புதன், 15 பிப்ரவரி, 2023

மருத்துவமனையே பொதுவாக மனதில் பயத்தை உண்டுபண்ணுவதன் காரணம் என்ன? + சு நா மீ "சுபம்"

 

நெல்லைத்தமிழன் : 

புகை பிடிப்பது உடல் நலத்துக்கு கேடு, மது அருந்துதல் கேடுன்னு சொல்லி அரசு இவைகளின் விற்பனையை ஊக்கப்படுத்துவதுபோல, drugs போதை வஸ்துக்களுக்கும் ஏன் அனுமதி தருவதில்லை? கடை போட்டு விற்பதில்லை?

# ஏதோ இளைய தலைமுறை அடியோடு நாசமாக வேண்டாம் என்று நினைக்கிறார்கள். அதுவும்  உங்களுக்குப் பொறுக்கவில்லையா ?

எல்லா professionsக்குமே நெறி ethics உண்டு. அப்புறம் மருத்துவர் மாத்திரம் மருத்துவமனை மாத்திரம் நேர்மையா இருக்கணும்னு எதிர்பார்க்கிறாங்க?

& மருத்துவர்கள், மருத்துவமனைகள் நேர்மையாக இருப்பது என்றால் என்ன? கட்டணம் வசூலிப்பது குறித்து சொல்கிறீர்களா?   விளக்கம் தேவை. 

யாரும் விதவித ரசங்கள்-சாத்துமது ரெசிப்பி எழுதுவதில்லையே. தக்காளி ரசம் தவிர வேற பண்ணத் தெரிஞ்சிருக்காதோ?

# எல்லாருக்கும் ரசம் வைக்கத் தெரியும் என்கிற கருத்து மிகப் பரவலாக இருக்கிறது. என் அப்பா இதை ஒத்துக் கொண்டதில்லை.

தனி வீடு, அடுக்குமாடி குடியிருப்பு.. எது நல்லது? யாருக்கு? ஏன்?

# குழந்தைகள் இருக்கும் பெற்றோர்களுக்கு , அடுக்குமாடி குடியிருப்பு தான் நல்லது.  பாதுகாப்பு,  விளையாட சம வயது உள்ள குழந்தைகள் இவைதான் காரணம்.  இவற்றை  வெளியில் போய் தேடினால் சில ஏமாற்றங்கள், சிரமம், சில சமயம்  ஆபத்துகள் தவிர்க்க முடியாதவை.

வேலைகளில் இது உயர்வானது, இது சுமார் வேலை என்ற பாகுபாடு உண்டா?

# உண்டு. சம்பளம் , இதர வசதிகள், வேலைப்பளு இவற்றின் அடிப்படையில்.

இக்காலத்தில் காதல் மணம் நல்லதா இல்லை பெற்றோர் தேடிக் கொண்டுவந்து பிறகு மணம் புரிவது நல்லதா?

# முன் போல் பெற்றோர் தேடிக் கண்டு பிடிக்கும் அவகாசம் இப்போது இல்லாமல் போய்விட்டது. காதலும் பெண்கள் மட்டுமே முடிவு செய்வதாக இருப்பதாகத்  தோன்றுகிறது.

மருத்துவமனையே பொதுவாக மனதில் பயத்தை உண்டுபண்ணுவதன் காரணம் என்ன? இல்லை.. மற்றவர்களுக்கு அப்படி இல்லையா?

# என்ன பிரச்சினை ஆனாலும் உச்சியிலிருந்து தொடங்கி  பயப்படுவது, கவலை கொள்வது என் இயல்பும் கூட.

வாரிசு படம் 300 கோடி வசூலித்துவிட்டது என்று தயாரிப்பு நிறுவனம் சொன்னது. இப்போ அந்தத் தயாரிப்பாளர் நஷ்டத்தில் துண்டைப் போட்டுக்கொண்டுள்ளார்னு கேள்விப்படறேன். ஒருவேளை, இன்னொரு தயாரிப்பாளரும் போண்டியாகட்டும் என்பதற்காக இப்படியெல்லாம் பொய்யா வசூலைச் சொல்லி, அடுத்தவங்களை மாட்டிவிடறாங்களோ?

& பட வசூல் என்பதெல்லாம் விளம்பரத்திற்காக செய்யப்படும் ஜிகினா ஒட்டல் வேலைகள். அதை நம்புபவர்கள் அந்தந்த நடிகர்களின் விவரமறியா ரசிகர்கள். இதில் மற்ற தயாரிப்பாளர்களை போண்டி செய்யும் யுக்தி என்ன இருக்கிறது? 

= =   == 

சு நா மீ 12 : சுபம்; ஆனந்தம், ஆனந்தம், ஆனந்தமே! 

