சென்ற வாரம் சுஜாதாவின் 'ஜில்லு' கதை வெளியானது. இந்த வாரம் ஜெயகாந்தனின் 'நிக்கி'.
ஜீவி ஸார் விருப்பப்படி இந்த இரண்டையும் ஒரு ஒப்பீடு செய்து கருத்து எழுத வேண்டுகிறேன்.
==== ==== === === === === === ==== === === === === === === === ===
நிக்கி
ஜெயகாந்தன்
" ஐஸவுஸாண்டே பஸ்லே அடிபட்டு அந்த நாய் கூய் கூயாப் பூட்ச்சி."
இந்த அறிவிப்புக்குப் பிறகு குப்பத்துச் சிறுவர்கள் தைரியமாக இந்த குட்டிகளைத் தேடி வந்தனர். ஆளுக்கு ஒரு குட்டியை எடுத்துக் கொண்டபின் கடைசியாக ஒன்றை மட்டும் எல்லோரும் நிராதரவாக விட்டுப் போய்விட்டார்கள். அதன் நிறம் கறுப்பு, இரண்டு காதுகளிலும் வாலிலும் மட்டும் வெள்ளைத் திட்டுக்கள்.
"சீ! அது பொட்டடா!" என்று அதனை அவர்கள் ஜாதிப்பிரஷ்டம் செய்வதுபோல் விட்டுச் சென்றனர்.
அந்தப் பெட்டை நாய்க்குட்டி ஒரு புழுமாதிரி நாளெல்லாம் சிணுங்கியவாறு புழுதியிலும் சகதியிலும் நெளிந்து ஊர்ந்து கொண்டிருந்தது.
கண்ணைத் திறந்து முதல் முறையாக உலகைப் பார்த்தது. பசியால் சிணுங்கிச் சிணுங்கி அழுதது. தான் கவனிக்க யாருமில்லாத அநாதை நாய் என்று புரிந்து கொண்டுவிட்டது மாதிரி, நடக்கக்கூடப் பயிலாத அந்த நாய்க்குட்டி கால்களைத் தரையில் இழுத்து இழுத்து நடை பழகியபோதே தனது ஜீவித யாத்திரையை மேற்கொண்டது. அந்தத் தாழ்ந்த இரண்டு குடிசைகளின் நடுவே இருந்து வெளியே வந்து ஈரமும் சகதியுமான குப்பத்துத் தெருவில் அது புரண்டு புரண்டு நடந்த காட்சியைச் சிறுவர்கள் கூடி ரசித்தனர்.
அது தனக்கு ஓர் எஜமானனை அவர்கள் மத்தியில் யாசிப்பது மாதிரி அவலமாக அழுதது. அவர்களும் அதற்குப் பரிதாபப்பட்டனர். ஒரு குடிசையின் திண்ணையில் அதற்குப் புகலிடம் தந்து கஞ்சித் தண்ணீர், சோறு, டீ என்று படிப்படியாகத் தங்களின் தரித்திரத்தை அதற்கும் அறிமுகம் காட்டினர்
இரண்டு நாட்களுக்குப் பிறகு சிறுவர்களுக்கு இந்த நாய் விளையாட்டுச் சலித்துப் போயிற்று. அந்தக் குடிசைக்குச் சொந்தக்காரி இந்த நாயைக் கண்டு, அதன் மீது பூசிக் கிடக்கும் சேறும் சகதியும் அதற்கே சொந்தம் போன்றும், அது அந்தத் திண்ணையின் மூலையை அசுத்தப்படுத்துகிறது என்றும் கோபித்து, விளக்குமாற்றால் குப்பையைக் கூட்ட வந்தவள் நாயையும் சேர்த்துக் கூட்டித் திண்ணையிலிருந்து தெருவுக்குத் தள்ளினாள். அது கத்தி அலறியவாறு தலைகீழாகப் புரண்டு திண்ணையிலிருந்து தெருவில் வீசி விழுந்தது.விழுந்த வேகத்தில் வசமாக அடிபட்டது.
நாய்க்குட்டி பெருங்குரலில் அழுதவாறு புரண்டு எழுந்து ஒரு காலை மட்டும் நொண்டி நொண்டி இழுத்தவாறு தனது பயணத்தைத் தொடர்ந்தது. கொஞ்ச தூரம் நடந்ததும் கத்துவதை நிறுத்திக் கொண்டு, விதியை நொந்துகொண்டு போவது மாதிரி மௌனமாய் காலை இழுத்துக் கொள்ளாமல் கொஞ்சம் சரியாகவே நடக்க ஆரம்பித்தது. பயந்து பயந்து குடிசை மண் சுவரை ஆதாரமாகக் கொண்டு நடந்து குப்பத்தின் எல்லைக்கும் மெயின் ரோட்டுக்கும் குறுக்கே உள்ள நாற்றச் சாக்கடைப் பாலத்தருகே வந்து விட்டது.
மழையிலும் குளிரிலும் முனகி அழுதவாறு தெரு ஓரங்களில் ஓடும் சாக்கடை அருகே போட்டிக்கு யாரும் இல்லாததனால் பொறுக்கித் தின்று உழன்றுகொண்டே அந்தக் குறுகிய தெருவில் சில நாட்கள் இந்த நாய் வாழ்ந்தது. பின் ஒரு நாள் வெயிலடித்தபோது உடம்பின் ஈரம் காய்ந்து, அழுகலையும் கழிவையும் தின்று உடம்பில் ஏறிய பலத்தால் கொஞ்சம் தெம்பும் வளர்ச்சியும் பெற்றிருந்த இந்தக் குட்டி அந்தக் குறுகிய தெருவிலிருந்து வேறொரு பெரிய தெருவுக்கு தனது யாத்திரையைத் தொடங்கிற்று.
கொஞ்சதூரம் பஸ்ஸைத் தொடர்ந்து நாலுகால் பாய்ச்சலில் ஓடிற்று நிக்கி. அந்த நெடிய சாலையில், பிடிக்க முடியாத, எட்ட முடியாத வேகத்தோடு விலகி விலகி எஜமானியோடு வெகுதூரத்தில் போய் கடைசியில் அந்தத் திருப்பத்தில் பார்வைக்கும் மறைந்து விட்டது பஸ். ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கையில் பஸ் மறைந்த பிறகும் அந்தத் திருப்பம் வரைக்கும் ஓடிற்று நிக்கி.பஸ்ஸைக் காணோம்! வேறு வேறு பஸ்களூம் கார்களூம் மனிதர்களூமாகப் பெரும் சந்தடி நிறைந்திருந்தது அந்த வீதியில் வீட்டுக்குத் திரும்ப மனம் கொண்டு நிக்கி வந்த வழியே ஓடி வரலாயிற்று.
சந்தோஷம் தாங்கவில்லை நிக்கிக்கு. ஒரு சுற்றுச் சுற்றிப் பரவச நடனம் ஆடிற்று. அந்த வடைத் துண்டைத் தின்னாமல் தரையில் போட்டு, இரண்டடி பின்னால் நகர்ந்து அதன் அழகை ரசிப்பது மாதிரி பார்த்துக் கொண்டிருந்தது. அதற்குள் யாரோ அந்த வடைத் துண்டை அபகரிக்க வந்துவிட்ட அவசரத்தோடு, அந்தக் கற்பனை எதிரியிடம் போட்டி போட்டுக் கொண்டு ஓடி வந்து தன்னுடைய பொருளை ஸ்வீகரிக்கும் அவசரத்தோடு அதைக் கவ்வியது. மறுபடியும் போட்டியில் ஜயித்த ஆனந்தத்தில் வாயில் கவ்விய அந்த வடைத் துண்டைக் கீழே போட்டுச் சுற்றிச் சுற்றிப் பரவச நடனமாடிச் சுழன்றது.
