வியாழன், 2 பிப்ரவரி, 2023

"பனியனையும் கழட்டிடுங்க ஸார்...."

 எனது சமீபத்து பிரச்னைகளில் ஒன்று இருமல்.  இருமல் என்றால் சாதாரண இருமல் இல்லை.  இ...........ரு........ம......ல். 

இரண்டு மூன்று லொக்குகளில் முடியாமல் கொள்...  என்று தொடங்கினால் நிறுத்த முடியாத இருமல்.  சும்மா இருக்கும்போது பேசவே முடியாத இருமல்.  பேசினாலே இருமல் வரும்.​

இருக்கிற பிரச்சனைகளை பின்தள்ளி இது முன்னேறி பெரிய பிரச்னையாக வளர்ந்து கொண்டிருந்தது. இதன் தொடர்ச்சியான பின்விளைவாக மிகக்கடுமையான மசில் ஸ்பாஸ்ம் ஏற்படும்.   வயிற்றில் தாம்புக்கயிறு போல சுருட்டிக் கொண்டு, அது விடுபடுவதற்குள் படும் அவஸ்தை.  இதன் பயங்கரம் அடிவயிற்றில் இது போலவே ஏற்படுவது...   ஒரு இடம் சரியானதும் அடுத்த மூச்சு விடலில் வேறொரு இடத்தில பிடிக்கும்.  மொத்தத்தில் நார்மலாக பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் பிடிக்கும்.  சரியாவதற்குள் தாங்க முடியாத வலியுடன்  கண்களில் ஜலம் வைத்துக்கொண்டு அல்லாடவேண்டும்.  

நடந்தால் சரியாகுமா, நின்றால் சரியாகுமா, மூச்சு விடவேண்டுமா, கட்டுப்படுத்தி அழுத்தித் தடவி விட்டு சரி செய்ய வேண்டுமா, ஒத்தடம் கொடுக்க வேண்டுமா...   குழப்பம்+அவஸ்தை.  சமயங்களில் கட்டிலில் மல்லாந்து படுத்து விடுவேன். கொஞ்சம் கொஞ்சமாக சரியாகும்.

இதெல்லாம் சென்ற வருடம் அக்டோபர் நவம்பரில்.  வீட்டின் தொல்லை தாங்காமல் மருத்துவரிடம் காட்டியபோது ஆன்டிஹிஸ்டமைன் இல்லாமல் இருமலை கட்டுப்படுத்த முடியாது என்றார்.  மசில் ஸ்பாசத்துக்கு ORS, மற்றும் மினரல்கள் எடுக்கச் சொன்னார்.  இளநீர் குடிக்கலாம் என்றார்.  கேல்சியம், வைட்டமின் D3 எடுக்கலாம் என்றார்.  

ஆன்டி ஹிஸ்டமைன் எடுப்பதில் எனக்குள்ள பிரச்னை அரை மாத்திரை போட்டாலே ஒன்றரை நாள் தூங்குவேன்.  அதை தூக்கத்தில் கூட சேர்க்க முடியாது.  போதை.   சுற்றி நடப்பது எல்லாம் தெரியும், ஆனால் நம்மால் முழுதாக அதில் கலந்து கொள்ள முடியாது!  எனவே அதன் பக்கம் போகாமல் டபாய்த்துக் கொண்டிருந்தேன்.  தூக்கமே வராது என்று சொல்லப்படும் அல்லெக்ராவுக்கு கூட நான் தூங்குவேன்!  எனக்கு அலக்ராவின்  உபரி தொல்லை தலைவலி, மைக்ரேன்.  சிலர் செட்ரிஜினுக்கு தூக்கம் வராது என்பார்கள்.  அவர்களைக் கண்டா வரச்சொல்லுங்க!

ஆனாலும் வலி என்னை மிரட்டியதால் ஸ்டெராய்ட் உடன் மான்டிலுகாஸ் எல்ஸி சாப்பிட்டேன்.  மாலை ஆறு ஆறரைக்கெல்லாம் போட்டுக்கொண்டு விடுவேன்!  ஒரு வாரத்திலேயே சற்று குணம் தெரிந்தது.  கூட கடையிலிருந்து ஓ ஆர் எஸ், மற்றும் இளநீர்.  இளநீர் அந்த சீசனுக்கு சரிவராததால் நிறுத்தி விட்டேன்.  இருமல் சரியாகத்  தொடங்கினாலும் பதினைந்து நாட்களில் மறுபடி வரத் தொடங்கியது.  இந்த முறை வேறொரு கூடாட்டளியுடன் வந்தது.

இருமல் தொடர்ந்து கொண்டே இருக்கும்.  மூச்சுவிட நிறுத்தினால் கண்கள் இருண்டு ஒரு கம்ப்ளீட் பிளாக் அவுட் ஆகிவிடும்.  நாக்கில் திப்பி திப்பியாய் ஏதோ வந்தது போல பிரமை ஏற்படும்.  தலை பின்னால் தொங்கிவிடும்.  கைகள் லேசாக ஆடி நிற்கும்.  பதினைந்து வினாடிகள் வரை இப்படி.  பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக நினைவு திரும்பும்.  தமிழ்ப்பட கதாநாயகி கண்விழித்து "நான் எங்கே இருக்கேன்?" என்று கேட்பது போல கேட்காவிடினும் மனதுக்குள் அந்தக் கேள்வி வந்து நிலைமை தெளிவடையும்.  இது எப்போதாவது கடும் இருமலின்போது மட்டும் என்பது மாறி, சமீப காலங்களில் ஒவ்வொரு இருமலுக்கும் இதே மாதிரி வரத்தொடங்கி, கடந்த சனிக்கிழமை அன்று மதிய உணவின்போது உச்சக்கட்டத்தில் ஒரு நிமிடம் இந்த என் நினைவிழப்பு நிகழ,  பாஸ், மற்றும் மகன்கள் அன்றே என்னை ராமச்சந்திரா அழைத்துச் சென்றனர்.  ஒரு கட்டத்தில் அப்படி நினைவை சில நொடிகள் இழப்பது ஒரு போதை போல எனக்கு பிடித்து விட்டதோ என்று கூட தோன்றியது!  

சம்பிரதாயமாக ஒரு GP யைப் பார்த்து, அவர் சொல்லி பல்மனாலஜிஸ்ட், மற்றும் நியூரோ மருத்துவரைப் பார்க்க, நியூரோ மருத்துவர் கார்டியாலஜிஸ்ட் ஒபினியன் கேட்க, எல்லோரையும் பார்த்து, அவரவர் சொன்ன சோதனைகளை முடித்துக் கொண்டிருக்கிறேன்.

பல்மனாலஜிஸ்ட்டிடம் ஸ்லீப் அப்னியா பற்றிச் சொன்னதும் அதற்கான சோதனைக்கு பரிந்துரைத்திருக்கிறார்.  அவரே ஆளை சொல்கிறேன் என்றும் சொல்லி இருக்கிறார்.  வீட்டுக்கே வந்து சோதிக்கும் ஆட்கள்.  அங்கு ஆஸ்பத்திரியில் ஓரிரவு தங்கவேண்டும் என்பதை மறுத்துவிட்டேன்.  

