சனி, 17 டிசம்பர், 2022

கூட்டு பொரியல்காரம்மா மற்றும் நான் படிச்ச கதை  (JKC)

 




========================================================================================================================




==================================================================================================

 

 

நான் படிச்ச கதை (JK )

ஒரு சிறு இசை

கதையாசிரியர்: வண்ணதாசன்

சுட்டி.

ஒரு சிறு இசை

முன்னுரை.

பால்ய விவாகங்கள் சாதாரணமாக இருந்த காலம். அதே போன்று பால்ய விதவைகளும். விதவை மறுமணம் என்று ஒன்று நினைத்துக்கூட பார்க்க முடியாது. அப்படிப்பட்ட ஒரு விதவைப் பாட்டியின் கதை தான்ஒரு சிறு இசை”.

பாட்டிக்குப்  பிள்ளைகள் இல்லை. கூடப் பிறந்தவர்களும் இல்லை. கணவன் வீட்டாரும் கவனிக்க மாட்டார்கள். இப்படிப்பட்ட கஷ்டங்களுக்கு நடுவே உறவினர்கள் என்று சொல்லக்கூடியவர்களின்  வீடுகளுக்குப் போய் சம்பளம் இல்லா வேலைக்காரியாய் உழைத்து, கொடுத்ததை உண்டு, குழந்தைகளை பார்த்துக்கொண்டு ஆயாவாக காலத்தை ஓட்டும் மூக்கம்மா ஆச்சியும் ஒருத்தி.

அம்பையின்காட்டில் ஒரு மான்”  கதையில் வரும் தங்கம் அத்தையும், மூக்கம்மா ஆச்சியும் ஒன்று போல எனக் கூறலாம். குழந்தைகள் இல்லாவிடினும், குழந்தைக் கதைகள் சொல்வதில் இருவரும் சிறந்தவர்கள். 

கதையின் துவக்கத்திலேயே கதையின் முடிவைச் சொல்லி ஆர்வத்தைத் தூண்டுவது ஒரு உத்தி. சுஜாதா இந்த உத்தியைப் பல கதைகளில் கையாண்டிருப்பார். இந்த உத்தியில் எழுதப்பட்ட  . மாதவனின்பாச்சிகதையைப் பார்த்தோம். அதே போன்று இக்கதையும் மூக்கம்மா ஆச்சி செத்துப் போய்விட்டாள் என்று தொடங்குகிறது. இப்படித் தொடங்கும் கதை ஆச்சியின் குணம், போக்கு முதலியவற்றை வர்ணித்து, ஆச்சியின் வாழ்க்கை, செய்யும் வேலைகள், சென்ற இடத்தில குழந்தைகளின் மேல் காட்டும் அன்பு, அக்கறை, சொல்லும் கதைகள்   இவை யாவற்றையும் விளக்கி, கடைசியில் ஆச்சி இறந்த பின் அவள் பாதுகாத்த அவளது பொக்கிஷங்களை ஆராய்வதில் முடிகிறது.

ஒருசிறு இசைகதைக்குள் கவிதையாக கதையில் இழைந்தோடுகிறது. ஆச்சியின் பொக்கிஷங்களில் ஒன்றாக யாரும் அறிந்திருக்க  இயலாத ஒரு முக்கிய பொக்கிஷம் இருக்கிறது. அதைப் பின்னுரையில் விளக்குகிறேன்.

பதிவின் நீளம் கருதி முழுக் கதையும் தரப்படவில்லை சுட்டிகள் கொடுத்திருக்கிறேன். கதையின் போக்கை சிறிது மாற்றி அமைத்திருக்கிறேன். முக்கியக் கதைப்பகுதிகள் ஆசிரியரின்  வார்த்தைகளிலேயே தரப்பட்டுள்ளன. 


ஒரு சிறு இசை

கதையாசிரியர்: வண்ணதாசன்

 

மூக்கம்மா ஆச்சியும் எங்கள் அம்மாவுடைய அம்மாவும் சகோதரிகள். கூடப் பிறந்தவர்கள் அல்ல. பெரியப்பா சித்தப்பா மக்கள். ஒன்றுவிட்ட அக்காவும் தங்கையும். மூக்கம்மா ஆச்சிதான் மூப்பு. எங்கள் அம்மாத் தாத்தா அவளுக்கு அத்தான் முறை. எங்கள் தாத்தாவை நாங்கள் பார்த்ததில்லை. ‘அவ்வோ லேசுப்பட்ட ஆம்பிளை இல்லைஎன்று ஆரம்பித்து ஒரு கதை சொல்வாளாம். கோமு அக்கா சொல்லி ருக்கிறாள். அந்தக் கதை இப்படிப் போகும்.

தாத்தா மாஞ்சோலை எஸ்டேட்டில் வேலை பார்த்தார். ஆள் மீசையும் குடுமியுமாக அப்படி இருப்பார். துரை வீட்டு வெள்ளைக்காரிச்சி தாத்தாவைக் குதிரை மேல் தூக்கி வைத்துக்கொண்டு போய் விட்டாள். இரண்டு மூன்று நாட்களாகக் காணோம் காணோம் என்று தேடியிருக்கிறார்கள். மூன்றாம் நாள் ராத்திரி நடு ஜாமத்திற்கு மேல் பூப் போல அதே குதிரையில் கொண்டுவந்து வீட்டு முன்னால் இறக்கி விட்டுவிட்டுப் போய்விட்டாள்.

