31.7.26

அருகினிலே தழை இருக்க ஆகாயத்தில் தாவாதே..

கடவுள் மனிதனைப் படைத்தார் என்பது ஒரு கட்சி.  இல்லையில்லை பெருவெடிப்பில் மண்ணாகி, மரமாகி, புல்லாகி, பூண்டாகி, மழையாகி, நீராகி, ஒரு செல் உயிராகி, ஒரு செல் மியூட்டேஷனில் பல செல் உயிரியாகி என்று வளர்ந்ததுதான் மனித இனம் என்பது இன்னொரு கட்சி.  அப்படி வளர வச்சதே சாமிதாண்டா என்கிறது இந்தக் கட்சி.  சரி நைனா சாமிதான் உலகத்தைப் படைத்தார் என்றால் அதுவரை சாமி எங்கே இருந்தார் எங்கே நின்று கொண்டு உலகை, ப்ரபஞ்சத்தைப் படைத்தார் என்று கேக்கிறது விஞ்ஞா.

விஞ்ஞானம் கடவுளை மறுக்கிறது.  மெய்ஞ்ஞானம் இருக்கிறார் என்கிறது.  இரண்டுக்கும் இடையில் என் அஞ்ஞானம் விழிக்கிறது!  கடவுள் மனிதனைக்க் படைத்தானா, இல்லை மனிதன் கடவுளை படைத்தானா என்பது இருக்கட்டும்.  கடவுள் என்பதை நான் ஒத்துக்கொள்ள மாட்டேன்.  ஆனால் ஒரு சக்தி இருக்கிறது.  ஒப்புயர்வற்ற இயற்கைதான் அது என்பார் என் நண்பர் அமைதி அப்பா என்று அழைக்கப்படும் வெங்கடாச்சலம்.

ஆக, நம்மை மீறிய சக்தி ஒன்று இருக்கிறது என்பது புலனாகிறது.  அதை கடவுள், சாமி ஆண்டவன் என்று அழைக்கும் கட்சி நம் கட்சி.

என்னடா ஒரே தத்துவார்த்தமான போகுதேன்னு கவலையாய் தாடியைச் ச்சே...   தாடையைச் சொரிகிறீர்களா?  என்னாச்சு நம் ஸ்ரீராமுக்கு..  போன பதிவு வரை நல்லாத்தானே இருந்தான்னு மனசுக்குள் ஒரு கவலை எழுகிறதா?  கவலைப்படேல்...  தத்துவதிலிருந்து தடால்னு கீழே வந்துடறேன்.

கேளடி கண்மணி படத்துல ராதிகாவுக்கு பூர்ணமும் ஸ்ரீவித்யாவும் அப்பாம்மா.  ரெண்டு பெரும் வாய்பேச முடியாதவர்கள்.  அவங்க கிட்ட ஜாடைல பேசிப் பேசி ராதிகா கோவிலுக்கு வந்து சாமி கிட்டயும் ஜாடைலயே பேசுவாங்க.  அதை SPB பார்த்து வியப்பார்.

தீவார் படத்தில் அமிதாப்பாகட்டும், கெளரவம் படத்தில் பெரிய சிவாஜியாகட்டும், ரெண்டு பேருக்கும் கடவுள் நம்பிக்கை கிடையாதுன்னு காட்டுவாங்க..   கடைசி காட்சில சாமி கிட்ட வந்து "இது வரைக்கும் நான் உன்கிட்ட வந்ததில்லை..  வந்து எனக்கு இதைக்கொடு, அதைக்கொடுன்னு கேட்டதில்லை...  இப்போ ஒண்ணே ஒண்ணு கேக்கறேன்.."னுட்டு உணர்ச்சி பொங்க வசனம் பேசுவாங்க..

அட கோவிலுக்கு போய்ப்பாருங்க..   ஆயிரம் பேர் கோவிலுக்கு வந்தாலும் அதில் அஞ்சுபேர்தான்  (யார் அந்த அஞ்சுபேர்? னு நகைச்சுவையா கேக்க நினைக்கறவங்க தன் தலையில் தானே ஒரு கொட்டு வைத்துக் கொள்ளவும்)  வேண்டுதல் எதுவும் இல்லாம சும்மா தரிசனத்துக்கு வருவாங்க..  என்னை மாதிரி! 

வேண்டுதல் வேண்டாதான் இலானடி சேர்ந்தார் வகை.  ஆனால் அப்படியெல்லாம் இடும்பை எல்லாம் இல்லாமலில்லை என்பது ஒரு சோகமான கேள்விக்குறி.

