ஞாயிறு, 30 அக்டோபர், 2011

கரும்புக் காட்டு நாகம்


                         
வேலாயிக்கு தூக்கமே வரவில்லை. இது என்ன பிழைப்பு? நாளும் செத்து செத்துப் பிழைக்கவேண்டி இருக்கு? எல்லோரும் வேலைக்குப் போறாங்க, சம்பாதிக்கிறாங்க. ஆம்பிளைங்க செய்யுற அதே வேலையை ஒரு பொம்பிளை செய்தாலும் கூலி என்னவோ அவங்களுக்குக் கொடுப்பதைவிட கம்மியாதான் கொடுக்கிறாங்க. தன் புருஷன் செய்து கொண்டிருந்த அதே கரும்புக் காட்டு (கரும்பு வெட்டும்) வேலையை, தான் செய்வோம் என்று போய் நின்ற போது, புருஷன் இறந்து சில மாதங்கள்தான் ஆகியிருந்தது. புருஷன் வேலை செய்து சம்பாதித்து வந்ததை எல்லாவற்றையும் அவனே குடித்துத் தீர்த்துவிடுவான். எப்பொழுதாவது (அதிசயமாக) குடிக்காமல் வந்தான் என்றால், வேலாயி சொல்வது எல்லாவற்றுக்கும் 'பூம் பூம் மாடு ' போல தலையை ஆட்டி ஆட்டிக் கேட்டுக் கொள்வான். கையில் / பையில் இருக்கின்ற பணத்தை, தாராளமாக வேலாயியிடம் எடுத்துக் கொடுத்து விடுவான். 

   

அந்த ஊரில் வேலை கொடுக்கும் ஏஜெண்ட் கமிஷன் கந்தசாமி. யாருக்கு என்ன வேலை தெரியும், எதை எதை யார் எப்படிச் செய்வார்கள் என்பதெல்லாம் கந்தசாமிக்கு அத்துப்படி. அதைவிட யாருக்கு, என்ன வேலை செய்ய ஏற்பாடு செய்தாலும், அவர்களிடம் ஒரு கணிசமான தொகையை கமிஷனாக பெற்றுவிடுவார்.  
            
சென்ற ஆண்டு அந்த ஊருக்கு வந்த இன்சூரன்ஸ் ஏஜெண்ட் ஒருவருக்கு கந்தசாமி நிறைய ஆள் பிடித்துக் கொடுத்தார். வேலாயியின் புருஷன் சீனிக்கும் ஒரு பாலிசி - ஒரு லட்ச ரூபாய்க்கு எடுத்துக் கொடுத்தார், கந்தசாமி. அதற்கான கமிஷனை, அந்த இன்சூரன்ஸ் ஏஜெண்டிடமே கறந்துவிட்டார். சீனிக்கு அன்று ஒரே மகிழ்ச்சி. வேலாயியிடம் பெருமையாக சொல்லிக் கொண்டான். "தே - இங்க பாரு கரும்புக் காட்டுக்கு வேலைக்குப் போகாதே, பூச்சி பொட்டு (பாம்பு என்ற சொல்லையே வாயால் சொல்லமாட்டாள் வேலாயி) எதுனாச்சும் போட்டு வெச்சதுன்னா உசுருக்கு உத்தரவாதம் இல்லே. அப்பிடீன்னெல்லாம் சொல்லுவியே, இப்ப ஒண்ணும் கவலை இல்லே; நான் போயிட்டாலும் உனக்கு ஒரு லட்ச ரூபாய் கிடைக்கும்" என்றான் பெருமையாக. 
              
"மச்சான் - எனக்கு அந்த ஒரு லட்ச ரூபா எல்லாம் வேணாம். என் கூட நீ இருந்தா போதும். பொறக்கப் போற நம்ம குழந்தை, நீ, நான் எல்லோரும் ஒண்ணா சந்தோஷமா வாழ்ந்தா - அது போதும் எனக்கு" என்றாள் வேலாயி. 
                   