மூக்கில் மாட்டிக்கொள்ளும் வளையம் பற்றியும், மாஸ்க் பற்றியும் சொல்லி இருக்கிறார்.  என் குறட்டையிலிருந்து எனக்கும் அதனால் ஏற்படும் தொல்லையிலிருந்து பாஸுக்கும் எந்த அளவு விடுதலை கிடைக்கும் என்று பார்க்க வேண்டும்.  அவர் எழுதிக் கொடுத்த பிளாஸ்டின் என்கிற ஆன்டிஹிஸ்டமைன் உண்மையிலேயே அந்த அளவு மயக்கம், தூக்கத்தைத் தரவில்லை!

சிலர் மருத்துவரைப் பார்க்க உள்ளே சென்றால் மணிக்கணக்கில் பேசுகிறார்கள்.  என்னதான் பேசுகிறார்களோ..  காத்திருக்கும் நம் பொறுமைக்கு கடும் சோதனை.  நாங்கள் உள்ளே சென்றால் ஐந்து நிமிடங்களுக்கு மேல் ஆகமாட்டேன் என்கிறது.

இனிப்பு மக்களின் க்ரூப்புக்குள் நுழைந்திருக்கிறேன்.  இதில் சில கருத்து வேறுபாடுகள் உள்ளன.  கொலஸ்ட்ரால் சரி செய்யப்பட்டால் இது சரியாகிவிடலாம்.  ஆனால் இரண்டுக்குமே மாத்திரை பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறேன்.

நியூரோ மருத்துவர் என்னை மிகவும் தள்ளி உட்கார வைத்து மிக வேகமாக பேசி அனுப்பினார்.  "உங்களுக்கு இருமல் வந்தால்தான் இந்த மயக்கம் வருகிறது இல்லையா?  சாதாரண சமயங்களில் ஒருமுறை கூட வருவதில்லை இல்லையா?  என்னிடம் நீங்கள் வந்து விட்டீர்கள் என்றால் நியாயமாக நான் எம் ஆர் ஐ ப்ரெயின் எழுதவேண்டும்.  எழுதி விடுகிறேன்.  ஆனால் உங்களுக்கு அது தேவை இல்லை என்பதே என் கருத்து.  இருமலை நிறுத்தினால் உங்களுக்கு இது வராது.  பார்த்துக்கொண்டு கொஞ்ச காலம் கழித்து தேவையானால் எடுக்கலாம்" என்று மறுபடி எடுக்க வேண்டாம் என்பதை மறைமுகமாகச் சொன்னார்.  ஒவ்வொரு வார்த்தையும் சொல்லி முடித்ததும், அதையே கேள்வி வாக்கியமாக மாற்றி மறுபடி சொல்லி என்னைக் கேள்வி கேட்டார்!

எல்லா துறைகளும் வேகமாக அனுப்ப, சோதனைகளும் சட்சட்டென முடிய தாமதமான ஒரே டிபார்ன்ட்மென்ட் கார்டியாலஜி.  கடுப்பேற்றினார்கள்.  அது கார்டியாலஜி அல்ல, கடுப்பாலஜி!   முதல்நாள் அங்கு சென்றதும் சாதாரண கேள்வி விசாரணைகளுக்குப் பின் ஹெச் ஓ டி,  ஈ ஸி ஜி ஹால்டர் மானிடருக்கு பரிந்துரைத்தார்.  

அங்கு சென்றதும் அங்கிருந்த பெண்மணி பாஸை வெளியே நிறுத்தி விட்டு, என்னை மட்டும் உள்ளே அனுமதித்து கட்டிலில் படுக்கச் சொன்னார்.

"பட்டனைக் கழட்டிக்குங்க சார்"  திரைக்கு அந்தப் பக்கத்திலிருந்து குரல் மட்டும் வந்தது.

"ஆச்சு"

"பனியனையும் கழட்டிடுங்க ஸார்...."

"அப்போ சட்டையைக் கழட்டிடவா?"

"பின்னே?  நான் சொன்னேனே.."

'சட்டை பட்டனைத்தானே கழற்றச் சொன்னீங்க..'  என்று மனதுக்குள் கேட்டுக்கொண்டேன்.  ஆனால் வெளியில்,

"ஆச்சு.." என்றேன்.

"நெஞ்சுல முடி இருக்கா ஸார்...."  ஏன் கேட்கிறார் என்று எனக்குத் தெரியுமே!

"அவ்வளவா இல்லீங்க..."




திரையை விலக்கி உள்ளே வந்த பெண்மணி ஈ ஸி ஜி மெஷின் போல நெஞ்சில் புள்ளிகளை ஒட்டத் தொடங்கினார்.  லீட்ஸ் அனைத்தையும் கொடுத்து, அதன் வொயர்களை தொகுத்து, மடக்கி, பிளாஸ்திரி இட்டு, மைய கருவியை நெஞ்சில் பொருத்தி வலுவாக பிளாஸ்டர் ஒட்டினார்.   அப்புறம் பிக் பாஸ் தொங்கு பை போன்ற ஒன்றை தோளில் பூணூல் போல மாட்டி விட்டார்.

"நாளைக்கு குளிக்காதீங்க...  நைட்டு குப்புறப் படுக்காதீங்க..  இது பிச்சுக்காம பார்த்துக்குங்க..  மற்றபடி தினசரி உங்க ரொடீன் என்னவோ எதையும் மாற்றாம பண்ணுங்க..  நாளை இந்த நேரத்துக்கு வாங்க..  ரிமூவ் பண்ணிடுவோம்"

இரவு வீட்டுக்கு வந்தததும் அது கழண்டு விழுந்து விடுமோ என்று இன்னும் சில பிளாஸ்திரிகள் போட்டு நானே வலுவாக்கிக் கொண்டேன்.  மறுநாள் காலை நெஞ்செல்லாம் லேசாக அரிக்கத்தொடங்கியது.

மதியம் சென்று ரிமூவ் பண்ணும்போது நேற்றைய வனிதை வேறொரு சேச்சியிடம் பிளாஸ்டர் அகற்றும் பொறுப்பை ஒப்படைக்க, எக்ஸ்டரா வொர்க்கினால்  'உம்'மென்றிருந்த சேச்சியிடம் கேட்டேன்...

"ஏன் சிஸ்டர்...  நாங்க பேசியதெல்லாம் கூட இதில் ரெகார்ட் ஆகியிருக்குமா..."

அது அவ்வளவு பெரிய ஜோக்காக வரவேற்பு பெறும் என்று நானே எதிர்பார்க்கவில்லை.  ரொம்ப நேரம் சிரித்துக் கொண்டிருந்தார்.

என் நெஞ்சில் கழற்றப்பட்ட பிளாஸ்திரியின் இடங்கள் சிவந்து அரிக்கத் தொடங்கின...

