொருள் ஏவல் இல்லாமல், இருக்கும் இடத்திலேயே எல்லோரும் இருக்கையிலேயே ஸ்பீக்கர் போட்டு பேசுவார்.  எதிர்முனையில் பேசுபவருக்கு, தான் ஸ்பீக்கர் போட்டிருக்கிறோம் என்று கூட சொல்லி இருக்க மாட்டார்.  இது என்ன மாதிரி சங்கடங்களை எதிர்முனைக்காரருக்கு ஏற்படுத்தும் என்பதை யோசிக்க மாட்டார்!

அருகியேயே இருந்தாலும் சிலர் போனில் என்ன பேசுகிறார்கள் என்று காதிலேயே விழாது.  அவ்வளவு சின்னதாக பேசுவார்கள்.  இன்னும் சிலரோ நாம் எங்கிருந்தாலும் அவர்கள் பேசுவது கேட்கும்.  பஸ்ஸில், பொது இடங்களில் கூட இப்படிப்பட்டவர்களை சந்தித்திருக்கலாம்!

காதில் ஹெட்செட் வைத்துக் கொண்டு அதைத் தொட்டுக்கொண்டோ, தொடாமலோ பேசுவதே தெரியாமல் பேசுபவர்கள் இருக்கிறார்கள்.  அவர்கள் முகத்தை நீங்கள் பார்த்தால் ஒரு நொடி சந்தேகம் வரும், உங்களிடம் அவர்கள் ஏதாவது சொல்கிறார்களா என்று!

========================================================================================

அட்சய திருதியை அன்று நான் தங்கம் வாங்கியபோது...

=============================================================================================


சிவாஜியின் தம்பி வி.சி.சண்முகம் லண்டனில் படித்துவிட்டு வந்து அண்ணன் சிவாஜியின் பட விவகாரங்களைக் கவனிக்கத் தொடங்கியிருந்த நேரம். ராணுவ அதிகாரியைப் போல வெட்டு ஒன்று துண்டு இரண்டாகப் பேசுபவர். ஆனால் பழக பனித்துளி போல மென்மையான மனிதர்.
விடிவெள்ளி படம் படத்தின் வெளிப்புறக் காட்சிகள் அனைத்தும் பொள்ளாச்சி அருகே உள்ள வேட்டைக்காரன்புதூர் கிராமத்தில் படப்பிடிப்பு செய்யப்பட்டன. படப்பிடிப்பு நடந்த நாட்களில் அந்த கிராமம் சித்திரைத் திருவிழா கண்டது போல அல்லோலகல்லோலப்பட்டது.

அப்போது நடந்த ஒரு சம்பவத்தை கோபுவால் மறக்க முடியாது. வேட்டைக்காரன்புதூர் கிராமத்து நிலச்சுவான்தார்களில் ஒருவர் முத்துமாணிக்கம். சிவாஜியின் நெருங்கிய நண்பர். படக் குழுவினருக்காக அனைத்து வசதிகளையும் அவர்தான் செய்து கொடுத்திருந்தார். முத்துமாணிக்கத்திற்குச் சொந்தமான விவசாயப் பண்ணையில் தென்னை, மா, பலா, வாழை, பாக்கு, நெல்லி என்று பசுமைப் பாய் விரித்திருந்த பிரம்மாண்டமான தோப்பு இருந்தது.

சுமார் 20 கயிற்றுக் கட்டில்களைத் தருவித்த சண்முகம் அவற்றை அந்த தோப்பில் வரிசையாகப் போட்டு வைத்தார். படப்பிடிப்பு முடிந்ததும் இரவு சிவாஜி உள்பட அனைவரும் அந்த கயிற்றுக் கட்டிலில்தான் படுத்துத் தூங்குவார்கள். சிலுசிலுவென்ற தென்றல் காற்று விடிய விடிய உடலைத் தழுவிக்கொண்டே இருக்கும். மாசு மருவற்ற காற்றை அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவே யாரும் மேல்சட்டை அணியாமல் அந்தத் திறந்தவெளி ரிசார்ட் சூழ்நிலையை அனுபவித்தார்கள்.

காலையில் எழுந்து காலைக் கடன்களை முடித்தபின் பண்ணைத் தோப்பிலிருந்து சற்றுத் தூரத்தில் பக்கத்துத் தோட்டத்தில் இருந்த பெரிய மட்டைக் கிணற்றில் குளிக்கச் செல்ல வேண்டும். கிணற்றில் குளிப்பதில் எல்லோரையும் விட சிவாஜி முந்திக் கொள்வார். அவர் குளித்து முடித்து மேக்கப் போடச் சென்ற பிறகு டைரக்ஷன் டீம் குளியலுக்குக் கிளம்பும்.

ஸ்ரீதர், கோபு, சண்முகம், நானு ஆகிய நால்வரும் அன்று எடுக்கப் போகும் காட்சியைப் பற்றிப் பேசிக் கொண்டே கிணற்றை நோக்கி நடப்பார்கள். கிணற்றின் படிவழியே உள்ளே இறங்கிக் குளித்துவிட்டு மேலே வர வேண்டும். ஒரு நாள் கோபு கிணற்றின் பிரம்மாண்டத்தை எட்டிப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார்.

குறும்புத்தனத்திற்குப் பெயர் போன சண்முகம் நானுவைப் பார்த்து கண்ணசைத்தார். அவ்வளவுதான், கோபு சற்றும் எதிர்பாராத நேரத்தில் நானு அவரை அலகேக்காகத் தூக்கிக் கிணற்றுக்குள் எறிந்தார்.