நாலு திசையும் ஓடிற்று. எஜமானியின் பின்னால் ஓடி வந்தபோது அந்த அவசரத்திலும் பல இடங்களில் உட்கார்ந்து திரும்பி வருவதற்கு வழி தெரியும் பொருட்டுச் சிறுநீர் கழித்திருந்தது நிக்கி. சற்று முன் பெய்த நல்ல மழையில் தெருவெல்லாம் சுத்தமாகியிருந்தது.
சில சமயங்களில் அந்த நாய்கள் நிக்கி தங்களைப் பார்ப்பதைக் கண்டு, பற்கள் வெளித் தெரிய உறுமியவாறு பாய வரும். அப்போதெல்லாம் அந்த எஜமானர்கள் நிக்கியைத்தான் கல்லெடுத்து அடிக்கிற மாதிரி பாவனை காட்டி விரட்டுவார்கள். அப்போதெல்லாம் தொலைவில் வந்து திரும்பிப் பார்த்து ஒரு முறை குரைத்த பின் ஓடிப்போகும் நிக்கி.
நிக்கியைப் பார்த்துக் குரைக்காமல், கூப்பிடுகிற முதல் நாயே இதுதான். நிக்கி லேசாக வாலை ஆட்டிற்று. நிக்கியின் சம்மதம் தெரிந்த அந்த ஜாதி நாய் முன்னிலும் மும்முரமாகக் கதவுகளைப் பிறாண்டித் தாவியது. தரைக்குக் கேட்டுக்கும் இடையே உள்ள சந்தில் நுழைந்து வெளியில் வர முயன்றது. ம், நடக்கவில்லை! அந்தச் சந்தில் நுழைய முடியாத அளவு அது பருமனாக இருந்தது. ஜாதி நாய் பரிதாபமாகக் கொஞ்சியது.
நிக்கிப் பங்களாக் காம்பவுண்டுக்குள் ஓடிப் போய் விட்டது. இரண்டும் மகிழ்ச்சிப் பெருக்கில் ஒன்றன்மீது ஒன்று தாவிப் புரண்டு கவ்வி விளையாடின. நிக்கி அதன் பிடிகளிலிருந்து விலகித் திமிறி ஓடி ஓடி ஆனந்த நடனம் ஆடியது. இதனுடைய ஆட்டத்தைச் சற்று விலகி இருந்து அநுபவித்த ஜாதி நாய் சமயம் பார்த்துக் கொண்டிருந்தது. திடீரென்று நிக்கியின் மீது தாவியது. அவ்வளவுதான்; அந்தப் பிடியிலிருந்து அசைய முடியாமல் கட்டுண்டு கண் கிறங்கியது. பங்களா வீட்டினுள்ளிருந்து நாயைக் காணோமே என்று கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்த வீட்டு எஜமானி, 'ஏ... சீ! சர்தார்!... சர்தார்!" என்று இரண்டு தடவை கூப்பிட்டாள். அதற்குள் இந்தப் பிணைப்பு பிரிக்க முடியாததாகப் போகவே, தன்னை யாராவது கவனித்தார்களா என்று சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு உள்ளே போய்க் கதவை மூடிக் கொண்டாள் எஜமானி.
ஒரு குடிசையின் பின்னால் உள்ள மூலையில் சுகமான புழுதி மண்ணில் ஐந்து அழகிய நாய்க் குட்டிகளைப் பிரசவித்தது நிக்கி.
========================================================================================
* ராமச்சந்திரன் வாழ்க்கையில் பெரிய அக்கறையோடு இருந்ததில்லை எந்த நாளுமே. இலக்கியத்திலும் அப்படியொன்றும் தீவிரமாக இருந்ததாகச் சொல்ல முடியாது. தொடக்கத்தில், திருநெல்வேலியில் பிழைக்கமுடியாத நிலையில், சென்னைக்கு வந்த பிறகுதான், ஒரு மாயம் நடந்த மாதிரி, அவ்வளவு சாதனைகளும் செய்தார். நதியின் சுழல்கள் வெளித் தெரிவதில்லை. அப்படித்தான் வண்ணநிலவன் மனசு. ஒரே ராத்திரியில் மூன்று, நான்கு சிறுகதையெல்லாம் எழுதிய கலைஞன். கடுமையான விமர்சகன்.
* வண்ணநிலவன் கதைகள் பரந்துபட்டவை. வேறு வேறு உலகங்கள். கலைஞனுக்கு மட்டுமே முகம்காட்டும் வாழ்க்கைகள். பல தரப்பட்ட மனிதர்கள். தமிழிலேயே இவ்வளவு விஸ்தீரண மான சிறுகதைப் பிரதேசம் வேறு யாருக்கும் வாய்க்கவில்லை. எளிமை, நுணுக்கம், பூடகம் எனக் கலையின் பரிபூரண குணங்கள் கொண்ட கதைகள். வேறு எந்த மொழியிலாவது இப்படி ஒரு சிறுகதைக் கலைஞன் இருந்தால் கொண்டாடியிருப்பார்கள். வண்ணநிலவன் கதைகள் ஒட்டுமொத்தமான தமிழ்வாழ்வின் தன்மையும் சாராம்சமும் கொண்டவை. தமிழ்ச் சிறுகதையை அதன் அடுத்த கட்ட வளர்ச்சிக்குக் கொண்டுபோனவை. ஒரு சிறுகதைக் கலைஞன் அதில் எவ்வளவு செய்யமுடியுமோ அவ்வளவும் செய்து பார்த்தவர் அவர்.
* வண்ணநிலவன் தண்ணீர் மாதிரி. யாருடன் இருக்கிறாரோ, அவர் மாதிரியே ஆகிவிடுவார். கிறிஸ்துவ நண்பர்களோடு இருந்தபோது பைபிள், மாதாகோயில் இப்படி கம்யூனிஸ்ட் தோழர்களோடு இருந்த நாள்களில் இயங்கியல் பொருள் முதல்வாதம், மார்க்ஸியம் என்று. 'துக்ளக்'இல் இருந்த சமயம், மகாபாரதம், மதுரை சோமு தண்டபாணி தேசிகர் என. அதேவேளையில் தன் சுயத்தையும் இழந்துவிடமாட்டார்.
('நால்வர் 'கட்டுரையிலிருந்து)
நாய்க்குட்டி பெருங்குரலில் அழுதவாறு புரண்டு எழுந்து ஒரு காலை மட்டும் நொண்டி நொண்டி இழுத்தவாறு தனது பயணத்தைத் தொடர்ந்தது. கொஞ்ச தூரம் நடந்ததும் கத்துவதை நிறுத்திக் கொண்டு, விதியை நொந்துகொண்டு போவது மாதிரி மௌனமாய் காலை இழுத்துக் கொள்ளாமல் கொஞ்சம் சரியாகவே நடக்க ஆரம்பித்தது. பயந்து பயந்து குடிசை மண் சுவரை ஆதாரமாகக் கொண்டு நடந்து குப்பத்தின் எல்லைக்கும் மெயின் ரோட்டுக்கும் குறுக்கே உள்ள நாற்றச் சாக்கடைப் பாலத்தருகே வந்து விட்டது.
அதற்கு மேல் திசை புரியாமல் அரை நாள் யோசனையில் அங்கேயே கிடந்து உறங்கி விழித்துக் கத்திக் கத்திக் குரல் தேய்ந்த பிறகு தைரியமாகப் பாலத்தைக் கடந்து மெயின் ரோட்டுக்கு வந்தது.