 ஆச்சியின் கல்யாணம் பற்றி அம்மா சொல்லும் போது வருத்தமாக இருக்கும். மூக்கம்மா ஆச்சி அடிக்கடி அவள் கிராமத்தில் இருந்து எங்கள் வீட்டுக்கு வருவாள். பத்து நாள் பதினைந்து நாட்கள் என்று இருப்பாள். கணக்கு எல்லாம் கிடையாது. போய்விடுவாள் இல்லையா? அப்படி ஆச்சி வந்துவிட்டுப் போன ஒரு மத்தியான நேரத்தில் புறவாசல் நடைப்பக்கம் அம்மாவுக்குத் தலை சிக்கல் எடுத்துக்கொண்டே எங்கள் அம்மாச்சி சொல்வாளாம், ‘பாவிக்கு பதினாறு வயசு கூட முடியலை. ரதி மாதிரி இருப்பா. என்ன அவசரம் கொள்ளை போகுதுண்ணு கட்டிக் கொடுத்தாங்களோ? இந்த பவுர்ணமிக்கு நேர் அடுத்த பவுர்ணமி புண்ணியவான் போய்ச் சேர்ந்துட்டான். பாம்பு கொத்திட்டுதுண்ணு சொன்னாங்க. மோகினி அடிச்சுட்டுதுண்ணாங்க. ஆத்தில முங்கிட்டான்னாங்க. தாழம் புதருக்குப் பக்கத்தில் கிடந்து தூக்கிக்கிட்டுவந்து போட்டாங்களாம்.

மூக்கம்மா ஆச்சி எங்களுடைய அம்மாத் தாத்தாவைப் பற்றி அக்காவுடன் பேசிக் கொண்டு இருப்பதை ஒருநாள் கேட்கமுடிந்தது. மூக்கம்மா ஆச்சி தாத்தா போடுகிற ஒரு சந்தனக் கலர் சட்டையப் பற்றிச் சொல்லிக் கொண்டு இருந்தாள். அந்தக் காலத்தில் மேல் துண்டு போடுகிறதே அபூர்வம். உங்க தாத்தா துரை கிட்டே வேலை பார்த்ததாலே வட்டக் கழுத்து சட்டை போடுவா. அதிலேயும் சந்தனக் கலர் சட்டைதான் ஜாஸ்தி இருக்கும். மூணு பித்தான். மூணும் தங்கம். சிவப்பு உல்லன் நூலில் சரடு மாதிரி மூணையும் கொருத்து இருக்கும். ஆளு வீமன் மாதிரித்தான் இருப்பா. எனக்கு மூடி முழிக்கிறதுக்குள்ளே பொசுக் குண்ணு இவ்வளவும் (ஆச்சியின் புருஷன் இறப்பு) ஆகிவிட்டது தெரியும். தனியாவே இவ (மூக்கம்மா ஆச்சி) இருப்பது தெரியும். ஆனா ஏறிட்டுக் கூடப் பார்க்க மாட்டா.

மூக்கம்மா ஆச்சி எங்கள் வீட்டுக்கு வந்தால் சும்மாவே இருக்க மாட்டாள். சாப்பிடுகிற சாப்பாட்டுக்கு எதையாவது தராசின் எதிர்த் தட்டில் வைத்துவிட வேண்டும் என்று நினைப்பாள் போல. இப்படி ஏதாவது செய்துகொண்டே இருப்பாள். சாதாரண வேலையாக இராது அது. கனத்த வேலையாக இருக்கும். எத்தனை கோட்டை நெல்லையும் ஒரு ஆளாக வெந்து தட்டுவாள். பத்து பக்கா பச்சரிசி மாவை ஒத்தையில் இடிப்பாள். ஊரில் இருந்து அவள் கொண்டுவந்த காணத்தை மண் சட்டியில் வறுத்துத் தட்டும் போது அடிக்கிற வாசம் அப்படி இருக்கும். பரணில் இருக்கும் வெங்கலப் பாத்திரங்களை இறக்கி வாய்க்காலுக்குக் கொண்டு போய் விளக்கியெடுத்து வெயிலில் வைப்பாள். ‘சொன்னால் கேட்க மாட்டீங்களா பெரியம்ம? செத்த நேரம் ஒரு இடத்தில் அஞ்சு நிமிஷம் உட்கார்ந்தா என்ன?’ என்று அம்மா கேட்டால், ‘ஓடுத வரைக்கி வண்டி ஓடிக்கிட்டே இருக்கணும். நிக்கப் படாதுஎன்று சொல்லியபடி, வாசலில் புளிச் சிப்பத்தை ஓலைப்பாயோடு விரித்துக் காய வைக்கப் போய்விடுவாள்.