''தொபீர்' என்ற சத்தத்துடன் தண்ணீருக்குள் தலைகுப்புற விழுந்த கோபு தண்ணீருக்கடியில் போய் சடாரென்று மேலே வந்ததும் மூச்சு முட்டியது. இரண்டு மூன்று மிடறு தண்ணீரையும் குடித்துவிட்ட கோபுவுக்கு யாரோ தன் கால்களைப் பிடித்துக் கிணற்றுக்குள் இழுப்பது போன்ற ஒரு பிரம்மை. அவ்வளவுதான், நம் கதை முடிந்தது என்று நினைத்து மீண்டும் உள்ளே மூழ்க வேண்டிய நேரத்தில், கோபுவின் பின்னாலேயே கிணற்றில் குதித்திருந்த சண்முகம் அவரது தலைமுடியைக் கொத்தாகப் பிடித்துக் கொண்டு, "பயப்படாதே கோபு, மூழ்கிட மாட்டே. கை கால்களை உதறிக்கிட்டே உடம்பை அசைச்சு எதிரே இருக்கிற படிக்கட்டு கல்லைப் போய் பிடி. நான் சப்போர்ட் கொடுக்கிறேன்" என்று கூறியபடியே 10 மீட்டர் விட்டம் கொண்ட அந்த மண்டைக் கிணற்றின் எதிர்ப்பக்கம் இழுத்துச் சென்று கோபுவைப் பாதுகாப்பாகப் படிக்கட்டைப் பிடிக்கச் செய்தார்.

மூச்சை நன்கு இழுத்துவிட்ட கோபு, "இதுக்கு பேர் தான் பாழுங்கிணத்துல தள்ளுறதா?" என்றார் கோபு. "இல்லை, இதுக்கு பேர் கடப்பாரை நீச்சல்" என்று சொல்லிவிட்டுச் சிரித்தார் வி.சி. சண்முகம்.

மறுநாள் யாரும் எதிர்பாராத நேரத்தில் கோபுவே கிணற்றில் 'தொபீர்' என்று குதிக்க ஸ்ரீதர், சண்முகம், நானு என எல்லோரும் வாயடைத்துப் போனார்கள். அதன் பிறகு சண்முகத்தின் பயிற்சியில் கடப்பாரை நீச்சலில் கைதேர்ந்தவர் ஆனார் கோபு. இந்தக் கடப்பாரை நீச்சல் சம்பவத்தை வைத்தே நடிகர் பாண்டியராஜன், ஊர்வசி தொடர்பான காட்சி ஒன்றை 'பாட்டி சொல்லைத் தட்டாதே' படத்தில் வைத்தார் கோபு.

கயிற்றுக் கட்டிலில் இரவு தூங்கும்போது கோபுவைத் தேட ஆரம்பித்து விடுவார் சிவாஜி. "ஆச்சாரி, நீதான் சிரிக்கச் சிரிக்கப் பேசுவியே, எதையாவது பேசு" என்று குழந்தையைப் போலக் கெஞ்சுவார். தனது மிமிக்ரி திறமைகளை வைத்து சிவாஜி கணேசனைச் சிரிக்க வைப்பார் கோபு.  ஸ்ரீதர் உட்பட அத்தனை பேரும் சிரித்தபடி உறங்கச் செல்வார்கள்.  சிவாஜியோ கொஞ்ச நேரம் நினைத்து நினைத்துச் சிரித்துவிட்டுத் தூங்கிப் போவார்.

செந்தில்வேல் சிவராஜ் பேஸ்புக்

============================================================================================

தவறான சிகிச்சையால் மரணமடைந்த பட்டுக்கோட்டையார் 

'பாட்டுக்கோட்டை' என்று போற்றப்பட்டவர், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். தத்துவம், அரசியல், காதல், நகைச்சுவை, சோகம் என பல உணர்வுகளில் பாடல்கள் எழுதியுள்ளார். 187 பாடல்களை மட்டுமே எழுதியிருந்த சூழலில், தனது 29 வயதிலேயே மரணம் அடைந்தார்.

அவரது பாடல்களை பற் றி சிலாகித்து பேசுபவர்கள் கூட அவரது மரணம் பற்றி பேசுவதில்லை. 29 வயதிலேயே இறந்துவிட்டார் என்று பரிதாபமாக சொல்லிவிட்டு முடித்துக் கொள்வார்கள். ஆனால் அவரது மரணம் இயற்கையானது அல்ல. அது ஒரு மருத்துவக் கொலை.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனாரின் பாடல் வரிகள் தான் வலிமையானதே தவிர அவரது உடல் அவ்வளவு ஆரோக்கியமானது அல்ல. வயதை தாண்டிய தோற்றம் மெலிந்த தேகம் என்றே கடைசி வரை காணப்பட்டார்.

பல உடல்நல பிரச்சனைகளில் அவர் சிக்கி இருந்தாலும் சைனஸ் பிரச்னை தான் அவருக்கு பெரிய பிரச்னையாக இருந்தது. ஒரு ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியதை தொடர்ந்து அதற்கு ஒப்புக்கொண்டார். ஆனால் ஆபரேஷன் செய்தபோது, டாக்டர்கள் தவறான இடத்தில் ஆபரேஷன் செய்துவிட, அதன் பக்கவிளைவாக முகம் வீங்கி சிகிச்சை பலனின்றி, இறந்தார்.

இது குறித்து அப்போதைய மருத்துவர்கள் இது ஒரு 'மருத்துவ விபத்து' என்று குறிப்பிட்டு பட்டுக்கோட்டையார் மரணத்தை எளிதாக கடந்து சென்று விட்டார்கள் தவறான சிகிச்சைக்கு காரணமான டாக்டர்கள் மீதோ, மருத்துவமனையில் மீதோ எந்தவித புகாரும் யாரும் தரவில்லை என்பதுதான் ஆச்சரியமான விஷயம்.

- தினமலர் 27/12/25 பிளாஷ்பேக் -


பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் அறம்!
1955.'படித்த பெண்' என்றொரு படம்.
இதில்தான் பட்டுக்கோட்டைக் கல்யாண சுந்தரம் தனது முதல் பாடலை எழுதி இருந்தார்.
150 ரூபாய் சன்மானம் பேசப்பட்டிருந்தாலும், படம் முடிந்து வெளிவரத் தாமதமாகிக் கொண்டிருந்ததால் பலமுறை அலைந்தும் பணம் கைக்கு வரவில்லை.
கடைசியாக, தயாரிப்பாளர் வீட்டுக்கு பட்டுக்கோட்டையார் பணம் கேட்கச் சென்றபோது அங்கிருந்த உதவியாளர் இவரை உள்ளே விடவே மறுத்திருக்கிறார்.
ஒரு துண்டுச் சீட்டை எடுத்து,
"தாயால் வளர்ந்தேன்
தமிழால் அறிவு பெற்றேன்
நாயே நேற்றுன்னை நடுத்தெருவில்
சந்தித்தேன்
நீயார் என்னை
நில்லென்று சொல்லுதற்கு?"
என்று எழுதி, "இதை உன் முதலாளியிடம் கொடு" என்று சொல்லி விட்டு வந்தார்.
படத்தாயாரிப்பாளர் பழமையில் நம்பிக்கைக் கொண்டவர்.
கவிஞர் பாடிய 'அறத்'தில் பயந்து போன அவர் உடனடியாக பணத்தைக் கொடுத்தனுப்பி விட்டாராம்.
-படித்தது -



