ஞாயிறு, 27 நவம்பர், 2022

நான் தரிசனம் செய்த கோவில்கள் :: காஞ்சி வைகுண்டப் பெருமாள் கோவில்:: நெல்லைத்தமிழன்

 

வைகுண்டப் பெருமாள் கோவில் (பரமேச்வர விண்ணகரம், காஞ்சி) – பகுதி 1

காஞ்சீபுரத்தைச் சுற்றி சுமார் 14 வைணவ திவ்யதேசங்கள் இருக்கின்றன.  ஒரு நாளிலேயே 13 கோவில்களைச் சேவித்துவிடலாம். அனேகமாக எல்லாக் கோவில்களும் மதியம் நடை அடைத்திருப்பார்கள்.  பலர், ஒரு நாள் யாத்திரை நடத்தி எல்லாக் கோவில்களுக்கும் அழைத்துச்சென்றுவிடுகின்றனர்.

திவ்யதேசக் கோவில்கள் மொத்தம் 106 இந்த நிலவுலகில் இருக்கின்றன. இவை எல்லாமே அகண்ட பாரதத்தில் இருந்தவை. அவற்றில் சில, அடர்த்தியாக ஒரு பகுதியிலேயே இருக்கின்றன. 5-6 நாட்கள் யாத்திரையில் சோழ நாட்டைச் சுற்றியுள்ள சுமார் 35 திவ்யதேசக் கோவில்களைச் சேவித்துவிடலாம். அதே சமயம் நேபாளத்தில் இருக்கும் முக்திநாத் கோவிலைச் சேவிக்க பொருட்செலவும், நேரமும் எடுக்கும்.

ஒவ்வொரு வைணவனும், முடிந்தவரை இந்த 106 வைணவக் கோவில்களையும் தரிசித்துவிட முயல்வான்.

ஒரு நாள் யாத்திரையில் 10-12 கோவில்களில் தரிசனம் செய்வது என்பது, கணக்குக்கு உதவுமே தவிர, மன நிறைவைத் தராது. ஒவ்வொரு திவ்யதேசத்திலும் (அதாவது கோவில் இருக்கும் ஊர்), மூன்று இரவுகளாவது தங்கினால்தான், அந்தக் கோவிலைச் சேவித்தாக அர்த்தம் என்றும் சிலர் சொல்கின்றனர்.  சில கோவில்களை பல நாட்கள் இருந்து தரிசனம் செய்தாலும், முழுவதும் சேவித்துவிட்ட திருப்தியைத் தராது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் அப்படிப்பட்ட கோவில். அதற்கு மாத்திரம், ஒரு வருட காலம் திருவரங்கத்தில் வீடு எடுத்துக்கொண்டு இருந்து சேவிக்கவேண்டும் என்று பெரியவர்கள் சொல்லுவார்கள். அங்கு தினம் தினம் திருவிழாக்கோலம்தான்.

காஞ்சீபுரம் பண்டைய இந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற நகரம். அப்போது சென்னை, சிறு துறைமுகம் இருந்த இடம்.  பூவில் ஜாதிமல்லி மிகவும் உயர்ந்தது, பெண்களில் ரம்பையின் அழகு உயர்ந்தது.  தெய்வங்களில் விஷ்ணு உயர்ந்த தெய்வம். நகரங்களில் காஞ்சீபுரம் உயர்ந்தது என்ற பொருள் பெரும், காளிதாசனால் இயற்றப்பட்ட பாடல் இந்த நகரத்தின் பெருமையைக் கூறும். மனிதனுக்கு முக்தி தரக்கூடிய ஏழு பெரும் நகரங்களில் முக்கியமானது கச்சி எனப்படும் காஞ்சீபுரம்.

இன்றைக்கு எடுத்துக்கொண்ட கோவில், காஞ்சீபுரத்தில் உள்ள ஸ்ரீவைகுண்ட நாதர் கோவில். இதன் முந்தைய பெயர், பரமேச்வர விண்ணகரம்.  பரமேச்வரன் என்ற இரண்டாம் நந்திவர்ம பல்லவனால் 6-7ம் நூற்றாண்டில் எழுப்பப்பட்ட கற்றளி வகையைச் சேர்ந்த கோவில் இது. (ராஜசிம்மன் காலத்துப் பாணி கோவில் என்று தொல்லியல்துறை குறிப்பிடுகிறது). மஹாவிஷ்ணுவின் இருந்த, கிடந்த, நின்ற திருக்கோலங்களைக் கொண்ட மும்மாடக் கோவில் இது.

பல்லவ சிற்பக் கலையின் அம்சங்களைக் கோயிலின் ஒவ்வொரு இடத்திலும் காணமுடியும். மூன்றடுக்குகள் கொண்ட கோயிலில், கீழடுக்கில் பெருமாள் வீற்றிருந்த கோலத்திலும், நடு அடுக்கில் அனந்த சயனராகவும் மேல் அடுக்கில் நின்ற கோலத்திலும் சேவை சாதிக்கிறார்.  கீழ் மற்றும் நடு அடுக்குகளில் உள்ள சிலைகள் கற்சிலையாகவும் மேலடுக்கு சுதைச் சிற்பமாகவும் காணப்படுகிறது.  கோவிலுக்கு ராஜகோபுரம் கிடையாது. ஐரம்மத தீர்த்தம் மற்ற எல்லாத் திருக்குளங்களைப் போலவும் வறண்டு காணப்பட்டது.

கோயிலின் உட்புறம் பல்லவ சிற்பக் கலைத்திறனைக் காணலாம். மூலவர், அவரைச் சுற்றியுள்ள பிராகாரம், தூண்கள், அதில் உள்ள சிற்பங்கள் எல்லாம் ஒரே பெரிய பாறையைக் குடைந்து உருவாக்கப்பட்டவை என்று அறியும்போது நமக்கு பிரமிப்பு ஏற்படுகிறது.

கருவறையில் மேற்கு நோக்கி வைகுண்டநாதப் பெருமாள் வீற்றிருக்கிறார்.  தாயார் வைகுந்தவல்லி.

ஆழ்வார்களில் திருமங்கையாழ்வார் இந்தக் கோவில் பெருமாளைத் தமிழ்ப்பாசுரங்களால் பாடியுள்ளார். ஒவ்வொரு பாசுரத்திலும்  பல்லவன் மல்லையர்கோன் பணிந்த”, “பரந்தவன் பல்லவர்கோன் பணிந்தஎன்று பல்லவ அரசனையும் முன்னிட்டுப் பாடியுள்ளதால் தல புராணத்தின் உண்மைத்தன்மை விளங்கும். அவர் காலத்தில் இத்தலம் பரமேச்வர விண்ணகரம் என்றே அழைக்கப்பட்டது.