மூக்கம்மா ஆச்சி கதை சொல்லாத நாள் இராது.. இருட்டுக்கும் அவளுடைய கதைகளுக்கும் ஒரு நெருக்கம் இருந்துகொண்டே இருக்கும். பகலில் அவள் கதை சொன்னதே கிடையாது. சாயுங்காலம் அவளைக் கதை சொல்லச் சொன்னால், ‘கருகருத்த நேரத்தில் கதை சொல்லக்கூடாது. ராட்சசன் பிடிச்சுக்கிடுவான் என்று தவிர்த்து விடுவாள். அவளிடம் ராஜா கதைகள் நிறைய உண்டு. சதா அவர்கள் குதிரையில் எப்போது பார்த்தாலும் வேட்டையாடிக் கொண்டே இருப்பார்கள்.

நாங்கள் பார்க்க, முதலில் இருந்தே ஆச்சிக்குப் பொக்கு வாய்தான். ஏன் உனக்கு ஒரு பல் கூட இல்லாமல் விழுந்துட்டுது ஆச்சி? என்று கேட்டால், முதலில் ஒரு சிரிப்புச் சிரிப்பாள். ‘அந்தக் கதைய ஏன் கேட்கே போஎன்று ஆரம்பிப்பாள். கோமு, யானை என்ன எல்லாம் சாப்பிடும்னு உனக்குத் தெரியுமா?’ என்று தலை பின்னிய படி அக்காவிடம் கேட்பாள். ‘ஓலைஎன்று அவள் சொன்னால், ‘உனக்குத் தெரிஞ்சது அவ்வளவுதான்என்று ஆச்சி கொஞ்ச நேரம் அப்படியே இருப்பாள்.

ஒரு நாள் ராத்திரி ஆடிச் செவ்வாய்க்கு அவ்வையார் விரதக் கொழுக்கட்டை செஞ்சு வச்சிருந்தேன். இது எப்படியோ அந்த யானைக்கு வாசம் அடிச்சுட்டு. அப்படியே பாவனாசம் மலையிலே இருந்து பறந்து வருது. ரெண்டு முழத்துக்குக் கொம்பை நீட்டிக் கிட்டு, சுளவு மாதிரிக் காதை ஆட்டிக்கிட்டு அது வாரதைப் பார்த்து தொழுவுல நிக்கித பசுமாடு கண்ணுக்குட்டி எல்லாம் பதறிச் சத்தம் போட்டிருக்கு. நான் நல்லா அசந்து தூங்கிட்டேன். அது என்னடான்னா ஜன்னல் வழியா தும்பிக்கையை நீட்டி என்னை எழுப்புது. பார்த்தால் ஆனை. ‘என்ன வேணும் உனக்கு? ண்ணு கேட்டால், கொழுக்கட்டைன்னு சொல்லுது. சொல்லிக்கிட்டு தும்பிக்கையை தந்தத்தில் சுத்திக்கிட்டு ஆசையா நிக்கி. ஆகா. இது கொம்பன் ஆச்சே. ஆம்பிளைகளுக்கு அவ்வையார் கொழுக்கட்டையைக் கொடுக்கக் கூடாதேன்னு ஞாபகம் வருது. என்னடா செய்யலாம்னு பார்த்தேன். சட்டுண்ணு ஒரு பொய் சொன்னேன். ‘நீ வருவேன்னு யாருக்குத் தெரியும், அது எல்லாம் அப்போதையே காலியாப் போச்சு. அங்கணாக் குழியில ஏனத்தைக் கழுவப் போட்டாச்சு பாருண்ணேன். ‘நிஜமாவா?’ண்ணு கேட்டுது. ‘சத்தியமாண்ணு அடிச்சுச் சொல்லீட்டேன். ஆனை சத்தியத்துக்குக் கட்டுப் படும். ‘சத்தியம்னா, சரிண்ணு அது திலும்பிப் போயிட்டுது. மறு நாள் காலையில் எழுந்திருச்சுப் பார்த்தா, ஒரு பல்லு கூட இல்லை. எல்லாம் உதுந்துட்டுது. ஆனை கிட்டே பொய் சொன்னேம்லா. அதுனால தான்என்று சிரிக்கும் போது ஆச்சி கைகள் கோமுவுக்கு ரிப்பன் வைத்து முடித்திருக்கும். அப்பா பின்னால ஒரு தடவை சொன்னார். ஆச்சிக்கு ஏதோ விஷக் காய்ச்சல் வந்து அப்படி ஆகிவிட்டதாம்.

இன்னொரு தடவை, மழை பெய்து குளம் பெருகி மருகால் போனால் அவள் ஊர் எப்படி இருக்கும் என்பதைப் படம் மாதிரி விவரித்துக்கொண்டிருந்தாள். உண்மையோ பொய்யோ தெரியாது. மூக்கம்மா ஆச்சி சொல்வதைப் பார்த்தால் நிஜம் மாதிரித்தான் இருந்தது. ‘பத்து வருஷம் பெய்யாவிட்டால் கூட அதுக்கு ஒண்ணும் ஆகாது. எப்படா மழை பெய்யும்ணு ஓட்டுக்கு உள்ளேயே இருக்கும். மழை விழ வேண்டியதுதான் பாக்கி. நான் இருக்கேன், நான் இருக்கேன்னு வெளியே வந்து நத்தை பூரா ஊந்து வந்து போக ஆரம்பிச்சிரும்.’ அப்படிச் சொல்லும் போது மூக்கம்மா ஆச்சி தரையில் தனது விரல்களை ஊன்றி, நத்தை போல நகர்த்தி கோமு அக்கா பாதம் வரை கொண்டு போனாள். ஒரு நத்தை பிசுபிசுவென்று அக்கா காலில் ஏறப் போவது போல இருந்திருக்கும். அக்கா காலை இழுத்துக்கொண்டாள்.

