செவ்வாய், 2 ஏப்ரல், 2024

சிறுகதை : யார் அவள்? - உஷா

  யார் அவள்?..

 உஷா 

வாரப்பத்திரிகை அது. சஞ்சிகைகள் வாசிப்பவர்கள் ரசனைக்கேற்ப அந்த இதழில் எல்லா விஷயங்களும் கலந்து கட்டி இருக்கும்.  இருந்தாலும் என்ன காரணத்திற்காகவோ பெண்கள் பத்திரிகை என்ற பெயரில் உலா வந்து கொண்டிருந்தது.  

ஞாயிற்றுக்கிழமைகளில் நியூஸ் பேப்பரோடு ரோஜாவையும் சேர்த்து பேப்பர் பையன் போட்டு விட்டுப் போய் விடுவான். அவன் எப்போ வருவான் என்று கண்குத்தி பாம்பு போல விமலா பார்த்திருப்பாள்.  அப்பார்ட்மெண்ட் வாசல் க்ரில் கேட் கம்பி இடுக்கில் நியூஸ் பேப்பரை அவன் சொருகி விட்டுப் போகும் பொழுது லேசா கேட் அசங்கும் சப்தம் கேட்கும். அதற்காகவே காத்திருக்கும் விமலாவின் முகம் மலரும்.  உடனே போய் பேப்பரின் நடுவில் பதுங்கியிருக்கும் அந்த வார ரோஜாவைப் பார்த்தால் தான் அவளுக்கு நிம்மதி.  அட்டைப்பட அழகை ரசித்து விட்டு லேசா ஒரு புரட்டு புரட்டி  பார்த்து விட்டு ஹால் டேபிளின் மேல் வைத்ததும் மனம் நிறைந்து விடும்.  மத்தியான சாப்பாட்டிற்குப் பிறகு படுக்கை அறையில் ஃபேன் போட்டு விச்ராந்தையாய் ரோஜாவைப் புரட்டி ஆழ்ந்து போகும் நிம்மதி விமலாவுக்கு ரொம்பவும் நெருக்கமானது.


ரோஜாவில் இரண்டு தொடர்கதைகள் வெளிவந்து கொண்டிருந்தன.  ஒன்று சரித்திரம், மற்றொன்று சமூகம்.  விமலாவுக்கு ரெண்டு கதைகளும் பிடித்திருந்தன. இருந்தாலும் எப்பவுமே தொடர்கதை வாசிப்பை கடைசியாக வைத்துக் கொள்வது அவள் வழக்கம்.
தொடர்கதைகளை வாசிக்கும் பொழுது ஞாபகத்தில் வாசிப்பு தொடர்ச்சி விட்டுப் போகாமலிருக்க முந்தின வார இதழையும் பக்கத்தில் வைத்துக் கொள்வாள். இந்த வாரம் இன்னன்ன வந்திருக்கு என்று காலை புரட்டலிலேயே ஒரு தீர்மானம் அவளுக்குக் கிடைத்து விடும். அதன்படி மதிய வாசிப்பை வைத்துக் கொள்வாள்.  எது என்றாலும் கேள்வி--பதில் பகுதியையும் வாராவாரம் ஒருவித க்யூரியாசிட்டியுடன் படிக்கும் ஜோதிடப் பகுதியையும் வாசித்து விட்டுத்தான் மற்றதெல்லாம்.  

இந்த வார கேள்வி-பதிலில் இரண்டே மாதங்களில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் வர இருப்பதால் வாசகர் கேள்விகளில் அரசியல் முக்கியத்துவம் பெற்றிருந்தது. தமிழ் நாட்டு வழக்கப்படி மாநில கட்சி - மத்தியில் ஆளும் கட்சி என்று இரண்டாகப் பிரித்து எதனுடனும் ஒட்டி உறவாடாமல் நடு நிலையில் பதில்கள் அமைந்திருக்கிற மாதிரி பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

