20.6.16

"திங்க"க்கிழமை :: பீடா அடை (சண்டிக்கீரை அடை)



சண்டிக்கீரை... அல்லது நச்சுக்கொட்டைக் கீரை இலைகளை எடுத்துக் கொள்ளவும்.  
 
 

வீட்டில் அடைமாவு இருந்தால் எடுத்துக் கொள்ளவும். வேறு ஏதாவது உங்களுக்கு மாவு ஐடியா தோன்றினால் அதையும் எடுத்துக் கொள்ளலாம்.
 
 

இலையில் நடுவே சிறிது மாவை வைக்கவும்.
 
 

வைத்துச் சுருட்டவும்.  சுருட்டிய இலை பிரியாமலிருக்க நூல் வைத்துக் கட்டலாம்.
 
 

'என் காக்கை அலை சூளை' யில் மூன்று நிமிடம் வைக்கவும்!!  (நன்றி கேஜிஜி)
 
 

மூன்று நிமிடத்துக்குப் பின்...
 
 


அவற்றை எடுத்து தோசைக் கல்லில் இட்டுப் புரட்டி எடுக்கவும்.
 
 

நூல் உரித்து....
 
 
 

அப்படியே சாப்பிட்டு விடலாம்!


 


19.6.16

ஞாயிறு 363 :: தந்தையர் தினம்.

                     

இந்தப் படத்தில் ஒரு சுவாரஸ்யமான அம்சம் இருக்கின்றது. கவனித்தீர்களா? 
படத்தில் உள்ளவர்கள் மூவரும், நம்மை (பார்ப்பவரை) நோக்கி வருகின்றார்களா அல்லது நம்மை விட்டு விலகிச் செல்கிறார்களா? 
   
                                    

18.6.16

பாஸிட்டிவ் செய்திகள் கடந்த வாரம்.




1)  ஒரு திரைப்படம் வெளியானதும் ஊடகங்களும் பத்திரிக்கைகளும் அதற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை இது போன்றவற்றிற்கு கொடுப்பதில்லை.  இனியாவது சினிமா ஹீரோக்களை விடுத்து இவர்களைப் போன்ற உண்மையான நேர்மையான தமிழக காவல்துறை வீரர்களைக் கொண்டாடுவோம்...  [ நன்றி LK ]
 


 
2)  C R நடராஜ சாஸ்த்ரி.   நினைத்தால் எப்படியும் நல்லது செய்ய முடியும்.
 


 
3)  கல்வி  பணம் படைத்தவர்களுக்கு மட்டும் உரியதா?  இல்லை என்கிறார்கள் இந்த நண்பர்கள்.
 



 
4)  இதோ ஒரு வித்யாசமான மருத்துவர்.  கணேஷ் ராக்.  அவர் காட்டிய வழியில் இன்று நாடு முழுவதும் இன்னும் சில மருத்துவர்களும் செயல்படுகிறார்களாம்.
 



 
5) " ...சுனாமியில் சிக்கி உடல் உறுப்புகள் செயலிழந்த மீன் பிடி தொழிலாளி குழந்தை களின் கல்விக்கு தனிப்பட்ட முறையில் நிதி உதவியும் வீட்டு மனை பட்டா கிடைக்கவும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி..."
 


 
6)  "அன்னயாவினும் புண்ணியம்..."   இமானுவேல் ரூபன் அவர்களிடமிருந்து ரூ. 25,000/- நண்பர்கள் அருண், முருகன் மற்றும் பிரபாகரன் அவர்கள்...  (நன்றி மலையப்பன் ஸ்ரீராம்)
 


 
 



 
8)  “She was saved in the nick of time by Inspector Desai. It was an act of bravado,” said Madhukar.  மிலிந்த் தேசாய்.
 


 
9)  நம்மூரிலும் இப்படிச் சிலர் தேவை.  Dr.  மஹேஷ் பெடேகர்.
 



 
10)  கேன்சரில் விழுந்த ஒரு இளைஞர் அதிலேயே வீழ்ந்துவிடாமல் மீண்டு வந்ததுடன்,இந்த பாதிப்புள்ளவர்களை நேரில் சந்தித்து உங்களாலும் மீள முடியும் என்ற நம்பிக்கை வார்த்தைகளை சுமந்து கொண்டு நாடு முழுவதும் தன்னந்தனியாக மோட்டார் பைக்கிலேயே பயணித்து வருகிறார்.  அவர்தான் ஹர்தேஜ் பர்தேஷ்.
 



11)  அழகு அம்பலமும் அங்கம்மாளும்.  (நன்றி கிருஷ்ணமூர்த்தி ஸார்)


16.6.16

படைப்பாற்றல் மிக்கவரா நீங்கள்?


படைப்பாற்றல் உள்ளவர்கள், சிறு துரும்பையும் பயன்படுத்திக்கொள்ள புது யோசனைகளைக் கூற வல்லவர்கள். 

