வியாழன், 1 ஆகஸ்ட், 2019

ராமராஜனின் சாதனைகள் - கயகயகயகயா

ஏப்ரல் பதிமூன்றாம் தேதி.  அந்த உரை முடிந்ததும் நாங்கள் கிளம்பினோம்.  பஸ்சில் அழைத்துச் சென்றார்கள்.  காலை ஆகாரம் கிடையாது. 

நாங்கள் தங்கி இருந்தது புத்தகயாவில் என்பதால் அங்கிருந்து கயா நோக்கி சற்றே நீண்ட பயணம். 





பிண்டதானம் செய்யும் இடத்துக்கு கொஞ்ச தூரம் முன்னாலேயே பஸ்ஸை நிறுத்தி இறங்கி நடந்தோம்.  கண்முன்னே அந்த சற்றே உயரமான கோவில் தெரிந்தது.  



உள்ளே நுழைந்து அங்கிருந்த சந்நிதானத்துக்குள் சென்றோமா என்று நினைவில்லை.  பிண்டதானம் செய்யும் இடம் நோக்கிச் சென்றோம். வலதுபுறமாக திருப்பினால் ஒரு மேடை போன்ற இடமும் அதைத் தொடர்ந்து படிக்கட்டுகளும் இருந்தன.  நிறைய படிக்கட்டுகள்.  குறுகிய, செங்குத்தாக இறங்கும் படி அமைப்பு.  அங்கு பிண்டதானம் ஏற்கெனவே வேறொரு குழுவுக்கு செய்து வைத்துக்கொண்டிருந்தார் வாத்தியார்.  எட்டே முக்காலுக்கு அங்கே சென்றோம்.  காத்திருந்தோம் எங்கள் டர்ன் வர... 

மாத்ருபிண்டம் தரத் தயாரானோம்.

வறண்டுகிடந்த பல்குனி நதியில் நடுவில் ஒரு இடத்தில ஒரு போர்வெல் மாதிரி இருந்த இடத்திலிருந்து கொஞ்சம் தண்ணீர் எடுத்து தலையில் தெளித்துக்கொண்டு, சொம்பில் பிடித்து வரச் சொன்னார்கள்.  குளிக்க போதுமான நீர் கிடையாது.  ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன், பல்குணி நதியின் சாபம் பற்றி..

அந்தக் குழுவை அனுப்பி விட்டு வந்த வாத்தியார் எங்களை அமரச்செய்தார்.  பிண்டதானம் தொடங்கியது.  அவர் சொல்லிய மாத்ருஷோடசி கேட்டுக் கண்கலங்கியபடி கடமைகளைச் செய்தோம்.



ஆண்களை அங்கு அமரவைத்து விட்டு பெண்களை அருகே உள்ள இடத்துக்கு அனுப்பி சாத உருண்டைகள் -பிண்டம்- பிடிக்கச் சொன்னார் பண்டிட்.  மனைவியுடன் சென்றிருந்தால் நான் வைக்க வேண்டிய பிண்டங்களை என் மனைவி பிடித்துக்கொடுத்திருப்பார்.  தனியே சென்றதனால் என் அத்தை உதவினார்.  அவர் மனமுவந்து, எதுவும் நினைக்காமல் செய்தாலும் எனக்குதான் கஷ்டமாக இருந்தது.  இங்கெல்லாம் மனைவியுடன் சென்று வருவதே சிலாக்கியம், புண்ணியம்.

பெண்கள் மட்டும் தனியாக வந்திருத்தவர்களையும் அமரவைத்து அவரவர் கணவன்மார்களுக்கோ, பெற்றோருக்கோ ஸ்ராத்தம் செய்யச் செய்தார் பண்டிட்.  

முதற்கட்ட சம்பிரதாயங்கள் முடியும்போது கிட்டத்தட்ட பனிரெண்டு மணி.  ஒரு லஸ்ஸி மட்டும் குடித்துக் கொண்டோம்.  அங்குதான் லஸ்ஸி குடித்தேன்.  நல்ல நேரம் பாருங்கள்!

பிறகு அங்கிருந்து விஷ்ணுபாதம் சென்று அங்கு பிண்டம் சமர்ப்பித்தோம். முன்னரே சொல்லியிருந்தார் பண்டிட்.  அங்கு பணம் கேட்பார்கள்...  பலர் பணம் தராமலேயே வந்து விடுவதாக அங்கிருப்பவர்கள் புகார் சொல்வதால் ஆளுக்கு நூறுரூபாய் (என்றுதான் நினைவு) இங்கேயே இப்போது உங்களிடம் வருபவரிடம் கொடுத்து விடுங்கள் என்றார். அவர் பிண்டம் வைத்திருந்த ஒவ்வொருவரிடமும் வந்து பணம் சேகரித்துக் கொண்டார்.  ஆனாலும் விஷ்ணுபாதம் இடத்தில் பணம் கேட்டார்கள்!  மீண்டும் ஒரு சிறுதூரம் நடந்து முதலில் காரியம் செய்த இடத்துக்கு வந்து சேர்ந்தோம்.



அங்கிருந்து பண்டிட் வீட்டுக்கு அடுத்த கட்டம்.    பார்வண ஸ்ரார்த்தம்.  பண்டிட் தமிழ், தெலுகு, கன்னடா என்று எல்லா மொழிகளிலும் செய்து வைத்தார்.  பொதுவாகவே அங்கு இருப்பவர்கள் எல்லா மொழிகளும் தெரிந்து வைத்திருந்தார்கள்.   இயற்கைதானே...

அவர் வீட்டுக்கு சென்றபோது எங்களுக்குமுன் அங்கு வந்திருந்த குழு அட்சயவடம் நோக்கிக் கிளம்பிக் கொண்டிருந்தது.  நாங்கள் உள்ளே சென்று இடம்பிடித்தோம்.

எங்கள் நேரம் வரும்வரை எங்களை அருகில் இருந்த அறையில் இருக்கச் செய்தனர்.  பயத்தம் பருப்பு பாயசம் போன்ற கஞ்சி வேண்டுமா என்று கேட்டு கொடுத்தார்கள்.  ஏற்கெனவே அங்கு முன்னர் முடித்த குழு ஒன்றும் அமர்ந்து இருந்தது.  *

ஹால் காலி ஆனதும் எங்கள் குழு அழைக்கப்பட்டது.

பண்டிட் முன்னரே சொல்லி இருந்தபடி ("வேஷ்டி, அங்கவஸ்திரம் வாங்கியிருந்தால் கொடுங்கள்..  இல்லா விட்டால் அவர்கள் கையில் நூறு ரூபாய் கொடுங்கள்")  நாங்கள் வேஷ்டி அங்கவஸ்திரம், தானம் எதுவும் வாங்காத காரணத்தால் நூறு ரூபாய் அவர்கள் கையில் கொடுத்தோம்.

எல்லோரையும் வரிசையாக அந்த வீட்டு முற்றம் போன்று இருந்த இடத்தில் நிற்கச் சொன்னார்கள்.  ஒவ்வொருவர் எதிரிலும் இரண்டு (காசி) பிராமணர்கள் நின்றுகொண்டார்கள்.  எனக்கு முன்னே நின்ற இரு இளைஞர்களும் கல்லூரி விடுமுறையில் வந்திருப்பவர்கள் போல இருந்தார்கள்.  இன்னொருவர் எதிரில் பள்ளி மாணவன் போல இருவர்.  என் கையில் பார்சலைத் தேடியவர்கள் இல்லாததால் ஏமாந்து சைகையாலேயே 'இல்லையா' என்று கேட்டார்கள்.  ஒரு மோகனப்புன்னகை புரிந்தேன்!  பண்டிட் சொன்னதும் அவர்கள் கையில் நூறு ரூபாய் கொடுத்ததும் அவர்கள் "இன்னும் கொடு..  இன்னும் கொடு.." என்று என்னை அரித்துக் கொண்டே இருந்தார்கள்.  ரமேஷ் சொன்ன திருப்தியில்லா பிராமணர்கள் நினைவு வந்தது.  மேற்கொண்டு நூறு ரூபாய் கொடுத்தேன்.

பின்னர் அங்கு முடிக்க வேண்டிய (பார்வண) ஸ்ராத்தம் செய்தோம்.  அவரவர்கள் எதிரே நின்றவர்கள்தான் அவரவர்கள் பித்ருக்கள் - முன்னோர்கள்.  அவர்கள் வந்து அமர்ந்ததும் அவர்களுக்கு பரிமாறவேண்டும். எனக்கு முன்னே நின்ற இளைஞர்களை அடையாளம் கண்டு பிடிக்க சிரமப்பட்டேன்.  அவர்களே என்னை அழைத்து எதிரே நிறுத்திக்கொண்டனர்.  ஓடி ஓடி பரிமாறினோம்.

சுமார் முக்கால் மணிநேரத்தில் அந்தப் பகுதி முடியவே, அருகிலிருந்த இன்னொரு அறையில் பிண்டங்கள், பட்சணங்கள் பொட்டலம் கட்டி வரக் காத்திருந்தோம்.  ஆளுக்கு ஒரு கூடையில் அதுவும் வர, ஆளுக்கு ஒன்றைக் கவர்ந்துகொண்டு கிளம்ப.....

* பார்த்தால் என் செல்லைக் காணோம்!  பகீர் என்றது.  மற்றவர்கள் கிளம்பும் மும்முரத்தில் இருக்க நான் பரபரப்பாக ஹால், முற்றம், கைகழுவுமிடம் என்று ஓடினேன்.  என் பரபரப்பு பார்த்து என் மாமா ஒருவரும் வந்து என்ன என்று விசாரித்து,  கூடவே தேடினார்.  ஒருமுறை "இங்கதான் இருக்கும்...  பதறாமல் தேடு.."  என்றார்.  இன்னொரு முறை "போனால் போகட்டும் விடு...   அதுவும் நல்லதற்குதான் (யாருக்கு?) ஏதோ கர்மவினை" என்று பீதி ஊட்டினார்.