நான்கு மாதங்கள்தான் பாலிசி பிரிமியம் கட்டினான் சீனி. அதையும் ஒவ்வொரு மாதமும் வசூல் செய்து டவுனில் இருந்த ஏஜெண்டுக்கு அனுப்பிக் கொண்டிருந்தார் கந்தசாமி. நான்காவது தவணை கந்தசாமியிடம் கொடுத்துவிட்டு வேலைக்குப் போனவன், உயிரோடு திரும்பவில்லை. சீனியின் போஸ்ட் மார்ட்டம் தகவல்படி - அவன் இறந்தது குடியாலா அல்லது பாம்பு தீண்டியதாலா அல்லது அவன் உடல் கண்டு எடுக்கப்பட்ட ரயில்வே டிராக் அருகில் - ஏதாவது ரயில் மோதியதாலா அல்லது இவை அனைத்தும் காரணமா என்று பட்டி மண்டபமே நடத்தியிருந்தார் டாக்டர். ஊரிலே சில பேர் கமிஷன் கந்தசாமிதான் சீனியின் மரணத்துக்குக் காரணம்; பட்டணத்து ஏஜெண்டோடு சேர்ந்து ஒரு லட்ச ரூபாய் அடித்துவிட்டார் என்று பேசிக் கொண்டார்கள். சீனியின் இன்சூரன்ஸ் பாலிசி, 'கமிஷன் கந்தசாமி'யிடம்தான் இருந்தது. ('இதெல்லாம் ரொம்ப பத்திரமா வெச்சிக்கணும் சீனி. இது என்கிட்டயே இருக்கட்டும்; நீ மாசா மாசம் பிரிமியம் பணம் மட்டும் கொண்டு வந்து கொடுத்து விடு. நான் அதை ஏஜெண்டுக்கு அனுப்பிடறேன்.') 
                   
இன்சூரன்ஸ் ஆபீசில் ஒரு நுட்பமான பாயிண்டில் பாலிசி தொகை கிடையாது என்று சொல்லிவிட்டார்கள். சீனி இறந்த தேதிக்குப் பிறகு, இரண்டு நாட்கள் கழித்து, அவன் பெயரில், பிரிமியம் கட்டப் பட்டிருந்தது. (ஏஜெண்டுக்கு சீனி இறந்த தகவல், ஒரு வாரம் கழித்துத்தான் தெரியும். எனவே அவர் பிரிமியம் கைக்கு வந்தவுடனேயே சீனி பெயரில் அதைக் கட்டிவிட்டார்.) செத்துப் போனவர் எப்படி இரண்டு நாட்கள் கழித்து பிரிமியம் கட்டினார்? என்று ஒரு (புத்திசாலி) விசாரணை அலுவலர் கேள்வி கேட்க - இன்சூரன்ஸ் அலுவலகம் அதை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு விட்டது. வேலாயி சார்பாக வாதிடுவோர் யாரும் இல்லை. 
            
'யாரைச் சொல்லி என்ன பயன்? வேலாயிக்கும் அவளுடைய குழந்தை மலருக்கும் வயிறு என்ற ஒன்று இருக்கின்றதே? வயிறு மட்டும் இல்லை என்றால் இந்த உலகில் ஏழ்மையே இல்லாமல் இருக்குமே! 
               
வேலாயிக்கு, கரும்பு வெட்டுகின்ற வேலையில் இருக்கின்ற கஷ்டங்கள் தெரியாமல் இல்லை. கரும்புக் காட்டின் சொந்தக்காரி ஒரு பெண் என்பதால், சீனி சாவுக்கு தேடி வந்து ஆறுதல் சொன்னார், அந்தப் பெண்மணி. தயங்கித் தயங்கிதான் வேலாயி அந்தப் பெண்மணியிடம், தன் புருஷன் செய்த வேலையைத் தனக்குக் கொடுக்கமுடியுமா என்று கேட்டாள். 
              
'வேலாயி இது சுலபமான வேலை இல்லை. ரொம்ப ரிஸ்க் இருக்கற வேலை. கரும்புக் காட்டில் கருநாகம், விஷப் பூச்சிகள் எல்லாம் இருக்கும். கரும்போடு கரும்பாக அது இருப்பதை கண்களாலும் காதுகளாலும் உணர முடியும். ஒரு கணம் கவனமில்லாமல் இருந்தால் கூட, உயிருக்கே ஆபத்தாக ஆகிவிடும்.' என்றார். 
                          