எங்கள் கைவசம், சிறு துரும்பு எதுவும் (படம் எடுத்துப் போடும் அளவுக்கு) இப்போது இல்லை. 

ஆனால் வகைவகையாக, ஐநூற்றுக்கும் மேற்பட்ட சிறு பொருட்கள் உள்ளன. 
இதோ, அவற்றில் ஒன்று. 
     
  
இது ஒரு எலெக்ட்ரானிக் (கைக்) கடிகாரம். (மாதவன் வந்து மொக்கைக் கருத்துரை இடக்கூடாது என்று ரொம்ப யோசித்து பதிவு இடுகிறேன்.பார்ப்போம்.) 

இதற்கு சரியான பட்டன் செல் இப்போ மார்க்கெட்டில் கிடைப்பதில்லை. 
இதனுடைய பக்கவாட்டுத் திருகை உபயோகித்து, முட்களை நமக்குத் தேவைப்பட்ட நேரத்தைக் காட்டும் வகையில் சுலபமாக அமைக்கலாம். 

படைப்பாற்றல் உள்ள நம் வாசகர்கள், இந்தக் கடிகாரத்தை, எந்தெந்த வகைகளில் உபயோகிக்கலாம் என்று கருத்துரை இடலாம். 

இந்த கடிகாரத்தின் எடை இருபது கிராம் என்று வைத்துக்கொள்ளலாம். 

மேற்கொண்டு தகவல்கள் வேண்டும் என்றால் கொடுக்கப்படும். 

பின்குறிப்பு: நேரம் காட்டுதல் தவிர வேறு கோணங்களிலும் யோசித்துப் பார்க்கலாம். 

நல்ல யோசனை , நகைச்சுவையான யோசனை, அசத்தும் யோசனை எல்லாம் அள்ளி வீசுங்க. 

பரிசு கொடுத்தாலும் கொடுப்போம்! 
     


15.6.16

நான் ஏன் புத்தகக் கண்காட்சிக்குச் செல்லவில்லை.





முன்குறிப்பு  :  "தியேட்டர் நினைவுகள்" தொடர் அடுத்த வாரம் வெளியாகும்!



Image result for புத்தகக் கண்காட்சி

     ஜனவரியின் குளிர்ச்சியில் வைக்காமல் ஜூனின் வெப்பத்தில் வைத்ததாலா?  அவர்கள் என்ன செய்வார்கள் பாவம், சென்னை வெள்ளம் புரட்டிப் போட்டது!  அப்போதே வைத்திருந்தால் ,  இப்போது வரும் கூட்டம் கூட வந்திருக்காது என்று தோன்றுகிறது!   


பொதுவாக, ஜனவரியில் என்னும்போது வருடத்தின் ஆரம்ப மாத உற்சாகம் எல்லோரிடமும் இருக்கும்.  புதிதாக ஏதாவது செய்ய வேண்டும்... இந்த வருடமாவது இதை வாங்க வேண்டும், இதைப் படிக்க வேண்டும் என்றெல்லாம் தோன்றும்.  அந்த சமயத்தில் புத்தகத் திருவிழா வைத்தால் அந்த மயக்கத்திலேயே சில புத்தகங்கள் வாங்கி விடலாம்.  இன்றைய தினத்தின் வெப்பம் ஆயாசம் தருவதாக இருக்கிறது.  அதுமட்டும்தான் காரணமா?


     இந்த முறை என் இருப்பிடத்திலிருந்து தூரம் அதிகம்.  எளிதாக அப்ரோச் செய்யும் தூரம் இல்லை.  அதுவும் ஒரு காரணம்.


     இந்த வருடம் 'புத்தகம் வாங்கா' விரதம் இருக்கத் தீர்மானம்.  புத்தகம் வாங்கா விட்டாலும் கைகளைப் பின்னால் கட்டிக் கொண்டு கண்காட்சியில் சுற்றி வரலாம் என்பது,  சிகரெட்டை விட்டவன் இன்று ஒரு நாள் மட்டும் ஒரே ஒரு தம் இழுத்துப் பார்க்கலாம் என்றோ, சும்மா கண்ணால் மட்டும் பார்ப்போம் என்றோ நினைப்பதற்குச் சமம்.  


அரித்தவன் கை சொரியாமல் இருக்குமா?  இது ஒரு காரணம்.  அங்கு சென்றால் நண்பர்களைப் பார்க்கலாம்தான்.  அந்தக் காரணத்தை மட்டும் வைத்துக் கொண்டு போகவேண்டுமா என்று செல்லவில்லை.

