coffee லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
coffee லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

15.2.16

"திங்க"க்கிழமை 160215 :: காலையில் காஃபி... மாலையிலும் காஃபி!












                                         Image result for brass coffee filter images   Image result for brass coffee filter images

காலை எழுந்த உடன் காபி என்பது வழக்கமாகி விட்டது.  பல் தேய்த்த கொஞ்ச நேரத்தில் காபி வரா விட்டால் கை நடுங்குகிறது, கண்கள் சிவக்கின்றன.. உடல் மெல்ல நடுங்கத் தொடங்குகிறது...!!!!  

காபி குடிப்பதை  நிறுத்த முடியுமா என்று என் பாஸ் சவால் விட்டார்.  முடியும் என்று சொன்னதோடு நிற்காமல், காலை காபி குடித்த பிறகு மாலை வரை குடிக்காமல் நிறுத்தியும் காண்பித்தேன்!

                                   Image result for coffee filter images    Image result for brass coffee filter images


சில நாட்களில் காபி நன்றாக இருக்கிறது.  அதே பொடி சில நாட்களில் வாசனை கூட இருப்பதில்லை.  அது ஏனென்பது புரியாத புதிர்.  பொடி வாகு, பால் வாகு என்று அவ்வப்போது ஆளுக்கொரு சமாதானம் சொல்வார்கள்.  ஆனாலும் ஒரு வாயாவது குடிக்காமலிருக்க முடிவதில்லை!


                                                   Image result for brass coffee filter images   Image result for brass coffee filter images

காபியிலிருக்கும் caffeine மூளையைத் தூண்டி விட்டு உடலைச் சுறுசுறுப்பாக்குகிறதாம்.

காபியிலும் caffeine இருக்கிறது.   டீத்தூளிலும் caffeine இருக்கிறது.  சொல்லப்போனால் டீத்தூளில் சற்று அதிகமாகவே இருக்கிறது.  எனினும் காபி போட நாம் பயன் படுத்தும் காபிப்பொடியின் அளவை விட தேநீர் போட நாம் உபயோகிக்கும் டீத்தூளின் அளவு கம்மிதானே..

நாங்கள் நரசுஸ் காபியிலிருந்து இந்தியா காபிக்கு  மாறி, பின்னர் லியோ, ஈஸ்வரன் காபி,  ஐயங்கார்க் காபி என்று பயணித்து இப்போது காபி டே மற்றும் சுந்தரம் காபியில் ஐக்கியமாகியிருக்கிறோம்.   

திருச்சியில் ஜோசப் காபி நன்றாயிருக்குமாமே...  வைகோ ஸார்,  தமிழ் இளங்கோ ஸார் சொல்லலாம்.  அல்லது கீதா மேடம் கூடச் சொல்லலாம்!  'கோதாஸ் காபி என்று ஒரு ரகம்!  எனக்கு முதன் முதலில் சொன்னது - அல்லது தந்தது - அனன்யா மகாதேவன்.  நன்றாயிருந்தது.  ஆனால் இதில் எல்லாம் சிக்கரி சதவிகிதம் அதிகம்.  (நாங்கள் அரைக்கிலோ காபிப்பொடிக்கு 50 கிராம் சிக்கரி சேர்க்கிறோம்)

-  காபிப் பொடியை வாசனை போகாமலிருக்க குளிர்சாதனப்பெட்டியில் வைத்திருப்பவர்கள் இருக்கிறார்கள்.  (ஆனால் கு.சா பெட்டியிலிருந்து எடுத்துத் திறந்து பார்த்தால் வாசனை இருக்கிறதா என்று கேஜி கேட்கிறார்!)


- அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாக வாங்குபவர்கள் இருக்கிறார்கள்.


- சில வீடுகளில் இன்னமும் தினமும் கொட்டை வறுத்து, அரைப்பவர்கள் இன்னமும் கூட இருக்கிறார்கள்.  ஒரு வாரத்துக்கோ, பத்து நாட்களுக்கோ மொத்தமாக வறுத்து வைத்துக் கொண்டு தினமும் கொஞ்சம் எடுத்துப் போட்டு அரைப்பவர்கள் இருக்கிறார்கள்.



- பித்தளையில் காபி பில்டர் வைத்திருப்பவர்கள் இருக்கிறார்கள்.  (அதில்தான் துளைகள் சிறிதாகப் போடமுடியும் என்று சொல்வார்கள்.  அது முன் காலத்துக்கு ஓகே.  இப்போது எவர்சில்வர் பில்டர்களிலும் லேசர் மூலமாகவோ எப்படியோ சிறுதுளைகள் போட முடியும்.  துளைகள் பெரிதானால் டிகாக்ஷன் இறங்குவது வேகமாகி சத்தில்லாமல் இறங்கி விடக் கூடும்!)