மற்ற பேர்களை கொஞ்சம் கவனித்துப் பார்த்திருக்கிறீர்களா?  சன்னிதானத்தில் நின்று ஏகப்பட்ட கோரிக்கைகள் வைப்பார்கள்.  அதுவும் பின்னால் நின்றால் கடவுளுக்கு காதில் விழுமோ விழாதோ என்று முண்டியடித்து முன்னால் வந்து நின்று புலம்புவார்கள்..  அட, அதுக்கப்புறமும் அவர் இதை ஞாபகம் வச்சுப்பாரோ மாட்டாரோன்னு சீட்டுல எழுதி தொங்க விட்டுட்டு போவாங்க...  சரி, காயம்பட்ட மனசுக்கு ஏதோ வடிகால்..  ஆறுதல்!   அதை விட்டுட்டு இன்னிக்கி சொல்ல வந்ததை சொல்றேன்..

ஆண்டவன் முகத்தை பார்க்கணும் அவனிடம் 'ஒண்ணே ஒண்ணு கேட்கணும்' என்று சொல்லிவிட்டு,, "# ஏண்டா சாமி என்னைப் படைச்சே? # என்னைப் படைக்கையில் என்ன நினைச்சே?" என்று இரண்டு கேட்டால் அவன் என்ன சொல்வான்? ,

ஆண்டவனிடம் இப்படி நிறைய கோரிக்கைகள் உண்டு!
"ஆண்டவனே நீ இருந்தால் சொல்லு பிறர் அறிவை எல்லாம் கெடுக்குதடா கள்ளு' என்று ஒரு பாடல் உண்டு.
"கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்... அவன் காதலித்து வேதனையில் வாட வேண்டும்" போன்ற சில பாடல்களும் உண்டு.
(வேதனையில் சாக வேண்டும் என்று எழுதியிருந்தாராம் கவிஞர். டி எம் எஸ் அதைப் பாட மறுத்து விட்டதாகவும் அதனால் வாட என்று மாற்றியதாகவும் சொல்வார்கள்!)

மேலே உள்ள வரிகள் முன்னர் எட்டு வருடங்களுக்கு முன்  பகிர்ந்த ஒன்று.  இங்கல்ல, பேஸ்புக்கில்.  அதைப் பார்த்த உடன் இன்றைய அரட்டைக்கு அதையே எடுத்துக் கொள்ளத் தோன்றியது.

உன்னைத் சொல்லி குற்றமில்லை என்னைச் சொல்லி குற்றமில்லை காலம் செய்த கோளமடி கடவுள் செய்த குற்றமடி என்று கடவுள் மேலே குற்றம் சுமத்தும் பாடல்.

ஆண்டவனே உன் பாதங்களை பாடல் இந்த லிஸ்ட்டில் வராது என்பதையும் இங்கே சொல்லி விடுகிறேன்!  ஆனால் ஆண்டவன் இல்லா உலகமிது பாடலை சேர்த்துக் கொள்ளலாம் இல்லையா!
=================================================================================

பாலிவுட்டில் 70களின் மத்தியில் அறிமுகமாகி குறிப்பிடத்தக்க நடிகராக அறியப்பட்டவர் ராஜ் கிரண். 2000க்கு பிறகு படங்களில் நடிக்கவில்லை என்பதுடன் அதன்பிறகு எங்கே போனார், என்ன ஆனார் என்று இதுவரை தெரியவில்லை. இவருடன் நட்பாக பழகி வந்தவர் நடிகை சோமி அலி. இவர்தான் சலமான்கான் உடன் 90களில் கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் ரிலேஷன்ஷிப்பில் இருந்து பரபரப்பை ஏற்படுத்தியவர்.

இந்த 16 வருடங்களாக நடிகர் ராஜ்கிரண் எங்கே இருக்கிறார் என்று தன்னால் முடிந்த வரை அவர் தேடி வருகிறார். சில வெளிநாடுகளுக்கும் சென்று தேடியுள்ளார். அதுமட்டுமல்ல, மறைந்த நடிகர் ரிஷி கபூரிடம் ஒரு படப்பிடிப்பில் பேசிக் கொண்டிருக்கும் போது ராஜ்கிரணை எப்படியாவது கண்டுபிடிப்பேன் என வாக்கு கொடுத்திருந்தாராம் சோமி அலி. ரிஷி கபூர் மறைந்த பிறகும் கூட தொடர்ந்து ராஜ்கிரணை தேடும் முயற்சியில் சோமி அலி ஈடுபட்டுள்ளார். தற்போது அவர் எங்கே இருக்கிறார் என சரியான தகவல் தருபவர்களுக்கு ஐயாயிரம் டாலர் சன்மானம் தருவதாகவும் அறிவித்துள்ளார் சோமி அலி.

==================================================================================

இறைவனுக்கு உருவம் யார் கொடுத்தார்?  யார் ஆபரண,ம் கொடுத்தார்?  யார் வாகனம் கொடுத்தார்?!!


==================================================================================


எப்படி இருந்தவர் இப்படி....