Image result for புத்தகக் கண்காட்சி



     இதுவரை வாங்கியுள்ள புத்தகங்களில் ஒரு அளவாவது படிக்காமல் புதிய புத்தகங்கள் வாங்குவதில்லை என்கிற தீர்மானம்!  எங்கே போய்விடப் போகிறோம், வாங்கி வைத்து விடுவோம்...    ப்புறம் படிக்கலாம் என்கிற மன நிலையிலிருந்து வெளி வந்திருப்பதாகவே நினைக்கிறேன்.  பிடிக்கும் பிடிக்கும் என்று பிரியாணியை ஐந்தாறு ப்ளேட் வாங்கிச் சாப்பிட முடியுமா சொல்லுங்கள்.. வைத்திருந்தாலும்தான் அப்புறம் சாப்பிடத் தோன்றுமா?   கொஞ்சமாக இருந்தால் சாப்பிடத் தோன்றும் ஆர்வம் மொத்தமாகப் பார்த்தால் வடிந்து விடும்தானே? 
 

       நண்பர் ஒருவர் வீட்டில் சமீபத்தில் ஒரு 'குழுக் கூடுதல் விழா'வில் சாப்பாட்டுப் பந்தியில் பரிமாறும்போது ஒரு பெரியவர் சொன்னார்..  "சாம்பாரை சின்ன பாத்திரத்தில் வைத்துக் கொண்டு வந்து பரிமாறுங்கள்...  இவ்வளவு பெரிய பாத்திரத்தில் பார்த்தால் பிரமிப்பு வருகிறது.  சாப்பிடத் தோன்றவில்லை"   அது போலத்தானே புத்தகங்களும்?  


     எப்படி?  லாஜிக்கிலேயே அடிக்கிறேனா?



     ஜீவி ஸார் தனது பதிவில் எங்கள் ப்ளாக் புத்தகக் கண்காட்சிப் பதிவைப் படிக்கக் காத்திருப்பதாய்ச் சொன்னார்.  அவருக்கு இந்தப் பதிவு (இதை அவர் படித்தால்) ஏமாற்றம் அளிக்கலாம்.


   தேனம்மை அலைபேசி அவர் புத்தகத்தின் வெளியீட்டு விழா பற்றிச் சொன்னார்.  கண்காட்சிக்குச் செல்வீர்களா, வெளியீட்டு விழாவுக்கு வருவீர்களா என்று கேட்டார்.  

     விகடனில் எழுதி இருந்தார்கள்...  புத்தக ஸ்டால்களை விட, தீனிக் கடைகளில்தான் கூட்டம் இருந்தது என்று... அதற்கு ஃபேஸ்புக்கில் என் பதிவு..


     இந்தமுறை நிறைய ஸ்டால்களில் 10% க்கும் அதிகமாக தள்ளுபடி தருகிறார்கள் என்று தமிழ் இந்துவில் போட்டிருந்தார்கள்.  ஏற்கெனவே சாஹித்ய அகாடமி ஸ்டால்களில் நடப்பதுதான் அது.  சில மத சம்பந்தப்பட்ட ஸ்டால்களிலும்.  மேலும் சென்னை வெள்ளத்தில் சிக்கிச் சீரழிந்ததில் நஷ்டப் பட்டுப் போன பதிப்பாளர்கள், அதில் ஓரளவு தேறக்கூடிய புத்தகங்களைத் தள்ளுபடியில் தருகிறார்கள் என்றும் சொன்னார்கள்.  




     அப்பா காலமாவதற்கு முன்னரே, சென்ற வருடத்தின் மத்தியில் மதுரையிலிருந்த அப்பாவின் மற்றும் எண்களின் மொத்த கலெக்ஷன் பைண்டிங் புத்தகங்களும் சென்னைக்கு என் வீட்டுக்கு வந்து விட்டன.  அவற்றை வைக்கவே இடமில்லாமல் பரணில் தூக்கிப் போட்டிருக்கிறேன்.  அந்த வேதனையே உறுத்துகிறது.  இன்னும் இன்னும் என்னென்ன வாங்க?


     வாங்குவதற்குப் புத்தகங்களே இல்லையா?  இருக்கிறது.  மலையாள மூலம் என்று நினைவு, ஒரு மொழிபெயர்ப்புக் கதை.  டாவின்ஸி கோட் மாதிரியான புத்தகம் என்று விமர்சனம் படித்து, தலைப்பு மறந்து விடக் கூடாது என்று அந்தப் புத்தகத்தின் படத்தை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைத்திருந்தேன்.  தொலைந்து விட்டது.  காலச்சக்கரம் நரசிம்மாவின் கர்ண பரம்பரை.  முகில் எழுதிய ஒரு புத்தகம் (தலைப்பு மறந்து விட்டது.  ஆனால் விலை மறக்கவில்லை,,999 ரூபாய்) இன்னும் சில புத்தகங்கள்..  கோவை ஆவியிடம் பதிப்பகங்களின் விலைப் பட்டியல் கேட்டிருக்கிறேன்.  அவற்றைப் பார்த்தால் கண்காட்சியே போன நிறைவு ஏற்படும்.  ஏதாவது புத்தகம் அவசியம் வாங்கித்தான் ஆகவேண்டுமென்றால் அதே பத்து சதவிகிதக் கழிவில் கதவுப் பிரசவம் செய்யக் கதிரேசன் இருக்கிறார்!