பெரிய கட்டிடங்கள் நிறைந்த வீதி. ராட்சஸத்தனமாய்ப் பஸ்களும் லாரிகளூம் ஓடிக்கொண்டிருக்கின்றன. ஜன சந்தடி மிகுந்திருக்கிறது. அந்தச் சின்னப் பெட்டை நாய் தைரியமாக வீதியின் குறுக்கே நடந்தது. இவ்வளவு பெரிய பிரபஞ்சத்தில் மனிதன் என்ன என்ன சாகசங்களை எவ்வளவு ஆர்வத்தோடு நடத்திக் காட்டுகிறான்! இந்த நாய் இந்தத் தெருவில் நடக்கக்கூட கூடாதா என்ன? நடந்தது. ஒரு மாடி பஸ் வந்தது. அந்த டிரைவர் நல்ல மனுஷன். இந்தச் சிறிய நாய்க்காக அந்த பெரிய பஸ்ஸையே சில விநாடி நிறுத்தினான். அது குறுக்கே நடந்து போனபிறகு, ''எவ்வளவு சின்ன நாய்! அடிகிடிபட்டுச் சாகப்போகுது. நமக்கு ஏன் அந்தப் பாவம்!" என்று அதற்காக விசனம் கொண்டவன் மாதிரி அதைப்பார்த்துக் கொண்டே அந்தப் பெரிய பஸ்ஸைத் திருப்பினான.
நாய் ரோட்டைக் கடந்துவிட்டது. பிறகு எங்கே போவது? எங்காவது போகவேண்டியதுதானே?
போயிற்று.
மெயின் ரோட்டைக் கடந்து குப்பம் மாதிரி இல்லாத ஆனால் குப்பத்துத் தெரு போன்றதேயான ஒரு குறுகிய தெருவில் நடக்கையில் அதன் எதிரே ஒரு இலை வந்து விழுந்தது. இலை விழுந்ததும் அதற்காகப் பாய்ந்தோடுவதற்கான அநுபவமோ அறிவோ அதற்கு இன்னும் வராததனால் 'பொத்' தென்ற சத்தத்துக்குப் பயந்து பின்னால் பதுங்கியது அது. பதுங்கியதோ, பிழைத்ததோ!
ஒரு பெரிய நாய் அந்த இலையை நோக்கி நாலு கால் பாய்ச்சலில் வந்து கொண்டிருந்தது. இந்தக் குட்டிக்கு அது தன் இனத்தைச் சேர்ந்தது என்று புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு அது பெரிதாகவும் மூர்க்கமாகவும் இருந்ததனால் இது பதுங்கிக்கொண்டு அதை அச்சத்தோடு பார்த்தது. அந்த இலையில் இருப்பது சாப்பிடத் தகுந்தது என்பதைச் சுவரோரமாகப் பதுங்கிக்கொண்டு பார்த்ததனால் இந்தக் குட்டி புரிந்துகொண்டது.ஆனாலும் இந்தக் குட்டிக்குப் பசி வந்தபோது எதிரே இலை விழுந்தும், இலை விழுந்தபோதெல்லாம் போட்டிக்கு மூர்க்கமாக மோதிச் சாடிக்கொண்டு பெரிய நாய்கள் வந்ததனால், இலையில் இருப்பதைச் சாப்பிடலாம் என்று அறிவு வந்தும் அதை அநுபவமாக்கிக் கொள்ள வாய்ப்பு வரவில்லை. ஆனால் பசி மட்டும் வந்துகொண்டே இருந்தது.
மழையிலும் குளிரிலும் முனகி அழுதவாறு தெரு ஓரங்களில் ஓடும் சாக்கடை அருகே போட்டிக்கு யாரும் இல்லாததனால் பொறுக்கித் தின்று உழன்றுகொண்டே அந்தக் குறுகிய தெருவில் சில நாட்கள் இந்த நாய் வாழ்ந்தது. பின் ஒரு நாள் வெயிலடித்தபோது உடம்பின் ஈரம் காய்ந்து, அழுகலையும் கழிவையும் தின்று உடம்பில் ஏறிய பலத்தால் கொஞ்சம் தெம்பும் வளர்ச்சியும் பெற்றிருந்த இந்தக் குட்டி அந்தக் குறுகிய தெருவிலிருந்து வேறொரு பெரிய தெருவுக்கு தனது யாத்திரையைத் தொடங்கிற்று.
அந்த நாளை இந்த நாய்க்கு ஒரு சோபன தினம் என்று சொல்ல வேண்டும். அழுது அடம் பிடித்த ஒரு குழந்தையை அதன் தாய் மல்லுக்கட்டி எங்கேயோ தூக்கிக்கொண்டு போகிறாள்.
குழந்தை பிடிவாதமாய் அவள் பிடியில் அடங்காமல் திமிறித் திமிறித் தாயின் இடுப்பிலிருந்து நழுவி நழுவி வழிகிறது.ஒரு கையில் சிலேட்டும் பையும் வைத்துக்கொண்டு அந்தத் தாய் அந்தக் குழந்தையை ஒரு கையால் சமாளிக்க முடியாமல் வைது அடிக்கிறாள். அடம் பிடித்த குழந்தை அலறி அழுகிறது.
அழுகிற குழந்தையை அவள் சமாதானம் செய்து கொஞ்சுகின்ற வேளையில் இந்தக் குட்டி அங்கே போய் சேர்ந்தது. இந்த நாயை வேடிக்கை காட்டி அந்தக் குழந்தையைத் தாய் சமாதானப்படுத்தினாள்.
இப்போது அந்தக் குழந்தை இந்த நாய் வேண்டுமென்று அடம் பிடித்தது.அந்த மனித நேசத்தைப் புரிந்துகொண்ட இந்த அநாதை நாய் குழைந்து வாலை ஆட்டிற்று.
நல்ல வேளை. மழையில் நனைந்தும் வெயிலில் உலர்ந்தும் இது சுத்தமாக இருந்தது. நேற்றுவரை இது தின்ற அழுகலும் கழிவும் மனிதர்களுடையதுதானே! நாய்க்குட்டியை எடுத்து முத்தம் கொடுத்துக் குழந்தையிடம் கொஞ்சி அதன் கையில் கொடுத்தாள் தாய்.
இந்த நாய் ஜென்ம சாபல்யம் அடைந்தது.
சிலகாலம் அந்த வீட்டின் திண்ணை தூணில் சணல் கயிற்றால் கட்டப்பட்டுக் குழந்தையின் காட்சிப் பொருளாகவும் விளையாட்டுச் சாமானாகவும் அது வளர்ந்தது. அதற்கு அந்தக் குழந்தை தன் மழலையில் 'பப்பி' என்றோ 'நிக்கி' என்றோ பேரிட்டது.
இப்போது பார்வைக்குப் பெரிய நாய் மாதிரி உருவம் கொண்டிருந்த அந்தப் பெட்டை நாய் நிக்கி, ஒரு நாள் அந்த வீட்டு எஜமானி வெளியில் போனபோது நன்றியுணர்ச்சியுடன் அவளைத் தொடர்ந்து ஓடிற்று. அவள், "வீட்டுக்குப் போ!" என்று எத்தனையோ முறை விரட்டியும் குழந்தை மாதிரி போக்குக் காட்டியும் ஒளிந்து ஒளிந்தும் அவளைத் தொடர்ந்து வாலை ஆட்டிக் கொண்டு துள்ளித் துள்ளி ஓடிற்று. அப்படி அவள் தன்னை விரட்டுவதும் அவள் விரட்டியவுடன் சில அடிகள் ஓடிப் பின்பு திரும்பிப் பார்த்து, அவளைத் தொடர்ந்து ஓடிப் பிடிப்பதும் நிக்கிக்கு ஆனந்தமான விளையாட்டாக இருந்தது. அந்த அம்மாவுக்கு வேலை இல்லையா என்ன? கடைசியில் வீட்டுக்குப் போய்விடும்' என்ற நம்பிக்கையோடு அவள் பஸ்ஸில் ஏறிப் போய்விட்டாள்.