'அம்மா இந்த வேலையின் நெளிவு சுளிவு எல்லாம் ஓரளவுக்கு இவரிடமிருந்து தெரிந்துகொண்டேன். என்னால் இந்த வேலையைச் செய்ய முடியும் என்று நம்பிக்கை இருக்கின்றது. நான் செய்கிறேன்' என்றாள் வேலாயி. 
                
'சரி' என்று ஒப்புக் கொண்டார், அந்தக் கரும்புக் காட்டு எஜமானி. 
                   
ஒரு மாதம், வேலை சரியாகத்தான் நடந்தது. முதலில் ஆண் தொழிலாளர்கள் பெருத்த சத்தம் எழுப்பியபடி, கம்புகளால் கரும்புகளைத் தட்டியபடி, கால்களை ஒவ்வொரு அடியும் ஓசை எழும்படி வைத்து, காட்டினுள் செல்வார்கள். பாம்புகள் இருந்தால், அவை இவர்களுக்கு அஞ்சி, காட்டுக்குள் வெகு தூரம் சென்றுவிடும்.  அதன் பிறகு, பெண் தொழிலாளர்கள் ஆண் தொழிலாளர்கள் சென்ற வழியில் இருக்கின்ற கரும்புகளை வெட்டத் துவங்குவார்கள். 'பாம்பு போக்குவது' என்று இதை அந்த ஊர் மக்கள் சொல்வார்கள். நாள் தோறும் கரும்பு வெட்டி, அன்றைய கூலியை, அன்றே வாங்கி, கஞ்சி வைத்து மகளுக்கும் கொடுத்து, தானும் சாப்பிட்டு, சந்தோஷமாக இருந்து வந்தாள் வேலாயி. 
        
கொட்டும் மழையில் ஒரு நாள் கரும்பு வெட்ட சென்று, வானம் கறுத்து இருந்ததாலும், நிலத்தில் நீர் தேங்கி இருந்ததாலும், கையில் பிடித்திருந்த அரிவாளுடன் வழுக்கி விழுந்தாள் வேலாயி. கையில் பிடித்திருந்த அரிவாள், பிடியிலிருந்து நழுவி மண்ணில் விழ, அங்கே பயந்து போன நாகம் ஒன்று பாய்ந்து காட்டுக்குள் சென்றது. அருகே கரும்பு வெட்டிக் கொண்டிருந்த அவளுடைய தோழி காத்தாயி, வேலாயியை கைகளால் தூக்கி, கரும்புக் காட்டுக்கு வெளியே கைத்தாங்கலாக அழைத்து வந்து, அருகில் இருந்த டீக்கடை ஒன்றிலிருந்து டீ வாங்கிக் கொடுத்து ஆசுவாசப் படுத்தினாள். காத்தாயி சொன்னாள்: "வேலாயி - நான் ஒன்டியாளு, இருந்தாலும் செத்தாலும் யாருக்கும் ஒண்ணும் கவலை இல்லே. ஆனா உன்னை நம்பி ஒரு ஜீவன் இருக்குது. அதுவும் பொட்டப் புள்ள. உனக்கு ஏதாவது ஒண்ணு ஆயிடுச்சுன்னா அதனோட கதி என்ன ஆகும்னு யோசிச்சுப் பாரு. நீ பேசாம அந்த கமிஷன் ஏஜென்ட் கந்தசாமியைப் போய்ப் பார்த்து, வேற எதுனாச்சும் பாதுகாப்பான வேலையாப் பாத்துக்கோ. இந்த வேலை உனக்கு வேண்டாம் தாயி". வேலாயிக்கும் அது சரி என்றே பட்டது. 
                      
மறுநாள் காலை கமிஷன் கந்தசாமி வீட்டுக்கு சென்றாள், வேலாயி. கந்தசாமி ஆரம்பத்தில் சீனி பற்றி மிகவும் வருத்தப் பட்டு, இரக்கப் பட்டுப் பேசினார். அதன் பிறகு, வேலாயி வேலை கேட்டு வந்த விவரம் தெரிந்தவுடன், "வேலாயி, உனக்கு இல்லாத வேலையா? இன்னும் பார்க்கப் போனால், உன் புருஷனுக்கு சேர வேண்டிய இன்சூரன்ஸ் தொகை கூட, இன்சூரன்ஸ் கம்பெனி மேல கேஸ் போட்டு, உனக்கு ஒரு மாசத்துல வாங்கிக் கொடுத்துவிடுவேன். கரும்புக் காட்டுல வேலை இல்லாத நேரங்களில் உன் புருஷன் கட்டிடம் கட்டுகின்ற இடங்களில் வேலை செய்தான். நீ சித்தாளு வேலை எல்லாம் செய்வியா? வேற என்ன வேலை எல்லாம் தெரியும்? நான் சொன்னாக்க உனக்கு மறுநாளே வேலை போட்டுக் கொடுக்க ஆட்கள் இருக்காங்க. உன்னாலே நான் கேட்கிற கமிஷனைக் கொடுக்க முடியுமா?" 
                