முந்தைய பகுதி சுட்டி : பகுதி 11 

மறுநாள் காலை, சுந்தரி சொன்னபடி, திருவாரூருக்கு தியாகராஜன் வீட்டுக்கு வந்து சேர்ந்தான் சேகர். 

வரவேற்பறையில் சேகரை உட்காரச் சொல்லி, அவனை தியாகராஜனுக்கும் நாகராஜுக்கும் அறிமுகம் செய்து வைத்தாள் சுந்தரி. 

சேகரைப் பார்த்து, அவனுக்கு வேலை கொடுப்பது பற்றி பேச, சுந்தரம் அங்கு வந்தார். 

சுந்தரம் : " உன்னை எங்கோ பார்த்தது போல இருக்கு. உன் பெயர் என்ன? "

சே : " சேகர் சார் "

சு : " என்ன படிப்பு ? " 

சே : " பி காம் " 

சு : " அப்பா பெயர் ? "

சே : " தெரியாது " 

சு : வியப்புடன் " அம்மா பெயர் ? "

சே : " தெரியாது " 

சு : " உனக்கு சேகர் என்று பெயர் வைத்தது யார்? "

சே : " பட்டாணி கடை பக்கிரிசாமி - என்னை வளர்த்தவர். " 

சு : " எனக்கு ஒன்றும் புரியவில்லை. விவரமாகச் சொல்லு.. " 

சே : " சார் - என்னை எடுத்து வளர்த்தவர் - பட்டாணி வியாபாரம் செய்துகொண்டிருந்த பக்கிரிசாமி என்பவர். அவர் என்னைப் பற்றி சொன்ன விவரங்களைச் சொல்கிறேன். சுனாமி பேரலை வந்த அன்று, நாகூர் கடற்கரையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அவருடைய தள்ளுவண்டி பேரலையில் காணாமல் போனதால் அதைத் தேடி அலைந்துகொண்டிருந்தாராம். தள்ளு வண்டியின் ஒரு சக்கரம் மட்டும் நாகூர் இரயில் நிலையத்தின் அருகே இருந்த ஒரு இரயில் பெட்டியின் அருகில் இருந்ததைப் பார்த்து அங்கே சென்று பார்த்தபொழுது ரயில் பெட்டியின் கதவு பக்கத்தில் மயங்கிக் கிடந்த என்னைப் பார்த்தாராம். மயக்கம் தெளிவித்து, நான் யார் என்ன என்ற விவரங்கள் கேட்டபோது எனக்கு எதுவுமே தெரியவில்லை, தலையில் அடிபட்டதால் சுய விவரங்கள் எதுவுமே எனக்கு ஞாபகம் இல்லை என்று அவர் சொன்னார். பிறகு அவர் என்னிடம் ' தம்பீ - என்னுடைய பட்டாணி வண்டியை  சுனாமி அடித்துச் சென்றுவிட்டது. நீ போட்டிருக்கும் மோதிரம், சங்கிலி எல்லாம் எனக்குத் தருகிறாயா - நான் நாகையில் கடை ஒன்று வாங்கி, வியாபாரம் செய்கிறேன். எனக்கு சொந்தம் பந்தம் எதுவும் இல்லை. உன்னை வளர்க்கிறேன்' என்று சொன்னாராம். நான் உடனே அதற்கு சம்மதம் சொன்னேனாம். இதை எல்லாம் அடிக்கடி அவர் என்னிடம் சொல்லியுள்ளார். 

சு : " இப்போ அவர் எங்கே ? "

சே : " அவர் ஐந்து வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். என்னுடைய படிப்புக்கு சுசீலாதான் மீகாம் கம்பெனியிலிருந்து வாங்கி, பண உதவி செய்தாள். " 

சு : " தம்பீ - உன்னுடைய வலது முழங்காலின் பின் பக்கம் பாம்பு வடிவ மச்சம் ஒன்று இருக்கிறதா? "

சே : " அ .. ஆமாம்! உங்களுக்கு எப்படித் தெரியும்? "

சு : " எப்படித் தெரியுமாவா ! உன்னுடைய ஜாதகமே என்னிடம் இருக்கு. உனக்கு மீகாம் கம்பெனியில் நான் வேலை கொடுப்பதைவிட - இனிமேல் மீகாம் கம்பெனியில் நீதான் எல்லோருக்கும் வேலை கொடுக்கவேண்டும். நீதான் சிறு வயதில் காணாமல் போன என் பையன் நாகேஸ்வரன்"

இப்படிச் சொல்லிவிட்டு, சுந்தரம், சமையல் அறையில் வேலையாக இருந்த மீராவை அழைத்தார். " மீரா - இங்கே வா. நாம் இருவரும் வளர்த்த பையனை இங்கே கொண்டுவந்து தியாகராஜன் சாரிடம் சேர்த்த முகூர்த்தம் - நாம் பெற்ற நம் பையன் நமக்குக் கிடைத்துவிட்டான்" 

நடந்தது எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த ஒவ்வொருவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி. 