வரும் வழியில் ஒரு சிறிய சந்து அங்கேயிருந்து மசால்வடை வாசனை எண்ணெய்க் கமறலுடன் வீசிற்று. நிக்கி சற்று நின்று காதுகளை உயர்த்தி, வேர்வையின் ஈரம் துளித்த நாசி விரிய வாடை பிடித்தது. மகிழ்ச்சியுடன் ஒரு துள்ளலில் சந்துக்குள் நுழைந்தது. ஒரு கிழவி, மரத்தடியில் அடுப்பைச் சுற்றிலும் தகர அடைப்பு வைத்து வடை சுட்டுக் கொண்டிருக்கிறாள். பக்கத்திலுள்ள குப்பை மேட்டில் ஏறிப் படுத்துக்கொண்டு மிகுந்த சுவாரசியத்துடன் வடை வாசனையை வாயில் நீரொழுக அநுபவித்துக் கொண்டிருந்தது நிக்கி. எப்போதாவது ஒரு வடையில் கொஞ்சம் பிய்த்துத் தன்னிடம் எறிய மாட்டாளா என்ற கற்பனையோடு அவளையே தன் எஜமானியாகப் பாவித்து வாலாட்டிற்று.
ஏதோ ஒரு சமயம் அவளும் ஒரு சிறு துண்டு வடையை நிக்கியிடம் வீசி எறிந்தாள்.
சந்தோஷம் தாங்கவில்லை நிக்கிக்கு. ஒரு சுற்றுச் சுற்றிப் பரவச நடனம் ஆடிற்று. அந்த வடைத் துண்டைத் தின்னாமல் தரையில் போட்டு, இரண்டடி பின்னால் நகர்ந்து அதன் அழகை ரசிப்பது மாதிரி பார்த்துக் கொண்டிருந்தது. அதற்குள் யாரோ அந்த வடைத் துண்டை அபகரிக்க வந்துவிட்ட அவசரத்தோடு, அந்தக் கற்பனை எதிரியிடம் போட்டி போட்டுக் கொண்டு ஓடி வந்து தன்னுடைய பொருளை ஸ்வீகரிக்கும் அவசரத்தோடு அதைக் கவ்வியது. மறுபடியும் போட்டியில் ஜயித்த ஆனந்தத்தில் வாயில் கவ்விய அந்த வடைத் துண்டைக் கீழே போட்டுச் சுற்றிச் சுற்றிப் பரவச நடனமாடிச் சுழன்றது.
திடீரென மழை பெய்தது. கிழவி அடுப்பையும் பிற சாமான்களையும் அவசர அவசரமாகத் தூக்கிக் கொண்டு பக்கத்திலிருந்த வீட்டின் திண்ணைக்கு ஓடினாள். நிக்கியும் மழைக்காக அந்தத் திண்ணையோரமாக ஒதுங்கி நின்றது. நல்ல மழை சடசடத்துப் பெய்து சற்று நேரத்தில் ஓய்ந்தது. மழை நின்ற பின் தெருவில் ஜனங்கள் நடமாடினார்கள். பள்ளிக்கூடத்திலிருந்து பிள்ளைகள் திரும்பின
நிக்கிக்குத் தன் எஜமானியும் தனக்குப் பேரிட்ட அந்தப் பாப்பாவும் நினைவுக்கு வந்தனர். பாப்பாவின் நினைவு வந்ததும் அதற்கு ஒரு விநாடி கூட அங்கே கால் தரிக்கவில்லை. பாய்ந்து பாய்ந்து ஓடிற்று. பாதைகள் பல திசைகளில் பிரிந்தன. வந்த வழி எதுவென்று அதற்குப் புரியவில்லை. எந்த திசையில் பாப்பாவின் வீடு இருக்கிறதென்று பிடிபடவில்லை.
நாலு திசையும் ஓடிற்று. எஜமானியின் பின்னால் ஓடி வந்தபோது அந்த அவசரத்திலும் பல இடங்களில் உட்கார்ந்து திரும்பி வருவதற்கு வழி தெரியும் பொருட்டுச் சிறுநீர் கழித்திருந்தது நிக்கி. சற்று முன் பெய்த நல்ல மழையில் தெருவெல்லாம் சுத்தமாகியிருந்தது.
நிக்கி நம்பிக்கை இழக்காமல் ஓடிக் கொண்டிருந்தது. பொழுதும் இருட்டிப் போயிற்று. தெரு விளக்குகளெல்லாம் எரிய ஆரம்பித்தன. நிக்கிக்குப் பயம் பிறந்தது. தன் எஜமானியையோ பாப்பாவையோ பார்க்கவே முடியாதோ என்ற ஏக்கத்தில் அது வானத்தைப் பார்த்து அழுதது. இரவெல்லாம் அழுது அழுது ஏதோ ஒரு தெருவில் எங்கோ ஒரு மூலையில் படுத்து உறங்கி விழித்து அடுத்த நாள் காலை மறுபடி அனாதையாயிற்று!
தெருவில் போகிறவர்களையெல்லாம் தன் எஜமானியோ என்று நினைத்து நினைத்து ஓடி அவர்களால் விரட்டியடிக்கப்பட்டுப் பரிதாபமாகத் திரும்பியது நிக்கி
இப்போதெல்லாம் தெருவில் எச்சிலை விழுகிறபோது பெரிய நாய்களுக்குப் பயப்படாமல் பாய்ந்து அவற்றோடு சண்டையிட்டுத் தன் பங்கை எடுத்துக் கொள்ளுகிற அளவுக்கு நிக்கி வளர்ந்திருந்ததனால் அதன் வயிற்றுப் பிரச்னை ஒருவாறு தீர்ந்துவிடுகிறது.
ஆனாலும் வாழ்க்கையின் பிரச்னை வயிறு மட்டுமா? அதற்கு மனித நேசம் பசிக்கு உணவு மாதிரி ஓர் அவசியத் தேவையாயிற்று.! அந்தப் பாப்பாவையும் எஜமானியையும் எண்ணி எண்ணி எல்லா இரவுகளிலும் தனிமையில் 'ஓ' வென்று அழுதது நிக்கி.ரோட்டில் சங்கிலியால் பிணித்துக் கையில் ஒய்யாரமாகப் பிடித்துக் கொண்டு நடக்கும் எஜமானர்களின் பின்னால் ஓடுகிற சிங்கார நாய்களையும், சங்கிலியால் பிணைப்புண்டு மதர்ப்போடு எஜமானர்களையே இழுத்துக் கொண்டு முன்னால் செல்கின்ற கம்பீர நாய்களையும், கார்களில் எஜமானர்களோடு சமதையாக வீற்றிருந்து வெளியே தலைநீட்டிப் பார்க்கிற செல்ல நாய்களையும் பொறாமையோடும் கவலையோடும் பார்த்து அழுதது நிக்கி.
சில சமயங்களில் அந்த நாய்கள் நிக்கி தங்களைப் பார்ப்பதைக் கண்டு, பற்கள் வெளித் தெரிய உறுமியவாறு பாய வரும். அப்போதெல்லாம் அந்த எஜமானர்கள் நிக்கியைத்தான் கல்லெடுத்து அடிக்கிற மாதிரி பாவனை காட்டி விரட்டுவார்கள். அப்போதெல்லாம் தொலைவில் வந்து திரும்பிப் பார்த்து ஒரு முறை குரைத்த பின் ஓடிப்போகும் நிக்கி.