     அதுவரை...?

  
     வாங்கிப் படிக்கப் படாமல் காத்திருக்கும் புத்தகங்கள் ஏக்கத்துடன் என் கைகள் பட்டு விழியின் வழியே இதயம் நுழையக் காத்திருக்கின்றன.  படிக்கப் படாததால் வெறுத்துப் போன எழுத்துகள் புத்தகங்கள் விட்டுப் பறந்து போய்விடக் கூடாதல்லவா...  


 


                                                           [படம் தி இந்து (தமிழ்) லேருந்து திருடியது!]


 
     இந்தப் பதிவு போகாமல் விட்டு விட்டேனோ என்கிற புலம்பல் மாதிரியும் ஒலிக்கிறதோ என்கிற சந்தேகம் எனக்கே வருகிறது.

14.6.16

கேட்டு வாங்கிப் போடும் கதை : விஸ்வரூபம்





     இந்த வார "கேட்டு வாங்கிப் போடும் கதை" பகுதியில் பிரபல எழுத்தாளர் வித்யா சுப்பிரமணியம் அவர்களின் கதை இடம் பெறுகிறது.


     திருமதி வித்யா சுப்பிரமணியம் அவர்களின் தளம் கதையின் கதை.


     வித்யா சுப்பிரமணியம் மேடம் ஒரு வலைத்தளம் வைத்திருக்கிறார் என்று சொல்லி உதவிய திருமதி சாந்தி மாரியப்பனுக்கு (அமைதிச்சாரல்) எங்கள் நன்றி.


     கதை பற்றி திருமதி வித்யா சுப்பிரமணியம் அவர்களின் கருத்தும், அதைத் தொடர்ந்து அவர் படைப்பும்.....

=================================================================



     ஏதோ  ஒரு  உபநிஷதத்தில்  சுருக்கமாய்  கூறப்பட்ட விஷயத்தைக் கொண்டுதான்  இச்சிறுகதையை  எழுதினேன். பதினேழு வருடங்களாகிறது  இதனை  எழுதி.  ஒரு  ஆன்மீகப் பத்திரிகைக்காக எழுதப்பட்ட  கதை  இது.  எனது  வெட்டி வேர்கள்  என்ற  சிறுகதைத் தொகுப்பிலும்  இதனை சேர்த்துள்ளேன்.

============================================================================== 



விஸ்வரூபம்



வித்யா  சுப்ரமணியம்











நுப்பும்  நுரையும்,  நீர்க்கொப்புளங்களுமாய்  ஆற்றில்  புது  வெள்ளம் கரை புரண்டோடியது.  வயது வித்தியாசமின்றி மனிதர்கள்  அனைவரும் குழந்தைகளாய்  மாறியிருந்தனர்.



"அடேயப்பா எவ்வளவு  பெரிய  நீர்க்குமிழிகள்!  எவ்வளவு  நுரை!"  ஒரு  பையன்  வியந்தான்.  ஒரு பெரிய  நீர்க்குமிழியை  விரலால்  உடைத்து  மகிழ்ந்தான். அருகிலிருந்த  தாயிடம் கேட்டான்.



"நீர்க்குமிழ்கள்  எப்படி  உருவாகிறது?"



"பிரம்மஹத்தி!" துணி துவைத்தபடி  கூறினாள்  தாய்.



"அப்படிஎன்றால்? பையன்  புருவம்  சுருக்கி  கேட்டான்.



"அது  ஒரு  கதை  நீ  குளித்து  விட்டு  வா  சொல்கிறேன்.



"கேட்டு  விட்டே  குளிக்கறேனே"



அம்மா  புன்னகைத்தாள்.  துணி துவைத்தபடி  சொல்ல  ஆரம்பித்தாள்.



                                                      *********************





தேவலோகம்  பீதியிலாழ்ந்திருந்தது.  தேவர்களின்  முகங்கள்  இருண்டு போயிருந்தன. தேவர்கள்  சிலர்  கூட்டமாய்ச்  சென்று இந்திரனை சூழ்ந்து கொண்டார்கள்.



"தவறு  செய்து  விட்டாய்  தேவேந்திரா !  அசுரர்கள்  வெல்வதற்கு  வாய்ப்பளித்து  விட்டாய்.   அவர்கள் இந்திர லோகத்தைக்  கைப்பற்றியே  தீருவதென்று முடிவு  செய்து  விட்டார்கள்.  ஓடி  ஒளிவதைத்  தவிர வேறு  வழியில்லையா  நமக்கு?"