இந்தக் கோவிலிலிருந்து மஹாபலிபுரத்துக்கு சுரங்கப் பாதை இருந்ததாகச் சொல்லுகிறார்கள்.  இந்தக் கோவிலுக்கும் கயிலாயநாதர் கோவிலுக்கும் இடையே சுரங்கப் பாதை இருந்ததாகவும், மூலவர் சந்நிதிக்கும் முன் மண்டபத்துக்கும் இடையேயும் ஒரு சுரங்கப் பாதை இருந்திருக்கிறதாம்

பல்லவர்கள் தொண்டை மண்டலத்தை கிபி 2ம் நூற்றாண்டிலிருந்து 8ம் நூற்றாண்டு இறுதிவரை ஆட்சி செய்தார்கள். அதன் பிறகு சோழர்கள் தலையெடுத்தனர்.

யாருப்பா இந்தப் பல்லவர்கள்?

வடபெண்ணையாற்றைத் தென் எல்லையாகவும் வடக்கே சோணையாற்றை வட எல்லையாகவும் கொண்டு ஆந்திரப் பிரதேசம் விரிவடைந்திருந்தாம். இதனை சாதவாஹனர்கள் (ஆந்திரர்கள்) ஆண்டுவந்தார்களாம். இதன் தெற்குப் பகுதியை மேற்பார்த்து வந்த தலைவர்கள் பல்லவர்கள். இவர்கள் தமிழர்கள் அல்லர். வடபெண்ணையாற்றிர்க்கு மேற்புறம் இருந்த சாதவாஹனர்களே ஆரியர்கள் எனப்பட்டனராம். இரண்டாம் நூற்றாண்டில், “ஆரியர்எனக்கருதப்பட்ட சாதவாஹனர்களுக்கும் தமிழ் அரசர்களுக்கும் நிறைய எல்லைப் போர்கள் நடந்தன.  அதனால்தான், பாண்டியன் நெடுஞ்செழியன், ‘ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன்என்று அழைக்கப்பட்டான். திருக்கோவிலூரை ஆண்ட மலயமான் என்ற அரசன் ஆரியரை வென்றான் என்று வருவதும், சோழர், ஆரியர்களை வென்றனர் என்று வருவதும், அந்தக் காரணத்தினால்தான்.  அதனால் பல்லவர்கள், சாதவாஹனர்கள் இராஜ்ஜியத்தில், கிருஷ்ணா நதிக்குத் தென்பகுதியில் இருந்து வடபெண்ணையாறு வரையுள்ள பகுதியை தலைவராக இருந்து ஆண்டார்கள் என்று கொள்ளலாம். சாதவாஹனர்கள் வலிமைகுன்ற ஆரம்பித்த நேரத்தில், தாம் தாம் ஆண்டுவந்த பகுதிகளுக்கு அந்த அந்தத் தலைவர்கள் அரசராகிவிட்டார்கள். தொண்டை மண்டலத்தை ஆண்டுவந்த சோழர்கள் வலிமை குன்றிய பொழுது பல்லவர்கள் மெதுமெதுவாகப் படையெடுத்து வென்று, சோழர்களின் தலைநகராக இருந்த காஞ்சியைத் தலைநகரமாகக் கொண்டு அங்கிருந்த பல்லவர்கள் என்ற பெயரில் ஆட்சி செய்ய ஆரம்பித்தனர்.

அவங்க மொழி எது?

இந்த வரலாறு எதுக்கு என்றால், ஏன் பல்லவர்கள் ஆட்சிக்காலத்தில் ப்ராக்ருத மொழி கல்வெட்டுகளில் வழங்கப்பட்டுவந்தது என்று விளக்குவதற்காக. பொதுவா புரிந்துகொள்ளவேண்டும் என்றால் மதுரை மற்றும் தெற்கில் தமிழ் கோலோச்சியது. வடபெண்ணை ஆற்றிலிருந்து தெற்கு நோக்கி ப்ராக்ருதம் கோலோச்சியது.  

சம்ஸ்க்ரிதம் பொது ஆண்டுக்கு 1500 வருடங்களுக்கு முன்பே இருந்த வளர்ந்த மொழி. அதற்கு இலக்கணங்கள் உண்டு. ஆனால் அந்த மொழியின் சிதைந்த கலோக்கியல் மற்றும் பிராந்திய மொழிகளின் திரிந்த வடிவம் ப்ராக்ருதம் என்று கொள்ளலாம். சமஸ்க்ருதத்தை இந்து மற்றும் புத்த சமய ஆன்மீக இலக்கியங்கள் எடுத்துக்கொண்டன. ப்ராக்ருத மொழி அரசர்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு உரிய மொழியாயிற்று. அதாவது ப்ராக்ருத மொழி, க்ஷத்திரியர்களின் மொழியாயிற்று. (வடபெண்ணையாற்றுக்கு வடபக்கம்).

கோவில் சம்பந்தமானவைகள் சமஸ்கிருத, பிறகு தமிழும் என்று இருந்திருக்கவேண்டும். ஆனால் கல்வெட்டுகள் ப்ராக்ருத எழுத்துக்கள், தமிழ் எழுத்துக்கள், ப்ராக்ருத/சமஸ்க்ருதம் சார்ந்தவைகளையும் எழுத க்ரந்த மொழி என்று வந்திருக்கவேண்டும்.  வடக்கே இருந்து வந்த அரசர்கள் வடமொழியை ஆதரித்தனர். அதனால்தான் கல்வெட்டில் ப்ராக்ருத, க்ரந்த, தமிழ் எழுத்துக்கள் கலந்துகட்டி இருக்கிறது. காலத்தைப் பொறுத்து, ஒரு மொழியின் சதவிகிதம் கல்வெட்டில் அதிகமாக இருக்கிறது. கொஞ்சம் கல்வெட்டுகளைப் படிக்க முயற்சித்ததால் இதனைப் புரிந்துகொண்டேன். புத்த சமயிகள் உபயோகித்த ப்ராக்ருதமும், சமஸ்க்ருத மொழியும் கலந்து சிதைந்து பாலிமொழியாகி, புத்தமதம் போன இடத்துக்கெல்லாம் போய், இன்னும் சிதைந்த மொழியாக அந்த அந்தப் பிரதேசங்களில் (இந்தோநேஷியா, தாய்லாந்து போன்று) இருக்கிறது.  (கல்வெட்டுக்கும் ஒரு பதிவு போட யோசிக்கிறேன். ஆனால் அது கொஞ்சம் கஷ்டமான வேலை)