ஒருநாள் மத்தியானம். பங்களாக்கள் நிறைந்த ஒரு தெரு, ஜனசந்தடியே இல்லை. நல்ல வெயில் பகலெல்லாம் ஓடி ஓடி, ஊரெல்லாம் பொறுக்கித் தின்று வயிறு புடைத்துக் கொண்டிருந்தது நிக்கிக்கு. எங்காவது சுகமான இடம் தேடி, ஒரு நிழலில் படுத்துக் கிடக்கும் உத்தேசத்துடன் ஓடிக் கொண்டிருந்தது. யாரோ தன்னைக் கூப்பிடுவது மாதிரி குரலோ சிணுங்கலோ கேட்டது. ஓடிக் கொண்டிருந்த நிக்கி நின்று திரும்பிக் காதுகளை உயர்த்திப் பார்த்தது.
ஒரு பங்களாவின் பூட்டிய கேட்டுக்குப் பின்னால் ஒரு நாய் முன்னங்கால்களைத் தூக்கி இரும்பாலான அந்தக் கேட்டின்மீது வைத்து எம்பி நின்றுகொண்டு நிக்கியை அழைத்தது.
அதன் உடம்புதான் என்ன வெள்ளை! சடை சடையாய் வெள்ளி மாதிரி சுருள் முடி வழிகின்றது. அது நின்ற நிலையில் ஆண் நாய் என்று தெரிகிறது. நிக்கி சற்று நின்றது. கம்பியைப் பிறாண்டிச் சிணுங்கிச் சிணுங்கி அது தன்னை அழைக்கும் தவிப்பை ரசித்துப் பார்த்தது.
நிக்கியைப் பார்த்துக் குரைக்காமல், கூப்பிடுகிற முதல் நாயே இதுதான். நிக்கி லேசாக வாலை ஆட்டிற்று. நிக்கியின் சம்மதம் தெரிந்த அந்த ஜாதி நாய் முன்னிலும் மும்முரமாகக் கதவுகளைப் பிறாண்டித் தாவியது. தரைக்குக் கேட்டுக்கும் இடையே உள்ள சந்தில் நுழைந்து வெளியில் வர முயன்றது. ம், நடக்கவில்லை! அந்தச் சந்தில் நுழைய முடியாத அளவு அது பருமனாக இருந்தது. ஜாதி நாய் பரிதாபமாகக் கொஞ்சியது.
நிக்கிக்கும் அதன் அருகில் போகவேண்டும் போலிருந்தது. அந்த ஜாதி நாய், தான் மனித நேசத்துக்காகத் தவிக்கிற மாதிரி, இன்னொரு நாயின் நேசத்துக்காகத் தவிப்பதை நிக்கி புரிந்து கொண்டது. அது தனக்காகத் தவிக்கிறது என்பதைப் புரிந்து கொண்டு மகிழ்ந்தது. அதுவும் இவ்வளவு பெரிய இடத்து உயர்ந்த ஜாதி நாயின் நேசம் கிடைக்கும்போது ஓர் ஆதரவுமின்றித் தெரு நாயாக அலையும் நிக்கியால் எப்படி இந்தக் காதல் மிகுந்த அழைப்பை மீறிப்போக முடியும்?
போயிற்று. கேட்டுக்குக் கீழே இருந்த இடைவெளி வழியாக அந்த ஜாதி நாய்தான் போக முடியவில்லை. எனினும் இந்தத் தெரு நாய் நுழைந்து உள்ளே வர முடியும் என்று கணக்கிட்டு வைத்ததுபோல் அந்த ஜாதி நாய் நிக்கியை இதன் வழியாக வா' என்று கூறுவது போல் நிக்கியின் முன்னங்கால்களில் ஒன்றைப் பிடித்து இழுத்தது.
நிக்கிப் பங்களாக் காம்பவுண்டுக்குள் ஓடிப் போய் விட்டது. இரண்டும் மகிழ்ச்சிப் பெருக்கில் ஒன்றன்மீது ஒன்று தாவிப் புரண்டு கவ்வி விளையாடின. நிக்கி அதன் பிடிகளிலிருந்து விலகித் திமிறி ஓடி ஓடி ஆனந்த நடனம் ஆடியது. இதனுடைய ஆட்டத்தைச் சற்று விலகி இருந்து அநுபவித்த ஜாதி நாய் சமயம் பார்த்துக் கொண்டிருந்தது. திடீரென்று நிக்கியின் மீது தாவியது. அவ்வளவுதான்; அந்தப் பிடியிலிருந்து அசைய முடியாமல் கட்டுண்டு கண் கிறங்கியது. பங்களா வீட்டினுள்ளிருந்து நாயைக் காணோமே என்று கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்த வீட்டு எஜமானி, 'ஏ... சீ! சர்தார்!... சர்தார்!" என்று இரண்டு தடவை கூப்பிட்டாள். அதற்குள் இந்தப் பிணைப்பு பிரிக்க முடியாததாகப் போகவே, தன்னை யாராவது கவனித்தார்களா என்று சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு உள்ளே போய்க் கதவை மூடிக் கொண்டாள் எஜமானி.
இப்போதெல்லாம் நிக்கி எங்கே போனாலும் எல்லோருமே விரட்டுகிறார்கள். எந்த வீட்டின் அருகேயும் யாரும் அதனை நெருங்க விடமாட்டேனென்கிறார்களே!
எங்கேயாவது இந்தத் தெரு நாய், குட்டி போட்டு வைத்துவிடுமோ என்ற அச்சத்தினாலேயே அவர்கள் விரட்டுகிறார்கள் என்று நிக்கிக்குப் புரியவே இல்லை. விரட்டுவதும் ஓடுவதும் அதற்குப் புதிதா என்ன? ஆனாலும் இப்போதெல்லாம் ஓடுவது சிரமமாக இருக்கிறதே, இந்த அநுபவந்தான் அதற்குப் புதிதாக இருந்தது.
சுத்தமான திண்ணையிலும் காம்பவுண்டுகளிலும் இந்த அசுத்தம் பிடித்த நாய்க்கு இடம் தர மறுத்து விரட்டியபின் கடைசியில் ஒருநாள் இரவில் மிகுந்த வேதனையோடும் விரக்தியோடும் அசுத்தம் பிடித்த ஒரு சேரிக்குள் நுழைந்தது நிக்கி.அது பிறந்ததே. அந்த மாதிரி இன்னொரு குப்பம்.ஈரம், சகதி.
ஒரு குடிசையின் பின்னால் உள்ள மூலையில் சுகமான புழுதி மண்ணில் ஐந்து அழகிய நாய்க் குட்டிகளைப் பிரசவித்தது நிக்கி.
எல்லோரும் வந்து அந்தக் குட்டிகளின் அழகைப் புகழ்ந்தார்கள். ஏதோ ஜாதி நாயின் கலப்பு என்று பெருமையாகப் பேசிக்கொண்டார்கள். சில நாட்களில் அவை அனைத்தும் நிக்கியிடமிருந்து பறிபோயின.
வாழ்வும் தாழ்வும், பெருமையும் வீழ்ச்சியும், மகிழ்ச்சியும் துயரமும் நாயின் வாழ்க்கையிலும் மாறி மாறித்தான் வரும் போலும்!
