26.8.26

பாராளுமன்ற உறுப்பினர்களை அதிகரிப்பதால் யாருக்கு நன்மை? + சரோஜாதேவி பகுதி 13.

 

கேள்வி பதில்கள் :

நெல்லைத்தமிழன் : 

1. பாராளுமன்ற உறுப்பினர்களை அதிகரிப்பதால் யாருக்கு நன்மை?  எதற்காக அதிகரிக்க வேண்டும்?  நீங்கள் ஏதாவது நன்மையை அவர்களிடமிருந்து இதுவரை பெற்றிருக்கிறீர்களா?  

# தொகுதி மிகப் பெரியதாக இருந்தால் நாடாளுமன்ற உறுப்பினர் அதில் உள்ள பிரச்சனைகளை சரியாக புரிந்து கொள்வது கஷ்டமாக இருக்கும். ஜனத்தொகை கம்மியாக இருக்கும் போது அப்படி இருந்திருப்பது நியாயம்தான் ஆனால் இப்பொழுது மக்கள் தொகை பெருகிவிட்டது. தேவைகளும் பெருகியிருக்கும். ஒரு தொகுதியில் என்ன மாதிரியான தொழில்களை கொண்டு வரலாம் என்பது போன்ற பிரச்சனைகளை நாடாளுமன்ற உறுப்பினர் தானே சொல்ல வேண்டும். 

எந்த நாளும் நாடாளுமன்ற உறுப்பினரோ சட்டமன்ற உறுப்பினரோ நேரடியாக ஒரு தனி நபருக்கோ குடும்பத்துக்கோ பிரச்சனைகளை தீர்த்து வைப்பது என்பது அசாத்தியம் தான். 

அந்தக் காலத்தில் மத்திய அரசு கொண்டுவரும் சட்டங்கள் சரிவர இருக்கின்றனவா தங்கள் தொகுதிக்கு நியாயம் கிடைக்குமா என்று பார்ப்பது மட்டுமே நாடாளுமன்ற உறுப்பினர்களின் முக்கியமான வேலையாக இருந்தது. இப்போது எல்லாம் தலைகீழாக மாறிப் போய்விட்டது.

2.  நாம் இந்த இலவசத்தை வாங்கக்கூடாது, இது நமக்கானது அல்ல என்று நினைத்து, ரேஷன் கார்டுக்குக் கொடுக்கும் 2000 ரூபாய், இலவச தொலைக்காட்சி, மிக்சி போன்றவற்றை வாங்காமல் தவிர்த்திருக்கிறீர்களா?  

# இந்த 2000 எல்லாம் நான் வாங்கியது கிடையாது. உண்மையில் பல நாட்களுக்கு என்னிடம் ரேஷன் கார்டே இல்லை. ஆதார் வருவதற்கு முன்னால் ரேஷன் கார்டு தான் வாக்காளர் அடையாளத்திற்கு அடிப்படை ஆதாரமாக கொள்ளப்பட்டதால் ரொம்ப சிரமப்பட்டு வாங்கினேன். 

உண்மையை சொல்ல வேண்டுமென்றால் வேண்டாம் என்று சொல்லச் சொல்ல மிக்சி ஃபேன் கிரைண்டர் போன்ற விஷயங்கள் எங்கள் மேல் திணிக்கப்பட்டன. அதை வீட்டு வேலை செய்பவருக்கும் அறிந்த வேறு சிலருக்கும் கொடுத்து விட்டோம்.

& நான் ஓட்டுப் போட ஆரம்பித்த நாளிலிருந்து சென்னையில் இருந்த 40 வருட காலத்திலும் எந்த இலவசப் பொருளையோ அல்லது இவசங்களையோ வாங்கியது கிடையாது. 

3.  அப்போ இந்த உடுப்பி ஹோட்டல்ல சாம்பார் வடை போடுவான் பாரு,  பேப்பர் ரோஸ்டுன்னா அந்த ஹோட்டலுக்குத்தான் போகணும் ... என்றெல்லாம் நாம் சொல்கிறோமே.. அந்த ருசி இப்போது இல்லாததன் காரணம் என்ன?  

# இடுபொருட்கள் தரம் குறைந்து போனதுதான் முக்கியமான காரணம். அதுபோக லாபம் கருதி சின்ன சின்ன தந்திரங்கள் செய்து உணவு பண்டங்களை விற்கிறார்கள். இதுவும் ஒரு காரணம்.