மூக்கம்மா ஆச்சிக்கு எம்.ஜி.ஆர் படங்களைப் பிடித்திருந்தது. என்ன, மலைக்கள்ளன் கதையில் பாதியையும் தாய்க்குப் பின் தாரம் கதையையும் சேர்த்துவிடுவாள். மர்மயோகி கதையையும் மகாதேவி கதையையும் அப்படித்தான். யாராவது, ‘என்ன ஆச்சி? எல்லாக் கதையையும் இப்படி குழப்புதீங்க?’ என்று கேட்டால், ‘எல்லாக் .கதையும் ஒரே கதை தான். ஆதியிலே இருந்து ஒரு கதையைத் தான் ஒம்பது கதையா சொல்லிக்கிட்டு இருக்கோம் திலுப்பித் திலுப்பி என்று கேள்வி கேட்கிறவனின் கன்னத்தை, தோசைக்கு அரைத்துக் கொண்டிருந்த மாவுக் கையால் தொடுவாள். எல்லோருக்கும் அவனைப் பார்த்தால் சிரிப்பு வந்துவிடும்.

 ஒரு தடவை அப்பா மூக்கம்மா ஆச்சிக்கும் செருப்பு வாங்கி வந்து விட்டார். அது ஆச்சி கால் அளவுக்கு ரொம்பப் பெரியது. மாற்றி விடலாம் என அப்பா சொன்னார். ‘வேண்டாம், இருக்கட்டும்என்று ஆச்சி சொல்லிவிட்டாள். ‘எது அளவுப்படி நடந்தது இது வரைக்குஎன்று சேர்த்துச் சொன்னதுதான் கஷ்டமாக இருந்தது.

என்னை மூக்கம்மாச்சிக்கு ரொம்பப் பிடிக்கும். ‘எங்க அத்தான் பேரு விட்ட ஆயான் அல்லவாஎன்று சொல்வாள்.

அப்பாவுக்கு ஆச்சியைப் பிடிக்கும். ஆச்சியை அப்பா சில அபூர்வமான படங்கள் எடுத்திருக்கிறார். ஏதோ ஒரு விஷேச வீட்டு சமயமாக இருந்திருக்க வேண்டும். அத்தனையும் மூக்கம்மா ஆச்சி சிரிக்கிற படங்கள். ஆச்சியின் முகத்தை மட்டும் மிக நெருக்கமாக எடுக்கப்பட்ட அந்தப் பக்கவாட்டுப் படம் அருமையாக இருக்கும். கண்கள் இடுங்கி, பற்கள் அற்ற வாய் ஒரு பறவைக் குஞ்சின் அலகு போல் திறந்து, அவள் சிரிக்கிற அந்தப் படத்தைக் கையில் வைத்துக்கொண்டு அப்பா, என்ன கிரேஸ் பாருஎன்று சொன்னார். அதைப் பார்த்த அம்மாச்சி, ‘அப்படியே கனிஞ்சு போய் இருக்காஎன்று சொல்லும் போது அவள் கண் கலங்கியது. ஜன்னல் பக்கம் போய் வெளிச்சத்தில் அதைப் பார்த்துக்கொண்டே இருந்தவள், ‘மூக்கம்மா படம் என் கிட்டேயே இருக்கட்டும்என்று சொல்லியபடி வந்தாள். ‘அது உங்களுக்குத்தான் அத்தைஎன்று அப்பா சொன்னார். அம்மாச்சி கையில் இருந்து அதைத் திரும்பி வாங்கக் கூட இல்லை.


ஆச்சி திருவை பக்கம் காலை நீட்டிக்கொண்டு உளுந்து உடைக்கிற ஒரு படத்தில் வெயில் அத்தனை மாயங்களையும் செய்திருக்கும். குத்துப் புரையில் இருக்கிற கல் உரல், வழுவழு வென்று இருக்கிற பூண் போட்ட உலக்கை, மாடக்குழியில் இருந்து வடிந்திருந்த எண்ணெய்க் கறைகள், புடலங்கொடியின் தட்டுத் தட்டான இலைகள் எல்லாவற்றின் மேலும் வெயில் விழுந்திருக்க, ஆச்சி திருவையைச் சுற்றும் அந்தப் படம் ஒரு துக்கத்தை உண்டு பண்ணும்.

மூக்கம்மா ஆச்சி செத்துப் போய் விட்டாள்.

வந்த இடத்தில் எங்கள் வீட்டில் வைத்து மூக்கம்மா ஆச்சி இப்படிச் செத்துப் போய்விட்டாள் என்பதில் யாருக்கும் வருத்தம் இல்லை. வெளியே சொல்லிக்கொள்ளவில்லையே தவிர, ‘நாங்கள் கொடுத்து வைத்திருக்கிறோம் அதற்குஎன்றுதான் ஒருத்தர் பாக்கியில்லாமல் எல்லோருக்கும் மனதில் தோன்றியிருக்கும்.