"என்ன  செய்யலாம் என்று  நீங்களே  சொல்லுங்கள்"



பிருஹஸ்பதியை அவமானப்படுத்தியது  நீதான்.  உன் மீதுள்ள ஆத்திரத்தால்  அவர்  தேவலோகத்தை  விட்டுச்  சென்று  விட்டார். குரு  நம்முடன்  இல்லாதது  நம்மை  பலவீனமாக்கி  விட்டது.  அதுவே  அசுரர்களின் பலமாகவும்  ஆகி  விட்டது.  இதுதான்  சமயம் என்று  அவர்கள்  தங்கள்  குருவின்  ஆசியுடன்  போருக்குப்  புறப்பட்டு  விட்டார்கள்.  இன்னும்  சற்று  நேரத்தில் தேவலோகம்  அவர்கள்  வசமாகும்.  உன்  இந்திர  பதவி  பறிபோகும்"



"இனி  செய்வதற்கு  ஒன்றுமில்லையா?  நம்மால்  அவர்களுடன்  போரிட  இயலாதா?"  இந்திரன்  வருத்தத்துடன்  கேட்டான்.



"இயலாது.  நம்  தேவர்கள்  எந்த  நிலையில்  உள்ளார்கள்  என்று  போய்ப்  பார்.  பாதி  பேர்  சோமபானம்  அருந்தி  விட்டு  மயங்கிக்  கிடக்கிறார்கள்.  மீதிப்பேர் மங்கையர்களின்  மடியில்  மயங்கிக்  கிடக்கிறார்கள்.    சொகுசாய்  இருப்பதற்காகவே  தாங்கள்  இங்கு  அவதரித்திருப்பதாய் நினைத்துக்  கொண்டிருக்கிறார்கள்.  எனவே  போர்  என்றால்  ஓடி  ஒளிந்து  கொள்வார்கள்.  காயப்பட  இவர்களால்  முடியாது.  எப்போது  என்ன  பிரச்சனை  என்றாலும் மும்மூர்த்திகளிடம்  அடைக்க்கலாமாவதுதனே  நம்  இயல்பு?"



"தேவர்களைப்  பரிகசிக்காதே.  நீயும்  அவர்களில்  ஒருவன்தான் என்பதை  மறந்து  விட  வேண்டாம். அசுரர்களை  வெல்ல  வழி  கேட்டால்,  வேறு  ஏதேதோ  பேசுகிறாய்  நீ? இந்திரன்  விழி  சிவக்க  அந்த  தேவலோகப்  பிரஜையைப்  பார்த்தான்.



"குருவின்  காலில்  விழுந்து  மன்னிப்பு  கேட்க  வேண்டும்  என்று உனக்கு  இப்போதும்  தோன்றவில்லையா?"



"புரியாமல்  பேசாதே.  குருவை அலட்சியப்படுத்தியது  பெரும்  தவறுதான்.  என்  மதி  கெட்டு விட்டது  எனது  விதி.  நடந்து  முடிந்தவற்றை,  அவை  சரியாயினும்,  தவறாயினும்,  மாற்றி  விட்டு  சரி  செய்ய  தேவர்களாயினும்  முடியாது.  என்  வருத்தம்  புரியாமல் தூஷிக்காதே.  குருவிடம் மன்னிப்புக்  கேட்கத்தான் சென்றேன்.  அவர்  எங்கிருக்கிறார்  என்பது  தெரிந்தால்தானே?"



"இப்பொழுது  என்ன  செய்வது?"



"தோல்வியே  இப்போது  நம்  தலைவிதி!  முதலில்  தோற்போம்.  பிறகு  வெற்றிக்கு  வழி தேடுவோம்"  தேவேந்திரன்  வருத்தத்துடன்  கூறினான்.



வெற்றி  அசுரர்களுக்கு  சுலபமாயிற்று.  அவர்கள்  தந்திரசாலிகள்.  எப்பொழுதும்  குருவை  மதிக்கா  விட்டாலும்  எப்பொழுது  மதிக்க  வேண்டுமோ  அப்போது  மதித்து,  தம்  காரியங்களை  சாதித்துக்  கொள்வதில்  சமர்த்தர்கள்.



தேவலோகம்  அவர்கள்  வசம்மாயிற்று.   அங்கிருந்து  விரட்டப்பட்ட  தேவர்கள்  பிரம்மதேவனிடம்  சரண்  அடைவதென  முடிவு  செய்ய,  இந்திரனும்  அதற்க்லு  சம்மதித்தான்.



நான்முகன்  புன்னகையுடன்  அவர்களுக்கு  அபயமளித்தான்.  "தேவலோகத்தை  மீண்டும்  அடைய ஒரே  ஒரு  வழி  உள்ளது " என்றான்.



"கூறுங்கள்"



"துவஷ்டாவின்  குமாரன்  விஸ்வரூபனை  அறிவாயா நீ?"