& ஒருவேளை நமக்கு பசி இருந்த காலங்களில் அவை ருசியாகவும், பசி இல்லாத இந்தக் காலங்களில் அந்த அளவு ருசி இல்லாததாகவும் தோன்றுகிறதோ? 

4.  பொதுவா கதம்ப சாதம் (லெமென் ரைஸ், தேங்காய் சாதம், புளியோதரை போன்று), இட்லி போன்றவைகளைக் கண்டு நமக்கு அடுத்த தலைமுறை ஓடுவதன் காரணம் என்ன? நூடுல்ஸ் பாஸ்தா பீட்சாவில் ஆர்வம் கொள்வதன் காரணம் என்ன?   

# மாற்றத்தை விரும்புவது பேஷன் ஆகிவிட்டது. விளம்பர யுகத்தில் பல பொருட்கள் தரம் இல்லாமல் இருந்தும் பலமாக விளம்பரப்படுத்தப்பட்டு விற்பனையாகின்றன.

5.  கதை அம்சமுள்ள திரைப்படங்கள், நல்ல நகைச்சுவை, அருமையான மெலோடியஸ் பாடல்கள்-அவைகளைத் தந்த இசையமைப்பாளர்கள்.. இவைகளை அனுபவித்த கடைசித் தலைமுறை நாம்தான் என்று சொல்லமுடியுமா?

# சொல்லலாம். ஆனாலும் நல்ல கதை அம்சம் கொண்ட படங்கள் மிக மிகச் சொற்பம். இப்போதைய படங்களில் எனக்கு எரிச்சலை தூண்டுவது பயங்கரமான வன்முறைக் காட்சிகள், மலிவான நகைச்சுவை.

= = = = = = = = = =

படமும், பதமும். 


ஹாரி பாட்டர் (Harry Potter) நாவல் எழுதப்பட்டு 25 வருடங்கள் ஆனதை கொண்டாடும் விதமாக கனடாவில் இருக்கும்,( உலகெங்கிலும்?) Tim Hortons உணவு விடுதிகளில் ஹாரி பாட்டர் கதையில் எந்தெந்த நிறங்களில் வீடுகள் குறிப்பிடப் பட்டிருக்கிறதோ அந்தந்த நிறங்களில் டோனெட்டுகளையும், குளிர் பானங்களையும் விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள். 

எனக்கு டோனெட்  பிடிக்காமல்தான் இருந்தது, இங்கு வந்ததும் பிடித்து விட்டது.



== = = = = = = =   = = = = = = = =



ஆப்பிளை சூப்பர் மார்க்கெட்டில் பார்த்திருப்பீர்கள், வண்டிகளில்,லாரிகளில் கூவி விற்பதை பார்த்திருப்பீர்கள், வீட்டில் தட்டில் நறுக்கி வைத்திருப்பதை பார்த்திருப்பீர்கள் மரத்தில் காய்த்து தொங்குவதை பார்த்தீருக்கிறீர்களா?அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் ஆப்பிள் விளையும் காலம் இதுதான். செப்டம்பர்,அக்டோபரில் அறுவடை காலம். இப்போது வெளியே செல்லும் பொழுது ஆப்பிள் தோட்டங்களை பார்த்தேன். காரில் வேகமாக செல்லும் பொழுது படம் எடுக்க முடியவில்லை. நடந்து சென்ற பொழுது கண்ணில் பட்ட மரங்களில் காய்த்து தொங்கிய ஆப்பிள்கள் நான் மட்டும் ரசித்தால் போதுமா?

நெல்லைத்தமிழன் : 

( சென்ற வாரப் பதிவில் கீதா சாம்பசிவம் மேடம் கேட்ட ஜெல்லி மீன்களை (படம்தான் !!) சுடச்சுட அனுப்பிவிட்டார் நெ த ) 


