சற்றே கவனமாகச் செய்யா விட்டால் கொழகொழக்கட்டை!
எனக்கு மிகவும் பிடித்த பண்டம். அதனாலேயே அதிகமாகக் கிடைக்காதது! அல்லது அதிகமாகக் கிடைக்காததால் பிடித்துப் போகிறது!
இது செய்வது பழகிய கைகளுக்கு மிகச் சுலபம். பழகாத கைகளுக்கு பெரும் சவால்.
இதன் கஷ்டமான பகுதி பதம் பார்த்து கிளறிய மாவை இறக்கி வைப்பது. மிகக் கஷ்டமான பகுதி கப் செய்வது!
படிப்படியாக வருகிறேன்.
கொழக்கட்டை
இரண்டு வகைப்படும். காரக் கொழுக்கட்டை, தித்திப்புக் கொழுக்கட்டை.
மூன்றாவதும் ஒன்று உண்டு அது அம்மிணிக் கொழுக்கட்டை. அதற்குத் தனி ரசிகர்
மன்றமே உண்டு.
காரக் கொழுக்கட்டைதான் எனக்கு ரொம்பப்
பிடிக்கும் என்றாலும் தித்திப்புக் கொழுக்கட்டை அதைவிட அதிகமாகப்
பிடிக்கும்! திருப்பித் திருப்பி இதையே சொல்லிக் கொண்டிராமல்
செய்முறைக்குப் போகலாம்.
வழக்கமான டிஸ்கி : இது யாருக்கும் தெரியாததல்ல... ஒன்றிரண்டு தெரியாத பேர்களுக்காவது இது உதவுமானால்.... ஹிஹிஹி... அதேதாங்க!
பச்சரிசியை
புடைத்து தூசி, கல் பொறுக்கி சுத்தம் செய்து எடுத்து, நீரில் அலசிக் கழுவி
உலர வைத்துக் கொண்டு மெஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும்.
இப்போதெல்லாம் கொ.க மாவு ரெடிமேடாகவே கிடைக்கிறது என்றாலும் அதை வாங்கி உபயோகித்ததில்லை!
ஒரு டம்ளர் அரிசி மாவுக்கு ஒரு டம்ளர் தண்ணீர். தண்ணீரை பாத்திரத்தில் கொட்டி அடுப்பில் வைத்து, அடுப்பைப் பற்ற வைத்து சிம்மில் வைத்துக் கொண்டு, தண்ணீர் கொதிக்கும்போது அரிசி மாவைச் சிறிது சிறிதாகத் தூவி, கட்டி கட்டாமல் கிளறவும். ரொம்ப நேரம் அடுப்பில் வைத்திருக்கக் கூடாது. கையில் ஒட்டாமல், அதே சமயம் நீருடன் மாவு கலந்து பதமாக வந்த உடனேயே இறக்கி வைத்து விடவும்.
மாவை நன்றாக உருட்டி, இரண்டு பாகமாக வைத்துக் கொள்ளவும். ஒன்று காரக் கொழுக்கட்டைக்கு, ஒன்று தித்திப்புக் கொழுக்கட்டைக்கு!
(ஒன்றாகவேயும் வைத்துக் கொள்ளலாம், தப்பில்லை! நாங்கள் கொழுக்கட்டைச் செய்ய ஆளுக்கு ஒன்று செய்வோம். ஒரு மாவு உருண்டையில் காய்ந்த மிளகாய் சொருகி வைப்போம். காரக் கொழுக்கட்டைக்கான பகுதி என்று அடையாளம் காண!)
அதைத் தட்டு கொண்டு மூடக் கூடாது. நீராவி பட்டு மாவின் பதம் மாறலாம். எனவே ஒரு ஈரத்துணியால் சுற்றி வைக்கலாம்.