========================================================================================================

சரித்திரக் கதாசிரியர்கள் எப்போதும் இளவரசிகளும், கதாநாயகியும் அதாவது பெண்கள் குளிப்பதைத்தான் வர்ணிப்பார்கள்.  ஆனால் இந்தக் கதாசிரியர் ஒரு ஆண் குளிப்பதை வர்ணிக்கிறார் பாருங்கள்...   

யார் இந்த எழுத்தாளர் தெரியுமா?

அந்தப் பகுதியில் ஆற்றின் ஆழம் அதிகமாக இருந்தாலும் அந்த வாலிபன் அநாகசமாக நீந்தி கொண்டிருந்தான்.  பால் போன்ற நிறம். ஆற்றுக்கு மேல் அவள் கண்டது அவன் உடலை அல்ல.  அவனது ஆற்றலை தான். 

இரு தோள்களும் உயரமாக இருந்ததால் இரு மலைகளின் நடுவே நீரின் பின்பாக ஒரு சூரியன் உதிப்பது போன்ற காட்சி தந்தது அவன் முகம். பொதுவாகவே எல்லா ஜீவராசிகளும் நீராடும் போது அழகாக காட்சி தரும். ஆனால் இவன் நீராடுவதால் அவன் மட்டும் அழகாக காட்சி தரவில்லை. அந்த ஆற்றை, அந்த பகுதியே மிக அழகாக தோன்றச் செய்திருந்தான்.  

அதுவரையில் ஆண்கள் என்பவர்கள் பக்தியையும் பணிவையும் மட்டுமே செலுத்த வேண்டிய பிறவிகள் என்கிற எண்ணத்தைக் கொண்டிருந்தாள்.  தந்தை ஆசான் மந்திரி பிரதானிகள் மற்றும் கோவில்பட்டர்களுடன் மட்டுமே பழகிக் கொண்டிருந்தவள் 16 பிராயங்களில் காலடி எடுத்து வைத்திருந்ததாலோ என்னவோ, அந்த இடம் வாலிபன் ஆற்றில் நீராடிக் கொண்டிருப்பதை பார்த்ததும் அவளது மனதில் முதல்முறையாக ஒரு வித உணர்ச்சி தோன்றியது.

கம்பீரத்துடனும், இளமை துடிப்புடனும், உலகிலேயே தான் மட்டும் இருப்பது போன்ற அலட்சியத்துடன் நீந்தி கொண்டிருந்தான் அவன்.  ஒரு முறை இவளை நோக்கியவன் பேரழகு மிக்க அவளை பார்த்ததே பெரும் பாவம் என்பது போன்று  நீரினுள் ஒருமுறை முழுகி வெளிவந்தான்.  அன்ன நடை பயின்றபடி வந்து பாறைமேல் அமர்ந்த ரங்காவை அந்த வாலிபன் ஓரக்கண்ணால் கவனித்தபடி தான் இருந்தான். ஒருவேளை தான் நீந்தி விட்டு ஆற்றை விட்டு வெளியேறியதும் நீராடுவதற்காக பாறையில் அமர்ந்து காத்திருக்கிறாள் போலும் என்று நினைத்தான். 

அவள் நீராட வேண்டும் என்பதற்காக தான் அவசரப்பட விரும்பவில்லை அந்த வாலிபன். குளிர்ச்சியான அந்த ஆற்று நீர் தேகத்தில் ஏற்படுத்திய சுகத்தை மெய் மறந்து அனுபவித்தபடி வெளியேற மனமில்லாமல் தொடர்ந்து நீந்தி கொண்டிருந்தான். கடைசியாக ஒருமுறை ஆற்று நீரில் குட்டிக்கரணம் ஒன்றை போட்டுவிட்டு கரையில் ஏறி நீராட காத்திருக்கும் அந்த பெண்ணிற்கு வழிவிடலாம் என்று நினைத்த அந்த வாலிபன், ஆற்றின் மீது துள்ளிப் பாயும் மீன் போல குட்டிக்கரணம் ஒன்றை அடித்து பெருத்த சத்தத்துடன் மீண்டும் நீரினுள் பாய்ந்து மறைந்தான்.  சற்று நேரத்திற்கெல்லாம் அவனது கட்டழகு தேகத்தின் மேல் பகுதி வெளிப்பட்டது.  

ஆற்று நீரின் பெருத்த சத்தத்தால் கவரப்பட்டு அவனை நோக்கி தன்னையும் அறியாமல் திரும்பினாள் ரங்காத்மஜா. இவள் கவனித்த வேளையில் அவன் அந்தரத்தில் குட்டிக்கரணம் அடித்து கொண்டிருக்க, அவனது இடையில் அவன் அணிந்திருந்த அந்த நீலத்துண்டு அவள் கண்களில் பட்டது. ஆனால் குட்டிக்கரணம் அளித்து நீரினுள் மூழ்கி அவன் மீண்டும் நீரின் மேலே வந்த போது அவனுக்கு பின்பாக அவன் அணிந்திருந்த அந்த நீலத்துண்டு அவனிடம் விடை பெற்றுக் கொள்ளாமல் நழுவி வேகமாக ஆற்று நீரில் சென்று கொண்டிருந்தது.

==============================================================================================================

சமயங்களில் ஊபர் பைக்கில் வருவேன் இல்லையா?  அப்போது வண்டியின் பின் சீட் உயரம் அல்லது அமைப்பைப் பொறுத்து எனக்கு தொடை அல்லது இடுப்பு பிடித்துக் கொள்ளும்.  இறங்கி சரியாய் மறுபடி உட்கார்ந்து கொள்ள வேண்டி இருக்கும்.  

அப்படி இருக்கையில் இவர் இப்படி உட்கார்ந்து பயணிக்கிறாரே என்று பார்த்ததும் உறுவியப்பால் குறுகுறுத்து புகைப்படம் எடுத்து விட்டேன்.  பாதத்தை எடுத்துத் தரையில் ஊன்றுவதே சிரமமாக இருக்கும் அளவு மரத்துப் போயிருக்கும்.


=================================================================================================




கூச்சலும், குழப்பமுமாய் 
சண்டையும், சச்சரவுமாய் 
கலகலவென்று 
பெட்டிகள் நிறைந்து 
சுமைகள் இருந்தபோது  
சுகமாக கூவியபடி 
வேகமாக வந்த 
ரயில் 
பயணிகள் இறங்கியபின் 
காலி பெட்டிகளுடன் 
ஒருவித வெறுமையுடன் 
மெதுவாகச் செல்கிறது 
தன் இருப்பிடம் நோக்கி 


==========================================================================================================

பொக்கிஷம்...

1962 - அண்ணாசாலை ஸ்பென்ஸர் அந்தஸ்தின் அடையாளம்...   தனியார் பேருந்துகள்..  அப்போது அது நவீனம்!  அப்போது மவுண்ட்ரோட் எப்படி இருக்கிறது பாருங்கள்!



மிகச் சமீபத்தில் இதை ஆங்கிலத்தில் 'வாட்ஸாப்  பார்வேர்ட்'டாக பார்த்தேன்.  ரசித்தேன்.  பார்த்தால் இங்கு பழைய பைண்டிங்கில் கண்ணில் படுகிறது!