சுந்தரம் : " நாங்கள் இனி சந்தோஷமாக எங்கள் பையனை அழைத்துக்கொண்டு சிங்கப்பூர் செல்கிறோம். "

சே / நாகே : " அப்பா - அது வந்து . . . "

சுந்தரி : " மாமா - அது வந்து . . . "

சுந்தரம் : " ஓ - புரிகிறது. எங்கள் பையனையும் மருமகளையும் அழைத்துக்கொண்டு சிங்கப்பூர் செல்கிறோம் " 

தியாகராஜன் : " நல்லா இருக்குது கதை. இப்போதான் என்னுடைய பெண், பையன் எல்லோரும் என்னிடம் வந்து சேர்ந்திருக்கிறார்கள். நீங்கள் உடனே என்னுடைய பெண்ணை மருமகள் ஆக்கி கூப்பிட்டுச் சென்றுவிட்டால் நான் என்ன செய்வது. கவலை வேண்டாம். இந்த இடத்திலேயே நல்ல பெரிய வீடாகக் கட்டுகிறேன். நாம் எல்லோருமே இங்கே ஒன்றாகச் சேர்ந்து வாழ்வோம். 

சுந்தரம் : " அதுவும் நல்ல யோசனைதான். இனி மீகாம் தலைமை அலுவலகம் இதுதான். ஏற்றுமதி விவகாரங்களை, நாங்கள் வளர்த்த நாகராஜும், இறக்குமதி சம்பந்தப்பட்ட விஷயங்களை எங்கள் நாகேஸ்வரனும் பார்த்துக்கொள்ளட்டும். சுந்தரி டிரான்ஸ்போர்ட்ஸ் என்று ஒரு புதிய பகுதி தொடங்குகிறேன் - சுந்தரி அந்தப் பகுதியைப் பார்த்துக்கொள்ளட்டும். துறைமுகத்துக்கு வருகின்ற ஏற்றுமதி சரக்குகள், வந்து இறங்குகின்ற இறக்குமதி சரக்குகள் எல்லாவற்றையும் உரிய இடத்திற்குக் கொண்டு சேர்க்கின்ற லாரிகள் எல்லாம் சுந்தரி டிரான்ஸ்போர்ட்ஸ் வண்டிகளாக இருக்கும். மீகாம் மற்றும் சுந்தரி டிரான்ஸ்போர்ட்ஸில் வேலை செய்பவர்கள் எல்லோருக்கும் பயன்படுகின்ற கேண்டீன் மேனேஜ்மெண்ட் முழுவதும் மீனாக்ஷி அம்மாள் பார்த்துக்கொள்ளட்டும். " 

சுந்தரி : : " மாமா - சரி. நீங்கள் சொன்னது போலவே நாங்கள் ஒவ்வொருவரும் நீங்கள் சொல்லும் பகுதிகளைப் பார்த்துககொள்கிறோம். நீங்கள் எல்லோரும் என்ன செய்யப்போகிறீர்கள்? "

தியாகராஜன், சுந்தரம், மீரா, தயாளன், சுகந்தி எல்லோரும் : " நாங்கள் இனிமேல் எங்களுக்குப் பிறக்கப் போகும் பேரக் குழந்தைகளைப் பார்த்துக்கொள்வோம்! " 

=  =  ==  


இது என்னங்க ? 

'கதை முடிந்தது; கத்தரிக்காய் காய்த்தது' என்று symbolic ஆக சொல்கிறார் கதாசிரியர். 

அது யாருங்க ? 


= = = = = 

59 கருத்துகள்:

  1. முதல் கேள்விக்கு இன்னும் சில ஆண்டுகளில் விடை கிடைக்கும்.

    அதாவது போதை வஸ்துக்கள் பெட்டிக்கடைகளில் கூட விலைக்கு கிடைக்கலாம்.