கவனிப்பார் யாரும் இல்லாததால் நடிகர் மோகன் சர்மா ஆதரவற்றோர் இல்லத்தில் அடைக்கலமாகியிருப்பது குறித்த செய்தி!

புனேவிலுள்ள இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தில் நடிப்பு பயின்ற முதல் தென்னிந்தியர் என்ற பெருமைக்குரியவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ஏகப்பட்ட படங்கள் நடித்ததோடு திரைக்கதை, இயக்கம், தயாரிப்பு என சினிமாவின் பல்வேறு தளங்களில் இயங்கியவர். தமிழ்நாடு மற்றும் கேரள அரசின் சினிமா விருதுகளை வாங்கியவர். ஃபிலிம் சேம்பர் எனப்படும் திரைப்பட வர்த்தக சபையின் தலைவராக இருந்தவர். இத்தனை பெருமைக்குரிய மோகன் சர்மா தற்போது த‌ன்னுடைய 80 வது வயதில் சென்னை, கும்மிடிப்பூண்டி பகுதியில் இயங்கி வரும் ஆதரவற்றோருக்கான முதியோர் இல்லத்தில் அடைக்கலமாகி இருக்கிறார்.

என்ன நடந்தது? அவரிடமே பேசினோம்.

''சினிமாவுல பரபரப்பா இயங்கிட்டிருந்த காலத்துல சென்னையில போயஸ் கார்டன் பகுதியில எனக்கு வீடு இருந்தது. நான் தயாரித்து இயக்கிய 'நம்ம கிராமம்' படத்துல நடிச்ச நடிகை சுகுமாரிக்கு தமிழ்நாடு அரசு விருது கிடைச்சப்ப மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவங்களைக் கூப்பிட்டு பாராட்டினாங்க. அந்தப் படத்தை அவங்க பார்க்க விரும்பறதாச் சொல்ல, படத்தைப் போட்டு காமிச்சோம்.

கேரளாவின் பாலக்காடு பகுதிகளில் அந்தக்காலத்துல பிராமண சமுகத்தில் பெண் பிள்ளைகளுக்கு இழைக்கப்பட்ட அநீதியைச் சாடிய கதை. 'படம் என்னை ரொம்பவே பாதிச்சது'ன்னு சொன்ன அவங்க, படத்தின் சேட்டிலைட் உரிமையை ஜெயா டிவிக்கு வாங்கச் சொல்றேன்'னும் சொன்னாங்க.

ஆனா அது நடக்கறதுக்குள்ள அவங்களும் இறந்துட்டாங்க.

தமிழ்நாடு அரசு விருது மட்டுமல்லாம கேரள அரசின் விருதும் அந்தப் படத்துக்கு கிடைச்சது.

முதல் இன்னிங்ஸ் சினிமான்னா அடுத்து சீரியல் பக்கம் வந்தேன். அங்கயும் நிறைய சீரியல் பண்ணினேன்.

சினிமா, சீரியல் ரெண்டும் என்னை பிசியா வச்சிருந்தாலும் குடும்ப வாழ்க்கை எனக்கு அமைதியையும் மகிழ்ச்சியையும் தரலை.

வெளியில சொல்ல முடியாத துயரத்தையெல்லாம் சந்திச்சேன். ஒரு கட்டத்துல போயஸ் கார்டன் வீட்டை வித்த போதும்... அதுலயும் சில வில்லங்கங்கள் வந்து செய்தி மீடியாவுக்கு வந்ததெல்லாம் உங்களுக்குத் தெரியும்தானே.

நாளாக ஆக உடலும் மனசும் ரொம்பவே சோர்ந்து போயிடுச்சு. கையில காசு இல்லை. நோய் நொடினு வந்தா பக்கத்துல இருந்து பார்க்க ஆள் இல்லை. வாழ்க்கையே வெறுத்துப் போயிடுச்சு.

இந்தச் சூழல்லதான் முன்னாடி ரோட்டரி கிளப்களில் ஆக்டிவா இருந்த போது தொடர்பிலிருந்த சில நல்ல உள்ளங்கள் கும்மிடிப்பூண்டியில் இயங்கி வருகிற இந்த முதியோர் இல்லத்தைக் காட்டி இங்க வந்து சேர்த்து விட்டாங்க.

ஜெயின் சமூகத்தினர் நடத்துகிற இந்த இல்லத்தில் இப்போதைக்கு தங்க இடமும் சாப்பாடும் இலவசமா தந்திடுறாங்க. ஆனாக்கூட வயோதிக பிரச்னைகளால் எடுக்கிற மருந்து மாத்திரைகள் வாங்க என்கிட்ட பணம் இல்லை.

நான் இங்க இப்படி இருக்கேன்னு ரஜினி சாருக்குச் சொல்லியிருக்காங்க. சில தினங்களுக்கு முன் அவர்கிட்ட இருந்து ஒரு லட்ச ரூபாய் பணம் வந்தது. அதை வச்சு சமாளிச்சிட்டிருக்கேன்.