அண்ணே...  பயபபடாதீங்கண்ணே....   வாழ்த்துதாங்கண்ணே...


பயமா...   எங்களுக்கா....  ஹ...   (அட..  யாராவது வந்து இதைப் பிடிங்கப்பா...)


சமீபத்தில் உறவில் ஒரு தம்பதியினர் இது போன்ற புகைபபடம் எடுத்துக் கொண்டதும் எனக்கு அவர்களை பாராட்டத் தோன்றியது. வித்தியாசமான சிந்தனை என்று தோன்றியது.
எல்லோரும் அவரவர்கள் முகத்தை போட்டோவில் கொண்டு வர, பார்க்க ஆசைப்படும் போது முதுகைக் காண்பித்து நின்று, அவர்கள் பார்க்கும் காட்சிக்கு முக்கியத்துவம் தருவது மனத்தைக் கவர்ந்தது. இப்போது, காட்சியில் இருக்கும் மனிதர்களைவிட, அவர்கள் காணும் காட்சிக்குதான் முக்கியத்துவம்.
இப்போது இங்கு பகிர்ந்திருக்கும் இந்தப் படம் குமுதத்தில் 1962 ல் வெளிவந்த ஒரு குறுநாவலுக்கு ஓவியர் வரைந்துள்ள இந்த ஓவியத்தை அதே பாணியில் பார்த்ததும் சட்டென பிடித்து விட்டது..
இன்னொன்று இந்தக் குறுநாவலுக்கு ஆங்காங்கே படம் வரைந்துள்ள இந்த ஓவியர் ஒரு இடத்திலும் தன் பெயரைப் போடவில்லை. நம்பிக்கை.
பார்த்தால் ஓவியம் வர்ணம் போல தெரிகிறது.




ஆனாலும் இந்த டைப் ஜோக்ஸ் படிக்க ரொம்ப.......

94 கருத்துகள்:

  1. இருமலின் கஷ்டம் நானும் அறிந்து இருக்கிறேன்.

    ஓர் தினம் இரவு முழுவதும் உடலே அந்தரத்தில் தூக்கி, தூக்கி போட்டது அவ்வளவு பெரிய இருமல், வலி.

    மறுதினம் உடம்பு வலியையைவிட, மனசு வலிதான் கடுமையானது.

    காரணம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய உறவு, இதெல்லாம் நடிப்பு என்று சொன்னதால்.

    அன்றுதான் மனைவியின் அருமையை அதிகம் உணர்ந்து அழுந்தியநாள்.

    பதிலளிநீக்கு
  2. இந்த நாளும் இனிய நாளே..

    எல்லாருக்கும் இறைவன் அருளட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  3. பதிவின் முதற்பகுதியை வாசிக்க வாசிக்க மனது மிகவும் வலித்தது..

    என்ன குறை..
    ஏது பிழை?..
    ஏது செய்தால் சரியாகும்?..

    இறைவா.. எமக்கு
    வழி காட்டு..

    பதிலளிநீக்கு
  4. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  5. துன்பம் துயரம்
    தொடர்ந்து வராமல்
    தூயோன் நல்லருள்
    துணையாய் வருக..

    நன்மைகள்
    மலராய்
    நாளும் மலர
    நாயகன் நல்லருள்
    நம்முடன் வருக..

    பதிலளிநீக்கு
  6. உங்கள் இருமலை பற்றி படித்தவுடன் மனது வேதனை பட்டது.
    இருமல் வந்தால் விலா பக்கம், மற்றும் உடம்பு முழுவதும் வலிக்கும்.
    நீங்கள் படும் கஷ்டத்தை நகைச்சுவையாக சொல்லி விட்டீர்கள் ஆனால் எவ்வளவு கஷ்டம் என்று தெரியும்.

    இருமலு ரோக முயலகன் வாத
    மெரிகுண நாசி ...... விடமேநீ

    ரிழிவுவி டாத தலைவலி சோகை
    யெழுகள மாலை ...... யிவையோடே

    பெருவயி றீளை யெரிகுலை சூலை
    பெருவலி வேறு ...... முளநோய்கள்

    பிறவிகள் தோறு மெனைநலி யாத
    படியுன தாள்கள் ...... அருள்வாயே

    வருமொரு கோடி யசுரர்ப தாதி
    மடியஅ நேக ...... இசைபாடி

    வருமொரு கால வயிரவ ராட
    வடிசுடர் வேலை ...... விடுவோனே

    தருநிழல் மீதி லுறைமுகி லூர்தி
    தருதிரு மாதின் ...... மணவாளா

    சலமிடை பூவி னடுவினில் வீறு
    தணிமலை மேவு ...... பெருமாளே.

    இந்த திருப்புகழ் பாடல் பாட சொல்வார்கள் வீட்டில். மருத்துவரிடமும் போய் வாருங்கள்.இந்த பாடலை திருத்தணி முருகனை வேண்டி பாடி பாருங்கள். விரைவில் நலம் அடையலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிறைப்பட்ட பின்னூட்டங்களை விடுவித்திருக்கிறேன்.

      நீக்கு
  7. பகிர்ந்த கதை சாண்டில்யன் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  8. இதற்கு முன் பின்னூட்டம் காணோம்.

    பதிலளிநீக்கு
  9. இருமல் வந்து நீங்கள் அவதி படுவதை கேட்டு மனது கஷ்டமாக இருக்கிறது. இருமல் வந்தால் விலா பகுதி வலி வரும். உடல் முழுவதும் வலிக்கும். நீங்கள் பட்ட துன்பத்தை நகைச்சுவையாக சொன்னாலும் உங்கள் வேதனையை புரிந்து கொள்ள முடிகிறது.

    மருத்துவர் சொல்லும் மருந்தும் எடுத்து கொள்ளுங்கள். திருப்புகழ் பாடல் ஒன்று திருத்தணி முருகன் பாடல் இதையும் முருகனை நினைத்து பாடுங்கள் விரைவில் நலம் அடைவீர்கள்.

    இருமலு ரோக முயலகன் வாத
    மெரிகுண நாசி ...... விடமேநீ

    ரிழிவுவி டாத தலைவலி சோகை
    யெழுகள மாலை ...... யிவையோடே

    பெருவயி றீளை யெரிகுலை சூலை
    பெருவலி வேறு ...... முளநோய்கள்

    பிறவிகள் தோறு மெனைநலி யாத
    படியுன தாள்கள் ...... அருள்வாயே

    வருமொரு கோடி யசுரர்ப தாதி
    மடியஅ நேக ...... இசைபாடி

    வருமொரு கால வயிரவ ராட
    வடிசுடர் வேலை ...... விடுவோனே

    தருநிழல் மீதி லுறைமுகி லூர்தி
    தருதிரு மாதின் ...... மணவாளா

    சலமிடை பூவி னடுவினில் வீறு
    தணிமலை மேவு ...... பெருமாளே.
    விரைவில் நலம் பெற பிரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தினம் சொல்லத் தொடங்குகிறேன் அக்கா...