கிட்டத்தட்ட நம்பிக்கை இழந்த நிலையில், ஸ்ராத்தம் தொடங்கும் முன் அமர்ந்திருந்த அறையிலும் தேடி விடலாம் என்று அங்கு போனேன்.  அங்கு அமர்ந்திருந்த குழுவினரிடையே,  நான் அமர்ந்திருந்த இடத்தில் அமர்ந்திருந்தவர்களை சற்றே நகரச்சொல்லி தேடினேன்.  சுவர் ஓரம் பத்திரமாக அமர்ந்திருந்தது என் செல்!

நிம்மதியாகக் கிளம்பினோம்.  வழக்கம்போல ஷேர் ஆட்டோ.  குழுக் குழுவாக ஏறியமர்ந்து கொண்டோம்.  அட்சயவடம் நோக்கிச் சென்றது ஆட்டோ.




அந்த இடத்தை அடைந்து படிகள் ஏற ஆரம்பிக்கும்போதே இளம் சிறார்களும், சிறுமிகளும் வயதானவர்களும் கைகளை நீட்டிக் கொண்டு எங்களைச் சுற்றிக் கொள்ளத் தொடங்கினார்கள். 



செய்து வைக்க வேண்டிய பண்டிட் எங்களுடனே அதாவது எங்கள் குழு வந்த ஷேர் ஆட்டோவிலேயே வந்து விட்டார்.



மேலே படிகள் ஏறி அட்சய வடம் இருக்கும் இடத்தை அடைந்தோம்.  மரத்தடியில் எங்களை அமரச் சொன்ன பண்டிட் மரத்தின் பெருமைகள் உட்பட ஏற்கெனவே ரமேஷ் ஜம்புநாதன் சொன்ன விவரங்களை மீண்டும் இவரும் சொன்னார்.




பின்னர் ஒரு காய், ஒரு பழம், ஒரு இலை தியாகம் செய்யவேண்டிய நேரம். அவரே வரிசையாக பெயர்களை சொன்னார்.  பொதுவாக அரச இலையைதான் விடுவார்களாம்.  ஏனெனில் வாழை இலை போன்றவை புண்ணிய காரியங்களுக்கும், திவச காரியங்களுக்கும் முக்கியம் என்பதால் அதை விடக்கூடாது என்றார்.  அவரவர்கள் விடவேண்டியவற்றை மனதால் மூன்று முறை சொல்லி மந்திரங்கள் சொல்லச் செய்தார்.


அட்சயவடம் இருந்த இடத்திலிருந்து அருகேயுள்ள இரண்டு இடங்கள்...



இங்கு விட்டதும் உடனே செல்லும் இடத்திலேயே அதை follow செய்யவேண்டும் என்று பொருளில்லை.  ஊர் சென்றதிலிருந்து தொடங்கிக்கொள்ளலாம் என்றார்.  இதிலென்ன இருக்கிறது என்று தோன்றும்?  உலக வாழ்க்கையில் பற்று வைத்திருப்பதாலேயே ஆசைகளும் எல்லாத் துன்பங்களும் வருகின்றன. இதுபோல நமக்குப்பிடித்த ஒன்றைத் தியாகம் செய்யும்போது அதன் மூலம் வரும் அனுபவம், பழக்கம் படிப்படியாக நமக்கு பற்று விடச் செய்யும் என்பது போலச் சொன்னார்.



அட்சயவடத்தில் பிண்டதானம் நிறைவேறியது.  எல்லாம் முடியும் நேரம் ஒருவரை  .அழைத்தார் பண்டிட்.  அந்த ஊரில் அவர் நல்ல வசதியுடன் இருப்பவராம்.  மகன், மகள்களை நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுத்திருக்கிறாராம்.



அவரிடம் பணம் கொடுக்கச் சொல்லிவிட்டு "இவர்கள் செய்த தானம் நல்லதாக அமைந்ததா?'  என்று கேட்டார்.  'அமைந்தாச்சு' என்றார் அவர்.  'திருப்தியாக இருந்ததா' என்று கேட்டார் பண்டிட்.  'திருப்தியாச்சு' என்றார் அவர்.  'இவர்கள் முன்னோர்களுக்கு முக்தி கிடைக்குமா' என்றார் பண்டிட்.  'கிடைச்சாச்சு' என்றார் அவர்.  முன்னோர்களின் இடத்தில இருந்து ஆசீர்வாதம் செய்தார்.

அட்சயவடத்தை வலம் வந்து வணங்கினோம்.  நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தைச் சுத்தம் செய்ய வருபவருக்கு உங்களால் முடிந்ததைக் கொடுங்கள்...  அவருக்கு வயது 93 என்றார் பண்டிட்.



நாங்களும் அவருக்குக் கொடுத்தோம்.   மணி நான்காகி இருந்தது.  வெளியேறும் நேரம் செருப்பு விட்டிருந்த இடம் தொடங்கி, வண்டி ஏறும் வரை யாசகர்கள் தொல்லை மிக மிக அதிகம்.  பத்து ரூபாய் நோட்டுகளாக மாற்றி வைத்துக்கொண்டு வண்டி கிளம்பும் நேரம் கொடுத்தேன்.  கூட்டம் ஈ மொய்ப்பது போல மொய்த்து விட்டது.  ஆட்டோவின் பின்னாலேயே பாவமான bhaaவத்துடன் ஓடி வந்தனர் சிறுவர், சிறுமியர்.    பணம் கிடைத்தவர்கள், தங்களுக்கு கிடைத்த பணத்தை மற்றவர்களுக்கு காட்டி என்னை கைகாட்டினார்கள்.  ஒருவழியாய் ஆட்டோ வேகம் பிடித்து என்னைக் காத்தது.  முடிந்தவரை தானம் செய்தேன்.  அங்கு யாருக்கு கொடுத்தாலும் நல்லது என்று சுகுமார் சொல்லி அனுப்பி இருந்தார்.

நான்கரை மணிக்கு பண்டிட் வீடு வந்து சேர்ந்தோம்.  அங்கு எங்களுக்கு உணவு தயாராக இருந்தது.  சாப்பிட்டு முடித்து கிளம்பும்போது மாலை ஐந்தரை ஆகிவிட, கயாவிலோ, புத்த கயாவிலோ வேறு ஒன்றும் பார்க்க முடியவில்லை.  பாலாஜி, ப்ரசாந்த்திடம் கேட்டதற்கு நேரம் ஆகி விட்டது, புத்தகயா தங்குமிடத்தில் காலி செய்யச் சொல்லி விட்டார்கள் என்றெல்லாம் சொன்னார்கள்.  பிண்டதானம் செய்யாதவர்கள் கயா, புத்தகயாவில் ஓரளவு சுற்றிப் பார்த்திருந்தார்கள்.  எனக்கு அது குறைதான்.  ஏனெனில் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை முழுவதும் மறுபடியும் வாரணாசியில்தான் இருக்கவேண்டும்.  ஓரளவு ஏற்கெனவே பார்த்த இடம்தான்.  எனவே பார்க்காத கயா, புத்தகயாவில் எதையாவது பார்த்திருக்கலாம். சரியான நேர மேலாண்மை, திட்டமிடல் இல்லை பாலாஜி, ப்ரசாந்த்திடம் என்பதும் எண்ணம்.

அங்கிருந்து கிளம்பும்போது அங்கு பார்த்த கட்டிடம்.  அதை போட்டோ எடுக்க முயலும்போது குறுக்கே ஒரு பெரிய வண்டி, ஆட்டோ என்று வர தொடர்ந்த என் முயற்சிகள் படங்களாய்...







கயாவிலிருந்து ஷேர் ஆட்டோவில் -  ஆம் ஷேர் ஆட்டோவில் காசு செலவு செய்து - புத்தகயா வந்து, தங்கியிருந்த இடத்திலிருந்து பஸ்ஸில் கிளம்பி, நள்ளிரவில் வாரணாசி வந்து சேர்ந்தோம். 


====================================================================================================


பேஸ்புக்கில் சமீபத்தில் பகிர்ந்த கவிதை ஒன்று :




====================================================================================================

இதுவும் பேஸ்புக்கில் பகிர்ந்ததுதான்.  சுவாரஸ்யமான புள்ளி விவரம்.

முகநூலிலிருந்து திரு எஸ். கிருஷ்ணமூர்த்தி (நம்ம கிருஷ் ஸார்தான்!) இதை ப்ளஸ்ஸில் பகிர்ந்திருந்தார். நான் இதை இங்கே பகிர்கிறேன்! ஒரிஜினல் ஸ்டேட்டஸ் யார் போட்டார்களோ.... அவர்களுக்கு நன்றி!

===================



முகநூலில் படித்தது..பிடித்தது. பசுநேசன் என்று முதலில் தினமலர் அப்புறம் வரிசையாக மற்றவர்கள் அப்புறம் தான் சமூக வலைத்தளங்களில் பரவலாகக் கிண்டல் செய்யப்பட்டவர் நடிகர் ராமராஜன். ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக ஆனபிறகும் கூட பந்தா பரமசிவமாகவோ உபத்திரவமாகவோ மாறாத அரசியல்வாதி என்பதைக் கடைசி வரை சொல்லவே இல்லையே  

இயேசுவின் சமாதானத்துக்கு சாட்சி சொல்கிறவராக ஆகிப் போனதையாவது சொல்லியிருக்கலாம்! 

ராமராஜனை கிண்டல் செய்யும் பலருக்கு ராமராஜனின் சாதனைகள் தெரியாது!!

அவரது சாதனைகளில் சில:

1. 43 படங்களில் தனி கதாநாயகனாக நடித்திருக்கிறார், எந்த படத்திலும் இரண்டாம் கதாநாயகனாக நடித்து இல்லை.

2. ஒரே நேரத்தில் 40 படங்களில் கதாநாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்ட ஒரே நாயகன் (கரகட்டகரன்வெற்றிக்கு பிறகு) இவர் மட்டுமே.

3. 1989 முதல் 1992 வரை கால்ஷீட் full என மூன்று வருடத்திற்கு book செய்யப்பட்ட ஒரே ஹீரோ. 