ஃபிலிம் சேம்பர்ல நான் பொறுப்புல இருந்தபோது வயதான காலத்துல இந்த மாதிரி யாராவது நோய் நொடின்னு கஷ்டப்பட்டா அஞ்சு லட்ச ரூபாய் வழங்கலாம்னு ஒரு தீர்மானம் போட்டிருந்தேன்.

அதைச் சுட்டிக்காட்டி சேம்பருக்கு கடிதம் எழுதி உதவக் கேட்டேன். ஆனா அந்த தீர்மானம் திருத்தப்பட்டு விட்டதா தகவல் வந்திருக்கு.

அதாவது இறந்தா அதன் பிறகு அந்தப் பணத்தை வழங்குவாங்களாம்.

'ஏன்ப்பா ஆதரவில்லாம கஷ்டப்படுகிறவனுக்கு அந்தச் சமயத்துல உதவாம, அவன் இறந்த பிறகு யார்கிட்ட போய் அந்தப் பணத்தைக் கொடுப்பீங்க'னு கேட்டா பதில் இல்லை.

என் வயோதிக நாள்கள் இன்னும் என்ன வேதனையையெல்லாம் தரப்போகுதோனு நினைச்சாலே பயமா இருக்கு'' என நா தழுதழுக்க முடித்த மோகன் சர்மா,

``விருது வாங்கிய என்னுடைய 'நம்ம கிராமம்' படத்தின் சேட்டிலைட் உரிமையை யாராவது வாங்கினா மிச்சமிருக்கிற காலத்துக்கு எனக்கு மருந்து மாத்திரை வாங்க அது உதவும். சினிமா உலகத்துல யாராவது இந்த விஷயத்துல எனக்கு உதவினா அவங்களை மறக்கவே மாட்டேன்'' என்றபடி கண் கலங்குகிறார்.

நன்றி: விகடன்

===============================================================================

உங்கள் ஃபோன் 'ஹேக்' செய்யப்பட்டிருக்கிறதா என்று அறிய இன்ஸ்ட்டாவில் &#62# டயல் செய்து பார்க்கச் சொன்னார்.  நான் டயல் செய்து பார்த்ததில்...



==================================================================================

கவிதைப் பக்கம்  :


மற்றும் அமைந்திச்சாரல் எனப்படும் மாரியப்பன் எழுதிய சில கவித்துளிகள்...  கீழே 

கொட்டு முழக்கத்துடன் 
பிறர் எதிர்காலத்தைக் குறி சொல்லும் 
பூம்பூம் மாட்டுக்காரனை 
மௌனமாகத் தொடர்கிறது 
தன் எதிர்காலம் அறியா மாடு.


அவரவருக்கென்றோர் இடத்தை
அடையப்போராடும் கிளியந்தட்டில்
தனக்குரிய பீடத்தை 
எப்படியோ கண்டறிந்து
அமர்ந்து விடுகின்றன சாமிகள்.

அன்பு எதையும் வற்புறுத்தாது, 
அன்பின் பெயரால் நடத்தும் 
ஆக்கிரமிப்போ 
ஒன்றுமில்லாமல் வழித்துத் 
துடைத்துவிடும்.

கனிகளின் இனிமையை 
மட்டும் சிலாகிப்பவன், 
அதன் பின்னிருக்கும் 
யற்கையின் உழைப்பை 
அறிந்தும் அறியாதவனாகவே 
காட்டிக்கொள்கிறான்.

காலம் எறிந்து சென்ற
காயங்களை எல்லாம்
கவிதையாக்கிப் பருகிவிடலாம்
கசப்பை இனிப்பாக்கும் 
வித்தையோடு.

===================================================================================

சாண்டில்யன் பக்கம்  :




முன்னுரை

ஹூணர்கள் என்ற நாடோடிச் சாதியார் பாரதத்தின்மீது படையெடுத்துப் புரிந்த அட்டூழி யங்களை ஆதாரமாகக் கொண்டு, 'மலைவாசல்' கதை புனையப்பட்டிருக்கிறது. சக்கரவர்த்தியான ஸ்கந்தகுப்தன் நோய்வாய்ப்பட்டு விட்டதாலும், அவன் உற்றார் விளைவித்த உள்நாட்டுச் சதி யாலும் பணக் கஷ்டத்தாலும் தத்தளித்த குப்த ராஜ்யம் முழுமையையும் ஹூணர்கள் விழுங்கவொட்டாது காப்பாற்றிய உபசேனாதிபதியான அஜித் சந்திரனின் தியாகக் கதைதான் மலை வாசல்.

