3.3.10

நம்பிக்கையும் வாழ்க்கையும்


கிராமத்தில் அனைவரும் மழை வேண்டி பிரார்த்தனை செய்யத் தீர்மானித்தார்கள். நாளும் இடமும் குறித்தார்கள்.எல்லோரும் வந்தார்கள். ஒரே ஒரு பையன் மட்டும் கையில் குடையுடன் பிரார்த்தனைக்கு வந்தான்..."நம்பிக்கை". (FAITH).


* ஒருவயதுக் குழந்தையை மேலே தூக்கிப் போட்டுப் பாருங்கள்..குழந்தை பரவசமாய்ச் சிரிக்கும். அதற்குத் தெரியும் நீங்கள் பத்திரமாய் பிடித்து விடுவீர்கள் என்று. "நம்பிக்கை"(TRUST)

* இரவு படுக்கப் போகும்போது நாளை நாம் எழுவோமா, நமக்கு விடியுமா என்று யோசிக்காமல் மறுநாளுக்கான வேலைகளை திட்டமிடுகிறோம்...."நம்பிக்கை"(HOPE)

================================================================

* கண்தெரியாத அந்தப் பெண் உலகில் உள்ள அனைவரையும் வெறுத்தாள் தன் காதலனைத் தவிர...
அவனிடம், "எனக்கு மட்டும் கண் தெரிந்தால் உன்னைக் கல்யாணம் செய்திருப்பேன்" என்றாள்.
சில நாட்களுக்குப் பின் யாரோ தானம் செய்ததில் அவளுக்கு கண்கள் கிடைத்தன...
தன் காதலனைப் பார்த்த அவள் ஆச்சர்யப் பட்டுப் போனாள்.அவனுக்கும் கண் இல்லை.
அவளுக்கு அவன் மேல் வெறுப்பு வந்தது. அவன் கேட்டான்.
"உனக்கு கண் வந்து விட்டது..இப்போது என்னை கல்யாணம் செய்து கொள்வாயா?"
சிறிது நேர அமைதிக்குப் பின் அவள் சொன்னால்,"மாட்டேன்".
அமைதியாகத் திரும்பி நடக்கத் தொடங்கியவன் திரும்பி,"என் கண்களை பத்திரமாகப் பார்த்துக் கொள்" என்று விட்டு சென்று மறைந்தான்.

======================================================
காட்டில் திரிந்து கொண்டிருந்த இரு நண்பர்களுக்கெதிரே ஒரு பசித்த புலி....திகைத்து நின்ற இரு நண்பர்களில் ஒருவன் தன் ஷூவை இறுக்கிக் கொண்டான். இரண்டாமவன் ஆச்சர்யத்துடன் "புலியை விட வேகமாக ஓடி விட முடியும் என்று நம்புகிறாயா?" என்றான். முதல் நண்பன் சொன்னான்,"புலியை விட வேகமாக ஓட வேண்டிய அவசியமில்லை...நான் ஓட வேண்டியது உன்னை விட வேகமாகத்தான்..." கார்பொரேட் நட்பு..! எல்லாத் திருப்பத்திலும் ஒரு எதிர்பாராதது இருக்கும் என்று எதிர்பாருங்கள்...!!

==================================================

தன் புதிய காரைத் துடைத்துக் கொண்டிருந்த தந்தை, கல்லை எடுத்து காரில் கீறலிட்ட மகனின் கையைப் பிடித்து ஓங்கி அறைந்தார். மயங்கி விழுந்த மகனை மருத்துவமனையில் சேர்த்தபோது மகன் சோகமாகக் கேட்டான்.."நான் எப்போ சரி ஆவேன் அப்பா?" மனம் நொந்த அப்பா தன் காரின் பக்கம் வந்து நின்றபோது மகன் கல்லால் காரில் கிறுக்கியது கண்ணில் பட்டது..."I LOVE YOU DAD..!" கோபத்துக்கு அளவில்லை...அன்புக்கும்தான்...

========================================================

அம்மான்னா....... சும்மா இல்லை...!