ஜோதிடப் பகுதியில் மற்ற சில பத்திரிகைகள் போல் ராசிபலன் இல்லாமல் 27 நட்சத்திரங்களுக்கும் அந்த வாரத்திற்கான கறாரான ஒரு வரி பலன் எழுதுவது அந்த பத்திரிகையின் விசேஷம்.  எழுதின பலன் கண்டிப்பாக அந்த வாரத்திற்குள் நடந்து விடும் என்பது விமலாவின் நம்பிக்கை.  பல தடவைகள் அப்படி நடந்து நடந்து இந்த ஜோதிடப் பகுதியின் மேல் அவளுக்கு ஒரு பய பக்தியே ஏற்பட்டிருந்தது. தனக்கு மட்டுமில்லாது புருஷன், மாமியார், தன் அம்மா, அப்பா என்று  எல்லோருக்கும் அந்த வார நட்சத்திர பலன் என்ன என்று பார்த்து விடுவாள். அதே மாதிரி சம்பந்தப்பட்டவர்களுக்கு ரோஜாவில் சொன்னபடி நடக்கிறதா என்று வேவு பார்க்கிற மாதிரி கண்காணிப்பதும் அவளே உணராதபடி அவளுக்கு ஒரு பழக்கமாகவும் ஆகியிருந்தது. அதே மாதிரி எல்லாருக்கும் நல்ல பலன்கள் என்று அமையும் பொழுது அவளுக்கு ஏற்படும் அலாதி திருப்தியை அவள் மட்டுமே அறிவாள்.

இந்த வாரம் மாமியாரின் உத்திராட நட்சத்திரத்திற்கு
'கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு சந்தோஷமாக இருப்பீர்கள்' என்று போட்டிருந்தது. அதைப் படித்ததும் விமலா அறியாமலேயே அவள் உதடுகளில் புன்னகை அரும்பியது.  அம்மாவின் அஸ்வினி நட்சத்திரத்திற்கு 'சொந்த பந்தங்களின் அன்பில் திளைப்பீர்கள்' என்றும் அப்பாவின் ஆயில்யத்திற்கு 'எதிர்பாராத விருந்தினர் வருகை மகிழ்ச்சியளிக்கும்' என்றும் போட்டிருந்தது.  எதிர்பாராத விருந்தினர் என்றால் யாராய் இருக்கும் என்று யோசித்தபடியே விமலாவின் பார்வை தன் திருவாதிரை நட்சத்திரத்திற்குத் தாவியது. 'எது நடந்தாலும் கலங்காமல் இருங்கள்; தானே நிவர்த்தியாகும்' என்று போட்டிருந்தார்கள்.
இதைப் படிக்கும் பொழுதே என்ன நடக்கப் போகிறதோ என்று பகீரென்றிருந்தது அவளுக்கு. அந்த பதட்டத்தோடையே புருஷன் ராஜாராமனின் திருவோண நட்சத்திரத்திற்குப் பார்த்தால் 'ஆண்கள்  பெண்களுடனும் பெண்கள் ஆண்களுடனும் நெருங்கிப் பழகும் பொழுது.  ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்' என்று போட்டிருந்ததை வாசித்ததும் சட்டென்று அவள் முகம் சாம்பி பதட்டமானாது. எரிச்சலுடன் யோசனை ஓடிற்று.

போன மாதம் ஒரு நாள். தலைக்குக் குளித்து கோடலி முடிச்சிட்டிருந்ததால் அது ஒரு வெள்ளிக்கிழமை என்பது மட்டும் அவள் நினைவில் நன்கு பதிந்திருந்தது. அப்படியே ஆபிஸிற்கு வந்திருந்தாள். அவள் அலுவலக எதிர் ஸீட் சுரேஷ் ஃபைல் ஒன்றை அவளிடம் கொடுக்கும் பொழுது அவன் கை விரல்கள்  அவள் கையில் வருடுகிற மாதிரி கொஞ்சம் அழுத்தமாகப் பட்டது சொல்லி வைத்தாற் போல இப்பொழுது சட்டென்று நினைவுக்கு வந்தது.  அப்படி அவள் கையை வலிய தடவி விட்டதை அவன் உணர்ந்ததாகவேத் தெரியவில்லை. தவறாகப் பட்டிருந்தாலோ  அல்லது  அப்படிப்பட்டது மனசில் உறைத்திருந்தாலோ சட்டென்று எந்த ஆணும் ஒரு சாரி சொல்லி பெரிதாகாமல் பார்த்துக் கொள்வது வழக்கம் தான்.
ஆனால் இவள் தான் சட்டென்று கையை இழுத்துக் கொண்டாளே தவிர சுரேஷின் முகத்தில் எந்த சலனமும் இல்லை.

ஒரு பெண்ணின் கை விரல்களை அழுந்த ஸ்பரிஸித்த உணர்வே இல்லாத மரக்கட்டை போல அவன் முக பாவம் இருந்தது. விமலா தான் கடுகடுப்பாக முகத்தை வைத்துக் கொண்டு, " என்ன வேணும் உங்களுக்கு?" என்று எரிந்து விழுந்தாள்.