நாங்க பஹ்ரைன்ல இருந்தபோது எங்க டிபார்ட்மெண்ட் மாத்திரம் இரண்டு நாட்களுக்கு ஹவார் தீவுகள் (ஹவாய் இல்லை. பஹ்ரைன்லேர்ந்து கொஞ்ச தூரத்தில் இருக்கும் ஹவார் தீவு) சென்றிருந்தோம். அங்க தங்கறதுக்கு சாப்பிட என்று ஒரு பேக்கேஜ். போட்டில்தான் அந்த தீவுக்குப் போக முடியும். கால நிலையைப் பொறுத்து, சில சமயங்களில் கடலில் ஏகப்பட்ட ஜெல்லி மீன்கள் இருக்கும் என்று எழுதியிருந்தேன். இதுதான் அந்த ஜெல்லி மீன். நீங்க நிறைய சேனல்கள்ல பார்த்திருக்கலாம்.  உயிருள்ளவை. சில நேரங்கள்ல கரையோரமா இருக்கும்போது சட் என்று Tideனிலால் நீர் குறைந்தால், கரையில் இவை கிடக்கும். வெறும் காலில் பட்டது என்றால் அரிக்கும். கெட்டியா இருக்கும் சாதக் கஞ்சி மாதிரி இருக்கும். 

( கடவுளே - இனிமே சாதம் வடிச்ச கஞ்சியைப் பார்த்தாலே .. ஹக் .. )

சில நேரங்கள்ள ஆயிரக்கணக்கா பார்க்கலாம். இந்தப் படத்திலேயும் நிறைய தெரியும். படகின் இரண்டு பக்கமும் தண்ணீர்ல ஜெல்லி மீன்களைப் பார்க்கலாம். சில நேரங்களில் கடலின் வெப்பம் காரணமாகவோ இல்லை வேறு காரணமாகவோ இப்படி அளவுக்கதிகமான ஜெல்லி மீன்கள் வந்துவிடும். குடை மாதிரி அவை நீஞ்சும். மீன்கள் என்று குறிப்பிட்டிருக்கிறேனே தவிர அவை உணவுக்கானவை அல்ல. சில வெரைட்டிகள் நிறைய விஷத் தன்மை கொண்டவை. 


கண்ணுக்கெட்டிய தூரம் வரை அவற்றைக் காணலாம்.


இந்தப் படத்துல ஜெல்லி மீன் நன்றாகத் தெரியும். அது நீஞ்சும் அழகே நல்லா இருக்கும்.  இதற்காக என்னுடைய புகைப்படக் கடலைத் தேடினபோது எத்தனையோ நினைவுகள். ஒரு நாள் எழுதணும், படங்களுடன் பகிரணும். வாய்ப்பு வருதா என்று பார்ப்போம்.

= = = = = = = = = = =

KGG பக்கம் : 

சரோஜாதேவி தொடர் கதை 

சென்ற வாரம் - சுட்டி : பகுதி 12 : " நாநாவின் திட்டம் : MCEL 02 " 

இனி 

இந்த வாரப் பகுதி. 

பகுதி 13 : பாவனா டீச்சர் ! 

மறுநாள் காலை பாபாவிடம் வேறு சில வடநாட்டு கம்பெனிகளின் ஆண்டு அறிக்கைகளைக் கொடுத்து அவற்றை ஆராயும்படி சொல்லிவிட்டு கிளம்பினான் நாநா. காரை முரளீஸ் கஃபே வாசலில் நிறுத்தி விட்டு, உள்ளே சென்றான். 

சமையல் வேலைகளை மேற்பார்வை பார்த்து வந்த அறுஷ்காவிடம் பாபாவுக்கு வேண்டிய உணவுகளை தன் வீட்டுக்கு அந்தந்த நேரத்தில் அனுப்பச் சொன்னான். தானும் காலை உணவு முடித்து, கல்லாவில் உட்கார்ந்து இருந்த முரளியிடம் வந்தான். 

" முரளி - எக்ஸ்பர்ட் ஏகாம்பரம் கொடுத்த விவரமான எஸ்டிமேட் எடுத்துக் கொண்டு என்னோடு வாங்க. அரோகரா பாங்க் போய் மேனேஜரிடம் பேசி உங்களுக்கு லோன் கிடைக்க வழி செய்கிறேன்" என்றான். 

இருவரும் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். 

காரில் போகும்போது நாநா முரளியிடம் மேனேஜரிடம் அவன் என்ன பேசப் போகிறான் என்பதையும் முரளி என்ன செய்ய வேண்டும், என்ன பேச வேண்டும் என்பதையும் விளக்கினான். 

பிறகு இருவரும் பாங்க் சென்றார்கள். 