காரில் போகிற, சங்கிலியால் பிணித்துக் கையில் இழுத்துக் கொண்டு போகிற ஜாதி நாய்களைப் பார்த்து இப்போது நிக்கி ஒடுகிறது. ஒருவேளை, தனது குட்டியை அது தேடுகிறதோ?
நிக்கி பெற்றதாகவே இருந்தாலும் அவை நிக்கியின் ஜாதியாகிவிடுமா, என்ன?அதோ, பங்களா நாயையோ அல்லது இன்னுமொரு குப்பத்து நாயையோ தேடித் தெரு நாயாக நிக்கி அலைந்து கொண்டிருக்கிறது. அதற்கு இப்போது ஒரு நாயின் தேவையை நாடுகிற ஸீஸன். தேவை என்று வந்து விட்டால் ஜாதியையா பார்க்கத் தோன்றும்.
===========================================================================================
'காவிரி'க்கு தீர்வு
----------------------------------
காவிரிப் பிரச்னைக்கு என்னதான் தீர்வு என்று பலர் கேட்டிருக்கிறார்கள். தற்போது இரு மாநிலங்களிலும் உணர்ச்சியின் உச்சத்தில் இயங்கும் இந்தப் பிரச்சனைக்கு அறிவுபூர்வமாகத் தீர்வு காண இயலாது.
இரண்டு மாநிலங்களும் காவிரியை - ஒரு கன்னியாக, அன்னையாகப் பார்க்காமல், நதியாகப் பார்க்க வேண்டும். தஞ்சாவூரிலும், மண்டியாவிலும் நெல் நெல்தான் என்பதை உணரவேண்டும். அதற்குச் சமயம் வரவில்லை. முணுக்கென்றால் அணைக்கட்டுக்குள் - கர்நாடகாவில் - குதித்து விடுகிறார்கள்.
தமிழ்நாட்டில் நெய்வேலிக்குப்போய் - ஷாக் அடிக்கும் அபாயத்தை அறியாமல், 440 கிலோ வோல்ட்டை - மெயின் ஸ்விட்ச்சு போல அணைப்பேன் என்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில் தமிழ்நாட்டில் தாற்காலிகத் தீர்வு இதுதான்.
நாம் நதிகளின் கீழ்ப் பாகத்தில் இருக்கிறோம். அதனால், அவர்கள் தண்ணீர் விட்டால்தான் நமக்குத் தண்ணீர் என்பதை உணர்ந்து, அவர்களிடம் சமரசம் நாட வேண்டும்.
கன்னடக்காரர்கள் அவ்வளவு மோசமானவர்கள் அல்ல. அவர்களும் சத்தியத்துக்குக் கட்டுப்பட்டவர்கள்தான். ஒருசிலர், அங்கேயும் அரசியல் ஆதாயம் தேடிக்கொண்டு, பலரை உசுப்பி வீட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில் டாக்டர் எம் எஸ் ஸ்வாமிநாதன் சொன்னபடி நாம் மழைநீர் சேகரிப்பது, குளம் குட்டைகளைப் புதுப்பிப்பது, watershed management, கடல் நீரை உப்பு நீக்குவது போன்ற திட்டங்களைத் தாமதமில்லாமல் செயல்படுத்த வேண்டும்.
'காவிரி நீரில்லையா? என்ன போச்சு! எங்களால் சமாளிக்க முடியும்' என்று காட்ட வேண்டும். அதற்கு டெல்டாவைத் தவிர, மற்ற இடங்களில் அதிக நீர் கேட்கும் பயிர்களைக் கட்டுப்படுத்தவேண்டும்.
ஜப்பானில் ஹைட்ரோபோனி முறைப்படி நெல் வயல்களைப் பாளம் பாளமாகச் சுவரில் சாய்த்துப் பயிரிடுகிறார்கள். நம் விவசாயிகள் அதிக நீரில் நெல் பயிரிட்டுப் பழகியவர்கள்.
அவர்களுக்குப் புதிய முறைகளைக் கற்றுக் கொடுக்கவேண்டும். அரசியல் ரீதியில் காவிரிக்குத் தீர்வு காண, என்னதான் சுப்ரீம் கோர்ட்டு ஆணையிட்டாலும், அதை மீற ஒரு மாநில அரசு பயப்படாதபோது ஒரே ஒரு வழிதான் புலப்படுகிறது.
கர்நாடகத்திலும், தமிழ் நாட்டிலும் ஒரே கட்சி ஆள வேண்டும். முடிந்தால், டில்லியில்கூட அதே கட்சி ஆண்டால்தான் அவர்களை வலுக்கட்டாயமாக நீர் அனுப்பப் சொல்ல முடியும். அதுவரை, இந்தப் பிரச்சனைக்கு மற்றொரு தீர்வு, ஓர் இரண்டெழுத்து வார்த்தை.
'மழை.'
சுஜாதா - 20-10-2002 இல்.
=======================================================================================
வண்ணநிலவன் ( டிசம்பர் 15, 1949) ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார். தூத்துக்குடி மாவட்டம், தாதன்குளம் இவரது சொந்த ஊர்.திருநெல்வேலியில் பிறந்த இவரின் இயற்பெயர் உ. ராமச்சந்திரன் ஆகும். இவர் பாளையங்கோட்டை, திருநெல்வேலி , ஸ்ரீ வைகுண்டம் ஆகிய ஊர்களில் படித்தார். 1973-ல் சென்னைக்கு வேலை தேடி வந்தார்.
கண்ணதாசன், கணையாழி, புதுவைக்குரல் போன்ற பத்திரிகைகளிலும், 1976-ல் துக்ளக் பத்திரிகையிலும் பின்னர் ‘சுபமங்களா’ பத்திரிகையிலும் ஆசிரியர் குழுவில் சிறிது காலம் வேலை பார்த்தார். தமிழில் குறிப்பிடத்தகுந்த திரைப்படமான ருத்ரையாவின் ‘அவள் அப்படித்தான்’ திரைப்படத்தின் வசனகர்த்தாவாகவும் பணியாற்றியுள்ளார்.
திரு. விக்கிரமாதித்யன்
கவிஞர்
* ராமச்சந்திரன் வாழ்க்கையில் பெரிய அக்கறையோடு இருந்ததில்லை எந்த நாளுமே. இலக்கியத்திலும் அப்படியொன்றும் தீவிரமாக இருந்ததாகச் சொல்ல முடியாது. தொடக்கத்தில், திருநெல்வேலியில் பிழைக்கமுடியாத நிலையில், சென்னைக்கு வந்த பிறகுதான், ஒரு மாயம் நடந்த மாதிரி, அவ்வளவு சாதனைகளும் செய்தார். நதியின் சுழல்கள் வெளித் தெரிவதில்லை. அப்படித்தான் வண்ணநிலவன் மனசு. ஒரே ராத்திரியில் மூன்று, நான்கு சிறுகதையெல்லாம் எழுதிய கலைஞன். கடுமையான விமர்சகன்.
* வண்ணநிலவன் கதைகள் பரந்துபட்டவை. வேறு வேறு உலகங்கள். கலைஞனுக்கு மட்டுமே முகம்காட்டும் வாழ்க்கைகள். பல தரப்பட்ட மனிதர்கள். தமிழிலேயே இவ்வளவு விஸ்தீரண மான சிறுகதைப் பிரதேசம் வேறு யாருக்கும் வாய்க்கவில்லை. எளிமை, நுணுக்கம், பூடகம் எனக் கலையின் பரிபூரண குணங்கள் கொண்ட கதைகள். வேறு எந்த மொழியிலாவது இப்படி ஒரு சிறுகதைக் கலைஞன் இருந்தால் கொண்டாடியிருப்பார்கள். வண்ணநிலவன் கதைகள் ஒட்டுமொத்தமான தமிழ்வாழ்வின் தன்மையும் சாராம்சமும் கொண்டவை. தமிழ்ச் சிறுகதையை அதன் அடுத்த கட்ட வளர்ச்சிக்குக் கொண்டுபோனவை. ஒரு சிறுகதைக் கலைஞன் அதில் எவ்வளவு செய்யமுடியுமோ அவ்வளவும் செய்து பார்த்தவர் அவர்.