                      Image result for brass coffee filter images                   
Image result for brass coffee filter images

- ஒரு வெள்ளைத் துணியில் பொடியைப் போட்டுச் சுற்றி வெந்நீரில் மூழ்க வைத்து டிகாக்ஷன் தயாரிப்பவர்கள் இருக்கிறார்கள்.


பெர்கொலெட்டர் எனும் காபி மேக்கரில் வெந்நீர் கொதி நிலையில் விட்டு விட்டு இறங்குவதாலேயே வாசனையாக டிகாக்ஷன் கிடைக்கும்.  காபி மேக்கரோ, பில்டரோ, சுத்தம் செய்யும்போது அதன் துளைகளைப் பெரிதாக்கி விட்டோமானால் தரமான டிகாக்ஷன் கிடைக்காது!  பெர்கொலேட்டரில் பலவகை.  கேஜி ஸ்டீம் பெர்கொலேட்டர் வைத்திருக்கிறார்.

 Image result for coffee filter images  Image result for coffee filter images

- சில பேருக்கு கலராக இருந்தால்தான் காபி காபியாக ஒத்துக் கொள்வார்கள்.  அவர்களுக்காக இருப்பதுதான் சிக்கரி.   இந்தச் சிக்கரியால் நிறம் வழங்குவதைத் தவிர வேறு உபயோகமில்லை. சிக்கரியில் சில் மருத்துவ உபயோகங்கள் - ரத்தக்கொதிப்பு குறையும் என்பது போல - சொல்கிறார்கள்.  காபி சாப்பிடுவதால் கேன்சர் வரும் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள், சில வகைக் கேன்சர் குணமாகின்றன என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்)   சிகான் என்கிற செடியிலிருந்து கிடைப்பது இந்தச் சிக்கரி!  சிக்கரி இல்லாமல்தான் நான் காபி குடிப்பேன் என்று அடம் பிடிப்பவர்களும் உண்டு.



- காபிக்கொட்டை ஒரே அளவாக, நிறமாக இருந்தால் பீபெரி பிளான்டேஷன் ஏ.  கலந்திருந்தால் பிளான்டேஷன் பி.   காபிக்கொட்டை தரம் பிரிக்குமிடத்தில் இருக்கும் மிஷினில் நிறம் குறைந்த கொட்டை வரிசையில் வந்தாலே அங்கிருக்கும் 'பின்' ஒரு துள்ளு துள்ளி அதை வரிசையிலிருந்து வெளியேற்றி விடுமாம்.  உடைக்க முடியாத கொட்டையாய் இருந்தால் அதை செர்ரி என்றும்,  உடைக்கக் / பிரிக்கக் கூடியதாய் இருந்தால் அதை பீ பெரி என்றும் சொல்வார்கள்.    நிறம் குறைந்த கொட்டைகள் நிறைய இருந்தால் அது ரோபெஸ்ட்டா.


நரசுஸ், லியோ, இந்தியா, காபி டே, சுந்தரம், ஈஸ்வரன் என்று நிறைய பெயர்களில் காபிப்பொடிக் கடைகள் இருந்தாலும் கொட்டைகளை இவர்கள் ஒரே இடத்திலிருந்துதானே வாங்குகிறார்கள்?


சிலர் வறுக்கும்போது சற்று வெளுப்பாக வறுக்கிறார்கள்.  சிலர் சரியான பதத்தில் வறுக்கிறார்கள்.  சிலர் அந்தப் பதத்தைத் தாண்டியும் சற்றே கருக வறுக்கிறார்கள்.  எது எப்போது நன்றாயிருக்கும் என்று சொல்ல முடியாது, அல்லது அவரவர்கள் சுவையைப் பொறுத்தது!


என் பாட்டி காபிக்கொட்டை வருப்பதற்குமுன் சிறிது சர்க்கரையை வெறும் வாணலியிலிட்டு கருக புரட்டிக் கொள்வார்.  அதைக் காபிகொட்டையுடன் சேர்த்து வறுக்கும்போது சிக்கரி போடாமலேயே நிறம் கிடைத்து விடும்.


-  பில்டரில் காபிப்பொடியை நிரப்பி அழுத்தி விடுபவர்களும் உண்டு, அழுத்தாமல் வைப்பவர்களும் உண்டு.  சிலர் மேலாக சிறிது சர்க்கரைத் தூவுவார்கள்.  சிலர் பில்டரில் காபிப்பொடியை இட்டு நிரப்பியதும் அதை மூடுமளவு கைப்பிடியுடன் கூடிய - உள்ளே அடங்கக் கூடிய - ஒரு தட்டு போன்ற மூடியை வைத்து விட்டு வெந்நீரை ஊற்றுவார்கள்.