புரியவேண்டும் என்பதற்காக ராஜராஜ சோழனின் மெய்கீர்த்திக் கல்வெட்டை (தஞ்சை பெருவுடையார் கோவிலில் இருக்கிறது) இங்கு போட்டுள்ளேன். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த தமிழ் கல்வெட்டு எப்படி இருக்கிறது என்று தெரிந்துகொள்வதற்காக. இதிலும் க்ரந்த மற்றும் ப்ராக்ருத மொழியின் கூறுகள் உண்டு. (என் மொழிபெயர்ப்பில் சிறிய தவறுகள் இருக்கலாம்)

பல்லவர்களுக்கு முன்பு பிராமி எழுத்தில் கல்வெட்டுகள் இருந்தன. பல்லவர் காலத்தில்தான் பல்லவ கிரந்தத்தில் கல்வெட்டுகள் ஆரம்பித்தன.  பிறகு தமிழும் இடம்பெற ஆரம்பித்தது.  சோழர் காலத்தில் தமிழ் கல்வெட்டுகள் வளர்ச்சி பெற்றன

அடுத்த வாரம் தொடருவோமா?

= = = = =

85 கருத்துகள்:

  1. பண்டைய வரலாறு ரசனைக்குரியது. இதனைக் கல்வெட்டுகள் மற்றும் பொதுவான தரவுகளின் மூலமே அறிந்துகொள்ள இயலும்.

    சமீபத்தில், 75-80 ஆண்டுகளுக்கு முன்பிருந்த காந்தி பற்றியே பல்வேறு மாறுபட்ட புத்தகங்கள், செய்திகள் இருக்கும்போது, ஆயிரம் இரண்டாயிரம் வருடச் சரித்திரத்தைத் தெளிவாக அறிய இயலாது. புலிகேசி, பல்லவர்களை தமிழகத்தில் ஒடுக்கியது அவனது கல்வெட்டுகளில் பாடல்களில் பெயர்களில் இருக்கும். அந்த வரலாறு பல்லவனின் கல்வெட்டுகளில் காண்பது கடினம். பல்லவர்களின் கல்வெட்டில் புலிகேசியை நிர்மூலமாக்கியது இருக்கும். இரண்டுமே உண்மை. மிகைப்படுத்துதல் சிறிதளவு இருக்கும்.

    இந்தப் பின்னணியில்தான் வரலாற்றை நாம் அணுக வேண்டும்.

    பதிலளிநீக்கு
  2. பதிவைப் படிக்கும்போதே அங்கு சென்றுவந்த நினைவுகளும், தொல்லியல்திறையின் ஆளுமையில் இருக்கும் கோயில்களின் நேர்த்தியும் (ஓரளவு... அந்தக் கோயில்கள் கமெர்ஷியலாக ஆவதில்லை) மனதில் எழுகிறது.

    நம் பாடல் பெற்ற பண்டைய கோவில்கள் அனைத்தையும் தொல்லியல் துறையே எடுத்துக்கொள்ளவேண்டும் என்ற ஆசை எழுகிறது (இந்த அரநிலையத் துறை என்று மாநில அரசின் கீழ் இருப்பதற்குப் பதிலாக)

    பதிலளிநீக்கு
  3. இந்த ஞாயிறு பதிவு சரித்திர பாடம் ஆகிவிட்டது. இதுவும் நல்லது தான். பல செய்திகள் புதியவை. குறிப்பாக மொழி பற்றிய செய்திகள். பதிவு அடுத்த வாரமும் தொடரும் என்பதால் மீதிக் கருத்துரையை அடுத்த வாரம் எழுதுகிறேன். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பின்னணி எழுதலைனா, கோவில் படங்கள், சிற்பங்களை மாத்திரம் புரிந்துகொள்வது, பாராட்டுவது குறைந்துவிடும் என்று எண்ணினேன்

      நீக்கு
  4. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..

    வாழிய நலம்..

    பதிலளிநீக்கு
  5. நல்ல தகவல்களுடன் சிறப்பான பதிவு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவை வாசித்த அனுபவமாய் இப்படி ஒற்றை வரியில் பின்னூட்டம் நியாயமாகாது. தம்பி துரை போன்றவர்கள் எழுத்தாளராய் அறியப்பட்டவர்கள். அதனால் அதற்கேற்றவாறு அவர்களிடம் நம் எதிர்பார்ப்பும் எகிறுகிறது.

      நீக்கு
    2. அண்ணா தங்களுக்குப் பதில் அளித்துள்ளேன்.. அதை ஒளித்துக் கொண்டது பிளாக்கர்..

      நீக்கு
    3. பிளாக்கர் ஸ்பாம் உள்ளே நுழைந்து ஒளிந்து கொண்டிருந்த கருத்துகளை காதைப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்து விட்டு விட்டேன்

      நீக்கு
  6. @ நெல்லை..

    //அப்போது சென்னை, சிறு துறைமுகம் இருந்த இடம். //

    திருமயிலையும் அல்லிக்கேணியும் கச்சி மூதூரும்
    நான்மாடக் கூடலும் தஞ்சை யாளி நகரும்
    பொலிந்திருந்த காலத்தில்

    சென்னெய் (சென்னை) என்ற பெயரில் மண் துகள் கூடக் கிடையாது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அல்லிக்கேணியில் மாடமாளிகைகள் இருந்ததாகப் ப்ரபந்தம் சொல்கிறது. மயிலை கிராமம்தான்.

      நீக்கு
  7. தமிழ்நாட்டின் தலை நகருக்குத் தமிழில் ஏன் பெயர் சூட்ட வில்லை?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சென்னப்ப நாயக்கன் ஆட்சி செய்த இடம் என்பதாலோ? சென்னகேசவப் பெருமாள் என்னும் பெயரில் பெருமாள் இருப்பதாலோ?

      நீக்கு
  8. - கடல் மீன்கள் காய்ந்து கிடந்த் இடம் தானே!..

    அவனும் இவனும் அடித்துக் கொண்டதன் பின்னால் உருவானதால் தான் இன்னும் அமைதியே இல்லை!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு தகவல் கேட்டேன் (ஆராய்ச்சி செய்தவரிடமிருந்து). சென்னையில் மீனவர் கிராமங்களில் வருடத்திற்கு ஒரு நாள் ஒரு படத்தை வைத்து விழாவும் (வீடுகளில்) ப்ரார்த்தனையும் நடத்துகிறார்கள். அந்தப் படம் இராமானுஜருடையது. ஆனால் அந்த மீனவர்கள் இப்போது கிறித்துவ மதத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லியிருக்கிறார்.