"கமிஷன் எல்லாம் கொடுக்கிற நிலைமையிலா நான் இருக்கிறேன் சாமி? வாங்குகிற கூலி, எனக்கும் என் குழந்தைக்கும் வாய்க்கும் வயித்துக்கும்தான் சரியா இருக்கு." என்றாள் வேலாயி. 
               
"அது எனக்குத் தெரியும் வேலாயி. இன்னிக்குப் பொழுது சாஞ்சதும் - அதோ அங்கே இருக்கற தோட்டக்காரன் குடிசைக்கு வந்துடு. என்னுடைய கமிஷன் என்னன்னு சொல்லுறேன். தோட்டக்காரனுக்கு இன்னிக்கு சாயந்திரம் லீவு கொடுத்துடறேன் " என்றார் கந்தசாமி,  ஒரு மாதிரியாகச் சிரித்தபடி.
               
வேலாயி ஒரு கணம் திகைத்து நின்றாள். பிறகு, பதில் எதுவும் பேசாமல், நேரே வீட்டை நோக்கிச் சென்றாள். வழியில் கரும்புக் காட்டைக் கடக்கும்பொழுது அவளுக்கு மிகவும் துக்கமாக இருந்தது. கண்ணீர் விட்ட படி, தன் விதியையும், வாழ்வில் தனக்கு ஏற்பட்ட இன்னல்களையும் மனதுக்குள் எண்ணிக் குமைந்தவாறு சென்றாள், வேலாயி.  
                  
வீட்டுக்கு வந்ததும், வேலாயியின் வருத்தம் கோபமாக மாறியது. 'சீனி, கந்தசாமி சம்பந்தமாக, ஊரார் சொல்லுகின்ற இன்சூரன்ஸ் கம்பெனி கதைகள் உண்மையாக இருக்குமோ' என்று கூட அவளுக்குத் தோன்றியது. பொழுது சாய்ந்ததும், ஒரு முடிவோடு, கரும்பு வெட்டுகின்ற அரிவாளை எடுத்துக் கொண்டு கமிஷன் கந்தசாமியின் தோட்டக் குடிசையை நோக்கிச் சென்றாள், வேலாயி.  
                  
மீண்டும் கரும்பு காட்டைக் கடக்கையில், தனக்கு முன்பு, நெளிந்து நெளிந்து சென்று கொண்டு இருக்கின்ற கருநாகத்தின் மீது அவள் பார்வை விழுந்தது. நேற்று காலை அவள் அரிவாள் விழுந்தபோது தப்பிச் சென்ற அதே நாகம். அதே நீளம், அதே கனம். ஆமாம்; அதே நாகம்தான்! வேலாயிக்கு அந்த நாகத்தின் மீதும் ஒரே ஆத்திரமாக வந்தது. இது தன் கண்ணில் பட்டதால்தானே, அவள் வேறு வேலை தேட முடிவு செய்தாள்! அதனால்தானே கந்தசாமி போன்ற 'நிழல் நாகங்கள்' தன்னைக் காணிக்கையாகக் கேட்கின்றன? முதலில் இதை வெட்டிச் சாய்த்துவிட்டு பிறகு, கந்தசாமியை கடவுளுக்குக் காணிக்கை ஆக்குவோம்' என்று நினைத்தவாறு வேகமாக அதனைப் பின் தொடர்ந்தாள் வேலாயி. 
                   