"மகா தபஸ்வி  என்று  கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் ...."



"நீ  எதற்கு  இழுக்கிறாய்  என்று  புரிகிறது  தேவேந்திரா.  அவன்  அசுர குலத்தோனாயிற்றே  என்று  எண்ணுகிறாய். சரியா?"



"அதுமட்டுமல்ல.  அவன்  எவ்விதத்தில்  எங்களுக்கு  உதவக்  கூடும்?"



"சந்தேகம்  வேண்டாம்  தேவேந்திரா. விஸ்வரூபன்  அசுர குலத்தில்  உதித்தவனாயிருக்கலாம்.    ஆனால்  தபஸ்வி.  தர்மங்களும்  நியாயங்களும்  அறிந்த உத்தமன். அவனுடைய  தபோபலனும் சத்திய சிந்தையும் உங்களைக்  காக்கும்.  அசுர  வம்சம்  என்றெண்ணாது  அவனைச் சரணடைவீராக.  கண்டிப்பாக  அவன்  உங்களுக்கு  உதவுவான்."



"நன்றி  நான்முகனே.  இப்போதே  விஸ்வரூபனிடம்  செல்கிறோம்"  தேவர்கள்  அங்கிருந்து  கிளம்பி  விஸ்வரூபனிடம்  வந்து தங்கள்  நிலையைக்  கூறி  அவன்  உதவியைக்  கோரினார்கள்.  .



விஸ்வரூபன்  கண்மூடி  யோசனையிலாழ்ந்தான்.



 "உதவி  என்று  வந்தவரைத்  திருப்பி  அனுப்புதல்  தர்மமன்று என்பதை  நானறிவேன்.  உங்களுக்கு  உதவுதல்  என்  கடமையும்  கூட.  அதே  நேரம்  தங்களுக்கு  புரோகிதம்  செய்வதால்  என்  தபஸ்  நாசமடையும்.  இருப்பினும்  தங்களைக்  கைவிட மாட்டேன்."



விஸ்வரூபன்  உறுதியளித்து  விட்டு கண்மூடி தியானத்திலாழ்ந்தான்.  சுக்ராச்சாரியாரிடமிருந்து  தான்  கற்ற  வித்தையைக்  கொண்டு  அசுரர்களின்  பலத்தை  கிரகித்து இந்திரனுக்கு  மந்திரோபதேசம்  செய்தான்.

"இதுவே  நாராயண  கவசம்.  இதனை  உனக்கு  உபதேசித்து  விட்டேன்.  இதனை  பக்தி  சிரத்தையுடன்  ஜெபித்து  அசுரர்களை  வென்று  தேவலோகத்தை  மீட்பாயாக. இந்த  மந்திரம்  சத்ரு பயத்திலிருந்து  உன்னை  விடுவித்து  எங்கும்  எதிலும்  ஜெயிக்க  வைக்கும்.  சென்று  வா" 



இந்திரன்  விஸ்வரூபனை  வணங்கி  நன்றி  கூறி  விடை பெற்றான்.  நாராயண  கவசம்  தேவலோகத்தை  மீட்டுக்  கொடுத்தது.  



தேவர்களுக்கு  புரோகிதம்  செய்ததால்  விஸ்வரூபனின்  தபஸ்  குறைப்பட்டு,  அவனுக்கு  மூன்று  தலைகள்  உண்டாயின.  தன்   தபோவலிமையை  மீண்டும்  அடைய,  விஸ்வரூபன்  யாகமொன்று  நடத்தினான்.  தேவர்களுக்கு  அவிர்ப்பாகம்  கொடுத்த  பிறகு தன தாய்வழிச்  சொந்தங்களான  அசுரர்களுக்கும்  ஒரு  பங்கு  அவிர்ப்பாகம்  கொடுத்தான்.  அது  கண்டதும்  தேவேந்திரனின்  விழிகள் சிவந்தது.  அவன்  விஸ்வரூபனை  நோக்கி  கேட்டான்.



"நீங்கள்  செய்வது  சரியா  புரோகிதரே?"



"எது?"



எனக்கு  சமமாக  அசுரர்களுக்கு  அவிர்ப்பாகம்  கொடுக்கிறீரே.  அதைத்தான்  சரியா  எனக்  கேட்கிறேன்."



"அதிலென்ன  தவறு?"



"அவர்கள்  அசுரர்கள்  என்பதுதான்  தவறு.  அவிர்ப்பாகம்  பெற்றுக்  கொள்ளும்  அருகதை  அவர்களுக்கு  இல்லை  என்பதை  மறந்து  விட  வேண்டாம்.  எங்கள்  முன்பாக  அவர்களுக்கு  அவிர்ப்பாகம்  அளிப்பது  எங்களை  அவமதிப்பதாய்  ஆகாதா?