    பதிலளிநீக்கு
  2. மருத,துவர்கள், மருத்துவமனைகள் நேர்மையாக இருப்பது - ஐசியூ உபயோகம், டெஸ்டுகள் எடுக்கச் சொல்வதில், டிஸ்சார்ஜ் பற்றி முடிவெடுப்பதில். - இன்னும் ஆள் வரலை, இன்னொரு நாள் ஐசியுல வச்சுக்கலாம், பெட் எம்ப்டியா இருக்கு இன்னும் ரெண்டு நாள் இருக்கட்டும், என்பதுபோன்று

    பதிலளிநீக்கு
  3. உங்களுக்குத் தெரியுமா? நாம் தேர்ந்தெடுக்கும் அறையைப் பொறுத்து, அனைத்து மருத்துவச் செலவுகளும் மாறும் என. பொது வார்டு எடுத்தால் ஒரு சர்ஜரி 100 ரூ என்றால், செமி ஷேரிங்னீ, 150, தனி அறைனா 200 என்பது போல... இது அனைத்துச் செலவுகளிலும் எதிரொலிக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹும்! என்ன செய்வது? உயிர் காக்கும் தொழில் அன்றோ!

      நீக்கு
    2. இது உண்மையிலேயே நல்ல விஷயம். பொது வார்டில் சர்ஜரிக்கு அப்புறம் வந்தால் சர்ஜரி கட்டணம் குறைவு என்பது ஏழைகளுக்கு பயனளிக்கும் ஒன்று. நான்லாம் விஐபி.. சர்ஜரிக்கு அப்புறம் சூப்பர் டீலக்ஸ் ரூம் என்றால், என்னால் கட்ட முடியும் என்றாகிறது. எனவே அதிக சார்ஜ்!

      நீக்கு
    3. 📷
      மருத்துவக்காப்பீடு - பலர் அறியாத விஷயம்
      -------------------------------------------------------------------------------------
      சமீபத்தில் என் நண்பர் ஒருவர் அறுவைசிகிச்சைக்காக ஒரு பெரிய மருத்துவமனையில் சேர்ந்தார். அவர் 5 நாட்கள் ஆசுப்த்திரியில் ' இன் பேஷண்ட்' டாக இருக்க வேண்டிய சூழ்னிலை. சில லட்சங்களுக்கு மருத்துவக் காப்பீடு எடுத்திருந்தார்.

      அவருக்கு காப்பீடு நிறுவனத்தால் அனுமதிக்கப்பட்ட அறைக் கட்டணம் ( ரூம் ரெண்ட்) 4500 ரூபாய் ஆகும். ஆனால் அந்த கட்டணத்துக்கு அந்த ஆசுபத்திரியில் இரு நோயாளிகள் ஒரே அறையைப் பகிர்ந்து கொள்ளும் ( ட்வின் ஷேரிங்க்) நிலை இருந்தது. அதை அவ்வளவாக விரும்பாத நண்பர், ரூ 6000 க்கு தனி அறை எடுத்து தங்கி சிகிச்சை பெற்றார். ஐந்து நாட்களுக்கு கணக்கு போட்டால் கையை விட்டு 7500 ரூபாய் மட்டும் தர வேண்டியிருக்கும் என்று கணக்கு போட்டார்.

      ஆசுபத்திரி பில் மூன்று லட்ச ரூபாய்க்கு வ்ந்தபோது அதில் ரூ 7500 போக பாக்கி பணத்தை இன்சுரன்ஸ் கம்பெனி ஆசுபத்திரிக்கு தந்து செட்டில் செய்யும் என்று எதிர்பார்த்தார். ஆனால் அது தப்புக்கணக்காகிவிட்டது.

      காரணம் இன்சுரன்ஸ் கம்பெனி பெரும் தொகையை ( 60000 ரூ) கழித்துக் கொண்டு ரூ 240000 தான் அளித்ததாம். அதிர்ச்சியடைந்த அவர் விவரம் கேட்டபோது அறை வாடகைக்கு ஏற்பத்தான் இதர சேவைகளுக்கும் ஆசுபத்திரி கட்டணம் வசூலிக்கும் என்று தெரிவித்தார்களாம். அதாவது அதிக வாடகை உள்ள அறையில் தங்கினால், மருத்துவர் கட்டணம், அறுவை சிகிச்சைக்கான கட்டணம், செவிலியர் கட்டனம் என்று எல்லாம் அதற்கெற்றாற்போல அதிகமாக வசூலிக்கப்படும்.

      அதாவது அனுமதிக்கப்பட்ட அறை கட்டணத்தைவிட் அதிக கட்டணத்தில் அறை எடுத்தால், அதே விகிதாசாரப்படி மருத்துவ செலவும் அதிகம் ஆகும் ....

      ஆனால் அந்த அதிகப்படி மருத்துவ செலவை இன்சுரன்ஸ் கம்பெனி ஏற்காமல் மறுத்துவிடும். ஏனெனில் ஒவ்வொரு சிகிச்சைக்கும் அந்த் கம்பெனி ஒரு தொகையை வரையறை செய்து வைத்திருக்கும். அதை சம்பந்தப்பட்ட ஆசுபத்திரிகளுக்கும் தெரிவித்து ஒப்புதல் பெற்றிருக்கும். ஆகையால் . அதற்கு மேல் ஆசுபத்திரி உபரி கட்டணம் வசூலித்தால் அதை இன்சுரன்ஸ் கம்பெனி ஏற்காது.