                  Image result for coffee filter images  Image result for brass coffee filter images

-  பொதுவாக ஒவ்வொருமுறை வெந்நீரை ஊற்றும்போதும் கொதிக்கக் கொதிக்க ஊற்றுவார்கள்.  அது இறங்கவில்லை என்றால் அதைக் கரண்டியால் தட்டுபவர்கள் உண்டு.  எனக்கு அதில் (தட்டுவதில்) உடன்பாடு இல்லை.  தானாய் இறங்கவேண்டிய டிகாக்ஷனை தடியால் அடித்து இறக்கினால் சுவை இருக்காது எனும் கட்சியைச் சேர்ந்தவன் நான்!


                                                                    Image result for brass coffee filter images

முதலில் இறங்கும் கள்ளிச்சொட்டு டிகாக்ஷன் சுவைதான்.  அதை முதலிலேயே ஒருவர் செலவு செய்து விட்டால் அப்புறம் காபி சாப்பிடுபவர்கள் பாவம்!   இப்படி இரண்டாம் டிகாக்ஷனில் கிடைக்கும் காபியை அந்தக் காலத்தில் தஞ்சாவூர் ரெயில்வே ஸ்டேஷனில் 'பிடில்' என்று சொல்வார்களாம்.  இப்போதும் உண்டா என்று தெரியவில்லை!


சிக்கரிக்கு பதில் காபிப்பொடியில் புளியங்கொட்டை வறுத்து அரைத்துச் சேர்ப்பவர்கள் உண்டு.  சில திருமணங்களில் சில சமையல் காண்டிராக்டர்கள் காரணமாக இது அடிக்கடி நடப்பதாகக் கேள்வி!  அதேபோல, ஒரு பெருநகரத்தில் இளசுகள் கூடும் கடைகளில் காபியில் சிறிதளவு - மிகச் சிறிதளவு - அபின் கலப்பார்கள் என்று கேள்விப்பட்டது உண்மையா பொய்யா எனக்குத் தெரியாது!  ஒரு புகழ் பெற்ற இன்ஸ்டன்ட் காபியில் கூட இதைக் கலக்கிறார்கள் என்றும் சொல்வார்கள்.  வதந்திதான்.  நாமென்ன கண்டோம்!  ஒரு கதையில் காபிப்பொடியில் சீயக்காய்க் கலந்து கொடுத்து, அது என்னவென்று தெரியாத வரை அதைக் கொண்டாடினார்களாம் மக்கள்.  உண்மை தெரிந்த ஒரு நாளில் கடைக்காரர்களை அடித்துத் துரத்தி விடுவார்கள்!  கதை பெயர் நினைவில்லை.

எங்களுக்குத் தெரிந்த சமையகாரர் ஒருவர் இருந்தார்.  அவர் கலந்து கொடுக்கும் நெஸ் காபி மட்டும் தனிச் சுவையாய் இருந்தது என்று சொன்னவர்களுக்குத் தெரியாது, அவர் அதில் அட்ஜஸ்ட் செய்ய, புளியங்க்கொட்டைத் தோலை மட்டும் வறுத்து அரைத்து வைத்துக் கொண்டு சேர்த்தார் என்று!


நடுவில் சில நாட்கள் காபி வில்லை கிடைத்துக் கொண்டிருந்தன.  இப்போதும் கிடைக்கறதா தெரியவில்லை.  அந்த வில்லையை எடுத்துத் தூளாக்கி கொதிக்கும் வெந்நீரில் போட்டு வடிகட்டி எடுக்க வேண்டும்! பாலுடன் கலந்து குடிக்கலாம்.

காபியைச் சூடாகக் குடிக்கத்தான் எனக்குப் பிடிக்கும்.  ஐஸ் காபியில் எனக்கு உடன்பாடில்லை!

போதுமா காபி புராணம்?  இன்று காலை அருமையான வாசனையான காபி.  இதே பொடியில் இதே பாலில் (அட, புது கவர்தான்!) நேற்று போட்ட காபி மண்ணு மாதிரி இருந்தது நினைவுக்கு வந்ததும் 'அது ஏன் அப்படி?' என்று எழுந்த சிந்தனையின் விளைவு இந்தப் பதிவு!
 