மழையில் நனைந்து வீடு திரும்பிய போது,
அண்ணன் : "ஏண்டா நீ குடை கொண்டு போகல்ல?"
அக்கா : "மழை நிற்கின்ற வரை எங்காவது நின்று விட்டு வந்திருக்கலாம்.."
அப்பா :(கோபமாக)" சளி பிடிச்சு ஜுரம் வந்தால்தான் உனக்குத் தெரியும்..."
ஆனால் அம்மா துண்டுடன் ஓடி வந்து என் தலையை துவட்டி விட்டபடி சொன்னது.."இந்த மழைக்கு அறிவே இல்லை...என் பிள்ளை வீட்டுக்கு வந்த உடனே பெய்திருக்கலாம்..."

அம்மா.....

=========================================================
சுனாமியில் உறவினர்களை இழந்த சிறுவன் கடற்கரையில் நின்று கடலைப் பார்த்துச் சொன்னான்...
"இன்னும் பல்லாயிரம் முறை உன் அலைகள் என் காலில் வந்து விழுந்தாலும் உன்னை நான் மன்னிக்க மாட்டேன்..."

========

சுனாமியைப் பார்க்காத ஒருவன் சொன்னது...
"கடல் அலைகள் தான் எனது வழிகாட்டி எழுந்து எழுந்து விழுவதால் அல்ல, ஒவ்வொரு முறை விழுந்ததும் உடனே மீண்டும் எழுவதால்..."
==================================================  

1.3.10

தந்தி - முந்தியா பிந்தியா?

இந்த நூற்றாண்டில் இணையமும் எஸ் எம் எஸ் ஸும் படுத்தும் பாடும் அதனால் ஏற்படும் நன்மை தீமைகளும் உங்கள் எல்லோருக்குமே தெரியும்.

சென்ற (இருபதாம்) நூற்றாண்டின் ஆரம்ப வருடங்களில் - முதல் ஐம்பது வருடங்களுக்கும் குறைவில்லாமல், உலகையே ஆட்டிப்படைத்த ஒரு விஷயம் தந்தி. சாமுவேல் மோர்ஸ் என்னும் ஒரு மகா மனிதர் தந்தி முறைக்கு கோட் (code) உருவாக்கி பெரும் அளவில் உதவி புரிந்தார்.

அதே கால கட்டத்தில் நம் ஊர்களில், தந்தி என்கிற சொல்லே பெறுபவர்களுக்கு பீதியைக் கிளப்பும் - சிலர் தந்தி வந்திருக்கு என்றாலே - வயதான உறவினர்களை ஒவ்வொருவராக மனக்கண்ணில் பார்த்து  அவர்களை சொர்க்கத்திற்கோ நரகத்திற்கோ மானசீகமாக அனுப்பி, அழ ஆரம்பித்துவிடுவார்கள்.

நம்ம ஊருலத்தான் இப்படி - ஆனா - மேற்கத்திய நாடுகளில் - அப்படி இல்லை - அவங்களுக்கு தந்தி முறை தகவல் பரிமாற்றங்கள் மிகவும் பிடித்த விஷயம். அந்த கால கட்டத்திற்கு உங்களை அழைத்துச் செல்கிறேன்.
*****
அவர் பெயர் பிரவுன். அவருக்கு விற்பனையாளர் வேலை. அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. எனவே சுதந்திர மனிதராக ஊர் ஊராக சுற்றி விற்பனையாளர் வேலையை இரசித்துச் செய்து வந்தார். அவருடைய வீட்டில், அவர் வளர்த்தது, ஒரு செல்லப் (பிராணி) பூனை. வீட்டு வேலைகளைச் செய்ய ஒரு வேலைக்காரர். அவர் பெயர் பச்சை. (Green). பிரவுன், தன்னுடைய வெள்ளைப் பூனைக்கு, பிங்கி என்று பெயர் வைத்திருந்தார். அவருக்கு, பூனை பிங்கியின் மீது கொள்ளைப் பிரியம். பிரவுன் வெளியூர் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நாட்களில் / வாரங்களில் / மாதங்களில், பிரவுனின் அம்மா திருமதி வைலட் அவர்கள்தான் பிங்கியைப் பார்த்துக்கொள்வார். 