      எனவே மருத்துவக் காப்பீடு உடையவர்கள் மருத்துவமனையில் இன் பேஷண்டாக தங்கி சிகிச்சை எடுக்கையில் இன்சுரன்ஸ் கமபெனி அனுமதிக்கும் அறைக்கட்டணத்துக்கு மிகாமல் அறை எடுத்துத் தங்குதல் நல்லது. அதிக கட்டனத்தில் அறை எடுத்தால் மிகுந்த பண இழப்பை சந்திக்க நேரிடும். இது அனுபவம் கற்றுத் தந்த கசப்பான பாடம்.

      நீக்கு
  4. சுவையான ரசம் வைக்கத் தெரிந்தவர் தான் சமையல் செய்வதில் முதன்மையானவர் என்று கேள்விப்பட்டதுண்டு...!

    பதிலளிநீக்கு
  5. இந்த நாளும் இனிய நாளே..

    எல்லாருக்கும் இறைவன் நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  6. drugs போதை வஸ்துக்களுக்கும் ஏன் அனுமதி தருவதில்லை? கடை போட்டு விற்பதில்லை?//

    அரசு எதுக்கு அனுமதிக்க வேண்டும்? அனுமதி இல்லாமலே வர்த்தகம் ஜோராக நடக்கிறதே!!! போதைப் பொருள்னா குட்கா உட்பட....சிகரட்டே (முன்ன் எல்லாம் ஸ்டைலா பைப் ஊதுவாங்களே) இப்ப மினி, எலக்ட்ரானிக் அப்படினு பென் ட்ரைவ் மாதிரி வந்திருக்கு. அதை வாயில வைச்சு உறிஞ்சராங்க, மூக்கு வழியா புகை வருது....உள்ள என்ன வஸ்து இருக்குன்னு யாருக்குத் தெரியும்?!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /மினி, எலக்ட்ரானிக் அப்படினு பென் ட்ரைவ்/ - அடி ஆத்தீ... லேடஸ்டா என்ன என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்கணும் சரிதான். ஆனால் இவங்க பி.எச்.டி வாங்குமளவு இந்த விஷயங்களைத் தெரிஞ்சுவச்சிருக்காங்களே.... ஒருவேளை ரீடெயில் ஷாப் ஏதேனும் இவர் வச்சிருக்காரோ?

      நீக்கு
    2. ஹாஹாஹா....நினைச்சேன் எங்கடா ஆளைக் காணலைன்னு...அப்புறம்தான் நினைவு வந்துச்சு ஓஹ் இங்கும் கமென்ட் மாடரேஷன் இருக்குதேன்னு....

      நாலும் நல்லா தெரிஞ்சு வைச்சுக்கணுமாக்கும் நெல்லை. அப்புறம் பென் ட்ரைவ்னு நினைச்சு.....ஹிஹிஹி...அதுமட்டுமில்ல இடைல ஜூஸ்னு அதுல கூடக் கலந்து விக்கறாங்களாமே காலேஜ் பசங்களை வலையில சிக்க வைக்கறதுக்குன்னே....அப்படி பென் ட்ரைவ்னு ஏன் வராது....சமூகம் அந்த அளவுக்கு இருக்கு...சட்டமும் கண்ணை மூடிக்கிட்டு இருக்குன்னு சொல்றேன்...

      கீதா

      நீக்கு
  7. யாரும் விதவித ரசங்கள்-சாத்துமது ரெசிப்பி எழுதுவதில்லையே. தக்காளி ரசம் தவிர வேற பண்ணத் தெரிஞ்சிருக்காதோ?//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் (இங்கு வரும் எழுதும் பெண்கள்கிட்ட யாரைப் பார்த்து என்ன கேள்வி கேட்டுட்டீங்க நெல்லை!!! இங்க எல்லாருக்கும் பல வித ரசம் வைக்கத் தெரியுமாக்கும்....எழுதறதில்லை...கீதாக்கா புக் ல இருக்குமே...அவங்க எழுதியிருப்பாங்க,

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எழுதுபவர்கள், எழுதி அனுப்புங்கள். வெளியிட காத்திருக்கிறோம்!

      நீக்கு
    2. இந்தப் பெண்களால் உபயோகமில்லை. அதனால் நானே ஒவ்வொன்றாக எழுதி அனுப்புகிறேன். அதுல வந்து வேரியேஷன்ஸ் சொல்றேன்னு நினைச்சுக்கிட்டு, அடுத்தடுத்து வரும் பதிவுக்கு ஆப்பு வைக்காமல் இருந்தால் சரி. என்ன சொல்றீங்க?