4. கமலை விட கௌதமியுடன் அதிகம் சேர்ந்து நடித்த ஹீரோ (6 படங்கள்).

5. கடந்த 10 ஆண்டுகளில் ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்து இருந்தாலும் இவரை எல்லோருக்கும் தெரியும்.

6. 1990 களில் 6.6% ரசிகர்களை பெற்று தமிழ்நாட்டில் 5ம் இடத்தில இருந்த ஹீரோ இவர்தான்.

7. ஒரு வருடம் தொடர்ந்து (இழுத்தடிக்காமல்,இவரே ஓட்டாமல்) தானாக ஓடிய படத்தின் கதாநாயகன் (கரகாட்டக்காரன்).

8. இவரே சொந்தமாக 4 படத்தினை இயக்கியது யாருக்கும் தெரியாது.

9. ஒரு MP யாக மிகபெரிய ஒட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கதை யாருக்கும் தெரியாது.

10. வாய்ப்பு இல்லாத நாட்களில் தனது உடையை iron பண்ண சென்ற மேனேஜரை பார்த்து கடைக்காரர், யார் என்று கூட தெரியாமல் "இது என்ன ராமராஜன்
சட்டையா?" என்று கேட்டாராம். அந்த அளவுக்கு அவரது சட்டைகள் பிரபலம்.

11. இவரால் எந்த producerம் நஷ்டப்பட்டது கிடையாது

என்ன செய்வது, சமூக வலைத்தளங்களின் இலவசகணக்குகளை கையில் வைத்துக்கொண்டு கண்டமேனிக்கு கிண்டல்மட்டும் செய்ய பழகிக்கொண்டோம்.

=================================================================================

158 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம் மற்றும் தொடரும் அனைவருக்கும்.

    என்ன இது கய கய கய கயாவா....முடிந்துவிட்டது என்று அர்த்தமா...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன். முடியத்தானே வேண்டும்? இப்போதே ரொம்ப நீண்டு விட்டது. அநேகமாக அடுத்த வாரம் (நிஜமாகவே) முடிந்து விடும் சாத்தியக்கூறுகள்!

      நீக்கு
  2. ஓ ஆமாம் ஏப்ரல் 13 வந்தாச்சே....அப்ப பயணம் அன்றுதானே முடிந்தது!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் என்ன வலையில் சுற்றுப் பயணமா காணலை?!! இல்லை தில்லியிலிருந்து ஃப்ளைட் லான்ட் ஆகலையோ!!

      கீதா

      நீக்கு
    2. கிட்டத்தட்ட... பதினைந்து நாங்கள் திரும்பினோம்!

      நீக்கு
    3. பார்த்துவிட்டேன் ஸ்ரீராம்..

      ஓ 15தான் திரும்பினீங்களா...

      கீதா

      நீக்கு
  3. அந்த இடத்தை அடைந்து படிகள் ஏற ஆரம்பிக்கும்போதே இளம் சிறார்களும், சிறுமிகளும் வயதானவர்களும் கைகளை நீட்டிக் கொண்டு எங்களைச் சுற்றிக் கொள்ளத் தொடங்கினார்கள். //

    எனக்கு உடனே நான் கடவுள் நினைவுக்கு வந்தது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கிருந்துதானே அங்கே... கங்கா ஆரத்தி காட்சி கூட வரும் இல்லையா?

      நீக்கு
  4. பதில்கள்
    1. அனைவருக்கும் வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிராரத்தனைகள், வந்து தாமதமாகச் சொல்கிறேன்.

      நீக்கு
    2. வாங்க கீதா அக்கா.. வணக்கம், நல்வரவு.

      நீக்கு
  5. கவிதை செம ஸ்ரீராம் மிகவும் ரசித்தேன்!!

    அதுவும் கடைசி வரி!!! உண்மையான கடவுளை அடைய மனிதனுக்கு அறிவில்லை//

    அதே அதே...

    வருகிறேன் மதியமாய்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கீதா... அப்புறமா வாங்க... வெங்கட் தளத்தில் வந்த பாடல் கானடாவா?!!! (நெல்லை இந்த கமெண்ட்டைப் படிக்க வேண்டாம்)

      நீக்கு
    2. ஸ்ரீராம் மதியம் வந்து இப்ப கமென்ட் கொடுத்த போதுதான் பாட்டுக் கேட்டுக் கொண்டே கொடுத்தேன்...இடையில் நெட் வேறு படுத்தல்..

      பாட்டு மத்தியமாவதி ராகம் ஸ்ரீராம்.

      உங்கள் யூகம் கொஞ்சம் சரிதான் ஏனென்றால் ஆரம்பம் கொஞ்சம் தர்பாரி கானடா போலத்தான் வருது. ஏனென்றால் தர்பாரி மத்தியமாவதி ஆரோகண அவரோகண ஸ்வரங்களில் மத்தியமாவதியில் இல்லாதவை தர்பாரி கானடாவில் இருக்க கொஞ்சம் ஆரம்பம் அந்த ஸ்வரங்களை டச் செய்து வந்திருப்பதால் இருக்கலாம்..ஆனால் அப்புறம் மத்தியமாவதிதான்...

      கீதா

      நீக்கு
  6. இனிய காலை வணக்கம் அன்பு கீதா, அன்பு ஸ்ரீராம், துரை செல்வராஜு.
    அத்தி வரதரை நேரலையில் நின்ற கோலத்தில் தரிசித்துக் கொண்டிருக்கிறோம்.
    என்ன அழகான திருமேனி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லிம்மா...

      இனிய காலை வணக்கம்.

      இங்கும் தொலைக்காட்சியில் அவர்தான். நீலநிறப் பாட்டில் அருள் பாலிக்கிறார்.

      நீக்கு
    2. ஆண்களை அங்கு அமரவைத்து விட்டு பெண்களை அருகே உள்ள இடத்துக்கு அனுப்பி சாத உருண்டைகள் -பிண்டம்- பிடிக்கச் சொன்னார் பண்டிட். மனைவியுடன் சென்றிருந்தால் நான் வைக்க வேண்டிய பிண்டங்களை என் மனைவி பிடித்துக்கொடுத்திருப்பார்///😒😒😒😒😒😒

      நீக்கு
    3. கயா, புத்த கயா, விஷ்ணு பாதம், பிண்ட சமர்ப்பணம் அனைத்துப் படங்களும் சிரத்தையுடன் எடுத்திருக்கிறீர்கள்.
      செல்லைத் தொலைத்து,அது சமர்த்தாகக் காத்திருந்ததா. நல்ல வேளை.மா.

      பெண்களும் திதி கொடுக்கிறார்கள் என்று கேட்க சந்தோஷம்.
      சாயந்திரம் தான் சாப்பிட்டீர்களா . இறைவன் துணை.
      உங்களுக்கு இன்னோரு பயணம் மனைவியுடன் இருக்கிறது.

      இன்னும் கொஞ்சம் செய்தி இருந்தால் மறக்காமல் எழுதுங்கள்.

      ராமராஜன் எனக்கும் பிடிக்கும். ஒரு மாதிரி இன்னொசெண்ட் முகம்.

      இறைவன் மனிதனைப் படைக்க, மனிதன் இறைவர்களைப் படைக்க

      ஒருவருக்கு ஒருவர் இன்னும் தொடர்பு இருக்கிறதா என்று தான் தெரியவில்லை.

      நீக்கு
    4. சில இடங்களில் படம் எடுக்க முடியவில்லை. நேரம் இல்லை. செல் தொலைந்து கிடைத்தது சந்தோஷம்தான்மா. பெண்களும் திதி கொடுக்கிறார்கள். என் உறவுக்காரப்பெண் கூட அந்த வகையில் திதி கொடுத்தார். இன்னும் கொஞ்சம் செய்தி... எனக்குத் தெரிந்து அவ்வளவுதான் என்றுநினைக்கிறேன்.அநேகமாக பயணக்கட்டுரையின் ஆரம்பபாகம் போல பொழுது போக்கு தளத்திற்குதான் இனி இடம்! ராமராஜன் படங்களில் இளையராஜா பாடல்கள் நன்றாய் இருக்கும். இறைவன்-மனிதன் விநோதக்கூட்டணி!!!!

      நன்றிம்மா.

      நீக்கு
    5. //பெண்களும் திதி கொடுக்கிறார்கள் என்று கேட்க சந்தோஷம்.// என் சின்ன வயசிலேயே என் அப்பாவின் சித்தி தன் கணவருக்கும், சித்தியின் மருமகள் தன் கணவருக்கும் சாஸ்த்ரோக்தமாகத் திதி கொடுத்து வந்ததைக் கண்டிருக்கிறேன். மதுரை காகாத்தோப்புத் தெருவில் தங்கம் தியேட்டர் பின் பக்கத்திற்கு இரண்டு வீடுகள் தள்ளி அவங்க வீடு இருந்தது.

      நீக்கு
    6. அதோடு என் பெரிய மாமியார் (மாமியாரின் ஓர்ப்படி) தன் கணவருக்குக் கொள்ளியும் போட்டு ஸ்ராத்தமும் செய்து வந்தார். இப்போவும் எங்க வீடுகளில் குழந்தை இல்லாத பெண்மணிகள் தங்கள் கணவருக்கு ஸ்ராத்தம் அவர்களே செய்து வருகின்றனர். என் கடைசி நாத்தனார் காசி, கயா, பத்ரிநாத் ஆகிய இடங்களுக்குச் சென்று அவர் கணவருக்குப் பிண்டம் போட்டு வந்திருக்கிறார். நம் சாஸ்திரங்களில் இதை எல்லாம் செய்யக் கூடாது எனப் பெண்களை எப்போதும் ஒதுக்கியதில்லை. பலரும் அறியாமையில் இருக்கிறார்கள். அதனால் தான் திரு வாஜ்பேய் இறந்தபோது அவர் வளர்ப்பு மகள் காரியங்கள் செய்ததைப் பெரிய விஷயமாகப் பேசினார்கள். அப்போதும் இதை எல்லாம் குறிப்பிட்டிருந்தேன்.