பிரவுனுக்கு வீட்டுத்  தகவல்களை - அடிக்கடி தந்தி மூலம் பச்சை தெரியப்படுத்துவார். ஒருமுறை,பிரவுன் வெளியூர்ப் பயணம் மேற்கொண்டிருந்தபோது, அவருக்கு பச்சையிடமிருந்து, ஒரு தந்தி வந்தது.
"பிங்கி இறந்துவிட்டது. உடனே வரவும்."

அதிர்ந்துபோய் விட்டார் பிரவுன். செல்லப் பிராணியின் திடீர் மரணத்தினால் தாளமுடியாத சோகத்தில் ஆழ்ந்தார் அவர். உடனே கிளம்பி ஊர் வந்து சேர்ந்தார். துக்கத்துடன் பச்சையிடம் என்ன நடந்தது என்று கேட்டார்.

பச்சை கூறினார்: "பிங்கி நேற்று சாப்பிடமாட்டேன் என்று அடம் பிடித்து வீட்டின் கூரை மீது ஏறி உட்கார்ந்துகொண்டது.. நாங்க எவ்வளவோ முயற்சி செய்தும் - அதைக் கீழே இறக்கிவிட முடியவில்லை. அப்புறம் அது கிட்டத்தட்ட பத்து மணிநேரம் அங்கேயே இருந்தது. அப்புறம் பக்கத்து வீட்டு நாய் இதைப் பார்த்து - பலமாகக் குரைத்தது. உடனே பிங்கி பயந்துபோய் - பக்கத்தில் உள்ள கிணற்றுக்குள் நேரே பாய்ந்துவிட்டது. கிணற்றுச் சுவற்றில் அடிபட்டு, தண்ணீரில் விழுந்து உயிரை விட்டு விட்டது." இதை விலாவாரியாகச் சொன்னார், பச்சை.

சோகத்தில் இருந்து மீண்ட பிறகு, பிரவுன் வேறொரு செல்லப் பூனையை வாங்கிவந்தார். இந்தப் பூனைக்கு மஞ்சளழகி என்று பெயர் வைத்தார். அப்புறம் - பச்சையைக் கூப்பிட்டு, கூறினார், " பச்சை, நான் சொல்வதை கவனமாகக் கேள். தந்தி அடிக்கும் பொழுது திடீர் என்று அதிர்ச்சி வரும்படி - மரணச் செய்திகளை - தந்தியில் அனுப்பாதே. உதாரணத்திற்கு, பிங்கி இறந்து விட்டதல்லவா, நீ என்ன செய்திருக்க வேண்டும் என்றால் - இதை பல தந்திகளாகப் பிரித்து - அரை மணி நேரத்திற்கு ஒருமுறை, இந்த மாதிரி அனுப்பியிருந்தால், நான் அதிர்ச்சி அடையாமல் - ஒரு வழியாக - பக்குவப்பட்டிருப்பேன்."

தந்தி ஒன்று : "பிங்கி கூரை மீது ஏறிவிட்டது."
தந்தி இரண்டு :"எவ்வளவோ முயற்சி செய்தும் பிங்கியை கீழே இறக்க முடியவில்லை."
தந்தி மூன்று: "பிங்கி எதுவும் சாப்பிடவில்லை."
தந்தி நான்கு :" பிங்கி பக்கத்து வீட்டு நாய் - குரைத்ததால், பயந்துபோய் விட்டது.."
தந்தி ஐந்து: " பிங்கி பயந்து கிணற்றில் குதித்துவிட்டது."
தந்தி ஆறு : "பிங்கி இறந்துவிட்டது. எங்களால் காப்பாற்றமுடியவில்லை."

மூன்று மாதங்களுக்குப் பிறகு மீண்டும் வெளியூர்ப் பயணம் போய்விட்டார், பிரவுன். இரண்டு வாரங்கள் கழித்து பிரவுனுக்கு, ஒரு தந்தி வந்தது. பச்சைதான் அனுப்பி இருந்தார்.