துக்கம் விசாரிக்கிற சம்பிரதாயத்தில் யாரோ அம்மாவிடம், ‘அவ ஒண்ணு மாறாந்தையில் இருப்பா. அதை விட்டா இங்கே தானே இருப்பா. ரெண்டு அட்ரஸ் தானே அவளுக்கு. வேற ஒரு பக்கமும் தேடவே வேண்டாமேஎன்று ஆச்சியைப்பார்த்துச் சொன்னார்கள்.

மூக்கம்மா ஆச்சியைப் பார்த்தால் ஒரு வித்தியாசமும் தெரிய வில்லை. படுத்துத் தூங்குவது போலத்தான் இருக்கிறது. யாராவது தூங்கும் போது சிரிப்பார்களா? பச்சைப் பிள்ளை வேண்டுமானால் சிரிக்கும். ஒரு பல் கூட இல்லாமல், மேல் உதடும் கீழ் உதடும் சுருங்கி, ஈறுக்கு மேல் உள்மடங்கி, ஆச்சியும் பச்சைப் பிள்ளை மாதிரி தான் இருக்கிறாள்.

நேத்து பொழுதூரத் தான்எப்போ வந்தாலும் இலந்தைப் பழமும் பிரண்டையும் பறிச்சுக்கிட்டு வாரதைப் போல நேத்தும் கொண்டாந்து இருக்கா. எப்பவுமே, சாப்பிடுதது யார் கூட உட்கார்ந்து சாப்பிட்டாலும், படுக்கிறது எங்க அம்மை இருந்த ரூமிலதான் போய்ப் படுத்துக்கிடுவா. ‘அங்க ஃபேன் கிடையாது, இங்கே படுண்ணா கேட்க மாட்டா. ‘அவ இருந்த வரைக்கும் அவ கூட என்னத்தையாவது பேசிக்கிட்டு கிடப்பேன். இப்போ என்னத்தையாவது நினைச்சுக்கிட்டு அங்கனேயே கிடந்துருதேன்னு சொல்லீருவா. நேத்துக் கூட அந்த மாதிரி அங்கேயே தான் படுத்திருந்தாஅம்மா ரொம்பவும் உருத்தாக பதில் சொல்லுவாள்.

அப்படியே மத்தியானம் கொஞ்ச நேரம் படுத்துக் கிடக்கிற மாதிரி தானே இருக்காங்க. ஆச்சி கோனார் வரலை. பால் கறக் கணும்னு பக்கத்தில் போய்ச் சொன்னால் நான் ஆச்சு, செம்பைக் கொடுண்ணு எழுந்திருச்சாலும் எழுந்திருச்சிருவாங்கஅப்பா நின்றுகொண்டே மூக்கம்மா ஆச்சியைப் பார்த்துச் சொன்னார்.

சபாபதி மாமாவிடம்தான் மற்றப் பொறுப்புக்களைக் கொடுத்திருந்தது. யாருக்கு எல்லாம் தகவல் சொல்லவேண்டும், எத்தனை மணிக்கு எடுப்பது, எங்கு கொண்டு போவது, கருப்பந்துறை மயானமா, சிந்து பூந்துறையா?, குருக்களையா, குடிமகன், தவசிப் பிள்ளை, பலசரக்கு என்று எல்லாவற்றையும் மடமடவென்று மாமா ஏற்பாடு செய்வது ஆச்சரியமாக இருந்தது.

சபாபதி மாமாதான் அப்பாவிடம் கேட்டார், ‘பேப்பர்லே போட வேண்டாமா?’. என்னிடம்தான் மாமா கேட்டது போலகண்டிப்பா போடணும்என்று நான் உடனடியாகச் சொன்னேன். அப்பா என்னைப் பார்த்துச் சிரித்தார். ‘போட்டோ ஏதாவது போடணுமா? இல்லை, சும்மா இந்த மாதிரி விபரம், இத்தனை மணிக்கு இங்கே வச்சு மத்தது எல்லாம்னு தகவல் மட்டும் போதுமா?’. சபாபதி மாமா கேட்டதும் அப்பா, ‘அத்தை ஃபோட்டோ நம்ம வீட்டில எத்தனை இருக்குஎன்றார். படம் அவசியம் என்பதைத் தான் அவர் அப்படிச் சொன்னார்.

வேணும்னா அம்மாச்சி பெட்டியை நான் பார்க்கட்டுமா?’ என்று அம்மாவிடம் கேட்டேன். விளக்கில் எண்ணெயை ஊற்றி, திரியைத் தூண்டி, வகிட்டில் விரலைத் தடவியபடி அம்மா, சாவி இருக்கிற இடத்தைச் சொன்னாள். ‘அம்மாச்சி ரூம்ல பெட்டி இருக்கிற இடம் தெரியும் அல்லவா?’ என்று என்னிடம் கேட்டுக் கொண்டே அது எங்கே இருக்கிறது என அவளே சொல்லியும் விட்டாள்.