"அவர்களுக்கு  அவிர்ப்பாகம்  கொடுத்தது  அன்பினால்.  அதனைத்  தாங்கள்  தவறாக  எடுத்துக்  கொள்ள  வேண்டாம்.  உங்களை  அவமதிக்கும்  எண்ணமோ  நோக்கமோ இங்கு  எவருக்கும்  இல்லை.  தயவு செய்து  அமைதியடையுங்கள்"  விஸ்வரூபன்  சாந்தமாகக்  கூறினான். 



"முடியாது  வெற்று  சமாதானம்  என்  ஆத்திரத்தை  தணிக்காது.  கொடுத்த  அவிர்ப்பாகத்தை  நீங்கள்  திரும்பப்  பெற  வேண்டும்.  அப்போதுதான்  என்  ஆத்திரம்  தணியும்."



"கொடுத்ததைத்  திரும்பப்  பெறுவது  தர்மமல்ல  தேவேந்திரா.  அது  என்னால்  இயலாது"



"அப்படியானால்  என்  சினத்திற்கு  நீ  ஆளாக  வேண்டியிருக்கும்"



"உன் மூலம்தான்  எனக்கு  முடிவென்றால்  அதைத்  தடுக்க  யாரால்  முடியும்?  நான்  சித்தமாயிருக்கிறேன்"



விஸ்வரூபன்  உறுதியாகவும்  பணிவாகவும்  கூற,  தேவேந்திரனின்  சினம்  தலைக்கேறியது.  அசுரேந்திரன்  ஆனான்.  விஸ்வரூபனின்  மூன்று  சிரங்க்ளையும்  கொய்து  யாகத்தீயில்  எறிந்தான்.  தேவேந்திரனின்  செய்கையில்  அனைவரும்  அதிர்ச்சி  அடைந்தனர்.  தேவர்களாலேயே   அத்துக்கத்தை  தாங்க  முடியவில்லை.  வெட்கத்துடன்  தலை  குனிந்து  நின்றனர்.   அசுரர்கள்   முகத்தைப்  பொத்திக்க் கொண்டு  கண்கலங்கினார்கள்.  புத்திர சோகம்  தாளாது  துவஷ்டா  கதறினான்.  



"உனக்கு  நாராயண  கவசம்  சொல்லிக்  கொடுத்து,  தேவலோகம்  திரும்பக்  கிடைக்க  உதவினானே   என்  மகன்.  இதுதான்  நீ  அவனுக்குத்  தரும்  பரிசா தேவேந்திரா?   இவ்வளவு  நன்றி  கெட்டவனா  நீ?  மீண்டும்  இந்திர  பதவி  கிடைத்ததும்  உன்  மதி  கெட்டு   விட்டத?  உத்தமன்  ஒருவனை  நன்றி  மறந்து  கொன்றதால்  உன்னை  பிரம்மஹத்தி  தோஷம்  பீடிக்கட்டும்.  உன்  ரூபம்  மாறட்டும் ! பதவி  பறி போகட்டும்! புத்திர  சோகம்  தாளாது  துவஷ்டா  சாபமிட்டான்.  



சில  நிமிடங்களில்  தேவேந்திரனின்  ரூபம்  கோரமாய்  மாறத்  துவங்கியது.  "ஐயோ  இந்த  பிரம்மஹத்தி  தோஷத்திலிருந்து  யாரேனும்  என்னைக்  காப்பாற்றுங்களேன்"  என்று  கதறி  அழுதபடி  கால்போன  போக்கில்  ஓட  ஆரம்பித்தான்  தேவேந்திரன்.   இந்திரன்  இல்லாத  தேவலோகம்  பொலிவிழந்து  இருண்டு  போனது.  அவனை  இத்தோஷத்திலிருந்து  எவ்வாறு  மீட்பது  என்பது  குறித்து  தேவர்கள்  தங்கள்  குரு  பிரஹஸ்பதியோடு  ஆலோசித்தனர். 



"ஒரு  வழியுள்ளது.   தேவேந்திரனின்  இந்த  பிரம்மஹத்தி  தோஷத்தைப்  பகிர்ந்து  கொள்ள  உங்களில்  எவரேனும்  முன்  வந்தால்  அவன்  அதிலிருந்து  விடுபடுவான்."  குரு பிரஹஸ்பதி கூறினார். 



தேவர்கள்  திகைத்து  தயங்கிப்  பின்வாங்கினார்கள்.  முடிவில்  தேவரல்லாத  நால்வர்  பிரம்மஹத்தி  தோஷத்தை  பங்கு  போட்டு  இந்திரனை  விடுவிக்க  முன்வந்தனர்.  





அம்மா  கதையை  நிறுத்தினாள்.  



"யாரந்த  நான்கு  பேர்?  பையன்  ஆவலுடன்  விழி   விரியக்  கேட்டான். 