      நீக்கு
    7. எனக்குத் தெரிந்த இடங்களிலும் உதாரணங்கள் உண்டு அக்கா. ஆனாலும் பார்த்ததை இங்கு குறிப்பிட்டேன்.

      நீக்கு
    8. ஆனந்த நன்றிகள் கீதாமா. இத்தனை பெரிய சமாசாரம் தெரியாமல் இருந்திருக்கிறேனே.

      நீக்கு
    9. சமீபத்தில் என் சிறிய மாமனார் இறந்த பொழுது அவருடைய ஒரே மகள்தான் ஈமச்சடங்குகளை செய்தார்.

      நீக்கு
    10. பெண் இருந்தால் பெண்ணிற்குத் தான் கர்மா செய்ய முழு உரிமை. என் தம்பி மனைவி அவள் அப்பா, அம்மாவுக்கு ஸ்ராத்தம் செய்து வருகிறாள். பென் வயிற்றுப் பேரன் இருந்தால் செய்யலாம். அதற்கு ரொம்பவே பலன் உண்டு.தௌஹித்திரன் செய்வதை சாஸ்திரமும் அதை மிக அதிகமாக ஆமோதிக்கிறது. ஆனால் பெற்றோர் இருவரும் சேர்ந்து ஒத்துக்கொள்ள வேண்டும். மனைவி தன் பெற்றோர் தானே என ஒத்துக் கொள்ளலாம். ஆனால் கணவனுக்குப் பிடிக்காமல் போகலாம். ஆகவே எந்தவிதமான பிரச்னையும் இல்லாமல் பெண்ணே செய்வது தான் நல்லது!

      நீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் வணக்கங்களுடன், இன்றைய நாள் அனைவருக்கும் நன்மைகள் தரும் நாளாக அமைய பிராத்திக்கிறேன்.
    பதிவை படித்து பின் வருகிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா..

      வாழ்த்துகளுக்கு நன்றி.

      படித்து வீட்டுக் கருத்து சொல்லுங்கள்.

      நீக்கு
  8. அனைவருக்கும் காலை வணக்கம்.

    பதிவு அருமை. கவிதையும் நல்லா இருந்தது.

    கயா விவரங்கள் உபயோகமாக இருக்கும். நானும் ஓரிரு நாட்களில் யாத்திரைக்குக் கிளம்புகிறேன். 10-20ரூ நோட்டுகள்தாம் கிடைக்கறதில்லை வங்கியில் சொல்லிவைத்தாலும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை. காலை வணக்கம். நன்றி பாராட்டுகளுக்கு.

      ஒரு மாமா பத்து ரூபாய்க்கட்டு கொடுத்து உதவினார். அவர் வங்கியிலிருந்து ஓய்வுபெற்றவர்.

      பத்து ரூபாய், இருபது ரூபாய் சில்லறைகளை பெரும்பாலும் எங்கள் கேஸ்காரர், பால்காரர், மளிகைக்கடைக்காரர் ஆகியோரிடம் வாங்குவேன்.

      நீக்கு
    2. அன்பு முரளிமா. நல்லபடியாகப் போய் வாருங்கள்.

      நீக்கு
    3. ஓ! நெல்லை!!! கயா பயணமா ஆஹா!! இனிய பயணமாக அமையட்டும்! சென்று வென்று வாருங்கள்! வாழ்த்துகள்!

      கீதா

      நீக்கு
    4. இல்லை. தஞ்சைப் பகுதி, சோழ நாடு. கயா ப்ராப்தமிருந்தால் அடுத்த மாதம்

      நீக்கு
  9. துரை செல்வராஜூ ஸார்...

    சென்ற வாரமே உங்களிடமிருந்து பதிவு பற்றி ஒன்றும் கருத்து வரவில்லை என்கிற குறை எனக்கு இருந்தது.

    இப்போதும் காணோம்.

    பதிலளிநீக்கு
  10. ஒரே படத்தில் நடித்து மதுரையில் தியேட்டரையே வாங்கி (கரகாட்டக்காரன்) அதை மீண்டும் இழந்ததைக் குறிப்பிடவில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். அதில் அது பற்றிக் குறிப்பிடப்படவில்லை!

      நீக்கு
    2. கடனா கட்டியா கர்த்தனாதானே...
      அதைத்தான் கடனைக் கட்டியாச்சே...

      நீக்கு
  11. மனிதன் தான் உண்டாக்கிய கடவுளையும் மறந்துவிட்டான். உண்மையான கடவுள் தன்னுள்ளே இருப்பதையும் அறிய மாட்டான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் கீதாக்கா சொல்லியிருப்பது போல் எல்லோருக்குமேதான். உங்களுக்கு என்று இல்லை. அகத்தினுள் இருப்பதை அறியாததால்தானே பிற மனிதன் மேல் வெறுப்பு, அகங்காரம், போட்டி பொறாமை என்று சென்று கொண்டிருக்கிறது...

      கீதா

      நீக்கு
    2. ​ஆனால் நான் மட்டும்தான் கவிதையில் (?) வெளிப்படுத்தி இருக்கிறேன்!!!!!!!

      நீக்கு
  12. //இயேசுவின் சமாதானத்துக்கு சாட்சி சொல்கிறவராக ஆகிப் போனதையாவது சொல்லியிருக்கலாம்! // இவர் ஒருத்தர் மட்டும் என்றால் சொல்லி இருக்கலாம். தமிழ்த்திரைப்படத் துறை முழுவதுமே அங்கே தானே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதே தான் கீதா மா. விவரங்களைக் கேட்டாலே மனம் கலங்குகிறது.

      நீக்கு
    2. அப்போது இவர் மட்டும்! இது பகிர்ந்தே மூன்று நான்கு வருடங்களுக்கு மேல் இருக்கும். இப்போதைய நிலைதான் படிக்கிறோமே..

      நீக்கு
    3. அவருக்கும் முன்னால் டி.எஸ்.பாலையாவின் மகன் ஜூனியர் பாலையா, ஏ.வி.எம்.ராஜன் எனப் பலர் உண்டு. அதிலும் பாலையாவின் குடும்பம் மிகவும் ஆசார அனுஷ்டானங்களைக் கடைப்பிடித்து வந்த குடும்பம்.

      நீக்கு
  13. படங்கள் நன்றாக வந்திருக்கின்றன. ஆனாலும் உங்கள் சுற்றுலா ஒருங்கிணைப்பாளர் சரியானபடி வழி நடத்தவில்லையோனு சந்தேகம்! சாப்பாடும் சரியாக் கொடுக்கலை போல! :( எனக்கு எப்போவுமே குழுவாகப் போவதில் தயக்கம் வரும். முக்கியமாய்த் தங்குமிடங்கள்! இங்கே கயாவில் சுத்தம் என்பதே இருக்காது. இப்போது எப்படியோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் பாராட்டுக்கு நன்றி. சந்தேகம் என்ன சந்தேகம்.. நானேதான் சொல்லியிருக்கிறேனே... ஆரம்பத்தில் அவர்களை பாராட்டி இருந்தேன். அப்புறம் பதிவுக்காக விவரம் சேகரிக்க சேகரிக்க அவர்கள் வள்ளல் தெரிந்து சொல்லிக்கொண்டே வருகிறேனே...

      நீக்கு
    2. ஸ்ரீராம் படங்கள் நல்லாருக்கு. நிறைய படங்கள் எடுக்க முடிந்திருக்காது என்பது உங்கள் பயண விவரங்களில் இருந்தே தெரிகிறது.

      கீதாக்கா சொல்லியிருப்பது போல் எனக்கும் தோன்றியது பயணம் சரியாக ஏற்பாடு செய்யப்படவில்லை என்று...அவ்வளவு தூரம் சென்றும் சில இடங்கள் பார்க்க முடியாமல் போயிருக்கிறதே...

      கீதா

      நீக்கு
    3. //கீதாக்கா சொல்லியிருப்பது போல் எனக்கும் தோன்றியது பயணம் சரியாக ஏற்பாடு செய்யப்படவில்லை என்று...//

      அதே பதிலையே நானும் சொல்றேன்...

      அதுதான் நானே சொல்லியிருக்கேனே!

      நீக்கு
  14. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு
  15. விரைவில் காசி செல்ல இருப்பதால் உங்கள் பயண குறிப்புகளை கைடாக வைத்துக் கொள்கிறேன். என் அண்ணாவும் காசி செல்லும் பொழுது சில்லறையாக மாற்றி வைத்துக் கொள்ளுங்கள் என்றார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்போது? அப்போ நம்ம பதிவர் சந்திப்பு கயால தானா (இல்லை ஹோ கயாவா?)

      நீக்கு
    2. கைடாக வைத்துக்கொள்ளும் அளவு என் பயணக்குறிப்புகள் ஏதாவது ஒன்றாவது உதவினால் சந்தோஷம்! எவை செய்யக்கூடாது என்கிற வகையில் உதவலாம்! டிராவல்ஸை நம்பாமல் தனியாக சங்கர மாதத்திலோ எங்கோ ஏற்பாடு செய்து சென்று வாருங்கள். அதுதான் சரியாக இருக்கும். அங்கு என்னென்ன இடங்கள் பார்க்கவேண்டும் என்று முன்னரே யோசித்து திட்டமிட்டு வையுங்கள்.

      நீக்கு
    3. ஆஹா ஸ்ரீராம் நீங்க தொடங்கி வைச்சீங்க இப்ப பாருங்க நெல்லை, அடுத்து பானுக்கா என்று காசிக்குப் போகப் போறாங்க...எல்லரது பயணங்களும் இனிமையாக அமைந்திட வாழ்த்துகள்.

      கீதா

      நீக்கு
    4. நான் நடுவில் சென்று வந்தவன்தான்!