* வண்ணநிலவன் தண்ணீர் மாதிரி. யாருடன் இருக்கிறாரோ, அவர் மாதிரியே ஆகிவிடுவார். கிறிஸ்துவ நண்பர்களோடு இருந்தபோது பைபிள், மாதாகோயில் இப்படி கம்யூனிஸ்ட் தோழர்களோடு இருந்த நாள்களில் இயங்கியல் பொருள் முதல்வாதம், மார்க்ஸியம் என்று. 'துக்ளக்'இல் இருந்த சமயம், மகாபாரதம், மதுரை சோமு தண்டபாணி தேசிகர் என. அதேவேளையில் தன் சுயத்தையும் இழந்துவிடமாட்டார்.
('நால்வர் 'கட்டுரையிலிருந்து)
திரு. சோ. ராமசாமி ஆசிரியர், துக்ளக்.
திறமையுள்ள எழுத்தாளர்கள் எல்லோரும் எக்ஸன்ட்ரிக் (Excentric) ஆக உள்ளவர்கள். இவர்களைப் பொதுவான அளவுகோலில் அடைக்க முடியாது. அப்படியான வர் ராமச்சந்திரன். சுலபமாக உணர்ச்சிவசப்படக்கூடியவர். இவர் லாப நஷ்டங்கள் பார்த்து காரியங்கள் ஆற்றுவதில்லை. தன்னை அறியும் நோக்கிலேயே இன்றும் இருப்பவர். நேர்மையானவராக இவர் இருப்பதால் பார்த்துக் கோபம் நேர்மையற்றவர்களைப் கொள்வார். இதனால் நிறைய வாய்ப்புக்களை இழந்தவர். நிர்ப்பந்தப்படுத்தி இவரை எழுத வைக்க முடியாது. அவரது விருப்பம் சார்ந்தே எழுதக்கூடியவர். யாரையும் சுலபமாக நம்பிவிடுவார். நம்பியவர்கள் தவறுசெய்தால் தாங்கமாட்டார். எழுத்து அவருக்கு இயல்பாக வருகிறது. தனித்துவமாக எழுதும் திறன் கொண்டவர். இவரது நடை வித்தியாசமானது. சிறு தவறு நடந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளமாட்டார். 'துக்ளக்'கில் தவறு நடக்காதா எனக் கேட்டீர்களேயானால், எங்களைத் திருத்த முடியும் என்ற நம்பிக்கை தொடர்ந்து அவருக்கு இருக்கிறது. இவரது படைப்புக்களுக்கு உரிய அங்கீகாரம் இன்னும் கிடைக்கவில்லை. ராமச்சந்திரனின் எழுத்துக்குக் கிடைத்துள்ள மதிப்பு குறைவாகவே உள்ளது. இன்னும் அதிகம் அவர் பாராட்டைப் பெற வேண்டும் என்பது என் ஆசை. எங்கள் எல்லோருக்கும் அவர் மிக நல்ல நண்பர். 




வெகுநாட்களுக்குப் பிறகு ஜெயகாந்தனின் கதை ஒன்றைப் படித்ததில் ஒரு திருப்தி.
பதிலளிநீக்குஅது என்ன, திடீரென வண்ணநிலவனுக்கு ஒரு அறிமுகம் இங்கே? தற்காலத் தமிழின் தலைசிறந்த படைப்புகள் சிலவற்றைத் தந்த ஒரு ஆளுமைபற்றி -வண்ணநிலவன் ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார்- என ஆரம்பிக்கவேண்டியிருக்கிறது! அவரைப்பற்றி கவிஞர் விக்ரமாதித்யன் சொன்னது இன்னுமொரு இலக்கியவாதியின் வார்த்தைகள் என்கிற அளவில் எதிர்பார்க்கப்படுவது. ஆனால் தன் பத்திரிக்கையில் வண்ணநிலவனை (சந்திரன்) எழுதவைத்த துக்ளக் ஆசிரியர் சோ, அவரைத் தனி ஒரு மனிதராக அவதானித்து சொல்லியிருப்பவை சுவாரஸ்யமானவை. கவனிக்கத் தக்கவை.
வாங்க ஏகாந்தன் ஸார்.. ஜெயகாந்தனின் ஒரு வித்தியாசமான கதை என்று சொல்லலாமோ..
நீக்குவண்ணநிலவனைப் பற்றி வாசியுக்கக் கிடைத்தது. அதைப் பகிர நினைத்தபோது அவர் யார் என்ற கேள்வி வருமே என்று விக்கியிலிருந்து அவர் அறிமுகத்தைப் போட்டேன். வண்ணநிலவன், வண்ணதாசன், சிலபேருக்கு குழம்பும். அதனால்தான் விளக்கம்!
முருகா சரணம்
பதிலளிநீக்குவாங்க செல்வாண்ணா.. வணக்கம்.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலாக்கா வணக்கம். இணைந்து பிரார்த்திப்போம்.
நீக்குவண்ணநிலவன் பற்றிமூன்று பேருடைய கட்டுரைகளைப் பார்த்தபிறகு அவசர அவசரமாக செய்திகளைப் பார்த்தேன். ஏதேனும் காரணமாகவா என்று.
பதிலளிநீக்குசேச்சே... நாமென்ன தொலைகாட்சி நிறுவனமா நடத்துகிறோம்.. !! சட்டென படித்துக் கொண்டிருப்பதையோ, கிடைப்பதையோ பகிர்ந்து விடுகிறேன்.. வாங்க நெல்லை.
நீக்குதமிழக அரசு பல விஷயங்களில் நியாயமாக நடந்துகொள்ளாதபோது, ந்தி நீரில் மாத்திரம் மற்றொரு அரசு நியாயமாக நடந்துகொள்ளவேண்டும் என்று எதிர்பார்ப்பது கேலிக்கூத்தானது.
பதிலளிநீக்குஅதனால் தமிழக அரசு நீர் மேலாண்மையில் கவனம் செலுத்துவது நல்லது. கர்நாடக மக்களுக்கான குடிநீர் ஆதாரமாக இருப்பது காவிரி. அதனால் வரும் காலங்களில் உபரி நீர் மாத்திரமே தமிழகம் வரும் நிலை ஏற்படும்.
மழை வந்து வெள்ளம் வரும்போது அங்கிருந்து காவிரி திறந்து விடுவார்கள்! அந்த நேரம் பார்த்து நம் அரசியல்வாதிகள் காவிரியை திறந்து விடவேண்டும் என்று அறிக்கை விடுவார்கள். ஏதோ இவர்கள் சொல்லிதான் அது நடப்பது போல.. முட்டாள் ஜனங்களும் நெகிழ்ந்து போவார்கள்!
நீக்குஜீவி சாரையே எங்கள் பிளாக்கில் பார்த்து பல வாரங்களாகிவிட்டது. எப்போது அவர் கதைகளை ஒப்பிடச் சொன்னார்?
பதிலளிநீக்குஹிஹிஹி.. பதிவை முழுதும் படிக்க மாட்டீர்கள் என்று எனக்குத் தோன்றும். பின்னூட்டங்களை எல்லாம் எல்லோரும் படிப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியுமா!