அம்மாச்சி அறையைக் கழுவிவிட்டிருந்தார்கள். அந்த அறையில் தூங்கும் போது மூக்கம்மா ஆச்சிக்கு இப்படி ஆனதால் டெட்டால் உபயோகித்து இருந்தார்கள். அதை பத்தி வாசனையால் தாண்ட முடியவில்லை. அறையில் அதிக வெளிச்சமும் இல்லை. இருட் டாகவும் இல்லை. போதுமானதாக இருந்தது. ஜன்னலுக்கு வெளியே யாரோ எட்டிப் பார்த்துவிட்டுப் போவது மாதிரி, செம்பரத்தம் பூக்களோடு கிளை அசைந்து விலகியது.

ஒரு பெட்டியைத் திறந்து எவ்வளவோ காலம் ஆகிவிட்டிருந்தது. அதுவும் இது போன்ற வழவழப்பு நிறைந்த ஒரு மரப் பெட்டியைத் திறப்பது வேறு ஒரு உலகத்தில் நிகழ்வது போல இருந்தது. எதனாலோ, ஒரு வேளை இரண்டு பக்கவாட்டிலும் இருந்த பூ வேலைப்பாடுகள் நிறைந்த கைப்பிடிகளாலோ, அது ஒரு ஹார்மோனியப் பெட்டி போலவும், எந்த விரலின் பதிவிலும் ஒரு சிறு இசையின் ஒலி அதிலிருந்து உண்டாகும் என்றும் நிச்சயம் உண்டாயிற்று.

இரண்டு தட்டுகளாக வெளியே எடுத்துவைக்கும்படியான தடுப்புப் பலகைகள் உள்ள பெட்டியில் இருந்து ரகசியங்களின் தாழம் பூ வாசனை அடித்தது. சிறு சிறு புத்தகங்கள், சொத்துப் பத்திரங்கள், காலாவதியான ஒரு நூற்பாலையின் பங்குப் பத்திரங்கள், சில பட்டுச் சேலைகள், ஒரு பட்டு நேரியல் எல்லாம் இருந்தன. அம்மாச்சி எப்போதும் கழுத்தில் போட்டிருந்த ஸ்படிக மணி மாலை உள்ளங்கைகளில் குளிர்ந்தது.

எல்லாவற்றிற்கும் கீழ் தனித்தனியாக இரண்டு மூன்று மஞ்சள் பைகள். எல்லாம் கூலக்கடை பஜாரில் உள்ள ஒரு நகைக்கடையின் மேல் விலாசம் உள்ளவை. அதிகம் தேடவேண்டியது இல்லாமல் முதல் பையிலேயே மூக்கம்மா ஆச்சியின் புகைப்படம் இருந்தது.

அந்தப் படம், சிவப்பு உல்லன் நூலால் கோர்க்கப் பட்ட மூன்று தங்கப் பித்தான்கள் உள்ள, தாத்தாவின் வட்டக் கழுத்து சந்தனக் கலர் சட்டையின் மேல் இருந்தது.

மூக்கம்மா ஆச்சி அற்புதமாகச் சிரித்துக்கொண்டு இருந்தாள்.

பின்னுரை

வண்ணதாசன் கல்யாண்ஜி என்ற புனை பெயரில் கவிதைகள் எழுதுபவர்.

ஆச்சியின் அத்தான்,  கதை சொல்பவருடைய அம்மாச்சியின் புருஷன். அவர் மேல் ஆச்சிக்கு ஒரு தீராத மையல். அந்த மையலைத் தான் கதைக்குள் கவிதையாக கதையின் ஊடே அங்கெங்கெ வெளிப்படுத்துகிறார்.

//என்னை மூக்கம்மாச்சிக்கு ரொம்பப் பிடிக்கும். ‘எங்க அத்தான் பேரு விட்ட ஆயான் அல்லவாஎன்று சொல்வாள்.//

தாத்தாவைப் பற்றி மூக்கம்மா ஆச்சி வருணிப்பதே தனி.  ஆளு வீமன் மாதிரித்தான் இருப்பா. வெள்ளைக்காரியே அவர் அழகில் மயங்கி அவரை குதிரையில் தூக்கிக் கொண்டு போய் மூன்று நாள் கழித்து கொண்டு வந்து விட்டதாக சொல்வாள்.

மூக்கம்மா ஆச்சியுடைய புருஷன் செத்ததற்கு பின்பு மூக்கம்மா ஆச்சி கூறுவது.

//எனக்கு (மூக்கம்மா ஆச்சிக்கு ) மூடி (கண்ணை மூடி) முழிக்கிறதுக்குள்ளே பொசுக் குண்ணு இவ்வளவும் (ஆச்சி புருஷன் சாவு) ஆகிவிட்டது தெரியும். தனியாவே இவ (மூக்கமா ஆச்சி) இருக்காண்ணும் (தாத்தாவுக்கு) தெரியும். ஆனா ஏறிட்டுக் கூடப் பார்க்க மாட்டா. எனக்குத் தான் அடிச்சுக்கிடும். தவியா தவிக்கும். //