இசை அமைப்பாளர் சிற்பி மனதில் ஏற்பட்ட காயம் 

'செண்பக தோட்டம்' படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமானவர் சிற்பி அன்னை வயல், கோகுலம், நாட்டாமை, உள்ளத்தை அள்ளித் தா, அம்மன் கோவில் வாசலிலே, சுந்தர புருஷன் உள்ளிட்ட பல படங்களுக்கு இசை அமைத்தார். ஆனால் அவரின் மனதில் ஆறாத காயம் ஒன்று உண்டு.

அது அவர் ரஜினி படத்திற்கு இசை அமைக்கும் வாய்ப்பை இழந்தது. மனோபாலா இயக்கத்தில் ரஜினி நடித்த படம் 'ஊர்க்காவலன்'. பாண்டியன், ராதிகா, ரகுவரன் சங்கிலி முருகன், மலேசியா வாசுதேவன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் ஜி.தியாகராஜன் தயாரித்தார். இந்த படத்திற்கு அப்போது வளர்ந்து வந்த சிற்பி இசை அமைப்பதாக முடிவாகி இருந்தது. இதனால் மிகவும் சந்தோஷம் அடைந்த சிற்பி, வடபழனி முருகன் கோவிலுக்கு சென்று வழிபட்டு பிரசாத தட்டுடன் சத்யஜோதி பிலிம்சின் உரிமையாளர் ஆர்.எம்.வீரப்பனை சந்திக்க சென்றார்.

அப்போது அவர் சங்கர்-கணேஷை அழைத்து இசை குறித்து பேசிக் கொண்டிருந்தார். வெளியே வந்த உதவியாளர் பிரசாத தட்டுடன் நின்ற கொண்டிருந்த சிற்பியிடம் படத்திற்கு சங்கர்-கணேஷ் தான் இசை அமைக்க போகிறார்கள், நீங்கள் இல்லை என்று கூறிவிட்டுச் சென்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிற்பி அங்கேயே மயங்கி விழுந்தார்.

அப்போது அங்கு வந்த இயக்குனர் மனோபாலா அவரை தேற்றி அனுப்பி வைத்தார். ஆர்.எம்.வீரப்பனிடம் 'ஏன் சிற்பியை நீக்கினீர்கள்' என்று கேட்டதற்கு "அவன் சின்ன பையனாக இருக்கிறான். ரஜினி படத்திற்கெல்லாம் தாங்க மாட்டான். அதனால் மாற்றி விட்டேன்" என்றார். ஆர்.எம்.வீரப்பனின் முடிவை யாரும் மாற்ற முடியாது என்பதால் மனோபாலாவும் அமைதியாகி விட்டார்.

அதன்பிறகு சிற்பி ரஜினி படத்திற்கு இசை அமைக்கவே இல்லை. ரஜினி படத்திற்கு இசை அமைத்திருந்தால் தன் வாழ்க்கையே மாறி இருக்கும் என்றும், வாய்ப்பு மறுக்கப்பட்டது என் மனதில் ஏற்பட்ட பெரிய காயம் என்றும் சிற்பி பிற்காலத்தில் வேதனையோடு குறிப்பிட்டிருக்கிறார்.

தினமலர் பிளாஷ்பேக் 10/1/26

====================================================================================




குருவியூர் கோரக் கொலை

இருட்டு அறையின் ரகசியம் 

மஞ்சள்குடி மர்மம் 

மாமண்டையூர் மரணம் 

ஜமீன்தாரின் ஜன்ம விரோதி

மாயாபுரி மங்கை

கொட்டையூர் கோமளம்

இதெல்லாம் என்ன துப்பறியும் சாம்பு தன் காதல் மனைவி ஆசை மனைவி வேம்புவுக்காக மகாலட்சுமி லைப்ரரியிலிருந்து படிக்க கொண்டு வந்து கொடுத்த துப்பறியும் புத்தகங்களின் பெயர்கள் இதை படிக்கும் போது எனக்கு வேறு ஒன்றும் ஞாபகத்துக்கு வருகிறது காதலைக்க நேரமில்லை படத்தில் தான் இரண்டு படங்கள் எடுக்கப் போவதாக நாகேஷ் வேக வேகமாக இரண்டு படங்களின் பெயர்களை சொல்லுவார் அது கிட்டத்தட்ட இப்படி இருக்கும் சரியாக நினைவில் இல்லை வாழ்முனையில் முத்தம் கத்தி முனையில் ரத்தம் நிச்சயம் இந்த இரண்டு படங்களின் பெயர்களுக்கு திருத்தம் வரும் என்று நம்புகிறேன்.

============================================================================

செய்தி!  செய்தி..!!

ஒருபக்கம் எரிவாயு உருளை தட்டுப்பாடு..  பாருங்க..  இந்த மாதம் ஐந்தாம் தேதி சிலிண்டருக்கு பதிவு செய்து இன்னமும் எனக்கு உறுதிப்படுத்தும் தகவல் கூட வரவில்லை.  இவர்கள் என்னடான்னா....  தேர்தலில் பணிபுரிவோருக்கு "கவனிக்கிறார்கள்"!