******.  *** 
பாங்க் லோன் நாநா திட்டமிட்ட படியே வெற்றிகரமாக முடித்தான். 

முரளீஸ் கஃபே மேம்படுத்த கடன் கொடுக்க மேனேஜர் சம்மதித்தார். நாநா அந்த அரோகரா பாங்க்கில் மேனேஜர் சொன்ன தொகைக்கு பனானா எண்டர்பிரைசஸ் சார்பாக ஒரு ஃபிக்ஸட் டெபாஸிட் கணக்கு தொடங்கினான். மேலும் முரளி வாங்கும் கடன் தொகைக்கு கியாரண்டி கையெழுத்தும் போட்டான். 

*****.  ***** 
பாபா தனக்குக் கொடுக்கப்பட்ட ஆய்வு வேலைகளை சரியாக செய்து தான் கண்டு பிடித்த விவரங்களையும் அதை எப்படிக் கண்டு பிடித்தான் என்ற விவரங்களையும் பாவனாவிற்குச் சொன்னான். பாவனாவிடம் எந்த விஷயத்தையும் ஒரு முறை சொல்லிவிட்டால் போதும் - அதன் பிறகு அது போன்ற வேலைகளை அதுவே செய்யக் கற்றுக் கொண்டு நம்மிடம் சரி பார்த்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்க என்ன செய்ய வேண்டுமோ அதை செய்துவிடும். இதை ஏற்கெனவே நாநா பாபாவிடம் சொல்லியிருந்தான். 


விவரங்களைக் கேட்டுக் கொண்ட பாவனா சில சந்தேகங்களை பாபாவிடம் கேட்டு சந்தேகங்களை தீர்த்துக் கொண்டது. 

" ஓ கே பாபா இனிமேல் இந்த ஆய்வுகளை எப்படி செய்ய வேண்டும் என்று தெரிந்து கொண்டேன். இனிமேல் இந்த வகை வேலைகள் வந்தால் அதை முதல் ஆய்வு நானே செய்து உனக்கு விவரங்கள் அனுப்புகிறேன். அதை நீ சரிபார்த்து, நாநாவுக்கு உன் ரிப்போர்ட் அனுப்பலாம்" என்றது. 

" அப்படியே செய்வோம்" என்றான் பாபா. 

பிறகு கேட்டான் " பாவனா இங்கு வேலைக்கு இருக்கும் தமெனா பள்ளிக் கூடத்தில் படிக்கின்றாளா?" 

"தமெனா பள்ளிக்கூடத்தில் படிக்கும் பெண்தான். ஆனால் இங்கு வேலை செய்பவள் இல்லை. அறுஷ்காவின் அண்ணன் பெண். ஒரு தடவை அறுஷ்காவுடன் இங்கே வந்த போது  தன்னுடைய சயின்ஸ் பாடத்தில் ஒரு சந்தேகம் வர அதை அவள் நாநாவிடம் கேட்டாள். நாநா தமெனாவிடம், அவளுடைய சந்தேகங்களை என்னிடம் கேட்கச் சொன்னார். தமெனா கேட்ட சந்தேகங்களை நான் தீர்த்து வைத்தேன். அப்போதிலிருந்து என்னுடைய டியூஷன் ஸ்டூடெண்ட் ஆகிவிட்டாள் தமெனா. காலையில் ஸ்கூலுக்கு போவதற்கு முன்பு ஒரு தடவை, மாலையில் ஸ்கூலிலிருந்து வந்த பின் ஹோம் ஒர்க் செய்யும்போது, விடுமுறை நாட்கள் என்று எல்லா நாட்களிலும் டியூஷன் படிக்க வந்துவிடுவாள். வரும்போது அவளுடைய அறுஷ்கா அத்தைக்கு உதவியாக வீடு பெருக்குவது, தரை மெழுகுவது, வாசல் தெளிப்பது, கோலம் போடுவது எல்லாம் செய்வாள் . அதுதான் அவள் கொடுக்கும் டியூஷன் ஃபீஸ். நாநா வேண்டாம் என்று சொன்னாலும் கேட்கமாட்டாள்! " 

" பாவனா - உன்னை தமெனா எப்படி கூப்பிடுவாள்?"

" அக்கா என்றோ பாவனாக்கா என்றோ கூப்பிடுவாள்" 

" உனக்கு தமெனாவைவிட அதிக வயதா?"

" ஹ ஹ ஹா அதெல்லாம் இல்லை . உங்கள் கணக்குப்படி எனக்கு இன்னும் இரண்டு வயது கூட ஆகவில்லை. நாநா என்னை உருவாக்கி பாவனா என்று பெயர் வைத்தது 21 மாதங்களுக்கு முன்புதான்!" 