      நீக்கு
  9. மிகவும் சுவாரஸ்யமான பதிவு.  ரசித்துப் படித்தேன்.  நெல்லை..  கல்வெட்டு எழுத்துகளை புரிந்துகொள்ள பயின்றிருக்கிறீர்களா? பல்லவர், சாதவாகன வரலாறும் சுவாரஸ்யம்.  இந்த வரலாற்றை அத்திமலைத்தேவனில் இப்படிதான் படித்தேனா என்று யோசிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. More details, ok. ஆனால் ஒத்து வருகிறதா?

      நீக்கு
    2. அதில் ஆர்வம் வந்து கொஞ்சம் படித்தேன். இதில் பிரச்சனை என்னவென்றால், நூற்றாண்டுகளுக்கு ஒரு முறை எழுத்து மாறுபாடடைகிறது. அதுவும் தவிர பிறமொழிக் கலப்பும் வருகிறது. நாம் படித்ததிலிருந்து, கல்வெட்டைப் படிக்கும்போது அது தரும் இன்பம் அளவிடற்கரியது.

      நீக்கு
  10. பிராகிருத கல்வெட்டு இருந்த இடத்தைக் காட்டி இருக்கிறீர்கள்.  ஆனால் சிறிய படமாய்ப் போனதால் ஒன்றும் தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  11. இத்தனை ஆயிரம் வருடங்கள் தாண்டியும் வலுவுடன் நிற்கும் இந்தக் கோயில்கள் பிரமிப்பைத் தருபவை.  அதேநேரம் எனக்கொரு சந்தேகம் தோன்றும்.  அந்தக் காலத்திலும் கோவில் சுவர்கள் இப்படிதான் செங்கல் செங்கல்லாக பூசாமல் வைக்கப்பட்டிருந்திருக்குமா? எனில், ஏன்?  அங்கு சுண்ணம், வர்ணம் பூசியிருக்க மாட்டார்களா?  காலப்போக்கில் அவை உதிர்ந்து விட்டனவா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவாசிரியர் பதிலுக்காக காத்திருப்போம்.

      நீக்கு
    2. குடைவரைக் கோவில்கள் காலத்திற்குப் பிறகு, கற்றளிகள் உருவாக ஆரம்பித்தன. ஆனாலும் சிற்பங்களில் சுதைகள் நிறைய இருக்கின்றன. இவையெல்லாம் 7ம் நூற்றாண்டுகளைச் சேர்ந்ததுதான். சுண்ணம் இல்லை. கோவில்களில் வர்ணம் அடிப்பதில்லை (அந்தக் காலகட்டத்தில்). ஆனால், வர்ணம் உபயோகித்து சித்திரங்கள் வரையும் பழக்கம் இருந்தது. பலப் பல கோவில்களைல் அவை மிகவும் சிதைவுற்ற நிலைகளில் இருப்பதைக் கண்டிருக்கிறேன்.

      நீக்கு
  12. @ ஜீவி அண்ணா..

    எழுத்தாளராய் அறியப்பட்டிருந்தாலும் கண்ணில் பிரச்னை.. இரண்டு ஆண்டுகளாக கைத் தொலைபேசியில் தான் தட்டச்சு செய்கின்றேன்..

    சற்றே சிரமமாக இருக்கின்றது..

    பொறுத்துக் கொள்ளவும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவருக்கு விரல்களில் பிரச்சனை என்று நினைக்கிறேன். உங்கள் கண் பிரச்சனையும் அவருடைய விரல் பிரச்சனையும் விரைவில் சரியாகவேண்டும் என்று ப்ரார்த்திக்கிறேன்.

      நீக்கு
  13. வேறு விதமாகத் தான்
    கருத்துகளைச் சொல்லி இருக்கின்றேனே!..

    பதிலளிநீக்கு

  14. @ ஜீவி அண்ணா..

    எழுத்தாளராய் அறியப்பட்டிருந்தாலும் கண்ணில் பிரச்னை.. இரண்டு ஆண்டுகளாக கைத் தொலைபேசியில் தான் தட்டச்சு செய்கின்றேன்..

    சற்றே சிரமமாக இருக்கின்றது..

    பொறுத்துக் கொள்ளவும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கு கண்ணில் என்றால் எனக்கு கையில். நானும் கைத்தொலைபேசொயில் தான். அயல் நாடு. இருட்டி விட்டது.
      5 டிகிரி c குளிர். வயது மூப்பின் வாட்டல். இருந்தும் ஒரு ஆர்வத்தில் தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்.
      எதற்கு சொல்ல வந்தேன் என்றால் என்னால் செய்ய முடியாததை வேறு யாரேனும் செய்யக் கூடாதா என்ற ஆதங்கத்தில் தான்.

      நீக்கு
    2. ஜீவி சாரும் இலக்கியப் பதிவுகளைத் தொடரவேண்டும். அவரின் ஆர்வம் மற்றும் இலக்கியங்களில் knowledge மிகவும் அதிகம். அவருடைய இலக்கியப் பாடல்கள் கதையுடன் கூடியது, மிகச் சிறப்பான படைப்புகள்.

      நீக்கு
  15. இந்தக் கோயிலை வைகுண்ட பெருமாள் கோயில் என்றே நாங்கள் அழைப்பது வழக்கம். (வைகுண்ட நாதர் என்று கட்டுரையின் 5-வது பாராவில் இருப்பதைத் திருத்தி விடவும்.)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பரமேச்வர விண்ணகரம்.
      பெருமாள் பரமபதநாதன் என்றே ஆராதிக்கப்பட்டதாக அறிந்திருந்தேன். பரமேஸ்வர பல்லவனுக்குப் பெருமாளே 18 கலைகளையும் கற்பித்ததாகவும் ஐதிகம்.

      நீக்கு
    2. Geetha Sambasivam "நான் தரிசனம் செய்த கோவில்கள் :: காஞ்சி வைகுண்டப் பெருமாள் கோவில்:: நெல்லைத்தமிழன் ” என்ற உங்கள் இடுகையில் இவர் புதிய கருத்து தெரிவித்துள்ளார்:

      பரமேச்வர விண்ணகரம்.
      பெருமாள் பரமபதநாதன் என்றே ஆராதிக்கப்பட்டதாக அறிந்திருந்தேன். பரமேஸ்வர பல்லவனுக்குப் பெருமாளே 18 கலைகளையும் கற்பித்ததாகவும் ஐதிகம்.

      நீக்கு
    3. கீசா மேடம் சொன்ன கருத்தைப் படித்திருக்கிறேன். இருந்தாலும் அதனை நான் குறிப்பிடவில்லை. (நமக்கு வந்த எல்லாத் திறமைகளும் கடவுளால் நமக்குக் கொடுக்கப்பட்டவை என்று நாம் சொல்வதில்லையா?)