'ஒண்ணுமில்லே, விமலா.. இந்த ஃபைலை நீ பார்த்தேயோன்னு சந்தேகம். அதான்.." என்றான்

அவளுக்கு அவன் சீனியர். செக்‌ஷன் ஆபிஸரும் கூட. அதனால் அவன் அவள் பெயர் சொல்லி அழைப்பதும், அந்த 'நீ' உறவும் இத்தனை காலம் விகல்பமாகத் தெரியாதது இப்பொழுது வலிய கொண்ட நெருக்கம் மாதிரி அவள் மனதைப் பொசுக்கியது.  அன்றையிலிருந்து சுரேஷிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாகவே பழகுவதை வைத்துக் கொண்டாள்.

இப்பொழுது தன் புருஷனும் சுரேஷ் வகையறாவைச் சேர்ந்தவன் தானோ என்ற திடீர் மனச்சோர்வு அவளை ஆட்கொண்டது.  

ஆண்கள் உலகம் விசித்திரமானது. விஸ்வாமித்திரரையே படாதபாடு படுத்திய மேனகைகள்  நீக்கமற நிறைந்திருக்கும் பூவுலகில் தன் புருஷன் மட்டும் ராமச்சந்திர மூர்த்தியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது பைத்தியகாரத்தனமோ என்ற அளவில் கூட வேதனை அவளை வாட்டியது.

இத்தனைக்கும் இடையே ஏதோ அவசர வேலை என்று வெளியே போனவரை இன்னும் காணோமே என்ற குழப்பம் ஒரு பக்கம் மன பாரத்தைக் கூட்ட, அசதியில் எப்பொழுது தூங்கினோம்  என்று அவளுக்கே தெரியாத அளவுக்குத் தூங்கியிருக்கிறாள். யாரோ அசைக்கையில் சட்டென்று விழிப்பு வந்தது.

வேறு யார்? ராஜாராமன் தான். 
                      
தூக்கக் கலக்கம் நீங்கி புருஷனைப் பார்த்ததும் இத்தனை நேரம் புழுங்கியதெல்லாம் நினைவுக்கு வந்து சட்டென்று அவனைக் கட்டிக் கொண்டு அழ வேண்டும் போல மனம் ஏங்கியது.  இருந்தாலும் கஷ்டப்பட்டு தன்னை அடக்கிக் கொண்டு ஒன்றும் நடவாதது போல விமலா எழுந்திருந்தாள்.

வெளி ஹாலில் அவள் மாமியார் உட்கார்ந்திருந்தார்கள். ஆக அவர் தான் இவர் வந்த பொழுது கதவைத் திறந்து விட்டிருக்க வேண்டும் என்ற நினைப்பு மேலோங்கியது.

"ஆவ்..." என்று கொட்டாவி விட்டாள் விமலா. "நல்ல அசதி.. புஸ்தகத்தைப் புரட்டினேனா, படிக்கக்கூட இல்லை.. அசந்து தூங்கியிருக்கேன்.." என்று மனபாரத்தை வெளியே காட்டாமல்  சிரித்தாள்.

அவள் சிரித்தது மோஹனமாக இருந்தது அவனுக்கு.  லேசாக தோளைத் தொட்டான். இது எங்கே கொண்டு போய் விடும் என்று அவளுக்குத் தெரியும். அதைத் தவிர்க்க வேண்டி தொட்ட அவன் கையையே அழுந்தப் பற்றி எழுந்திருந்தாள்.

ஒன்றும் வெளிக்குக் காட்டிக் கொள்ளக்கூடாது என்ற தீர்மானமான முடிவில் விமலா இருந்தாள். கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளில் என்று சொல்வார்கள்.  இவர் புளுகின் வண்டவாளம் வர்ற ஞாயிற்றுக்கிழமை 'ரோஜா'வில் தெரிந்து விடப்போகிறது என்று அலட்டிக் கொள்ளாமல் கண்காணிக்க வேண்டும் என்ற தீர்மானமான முடிவு விமலாவின் மனசில் உருவாகியிருந்தது.  அதற்கு ஏற்ற மாதிரி வெகு சகஜமாகத் தன்னைக் காட்டிக் கொள்வதில் விமலா உறுதியாக இருந்தாள்.