அடங்கப்பா...  யார்யா நீங்கல்லாம்!
அடப்பாவிகளா...   ஒன்றரை கோடி கார் 
இந்நிலையில், சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி பலர் கோரிக்கை விடுத்தனர்.
இதைத்தொடர்ந்து, சீன அரசு, அந்த குடும்பத்தினரிடம் விசாரணையை நடத் தியது. அப்போது அதிகாரிகள், இச்செயல் நிலப்பிரபுத்துவ மூட நம்பிக்கை எனக்கூறி மெர்சிடிஸ் காரை புதைத்த சம்பவத்திற்கு அந்த குடும்பத்தினருக்கு எச்சரிக்கை விடுத்ததுடன், பொது மன்னிப்பையும் கேட்க வைத்தனர்.
இதுதவிர, சுற்றுச்சூழலை மாசுப்படுத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்காக அக்குடும்பத்தினர் மீது அபராதம் விதிக்கவும் சீன அரசு முடிவு செய்துள்ளது.


================================================================================

'செக்ஸ் காமெடி' படம் எடுத்தார் பாலச்சந்தர் 1976ல்.  அவர் மறைவதற்கு முன் இதே படத்தை சித்தார்த்தை வைத்து ரீமேக் செய்ய நினைத்ததாகவும், சித்தார்த் மறுத்து விட்டதாகவும் தகவல்.  படம் மன்மத லீலை.  கமலஹாசன் நடித்த படம்.  கண்ணதாசன் பாடல்களுக்கு எம் எஸ் விஸ்வநாதன் இசை.

இந்தப் படத்திலிருந்து நான் பகிர நினைத்த பாடலை விட்டு வேறொரு பாடலைப் பகிர்கிறேன்.  பகிர நினைத்த பாடல் 'சுகம்தானா சொல்லு கண்ணே..'  பகிரும் பாடல் A V ரமணன் குரலில் வரும் ஆர்ப்பாட்ட, அட்டகாச பாடல்.   பெண் பித்தர் கமல்.  ஜெயப்பிரதா, ஹேமா சவுத்ரி, Y விஜயா என்று எல்லோரையும் வளைத்துப் போடுகிறார்.  அதில் அவருக்கும் அவர் மனைவி ரேகா (ஆலம்)வுக்கும் பிரச்னை வந்து விவாகரத்து வரை போகிறது.  படத்தில் ஒரு சுவாரஸ்யமான கேரக்டர் உண்டு.  ஆபீஸ் மானேஜராக நடிப்பவர் பாத்திரம்.

ஒரு பெண் தன் காதலன் தன்னை விட்டுவிட்டு வேறொரு பெண்ணுடன் சுற்றவதாகச் சொல்லி கமல் உதவியை நாட,  'கிடைத்தது சாக்கு, அடித்தது லாட்டரி' என்று பெண்பித்தர் கமல் அவளுடன் அந்தக் காதலன் பின்னால் சென்று அடிக்கும் லூட்டி பாடலாய்.  ராமணனுக்கு திரையில் முதல் பாடல் என்று நினைக்கிறேன்.  ஏனோ அவருக்கு அவர் மனைவி அளவு திரையில் வாய்ப்பு கிடைக்கவில்லை.


===============================================================================


ஜோக்ஸ்..ஜோக்ஸ்...  ஜோக்ஸ்...  ஜோக்ஸ்...














58 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிரார்த்தனைகள் நிறைவேறட்டும். வாங்க கமலா அக்கா... வணக்கம்.

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    இன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை. பல சுவாரஸ்யமான விஷயங்களுடன் கதம்பம் மணம் வீசுகிறது. சுஜாதா அவர்களின் வர்ணனை ரசித்தேன். எழுத்தாளர்கள் ஒவ்வொருவரும் வர்ணனையில் திறமைசாலிகள்தான்.

    புதுப்பாடலை இதுவரை கேட்டதில்லை. இதில் இதயம் அதிர்ச்சி அடைய என்ன இருக்கிறது.?பழையது (மனமதலீலை) கமல் ரசிகர்களுக்கு விருந்து. படம் கூட தொ. காட்சியில் பார்த்ததாக நினைவு. ஆனால் அவ்வளவாக நினைவில்லை. ஹலோ மை டியர் ராங்நம்பர் பாட்டு அடிக்கடி வானொலியில் கேட்டிருக்கிறேன்.

    அட்சய திருதியை படம் நன்றாக உள்ளது. விரைவில் உங்கள் படங்கள் வெளிவருமோ என்ற நம்பிக்கையை தருகிறது.

    ஜோக்ஸ் அனைத்தும் நன்றாக உள்ளது. இறுதியில் பதிபக்தி ஜோக்ஸ் இப்படம் பதிவிரதை நளாயினி மாதிரியான பெண்கள் இன்னமும் இருக்கிறார்களா என வியந்து போனேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // இதில் இதயம் அதிர்ச்சி அடைய என்ன இருக்கிறது.? //

      ஹிஹிஹிஹி..   எனக்கு அந்தக் கதாநாயகனைப் பிடிக்காது!!

      என் படங்கள் வெளிவருமா.. ஆ.. நிஜமாவா?

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    இன்றைய கவிதைகள் அருமை. மரங்கொத்தியை ஒரு தாய் பாசத்துடன் அரவணைத்துக் கொள்கிறது மரம். அழகாக சொல்லியுள்ளீர்கள். இது முன்பே ஒருதடவை இங்கு படித்திருக்கிறேனோ. ?

    நானும் கூட்டு ரசிகைதான். ஆனால் எங்கள் வீட்டில் சிலருக்கு கூட்டு எதிரி. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் கூட்டு ரசிகன் என்பதை விட குருமா ரசிகன்!  ஆனால் நான் நினைக்கும் வண்ணம் அது எப்போதாவதுதான் செய்யப்படும்!

      நீக்கு
  4. கத்தி முனையில் ரத்தம், மசானத்தில் முத்தம் என நினைவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      நலமா? நேற்றைய முன்தினம் தங்களது பதிலை படித்துக் கொண்டேன். மகிழ்ச்சி. உடன் பதில் தர இயலவில்லை. மன்னிக்கவும்.நேற்றும் வர இயலவில்லை. இன்று என்னவோ அதிசயமாக முதலில் வந்து விட்டேன். சகோதரர் ஸ்ரீராம் அவர்களின் வீட்டில் இன்று முக்கிய விஷேடமோ இன்று. ஒரு மாதமாகவே பதிவுகளுக்கு சரிவர வருவதற்கு இயலாததால், அதுவும் அறியேன். எப்போதும் வழக்கமாக வரும் உங்களையும் இதுவரை காணாததால் அப்படி நினைத்தேன். நீங்களும் அவர்கள் வீட்டு விழாவிற்கு சென்றீருப்பீர்களோ எனவும் நினைத்தேன். அவர்கள் அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துகளை தெரிவியுங்கள். நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன். .