இந்தக் கதை திடமான சரித்திர ஆதாரங் களைக் கொண்டது. ஆசிரியர் வின்ஸென்ட் ஸ்மித் பின்வரும் குறிப்புகளைக் கொடுத்திருக் கிறார்:

"கி.பி. 455-வது வருஷத்தில் ஏற்பட்ட ஹூணர்களின் படையெடுப்பை ஸ்கந்தகுப்தன் முறியடித்தாலும் 460க்கு மேல் 470-க்குள் மீண்டும் ஹூணர்கள் சாரிசாரியாக இந்தியாவுக்குள் புகுந்து விட்டார்கள். இந்த இரண்டாவது படையெடுப்புக் காலத்தில் சக்கரவர்த்தியான ஸ்கந்தகுப்தன் நோய்வாய்ப்பட்டு விட்டான். நேரிடையாக எதிரிகளைச் சமாளிக்க முடியவில்லை. ஆகவே ஹூணர்கள் பத்து வருஷ காலத்திற்குள் ஸிந்து நதிப் பிராந்தியம் பூராவையும் ஆக்கிரமித்துக் கொண்டார்கள். திரும்பத் திரும்ப ஏற்பட்ட படையெடுப்பால் ஸ்கந்தகுப்தன் செல்வ நிலையும் சீரழிந்து விடுகிறது. 

ராஜ்யத்திலிருந்த தங்க நாணயத்தின் மாற்றை 108லிருந்து 73 ஆகக் குறைத்து விடுகிறான். தவிர, ஸ்கந்தகுப்தனின் சிறிய தாயாரான ஆனந்ததேவி தன் மகனான பூரகுப்தனுக்கு குப்த ராஜ்யத்தைச் சம்பாதித்துக் கொடுக்கச் சதியிலிறங்குகிறாள். 

இதனால் உள் நாட்டு அமைதியும் குலைகிறது" (The Early His-tory of India- by Vincent Smith, Chapter XII, Pages: 289 to 293) இந்தச் சரித்திரக் குறிப்புகளைக் கொண்டு சரித்திரப் பாத்திரங்களோடு சில புது கதாபாத் திரங்களையும் சிருஷ்டித்து, 'மலைவாசல்' எழுதினேன். வடமேற்கு எல்லையிலுள்ள மலைப் பிரதேசத்தின் வாசலாக அமைந்து உள்ள கைபர் கணவாய்க்கு அருகே இக்கதை பெரும்பாலும் நடப்பதால் இதற்கு 'மலைவாசல்' என்று பெயர் கொடுத்தேன். இக்கதையில் ஸ்கந்தகுப்தன், தோரமானா, ஆனந்ததேவி, பூரகுப்தன், கிங்கலன் ஆகியோர் சரித்திரப் பாத்திரங்கள். அஜித் சந்திரன், சித்ராதேவி, அடிலன், காமினி, பல்தேவ், ராகுலன் முதலியோர் கதையின் தேவையை முன்னிட்டுச் சிருஷ்டிக்கப்பட்டவர்கள்.

'மலைவாசல்' அமுதசுரபியில் வந்த இரண்டரை வருஷ காலமும் அதை விடாமல் படித்து ஆதரவு தந்த தமிழன்பர்கள் புத்தக ரூபத்திலும் அதை வரவேற்பார்கள் என்று நம்புகிறேன். 

'மலைவாசல்' புத்தகம் உண்மையில் அதிர்ஷ்டம் வாய்ந்ததென்பதில் சந்தேகமில்லை. சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர், சொல்லின் செல்வர் பேராசிரியர் ரா.பி. சேதுப்பிள்ளை அவர்களின் முகவுரையைப் பெற்று இது வெளியாகிறது. எவ்வளவோ அலுவல்களுக்கிடையே உடல்நலக் குறைவையும் பொருட்படுத்தாது, திரு. சேதுப்பிள்ளை அவர்கள் என் வேண்டுகோளுக்கிணங்கி அணிந்துரை எழுதித் தந்தார்கள். அணிந்துரையில் என்னைப் பற்றி அன்னார் கூறியுள்ள சிறப்புரைகளுக்கு அன்னாருக்கு என் மேலுள்ள அன்புதான் காரணம். இப்படி எனக்கு அன்பையும் ஆசியையும் தந்த திரு. ரா.பி. சேதுப்பிள்ளை அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

'அமுதசுரபி' 'மலைவாசல்' கதையை நான் எழுதுவதற்குத் தூண்டுகோலாயிருந்தவர் ஆசிரியரும் எனது நண்பருமான திரு. சு. வேம்பு அவர்கள். என்னை வற்புறுத்தி எழுத வைத்த அன்னாருக்கும், இதைப் பதிப்பித்துள்ள வானதி பதிப்பகத்தாருக்கும் நன்றி உரித்தாகும்.

சாண்டில்யன்

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

இவ்வளவுதான் உலகம் இவ்வளவுதான்..