தித்திப்புப்
பூரணத்துக்கு : தேங்காய்த் துருவலை வாணலியில் இட்டுப் புரட்டி, கொஞ்சமாக
வெல்லச் சீவலை அதில் போட்டுக் கிளறவும். (நிறைய வெல்லம் சேர்த்தால் நீர்
விட்டுக் கொண்டு படுத்தும். கொ.க சரியாக வராது!) ஓரளவு இரண்டும் கலந்து
வந்த உடன் வெல்லம் உருகி பாகாகும் முன்பு.இறக்கி விடலாம். அதில் ஏலக்காய்
(தோல் நீக்கி விடவும். அது இருந்தால் கப்பை( !! )ச் சிதைக்கும்!) ,
ப.கற்பூரம் போட்டுக் கலந்து ஓரமாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
கார
பூரணம் : இதில் இரண்டு வகை உண்டு. முதலில் எங்கள் வீடுகளில் செய்வதைச்
சொல்கிறேன். ஒரு டம்ளர் உளுத்தம்பருப்பை அரைமணி நேரம் ஊற வைத்து எடுத்து
மிக்ஸியில் கரகரப்பாக அரைத்துக் கொண்டு, அதை குக்கரில் இட்லி போல் இட்டு
அவித்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் அதை உதிர்த்து வாணலியில் இட்டு,
காய்ந்த மிளகாய், (பச்சை மிளகாய்ப் போட்டால் உடனே, அன்றே செலவு செய்ய
வேண்டி வரும். காய்ந்த மிளகாய்ப் போட்டால் இரண்டு நாட்கள் கழித்தும்
உபயோகிக்கலாம்) பெருங்காயம், உப்பு (உப்பு முதலிலேயே அரைக்கும் போது
போட்டால் நீர் விட்டுக் கொள்ளும். எனவே இங்கு சேர்க்கலாம்) போட்டுக்
கொண்டு கடுகுடன் தாளித்து எடுத்து உதிர்த்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இரண்டாவது
வகை : உசிலிக்குச் செய்வது போல கடலைப் பருப்பையும் துவரம்பருப்பையும் சம
அளவு எடுத்துக் கொண்டு, மிகச் சிறிதளவு உளுத்தம்பருப்புச் சேர்த்து
ஊறவைத்து, அரைத்து, குக்கரில் இட்டு அவித்து எடுத்து, உதிர்த்து அதே போல
காய்ந்த மிளகாய், பெருங்காயத்துடன் தேவைப்பட்டால் கொஞ்சம் தேங்காய்த்
துருவலையும் சேர்த்துக் கொள்ளலாம். தேங்காய்த் துருவல் சேர்த்தால் உடனே
செலவு செய்யவேண்டிய நிலை வரும். அவ்வளவுதான்.
அடுத்து வரும் வேலைதான் கஷ்டமான வேலை.
கிளறி
வைத்திருக்கும் பச்சரிசி மாவை நெல்லிக்காய் அளவு எடுத்துக் கொள்ளவும்.
முன்னதாகக் கைகளில் நல்லெண்ணெய் தடவிக் கொள்வது உத்தமம். மாவு கைகளில்
ஒட்டாது. மாவை நன்றாக விரல்களுக்கிடையில் வைத்துப் பிசைந்து உருட்டி,
இரண்டு உள்ளங்கைகளுக்குமிடையே வைத்துத் தட்டையாக்கிக் கொள்ளவும்.
மறுபடி
விரல்களில் இலேசாக நல்லெண்ணெய் தொட்டுக் கொண்டு அந்த (சிலர் லேசாகத்
தண்ணீர் தொட்டுக் கொள்வார்கள்) தட்டையின் விளிம்புகளை சன்னமாக்கிக் கொண்டே
வரவும். அப்படிச் செய்து வருகையிலேயே மாவுப் பகுதி வளைந்து கோப்பை போல
உருப்பெற ஆரம்பிக்கும் - வர வைக்க வேண்டும். கோப்பைக் கிழியாமல் செய்ய
வேண்டும்.