      நீக்கு
    2. இந்தத் திருப்புகழை இரண்டு முறை எனது தளத்தில் வெளியிட்டிருக்கின்றேன்.. மற்றும் தேவாரப் பதிகங்களும் அனைவரது நன்மைக்காகவும் தான்..

      இப்போது கூட சுந்தரர் தேவாரம் அனைவரும் நலம் பெறத்தான்..

      நீக்கு
    3. அப்படியா? நன்றி.எனக்கு இதெல்லாம் புதுசு.

      நீக்கு
  10. //அப்படி இருக்கையில் இவர் இப்படி உட்கார்ந்து பயணிக்கிறாரே //

    நானும் பார்த்து கவலை பட்டு இருக்கிறேன். அன்றாடம் பணிக்கு இப்படி போகவேண்டி இருக்கே! அவர்கள். இறங்கியவுடன் அவர்களுக்கு இடுப்பு, கால் எல்லாம் வலிக்கும்.

    பதிலளிநீக்கு
  11. வட நாட்டில் இப்படி ரயில் பயணம் செய்வார்கள்.பொக்கிஷ பகிர்வுகள் எல்லாம் நன்றாக இருக்கிறது.1962 சென்னை படம் அருமை. இப்போது நினைத்து பார்க்கவே முடியாத அளவு நெரிசல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் கவிதையின் முக்கியத்துவத்தைக் குறைத்து விட்டதோ என்று தோன்றுகிறது!

      நீக்கு
    2. உங்கள் கவிதை நன்றாக இருக்கிறது ஸ்ரீராம்.
      //காலி பெட்டிகளுடன்
      ஒருவித வெறுமையுடன்
      மெதுவாகச் செல்கிறது
      தன் இருப்பிடம் நோக்கி //

      வீட்டில் நிறைய பேருடன் இருந்து விட்டு தனிமையாக இருக்கும் போது மனதில் வீட்டில் வெறுமை வருமே! ஒரு நெடிய பெருமூச்சுடன் . அது போல ரயிலும் பெருமூச்சுடன் நகர்ந்து போகிறது தன் இருப்பிடம் நோக்கி.
      கற்பனை அருமை.

      நீக்கு
    3. அதேதான்..   அதேதான்... நன்றி கோமதி அக்கா. இப்போது படங்களை நீக்கி விட்டேன்!

      நீக்கு
  12. ஆக ஒரு இருமல் எப்படியெல்லாம் தொந்தரவு தருகிறது. என்னுடைய பங்குக்கு நானும் ஓர் ஆலோசனை தருகிறேன். பிளட் count எளிய சோதனை செய்து பாருஙகள். ஈஸ்னோபீலியா 2.5 க்கு மேல் இருந்தால் மாத்திரை தருவார்கள். இந்த மாதிரி இருமல் குளிர் அதிகம் இருந்தால், மழை பெய்தால் என்று வரும்.

    வறட்டு இருமலுக்கு சித்தரத்தையை, அல்லது அதிமதுரத்தை வாயில் அடக்கிக் கொண்டால் போதும்.

     muscle spasm ரத்த ஓட்டம் அந்தப் பகுதிக்கு கிடைக்காததை நினைவூட்டுகிறது. ரத்த ஓட்டம் சீர் செய்யும் vasodilator மருந்துகள் எடுக்க சரியாகும். அல்லது ecospirin (ஆஸ்பிரின்) தினம் ஒன்று என ஒரு மாதத்திற்கு சாப்பிட்டால் போதும்.  

    எனக்கு தினமும் ஒரு ஆன்டிஹிஸ்டமின்  மாத்திரை சாப்பிடவில்லை என்றால் தூக்கம் வராது. அப்படி பழகி விட்டது. அதுவும் சில சமயங்களில் montelekast உடன் சாப்பிட வேண்டி வரும். அன்று நல்ல அடித்துப்போட்ட உறக்கம் என்று சொல்லலாம். 

    மூக்கில் வளையம்  தொல்லை. அதை விட டான்சில் removal சரியானது. வாயால் சுவாசிப்பீர்கள். ஆனால் சப்தம் வராது. நிம்மதி தனி அறை தூக்கம் தான். யாருக்கும் தொல்லை இல்லை. (சேர்ந்திருப்பது தான் தொல்லை)

    குளியல் ஸீன் எழுதியது சாண்டில்யன் என்பது எனது ஊகம். 

    எசப்பாட்டு 

    கடமை முடிந்தது
    எல்லோரும் பத்திரமாக 
    இலக்கை அடைந்து விட்டனர். 
    ஒய்வு கிடைக்க 
    மெல்ல செல்வோம். 

    மனைவி கண்டிப்பானவர்!

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பிளட் count எளிய சோதனை செய்து பாருஙகள். ஈஸ்னோபீலியா 2.5 க்கு மேல் இருந்தால் மாத்திரை தருவார்கள். //

      அதெல்லாம் ஆரம்பத்திலேயே ஆச்சு!

      //வறட்டு இருமலுக்கு சித்தரத்தையை, அல்லது அதிமதுரத்தை வாயில் அடக்கிக் கொண்டால் போதும்.//

      அடக்கி அடக்கி அலுத்துப்போச்சு!  கீதா அக்கா சொல்லி சுக்கு, மிளகு, திப்பிலி, அதிமதுரம், சித்தரத்தை ஐந்தையும் நாட்டுமருந்துக் கடையில் பொடியாக வாங்கி கலந்து சாப்பிட்டுப் பார்த்தேன்.  2020 ல் கேட்டது.  இப்போ மறுபடி வாங்கி  சாப்பிட்டால் கேட்கவில்லை.

      இருமலைத் தொடர்ந்த என் மயக்கம் கூட ரத்த ஓட்டம் ஆக்சிஜன் சம்பந்தப்பட்டதுதான்.  டான்சில் ரிமூவல் பீதியூட்டுகிறது.  கேட்டுப்பார்க்கிறேன்.

      குளியல் சீன சாண்டில்யன் இல்லை.

      எசப்பாட்டு சாதாரணமாக இருக்கிறது.

      நீக்கு
  13. கதை பகிர்வு ஆசிரியர் சாண்டில்யன் என்று போட்டு இருந்தேன் அதையும் காணோம்.தேடி போடுங்கள் ஸ்ரீராம். இரண்டு பின்னூட்டங்கள் இல்லை.

    பதிலளிநீக்கு
  14. அவர் எழுதிக் கொடுத்த பிளாஸ்டின் என்கிற ஆன்டிஹிஸ்டமைன் உண்மையிலேயே அந்த அளவு மயக்கம், தூக்கத்தைத் தரவில்லை!//

    அது நினைச்சிருக்கும் ஏற்கனவே அப்பப்ப தூங்கிடற இவருக்குப் போய் என்னை கொடுத்திருக்காங்களேன்னு தன் ஆக்ஷனை காட்டலையோ என்னவோ.!!