==============================================================================================

நான் ஒரு ஆளே கிடையாது 


========================================================================================




இளையராஜாவையும், கங்கை அமரன் அவர்களையும் பார்த்து வியந்து, பொறாமை கொள்ளும் ஒரு விஷயம் இருவரின் அபாரமான நினைவாற்றல். 50 வருடங்களுக்கு முன்பு எழுதிய, பாடிய பாடல்களை கூட சட்டென்று பாடிவிடுவார்கள். அன்றைய ஹிட் பாடல்களுக்கு எழுதிய டம்மி வரிகளை எல்லாம் அச்சுபிறழாமல் பாடி அசத்துவார் கங்கை அமரன். இவர்களின் இசை, இவர்களின் பாடல் மட்டுமல்லாது, கண்ணதாசன், வாலி பாடல்களையும் பாடுவார். அபாரமான நினைவாற்றல்.
80 வயதை கடந்த இளையராஜாவின் நினைவாற்றல் நேற்றைய பள்ளியெழுச்சி பாவை பாடல்கள் வெளியீட்டு விழாவில் வெளிப்பட்ட்டது. திருப்பாவை, திருவெம்பாவை போல இளையராஜா அவர்களே எழுதிய பாடல்களை திரு சஞ்சய் சுப்பிரமணியம் அவர்கள் பாடி வெளியிட்டிருக்கிறார்கள்.
அந்த நிகழ்ச்சியில் பேசும் போது பாடல்கள் எழுதிய கதையை பகிர்ந்தார்.
அவரின் இசையில் உள்ள அதிசயங்களை எடுத்துக் கூறி இதெல்லாம் எப்படி வந்தது என்று கேட்டால், அப்படியே மேலே கைகாட்டுவார். அந்த நேரத்துல வந்தது என்று சொல்லி கடந்து போவார்.
அது சத்தியமான உண்மை. நம்மை போல சாதாரண மானிடரால் நம்ப முடியாது தான். ராஜாவை போல இறைவனின் பரிபூரண அருளைப்பெற்ற ஒருவருக்கு இப்படியான அதிசயங்கள் கண்டிப்பாக நடக்கும்.
அவர் இந்த பாடல்கள் எழுதிய கதையும் அப்படிதான். அதிகாலை 4 மணிக்கு படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்து போது, சில வார்த்தைகள் வந்து விழுகிறது. அப்படியே பேப்பரையும் பேனாவையும் எடுத்துக்கொண்டு எழுத ஆரம்பிக்கிறார். 10 பாடல்களை எழுதி முடிக்கிறார்.
எப்படி அவர் பாடல்களுக்கு இசையமைப்பாரோ, அப்படியே இந்த பாடல்களையும் எழுதியிருக்கிறார். மேலிருந்து வருகிறது. அப்படியே எழுதுகிறார்.
அவர் எழுதிய தமிழை படித்தாலே தெரியும். இது இறைவனின் அருளின்றி வேறில்லை என்று. அப்படி ஒரு பிரவாகம்.
முதலில் எழுதிய பாடலை கடகடவென்று சொல்கிறார். அவர் எழுதிய "முன்மொழியால் பாடேலோர் என்பாவாய்" வரிகளை குறிப்பிட்டு, இதையெல்லாம் நான் எப்படி எழுதியிருக்க முடியும் என்கிறார்.
திருவண்ணாமலை கிரிவலம் பிரபலம் அடைந்தது இளையராஜாவால் தான் என்று திருவண்ணாமலையில் உள்ள சித்தர்கள் சொல்கிறார்கள் என்கிறார். அண்ணாமலையாரின் திருவிளையாடல்.
பகவான் ரமணரின் சீடரான குஞ்சு சாமிகள் சொன்னது போல் இளையராஜா ஒரு சித்தர் தான்.
பிற்காலத்தில் இளையராஜா ஒரு சித்தராக வணங்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இளையராஜாவின் குரு டிவிஜி யும் அதை குறிப்பிடுகிறார். யார் குரு ? யார் சிஷ்யன்? என்று கேட்டு ராஜாவைப் பார்த்து கைகாட்டுகிறார்.
நீர் ஒரு மஹா சித்தரய்யா...
அவர் எழுதிய முதல் பாடல்
"பாடக்கிடைத்த பரம்பொருளே
பாடுதற்கு ஒருபிறப்பு கிட்டியும்
பாடிப்பயன் காண பன்மொழியால் ஏத்தாது
பண்டை வினைத்தூசு மூட கிடப்பையோ
முத்தே, முகில் மூடா மோன முழு நிலவே
மூட மனம் முடம் நீக்குவானே
முன்மொழியால் பாடேலோர் என்பாவாய்."

பேஸ்புக்கில் படித்தது.

==============================================================================

இன்ஸ்ட்டாவில் பார்த்தேன். நான் புரிந்து கொண்டிருப்பது சரிதான் என்று நினைக்கிறேன்!