நீக்குவண்ணநிலவன் பற்றிய தகவல்கள் கேள்விப்படாதது.
பதிலளிநீக்குகாவேரி பிரச்சனைக்கு சுஜாதா நல்ல தீர்வு தந்திருக்கிறார். //காவேரி நீர் இல்லைன்னா என்ன போச்சு? எங்களால் சமாளிக்க முடியும்ணு காட்டனும்// இதை அரசு செய்ய்யாது. விவசாயிகள் செய்வார்கள்.
வாங்க பானு அக்கா.. நீங்களே கேள்விப்படாத தகவல்கள் என்று சொல்லி இருப்பதே சந்தோஷம் தருகிறது!
நீக்குஜெயகாந்தன் கதையையும், சுஜாதா கதையையும் ஒப்பிட வேண்டுமா? நான் புரிந்து கொண்ட அளில் சொல்கிறேன், சுஜாதா ஒரு விபரீதமான சூழல் வரும்பொழுது, தங்களை காப்பாற்றிக் கொள்ளவதுதான் முக்கியம் என்று நிலை வந்தால் என்ன நடக்கும் என்பதை யதார்த்தமாக சொல்ல முனைந்து, கற்பனையாக முடித்து விட்டார். அல்லது அப்படிப்பட்ட சூழ்நிலையில் குழந்தை மனம் கொண்டவர்கள்தான் பிற உயிகளிடம் அன்பு காட்டுவார்கள் என்கிறார்.
பதிலளிநீக்குஜெயகாந்தன் அப்பட்டமான யதார்த்தத்தை சொல்லியிருக்கிறார். இங்கே நாய் என்பது ஒரு குறியீடு.
சுருக்கமான ஒப்பீடு; நல்ல ஒப்பீடு.
நீக்குஜீவி ஸார் இன்னும் விளக்கமாக எதிர்பார்ப்பார்!
அளில் - அளவில், உயிகளிடம் - உயிர்களிடம் . பிழைகளுக்கு வருந்துகிறேன். திருத்தி வாசிக்கவும். நன்றி.
பதிலளிநீக்குOk...!
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய செவ்வாய் கதை பகிர்வில் ஜெயகாந்தன் அவர்கள் எழுதிய இந்த "நிக்கி" கதையை ஏற்கனவே வாசித்திருக்கிறேன். சென்ற வாரம் சுஜாதா அவர்கள் எழுதிய கதைப்பகிர்வின் இறுதி கருத்துரையில் சகோதரர் ஜீவி அவர்களின் கருத்துரையை கண்டதும் மீண்டும் ஒரு முறை "நிக்கி" கதையை தேடிச் சென்று படித்து வந்தேன். ஏற்கனவே படித்த கதைதான் என்றாலும், படித்தபின் சந்தேகமற அந்தக்கதைதான் எனவும், நிச்சயமாக நினைவுக்கும் வந்தது.
இன்று சகோதரர் ஜீவி அவர்களின் விருப்பத்திற்கேற்ப பகிர்ந்த "நிக்கி" யையும் படித்தேன்.
சுஜாதா அவர்கள் எழுதிய கதையில் தங்களுடன் வசித்த ஒரு ஜீவனை பிரிய மனமின்றி, தவிக்கும் குடும்பத்தின் சூழ்நிலைகள் மனதை சஞ்சலம் அடைய செய்தது. அதன் நன்மை கருதி பெற்றோரின் சூழ்நிலை புரியாத சிறுவன் அந்த யாருமற்ற பிரதேசத்தில் மாட்டிக் கொண்ட பரிதவிப்பை அந்த சின்னஞ்சிறு ஜீவன் புரிந்து கொள்ளுமா..! அதன் பிறகு அவர்களின் நிலை என்னவோ என்ற பரிதவிப்பு மனதை பிசைந்து விட்டது. இப்படி எங்கும் நடந்து விடக்கூடாதே என்ற வருத்தத்தை அன்று முழுவதும் தந்தது.
இன்றைய கதையில் அந்த ஒரு சின்னஞ்சிறு ஜீவனாகிய அதன் ஆரம்பத்திலிருந்து அந்தப்பிராணியின் இயல்பான மனதை நன்றாக விவரித்து எழுதியுள்ளார் கதாசிரியர் ஜெயகாந்தன் அவர்கள். அதன் மனதின் வருத்தம், சந்தோஷம், எதிர்பார்ப்பு போன்றவற்றை இவரின் எழுத்தால் உணரும் போது, நம் மனதில் இந்த "நிக்கி" நின்று வசிக்கிறது. இன்னமும் சொல்லப் போனால், இப்படிப்பட்ட ஜீவன்கள் நம்முடன் வாழ்ந்து கொண்டுதான் உள்ளது. இரு கதைகளும் மறக்கவியலாத கதைகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நல்ல விளக்கமாக எழுதி இருக்கிறீர்கள். நிக்கியை ஏற்கனவே படித்திருந்தும் மறுபடி மறுபடி படித்திருக்கிறீர்கள். நன்று.
நீக்குநேற்று பத்திரிகை கொடுக்க அலைந்த இடத்தில் வீட்டு சொந்தக்காரர் ஆட்சேபத்தால் ஆறு வருடங்களாக வளர்த்து வந்த நாய்ச் செல்லத்தை ப்ளூ க்ராஸில் விட்டு வந்து வேதனையில் இருந்த ஒரு குடும்பத்தைச் சந்தித்தேன். "ஜிம்பா எங்கே?" என்று நான் கேட்டதும் விஷயம் தெரிந்தது.
ஜில்லு - கதை யதார்த்தம்தான். upper middle class சூழலில் வளரும் ஒரு ஜீவன் ஜில்லு. ஆனால் எமர்ஜென்சி என்று வரும் போது, பெரும்பாலும் (எல்லாரும் அல்ல) புறக்கணிக்கப்படும் என்பதைச் சொல்லும் கதை. முடிவில் குழந்தை ஜில்லுவோடு தங்கிவிடுவதாக முடித்திருப்பார். பெரியவர்களை விட குழந்தைகள் இந்த ஜீவன்களோடு ஒட்டி அதுவும் அக்குழந்தை தனிக்குழந்தை கதையில் எனவே ஜில்லுவைத் தன் தோழமையாக உடன் பிறப்பாகக் கூட நினைக்க வாய்ப்பிருக்கு எனவே அக்குழந்தையும் மனம் எப்படியாக இருக்கும் என்பதாக இருக்க்ம்.
பதிலளிநீக்குநிக்கி - ரொம்பவே யதார்த்தம். ஒரு தெருநாய் அதுவும் பெண் நாயின் வாழ்க்கையை அதுவும் குப்பத்து ஏரியாக்களில் ...எனக்கு ஜெ கே வின் கதையில் நிறைய உள் அர்த்தம் இருப்பதாகப் படுகிறது.
//வாழ்வும் தாழ்வும், பெருமையும் வீழ்ச்சியும், மகிழ்ச்சியும் துயரமும் நாயின் வாழ்க்கையிலும் மாறி மாறித்தான் வரும் போலும்!//
தேவை என்று வந்து விட்டால் ஜாதி யாவது// இதிலும் மறை பொருள். உலகில் நடக்கும் நிறைய விஷயங்களை நிக்கி மூலம் சொல்கிறார் ஜெ கே. சாதாரண எளிய நிலையில் உள்ள வாழ்க்கையை அந்த வாழ்க்கை படும் பாட்டை.
இரண்டு கதைகளுமே என் மனதைத் தொட்ட கதைகள். வெவ்வேறுஎ ழுத்து நடை சூழலில் உருவான கதைகள்.
கீஹா