    ஸ்ரீராம்....உங்க கஷ்டம் தெரியுது புரியுது.......சும்மா இது Just to relax சீரியஸ் விஷயத்திலிருந்து....இடுக்கண்வருங்கால் நகுக.....துன்பம் வரும் வேளையிலும் சிரிப்போம்னு....தான்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனால் இரண்டே நாட்களில் இருமல் அந்த மாத்திரைக்கு பழகி விட்டது கீதா...  மறுபடி தொடங்குகிறது.  வெறுப்பாக இருக்கிறது.

      நீக்கு
  15. இனிப்பு மக்களின் க்ரூப்புக்குள் நுழைந்திருக்கிறேன்.//

    வெல்கம் டு அவர் கம்யூனிட்டி!!! ஹாஹாஹாஹா...மன்னிச்சுக்கோங்க ஸ்ரீராம் இதையும் நான் என்னையே என்னை கலாய்த்துக் கொள்வது போல தான்.

    ஆனா பாருங்க ஸ்ரீராம் இதை நீங்க ஈசியா சமாளிச்சு இந்த கம்யூனிட்டிலருந்து வெளிய எல்லையில் நிக்கலாம்....நான் இப்ப அப்படித்தான்!!!! வெளியில் வந்து கொண்டிருக்கிறேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
  16. நலமாக வேண்டுகிறோம்.

    ரெயில் பார்க்கவே பயமாக இருக்கிறது. இவ்வளவு பயணிகளா? கூரைமேலும் .

    ஜோக்ஸ், படங்கள் ரசனை.

    பதிலளிநீக்கு
  17. ஸ்ரீராம் நிஜமாவே முதலில் கேட்டதும் மனசு கஷ்டமாகிடுச்சு....அப்புறம் உங்க பாஸிடம் பேசி அப்டேட் எல்லாம் வாங்கியதும்தான் மனது சமாதானமாகியது. கொஞ்சம்தான்,....

    இன்னும் நீங்க ஒழுங்கா கவனிச்சிட்டீங்கனா இதுவும் சரியாகிடும் ஸ்ரீராம். ப்ளீஸ் உங்க ஆரோக்கியத்தைக் கவனியுங்க....உங்க பாஸ், மகன்கள் சொல்வதைக் கேளுங்க.

    கீதா

    பதிலளிநீக்கு
  18. "ஏன் சிஸ்டர்... நாங்க பேசியதெல்லாம் கூட இதில் ரெகார்ட் ஆகியிருக்குமா..."//

    ஹாஹாஹா ஸ்ரீராம் நீங்க இதைக் கேட்டிருக்கணும், "ஸிஸ்டர் இது என் மனசுல ஓடினது எல்லாம் ரெக்கார்ட் பண்ணிருக்குமோன்னு"

    நான் இதை ஒரு கதைல (ஹிஹிஹிஹி மீண்டும் நான் சொலல்த் தேவையில்லை உங்களுக்கே புரிஞ்சிருக்கும்) யூஸ் பண்ணிருக்கேன்!!!

    எனக்கு அப்பப தோணும், வாக்கிங்க் போறப்ப, பாத்ரூம்ல இருக்கறப, சமைக்கறப்ப எல்லாம் மனசுல கதைக்கான வசனங்கள், வேறு பதிவுகளுக்கான எண்ணங்கள் ஓடும் மாரத்தான் போல,,,,,முட்டி மோதி....அப்ப இப்படி ஒரு கருவி பொருத்திக்கிட்டா அது மனசுல ஓடறத எல்லாம் ரெக்கார்ட் பண்ணிக்கும் அப்புறம் கம்ப்யூட்டர்ல இணைத்து எடுத்துடலாமேன்னு!!!! இப்ப பாருங்க அப்புறம் மறந்துரும்....அவ்வளவுதால் எல்லாம் பாதில நிக்கும்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடா..  நீங்க சொன்ன மாதிரி கேட்டிருக்கலாமோ...    அது இன்னும் நல்லாயிருக்கே...

      நீக்கு
  19. இப்படி ஒரு இருமல் தொல்லையா...? தீர்வு கிடைத்ததா...? தற்போது எவ்வாறு உள்ளது...?

    பதிலளிநீக்கு
  20. ஸ்ரீராம்...எல்லாம் ஓகே...இவ்வளவு கஷ்டங்கள், ஏகப்பட்ட சோதனைகள், இருமலுக்கான மூலக்காரணம் கண்டு பிடிச்சாங்களா? எதனாலன்னு ரூட் காரணம் தெரிஞ்சா தீர்வு கிடைச்சிருமே....ஏன் இன்னும் இத்தனை மருத்துவர்கள் இவ்வளவு டெஸ்ட் பண்ணியும் கண்டுபிடிக்கலை? ஆச்சரியம்!!!

    கஷ்டப்படறது நீங்க ஸ்ரீராம். அவங்களை கேள்வி கேளுங்க,,,,இவ்வள்வு டெஸ்ட் அந்த நிபுணர் இந்த நிபுணர்னு வரேன் ஆனா கண்டுபிடிக்க மாட்டேன்றீங்க தீர்வு சொல்ல மாட்டேன்றீங்களேன்னு...நாம மருத்துவர நம்பித்தனே போறோம்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருக்கும் அத்தனை சோதனையும் (இன்னும் எம் ஆர் ஐ ப்ரெயின் செய்யவில்லை!) செய்து புதிது புதிதாக மாத்திரையை லிஸ்ட்டில் சேர்க்கிறார்கள் தவிர இருமலுக்கு என்ன செய்வது என்று அவர்களுக்கும் புரியவில்லை கீதா.

      நீக்கு
    2. கிட்டத்தட்ட 15 வருடங்களாக நானும் உங்களைப் போன்று ஓயாத இருமலால் கஷ்ட்டப் பட்டுக் கொண்டிருந்தேன். எந்த ஸ்பெஷலிஸ்டாலும் என்ன காரணம் என்று கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது. 2007ல் ஸ்லீப் அப்னீயா டெஸ்ட் நடந்தது. அன்றிலிருந்து CPAP மெஷின் போட்டு தூங்க ஆரம்பித்ததும் இருமல் நின்று விட்டது. இருமலுக்கான சகல மருந்து மாத்திரைகள் இன்ஹேலர் இத்யாதிகளை நிறுத்தி 16 வருடம் ஆகி விட்டது.. இருமல் தொல்லை அடியோடு ஒழிந்து விட்டது....16 வருடமாக ஒரு முறை கூட இருமல் இல்லை. தெரிந்த மருத்துவ நண்பர் later on speculated that I must have been sleeping with wide open mouth thus making it easy for getting my throat constantly infected!

      நீக்கு
    3. வாங்க சூர்யா... உங்கள் வார்த்தைகள் எனக்கு நம்பிக்கை ஊட்டுகின்றன.

      நீக்கு
  21. ஆண் குளியல் வர்ணனை - சாண்டில்யன்?