      நீக்கு
  16. கடவுளுக்கும் மனிதனுக்கு நடக்கும் கண்ணாமூச்சி விளையாட்டை சிறப்பாக சொல்லியிருக்கிறீர்கள் ஶ்ரீராம். பாராட்டுகள்!👍👍👏👏

    பதிலளிநீக்கு
  17. கயா நான் போனது இல்லை, சார் அவர்கள் பி.ஏ படிக்கும் போது கல்லூரி சுற்றுலாவில் பார்த்தது.
    நாங்கள் இரண்டு முறை போனபோதும் கயா போகவில்லை.

    கயாபற்றிய செய்திகள் எல்லாம் இனி போக இருப்பவர்களுக்கு பயன்படும்.
    படங்களுடன் செய்திகள் நன்றாக வந்து இருக்கிறது.

    மனைவியுடன் இன்னொரு முறை போய் வாருங்கள்.

    //ஆட்டோவின் பின்னாலேயே பாவமான bhaaவத்துடன் ஓடி வந்தனர் சிறுவர், சிறுமியர். //

    கேட்கவே கஷ்டமாய் இருக்கிறது. பார்த்து வந்த உங்களுக்கு அந்த குழந்தைகளின் முகங்கள் நினைவில் வ்னஹ்து இன்னும் கஷ்டபடுத்தும் என்று நினைக்கிறேன்.

    முகநூல் கவிதையும் நன்றாக இருக்கிறது.

    ராமராஜனின் சாதனைகள் பற்றி சொல்வார்களா ? நிலை இறங்கி விட்டால் அதைதான் சொல்வார்கள்.

    //இயேசுவின் சமாதானத்துக்கு சாட்சி சொல்கிறவராக ஆகிப் போனதையாவது சொல்லியிருக்கலாம்!//

    அந்த செய்தியை காணொளியாக கண்டேன். மன அமைதி கிடைத்தால் நல்லதுதான்.




    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதி அக்கா..

      சுற்றுலாவாக எல்லாம் இங்கு செல்பவர்கள் குறைவுதான் என்றுநினைக்கிறேன். மேலும் ஸார் கல்லூரி படிக்கும் காலத்தில் சென்றது என்றஅளிப்போது இன்னும் வசதிகள் கூடி இருக்கும்.

      ஆம், மனைவியுடன் இன்னொருமுறை செல்ல உத்தரவு கிடைக்கவேண்டும்.

      அந்தக் குழந்தைகள் காசு வாங்கிய உடன் அவர்கள் முகபாவம் அப்படியே மாறிவிடுகிறது அக்கா. எல்லாம் நடிப்பு.

      பேஸ்புக் கவிதையைப் பாராட்டியதற்கு நன்றி.

      //அந்த செய்தியை காணொளியாக கண்டேன்.//

      நான் கண்டதில்லை.

      நன்றி அக்கா.

      நீக்கு
  18. கடவுளுக்கும், மனிதனுக்கும் நடக்கும் கண்ணாமூச்சி விளையாட்டை அழகாக சொல்லியிருக்கிறீர்கள் ஶ்ரீராம். பாராட்டுகள்👌👏

    பதிலளிநீக்கு
  19. ராமராஜன் பற்றிய தகவல்கள் சுவாரஸ்யம். ஆனால் சாதனை என்பது எண்ணிக்கையை பொறுத்ததா என்ன?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திரைத்துறையில் எண்ணிக்கையும் முக்கியம் ஆச்சே பானு அக்கா...

      நீக்கு
  20. ராமராஜன் பற்றிய தகவல்கள் சுவாரஸ்யம். ஆனால் சாதனை என்பது எண்ணிக்கையை பொறுத்ததா என்ன?

    பதிலளிநீக்கு
  21. மீண்டும் பயணம். செல்ஃபோனில் அனுப்புவதால் இரண்டு முறை வந்து விடுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயணம் சிறக்க வாழ்த்துகள் அக்கா.

      நீக்கு
    2. கீதா அக்கா எந்தெந்த நேரங்களில் செல்லலாம், என்னென்ன செய்யல்லாம், என்னென்ன எப்படிக் கொண்டுபோகலாம் என்பது உட்பட நிறைய யோசனைகள் கொடுப்பார். அவரும் இங்கு சொன்னால் உதவியாக இருக்கும்.

      நீக்கு
  22. நீங்க என்ன காய், பழம், இலை இவற்றைத் தியாகம் செய்தீர்கள்னு சொல்லல்லை.

    ப்ராப்தம் இருந்தால், அவரைக்காய் விடலாம்னு இருக்கேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் விட்டது அரச இலை, சுரைக்காய், நாவற்பழம்!

      நீக்கு
    2. நான் எதையும் விடப்போவதில்லை. எனக்கு நகை,புடவை உட்பட பெரிதாக எதிலும் ஆசை கிடையாது. சாக்லேட், ஐஸ்கிரீம் ஒரு காலத்தில் மிகவும் பிடித்ததாக இருந்தன,இப்போது அதுவும் இல்லை. எஞ்சியிருக்கும் ஆசை புத்தகங்கள் படிப்பது. புத்தகங்கள் படிக்க மாட்டேன் என்று பிரத்ஞை செய்து விட்டு மின்னூலில் படிக்கலாமா?

      நீக்கு
    3. ஒருகாய், ஒரு இலை ஒரு பழம் ஆகியவற்றைதான் விடச் சொல்வார்கள். புத்தகங்கள் எல்லாமா?!!

      நீக்கு
    4. ச்ராத்தத்துக்கு உண்டானவைகளில் ஒரு பழம், காய், இலை விடணும். ஐஸ்க்ரீம், சாக்லெட்லாம் ச்ராத்தத்துல உண்டா? இது என்ன... எம்.டி.ஆர் மெனு மாதிரிச் சொல்றீங்களே

      நீக்கு
    5. சுரைக்காயைச் சாதாரண நாட்களிலேயே சாப்பிடக் கூடாது! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இதைப் போய் அங்கே விட்டீற்களா? மற்றவை ஓகே! பொதுவாக ஸ்ராத்தக்காய்களான வாழைக்காய், வாழை இலை, வாழைப்பழம், வாழைத்தண்டு, பூ தவிர்த்த மற்றவை தான் விடணும். கொத்தவரை, அவரை, புடலை, பாகற்காய், சேனைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, கருணைக்கிழங்கு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று. பழங்களும் அநேகமாக முக்கனிகளில் வாழை தவிர்த்த மற்றவை சொல்லப்பட்டாலும் மற்றப் பழங்கள் ஆன மாதுளை, ஆரஞ்சு,நாவற்பழம், கொய்யா, விளாம்பழம் போன்றவற்றிலிருந்தும் விடலாம். இதில் பப்பாளி வராது! பூஜைக்கு ஏற்ற பழவகைகள் தான் இங்கே கணக்கில் வரும். இலை பொதுவாக அரசு, ஆல் இவற்றை விடச் சொல்லி அவங்களே சொல்லிடுவாங்க!

      நீக்கு
    6. பானுமதி தனியாக எதையும் விடவேண்டாம். சொல்லப் போனால் விடக் கூடாது. அவர் கணவர் எதை விடுகிறாரோ அதை அவரும் சேர்க்கக் கூடாது! அது ஐஸ்க்ரீம், சாக்லேட் அல்லது ஐஸ்க்ரீம் கேக், ஒயாலோ பிட்சா எதுவானாலும்! இஃகி, இஃகி,இஃகி! அவருக்கென்று தனியான மெனு ஏதும் சொல்ல மாட்டார்கள். கணவன், மனைவி இருவரும் சேர்ந்தே இவற்றை விடணும். இப்போ ஸ்ரீராம் விட்டவற்றைக் காசி, கயா போகலைனாலும் அவரோட பாஸும் சாப்பிடக் கூடாது!

      நீக்கு
    7. மன்னிக்கவும்... மாற்றிச் சொல்லி விட்டேன். நான் விட்டது ஆல் இலை. ஆம், நான் விட்டதை என் மனைவி, குழந்தைகளும் சாப்பிடக் கூடாது என்று சொன்னதோடு சகோதரர்களும், அவர்கள் மகன்களும் கூட சாப்பிடக்கூடாது என்று சொன்னது சரியா என்று தெரியவில்லை. மற்றபடி கீதா அக்கா சொல்லியிருப்பதைதான் அங்கும் சொன்னார்கள்.

      இன்னொருமுறை போனால் இன்னொரு (வேறு) மூன்று செட் விடவேண்டுமா அக்கா?

      நீக்கு
    8. ஆல் இலையைத் தான் பெரும்பாலும் விடச் சொல்கின்றனர். நம்ம ரங்க்ஸ் விட்டது எனக்கும், அவருக்கும் தானே தவிர்த்து அவரோட தம்பி குடும்பத்தையோ எங்க குழந்தைகளையோ சேராது. நிச்சயமாய்த் தெரியும். கர்நாடகாவில் கோவைக்காயை முக்கிய விசேஷங்களில் அதுவும் ஸ்ராத்தத்துக்குச் சமைப்பார்களாம். எங்களுக்குப் பண்ணி வைத்தது கன்னட சாஸ்திரிகள். அவர் கோவைக்காயை விடலாம், அதுவும் ஸ்ராத்தக்காய்தான் என்று சொல்லிவிட்டார். நம்மாளுக்குக் கோவைக்காயே பிடிக்காது! ஆகவே ஜாலியாக விட்டு விட்டார். மற்றபடி ஆல் இலையும், நாவல் பழமும்! நாவல் பழமும் சாஸ்திரிகளே சொன்னது தான்! நாங்க தேர்ந்தெடுக்கவில்லை. எங்களோடு வந்த எங்க மாமியார் தனியாய்த் தான் விடணும் என்றதால் அவங்க கொத்தவரைக்காய் மற்றும் கொய்யாப்பழம், கொய்யா இலை என்று விட்டார் என எண்ணுகிறேன். ஸ்ரீராம் விட்டதை அவரும் அவரோட பாஸும் மட்டும் சாப்பிடக் கூடாது. இலை, காய், பழங்களைக் கையால் தொடலாம். மற்றவர்க்குப் பரிமாறலாம். சமைக்கலாம், ஆனால் விட்டவர்கள் சாப்பிடக் கூடாது. பெரும்பாலான எங்க உறவினர்கள் , கொய்யா, மற்றும் ஆல் இலையை விட்டுவிட்டு வந்திருக்கின்றனர். இரண்டாம் முறைக்கு இது இல்லை!அதே போல் வேணி தானமும் இரண்டாம் முறை செல்பவர்கள் செய்ய வேண்டாம் என்கின்றனர்.