      நீக்கு
    4. பரமபத நாதர் என்பதைத்தான் வைகுண்ட நாதர் என்று சொல்கிறார்கள். பரமேச்வர விண்ணகரம், இலக்கியத்தில் வரும் பெயர். வைகுண்டப்பெருமாள் கோவில் சமீபத்தைய பெயர்

      நீக்கு
  16. அனைவருக்கும் காலை/மதியம்/மாலை வணக்கம். நல்வரவு. வாழ்த்துகள். பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  17. மின் தமிழ்க்குழுமத்தில் கல்வெட்டுப் படிக்கக்கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தனர். பின்னர் குழுமம் யார் கைகளுக்கோ போனதில் பழமையும் அவை சார்ந்த இலக்கியப் பாடங்களும் சுத்தமாய் நின்று விட்டது. இப்போது அங்கே தனித்தமிழும்/தமிழரும் கோலோச்சுகின்றனர். அது போகட்டும். கிரந்தக் கல்வெட்டுக்களை ஓரளவு சிரமப்பட்டுப் படிச்சுடுவேன். கும்பகோணம் மடத்துத் தெரு பகவத் விநாயகர் கோயில் கல்வெட்டுக்களையும் மற்றச் சில கோயில்களீலும் இப்படிப் படிச்சிருக்கேன். ஆனால் நெல்லை போலப் படமெல்லாம் எடுக்கலை. :( நம்ம முகத்துக்குத் தான் தனி ராசி உண்டே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆர்வம் கீசா மேடம். எனக்கு எதைப் பார்த்தாலும் சட் சட் எனப் படமெடுக்கும் இயல்பு. எந்த விசேஷத்துக்குச் சென்றாலும், அங்கு நான் என் அலைபேசியில் படமெடுத்துவிடுவேன். இன்றுகூட ப்ரபந்தம் சேவிக்கும் இடத்தில் படங்கள் எடுத்துவிட்டேன். பலர் அதனை அனுப்பச் சொல்லிச் சொல்லியிருக்கின்றனர்.

      நீக்கு
  18. ஆண்டுதோறும் வைகுண்ட தரிசன நாள் இந்தக் கோயிலின் முக்கியமான தரிசன நாள். குறிப்பாக பெரிய காஞ்சீபுரத்திலுள்ள மக்களுக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். இது ஸ்ரீவைகுண்டத்திலும் இன்னும் பரமபதநாதராக மூலவர் இருக்கும் கோவில்களிலும் விசேஷம்... ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பற்றிச் சொல்லவே வேண்டாம்.

      நீக்கு
    2. (வைகுண்ட ஏகாதசி திரு நாள்)

      நீக்கு
  19. அருமையான சுவாரசியமான சுவையான பதிவுக்கு நன்றி. பல்லவர்கள் பூர்விகம் பற்றியும் அவர்கள் வளர்ந்த கதை பற்றியும் நெல்லை எழுதி இருப்பதில் எனக்கு மாற்றுக்கருத்து உண்டென்றாலும் இதுவும் சுவையாக ஏற்கும்படியாகவே இருக்கிறது. பரமேச்வர விண்ணகரத்தைப் பார்க்கையில் எல்லாம் வியப்பில் ஆழ்த்தும். காஞ்சிபுரம் எத்தனை முறை போயிருப்பேனோ தெரியாது. ஒவ்வொரு முறையும் உலகளந்த பெருமாள் கோயிலும் இந்தக் கோயிலும் கைலாசநாதர் கோயிலும் பார்க்காமல் வந்தது இல்லை. ஊரகம், நீரகம், காரகம், கார்வானம் ஆகியவை வெவ்வேறு இடத்தில் இருந்ததாகவும்பிற்காலத்தில் ஒரே இடத்தில் அமைந்ததாகவும் சொல்லுகின்றனர். திருமங்கை ஆழ்வார் ஒரே பாசுரத்தில் அனைவரையும் சேர்த்து மங்களாசாசனம் செய்திருப்பதாகவும் சொல்லுகின்றனர். இந்தக் கோயிலில் மேலே எல்லாம் ஏறிப் பார்த்திருக்கோம். அப்போ உடல் நலம் இவ்வளவு மோசமில்லை. சென்னையில் இருந்தவரை வருஷத்தில் இரு முறையாவது காஞ்சிபுரம் போயிடுவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் போகாத கோவிலா கீசா மேடம். மாற்றுக் கருத்துகளைக் குறிப்பிட்டிருக்கலாம்.

      நீக்கு
  20. அந்தந்த திவ்ய தேசத்தில் குறைந்தது மூன்று நாளாவது தங்கி தரிசனம் செய்யலாம்தான்.  ஆனால் நாம் நினைத்துக் கொண்டிருக்கும் நம் பரபரப்பான வாழ்க்கை நம்மை அழைப்பது போலவே தோன்றும்.  எதையோ செய்யாமல் வீணே காலம் கழிப்பது போல தோன்றும்.  இதையெல்லாம் உணர்ந்துதான் அந்நாட்களில் கோவில்களை தரிசனம் செய்யயவும், பரம்பொருளை நாடி உணரவும் கூறாமல் சன்யாசம் கொண்டார்கள் போலும்!  முக்திநாத் போவதற்கு உடம்பில் வலுவேனும்.  ஆரோக்யம் வேண்டும்.  ஸ்ரீரங்கத்தில் ஒரு வருடமா...   சரிதான்.  கைலாஷ் செல்ல ஆசை எனக்கு..   அதுவும் நிறைவேறாது..  வயது இருக்கும்போதே, வலு இருக்கும்போதே இங்கெல்லாம் சென்று வந்துவிடவேண்டும்.  நாமென்னவோ வயதானால்தான் பக்தி என்றிருக்கிறோம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா ஸ்ரீராம், கயிலை யாத்திரைக்கும், முக்திநாத்துக்கும் நானே இந்த உடம்பையும் வியாதிகளையும் வைச்சுண்டு போயிட்டு வந்திருக்கேன். நீங்கள் இப்போவே திட்டமிட்டு ஒரு வருடத்திற்குள் போயிட்டு வாங்க. இப்போல்லாம் பயணம் எளிமையாகி விட்டது. கயிலை யாத்திரையின் பரிக்ரமா ஆரம்பமாகும் இடம் வரை இப்போது ஹெலிகாப்டர் செல்கிறது. நாங்கல்லாம் 25 நாட்கள் மொத்தப்பயணம் செய்தோம். இப்போது பத்து நாட்களிலே (அதைவிடவும் குறைவாகவும் இருக்கலாம்) போயிட்டு வந்துடலாம்.