இரவு சாப்பாட்டிற்கு உட்காரும் பொழுதே குஷியாகி விட்டான் ராஜாராமன்.

முருங்கைக்காய் குழம்பு என்றால் ராஜாராமனுக்கு உயிர்.  அதுவும் ராத்திரி சாப்பாட்டிற்கென்றால் இன்னும் நாலைந்து 'தான்'களை கூடவே போட்டுக் கொள்வான். அவற்றை அவன் சாப்பிடுவதே அழகாக இருக்கும். முதலில்  முருங்கையின் சதைப்பற்றில் அவன் கவனம் படியும். கட்டை விரல் ஆள்காட்டி  விரல்களைக் குவித்து முருங்கைத் துண்டைப் பற்றி பல்லிடுக்கில் நுழைத்து சதைப்பகுதியை லாவகமாக சப்பி உருவி தொண்டைக்குக்குழிக்கு அனுப்பும் பொழுது அவன் அடையும் பரமசுகம் முகத்தில் பளபளக்கும். பலர் செய்வது போல முருங்கையின் கட்டைப்பகுதியை எடுத்து இலை வெளியே போடாமல் அதை நன்றாக கடித்து ஜூஸை உறிஞ்சி சக்கையைத் துப்பும் வரை முருங்கையின் ஒரு பாகத்தையும் விட்டு விடாமல் ரசித்து அனுபவிப்பதிலேயே அவன் கவனம் குவிந்திருக்கும்.  இந்த மாதிரி தான் ஒவ்வொரு விஷயத்திலும் ராஜாராமனுக்கென்று இருந்த விசேஷ ஈடுபாடுகளை விமலா அவன் சகதர்மிணியாய் இருந்து மனசார உணர்ந்திருக்கிறாள். அப்படியான தன்னில் இல்லாத என்ன விசேஷ ஈடுபாட்டை இன்னொரு பெண்ணில் அவன் காண்பான் என்ற சந்தேகமே அவள் மனசை வெகுவாகக் குடைந்தது.

இரண்டு மாதங்களுக்கு முன் ஒரு நாள் வங்கி விஷயமாக அவசரமாக அவன் கையொப்பம் தேவைப்பட்டதென்று அவன் அலுவலகம் சென்றிருந்தாள்.  ராஜராமன் உயர் பதவி வகித்ததினால் அவனுக்கென்று அலுவலகத்தில் தனியான அறை இருந்தது. ராஜராமனின் மனைவி இவள் என்று தெரிந்து மரியாதையுடன் அவன் அறைக்கு வழி காட்டினார்கள்.

புருஷன் ஏதோ ஃபைலைப் புரட்டிக் கொண்டு உட்கார்ந்திருப்பான் என்று எதிர்பார்த்து ஆடும் கதவில் கை வைத்து அழுத்தி உள்ளே போனவளுக்கு ஒரு மாதிரி போய்விட்டது.

தனக்கு எதிரே இருந்த லேப்-டாப் மானிட்டரில் அவன் கவனம் குவிந்திருக்க அவனுக்கு வெகு அருகாமையில் ஒரு பெண் குனிந்து லேப்டாப்பிற்கும் அவன் முகத்திற்கும் இருந்த இடைவெளியில் தன்
புஜம் நீட்டி அவனுக்கு எதையோ விளக்கிக் கொண்டிருந்தாள்.

இத்தனைக்கும் நடுவே அவள் உள்ளே நுழைந்ததே  கவனத்தில் பதியாத அளவுக்கு அவர்கள் தங்கள் வேலையில் ஆழ்ந்திருந்தது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.

அந்த சமயத்தில் தான் அது நடந்தது.  அந்தப் பெண் "அதில்லை, சார்.. இந்த வரியைப் பாருங்க.." என்று இன்னும் குனிந்த பொழுது, "ஏங்க.. லேப்டாப் திரையை இப்படி மறைச்சீங்கன்னா, அதிலிருக்கறது எனக்கு எப்படீங்க தெரியும்?" என்று எரிச்சலுடன் ராஜாராமன் சீறினான். .. "கொஞ்சம் விலகி நின்னு சொல்லுங்க.."

அந்தப் பெண் சட்டென்று தன்னைச் சுதாரித்துக் கொண்டு விலகி நின்ற பொழுது தான்,  "அட! நீ எப்போ வந்தே?" என்று விமலா அங்கிருப்பதைப் பார்த்த ராஜாராமன் ஆச்சரியப்பட்டபடி கேட்டான்.