      நீக்கு
    9. ஸ்ரீராம் இரண்டாம் முறை பாஸோடு போனால் வேணி தானம் உண்டு. நாங்க போனால் எங்களுக்குக் கிடையாது!

      நீக்கு
    10. விளக்கத்துக்கு நன்றி கீதா அக்கா. நான் என் அண்ணன் மகனை எல்லாம் மிரட்டி வைத்திருக்கிறேன்! ஆனால் நான் சொன்னாலும் அவர்கள் நான் சொன்னவற்றை அவர்கள் சாப்பிடுவதில்லை என்பது வேறு விஷயம்!

      நீக்கு
    11. வேணி தானம் பற்றி நானே கேட்க வந்தேன். நீங்கள் சொல்லிவிட்டீர்கள். ஞா ஸ்ராத்தம் மனைவியுடன் செல்லும்போது முழுமையாக மறுபடி செய்யலாமா? அல்லது ஒருமுறை செய்தாயிற்று என்பதால் செய்யக்கூடாது என்று சொல்வார்களா? இதில் மாறுபட்ட கருத்துகள் இருக்குமா?

      நீக்கு
    12. அண்ணாவுக்கே நீங்க விட்ட காய், கனி, இலையை விடணும்னு அவசியம் இல்லை. நீங்க இரண்டு பேரும் சேர்ந்து போயிருந்தாலும் அவர் தனியாக, நீங்க தனியாகத் தான் விடணும். மனைவியுடன் நீங்க செய்ய/செய்யப்போகும் ஸ்ராத்தம் தான் முழுமையானது. திரும்பப் பண்ணலாம். என்ன என்ன பண்ணணும் என்பதை நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த புரோகிதர்கள் அங்கே சங்கரமடத்தில் இருப்பாங்க! அவங்க மூலம் தெரிஞ்சுக்குங்க! வடநாட்டுப் புரோகிதர்கள் வேண்டாம். இப்போ நாங்க போகிறதா இருந்த பிரயாணத்திலே எங்களுக்கு சங்கல்ப ஸ்நானத்திலிருந்து எல்லாம் உண்டுனு அட்டவணை போட்டுக் கொடுத்திருந்தார். வேணி தானம் 2 ஆவது முறை பண்ணலாம், பண்ணலைனாலும் தப்பில்லை என்றார். மற்றபடி படகில் போய்ப் பிண்டம் போடுவதிலிருந்து கயா ஸ்ராத்தம், விஷ்ணு பாதம், அக்ஷயவடம் பிண்டம் எல்லாமும் மறுபடி செய்யணும் என்று பட்டியல் போட்டுக் கொடுத்திருந்தார்.

      உங்க அண்ணா பிள்ளைக்கெல்லாம் இதெல்லாம் கடைப்பிடிக்கவேண்டாம். அவங்க இஷ்டத்துக்குச் சாப்பிட்டுக்கலாம். :)))) உங்க பிள்ளைகளுக்கும் கிடையாது. நீங்களும், உங்க மனைவியும் மட்டும் தான்!

      நீக்கு
    13. // நீங்க இரண்டு பேரும் சேர்ந்து போயிருந்தாலும் அவர் தனியாக, நீங்க தனியாகத் தான் விடணும்//அதாவது அண்ணாவும், நீங்களும் சேர்ந்து போயிருந்தாலும்!அவர் தனியாக, நீங்க தனியாக!

      நீக்கு
    14. சுரைக்காய் சாதரண நாட்களிலேயே சாப்பிடக் கூடாதா கீதாக்கா? ஏன்?

      எங்கள் வீட்டில் சுரைக்காய், பீர்க்கங்காய் எல்லாம் செய்வதுண்டே. அதுவும் கேன்சரால் பாதிக்கப்பட்டிருந்த என் நாத்தனாருக்கு டாக்டர் சுரைக்காய் சாப்பிடச் சொல்லியிருந்தாரே...

      கீதா

      நீக்கு
    15. பீர்க்கங்காய் இந்தப் பட்டியலில் வராது. பத்தியத்துக்குச் சமைப்பது உண்டே! சுரைக்காய் ஒரு ரிஷி சாபத்தினால் இப்படி ஆனார் எனவும் இன்னமும் சாபவிமோசனம் கிட்டவில்லை என்றும் சொல்லுவார்கள். அதிலும் நீளச் சுரைக்காயை விடக் குடுவை போலிருக்கும் சுரைக்காயை பிரமசாரிப் பையர் எனச் சொல்லுவார்கள். நறுக்கினால் சிவப்பாக ஜலம் வரும். அதனாலும் சாப்பிடக் கூடாது என்பார்கள். பீர்க்கங்காயில் இரண்டு விதம் இருக்கே. அதில் பீர்க்கங்காயைக் குடல் எடுத்து உடம்பு தேய்த்துக்கொள்ள வைத்துக் கொள்வார்கள். அதைச் சாப்பிட முடியாது/கூடாது.

      நீக்கு
    16. ஓ சுரைக்காய் குறித்த விஷயம் புதுசு கீதாக்கா.

      பீர்க்கங்காய் ஆமாம் இரு வகை அந்த நார் வகை டைஜஸ்ட் ஆவது சிரமம் என்பதால்...அதை அந்த வெளித்தோலை நன்றாக சீவி விட்டால் உள்ளே மெத்து மெத்தென்று இருக்குமே அதைப் பயன்படுத்துவதுண்டு..

      கீதா

      நீக்கு
    17. சுரைக்காய் விஷயம் எனக்கும் புதிது. எப்படியிருந்தாலும் நான் சாப்பிட்டதும் இல்லை. நன்றி கீதா அக்கா

      நீக்கு
    18. ஶ்ரீராம்... விடுவது பசங்களுக்கு குடும்பம் வரும்வரை அவங்களுக்கும் உண்டு என்றுதான் நான் நினைக்கறேன். எப்போ அவங்க தனியா சமைக்கறாங்களோ அப்போதான் அவங்க தனி.

      நீக்கு
    19. நெல்லைத் தமிழரே, பிள்ளைகள்/பெண்கள் கல்யாணம் ஆகாமல் பெற்றோருடன் இருந்தால் கூட அவங்களுக்குப் பெற்றோர் காசியில் விட்ட காய், கனி, இலைகளைச் சாப்பிடக் கூடாது என்று சட்டமெல்லாம்/அல்லது சாஸ்திரம் ஏதும் இல்லை. அவங்க பாட்டுக்குச் சாப்பிடலாம். பெற்றோர் சமைத்துக் கொடுக்கலாம். ப்ழங்களை வாங்கிக் கொடுக்கலாம். காசிக்குப் போய் வந்தவர்கள் மட்டுமே விலக்க வேண்டும். இது தான் பொதுவான நியதி!

      நீக்கு
  23. ராமராஜன் பிழைக்கத் தெரியாத அப்பாவிதான்.

    குடும்ப சூழலும், மனைவியும் ஒரு காரணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திரைத்துறையில் வெற்றிகரமான தம்பதிகளாக நீடித்திருப்பது சில ஜோடிகள்தான்.

      நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  24. //போனால் போகட்டும் விடு... அதுவும் நல்லதற்குதான்
    (யாருக்கு ?)
    ஏதோ கர்மவினை என்று பீதி ஊட்டினார்.

    ஹா.. ஹா.. ரசித்தேன் ஜி

    பதிலளிநீக்கு
  25. //..எனக்கு முன்னே நின்ற இரு இளைஞர்களும் கல்லூரி விடுமுறையில் வந்திருப்பவர்கள் போல இருந்தார்கள். இன்னொருவர் எதிரில் பள்ளி மாணவன் போல இருவர். //

    காசி பிராமணர்கள்! இடிக்கிறதே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஏகாந்தன் ஸார்.. அந்த முற்றம் சின்ன இடம். அதனால் கொஞ்சம் இடித்ததுதான்!.!!!!

      நீக்கு
    2. இம்மாதிரி நிகழ்வுகளில் கலந்துக்கவென்றே அங்கே எல்லாம் ஆண் குழந்தைகளுக்குப் பதினைந்து வயதுக்குள்ளாகத் திருமணம் செய்து வைத்துவிடுவார்கள். சின்னச் சின்னப் பையர்களை எல்லாம் பஞ்சகச்சத்தோடு பார்க்கலாம். முக்கியக் காரணம் திருமணம் ஆனால் தான் இதில் எல்லாம் சாப்பிடலாம். பிரமசாரி சாப்பிடக் கூடாது மஹாவிஷ்ணு இலை தவிர்த்து!

      நீக்கு
    3. அப்படியா? இதுவே பெரிய சம்பாத்தியமாக இருக்கும்போது படித்துதான் அவர்கள் என்ன செய்யப்போகிறார்கள்!

      நீக்கு
    4. அந்த முற்றம் சின்ன இடம். அதனால் கொஞ்சம் இடித்ததுதான்!.!!!!ஹா.ஹா.ஹா நல்ல நகைச்சுவைதான். அன்று சகோதரர் நெல்லை தமிழரின் நகைச்சுவையும் இதை மாதிரி ரசிக்கும்படி இருந்தது.

      நீக்கு
  26. ..உண்மையான கடவுளை அடைய
    மனிதனுக்கு அறிவில்லை //

    இருந்தது. எங்கேயோ தொலைத்துவிட்டான்..சரி விடுங்கள்!

    பதிலளிநீக்கு
  27. பலதடவை மோகனப்புன்னகை புரிந்துள்ளீர்கள்...!