      நீக்கு
    2. அவன் அழைக்க வேண்டும் போல கீதா அக்கா...!

      நீக்கு
    3. ஸ்ரீராம்... என் அனுபவத்தில் சொல்கிறேன். நாம் திட்டமிட்டு எந்தத் தலத்தையும் தரிசனம் செய்ய முடிவதில்லை. ஏதேனும் சிறப்பான தரிசனம் நமக்குக் கிடைத்தால், அது அவன் நினைத்துக் கொடுத்தது என்றுதான் நான் நம்புகிறேன்.

      எனக்கு சில மாதங்களுக்கு முன்பு, திருப்பதியில் இருந்த 5 நாட்களில், 8 முறை அவனை தரிசனம் செய்ய முடிந்தது. அந்த அனுபவம் வார்த்தைகளில் சொல்ல இயலாது. 3 நாட்கள் சிறப்புப் பிரசாதமும், மஹாத்வாரத்திலிருந்து நேரடியாக உள்ளே சென்று துவாரபாலகர்கள் வாயிலில் நின்று தரிசனம், ஜரிகண்டி பிஸினெஸே கிடையாது, கைகூப்பி அனுப்பி வைத்தார்கள். இந்த 8 தரிசனத்தில் ஒன்றுகூட காசு கொடுத்து டிக்கெட் வாங்கிய தரிசனம் இல்லை.

      இதுபோலவே மன்னார்குடி ராஜகோபாலஸ்வாமி கோயிலிலும் இன்னும் சில கோயில்களிலும். பத்ரி சென்றிருந்தபோது, பலர் 2000-4000லாம் கட்டி டிக்கெட் வாங்கி தரிசனம் பெற்றபோது எங்களுக்கு மூன்று முறை நிறைவான தரிசனம் கிடைத்தது.

      நீக்கு
  21. கட்டிடக்கலை திராவிடப் பாரம்பரியம் எனப் படிச்ச நினைவு. பின்னர் வரேன்

    பதிலளிநீக்கு
  22. நந்திவர்மன் என்ற பெயரில் 3 பல்லவ மன்னர்கள் ஆட்சி புரிந்திருக்கின்றனர். பரமேஸ்வரன் என்ற இரண்டாம் நந்திவர்மனால் இக்கோயில் கட்டப்பட்டதாக பதிவில் காணப்படுகிறது. இரண்டாம் நந்திவர்மனின் தந்தை பெயர் தான் பரமேஸ்வரன். அதனால் பரமேஸ்வர விண்ணகரம் என்று இந்தக் கோயில் அழைக்கப்படுவதற்கான காரணம் ஆய்வுக்குரியது.

    இந்த பரமேஸ்வரன் தந்தை தான் இராஜசிம்ஹன். காஞ்சி கைலாச நாதர் கோயிலைக் கட்டிய மன்னர். திரு நின்றவூர் பூசலார் பற்றியும் ம்ன்னன் கனவில் ஈஸ்வரன் தோன்றி அருள் பாலித்த கதையும் உங்களுக்குத் தெரியும்.

    வைணவர்கள் என்று தனித்துச் சொல்வதெல்லாம் ஒரு சாராரின் பிற்கால பிரிவுகளின் படிதான்.
    சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் மாற்றி மாற்றி கோயில்கள் எழுப்பி பண்டைய மன்னர்கள் மகிழ்ந்திருக்கின்றனர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ராஜசிம்மனை கோயில் பணியில் ஈடுபடகி சொல்கிறான் அவன் தந்தை பரமேஸ்வரவர்மன்.  ராஜசிம்மன் கோயில் பணிகளுடன் பொற்கலைகளிலும் சிறந்து விளங்குகிறான்.  அப்பாவைத் தோற்கடித்த ரணதீரன் புலிகேசியை தோற்கடிக்கிறான். உக்ரோதயத்தை மீட்கிறான். அதற்குமுன் அவனிடம் நட்பும் பாராட்டுகிறான்.  பின்னர் போர்.  இவன் தளபதிதான் பரஞ்சோதி என்று நினைவு.  வடநாட்டு மன்னன் கங்கவர்மன் மகள் நந்தினியை மணக்கிறான். ராஜதிலகம் - சாண்டில்யன் உபயம்.

      நீக்கு
    2. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் பரஞ்சோதி மஹேந்திர பல்லவன் அவன் மகன் மாமல்லன் ஆகியோரின் தளபதி. அதுக்கப்புறமாப் பல காலம் கழிச்சே ராஜசிம்ம பல்லவன். சிவகாமியின் சபதத்தை மறுபடி படிங்க.

      நீக்கு
    3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    4. ஸ்ரீராம்,
      இராஜ வம்சங்களில் அவர்களின் மூதாதையர் பெயர்களே பின்வரும் தலைமுறையினருக்கும் repeat ஆவதால் இந்த சின்ன குழப்பம்.

      நந்திவர்மன் (2) 731--796
      பரமேஸ்வர வர்மன் (2) 725 --731
      இராஜசிம்ஹன் -- (நரசிம்மவர்மன் (2)-- 690--725

      ஒரிஜனல் மஹேந்திர வர்மன், நரசிம்ம வர்மன் எல்லாம் இவர்களின் முற்பட்ட காலத்து மூதாதையர்.

      ஆக இப்பொழுது தெளிவாகலாம்.

      நீக்கு
    5. பரமேஸ்வர வர்மன் (2) ஆறு ஆண்டுகளே நாட்டை ஆண்டிருக்கிறான். அவன் காலத்தில் இந்த விண்ணகர கட்டுமான பணிகள் ஆரம்பித்து அவன் மகன் நந்திவர்மன் (2) காலத்தில் நிறைவு பெற்றிருக்கலாம். அல்லது நந்திவர்மனே தன் காலத்து எழுப்பிய இந்த விண்ணகரத்திற்கு தன் தந்தையின் நினைவாக பரமேஸ்வர விண்ணகரம் என்று பெயர் சூட்டியிருக்கலாம்.
      நந்திவர்மன் (2) நீண்டகாலம் ஆட்சி செய்திருக்கிறான்.

      நீக்கு
  23. கீழிருந்து மேல் மூன்றாவது படம் வெகுசிறப்பு.

    தாங்கள் தந்திருக்கும் தகவல்கள் சிறப்பாக இருக்கிறது தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கில்லர்ஜி. நீங்கள் கல்வெட்டு அதற்கான மொழிபெயர்ப்பைச் சொல்லுகிறீர்கள் என்று நினைக்கிறேன்.