================================================================================

நெல்லை கண்ணன் பக்கம் : நடிகர்களை பற்றி கொஞ்சம் வம்பு...!
============================================================================================

பாஹே பக்கம்  :


========================================================================================

அம்பேத்காராக நடித்த அனுபவம் பற்றி மம்மூட்டி...

சென்னையில் மேட்டுக்குடியினரும் மந்திரிகளும் வாழும் கிரீன்வேஸ் ரோட்டில் அமைதியான சூழ்நிலையில் அமைந்துள்ள அந்த வீட்டுக்குள் நுழையும்போது, கேரளாவுக்குள் பிரவேசித்துவிட்ட பிரமை ஏற்படுகிறது. பச்சையான புல்வெளிகள், பூஞ்செடிகள், மரங்கள், டெரகோட்டா சிற்பங்கள் என்று அவருடைய ரசனையை வீடு வெளிப்படுத்திக் காட்டுகிறது. 

அரைக்கால் சட்டை, கைவைத்த டி-ஷர்ட்டில் ரொம்ப இயல்பாக வராண்டாவில் போட்டிருந்த சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடியே நம்மை வரவேற்றார். அம்பேத்கராக நடித்து மூன்றாவது தடவையாகத் தேசிய விருது வாங்கியிருக்கும் மம்மூட்டி.


“இந்திய அரசும் மகாராஷ்டிர மாநில அரசும் நேஷனல் ஃபிலிம் டெவலப்மெண்ட் கார்ப்பரேஷனுடன் சேர்ந்து உருவாக்கிய படம் இது. இந்தியாவில் வாழ்ந்த மிகப்பெரிய தலைவரைப் பற்றிய படம் என்பதால், எல்லா வகையிலும் சிறப்பாக அமையவேண்டும் என்பதில் கவனமாக இருந்தார்கள். அம்பேத்கரின் வேடத்தில் நடிக்க, அவரைப் போலவே உருவம் கொண்ட ஒருவரைத் தேடியிருக்கிறார்கள். இந்தியாவில் மட்டுமல்ல. அமெரிக்கா, லண்டன் எல்லாம்கூடப் போய்த் தேடிப்பார்த்திருக்கிறார் படத்தின் டைரக்டர். ஏமாற்றத்துடன் இந்தியாவுக்குத் திரும்பிய டைரக்டரின் கண்ணில் என்னோட போட்டோ ஒன்று பட்டிருக்கிறது. கம்ப்யூட்டரில் அந்த போட்டோவை அம்பேத்களின் ஒரிஜினல் படத்துடன் மாட்ச் பண்ணிப் பார்த்திருக்கிறார்கள் என் முகம் பொருந்தவே எனக்குக் கிடைத்தது இந்த மகா சான்ஸ்!” - அம்பேத்கர் படத்தில் வாய்ப்புக் கிடைத்தது பற்றி உற்சாகமாகச் சொன்னார் மம்மூட்டி.

"அம்பேத்கராக நடித்த அனுபவம் பற்றி...?” 

"படப்பிடிப்புக்குப் போன பிறகுதான், மற்ற படங்களில் நடிப்பது போல இந்தப் படத்தில் லகுவாக நடித்துவிட முடியாது என்பதை உணர முடிந்தது. இது பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவை ஆண்ட காலகட்டத்தில் நடந்த உண்மைக் கதை. அதனால், அந்தக் காலகட்டத்தில் பேசப்பட்ட இங்கிலீஷில் நான் பேசி நடிக்க வேண்டும். அதற்காகவே, பிரிட்டிஷ் உச்சரிப்புடன் பேச எனக்கு ஒரு மணியை டியூஷன் ஏற்பாடு செய்தார்கள். படப்பிடிப்பு முடிந்த பிறகு, டப்பிங் பேசும்போது என் உச்சரிப்பைச் சரிசெய்ய, ஒரு பிரிட்டிஷ்காரர் உடனிருந்தார். 
கொஞ்சம் அப்பாதுரை சாயலாய் இல்லை?!
தவிர, மானரிசம், அவர் நடை உடைகளைத் தெரிந்துகொள்ள.... அவர் பற்றிய டாகுமெண்டரியைப் பார்த்தேன். அவர் பற்றிய சில புத்தகங்களை வாங்கிப் படித்தேன். பூனா யூனிவர்சிட்டியில் வயதான அம்பேத்கர் கெட்டப்பில் படப்பிடிப்பு நடந்து முடிந்தவுடன், அந்த யூனிவர்சிட்டியில் பணிபுரியும் ஒரு பேராசிரியர் வந்து, என் காலில் விழுந்து வணங்கியதும் மகாராஷ்டிராவில் மாஹாடு என்ற ஊரிலுள்ள தாழ்த்தப்பட்ட மக்கள். அங்கு படப்பிடிப்பு நடந்த ஒவ்வொரு நாளும் எனக்குத் தீபாராதனை எடுத்து மகிழ்ந்ததும் என் திரையுலக வாழ்க்கையில் மறக்கமுடியாத சம்பவங்கள்.