"உங்க அம்மா திருமதி வயலட் கூரை மீது ஏறி இருக்கிறார்."

27.2.10

சுஜாதா ரங்கராஜன்


சுஜாதா...

மந்திரச் சொல்.

அறுபதுகளின் பிற்பகுதியில் தென்றலாய் தொடங்கி போகப் போகப் புயலாய் மாறிய ஒரு எழுத்து ராட்சசர்...

இன்று அவர் மறைந்த நாள்.


புத்தகம் படிக்கும் பழக்கம் என்பது மு.வ கதை ஒன்றை படிப்பதுடன் தொடங்கியது. பின்னர் அம்புலிமாமா, விக்ரமாதித்தன் கதை முதல் கல்கி, அரு.ராமநாதன், மணியன், பி.வி.ஆர், ஜ.ரா.சு., விந்தன், சாண்டில்யன், ஜெகசிற்பியன், ரா.கி.ரங்கராஜன், கதைகள் வரை... எல்லாம் படிக்கத் தொடங்கிய காலத்தில் எங்கேயோ ஒரு சுஜாதா கதை படிக்க நேர்ந்தது. மற்ற எழுத்துகளில் இருந்து அதன் வித்யாசம் உடனே உரைத்து மனதில் இடம் பெற்றது.



மாடிப் படிகளில் 
ங்
கி --> நடந்தான் என்று எழுதிய அவர் பாணி புருவம் உயர்த்த வைதத்தது. வேறு என்ன என்ன பத்திரிகைகளில் அவர் எழுதுகிறார் என்று தேட வைத்தது.

சமீப காலங்களில் அல்லது எழுபதுகளுக்குப் பின் எழுதத் தொடங்கிய எழுத்தாளர்களுக்கு சுஜாதா நடை சாயல் இல்லாமல் இருக்காது. நடிப்புலகில் எல்லோரிடமும் ஏதாவது ஒரு இடத்திலாவது சிவாஜியைப் போல முயற்சி பண்ணுவார்கள் என்பது போல சுஜாதா பாணி, அவரது சில வார்த்தைகளை ஸ்வீகாரம் செய்யாத எழுத்தாளர்கள் இருக்க முடியாது. அவர் இந்த அளவு தனது ஆதர்ச எழுத்தாளராய் தி. ஜானகிராமனை சொல்லி உள்ளார்.
அவரது பாலம் கதையைப் படித்து விட்டு, 'எனக்கு உன்னையே கொல்லணும் போல இருக்கு வரவா' என்று யாரோ லெட்டர் எழுதி இருந்தார்களாம்.

சிறுகதை, தொடர்கதை, நாவல், நாடகம், விஞ்ஞானக் கட்டுரைகள், பல்சுவைக் கட்டுரைகள்...சுஜாதா வீட்டு லாண்டரிக் கணக்கை எடுத்துக் கூடப் பிரசுரிக்க பத்திரிகையாளர்கள் தயாராய் இருந்தார்கள் என்று சொல்வதுண்டு..அவர் என்ன எழுதினாலும் பிரபலம் தான்.
சில வித்யாசங்கள், பாதி ராஜ்ஜியம், கம்ப்யூட்டரே ஒரு கதை சொல்லு, அனிதா இளம் மனைவி, காயத்ரி, (இந்தக் கதையின் கருவுக்கு சாவியிடமிருந்தே எதிர்ப்பு வந்ததாம்)..ஜேகே, வானமெனும் வீதியிலே, பதினாலு நாட்கள், எதை விட, எதைச் சொல்ல?

விகடனில் வந்த அவரின் 'கற்றதும், பெற்றதும்...' பெரும் வரவேற்பைப் பெற்ற தொடர். ஜூனியர் விகடனில் வந்த 'ஏன், எதற்கு, எப்படி? ' விஞ்ஞானக் கேள்வி பதில்கள்..

யாருக்கும் தெரியாததை இங்கு சொல்ல வரவில்லை. அவர் நினைவு நாளில் அவரை நினைவு கூரும் முயற்சிதான்.