    ராமராஜன் - ஒரு காலத்தில் (முக்கியமாக கிராமத்து) பெண்களின் எம்.ஜி.ஆர்... எட்டு வருடங்களுக்கு முன் நடந்த விபத்தும், அதற்கு முன் நடந்த வாழ்வில் நடந்த சின்ன பாப்பா விபத்தும், திரைப்பட வாழ்க்கையையே திருப்பி போட்டு விட்டது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் அதற்குப்பின் வேறு பாப்பாவைத் தேடவில்லை என்பதையும் சொல்ல வேண்டும்.

      பலதடவை மோகனப்புன்னகையா? எப்படி?!!

      நீக்கு
  28. கள்ளம் இல்லா பிள்ளை உள்ளம் நான் தந்தது...?
    காசும் பணமும் ஆசையும் இங்கே யார் தந்தது...?

    எல்லை இல்லா நீரும் நிலமும் நான் தந்தது...
    இன்பம் துன்பம் என்னும் எண்ணம் ஏன் வந்தது...?

    இறைவனுக்கே இது புரியவில்லை...
    மனிதரின் கொள்கை தெரிவதில்லை...

    ஒரு மனிதன் வாழ்வை இனிமை என்றான்...
    ஒரு மனிதன் அதுவே கொடுமை என்றான்...
    படைத்தவனோ உடனே சிரித்து விட்டான்...!

    --- கவிஞர் கண்ணதாசன்

    பதிலளிநீக்கு
  29. வணக்கம் சகோதரரே

    படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. கயா பற்றி நல்ல விரிவான தகவல்கள். எப்போதாவது அங்கெல்லாம் செல்லும் சந்தர்ப்பம் வந்தால் கூட காசிப் பயணம் குறித்த இந்த கட்டுரை கை கொடுக்கும். அட்சய வடம் படம் மிக நன்றாக உள்ளது.

    ஃபோன் தொலைந்து போய் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி. இயந்திர வாழ்க்கை வாழ்ந்தாலும், அது நன்றி மறவாத பிறவி என்பதை தங்களுக்காகவே அதே இடத்தில் இருந்து மெய்பித்து விட்டது.

    இம்மாதிரி புண்ணிய இடங்களிலும்,பணம் என்ற ஒன்று இல்லாமல் எதுவும் சாத்தியமாகாது போலும் என நீங்கள் குறிப்பிட்ட சில இடங்களில் நினைக்க வைத்தது. (ஆனால் தங்களுக்கு மோகனமாய் புன்னகை வந்த அதிசயசத்தை எண்ணி வியக்கிறேன்.பொதுவாக மனம் பக்குவமடையாமல் அவ்விதமான புன்னகையெல்லாம் வர வாய்ப்பேயில்லை. பக்குவமடைந்த மனதுக்கு வாழ்த்துக்கள். ஹா. ஹா. ஹா.)

    கவிதை, ராமராஜன் பற்றிய தகவல்கள் அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இயந்திரத்துக்கே நன்றி இருக்கிறதுஎன்று சொல்லி விட்டீர்கள் கமலா அக்கா. பழகிய என்னை விட்டுப் பிரிய அதற்கும் மனமில்லை போலும்! ஹா.. ஹா.. ஹா...

      காசி, கயா பிராமணர்கள் பணம் பணம் என்று அலைவார்கள் என்பது சீதையின் சாபமாம்! பணமில்லாமல் எங்குதான் வேலை நடக்கும்!

      நன்றி கமலா அக்கா.

      நீக்கு
  30. ஹூம்! இன்னும் இரண்டு நாட்களில் அதாவது சனிக்கிழமை அன்று காசிப் பயணத்துக்கான பயணச்சீட்டு வாங்கி எல்லா ஏற்பாடுகளும் பண்ணி வைத்திருந்தோம். சங்கரமடத்துக்குப் பணம் அனுப்ப வேண்டியது தான் பாக்கி! இந்த ஸ்பைஸ் ஜெட் காரங்க விமான நேரங்களைக் கன்னா&பின்னாவென மாற்றி அமைத்ததில் எங்களுக்கு அவங்க சொன்ன நேரத்தில் பயணிப்பதில் பல அசௌகரியங்கள். திரும்பி வரும் நாளைய பயணச்சீட்டையும் மற்றி விட்டார்கள். குறிப்பாய் ஆகஸ்ட் 3,4 மற்றும் ஆகஸ்ட்10 ஆகிய நாட்களின் பயணங்கள் தான் மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது, எங்கள் துரதிருஷ்டமே! நாங்க பயணத்தை ரத்து செய்துவிட்டோம். ஸ்பைஸ் ஜெட்டில் பிடித்தம் போக மிச்சம் வந்தது. இன்டிகோவில் இருந்து 400 ரூபாய் வந்தது! ஏனெனில் அவங்க ஒண்ணும் விமான நேரத்தை மாற்றவில்லை. ஸ்பைஸ் ஜெட்டில் வந்து திருச்சிக்கு இன்டிகோவைப் பிடிக்க இருந்தோம். இப்போ எல்லாம் குளறுபடி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரி

      தங்களது கருத்தில் விபரமறிந்தேன். இனி கூடிய விரைவில் தங்களது காசிப்பயணம் வெற்றிகரமாக சிறப்புடன் அமைந்து காசி விஸ்வநாதர், அன்னபூரணேஸ்வரி தரிசனங்கள் நல்லபடியாக கிடைக்க நானும் மனமாற அந்த இறைவனை வேண்டிக் கொள்கிறேன். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    2. .அடடே... கீதா அக்கா... அப்படியா? ஸ்பைஸ்ஜெட்டை நம்பவே முடியாதாமே... சீக்கிரமே பயணம் நடக்கப் பிரார்த்திக்கிறேன்.

      நீக்கு
    3. நாங்க 20 வருஷம் முன்னாடியே மாமியாரை அழைத்துக் கொண்டு போய்விட்டு வந்திருக்கோம் கமலா! அப்போ மாமனாருக்கு மட்டும் கயா ஸ்ராத்தம், காசியில் கர்மாக்கள் எல்லாம் செய்தோம். மாமியார் இப்போத் தான் 3 வருடங்கள் முன்னால் காலம் ஆனார். அவர் வருஷாப்தீகம் முடிந்ததும் குஜராத் அஹமதாபாத் அருகே உள்ள மாத்ருகயா சென்று பதினாறு பிண்டங்கள் வைத்து விட்டு வந்தோம். ஆனாலும் இங்கே குடும்ப புரோகிதர் கயா ஸ்ராத்தமும் செய்யலாம் என்றதால் போக ஏற்பாடு செய்தோம். நடக்கலை! எல்லாம் நன்மைக்கே!

      நீக்கு
    4. ஆமாம், ஸ்ரீராம், ஸ்பைஸ் ஜெட்டை நம்ப முடியாது தான். ஆனால் வாரணாசிக்கு நேரே சென்னையிலிருந்து செல்ல அவங்க தான் விமான சேவை செய்யறாங்க! இன்டிகோ போனால் நல்லா இருந்திருக்கும். நேரம் தவறாமை அவங்களிடம் உண்டு. ஏர் இந்தியாவா இருந்திருந்தால் கூடப் பரவாயில்லை. அவங்களும் இல்லை.

      நீக்கு
    5. ஸ்ரீராம், உங்க அண்ணா தனியாகத் தான் காசிக்குப் போய் எல்லாம் பண்ணணும். இன்னும் சொல்லப் போனால் வீட்டில் செய்யும் வருடாந்திர ஸ்ராத்தம் செய்யும்போது கூட அவருடைய முறைக்குத் தனியாக சாதம், பாயசம் செய்து அவற்றைத் தான் அவர் வைக்கும் பிண்டங்களுக்குப் பயன்படுத்தணும். நீங்க தனியா சாதம், பாயசம் வைச்சுக்கணும். இருவரும் சேர்ந்து ஸ்ராத்தம் செய்தாலும் அவரவர் குடும்பம் எனத் தனியாக வாழ்க்கை நடத்துவதால் இதான் சரியான முறை! ஆனால் எங்கே! எங்க வீட்டிலேயே எங்க மைத்துனர் அப்படிச் செய்வதில்லை. என் பிறந்த வீட்டிலும் தம்பி அப்படிச் செய்வதில்லை. அண்ணாவோடு செய்யும் ஸ்ராத்தம் என்பதால் ஒரே பிண்டம் தான்!

      நீக்கு
    6. //நாங்க 20 வருஷம் முன்னாடியே மாமியாரை அழைத்துக் கொண்டு போய்விட்டு வந்திருக்கோம்//

      நாங்கள் எல்லாம் காய், இலையைதான் விட்டு வந்தோம்!!! ஹிஹிஹி...

      நீக்கு
    7. //ஆனால் வாரணாசிக்கு நேரே சென்னையிலிருந்து செல்ல அவங்க தான் விமான சேவை செய்யறாங்க!//

      நாங்கள் அதில்தானே சென்னை திரும்பினோம்.

      நீக்கு
    8. //இன்னும் சொல்லப் போனால் வீட்டில் செய்யும் வருடாந்திர ஸ்ராத்தம் செய்யும்போது கூட அவருடைய முறைக்குத் தனியாக சாதம், பாயசம் செய்து அவற்றைத் தான் அவர் வைக்கும் பிண்டங்களுக்குப் பயன்படுத்தணும்.//

      ஆமாம்... சாஸ்திரம் என்று பார்த்தால் பெரும்பாலும் செய்ய முடிவதில்லை. நித்யகர்மா செய்யாமல் தர்ப்பணமோ, ஸ்ராத்தமோ செய்து பயனில்லை என்றும் சொல்கிறார்கள். நான் நித்யகர்மா செய்வதில்லை. கொஞ்சம் உறுத்தும்!