      நீக்கு
    2. ஆமாம். என்றாலும் என்னால் உறுதிப்படுத்த முடியவில்லை. வாங்க நெல்லை...

      நீக்கு
    3. // சகோதரர் ஸ்ரீராம் அவர்களின் வீட்டில் இன்று முக்கிய விஷேடமோ //

      // நீங்களும் அவர்கள் வீட்டு விழாவிற்கு சென்றீருப்பீர்களோ எனவும் நினைத்தேன் //

      ஹா..  ஹா..  ஹா..  உடைச்சுக் கேளுங்க...  அப்படி எல்லாம் ஒன்றுமில்லை!

      நீக்கு
    4. அப்பாடா..! வந்து விட்டீர்களா.! பதிவை கண்டதும் அதிகாலையில் வரும் சகோதரர் நெ. தமிழர், சகோதரி கீதாரெங்கன் இவர்களை காணவில்லையே என்ற நினைப்பில், (உடைக்காமல் , உருட்டாமல்) உருப்படியாக, சற்றே பூடகமாகவும் நெ. தமிழரிடம் கேட்டேன். மேலும், நான் உண்மையிலேயே தங்கள் இல்லத் திருமணம் இன்றுதான் போலும், அதனால்தான் அட்சய திருதியை படம் இன்றைய பதிவோடு வந்திருக்கிறது என்றும் நினைத்து விட்டேன். பிறகுதான் சகோதரி பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்களின் கருத்தைப் பார்த்து தெளிவடைந்தேன். விளக்கத்திற்கு நன்றி.

      நீக்கு
    5. க ஹ. மேடம்... தினமும் 4:45க்கு எழுந்து 12 மணி வரைல பிசியா (11 வரை ஏதாவது உடற்பயிற்சி) இருந்தும் எடை நினைத்த அளவு குறையவில்லை என்பதால் வெறுப்பு வந்து இன்றுஆறு மணிக்கு மேல்தான் எழுந்தேன். யோகாவும் போகலை. நடைப்பயிற்சி பண்ணியாகணுமே என்று ஒரு கருத்துடன் சென்றுவிட்டேன். இட்லி, 23ஐத் தாண்டியதா?

      நீக்கு
    6. நேற்று குலதெய்வம் கோவில் சென்று இளையவனின் கல்யாணப்பத்திரிகையை வைத்து பூஜித்து வந்தோம்.  அங்கு அருகிலிருந்த சில உறவுகளுக்கு உடனடியாக பத்திரிகையும் கொடுத்தாச்..  திரும்பி வரும்போது செங்கற்பட்டு அருகே கடும் போக்குவார்த்துச் சிக்கலில் மாட்டி இரவு வீடு வரும்போது மணி ஒன்றரை!

      நீக்கு
  5. தமிழகத்தில் இருப்பவர்களுக்கு தேர்தல் திருவிழா வாழ்த்துகள்! எல்லோரும் ஜனநாயக கடமை ஆற்றியிருப்பீர்கள்/ஆற்றுவீர்கள் என்று நம்புகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆத்து ஆத்துன்னு ஆத்தலாம் என்று பார்த்தால் நான் SIR Form Fill up செய்யாததால் எனக்கு அந்தஉரிமை இல்லை என்பதை ஆழ்ந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்!  வாங்க பானு அக்கா.

      நீக்கு
    2. வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லாததில் அப்படி என்ன மகிழ்ச்சி?

      நீக்கு
    3. அடிக்கிற வெயிலில் நின்று வேர்த்து விறுவிறுத்து, கறுத்து, பிறகு தேர்தல் ரிசல்ட் வந்து, இதுக்காகவா அவ்வளவு கஷ்டப்பட்டோம் என நொந்துபோவதிலிருந்து விடுதலை அல்லவா? மகிழ்ச்சிக்குக் கேட்பானேன்.

      நீக்கு
    4. // வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லாததில் அப்படி என்ன மகிழ்ச்சி? //

      எதிரான வாக்குதான் என்றாலும் யாருக்கு போடுவது, நம் தொகுதியில் யார் நிற்கிறார்கள் என்கிற குழப்பமெல்லாம் இல்லை பாருங்கள்..  நாம் வாக்களித்தவர்கள் வென்றார்களா என்று சஸ்பென்சாக காத்திருக்க வேண்டியதும்  இல்லை!

      நீக்கு
  6. வியாழன் பதிவில் ஏதோ ஒன்று குறைகிறதே? கவிதை இருக்கிறது, பொக்கிஷம் இருக்கிறது, infact பதிவில் நிறைய பொகிஷப் பகுதிகள்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வியாழன் பதிவு ஏதோ ஒன்று குறைவதாக நீங்கள் சொல்வது மகிழ்ச்சி அளிக்கிறது.  இன்னும் கொஞ்சம் கனம் ஏற்றலாம் பாருங்கள்...!

      நீக்கு
    2. அனுபவம் நெடியதாக வரும். அது மிஸ்ஸிங். ஒரேடியா பொக்கிஷப் பகுதிகள் இருப்பதால் திகட்டல்.

      நீக்கு
    3. அச்சச்சோ...   அனுப்பவ பதிவு முதலில் போடுவதாகவே இல்லை.  அப்புறம் யோசித்து சேர்த்தேன்.  கடும் வேலை நெருக்கடிக்கு நடுவில் இதைத் தயார் செய்து விட்டு குடவாசல் கிளம்பினேன்.