//”இங்க வந்த இடத்தில் ஒருதடவை கிறுக்கு ரொம்ப கூடிட்டுது. கோட் ஸ்டாண்டில் கழட்டி போட்டிருந்த தாத்தா சட்டையை மோந்து பார்த்துக்கிட்டு இருந்தேன். அதை உங்க அம்மாச்சி பார்த்துட்டா. ஒண்ணுமே சொல்லலை. ராத்திரி என்னைக் கட்டிப் பிடிச்சுக்கிட்டு அழுதா. மாலை மாலையா கண்ணீர் விடுதா. நான் பேசாமல் கல்லு மாதிரி இருக்கேன். பொங்கிப் பொங்கி அழுகிறதை அவ நிறுத்தவே இல்லை’” //

அம்மா சொல்வது  //”படுக்கிறது எங்க அம்மை (அம்மாச்சி) இருந்த ரூமிலதான் போய்ப் படுத்துக்கிடுவா. ‘அங்க ஃபேன் கிடையாது, இங்கே படுண்ணா கேட்க மாட்டா. “//

மூக்கம்மா ஆச்சியின் மனத்தில் உள்ள பிரேமை இவ்வாறு கதையின் ஊடே ஆங்காங்கு வெளிப்படுகிறது.

அம்மாச்சியின் பொக்கிஷங்கள் ஒரு மரப்பெட்டியில் இருக்கின்றன. அந்த மரப்பெட்டியை திறக்கும்போது ஒரு சிறு இசை உண்டாகும்.

அது போன்றே மூக்கம்மா ஆச்சியின் மனமும். மூக்கம்மா ஆச்சியின் மனசு என்ற பெட்டியை எப்போதாவது திறந்தால் காதல் என்ற சிறு இசை யை கேட்கலாம். 

மூக்கம்மா ஆச்சியின் புகைப்படம் சிவப்பு உல்லன் நூலால் கோர்க்கப் பட்ட மூன்று தங்கப் பித்தான்கள் உள்ள, தாத்தாவின் வட்டக் கழுத்து சந்தனக் கலர் சட்டையின் மேல் இருந்தது.

செத்தபின்பும் மூக்கம்மா ஆச்சி அற்புதமாகச் சிரித்துக்கொண்டு இருந்தாள் படத்திலும் நிஜத்திலும்.  ஆச்சியின் சிரிப்பு தாத்தாவை மறு உலகில் சந்திக்கும் ஆர்வத்தில்???

சுட்டி

ஒரு சிறு இசை

ஆசிரியர்


இயற்பெயர், சி.கல்யாணசுந்தரம் (பிறப்பு 1946). வண்ணதாசன் என்ற புனைப்பெயரில் சிறுகதைகளும், கல்யாண்ஜி என்ற புனைப்பெயரில் கவிதைகளும் எழுதுபவர்இவர் திருநெல்வேலியில் பிறந்தவர். இவரது தந்தை இலக்கியவாதி தி. . சிவசங்கரன் ஆவார்.இவர் தந்தையும் சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.`1962 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை தொடர்ந்து சிறுகதைகள் எழுதி வருகிறார். இவரது 'ஒரு சிறு இசை' என்ற சிறுகதை நூலுக்காக இந்திய அரசின் 2016 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது கிடைத்தது.

வண்ணதாசன் என் விருப்பத்துக்குரிய எழுத்தாளர். நெருக்கத்தில் அவரைகல்யாணி அண்ணன்என்று அழைப்பதுதான் பிடித்திருக்கிறது. அவரது கதைகள் நெருக்கடியும் பிரச்னைகளும் நிறைந்த வாழ்வின் இடையில் அன்பின் இருப்பையும், அன்பு வெளிப்படும் அரிய தருணங்களையும் வெளிப் படுத்துபவை. தமிழ்ச் சிறுகதை உலகுக்கு இவரது பங்களிப்பு தனித்துவமானது. அது கவித்துமானதொரு உரைநடையை சிறுகதை எழுத்துக்கு உருவாக்கியது. இம்பிரஷனிச ஓவியங்கள் போன்ற துல்லியமும் வண்ணங்களும் கொண்ட உருச்சித்திரங்கள் இவரது கதைகளில் சித்திரிக்கப்படுகின்றன.” -  எஸ் ரா.

18 கருத்துகள்:

  1. வண்ணதாசனின் கதை சொல்லும் பாங்கை இங்கு பகிர்ந்து கொண்டது சிறப்பு..
    வேறொரு தருணத்தில் அவரது வேறொரு கதையைப் பற்றி இந்தப் பகுதியில் நானும் என் போக்கில் எழுதுகிறேன்.
    வண்ணதாசனின் தந்தையார் தி.க.சி. அவர்கள் என் அந்தக் காலத்து நண்பர். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்
    எங்களையெல்லாம் கட்டிப் போட்டிருந்த சங்கிலி. 'தாமரை' பத்திரிகை எழுதுதளமாகவும் எனக்கிருந்த காலம் அது.
    இந்தப் பகுதியில் தொடர்ந்து தாங்கள் எழுதுவது போற்றத்தக்க விஷயம். என் வாழ்த்துக்கள், நண்பரே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதைத்தான் பின் "ஊட்டம்" என்பதோ. தாமரை இதழ் பற்றி தற்போதுதான் அறிகிறேன். மிக்க நன்றி அய்யா. 
      Jayakumar

      நீக்கு
    2. த.க.இ.பெருமன்றம்
      இந்திய கம்யூனிஸ்ட்
      கட்சியின் இலக்கிய அரங்கம். தோழர் ஜீவாவின் முயற்சியில் வெளிவந்த இலக்கிய இதழ் தாமரை. அரசியல் ஏடு ஜனசக்தி. ஜெயகாந்தன் ஆரம்ப காலத்தில் தாமரையில் தான் எழுதத் தொடங்கினார்.