      நீக்கு
    3. அனுப்புங்க அனுப்புங்க நெல்லை....ஹப்பா நாங்க ஃப்ரீயா இருக்கால்மே!!!! ஹிஹிஹிஹி

      //அதுல வந்து வேரியேஷன்ஸ் சொல்றேன்னு நினைச்சுக்கிட்டு, அடுத்தடுத்து வரும் பதிவுக்கு ஆப்பு வைக்காமல் இருந்தால் சரி. //

      வேரியேஷன்ஸ் எதுவுமில்லை..அதுவே ஒரு ரசமா கூட இருக்குமாக்கும்!!!!

      கீதா

      நீக்கு
  8. நம்ம வீட்டு ரசம் லிஸ்ட் எடுத்தாலே 30க்கும் மேல வருமாக்கும்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்க அப்பாட்ட கேட்டேன். அவர் சொல்றார், கீதா ஒரு நாள் வைக்கும் ரசம் போல அடுத்த நாள் வைக்கத் தெரியாது. அதனால் என்னைப் பொருத்தவரைல ஒரு வருஷத்துல 365 ரகமா ரசம் வைக்கத் தெரியும்னு சொல்றார். உண்மையா கீதா ரங்கன்(க்கா)?

      நீக்கு
    2. உண்மையா கீதா ரங்கன்(க்கா)? //

      ஹாஹாஹாஹா நெல்லை...உண்மையேதான்.நீங்க வர வர இப்பல்லாம் என்னவோ எங்க வீடும் உங்க வீடும் ஒட்டினாப்ல கையை நீட்டினா எங்க வீட்டுக் கதவு... டெய்லி எக்சேஞ்ச் மேளா நடக்கறா மாதிரி உண்மைய இப்படிப் புட்டு புட்டு வைக்கறீங்க!!! அது சரி எங்கப்பாக்கு ஒழுங்கா காது கேட்டுச்சோ?!!!!!!!!!!!!!

      கீதா

      நீக்கு
  9. அடுக்குமாடி என்றால் குழந்தைகளுக்கு நல்லது. விலையாட நட்புகள் கிடைக்கும். அதுவும் தோட்டம் விளையாடும் இடம் இருந்தால் நலல்து. ஆனால் இதில் பாதுகாப்பு என்பது முழுமை என்று சொல்ல முடியாது. குழந்தைகள் விளையாடச் சென்றாலும் பெற்றோரின் கவனம் தேவை. சமீபத்திய நிகழ்வுகள் அப்படித்தான் சொல்கின்றன.

    தனி வீடு என்றால் குழந்தைகளை நாம் அழைத்துச் செல்ல வேண்டும் ஒவ்வொன்றிற்கும்....

    இரண்டிலும் சாதக பாதகங்கள் உண்டு

    கீதா

    பதிலளிநீக்கு
  10. காதல் மணமாக இருந்தால் என்ன பெற்றோர் பார்த்து நடத்தி வைப்பதாக இருந்தால் என்ன, அதுவா முக்கியம்? எந்தவிதமா இருந்தாலும் புட்டுக்கலையா? பொண்ணும் பையனும் புரிதலோடு சந்தோஷமா இருக்கறதுதானே முக்கியம். நாமளா குடித்தனம் நடத்தப் போறோம்? அநாவசியமாகப் பெற்றோரின் தலையீடு இல்லாமல் இருந்தாலே பாதி சக்சஸ்.

    கீதா

    பதிலளிநீக்கு
  11. மருத்துவமனையே பொதுவாக மனதில் பயத்தை உண்டுபண்ணுவதன் காரணம் என்ன? இல்லை.. மற்றவர்களுக்கு அப்படி இல்லையா?//

    பயம் காரணம் முதலில் செலவு. அடுத்து ஒழுங்கான டயக்னஸிஸா, பரிசோதனைகள் ஒழுங்காகச் செய்யப்படுமா? என்பதானவை....முதலில் ஒரு உடல் பிரச்சனையின் ஆரம்பத்திலோ அல்லது பொதுவாகவே நம்மை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நம்மால முடிஞ்சதை நாம் பின்பற்றலாம், நல்ல பலன் தரும் இயற்கை வைத்தியம், கை மருந்துகள், ஆயுர்வேத சித்தா மூலிகை என்று நமக்கு நம்பிக்கை இல்லை காரணம் அவை வெளிப்படையாக இல்லை. அலோபதி வெளிப்படையாக இருப்பதால் உடனடி நிவாரணம் என்று அதை நாடுகிறோம். ஆனால் உடனடி நிவாரணம் என்பது நமக்குச் செலவு கூடுதலாக்குமே அல்லாமல், மருந்து கூடிக் கொண்டே போகும்.