      நீக்கு
  7. எனக்குஃபோன் வந்தால் இருக்கும் இடத்திலேதான் பேசுவேன். பக்கத்தில் இருப்பவர்களின் சத்தம் அதிகமாக இருந்தால் இடத்தை மாற்றிக் கொள்வேன். எப்போதும் போல் உரக்கத்தான் பேசுவேன். "ஏன் இப்படி கத்துகிறோம்? கொஞ்சம் மெதுவாக பேசலாமே" என்று எனக்கே தோன்றும், டெசிபலை கொஞ்சம் குறைப்பேன். என் மகன், மருமகள், மகள், அக்கா மகள்கள் எல்லோரும் மிகவும் மெதுவாக பேசுவார்கள். என் மகன் ஃபோனை எடுத்துக் கொண்டு நகர்ந்து விடுவான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாஸ், என் பெரிய மகன் எல்லோரும் சத்தமாகத்தான் பேசுவார்கள்.  நான் மீடியமாக பேசுவேன்!  மருமகள் பேசுவதே கேட்காது.  ஆனால் நடந்துகொண்டே இருப்பார்.

      நீக்கு
    2. எனக்கு போன் வந்தால் ஸ்பீக்கர் அல்லது சத்தமாகப் பேசுவேன். (வீட்டில். மனைவிக்குத் தெரியணும் என்பதற்காக) என்னுடைய எல்லா நடவடிக்கைகளும் ஒளிவு மறைவில்லாமல் மனைவிக்குத் தெரியும். எனக்கு வீட்டில் உள்ள மற்றவர்களின் போன் பார்ப்பது, மெசேஜ் படிப்பது, அவர்களுடைய பெர்சனல் விஷயத்தைத் தெரிந்துகொள்வது அறவே பிடிக்காது. என் போன் எப்போதும் ஓபன். அவர்கள் மூவருக்கும் என் எல்லா கடவுச் சொற்களும் தெரியும்.போனை எப்போது எடுத்தாலும் அதைப்பற்றிக் கவலை கொள்வதில்லை, ஒன்றைத் தவிர. என்போன் எப்போதுத் 95க்கு மேல் சார்ஜ்ல இருக்கணும். மனைவி என் போனை உபயோகித்தாலும் பிறகு சார்ஜில் போட்டுவிடுவாள். ஐவரில் என் போன் மாத்திரம் எப்போதுத் 90%க்கு மேல் பேட்டரி இருக்கும்.

      நீக்கு
    3. நானும் அப்படிதான்.  என் போனை யார் வேண்டுமானாலும் திறக்கலாம்.  எல்லோருக்கும் பாஸ்வ்ர்ட் தெரியும்.  

      சார்ஜிங் மறுபடி மறுபடி போடுதல் கூடாது என்பார்கள்.  நன்றாகக் குறைந்த பின்னரே போடவேண்டும்.  அதுவும் 80-85 இருந்தால் நல்லது.  பேட்டரிக்கு லாங் லைஃப் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன், கடைப்பிடிக்கிறேன்.

      நீக்கு
  8. மன்மத லீலை செக்ஸ் காமெடிப் படமா? சே சே! அப்படியெல்லாம் சொல்ல முடியாது. //அவர் மறைவதற்கு முன் இதே படத்தை சித்தார்த்தை வைத்து ரீமேக் செய்ய நினைத்ததாகவும், சித்தார்த் மறுத்து விட்டதாகவும் தகவல்.// சித்தார்த் இல்லை, ஜீவாவை வைத்து மன்மத லீலையை ரீமேக் செய்ய ஆசை என்றுதான் ஒரு பேட்டியில் கே.பி. கூறியிருந்தார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // செக்ஸ் காமெடிப் படமா? சே சே! //

      ஆமாம். அது அப்போது அப்படிதான் சொல்லப்பட்டது. சித்தார்த் தகவல் கூட விக்கி சொல்வதுதான்.

      நீக்கு
  9. தங்கம் விற்கும் விலையில் தங்கம் வாங்கினீர்களா? அதுவும் ஐட்டம்களும் பெரிதாக இருக்கின்றனவே? உங்கள் வீட்டில் நிறைய ஓட்டுகள் இருப்பதால் வரும்படி அதிகமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது ஒரு சிறுகதை.. அப்புறம் சொல்கிறேன்.. (எப்போதும் அது பெரிய கதை என்றுதான் சொல்ல வேண்டுமா என்ன!)

      நீக்கு
  10. சுஜாதாவின் எழுத்தை ரசிக்காம இருக்க முடியுமா?

    ஆனால் எனக்கு எப்பவும் எழும் கேள்வி, சுஜாதா இல்லை வேறு நன்றாக எழுதும் ஆண் எழுத்தாளர் இப்படி எழுதினால் ஆஹா ஓஹோ எனும் வாசகர் கூட்டம், ஒரு பெண் எழுத்தாளர் இப்படி எழுதினால் ஏன் வரவேற்பதில்லை?

    நான் அப்படிச் சில கதைகளில் எழுதி பிறகு எபியில் கே வா போவுக்கு என்பதால் வெட்டினேன்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெண் எழுத்தாளர்கள் இப்படி வர்ணித்திருக்கிறார்களா என்று தெரியாது.  அதுவும் இவ்வளவு விஸ்தாரமாக வர்ணிப்பார்களா என்பதிலும் என் சந்தேகம் உண்டு..  வாங்க கீதா.

      நீக்கு
  11. புதிய பாடல் இசை நல்லாருக்குதான் ஸ்ரீராம். ஆனால் விக்னேஷ் சிவனின் பாடல் வரிகள் வார்த்தைகள் புரியாத அளவு இசை இரைச்சல்...

    தீமா தீமா......ஹாஹாஹா இதெல்லாம் ஒரு தீம் ஆ என்பதைத்தான் தீமா தீமான்னு சொல்றாரோ!!!! ஹாஹாஹா

    இருதய பலவீனமுள்ளவர்கள் காட்சியைப் பார்க்காமல் பாடலை மட்டும் கேளுங்கள். //

    ஹாஹாஹா....என் இருதயம் இன்னும் பலம் பெற்றது!!!!

    தகவல்கள் தெரிந்து கொண்டேன்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு இந்தப் பாடல் ஏனோ ரொம்பப் பிடித்து விட்டது.

      நீக்கு
  12. மரங்கொத்தி கவிதை சூப்பர். மரம் இடம் கொடுக்காமல் யார் கொடுப்பாங்க சொல்லுங்க!! மனுஷன் அந்த மரத்தை வெட்டாமல் இருந்தா நல்லது. மரங்க்கொத்திகள் குறைந்து வருதாம் மரங்கள் வெட்டப்படுவதால்

    கீதா

    பதிலளிநீக்கு
  13. கூட்டு கவிதையும் ரசித்தேன் ஸ்ரீராம்.