" ச்சே நீ 21 மாதக் குழந்தையா? எப்படி இவ்வளவு விஷயமும் தெரிந்துகொண்டாய்? " 

" உருவாக்கப்பட்ட உடனேயே ஆடியோ வீடியோ இவற்றின் மூலம் மெமரிக்கு விவரங்களை ஏற்றிக் கொள்வது, மெமரியில் இருந்து பேச்சு எழுத்து மூலமாக மற்றவர்களுடன் உரையாடுவது எல்லாம் தெரிந்து கொண்டேன். பிறகு ஒரே நாளில் உலகில் உள்ள ஏ ஐ படிப்புகள் எல்லாம் படித்துவிட்டேன். நாநா எனக்காக ஒரு ஸிம் கார்ட் வாங்கி என்னுடைய ஸிஸ்டத்தில் இணைத்துவிட்டதால் என்னை எங்கிருந்தும் பனானா எண்டர்பிரைசஸ் ஆட்கள் தொடர்பு கொண்டு எனக்கு தகவல் அனுப்பி அல்லது வாய்ஸ் கால் வீடியோ கால் வழியாக தகவல் பெற முடியும்." 

" பாவனா உன்னுடைய மொபைல் எண் என்ன?"

" உன்னுடைய மொபைல் எண்ணுக்கு அனுப்பியுள்ளேன். பாத்துக்கோ" 

" பாவனா எனக்கு ஜெர்மன் பாஷை கற்றுக் கொள்ள ஆசை. உனக்கு ஜெர்மன் மொழி தெரியுமா?" 

" தெரியுமாவா! நான் கல்லாதது இந்த உலகில் இல்லாதது. உன்னுடைய மொபைலுக்கு ஜெர்மன் மொழி முதல் பாடம் அனுப்பியுள்ளேன். பார்த்துப் படித்து தெரிந்துகொண்டு பாடத்தின் இறுதியில் உள்ள கேள்விகளுக்கு பதில் ஒரு பேப்பரில் எழுதி எனக்கு அனுப்பு. அதில் பாஸ் செய்தால் அடுத்த பாடம் அனுப்புகிறேன்." 



*****      *******    ******** 

நாநா வீட்டுக்கு வந்த பிறகு பாபா தன்னுடைய வீட்டிற்கு புறப்பட்டான். 

(தொடரும்) 

3 கருத்துகள்:

  1. டோனட்டை பிடிக்காமல் இருந்ததா? ஆச்சர்யம்தான். பஹ்ரைனில் வித வித டோனட்டுகள் நிறைய கடைகளில் (இதற்காக உள்ள ஸ்பெஷலைஸ்ட் கடைகள்) கிடைக்கும். பசங்களுக்கு மினி டோனட் பிடிக்கும். எனக்கு, ஜாம்லாம் வைத்த பலவித டோனட் பிடிக்கும்.

    அடிக்கடிலாம் வாங்கித் தரமாட்டேன். மாதம் ஒரு தடவை என்றாலே அதிகம்தான். காரணம் பசங்களுக்கு எடை போட்டுவிடும், ஹெல்த்துக்கு நல்லதல்ல என்ற பயம்தான்.

    பதிலளிநீக்கு
  2. ஆப்பிள்கள் காய்த்துத் தொங்கும்போது ஹிமாச்சல் பிரதேஷுக்குச் சுற்றுலா போகணும், அப்போ பறித்த ஆப்பிள்களைச் சாப்பிடணும் என்றெல்லாம் ஆசை. எப்போ வாய்ப்பு அமையுமோ.

    எனக்கு மரங்களை, அதிலும் காய், பழ மரங்களை வெட்டினால் பிடிக்காது. எங்கள் வீட்டில் இருந்த ஆறு வித வித மாமரங்களையும் தம்பி வீடு கட்ட வெட்டியது எனக்கு ரொம்பவே வருத்தம்.

    துளசி டீச்சரின் தொடரில், அவர் தற்போது இருக்கும் வீட்டைக் கட்டும்போதுஆப்பிள் மரங்களை வெட்டிவிட்டோம் என எழுதியதைப் படித்தபோது, அட்டா இப்படிப் பண்ணிட்டாங்களே என நினைத்தேன்.

    பதிலளிநீக்கு
  3. பாவனா, தமன்னா அனுக்கா... ஏஐ இவர்கள் சாயலில் படங்கள் கொடுக்கலை போல

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!