வேலாயி தொடர்ந்து வருகிறாளா என்று பார்ப்பது போல, திரும்பித் திரும்பிப் பார்த்தபடி சென்ற நாகம், கந்தசாமியின் தோட்டக் குடிசை வாயில் கதவுப் பக்கம் போய், எங்கே செல்வது என்று சற்றுத் தடுமாறியது. வேலாயியை (மட்டும்) குடிசை ஜன்னல் வழியாகப் பார்த்த கந்தசாமி, உள்ளிருந்து வந்து குடிசைக் கதவைத் திறந்தார். முதல் விருந்தாளியாக, நாகம் உள்ளே நுழைந்தது. வேலாயி, சட்டென்று கதவை வெளியிலிருந்து இழுத்துத் தாளிட்டாள். தன வீட்டை நோக்கி ஓட்டமும் நடையுமாக செல்லத் துவங்கிய அவளின் காதுகளில், கந்தசாமியின் அலறல் லேசாக விழுந்தது.     
**** ***** 
மீண்டும் கரும்புக் காட்டுக்கு வேலைக்கு வந்த வேலாயியை, அதிசயமாகப் பார்த்தாள் காத்தாயி. வேலாயி சொன்னாள்: "என் புருஷன் இங்கேதான் மறு பிறவி எடுத்து வாழ்ந்து கொண்டு இருக்காரு. அவரு எனக்கு எந்த கஷ்டமும் வராமப் பாத்துக்குவாரு . இந்தக் கரும்புக் காட்டுல இருக்கறது எல்லாம் நாகப் பாம்புகள் இல்லை; நல்ல பாம்புகள்" என்றாள். 
     

14 கருத்துகள்:

  1. மிக அற்புதம் ! புதுமைபித்தன் , சு சமுத்திரம் போன்றோர் பாணியில் மிகவும் யதார்த்தம்! இதை பாராட்டத்தான் தற்போது தமிழ் கூறும் நல்லறிஞர்கள் இல்லை ! இயக்குனர் சேரன் கண்களில் இக்கதை தென்பட்டால் இதனை ஒரு திரைப்படமாகவே எடுத்து விடுவார்.வாழ்க! வளர்க!

    பதிலளிநீக்கு
  2. பொறாமையாக இருக்குது ஸ்ரீராம் சார். எப்படி இப்படி எல்லாம் எழுத முடிகிறது.
    முடிவு அற்புதம்.
    தலைப்பு முதலில் திகிலாக தோன்றினாலும் . முடிவில் திருப்தியை தந்தது.

    பதிலளிநீக்கு
  3. //இயக்குனர் சேரன் கண்களில் இக்கதை தென்பட்டால் இதனை ஒரு திரைப்படமாகவே எடுத்து விடுவார்.//

    ஐஸ் வைக்கறதுக்கு ஒரு அளவு வேண்டாமா?

    பதிலளிநீக்கு
  4. ஜெய் - யாருக்கு ஐஸ்? சேரனுக்கா எங்களுக்கா?

    பதிலளிநீக்கு
  5. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  6. நல்ல கான்செப்ட்..
    All the best

    கெட்டதுன்னு நெனைச்சது நல்லதாவும்
    நல்லதுன்னு நெனைச்சது கெட்டதாவும் இருக்கலாம் என்பதே இக்கதையின் நீதி.

    All the beste

    பதிலளிநீக்கு
  7. நல்ல கதை. அழகா எழுதி இருக்கீங்க. ஒரு நல்ல குடும்ப சித்திரம் பாத்த உணர்வு.

    பதிலளிநீக்கு
  8. மிக அருமை. கருத்தும் எச்சரிக்கையும் நீதியும் ஒன்றாக ஒரு கதை.

    கற்பனைக் கதை என்று எடுத்துக் கொள்ளவே முடியவில்லை. அவ்வளவு யதார்த்தம். எந்தப் பெண்ணும் இக்கட்டான நிலையில் காட்டும் வீரத்தை அழகாக வர்ணித்து ஸ்ரீராம் எழுதி இருக்கிறார். மனம் நிறைந்த பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  9. ரொம்பவே நல்லா கொண்டு போய் இருக்கீங்க சார் கதையை...!

    பதிலளிநீக்கு
  10. பாராட்டிய எல்லோருக்கும் என் நன்றி. இதை வம்சி சிறுகதைப் போட்டிக்குப் பதிவு செய்திருக்கின்றேன். பதிவு எண் 239 என்று பார்த்த ஞாபகம். மீண்டும் நன்றியுடன்,
    கே ஜி கௌதமன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!