      நீக்கு
  24. நெல்ல சுவாரசியமான பதிவு. ரசித்து வாசித்தேன். ஆனால் மீண்டும் வாசித்தால்தான் இன்னும் மனதில் ஏறும்.

    பல்லவர் பற்றிய தகவல்கள், மொழி பத்தினது எல்லாமே ரசித்து வாசித்தேன். நானும் கல்வெட்டு எழுத்துகளை வாசிக்கக் கற்றுக் கொள்ள ஆரம்பித்து அப்படியே போய்விட்டது. நான் இணையத்தில்தான் ஆரம்பித்தேன்...நேரடியாக அதை அறிந்த வல்லுநரிடம் இருந்து இல்லை.

    ஆனால் நரசிம்மாவின் அத்திமலைதேவனில் கொஞ்சம் வித்தியாசமாக இன்னும் விரிவாக வாசித்த நினைவு. மீண்டும் அதை வாசிக்க வேண்டும். அப்போதுதான் இன்னும் மண்டையில் ஏறும் ஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் ஒரு குழுவில், பழைய கல்வெட்டு எழுத்துக்களை வாசிக்கக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். அப்புறம் பாதியில் நிறுத்திவிட்டேன்.

      நீக்கு
  25. @ ஜீவி அண்ணா

    // உங்களுக்கு கண்ணில் என்றால் எனக்கு கையில். நானும்..//

    தங்கள் அன்பிற்கு நன்றி.. உடல் நலனைக் கவனித்துக் கொள்ளுங்கள்..

    இறைவன் துணை..

    பதிலளிநீக்கு
  26. கல்வெட்டுப் படங்கள் இன்னும் பெரிசா கொடுத்திருக்கலாமோ, நெல்லை? புரியலை...

    கல்வெட்டுகளில் சில வார்த்தைகளோடு குறியீடுகளும் இருக்கும்.,

    இப்படியான பழைய கோயில்களை ரசித்துப் பார்ப்பேன். கூட்டமும் இருக்காது. ஆனால் தனியாகச் செல்லும் வாய்ப்பு கிடைத்ததில்லை. கிடைப்பதில்லை. அப்படிக் கிடைத்தால்தான் நம் ஆர்வத்திற்கு ஏற்ப ரசித்துப் பார்த்துத் தெரிந்து கொள்ள முடியும்.

    ஆமா தொல்லியல் துறையின் கீழ் இருப்பவை நன்றாக இருக்கின்றன தேவஸ்தானம் கீழ் வருபவை பெரும்பாலும் வியாபாரம்தான்.

    நெல்லை, நான் கோயில்களைப் பார்க்க விரும்புவது என்பதே கோபுரம் சிற்பங்கள், கட்டுமானம் இவற்றை எல்லாம் ரசித்துப் பார்க்கப் பிடிக்கும் என்பதால்தான்...அதுவும் பழம் பெரும் கோயில்கள்....ஆனால் ஆன்மீகம் பக்தி என்பது ரொம்ப ரொம்ப சொற்பம் எனக்கு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தஞ்சையில், நான் கல்வெட்டுகளைப் பார்த்துக்கொண்டிருந்தபோது அங்கு வந்திருந்த பள்ளி/கல்லூரிப் பெண்களிடம் இதுதான் ராஜராஜ சோழன் நுழைந்த வாயில், இதோ இந்தக் கல்வெட்டில் அவன் பெயர் இருக்கிறது என்றெல்லாம் காண்பித்தேன். என் மனைவி, அவங்களோ சும்மா ஜாலியா வந்திருக்காங்க. அவங்களுக்கு சரித்திரம் தெரியுமோ என்னவோ என்றாள். எதிலும் ஆர்வம் இருந்தால்தான் மேலும் மேலும் நாம் கற்றுக்கொள்ள முடியும்

      நீக்கு
    2. //ஆன்மீகம் பக்தி என்பது ரொம்ப ரொம்ப சொற்பம் எனக்கு.// ஹாஹா. புதன் கேள்வியாக, ஆன்மீகம் பக்தி என்றால் என்ன என்று கௌதமன் சாரைக் கேட்டுவிட வேண்டியதுதான்.

      நீக்கு
    3. புதன் கிழமைக்கேள்விகளில் நான் ஏற்கெனவே இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கேனே!

      நீக்கு
  27. படங்கள் எல்லாமே சூப்பர். கடைசிப்படங்கள் சிற்பங்கள் அழகு.

    நாங்கள் சென்றது 25 வருடங்களுக்கு முன். அப்போது பார்த்தத்ற்கும் இப்போதைய படங்களுக்கும் நிறைய வித்தியாசம்...அப்போது பூங்கா எதுவும் இருந்ததாக நினைவில்லை. Vague memories.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாம் தொல்லியல் துறையின் கைங்கர்யம். பார்வையாளர்களின் கைங்கர்யம், அதில் தண்ணீர் பாட்டில்கள், சிப்ஸ் பாக்கெட் என்று குப்பைகளை, எவனோ சுத்தம் பண்ணிக்கொள்ளட்டும் என்று நினைத்து எறிவது.

      நீக்கு
  28. வைகுண்டப் பெருமாள் கோவில் (பரமேச்வர விண்ணகரம், காஞ்சி) படங்கள் எல்லாம் அருமை.
    விவரங்களை நன்றாக தொகுத்து கொடுத்து உள்ளீர்கள் நன்றி.
    பல வருடங்களுக்கு முன் பார்த்தது மூன்று தினம் அந்த ஊரில் தங்கி தரிசனம் செய்தோம். நீங்கள் சொல்வது போல நின்று நிதானமாக ஒவ்வொரு கோவிலையும் தரிசனம் செய்ய வேண்டும். மூன்று நாள் எல்லாம் பத்தாதுதான்.

    கோயில் படங்களை பார்த்து நினைவுக்கு கொண்டு வர முயன்று கொண்டு இருக்கிறேன். என் பேத்தியும், பேரனும் உடன் வந்தார்கள். அவர்கள் சொன்னது நினைவை விட்டு அகலாது. தாத்தா கோவில் கோவிலாக கூட்டி போகிறார்கள், ஒரு டையிரியை பார்க்கிறார்கள் அப்புறம் இந்த கோவில்தான் என்று சொல்கிறார்கள். தாத்தா அடுத்து என்ன கோயில்? டையிரியை பாருங்க என்று கேட்டு சிரிப்பார்கள்.

    கோயிலை பற்றிய குறிப்பு , போகும் வழி, மற்றும் தூரம் தங்குமிடமெல்லாம் எழுதி கொண்டு போவார்கள். அந்த கோயிலுக்கு உள்ள பிரபந்த பாடல்களையும் பாடி வணங்க சொல்வார்கள்.