    எனக்கு இரண்டுமே பிடிக்கும்!

    பாஸ் சமையல் பத்தி சொல்லணுமா!! அசத்திடுவாங்க

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா..  ஹா..   இன்றைய கிச்சன் படத்தையும் ரசித்திருக்கிறீர்கள்.

      நீக்கு
  14. ஒருசிலவற்றிற்குத் தனியாகப் போவேன். ஒரு சில அழைப்புகளை இருந்த இடத்திலேயே பேசுவேன் சிலது நடந்து கொண்டே!!

    நான் தனியாக என்றால் அது மத்தவங்களுக்குத் தெரிய வேண்டாமே என்று....ஆனால் வீட்டில் ரெக்கார்டிங் போய்க் கொண்டிருந்தால் தனியாக எழுந்து அறைக்குள் அல்லது வீட்டிற்கு வெளியே வந்துதான் பேசுவது வழக்கம்.

    பெரும்பாலும் நானும் நடந்து கொண்டேதான்....நம் வீட்டில் நாங்க மூன்று பேருமே நடந்து கொண்டேதான் பேசுவோம்!!!!!!!!!!!!!!!!!!!!!!111

    // ஏதோ வேலையாக அவர் பக்கம் சென்றால் அவர் குரல் தழைந்து விடும். சிறு இடைவெளி கூட விழும். நாம் மறுபடி நகர்ந்து இங்கு வந்தபின் பேச்சு தொடரும்! //

    என்னிடமும் இப்பழக்கம் உண்டு. நம்ம வீட்டில் காது ஷார்ப். வீடும் சின்னது. நான் எங்கிருந்து பேசினாலும் எலலருக்கும் கேட்கும்!!!!!

    என் குரல் கொஞ்சம் பெரிது காது கேட்காததாலோ என்னவொ. எனவே அதைக் குறைத்துக் கொண்டு பேச வேண்டும் என்று நினைக்கிறேன்.

    //அருகியேயே இருந்தாலும் சிலர் போனில் என்ன பேசுகிறார்கள் என்று காதிலேயே விழாது. அவ்வளவு சின்னதாக பேசுவார்கள். //

    யெஸ்!!!!

    அவர்கள் முகத்தை நீங்கள் பார்த்தால் ஒரு நொடி சந்தேகம் வரும், உங்களிடம் அவர்கள் ஏதாவது சொல்கிறார்களா என்று!//

    இது எனக்கு அடிக்கடி வரும்....அதுவும் நம்மைப் பார்த்து ஒரு புன்சிரிப்பும் உதிர்த்தால்?!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த ப்ளூ டூத் போன் பேசுபவர்கள் பற்றி நான் முன்பு ஒரு ஜோக் கட்டி ஆயிரக்கணக்கானவர்கள் (மைனஸ் 995) ரசித்திருந்தார்கள்.

      நான் என் அப்பா மாதிரி போன் பேசும்போது கண்களை மூடிக் கொண்டு பேசுவேன்.  என்னைப் பார்த்து பாஸுக்கும் அந்தப் பழக்கம் உண்டு.  என் அப்பாவை அப்படி செய்யாதே என்று சொன்ன எனக்கே எப்படி இந்தப் பழக்கம் வந்தது என்று தெரியவில்லை!

      நீக்கு
  15. அட்சய திருதியை - ஜெமினியோ சாட் ஜிபிடியோ நல்லா கொடுத்திருக்கே!!
    எ அ கு இ...!!!!!!!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்படியோ அடையாளம் தெரியாத அளவுக்கு மாற்றி கொடுக்கிறதே...  ஒரு சந்தோஷம்!

      நீக்கு
  16. பொள்ளாச்சி சம்பவங்கள் ரொம்ப ரொம்ப ரசித்து வாசித்தேன்! என்ன ஒரு அழகான பந்தமுடனான டீம். ஸ்ரீராம் நீங்களும் யுட்யூபில் கேட்டிருப்பீங்க, 90கள்வ் அரை இருந்த கதாநாயகிகள் நாயகர்கள் சொல்வதையும் கேட்டிருப்பீங்க எல்லாரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவது, கேரவன் கலாச்சாரம் இல்லாமல் ஒன்றாக இருந்து அரட்டை அடிப்பது என்று அவ்வளவு ஜாலியாக இருக்கும் என்று சொல்லுவாங்க. நிஜமாகவே அருமையான காலம்தான்.

    கீதா

    பதிலளிநீக்கு
  17. பட்டுக்கோட்டையார் மரணம் இப்படியானதா.....ஏன் யாரும் கேள்வி கேட்டதில்லை அதைப் பற்றிப் பேசவில்லை?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேட்கப்பட்டு நாம் மறந்திருப்போம்.  சாஸ்திரியின் மரணத்தையே கவலைப்படாதவர்கள் நாம்.

      நீக்கு
  18. பட்டுக்கோட்டையாரின் அந்தக் கவிதை சூப்பர்ல!!!! அந்தத் தயாரிப்பாளர் பழமையில் நம்பிக்கை உடையவராக இருந்ததால் கிடைத்தது ஆனால் இப்பலாம்?

    கீதா

    பதிலளிநீக்கு
  19. சிற்பி அவர்களா உ அ தா, நாட்டாமை படத்துக்கு எல்லாம். பாடல்கள் நல்ல ஹிட் இல்லையா? நாட்டாமையில்தானே கொட்ட பாக்கும் கொழுந்து வெத்தலையும் பாட்டு? நல்லா போட்டிருப்பார். மற்றபடங்கள் பாடல்கள் என்ன என்று தெரியவில்லை.

    நல்ல இசையமைப்பாளர்! அவரது அனுபவம் வருத்ததிற்கு உரியது. இப்பவும் இசை அமைக்கிறாரா?

    கீதா

    பதிலளிநீக்கு
  20. ​//கொத்திக் கொத்தி
    காயப்படுத்தினாலும்
    மரம்
    மரங்கொத்திக்கு மனமுவந்து
    அளிக்கிறது
    பொதிந்துகொள்ள
    தன் வயிற்றில் ஒரு இடம்//

    அகழ்வாரைத் தாங்கும் நிலம்.
    மரங்கொத்திக்கு அடைக்கலம் மரம்.