    அந்த இரு சக்கரவாகனத்துல அவங்க உட்கார்ந்திருப்பது ப்ளஸ் ஓட்டுபவர் காலை அந்தரத்தில் வைத்தா ஓட்டுவார்? அது இன்னும் கஷ்டமாச்சே....வழில கல் ஏதாவது காலை தட்டினால் அம்புட்டுதான்... அலல்து கீழ உட்கார்ந்திருக்கரவங்க தொடை மேல வைச்சுக்குவாரோ?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாண்டில்யன் இல்லை.  அதென்ன எல்லோரும் சொல்லி வைத்தது மாதிரி சாண்டில்யன்?  ஒரு மாறுதலுக்கு கூட விக்ரமன், ஜெகசிற்பியன், கௌதம நீலாம்பரன் என்றெல்லாம் சொல்ல மாட்டீர்களா?

      எப்படியோ இப்படி சென்று வர பழகி விட்டார்கள்!

      நீக்கு
    2. கெளதம நீலாம்பரன் என்று உங்கள் ஆசைக்கு சொல்லி வைக்கிறேன். சரியா என்று தெரியவில்லை.

      நீக்கு
    3. ஹா.. ஹா... ஹா... அதுவும் இல்லைதான்!

      நீக்கு
  22. ஸ்ரீராம் ரயில் படங்கள் அழகு...யம்மாடியோவ் கூட்டம் இப்படியுமா....ஆனா நான் இந்தப் படம் பார்த்திருக்கேன்

    யாருமில்லா ரயில் பெட்டி புகைப்படத்தில் அழகா இருக்கு,

    கவிதை அருமை அருமை....இது அப்படியே வாழ்க்கைக்கும் பொருந்தும் பாருங்க.

    குடும்பம் குழந்தைகள் சண்டை கூச்சல் உழைப்பு சுறு சுறுப்பு வேகமாக ஓடி ஓடி...என்று இருக்கும் சமயம் கடந்து பிள்ளைகள் கல்யாணம் அவங்க லைஃப்னு இறங்கிப் போயிடும் போது காலியான வீட்டில் ஒரு வித வெறுமையுடன் மெதுவாக நகரும் நேரம்...வயசாகி மெதுவான இயக்கங்கள்,...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த உருவகத்தில்தான் அந்தக் கவிதையை எழுதினேன்.  படம் போட்டிருக்கக் கூடாது என்று இப்போது தோன்றுகிறது!!!

      நீக்கு
  23. மௌன்ட் ரோட் வடிவமைப்பு அப்படியேதான் இருக்கு ஸ்பென்சர் அதன் அருகில் திரும்பும் ரோடு என்று....ஆனால் காட்சிகள் மாறிவிட்டன இப்போது. இப்படியான சாலையைப் பார்க்க முடியுமா? ஒரு இஞ்ச் இடைவெளி கூட இல்லாமல் வாகனங்கள்...முண்டி அடித்து...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்லும் அந்தத் திருப்பத்தில் தினசரி வளைந்து வருகிறேன்.

      நீக்கு
  24. ஜோக் ரசித்தேன் - பொறுப்பு எனும் வார்த்தை விளையாட்டு!!

    பொங்கல் வாழ்த்து!- ஹாஹாஹாஹா ...அண்ணே தை பிறந்தால் வழி பிறக்கும்....னு கஸ்டமர்கள் பதில் வாழ்த்து சொல்லிருப்பாங்களோ....!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  25. பயில்வான்கள் எலியின் முன்...ஹாஹாஹா ஆனைக்கொரு காலம் வந்தா பூனைக்கொரு காலம் வரும்.

    அந்த ஓவியம் அருமை ஸ்ரீராம்...

    நானும் இப்படியான ஃபோட்டோக்கள் (என்னை அல்ல. உறவுகள் இப்படி காட்சியைப் பார்க்க பின்புறம் எடுத்தது) எடுத்திருக்கிறேன்...அது போல குழந்தைகளின் பின் புறம் கொஞ்சம் லாங்க் ஷாட்....

    //எல்லோரும் அவரவர்கள் முகத்தை போட்டோவில் கொண்டு வர, பார்க்க ஆசைப்படும் போது முதுகைக் காண்பித்து நின்று, அவர்கள் பார்க்கும் காட்சிக்கு முக்கியத்துவம் தருவது மனத்தைக் கவர்ந்தது. //

    யெஸ் யெஸ்!! டிட்டோ.

    கீதா

    பதிலளிநீக்கு
  26. கடல் காட்சியின் கீழே உள்ளது போல எடுத்ததில்லை!!!!!!!!!!!!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா...  ஹா...  ஹா...   அவர்கள் முகத்தைக் காட்ட வேண்டாமா...  ஓவியரின் முயற்சி.

      நீக்கு
  27. நேரம் சரியில்லைனா ஒண்ணுமாத்தி ஒண்ணு சம்பந்தமில்லாமல் வருதுல்ல. படிக்கவே பயமுறுத்தும்படி இருக்கு

    பதிலளிநீக்கு
  28. 2018ல் இரண்டு வாரங்கள் இருமல்ல ரொம்ப கஷ்டப்பட்டுருக்கேன். அந்த நினைவு வந்தது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருமல் இல்லாதவர்கள் இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!

      நீக்கு
  29. இனிப்பில்லாக் கும்பலிலேயே நீங்கள் நீடித்து இருக்க ஆவல், பிரார்த்தனையும் கூட. விரைவில் குறைச்சுடுங்க. பல மாதங்கள் கழிச்சு எனக்கு இப்போத் தான் 120/150 என்னும் அளவில் வந்திருக்கு. அதுவே நீடிக்கணும்னு ஆவல். பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கீதா அக்கா.   கொலஸ்டராலுக்கு மாத்திரை சாப்பிட்டாலே சர்க்கரையும் குறையும்!

      நீக்கு
  30. இந்த இருமலுக்கும் எனக்கும் ஜன்மாந்திரத் தொடர்பு இருக்கு. திடீர்னு வரும்/போகும். எப்போனு சொல்ல முடியாது. இருமி, இருமி, இருமி, இருமி விலாவெல்லாம் இழுத்துப் பிடித்துக் கொண்டு வலிக்கும்.படுக்க முடியாது/உட்கார முடியாது. நான் இருமும் சப்தம் எதிர் வீடு/பக்கத்து வீடெல்லாம் கேட்கும்.நடு வயிற்றில் நரம்புகள் சுருட்டிக் கொண்டு நிரந்தரமாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அக்கா...  உங்களுக்கும் அந்தக் கஷ்டம் இருக்கா?  ஆனால் இருமல் மட்டும் என்றால்கூட சமாளித்து விடலாம், பொறுத்துக்க கொள்ளலாம்.  அந்த பின்விளைவு...