காபியை டிகாக்ஷன் அதிகமாகக் கலந்து கறுப்பாகக் குடிப்பதிலோ, கம்மியாகக் கலந்து வெளுப்பாகக் குடிப்பதிலோ எனக்கு உடன்பாடில்லை. சரியான அளவில் டிகாக்ஷன் கலந்து சர்க்கரை கம்மியாகக் கலந்து குடிப்பேன்.  இது என் ரசனை.
 
எக்ஸ்ப்ரசோ காபியை வீட்டிலேயே தயாரிக்க  :  டிகாக்ஷனைக் கொஞ்சம் எடுத்து மிக்ஸியில் விட்டுக் கொண்டு, புது வெண்ணெய் ஒரு துளி இட்டு ஒரு அடி அடித்துக் கொண்டு பாலுடன் சேர்த்துக் குடித்துப் பார்த்திருக்கிறீர்களா?


அந்தக் காலத்தில் மாடு வைத்து பால் கறப்பவர்கள் வீட்டில் புதிதாகக் கறந்து, காய்ச்சி, டிகாக்ஷன் கலந்து சாப்பிடுவார்கள்.  அது ஒரு ருசிதான்.  இப்போதெல்லாம் நகரங்களில் எங்கே மாடு வீட்டில் வைத்துக் கொள்ள முடிகிறது!  இதிலும் பசும்பால், எருமைப் பால் என்று இரண்டு பிரிவுகள் - கட்சிகள் - உண்டு.  நான் பசும்பால் கட்சி!   தண்ணீர் விடாமல் காய்ச்சிக் கலப்பதில் உடன்பாடில்லை!    இப்போதும் மதுரையில் எங்கள் வீட்டில் கறந்த பால் வாங்கித்தான் காபி.   இங்கு சென்னையில் கவர் பால்தான்!  இரண்டுக்கும் வித்தியாசம் குடிக்கும்போதே தெரியும்.  கீதா சாம்பசிவம் வீட்டில் கவர் பால் கிடையாது என்று நினைக்கிறேன்!
 
 
ஆமாம், தேநீர் பற்றி ஒரு பதிவு போட வேண்டுமா என்ன!
 
 
 
 
 
 
 
படங்கள்  :  இணையத்திலிருந்து நன்றியுடன்...


6.4.12

எனக்கு வேண்டும் - பாஹே

                                 
                              எனக்கும் கூட 
                              காணி நிலம் வேண்டும் - 

                              பால்கனியுடன் ஒரு மாடி அறை 
                              அட்டாச்டு பாத்ரூமுடன்,

                              கீழே மெஸ் நடத்தும் மாமி -
                              இரு வேளை காபி, மதிய சாப்பாடு 
                                        
                              இரவு டிபன், பால்
                              அப்பப்போ செகண்ட் டோஸ் காபி - 
                              மாமி தந்து விட வேண்டும் (விலைக்குத்தான்)
                              
                              பத்திரிகைக் கடை ஒன்று மஸ்ட்.
                              ஒரு நூலகம் கூட ரொம்ப ரொம்ப அவசியம். -
                              எல்லா லேட்டஸ்ட் வெளியீடுகளுடனும்.

                              மாமிக்கு ஒரு பள்ளிப் பையன்    
                              சைக்கிளுடன் இருக்க வேண்டும்.
                              மருந்துக் கடை பத்திரிகைக் கடைகளுக்குப்
                              போய் வருபவனாக அவன் -

                              ஒரு கல்லூரி மாணவி
                              மாமிக்கு இருக்கட்டுமே - 
                              மறந்து விட்ட ஒண்ணா
                              மாமி இரண்டாம் தாரமாக 
                              இருந்தால் பெட்டர் - 

                              குடியிருப்பு ஒழுங்கான வீதியாக
                              எல்லையில் ஓடும் ஆறு -
                              குளிக்க வசதியான படிக்கட்டுடன் -
                              ரொம்ப முக்கியம்
                              கரையில் ஒரு படர்ந்து விரிந்த ஆலமரம்.
                              தலைவைத்துப் படுக்க வேர்கள் புடைத்து -
                                      
                              இந்த சொர்க்கம்
                              எங்கே கிடைக்கும் -
                              எனக்கு வேண்டுமே.......  

                              வேண்டவே வேண்டாம்
                              எனக்கு எப்போதும் -

                              ஒரு கடப்பாடு போல
                              வேளா வேளைக்கு 
                              கட்டாய உணவு.

                              பேசத் தெரியாத,
                              படித்ததைப் பகிரத் தெரியாத
                              நட்பு, உறவு.

                              விஜய்களும், தனுஷ்களும், ரஜினிகளும் 
                              அழையா விருந்தாளிகளாய்
                              தினம் தினம் வந்துபோகும்
                              முட்டாள் பெட்டி
                              வார, மாத பருவ ஏடுகள்.