    நிரந்தரத் தீர்வு (ஒரு சில தவிர) என்பதை நாம் யோசிப்பதில்லை. அதற்காகக் கஷ்டப்பட விரும்புவதும் இல்லை. மாத்திரை என்றால் முழுங்கிவிடலாமே ஈசியா....உதாரணம் - சர்க்கரை வியாதி - இதுக்காக டயட் எல்லாம் பின்பற்றணுமே அதெல்லாம் கஷ்டம்னு மாத்திரையை முழுங்கிவிடுகிறோம்..அதுவே பழக்கமாகி இன்சுலின் வரை போகிறது...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விரிவான கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
    2. //சர்க்கரை வியாதி - இதுக்காக டயட் எல்லாம் பின்பற்றணுமே அதெல்லாம் கஷ்டம்னு// - அப்படி இல்லை. ஒவ்வொருவர் வீட்டுக்குப் போகும்போது, ஸ்வீட் பண்ணறதா இருந்தால் டயட் ஸ்வீட் பண்ணுங்க என்று சொல்லமுடியாதில்லையா? அதனால்தான் எக்ஸ்ட்ரா மாத்திரை முழுங்க வேண்டியிருக்கு.

      நீக்கு
    3. நெல்லை உண்மையா....நான் என்னை நானே பரிசோதித்துக்கொண்டேன். என் மகன் சொன்னான் மாத்திரை இல்லாம முடியும்னு...நானும் மாத்திரை சாப்பிடாமல் சரியான டயட், எக்ஸர்சைஸ் எல்லாம் 10 நாட்கள் - ஆனால் காலையில் வெந்தயம், அப்புறம் நிலவேம்பு என்று சாப்பிட்டு டெஸ்ட் பண்ணினேன் நீங்க நம்பமாட்டீங்க....எனக்கு சர்க்கரை வியாதியா? யாரு சொன்னான்னு கேட்கும் லெவல்.

      ஆனால் வெளியிடங்கள் செல்லும் போது ஸ்வீட் சாப்பிடாவிட்டாலும் டயட் ஃபாலோ செய்வது கொஞ்சம் கஷ்டம். விசேஷங்களுக்குப் போனா கூடுதலா வொர்க்அவுட் செய்ய வேண்டும் அது முடியாமல் போகுதே....அதுக்காக மாத்திரையை தினமும் சாப்பிட வேண்டியிருக்கிறது. யார் வீட்டுக்கும் போகும் போது அவங்களுக்குக் கஷ்டம் தரக் கூடாதில்லையா,,,

      கீதா

      நீக்கு
  12. மருத்துவம் வணிகமயமாகி விட்ட காலம் இது.
    (சென்ற கருத்துருவில் காலாம் என்று வந்துவிட்டது)

    பதிலளிநீக்கு
  13. sv ரங்காராவ், சுப்பையா, நாகையா, mv ராஜம்மா
    ss ராஜேந்திரன், கல்யாண்குமார், தேவிகா போன்ற கலைஞர்கள் பலர் நடித்த

    சுப சுநாமீ அல்லது யார் பிள்ளை

    திரைப்படம் அருமை..

    பதிலளிநீக்கு
  14. கத்தரிக்காய் படத்தை போட்டு முடித்தாகிவிட்டது. :)

    சிங்கப்பூர் செல்லாமல் இங்கேயே கூட்டுக் குடும்பமாக வாழ்வது (பாரம்பரியத்தை மீறாத கதாசிரியர் ) :)
    சிறப்பான முடிவு.

    பதிலளிநீக்கு
  15. //வேலைப்பளு இவற்றின் அடிப்படையில்.// இப்படீன்னாக்க என்ன? டாய்லெட் போன்றவற்றைச் சுத்தம் செய்ய வருபவருக்கு வேலைப்பளு அதிகம், சம்பளம் குறைவு. அதற்காக அது சுமார் வேலைனு சொல்லமுடியுமா? இல்லை வீடு பெருக்குவது சுமார் வேலையா?

    பதிலளிநீக்கு
  16. /மற்ற தயாரிப்பாளர்களை போண்டி செய்யும் யுக்தி// - அடேயப்பா.. இந்த டைரக்டர் டைரக்ட் செய்த படம் சூப்பர் வசூல் வசூலிச்சுருக்கிறதே.. இந்த நடிகர் இவ்வளவு டாப்பா? என்று நினைத்து ஆழம் தெரியாமல் காலை விட்டு முழுகிப்போகும் தயாரிப்பாளர்கள்தான் பாவம்

    பதிலளிநீக்கு
  17. நான் நினைச்சேன் சேகர் தான் தொலைந்து போன பையன்.,....எழுதுவது கௌ அண்ணா எல்லாம் அப்பப்ப சொல்லிக் கொண்டே வந்தேன்....