நாக்பூரில் படப்பிடிப்பு நடந்த போது இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் திரண்டு. வந்து அம்பேத்கர் வேடத்திலிருந்த என்னை வணங்கி, கண்ணிர் விட்டு அழுத காட்சி என்னைப் பெரிதும் கலங்க வைத்துவிட்டது. அம்பேத்கர் என்ற மாபெரும் தலைவனின் சக்தியை முழுவதுமாக நான் புரிந்துகொண்ட சந்தர்ப்பங்கள் இவை.

ஒண்ணரை வருடம், அந்தப் படத்தில் நடிக்கும்வரை வேறு படங்களில்_நடிக்க வாய்ப்புகளைத் தவிர்த்துவிட்டேன். ஈடுபடுத்திக் கொண்டேன். இன்று சிறந்த நடிப்புக்காக, அந்தப் படத்துக்கு தேசிய விருதே கிடைத்திருக்கிறது என்னும் போது சந்தோஷத்தை வெளிப்படுத்த வார்த்தைகள் சிக்கவில்லை!”

நன்றி: சினிமா விகடன்

=====================================================================================

1967 ல் வெளியான இந்தப் படத்தில்தான் ஜெயலலிதா 'கவர்ச்சிக்கு கன்னி; பட்டத்தைப் பெற்றார்.  இந்தப் படத்துடன், 26 படங்கள் ஜோடியாக நடித்தபின் சரோஜாதேவி ஒதுங்கி ஜெயலலிதாவுக்கு வழி விட்டார் என்று சொல்லலாம்!

அண்ணன் சக்ரபாணி தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் அரசகட்டளை.  

இன்றைய பாடல் 'வேட்டையாடு விளையாடு'  பாடல் ஆலங்குடி சோமு எழுத, கே வி மகாதேவன் இசையில், டி எம் சௌந்தரராஜன் - பி சுசீலா இணையில் வந்த பாடல்.  இந்தப் பாடலில் நிறைய வரிகள் என்னை வசீகரிக்கும். 

இதில் MGR சரோஜாதேவியோடு ஜோடி சேரமாட்டார் என்று நினைக்கிறேன்.  நம்பியார் நல்லவர் என்றும் நினைக்கிறேன். நான் படம் பார்க்கவில்லை.

வேட்டையாடு விளையாடு 
விருப்பம் போல உறவாடு 
வீரமாக நடையைப் போடு 
நீ வெற்றியென்னும் கடலிலாடு



8 கருத்துகள்:

  1. மலைவாசல் பகுதி ரிப்பீட்டு. போன வாரம் போட்டீங்கன்னு நினைவு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை...

      // மலைவாசல் பகுதி ரிப்பீட்டு. போன வாரம் போட்டீங்கன்னு நினைவு //

      அப்பவும் இப்பவும் படிச்சிருந்தீங்கன்னா தெரிஞ்சிருக்கும்!

      நீக்கு
  2. மோகன் சர்மா பகுதிபடிக்க மனசு திக்கென்றிருக்கிறது. யாருக்கு எப்படிப் பட்ட எதிர்காலம் வைத்திருக்கிறானோ இறைவன். நல்லா செழிப்பா இருந்தபோது அவர் கனவில்கூடத் தனக்கு இப்படி ஒரு நிலை வரும்னு நினைத்திருக்க மாட்டார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்..  முதலில் நியூஸ் வந்தபோது எடுத்து வைத்துக்கொண்டேன் வெள்ளியில் பகிரலாம் என்று.  இப்போது மீடியா முழுக்க இதுதான் நியூஸ்.

      நீக்கு
  3. கீசா மேடம் பெஉதி.... படத்தைப் பார்த்தபின் கவிதையை மிக ரசித்தேன். சட்னு சப்ஜெக்ட் புரியலை. அங்கை அழகிய கை. எங்கை என் கை.. அர்த்தம் வரலையேன்னு நினைத்தால் எங்கைனா என் தங்கையாம்.... நிஜமாவா? அங்கைனா அவனோட தங்கை இல்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கேயும் ஒரு தப்பு பண்ணி இருக்கீங்க..    சரியா படிக்கலை!!

      நீக்கு
  4. கேஷவ்வின் படத்திற்காக கிருஷ்ணன் வாய் மலர்ந்தாரோ!

    பதிலளிநீக்கு
  5. மோகன் சர்மா.. கேள்விப்பட்டதில்லை. ரஜினி கொஞ்சம் உதவியிருக்கார். ஒலகநாயகன் இதுமாதிரி ஏதும் செய்யற வழக்கமில்லையோ...
    முதல்வர் விஜய்யின் கவனத்துக்குவந்தால் ஏதும் செய்யக்கூடும்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!