ராஜாராமனைப் பார்க்கையில் அந்த நேரத்தில் 'இப்படிப்பட்டவனோடு நெருக்கம் கொள்ள நான் தானாக்கும் பாத்யதைப் பெற்றவள்' என்ற பெருமிதமும் கர்வமும் அவள் முகத்தில் பிரதிபலித்தது.

திருமணமான ஒரு பெண் இன்னொரு ஆணின் அதீத நெருக்கத்தை எந்த அளவுக்கு வெறுப்பாளோ அந்தளவுக்கு சற்றும் சளைக்காத சீற்றத்தோடு அந்த நேரத்தில் ராஜாராமன் அந்தப் பெண்ணிடம் எரிந்து விழுந்தது அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது.

'நவ்யா.. இவங்க தான் என் மனைவி.. ஏதோ அவசரமா என்னைப் பார்க்க வந்திருக்காங்க.. ஸாரி.. நான் அப்புறம் உங்களைக் கூப்பிடறேன்.." என்று அவன் மென்மையாக அந்தப் பெண் நவ்யாவிடம் சொன்னதும் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது.

அப்படிப்பட்டத் தன் கணவனுக்கா  ' பெண்களுடன் நெருக்கமாகப் பழகும் பொழுது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்' என்று இப்படி ஒரு நட்சத்திர பலனைப் போட்டிருப்பார்கள்? அவளால் நம்ப முடியவில்லை என்றாலும் ரோஜா பத்திரிகையின் நட்சத்திர பலன் பகுதியின் மேல் அவளுக்கிருந்த அசைக்க முடியாத நம்பிக்கை 'தனக்குத் தெரியாமல் ஏதோ நடக்கிறதோ' என்று அச்சப்பட வைத்தது.  

'ஏன் இதைத் தன் கணவனிடமே சொல்லி அவனை ஜாக்கிரதை படுத்தக் கூடாது?' என்ற எண்ணம் லேசாக மனத்தில் துளிர் விட்டதும் 
மனப்பாரம் கொஞ்சம் இறங்கிய மாதிரி அவளுக்கு இருந்தது.  இன்று இரவு தனிமையில் இருக்கும் பொழுது அது பற்றி அவனிடமே பேசி விடுவது என்று தீர்மானித்தாள்.

பெட்ஷீட்டைத் தட்டிப் போட்டாள். படுக்கையை சுருக்கம் இல்லாமல் சீர் செய்தாள். இரண்டு பேர் தலையணைகளுக்கும் உறை மாற்றினாள்.  பெட்ரூம் லைட்டைத் தட்டி விட்டு வாகாக படுக்கையில் சாய்ந்தபடி ரோஜாவை புரட்ட ஆரம்பித்தாள்.

ராஜாராமன் வீட்டு பி.ஸி.யில் எதையோ மும்முரமாகத் தட்டச்சு செய்து கொண்டிருந்தான்.  

கால்மணி நேரம் போயிருக்கும்.  இவள் பக்கம் திரும்பவே காணோம். அவளுக்கோ லேசாக தூக்கம் இமைகளை அழுத்தியது.
எப்படியும் பக்கத்தில் வந்து படுத்தானானால் அவன் மேனி படராமல் இருக்காது.  அப்பொழுது வைத்துக் கொள்ளலாம் என்று விமலா நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது அவன் கைபேசி ரீங்கரித்தது.

அதை எடுத்து, "ஹலோ சொல்லு ஷ்ரேயா." என்று அவன் குரல் கேட்டதும் அவள் தூக்க முனைப்பெல்லாம் போன இடம் தெரியவில்லை. 
           
"அப்படீயா?  ஓக்கே, ஷ்ரே..  பரவாயில்லை.. வந்துடு.. ஏர்போர்ட்டில் பாக்கலாம்..பை.. குட் நைட்" என்று அவன் சொன்ன போது திடுக்கிட்டாள்.  'ஏர்போர்ட்டிலேயா?.. இது வேறையா? ஆபிஸில் போதாது என்று வெளியூரோ, வெளி நாடோவா?' என்று வெம்பிப் போனாள்.