    //கல்வெட்டுகளைப் படிக்க முயற்சித்ததால் இதனைப் புரிந்துகொண்டேன். //
    கல்வெட்டு படிப்பு ஆர்வம் நல்லது.

    கல்வெட்டு பகிர்வும், முயற்சி செய்த பகிர்வும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //தாத்தா அடுத்தது என்ன கோயில்?// - ஹா ஹா ஹா. அவர்களுக்கு அந்தத் தலங்களில் கால் பதிப்பதன் சிறப்பு அப்போது தெரிந்திருக்காது. எந்தக் கோவிலையும் எத்தனை முறை தரிசனம் செய்தாலும் அலுக்காது. எத்தனையோ தடவை சென்றாலும் அவன் ஒரு தடவையாவது நம்மைக் கவனித்துவிட மாட்டானா என்று தோன்றும்.

      நன்றி கோமதி அரசு மேடம். நீங்கள் எழுதியுள்ளது, நானும் அரசு சாருடன் கூட வந்த உணர்வைத் தருகிறது

      நீக்கு
  29. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே

    இன்றைய சரித்திர பதிவு நன்றாக உள்ளது. படங்களும் சூப்பராக இருக்கிறது.

    /ஒரு நாள் யாத்திரையில் 10-12 கோவில்களில் தரிசனம் செய்வது என்பது, கணக்குக்கு உதவுமே தவிர, மன நிறைவைத் தராது. /

    உண்மை.. நாங்கள் இதுவரை யாத்திரை என்று எங்கும் சென்றதில்லை. எங்கு சென்ற லும் இருநாட்கள் என்று ரூம் எடுத்து தங்கினால் கூட முழுமையாக தரிசிக்க இயலவில்லையே என்ற எண்ணந்தான் கடைசியில் மிஞ்சும். இப்போது திருச்சியில் தங்கும் போது ஸ்ரீரங்கம் கூட இரு முறை சென்று வந்தோம். ஆனாலும் நிறைய சன்னிதிகளை மிஸ் செய்து விட்டோம் என்றுதான் வீட்டுக்கு வந்ததும் தெரிந்தது.

    தங்கள் பதிவை குறிப்பாக பல்லவர்கள் சரித்திரத்தைப் பற்றி படிக்கும் போது பழைய காலத்தில் பள்ளியில் படித்தது நினைவுக்கு வந்தன. எத்தனையோ சரித்திரத்தைப்பற்றி எவ்வளவோ எழுத்தாளர்கள் எழுதி இருப்பினும் அதையும் படிக்க நேரமும், சூழ்நிலையும் கை கூடி வர வேண்டுமே...! சாண்டில்யனின் ராஜ திலகம், யவனராணி முதலியவை திருமண காலத்திற்கு முன் சுதந்திரமாக எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் எடுத்துக் கொண்டு படித்துள்ளேன். இப்போது சுத்தமாக மறந்து விட்டது. மீண்டும் அவைகளை படிக்க நேர்ந்தால் நினைவுக்கு வரும். நான் சென்ற முறை சொன்ன மாதிரி குடும்பம், கடமை என்ற சங்கிலிகள் இன்னமும் பிணைத்து வைத்து என்னை சிறையில்தான் வைத்துள்ளன.

    தங்களின் பதிவு சுவாரஸ்யமாக உள்ளது. நன்றாக, விளக்கமாக, தெளிவாக எழுதி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள். அடுத்தப் பதிவையம் ஆவலுடன் தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கமலா ஹரிஹரன் மேடம். போரடித்துவிடுமோ என்றும் எழுதும்போது தோன்றியது.

      கால்கட்டு என்று சும்மாவா சொன்னார்கள். அது அவிழ்க்க முடியாத தளைதான். அதிலும் நேரம் கிடைக்கும்போது பிய்த்துக்கொண்டு நம் ஆன்மீக முன்னேற்றத்துக்கு வழி தேடிக்கொள்ளவேண்டியதுதான், சொந்த ரசனைக்கும் நேரம் ஒதுக்கிக்கொள்ள வேண்டியதுதான்.

      ஸ்ரீரங்கத்தில், ஒரு வருடம் முழுதும் இருந்து கோயிலுக்குச் சென்றுகொண்டே இருந்தால்தான் ஓரளவாவது எல்லாச் சன்னிதிகளையும் நாம் திருப்தி அடையும் வரை சேவிக்க முடியும்.

      நீக்கு
    2. வணக்கம் சகோதரரே

      தாங்கள் கூறுவது அத்தனையும் உண்மை. இதுவரை யாத்திரைகள் என்று எதிலும் கலந்து செல்லா விட்டாலும், சமயம் கிடைக்கும் போது, சில நாட்கள் ஒதுக்கி கோவில்களுக்குச் செல்வோம். அப்படிச் செல்லும் வாய்ப்பை இறைவனே ஏற்படுத்தி தருவான். சமீபத்தில், இறைவன் ஏற்படுத்தி தந்ததுதான் திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலும், தஞ்சை பெருவுடையார் கோவிலும்.. நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. அட...நீங்க சமீபத்துல ஸ்ரீரங்கம் கோயிலும் பெருவுடையார் கோயிலும் சென்றிருந்தீர்களா?

      நீக்கு
  30. இன்றைக்கு நான் ப்ரபந்தம் சேவிப்பதற்காகச் சென்றிருந்தேன். இப்போதுதான் வந்து சேர்ந்தேன். அதனால் அனைத்துப் பின்னூட்டங்களுக்கும் சிறிது தாமதமாகப் பதில் தருகிறேன். மன்னிக்கவும்

    பதிலளிநீக்கு
  31. ஆன்மீக, சரித்திர விபரங்கள், சுவாரஸ்யங்கள் நிறைந்த கட்டுரை. தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஏகாந்தன் சார். உங்களை அபூர்வமாக இங்குப் பார்க்கிறேன்

      நீக்கு
  32. பல தகவல்களுடன் நல்லதோர் கட்டுரை படித்தோம் நன்றி.

    பதிலளிநீக்கு
  33. அட எத்தனை அருமையான கருத்துக்கள் நிறைந்த பதிவுகளும் , கருத்துக்களும் ,,,, அனைத்தும் மிக சிறப்பு ...


    ஸ்ரீரெங்கத்தில் ஒரு வருடம் தங்கி அனைத்தையும் சேவிக்க வேண்டும் என்பது பலரின் அவா ...எனது சின்ன பாட்டி ஒருவர் அப்படி ஒரு வருடம் அங்கு தங்கி சேவித்தார் .....இத்தனைக்கும் அவர்கள் வசித்தது உறையூரில்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!