வேறு  யாருமில்லை.  நாம்  வசிக்கும்  இந்த  பூமி,  நாம்  குளிக்கும்  இந்த  ஜாலம்,  இந்த  பூமியிலுள்ள  விருட்சங்கள், மற்றும் ஸ்திரீகள் இவர்களே  பிரம்மஹத்தியை  பங்கு  போட்டுக்  கொண்டு  தேவேந்திரனின்  தோஷத்தை  நீக்கியவர்கள்" 



"பெற்றுக்  கொண்ட  பிரம்மஹத்தி  தோஷம்  இவர்களை  பாதிக்கவில்லையா?  பாதித்தது  என்றால்  எப்படிப்  பட்ட  பாதிப்பு?  பையன்  கேட்டான். 



"பாதிப்பு  மட்டுமல்ல.  இந்த  நற்செயலுக்காக  நான்கு  பேருக்கும்  ஆளுக்கு  ஒரு வரமும்  கிடைத்தது."



"என்ன  பாதிப்பு?  என்ன  வரம்?"



"பூமி  தன்  மீது  ஏற்பட்ட  பள்ளங்கள்,  தானே  தூர்ந்து  போகவல்ல  வரத்தைப்  பெற்றது.    இந்த  பூமியில்  பொய்  பித்தலாட்டம்,  நன்றி கெட்ட  குணம்,  பிறர்  பொருளை அபகரிப்பது  போன்ற  தவறுகளைச்  செய்பவர்கள்  எல்லோரும்  பிரம்மஹத்தியின்  ரூபமாயிருப்பார்கள்.   



ஜலம்,  விருத்தியாகி  பெருகி ஓடும்  வரத்தைப்  பெற்றது.  அதில்  காணும்  நுரையும்,  நீர்க்கொப்புளங்களும்  பிரம்மஹத்தியின்  ரூபம்.  



விருட்சம்  அதன்  கிளைகளை  எவ்வளவு  முறை  வெட்டினாலும்  மீண்டும்  மீண்டும்  துளிர்க்கும்  வரத்தைப்  பெற்றது.  அதே  நேரம்  அதில்  வடியும்  பிசின்தான்  பிரம்மஹத்தியின்  வெளிப்பாடு.  



ஸ்திரீகள்  தாங்கள் கருவுற்ற  காலத்தில்,  தன்  கருவிலிருக்கும்  சிசுவுக்கு  எவ்வித  ஆபத்துமின்றி கணவனுடன்   சம்போகம்  செய்து  கொள்ளும்  வரத்தைப்  பெற்றார்கள்.  மாதா  மாதம்  அவர்களுக்கு  ஏற்படும்  உதிரப்  போக்குதான்  பிரம்மஹத்தியின்  ரூபம். 



அம்மா  சொல்லி  முடிக்க,  பையன்  ஜலத்தையும்  அதன்  கரையிலிருந்த  விருட்சங்களையும்,  தான்  நின்றிருந்த  பூமியையும்,  ஆற்றில்  குளித்துக்  கொண்டிருந்த  ஸ்திரீகளையும்  மரியாதையோடு  பார்த்தான்.  



ஆற்றங்கரையோரம்  பூமியில்  சிறிய  பள்ளம்  செய்து  வைத்து  விட்டுப்  போனான்.  இரு  தினம்  கழித்து  வந்து  பார்த்த  போது,  அந்தப்  பள்ளம்  தானே தூர்ந்து  போயிருந்தது  கண்டு  வியந்தான்.  நல்லவர்கள்  எல்லாம்  விஸ்வரூபனாய்த்  தெரிந்தார்கள்.  தீயவர்கள்  எல்லாம்  பிரம்மஹத்தி  பிடித்த  இந்திரனாய்த்  தெரிந்தார்கள்.  தான்  இனி  எப்படி  வாழ  வேண்டும்  எனப்  புரிந்தது.  இதுவரை  தான்  ஏதேனும்  தவறுகள்  செய்திருக்கிறோமா  என்று  யோசித்தான்.  சிறு  சிறு  தவறுகள்  செய்திருக்கிறோம்  என  நினைத்துக்  கொண்டான்.  தன்  தவறுகளுக்கு  மானசீகமாய்  மன்னிப்பு  கேட்டுக்  கொண்டான்.  பயபக்தியோடு  ஜலத்தில்  இறங்கினான்.  



"இதுவரை  நான்  அறிந்தோ  அறியாமலோ  செய்துள்ள  சிறு  சிறு  தவறுகளை  ஏற்றுக்  கொள்  ஜலமே!  என்னைப்  புது  மனிதனாக  மாற்று.  விஸ்வரூபனைப்  போல்  வாழ்ந்து  தர்மத்தின்  வழி  நடக்க  வரம்  கொடு"



கண்மூடி  தியானித்த படி  நீரில்  மூழ்கி  எழுந்தான். 
                              
                                                *****************************