    சுபம்!!!! திரைப்படம் பார்த்த நினைவு...அதுவும் கறுப்பு வெள்ளை!!! ஏனென்றால் உரையாடல்கள் கூட உரையாடல் தமிழில் இல்லாமல் நல்ல தமிழில்...

    கீதா

    பதிலளிநீக்கு
  18. திரைப்படம் பார்த்த நினைவு - திரைப்படம் பார்த்தது போன்று....திரைப்படக் கதை போன்று...

    கீதா

    பதிலளிநீக்கு
  19. சென்ற புதன் அன்று நான் அனுப்பிய கேள்விகளில் ஒன்று கூட வரவில்லை.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ ? கவனிக்கவில்லை. மன்னிக்கவும். அடுத்த வாரம் பதில் அளிக்கிறோம்.

      நீக்கு
  20. வேலைகளில் இது உயர்வானது, இது சுமார் வேலை என்ற பாகுபாடு உண்டா?//

    என் கருத்து எந்த வேலையும் உயர்வானது சுமார், தாழ்ந்த வேலை என்றில்லி. அது கழிவறை சுத்தம் செய்வதாக இருந்தாலும். என் தனிப்பட்டக் கருத்து நாம் உதவிக்கு ஆள் வைத்திருந்தாலும் கழிவறையை நாமேதான் சுத்தம் செய்ய வேண்டும் என்பது என் தனிப்பட்டக் கருத்து. விதிவிலக்குகள் வயதானோர் தனியாக இருந்தால்....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், உண்மைதான். எந்த வேலையும் உயர்வோ வாழ்வோ கிடையாது.

      நீக்கு
  21. கேள்விகளும் பதில்களும் அருமை.

    //மருத்துவமனையே பொதுவாக மனதில் பயத்தை உண்டுபண்ணுவதன் காரணம் என்ன? இல்லை.. மற்றவர்களுக்கு அப்படி இல்லையா?//

    எல்லோருக்கும் மருத்துவமனை போக பயம் தான். அந்த டெஸ்ட், இந்த டெஸ்ட் என்று நடந்து போனவர்களை படுக்க வைத்து விடுவார்கள் என்று. என் மாமியார் மருத்துவரிடம் வரவே மாட்டார்கள், கை வைத்தியமே செய்து கொள்வார்கள்.
    இறுதி காலத்தில் மருத்துவமனைக்கு நடந்து போய் உடம்பை காட்ட போனவர்கள் திரும்பி வரவே இல்லை. அவர்கள் எண்ணம் போலவே ஆச்சு.
    என் கணவர் மருத்துவமனையில் படுத்து கொள்ள கூடாது என்று சொல்லி கொண்டே இருப்பார்கள், அவர்களும் மருத்துவமனைக்கு போகாமல் இறைவனடி சேர்ந்து விட்டார்கள்.

    மருத்துவர்களிடம் நம்பிக்கை , அவர் கொடுக்கும் மருந்தில் நம்பிக்கை இருந்தால்தான் மருந்து வேலை செய்யும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. / மருத்துவர்களிடம் நம்பிக்கை , அவர் கொடுக்கும் மருந்தில் நம்பிக்கை இருந்தால்தான் மருந்து வேலை செய்யும்./ சரியாகச் சொன்னீர்கள்.

      நீக்கு
  22. கதை நன்றாக இருந்தது.

    பட்டாணி கடை பக்கிரிசாமி நல்ல உள்ளம் படைத்தவர் குழந்தையின் நகையை திருடி கொண்டு குழந்தையை அப்போ என்று விட்டு விடாமல் வளர்த்து இருக்கிறார்.

    //மீரா - இங்கே வா. நாம் இருவரும் வளர்த்த பையனை இங்கே கொண்டுவந்து தியாகராஜன் சாரிடம் சேர்த்த முகூர்த்தம் - நாம் பெற்ற நம் பையன் நமக்குக் கிடைத்துவிட்டான்" //

    சுந்தரமும், மீராவும் நல்லவர்கள் அவர்களுக்கு நல்லதே நடந்து இருக்கிறது.

    கதை முழுவதும் ஒருவருக்கு ஒருவர் உதவும் நல்ல உள்ளங்களை பார்க்க முடிகிறது.

    கதை முடிந்தவுடன் கத்திரிக்காய் காய்த்தது அருமை.
    கதை ஆசிரியருக்கு வாழ்த்துகள், பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!