      நீக்கு
    2. அந்த இருமலை (2018 பிப்ரவரி) நினைத்தாலே கஷ்டம். ஸ்ரீராம் எழுதியது பயமாகத்தான் இருக்கு. விரைவில் சரியாகட்டும்

      நீக்கு
  31. மருத்துவர்கள் என்னனு கண்டு பிடித்தார்களா? ஈசிஜியில் இந்த அலங்காரத்தோடு இருப்பது எவ்வளவு கஷ்டம்? என்னவோ போங்க. என் வரையில் எம்/ஆர்/ஐ ஸ்கானுக்குத் தான் ரொம்பவே பயப்படுவேன். நல்ல வேளையா அதிலிருந்து தப்பிச்சுட்டேன். என்றாலும் ஸ்கான் எடுக்கிறேன் பேர்வழினு நேத்துக் கண்களை ஒரு வழி பண்ணிட்டாங்க. தலையில் லேசான வலி, கண்களிலும் ஒரு மாதிரியான வலினு இருக்கு. நாளைக்கு அறுவை சிகிச்சை/ இந்த அழகிலே ஜலதோஷமும் இருமலும் திடுதிப்புனு சொல்லிக்காமல் வந்திருக்கு. :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னும் இருமலுக்கான காரணத்தைக் கண்டுபிடிக்கவில்லை.  மருந்தும் சரியாய் தரவில்லை.  எம் ஆர் ஐ ஸ்கேனில் என்ன பயம்? 

      நாளை அறுவை சிகிச்சை நல்லபடி நடக்க பிரார்த்திக்கிறேன்.

      நீக்கு
    2. // நாளைக்கு அறுவை சிகிச்சை//

      அறுவை சிகிச்சை நல்லபடி நடப்பதற்கு நானும் பிரார்த்தனை
      செய்து கொள்கிறேன்...

      நலமுடன் வருக அக்கா..

      நீக்கு
    3. இன்றைய அறுவை சிகிச்சை நல்லபடியாக நடக்கும் ப்ரார்த்திக்கிறேன்.

      நீக்கு
    4. அறுவை சிகிச்சை வெற்றி என்று கீதா அக்கா பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

      நீக்கு
  32. நான் இருமலுக்கு தற்போது ஸ்பான்ஜியா 30 (spongia 30) என்ற ஹோமியோபதி மருந்து தான் சாப்பிடுகிறேன். 4 சொட்டு தண்ணீரில் விட்டு குடிக்க வேண்டும். 1mg இல் ஆன்லைனிலும் வாங்கலாம். ஹொமியோ ஆனதால் கெடுதல் ஒன்றும் செய்யாது. 
    Jayakumar

    பதிலளிநீக்கு
  33. Yes. Japan has made a dream reading machine and recording it to be screened. Uses MRI technology.

    https://www.sundayobserver.lk/2021/02/14/features/dream-reading-machine-japan

    பதிலளிநீக்கு
  34. இதோ, என் பங்குக்கு நானும் சில யோசனைகள்.

    P F T (Pulmonary Function Test ) எடுத்திருப்பார்கள் என நினைக்கிறேன். அதில் பிரச்சனை இல்லை என்றால் உங்கள் லங்ஸ் நன்றாக உள்ளது.

    ஒவ்வாமையை பொறுத்தவரை, பலவருடம் உடம்புக்கு பழகியதே திடீரென்று ஒவ்வாமை ஆகிவிடும். அந்த வழியில் கொஞ்சம் யோசிக்கவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  என் லங்ஸ் நன்றாக உள்ளது என்று நிரூபித்தாயிற்று.  ஒருவகையில் அது பெரும் மகிழ்வைக் கூட தந்தது.

      நீக்கு
  35. கிட்டத்தட்ட 15 வருடங்களாக நானும் உங்களைப் போன்று ஓயாத இருமலால் கஷ்ட்டப் பட்டுக் கொண்டிருந்தேன். எந்த ஸ்பெஷலிஸ்டாலும் என்ன காரணம் என்று கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது. 2007ல் ஸ்லீப் அப்னீயா டெஸ்ட் நடந்தது. அன்றிலிருந்து CPAP மெஷின் போட்டு தூங்க ஆரம்பித்ததும் இருமல் நின்று விட்டது. இருமலுக்கான சகல மருந்து மாத்திரைகள் இன்ஹேலர் இத்யாதிகளை நிறுத்தி 16 வருடம் ஆகி விட்டது.. இருமல் தொல்லை அடியோடு ஒழிந்து விட்டது....16 வருடமாக ஒரு முறை கூட இருமல் இல்லை. தெரிந்த மருத்துவ நண்பர் later on speculated that I must have been sleeping with wide open mouth thus making it easy for getting my throat constantly infected!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்வதுபோல வாய் திறந்து தூங்குவதுதான் வழக்கமாகிறது.  சீக்கிரம் குணமடைவேன் என்று நம்புகிறேன்.  நன்றி.

      நீக்கு
    2. இதுதான் உங்கள் இருமலுக்குக் காரணம் என்றால், full face mask அணிவதே சிறந்த தீர்வு. மூக்கில் கொக்கி போடுவதோ, பில்லர் டைப் மாஸ்க் அணிவதோ வாயால் சுவாசிப்பதை நிறுத்தாது.....இருமலையும் தீர்க்காது. Please consider using ResMed Quatro full face mask to eliminate the possibility of developing throat infections from breathing through open mouth .

      நீக்கு
  36. இருமல் எனக்கு டக்கென இறையருளால் நின்றது. 7 1/2 யின் முதல் பிரச்சனை. பணத்தைப்பற்றியோ எதைப்பற்றியும் bother பண்ணாமல் பஹ்ரைனில் இருந்து அப்போ திரும்பினேன். இப்போ அந்தக் கொடுமையான நேரத்தை மீண்டும் நினைக்கவைத்துவிட்டீர்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருமல் தொல்லை எனக்கு நிற்கும் நாளுக்காய்க் காத்திருக்கிறேன்.

      நீக்கு
  37. ....ஒரு முறை இவளை நோக்கியவன் பேரழகு மிக்க அவளை பார்த்ததே பெரும் பாவம் என்பது போன்று நீரினுள் ஒருமுறை முழுகி வெளிவந்தான். //

    அட! யாரப்பா இந்த எழுத்தாளர்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலச்சக்கரம் நரசிம்மா.  மயிலங்கை மங்கையின் மரகதப்பெட்டி கதையில்.

      நீக்கு
  38. இந்தப் பதிவில் ஜீவி சாரை ஏன் காணோம் என்று யோசிக்கிறேன்.  பானு அக்காவாவது எப்போதாவதுதான் வருவார்கள்...  கமலா அக்கா அவர்கள் மகன் ஊரிலிருந்து வந்திருக்கிறார்...

    பதிலளிநீக்கு
  39. காதி / நாட்டு மருந்து கடைகளில், " ஆடாதோடை பொடி " கிடைக்கும். அதை வாங்கி, காலை / மாலை இரு வேளைகளிலும் வெந்நீரில் கலந்து, வடிகட்டி, வேண்டுமானால் தேன் சேர்த்து, வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் இருமல் விரைவில் குணமாகும். மூன்று நாட்களிலேயே கடுமையான இருமல் கூட சரியாகிவிடும். அனுபவ மருந்து.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!