      நீக்கு
    9. \\//நாங்க 20 வருஷம் முன்னாடியே மாமியாரை அழைத்துக் கொண்டு போய்விட்டு வந்திருக்கோம்//

      நாங்கள் எல்லாம் காய், இலையைதான் விட்டு வந்தோம்!!! ஹிஹிஹி...\\ :)))))))))))))))))))))) நல்லா மாட்டி விட்டீங்க! சிரிப்புத் தாங்கலை! :)))))

      நீக்கு
    10. ஹா ஹா ஹா கீதாக்கா நானும் சிரித்துவிட்டேன் ஸ்ரீராமின் கருத்து பார்த்து!

      கீதா

      நீக்கு
    11. ஆஹா...ஒரு வரி..இரு பொருள் நகைக்க வைத்தது.

      நீக்கு
  31. பிரையாகை, காசி, கயா -- எல்லா பிரயாணங்களும் நல்லபடி முடிந்தன என்ற திருப்தியுடன் அடுத்த நிலைக்குக் கடந்து செல்லுங்கள்.
    பிரயாணங்கள் மட்டுமில்லை புகைப்பட வடிவிலும் எழுத்து வடிவிலும் எல்லாமே நன்றாக அமைந்து விட்டன.

    பதிலளிநீக்கு
  32. வறண்ட பல்குனி நதி//

    பாவம் இந்த நதி! அதான் சென்ற பதிவில் ஏன் வறண்டது என்பதற்கான கதை சொல்லியிருந்தீங்களே!

    எப்போதுமே தண்ணீர் இருக்காதோ அல்லது ஏதேனும் சீசனில் தண்ணீர் இருக்குமோ?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல்குனி நதியில் தண்ணீர் இருக்காது!

      நீக்கு
    2. யார் கண்டா? நான் போனபோது தண்ணீரில்லை!

      நீக்கு
    3. மழைக்காலங்களில் கொஞ்சம் போல் நீர் வரும் என்றாலும் தலையால் நின்றால் தலை முழுகாது! :)))) கணுக்கால் வரை வந்தால் பெரிசு!

      நீக்கு
  33. ஒரு மோகனப்புன்னகை புரிந்தேன்!//

    ஹா ஹா ஹா நல்ல காலம் எதிரில் இரு ஆண் இளைஞர்கள்!!!!!!!!!!!!!!!!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையில் மோகனப்புன்னகை என்று நான் சொல்ல வந்தது அவர் எதிர்பார்ப்புக்கு என்னிடம் எதுவும் கிடையாது என்று உணர்த்த!!!

      நீக்கு
  34. சுத்தம் செய்யும் அந்த வயதானவர் பாவம். அவருக்குக் கொடுக்கலாம்தான்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் மட்டும் அல்ல... வாங்கும் தகுதி படைத்தவர்கள் இன்னும் இருந்தார்கள்.

      நீக்கு
  35. ராமராஜன் பற்றிய டேட்டா அவரே ஒரு பேட்டியில் சொல்லியிருந்ததை நான் சமீபத்தில் ஏதோ ஒரு சென்னை பிரயாணத்தின் போது வாங்கிய ஆவி என்று நினைக்கிறேன்...அதில் வந்திருந்து வாசித்த நினைவு.

    சாட்சி விவரத்தைத் தவிர!

    கீதா

    பதிலளிநீக்கு
  36. மோகனப் புன்னகை//

    நல்லகாலம் மோகனப் புன்னகை ஊர்வலமே நு பாடாலை!!!

    இந்தப் பாட்டு எனக்கு அதிசமாக நினைவுக்கு வந்தது!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மோகனப்புன்னகை என்றே ஒரு சிவாஜி படம் கூட உண்டு கீதா... "கல்யாணமாம்.. கச்சேரியாம்.." என்று டி எம் எஸ் பாடலொன்று உண்டு அதில்!

      நீக்கு
  37. காசிக்கு சென்றால் நமக்கு பிடித்தமானவற்றை விட வேண்டும் என்பது நமக்கு வைராக்கியம் வர வேண்டும் என்பதற்காகத்தான். சாதாரணமாகவே எனக்கு எந்த விஷயத்திலும் அதீத பற்று இல்லை என்பதால் காசிக்கு போய்தான் வைராக்கியத்தை வரவழை கொள்ள வேண்டுமா? என்று தோன்றியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்குப் பற்று இருக்கு, இல்லை என்பது மற்ற லௌகீக விஷயங்களில் இருக்கலாம். ஆனால் சாப்பாட்டு விஷயத்திலும் கொஞ்சம் வைராக்கியம் வேண்டும் என்பதால் காசியில் நமக்குப் பிடித்தமான காய்களை, கனிகளை, இலைகளை விடச் சொல்கின்றனர். பெரும்பாலோர் பிடிக்காதவற்றையே விடுகின்றனர்.

      நீக்கு
    2. கோபம், காஃபி சாப்பிடுவதை விடுவது, பட்டுப் புடைவை கட்டுவதை விடுவது எனப் பலர் பல விஷயங்களையும் காசிக்குச் சென்று வந்து விட்டு விடுகிறார்கள். அதெல்லாம் அவரவர் தனிப்பட்ட விஷயம்! இது அனைவருக்கும் பொதுவான சாப்பாட்டு விஷயம்.

      நீக்கு
    3. இன்னும் சிலர் காசிக்குப் போய், கயாவுக்கும் போய் பிண்டம் வைச்சாச்சு என்பதால் இனிமேல் வருடாந்திர ஸ்ராத்தம் செய்ய வேண்டாம், விட்டு விடலாம் என்கின்றனர். அதுவும் தப்பு! அது பாட்டுக்கு அது, இது பாட்டுக்கு இது! இரண்டிற்கும் சம்பந்தம் இல்லை. நாங்க காசி, கயா தவிர பத்ரிநாத்தில் பிரம்மகபாலம், மானசரோவரில், குருக்ஷேத்திரத்தில் அதன் பின்னர் மாத்ரு கயாவில் மாமியாருக்கு மட்டும் எனப் பிண்டம் வைத்திருக்கோம். ஆனாலும் வருடாந்திர ஸ்ராத்தம் பண்ணிக்கொண்டு தான் இருக்கோம்.

      நீக்கு
    4. பிடிக்காத காய் கனிகளை விட்டாலும் ஏதோ அந்தப் பழக்கமாவது வருகிறதே... வேறு ஏதோ ஒரு பதில் யோசித்து வைத்தேன். மறந்து விட்டது!!!

      நீக்கு
  38. வருடாந்திர ஸ்ரார்த்தம் செய்வதை விடக்கூடாதுதான். இப்போது கயா ஸ்ரார்த்தம் செய்து விட்டு வந்து விட்டால் ஸ்ரார்த்தம் செய்ய வேண்டியதில்லை என்று தவறாக ஒரு கருத்து நிலவுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். கயா ஸ்ராத்தம்செய்தால் வருடாந்திர திதி கொடுக்க வேண்டாம் என்கிற எண்ணம் நிறைய பேருக்கு இருக்கும் போல. அங்கும் கேட்காமலேயே அது தவறு என்று விளக்கம் சொன்னார் பண்டிட். காஞ்சி ஸர்மா சாஸ்திரிகளும் இதுபற்றி சொல்லியிருக்கிறார்.

      நீக்கு
  39. //எப்போதுமே தண்ணீர் இருக்காதோ அல்லது ஏதேனும் சீசனில் தண்ணீர் இருக்குமோ? //

    இருக்கும். நவம்பர் 2013 வருடம் நான் சென்றிருந்த பொழுது கணுக்கால் அளவுக்கு மேலேயே தண்ணீர் இருந்தது. கொஞ்சம் நடந்து உள்ளே சென்றோம் என்றால் இன்னும் கொஞ்சம் கூட.
    எதிர்க் கரையில் ராமர், சீதை சம்பந்தப்பட்ட அந்தப் புராணக் கதையின் காட்சி ஓவிய விவரிப்பாய் ஒரு பிளக்ஸ் போர்டும் காணப்பட்டது.

    பதிலளிநீக்கு
  40. எல்லோரும் காசி,காயா கிளம்பிவிட்டார்கள்
    நாங்கள்தான் மிஸ்சிங்.

    படங்களில் கண்டுகொண்டோம்.

    பதிலளிநீக்கு
  41. 1991இல் காசி சென்றிருந்தோம். தகப்பனார் உயிரோடிருந்தால் கயா செல்லக்கூடாது என்று என் மாமனார் கூறியதால் நானும் மனைவியும் காசியிலேயே நின்றுவிட்டோம். அவர்கள் மட்டும் சென்று வந்தார்கள். அடைமழையில் கயா மாட்டிகொண்டதால் ஐந்து நாட்கள் ரயில் இல்லாமல் அவர்கள் அங்கேயே தவிக்க, தகவல் இல்லாமல் நாங்கள் காசியில் தவிக்க...ஒரே நன்மை, காசியில் தினம் மூன்று முறை முழுகி எழுந்தோம் என்பதுதான்! சங்கரமடம் - ஹனுமான் காட்- ஒன்றரையடி நீளமான் மெல்லிய வெள்ளரிக்காய் - அருகில் இருந்த யாரோ ஒரு மாமி வீட்டில் இருந்து சாப்பாடு -என்று ஆறு நாட்கள் கழிந்தன. அதன் பிறகு கயா போகவேண்டும் என்ற எண்ணமே எழவில்லை. \இராய செல்லப்பா நியூஜெர்சி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில முதல் அனுபவங்கள் மனதில் தங்கி விட்டால் அப்புறம் அதை மாற்ற முடியாது. நன்றி செல்லப்பா ஸார்.

      நீக்கு
  42. கயா பயணக் குறிப்புகளும் படங்களும் நன்று.

    கவிதை மிக அருமை. அடிக்கடி எழுதுங்கள்.

    ராமராஜனின் சத்தமில்லா சாதனைகளின் பட்டியல் நீளமாகவே உள்ளது. அவர் படங்களில் அவருக்காகவே அமைந்த பாடல்களின் வெற்றி எண்ணிக்கையும் அதிகமே.

    நல்ல தொகுப்பு.

    பதிலளிநீக்கு
  43. பயணக் குறிப்புகள் நன்று...

    ராமராஜன்... :)

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!