ஷ்ரேயா என்று அவன் சொன்ன பெயரை இவள் முணுமுணுத்துப் பார்த்துக் கொண்டாள்..  ஒருத்தி நவ்யா என்றால் இவள் ஷ்ரேயாவா?  எப்படீலாம் பேர் வைக்கிறாங்கப்பா?.. இப்படி இன்னும் அவன் ஆபிஸில் எத்தனை இருக்கோ? ரோஜாவின் ஜோதிடம் வேலையைத் துவங்க ஆரம்பித்து விட்டது.  இவனை விமானம் ஏறாமல் தடுத்தே ஆக வேண்டும்' என்று அவள் மனசு படபடத்தது.  நடுவில் ஒரு யோசனை.. தானும் கூட வருகிறேன் என்று சொன்னால் என்ன என்று.  'அது என்ன பஸ் பயணமா? நினைத்த பொழுது டிக்கெட் வாங்கிக் கொள்ள?' என்ற ஞானோதயம் வந்ததும் அந்த அசட்டு நினைப்பை மனசில் அழித்தாள்.
                     
கொஞ்ச நேரத்தில் அவன் வந்து படுத்த ஜோரில் படுக்கை அசைந்தது. என்ன செய்கிறான் பார்ப்போம் என்ற எண்ணத்தில் பேசாமலிருந்தாள்.  அவள் பக்கம் புரண்டு படுத்தவனின் புஜங்கள் அவள் தோள்பட்டையில் இடித்த உணர்வு. 

அப்பொழுதும் நன்கு தூங்குகிற பாவனையிலேயே அசையாதிருந்தாள். 'ஜோதிடம் பொய்க்காது.  நடக்கப்போவதைத் தான் அப்பட்டமாக ரோஜாவில் எழுதிவிட்டார்களே!  அதன்படியே நடக்கட்டும்' என்று அவள் பேசாதிருந்தாள்.  

'எது நடந்தாலும் கலங்காமல் இருங்கள்.  தானே நிவர்த்தியாகும்' என்று தானே தன் நட்சத்திரத்திற்கு போட்டிருந்தார்கள்?.. அப்படியிருக்க தான் எதுக்கு கலங்க வேண்டும்?... இது பற்றி தான் சொல்லப் போய் அவன் தப்பாய் எடுத்துக் கொண்டால் என்ன செய்வது என்ற எண்ணம் வந்து அதுவே எல்லாம் சரியாகும்' என்று நினைத்ததும் மனதிற்கு ஓரளவு நிம்மதி கிடைத்த மாதிரி இருந்தது.  'தானும் தான் அலுவலகம் போய் வருகிறோம்.  ஆண்களுடன் பழகத் தான் வேண்டியிருக்கிறது.  எல்லா ஆண்களும் ஒரே மாதிரி இருக்க மாட்டார்கள் என்பது தன் அனுபவத்திலிருந்து அவருக்குத் தெரியாதா, என்ன?  இருந்தும் தன் மேல் இருக்கும் நம்பிக்கையால் தானே இதெல்லாம் பற்றி கவலைப்படாதிருக்கிறார், அவர்? அது மாதிரி என்னால் இருக்க ஏன் முடியவில்லை? எனக்கு நீ, உனக்கு நான் என்று ஆகிப்போன வாழ்க்கை பூராவும் கூட துணையாய் இருக்கிற புருஷன் மீது இப்படியெல்லாம் அசிங்கமாய் அவநம்பிக்கை கொள்ளலாமா?  இதே மாதிரியான நட்சத்திர பலன் தனக்குக் கூட ஏதோ ஒரு வாரத்தில் போட்டிருந்தால் நான் என்ன செய்வேன்?.. சுவரில் போயா முட்டிக் கொள்வேன்?' என்ற கேள்வி அவளுள் எழுந்ததும் மனம் அமைதி அடைந்தது.

டக்கென்று அப்பொழுது தான் தூக்கம் கலைந்த மாதிரி லேசான சிணுங்கலுடன் விமலா திரும்பிப் படுத்தாள்.

"தூங்கிட்டையா?" என்றான் அவன்.

"அதான் விழிப்பு வந்திடுத்தே? என்ன சொல்லுங்கள்" என்றாள்.

"ஒண்ணுமில்லே. தூங்கிட்டையோன்னு நினைச்சேன்.." 

"ஏதோ ஏர்போர்ட்ன்னு காதிலே விழுந்தது.. என்ன விஷயம்?" என்றாள் அவள்.

"ஹி..ஹி.. ஷ்ரேயாகிட்டே சொன்னதைச் சொல்றியா?"

"அது யார் ஷ்ரேயா?" என்றாள் லேசான கேலி குரலில் இழைந்தோட.