    குருமாவும் கூட்டும் ஒன்றாகுமோ?
    ஒன்றில் பருப்பு, மற்றதில் தேங்காய் மசாலா.
    இரண்டும் வெவ்வேறு சுவை.

    இங்கு கேரளத்தில் தேங்காய் சேர்க்காத கறி இல்லை. கூட்டு, பொரியல், குருமா என்று எல்லாவற்றிலும். சாம்பாரில் தேங்காய் அரைத்து சேர்ப்பார்கள்.

    நகைக் கடையில் நின்று கொண்டா தங்கம் வாங்கவேண்டும்?

    ஜோக்குகள் காலத்திற்கேற்ப எப்படி மாறியது என்று விளக்குகின்றன. குங்குமம் ஜோக்ஸ் நன்றாக உள்ளன, குறிப்பாக உண்டியல் ஜோக்ஸ்.


    Jayakumar

    பதிலளிநீக்கு
  21. இவ்வியாழன் பதிவு நிறைவில்லாதது போல் உள்ளது. திருப்தி இல்லை.

    பதிலளிநீக்கு
  22. தேவன் தானெழுத வைத்திருந்த தலைப்புக்ளோ?

    நாகேஷ் சொல்லுபவரை கிட்டத்தட்ட இதே போன்றுதான் ஸ்ரீராம் என்று எனக்கும் நினைவு. அந்த சீன் பார்த்த நினைவில்

    கீதா

    பதிலளிநீக்கு
  23. ஸ்ரீராம், நாங்க எரிவாயு உருளைக்குப் பதிவு செய்ததும் வந்துவிட்டதே!

    நீங்க கொடுத்திருக்கும் செய்தி பார்த்தேன். மக்களுக்குத் தேவை இருக்கும் போது இப்படிச் செய்வது ரொம்ப நியாயமற்ற செயல்.

    கீதா

    பதிலளிநீக்கு
  24. மன்மதலீலை படம் அப்படியான படமா என்ன?

    ரமணண் அவர்களின் குரல் சூப்பர்ல. இடையில் வரும் அந்தக் குரலையும் அவரேதான் பாடியிருக்கிறாரா!!! தொண்டை செமையா பாடுபட்டிருக்கும். இப்பாட்டு இப்பதான் கேட்கிறேன் ஸ்ரீராம்.

    அதென்னவோ நீங்க சொன்னாப்ல அவருக்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு. அவர் மனைவிக்கு அவரை விடக் கூடுதலாக இருந்திருக்கலாம் ஆனால் பொதுவாகக் குறைவு என்றே எனக்குத் தோன்றும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  25. முதல் ஜோக் - மௌனமே பார்வையாய் !!!

    குட்டிப் பையன் நல்ல விவரமான பையன் !!

    சிரிப்பு ட்தலைவா சிரிப்பு ஓகே!!!

    கடைசி ஜோக்!! பெண்கள் சாதுரியமானவர்கள்னு சொல்லுதோ!!

    கோயில் உண்டியல் - ஐடியா கொடுப்பது போல இருக்கே!!

    மெஹந்தி - ஹாஹா தலைவர்கள் தேர்தலுக்காக் என்ன வேணாலும் செய்வாங்கன்னு!

    கீதா



    பதிலளிநீக்கு
  26. சுஜாதாவின் வர்ணனை நல்லாத் தான் இருக்கு. பெண் எழுத்தாளர்களில் யாரும் இப்படி எல்லாம் வர்ணித்தது இல்லை தான். ஆனாலும் அநுத்தமா போன்றவர்கள் கொஞ்சம் கொஞ்சம் வர்ணித்திருப்பார்கள். கேட்டவரம் நாவலிலும், நைந்த உள்ளம் நாவலிலும் அநுத்தமா கதாநாயகியை அவள் அண்ணன் மனைவியை என வர்ணித்திருப்பார்.

    என்னமோ இந்தப் பாட்டும் பிட்க்கலை. காட்சியும் சுமார் தான். மரங்கொத்தி மரத்தைக் கொத்துவதை அதுவும் ஒரு வயசான கருவேல மரத்தைக் கொத்துவதைப் பார்த்துக்கொண்டு நசிராபாத் வீட்டில் மத்தியானங்களில் தனியே உட்கார்ந்திருப்பேன். நல்ல அழகானதொரு பொந்தை உருவாக்கும். திறமையான தச்சன்.

    ஜேகேசி சார் கூட்டுக்குப் பருப்புனும் குருமாக்குத் தேங்காய்னும் சொல்றார். நான் பருப்பே போடாமல் தேங்காய் மட்டும் அரைச்சுவிட்டுக் கூட்டுப் பண்ணுவேன். பொரிச்ச கூட்டு என்போம் எங்க பக்கத்தில். அதுக்குப் பருப்பு வேண்டாம். பருப்பு, தேங்காய் போட்டுக்கூட்டு எனில் அன்னிக்கு ரசம் மட்டும் வைப்பாங்க. கூட்டைத் தொட்டுக் கொண்டும் சாதம் சாப்பிட்டுப் பின்னர் ரசம் ஊத்திப்போம். இப்போ அதெல்லாம் கிட்டத்தட்ட மறந்தே போச்சு. குருமான்னா தேங்காய் போட்டோ போடாமலேயோ பண்ணிடுவேன். தேங்காய் போடலைனா கசகசா ஊற வைச்சுச் சேர்த்து அரைச்சுடுவேன். என்றாலும் எனக்கும், மாமாவுக்கு குருமா இரண்டாம்பக்ஷம் தான். குழந்தைகள் இருந்தால் மட்டுமே பண்ணுவேன். இங்கே வந்து அதுவும் இல்லை. :)))) சர்க்கரை அளவு வேறே ரொம்பக் குறைஞ்சு இருக்கு. 88 காலையிலும் காலை உணவுக்குப் பின்னர் சாப்பிட்ட பின்னர் 123 ம் இருக்கு. மாத்திரை ஒரு வேளை மட்டும் போட்டுக்கச் சொல்லி இருக்காங்க. பார்க்கலாம். :)

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!