      நீக்கு
    3. ஒரு பொருந்தா இதழ் பெயர். தோழர் ஜீவா தாமரை என்று பெயர் வைத்த போது தீவிர வலது சாரி கட்சியின் தேர்தல் சின்னமாக அமையும் என்று நினைத்திருக்க மாட்டார். 

      Jayakumar

      நீக்கு
    4. தமிழகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு பத்திரிகைகள் அளித்த பெயரே வலது கம்யூனிஸ்ட் தானே,!

      தவிர வலது -- இடது எல்லாம் பொதுவான
      விஷயங்களில் கலந்து கட்டி மாறிப் போன கால கட்டம் இது.

      நீக்கு
  2. நெல்லை வட்டார நடையில் மிக அருமையான கதை.

    வண்ணதாசன் பற்றி சுகா எழுதித்தான் நான் தெரிந்துகொள்ள ஆரம்பித்தேன். அவருடைய அப்பாவைப்பற்றி சுகா (எழுத்தாளர், திரைத்துறையில் இருப்பவர்) நிறைய எழுதுவார்.

    நல்ல பகிர்வு. ஆனால் கதைக்கு கோனார் நோட்ஸ் போடுவது நன்றாக இல்லை என்பது என் அபிப்ராயம்.

    பதிலளிநீக்கு
  3. கூட்டு பொரியல்கார அம்மா என் மனம் கவர்ந்தார். வாடகை வீட்டில் இருந்துகொண்டு பசிப்பிணியாற்றும் மனது வியந்து போற்றத்தக்கது.

    பதிலளிநீக்கு
  4. ஸ்லீப்பர் பேருந்துகள் எனக்கு பயத்தை அளிக்கக்கூடியவை. ஏமேனும் ஆனால் ஒருவரும் தப்பிக்க இயலாது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் நெல்லை, அதுவும் பேருந்தில் திரைச்சீலைகள் அது இதுன்னு ஒரே கவர்ச்சியா வேற இருக்கும். ..

      கீதா

      நீக்கு
  5. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்விதமான கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக மலர வேண்டுமென இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன் நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    இன்றைய பாஸிடிவ் செய்திகள் அருமை.

    தீ விபத்து நேர்ந்த பேருந்திலிருந்து, தன்னுயிரையும் பொருட்படுத்தாது அனைவரையும் தெய்வம் போல் காப்பாற்றியவருக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

    இரண்டாவது செய்தி பெரிதாக்கி படிக்க இயலவில்லை. இருப்பினும் ஏழை எளியவருக்கு உதவிக்கரம் நீட்டி அன்றாடம் தருமம் செய்பவரை போற்றுவோம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  7. லாரி ஓட்டுனர், சித்ரா போன்றவர்களை இறைவன் ஆசீர்வதிக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  8. தேவி சித்ரா அவர்களின் எண்ணம் நிறைவேற வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  9. தேவிசித்ரா - வியப்புடனான பாராட்டுகள். சிறிய வீடு....சாஅதாரண குடும்பம்தான் ஆனால் மனதைப் பாருங்கள்! அசந்துவிட்டேன். வாழ்த்துகள் வாழ்த்துகள்! எவ்வளவு சொன்னாலும் முற்றுப்புள்ளி இல்லை..

    கீதா

    பதிலளிநீக்கு
  10. வண்ணதாசன் கதைகள் பலவும் கவிதைதான். தாமிரபரணி போலவே!!! வெங்கட்ஜி, எனக்கு அவரது கவிதை புத்தகம் ஒன்று தந்திருந்தார். வாசிக்கும் முன் அதை எடுத்துக் கொண்டு போன நபர் திருப்பித் தரவே இல்லை.

    //அது போன்றே மூக்கம்மா ஆச்சியின் மனமும். மூக்கம்மா ஆச்சியின் மனசு என்ற பெட்டியை எப்போதாவது திறந்தால் காதல் என்ற சிறு இசை யை கேட்கலாம். //

    கதையின் பொருளை ஜெ கே அண்ணா மிக அழகாகச் சொல்லியிருக்கீங்க. மிக மிக ரசித்தேன். அருமை.

    மூக்கம்மா ஆச்சியை மிக மிக ரசித்தேன். எல்லோர் ஊரிலும் ஒரு முக்கம்மா ஆச்சி இருப்பாங்க போல!

    பல இடங்கள் மனதை ஆழ்ந்து வாசிக்க வைத்தன.

    கீதா

    பதிலளிநீக்கு
  11. உதவும் கரங்களை வாழ்த்துவோம். வண்ணதாசன் கதை அருமை. மூக்கம்மாள் ஆச்சி எங்கள் மனங்களில் நிறைந்து நிற்கிறார்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!