"என்னோட வேலை செய்யற ஒருத்தி.."

"நவ்யா மாதிரியா?"

"நவ்யா என்னோட பி.ஏ. மாதிரி.. ஷ்ரேயா அப்படி இல்லே.. ஆபிஸர் கேடர்.."

"ஓ.. ஏர்போர்ட்னீங்களே! எங்கையானும் விமானப் பயணமா?"

அவன் கலகலவென்று சிரித்தான். "பயணமில்லே..  எங்க கம்பெனியோட லூதியானா ஹெட் ஆபிஸிலிருந்து அதிகாரி ஒருத்தர் நாளை வர்றார்.  ஷ்ரேயாவும் நானும் அவரை ரிஸீவ் பண்ண நாளைக்கு காலம்பற ஏர்போர்ட் போகணும்.."

"அப்பாடி.." என்றிருந்தது அவளுக்கு. 'அப்போ, ரோஜா ஜோதிடம்?' என்றது உள் மனசு.  'மண்ணாங்கட்டி!.. ஜாக்கிரதையா இருக்கச் சொல்லி தானே எழுதியிருக்கான்.. எல்லாம் என் புருஷன் இருப்பான், போய்யா..' என்று எதிரில் இருக்கிற ஆளுடன் சண்டை போடுகிற மாதிரி அவள் உதடுகள் அசைந்தன.

கொஞ்ச நேரம் பக்கவாட்டில் அசைவில்லை.  பத்து நிமிஷம் போயிருக்கும்.  லேசான குறட்டை சத்தம் கேட்டதும் ஒரு பக்கத்துக் காதுப்பகுதி தலையணையில் அழுந்த விமலா புரண்டு ஒருக்களித்துப் படுத்தாள்.

கொஞ்ச நேரத்தில் அசதியில் அவளும் தூங்கிப் போனாள்.

மேகக் கூட்டத்தில் மறைந்திருந்த நிலவும் மூடு திரையை விலக்கிய
மாதிரி வெளி வந்து கண்ணாடி ஜன்னல் வழியே தன் தண்ணொளியை அவர்கள் மீது பாய்ச்சியது

43 கருத்துகள்:

  1. ஜோதிடப் பகுதியும் கணவனின் அலுவலகமும் மனைவியை அல்லாட வைப்பதை நன்றாக எழுதியிருக்கிறார். கொஞ்சம் அயர்ச்சியுடன் முழுக் கதையையும் படித்துவிட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // கொஞ்சம் அயர்ச்சியுடன் //

      அயர்ச்சி? ஏன் நெல்லை?

      நீக்கு
    2. கொஞ்சம் வளவள என, அல்லது நீளம் ஜாஸ்தியாக இருந்ததால் அயர்ச்சி. தவறாக ஒன்றுமில்லை

      நீக்கு
    3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
  2. எனக்கு வார, தின, ஒருவரி ஜோதிடப் பகுதிகளில் நம்பிக்கையில்லை.

    அதைவிட யூடியூபுகளில் ரீல் சுத்தும் மூத்த பத்திரிக்கையாளர்களின் விமர்சனங்கள்/மேர்தப் கணிப்புகள், சோழி, முக, ஜாதக, பிரசன்ன ஜோதிடர்கள் அடித்துவிடுவதையும், சொன்னபடி நடக்காவிட்டால், கழுத்தில் துண்டைப் போட்டு இறுக்கி நாக்கைப் பிடிங்கிக் கொள்வதுபோல் கேட்டு நாலு அறை விடலாம், மனுளைச்சல்கள் ஏற்படுத்துவதால் அப்படிச் செய்வது குற்றமாகாது என்று சட்டம் போட்டாத் தேவலை (கருத்துக் கணிப்பு என்ற பெயரில் திணிப்பு செய்பவர்களுக்கும்). காசுக்காக்க் கூவுவது போலவே இருக்கிறது

    பதிலளிநீக்கு
  3. திண்டுக்கல் தனபாலனும், கரந்தை சாரும் ஏன் வனவாசம் கோய்விட்டார்கள்? அவர்கள் நலமா?

    பதிலளிநீக்கு
  4. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  5. உஷா..

    நிஜப் பெயரோ..
    புனைப் பெயரோ!..

    புனைந்திடும் கதைகளொடு
    பொலிந்திட வருக...

    பொங்கும் தமிழொடு
    புது நலம்
    பூத்திட வருக..