அழகிய கப் உருவானவுடன், அதில்
பூரணத்தைக் கொஞ்சமாக (கை போடாமல் ஒரு ஸ்பூன் உபயோகிக்கவும்) நிரப்பி,
தித்திப்புக் கொழுக்கட்டையாயின் முனைகளை ஒன்று சேர்த்து மடக்கிச் சேர்த்து
உருண்டை வடிவத்திலேயே முனை கூம்பிய வடிவத்தில் வைக்கவும்.
காரக்
கொழுக்கட்டையாயின் கப்பைக் கப்பல் அல்லது படகு போல ( ! ) மடக்கி,
விளிம்புகளை எதிரெதிர்த் திசையில் சின்னச் சின்னதாய் மடக்கி வைக்கவும் -
பதர்ப்பேணிகள் போல, அல்லது சூர்யகலா-சந்திரகலா ஸ்வீட் இருக்குமே அது போல!
இவைகளை தண்ணீர் அளவாக வைத்த குக்கரில், விசில் போடாமல், இட்லித் தட்டுகளில் வைத்து நான்கு நிமிடங்கள் வைத்து இறக்கவும்.
சாப்பிடலாம்.
குக்கரில் அதிக நேரம் வைத்தால் இறக்கியவுடன் கொழுக்கட்டைகள் வாயைப் பிளந்து விடும். அது சரியாக வரவேண்டும்.
பூரணம்
அதிகமாக வைத்தாலும் இதே கதி வரும். பூரணம் கம்மியாக வைத்தால் வெறும் மாவு
மட்டும் வாயில் கிடைத்து வெறுப்பேற்றும். அளவு சரியாய் வைக்கப் பழக
வேண்டும். தித்திப்புப் பூரணத்தின் தேங்காய்த் துருவலில் நார் இல்லாமல்
பார்த்துக் கொள்வது நல்லது. கப்பை உடைக்கும் அல்லது கிழிக்கும்!
கப் கெட்டியாக நாலு செங்கல் வைத்துக் கட்டிய சுவர் போல இருக்கக் கூடாது. ஸன்னமாக வேண்டும், அதே சமயம் உறுதியாகவும் இருக்க வேண்டும்.
பூரணங்கள் தீர்ந்து மாவு மட்டும் பாக்கியிருக்கும் பாருங்க... அங்கே ஆரம்பிக்கும் அம்மிணிக் கொழுக்கட்டைகளின் ராஜ்ஜியம்!
மொத்த
மாவிலும் உப்பு, கொத்து மல்லி, பெருங்காயம், பச்சை மிளகாய் அரைத்துச்
சேர்த்து இஷ்டப்பட்ட வடிவில் உருட்டி குக்கரில் வைத்து எடுத்து....
சாப்பிடலாம்!
படங்கள் : நன்றியுடன் இணையத்திலிருந்து....
===================================================================
"கேட்டது கேட்டபடி" . ஏழுநாள் தொடர். 01.
படங்கள் : நன்றியுடன் இணையத்திலிருந்து....
===================================================================
"கேட்டது கேட்டபடி" . ஏழுநாள் தொடர். 01.
"தங்கையிடமா? நான் சொல்கிறேன். ஆமாம் அதெல்லாம் நான் பார்த்துக்கறேன். ................... நோ நோ நான் இந்த ஊருல உன் பிரெண்டுன்னு இருக்கும்போது, நீ வேற எங்கேயும் தங்க வேண்டாம். நீ திரும்பி ஊருக்குக் கிளம்பறதுக்குள்ள நான் வந்துவிடுவேன். சின்ன ட்ரிப்தான். .............. ஆமாம். இங்கேயா? ஜானகி, வீட்டு வேலைக்காரங்க, வாட்ச்மான் எல்லோரும் இருக்காங்க . ................. சேச்சே அப்படி எல்லாம் எதுவும் இல்லை; இருக்காது. ஜானகி அந்த டைப் இல்லை." .
போனை வைத்த மாதவன், "ஜானகீ !" என்று உரத்த குரலில் கூப்பிட்டான்.
"என்ன அண்ணா? நான் இங்கேதான் இருக்கேன்! "
(தொடரும்)


