".......எனவே இந்தக் கதையில் நீதி தேடுபவர்களுக்கு சரியாக மூன்று நிமிடங்கள் தருகிறேன், விலகுவதற்கு...
மூன்று நிமிஷம்.
மற்றவர்கள் மேலே படிக்கலாம்....".........
சுஜாதா பாணி!

சில பிரத்யேக வார்த்தைகள் சுஜாதா ஸ்பெஷல். ஆதார, உத்தேசம், போன்றவை உதாரணங்கள். பசித்த புலி தின்னட்டும் என்பது அவர் எழுதும் இன்னொரு சொற்றொடர். மெக்சிகோ தேசத்து சலவைக்காரி ஜோக்கை சொல்லாமலேயே பிரபலப் படுத்தியவர்.

அறுபத்தைந்து, எழுபது வயதுகளிலும் இளமை மாறாத எழுத்துகளுக்கு சொந்தக் காரர். மற்றவர்களின் எழுத்துகளையும் ரசித்து, படித்து, மனமுவந்து பாராட்டுபவர்.

கதைகளிலும் நாவல்களிலும் ஆரம்பித்தாலும் அவர் எழுதிய கணையாழியின் கடைசிப் பக்கங்கள், கற்றதும், பெற்றதும், சில எண்ணங்கள், விவாதங்கள் விமர்சனங்கள், போன்ற அவர் எழுத்துகளை வாசிப்பது சுகம். ஆரம்ப காலங்களில் பெண்கள் பற்றிய அவர் வர்ணனைகள் படிக்கும்போது சற்றே கூச்சப் படவைக்கும் அளவு இருந்தாலும், ஒரு தரப்பு வாசகனை கட்டி இழுக்க செய்த முயற்சியாகக் கூட அதைச் சொல்லலாம்.

ப்ரியா, காயத்ரி, போன்ற அவரது கதைகள் படமானபோது, அவை படமான விதம் குறித்து தன் கோபத்தை வெளிப்படுத்த மேற்கே ஒரு குற்றம் என்ற கதையை எழுதி 'இதை எப்படிப் படமெடுக்கிறார்கள் பார்க்கிறேன்..' என்று கோபப் பட்டவர், பிறகு அதே சினிமா உலகுக்குள் புகுந்து பல முயற்சிகள் செய்தவர்.

பாலச்சந்தர் அவரை ஒரு கதை எழுதித் தரச் சொல்ல, கடத்தலுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர் எழுதிய மர்மக் கதையை பாலச்சந்தர் மாற்றி அற்புதமான காதல் கதையாக எடுத்ததைப் பற்றி சொல்லி இருந்தார்....(நினைத்தாலே இனிக்கும்)

ஒரே ஒரு படத்தில் 'நடித்துள்ளார்'! தைப் பொங்கல் என்ற படத்தில் ஒரு காட்சியில் தன் மனைவியுடன் அவர் வருவது போன்ற காட்சி இருக்கும்.

எழுத்தில் இவ்வளவு பேர் மனத்தைக் கொள்ளை கொண்டவர், மேடையில் தனக்கு பேச வராது என்பார். தன் மனைவி கூட தான் எழுதுவதை பின்னால் நின்று பார்த்தால் எழுதுவது நின்று போகும் என்று சொல்பவர், மன்னிக்கவும், சொன்னவர்.

கணேஷ் - வசந்த் என்ற சுவாரஸ்யமான பாத்திரங்களைப் படைத்து, ரசிகர்கள் மனதில் இடம் பெறச் செய்தவர். (ஆங்கிலத்தில் பெர்ரி மேசன், ஷெர்லக் ஹோம்ஸ் போன்ற பாத்திரப் படைப்புகளைப் பார்த்த/படித்த பாதிப்பாக இருக்கலாம்)

"ஆசார்யருக்கு வடை வாங்கிக் கொடுத்தால் நம்ம கட்சிக்கு வந்துடுவார்.."
"உங்களை ஒரு பார்ட்டியில பார்த்திருக்கேன்.." போன்ற வசந்தின் கமெண்ட்ஸ் அவர் சொல்லும் ஜோக்குகள், மற்றும் அவரது புத்தி கூர்மை, கணேஷின் ஒரு அறிவு ஜீவித் தனமான அலசி ஆராய்ந்து துப்பறியும் பாத்திரப் படைப்பு...ரசிகர்களால் மிகவும் விரும்பி படிக்கப் பட்ட கதைகள்..கொலையுதிர் காலம், நில்லுங்கள் ராஜாவே, மறுபடியும் கணேஷ், நிர்வாண நகரம், விபரீத கோட்பாடு, மேற்கே ஒரு குற்றம்....பிரியாவில் வசந்த் இல்லாத கணேஷ்..

கணையாழியின் கடைசிபக்கங்கள்...அவரது எண்ணங்களைப் படிப்பதில் தான் எத்தனை சுகம்...

கற்றதும் பெற்றதும் பகுதியில் ஒரு முறை (அவர் முதல் முறை பை-பாஸ் சர்ஜரி செய்து கொண்ட பின் என்று நினைக்கிறேன்) ஆஸ்பத்திரி அனுபவங்களைப் பற்றி எழுதும்போது அறுவை சிகிச்சைக்கு முன் தரப்படும் பச்சை நிற உடையை பற்றி ஒரு விமர்சனம் செய்திருப்பார். மேலும் வாழ்க்கையின் ஆரம்ப காலங்களில் நன்றாகப் படிக்க வேண்டும், எஞ்சினியர் ஆக வேண்டும், பைலட் ஆக வேண்டும் என்ற இலட்சியங்கள் மறைந்து ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பின் காலை பாத்ரூம் போய் நிம்மதியாய் சிறுநீர் கழித்து வந்து விட்டாலே போதும் என்ற நிலைக்கு வருவது வாழ்க்கையின் ஒரு Progressive Compromise என்று சொல்லி இருப்பார். வாசகர்களை 'சட்'டென அதிர வைத்த வாரம் அது.

பாசாங்குகளையும் , அலங்கார வார்த்தைகளையும் சட்'டென அகற்றி விட்டு நேர் வார்த்தைகளில் சிக்கனமாக முகத்தில் அறையும் வார்த்தைகள்..

அவரது Electronic Voting Machine இன்று பரவலாக உபயோகப் படுவது நான் சொல்லத் தேவை இல்லை.

சிலிகான் - சில்லுப் புரட்சி, தலைமைச் செயலகம் போன்றவை அவரது இன்ன பிறக் கட்டுரைகள். அம்பலம் டாட் காமில் அவர் எழுதியவை பின்னர் புத்தகமாகவும் வெளி வந்தது. திருக்குறளுக்கு விளக்கம் கூட எழுதி உள்ளார் என்று ஞாபகம். ஆரம்ப காலங்களில் கடவுள் மறுப்பு போலவும், சற்றே நாத்திகமும் பேசி (எழுதி) வந்தவர், பின்னாளில் ஆழ்வார் பாசுரங்கள் ஒரு எளிய அறிமுகம் என்று கல்கியில் எழுதினார். பிரம்ம சூத்திர விளக்கம் போன்றவை அவரது அசாதாரண ஆற்றலுக்கு எடுத்துக் காட்டு. கதைகள் எழுதுவதில் தொடங்கி அவர் தொடாத துறையே இல்லை எனலாம்.
சுருக்கமாக முடிக்க வேண்டும் என்றுதான் தொடங்கினேன்...சற்றே அதிகமாக நீண்டு விட்டாலும், இன்னும் எனக்கு ஒன்றுமே சொல்லாதது போல குறை.



சுஜாதா...

மறக்க முடியாத, மறக்க விரும்பாத எழுத்தாளர்.
(பக்கத்தில் மீசையுடன் உள்ள சுஜாதா படத்தில் மீதியைத் தேடுபவர்கள் அந்தக் கதைப் புத்தகத்தின் பெயரைப் படித்துக்கொள்ளுங்கள். நாம் எல்லோரும் எவ்வளவு தேடினாலும் கிடைத்துவிடுவாரா - இம்மாதிரி எழுத்தாளர் இனிமேல்?)