    பதிலளிநீக்கு
  6. நல்ல கதை..
    இயல்பாகச் செல்கின்றது..

    எபிக்கு அதிர்ஷ்டம் தான்..

    பதிலளிநீக்கு
  7. காலத்திற்கேற்ற நடைமுறையில் கதை...

    வாழ்க வளர்க..

    பதிலளிநீக்கு
  8. /// தனக்குத் தெரியாமல் ஏதோ நடக்கிறதோ///

    புதிய கோணம்!..

    பதிலளிநீக்கு
  9. கதை தொய்வில்லாமல் சீராகச் செல்கிறது. ஆனாலும் சில பகுதிகள் கதைக்கு அவசியமில்லை என்று தோன்றும் விதம் உள்ளது. கொஞ்சம் சுருக்கி ஒரு பக்க கதையாக்கியிருக்கலாம். தலைப்பு கவர்ச்சியாய் இருந்தாலும் கதைக்கருவிற்கு தலைப்பு பொருந்தவில்லை.

    புதிய ஆசிரியர் உஷா அவர்களுக்கு நல்வரவு பாராட்டுகள். ஆசிரியரின் பெயரில் sirukathaigal.com தளத்திலும் இரண்டு கதைகள் உள்ளன. அவரும் ஐவரும் ஒருவர் தானா?
    Jayakumar​

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதாசிரியர் (யை?) கவனத்தில் கொள்ளட்டும்.

      நீக்கு
    2. அவர் இல்லை.  இவர் வேறு.    ஒவ்வொரு கமெண்ட்டுக்கும் பதில் அளிக்க எண்ணி முயற்சித்ததாகவும் சரிவரவில்லை என்றும் சொன்னார்.  நன்றி சொல்ல சொல்கிறார்.  அடுத்தடுத்த கதைகள் அனுப்பினால் பதில் அளிக்க முயற்சிபப்தை சொன்னார்.  

      நீக்கு
  10. /// ஜோதிடப் பகுதியில் மற்ற சில பத்திரிகைகள் போல்... ///

    வீட்டுக்கு வீடு தொ.. கா..பெட்டிகள் என்று ஆன பிறகு

    இப்படி சோசியம் சொல்லிக் குழப்புகின்றவர்களின் எண்ணிக்கை பெருகி விட்டது..

    பதிலளிநீக்கு
  11. ஜோசியமும் குழப்பமும் - இதை வைத்து கதையும்! நன்று.

    பதிலளிநீக்கு
  12. ஜோசியக்கதை சிறப்பாக உள்ளது.

    பதிலளிநீக்கு
  13. கதையைச் சொல்லிய விதம் அருமை. குமுதம் பத்திரிகை எழுத்தாளராய் அடையாளம் காண முடிகிறது.

    ராசிபலன், நட்சத்திர பலன் எல்லாம் இப்பொழுது எல்லா பத்திரிகைகளிலும் வெளியிட்டேயாக வேண்டிய வாசகர்கள் எதிர்பார்க்கும் ஒரு கட்டாய விஷயமாகி விட்டது. அதை வைத்துக் கொண்டு கற்பனையில்
    கதை பின்னிய ஆசிரியர் எழுத்துத் திறமை அற்புதம்.

    எபிக்கு அதிர்ஷ்டம் தான் என்று தம்பி சொல்லியிருப்பதும் உண்மை.

    ஸ்ரீராமிற்கு நண்பர் போலிருக்கு. எப்படியோ கிடைத்திருக்கிறார். எபியில் இவரை அடிக்கடி எழுதச் சொல்லுங்கள்.

    கதாசிரியர் உஷாவிற்கு என் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  14. இந்த வார கே.வா.போ.கதையைப் படித்ததும் லேசாக ஜெர்க் ஆனேன். காரணம் பெண்கள் பத்திரிகையில் வரும் ஜோசியத்தை படித்துவிட்டு பயப்படும் பெண்ணைப் பற்றிய கதை ஒன்றை பல வருடங்களுக்கு முன்பு எழுதி வைத்திருந்தேன். ஆனால் ஜானர் நகைச்சுவை. வீடுகள் மாறியதில் அந்த கையெழுத்து பிரதி எங்கோ தொலைந்து விட்டது. மறுபடியும் எழுத அலுப்பாக இருக்கிறது. கதை சிறப்பு.சித்திரமும்.

    கதை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதையை voice typing செய்து திரும்ப எழுதிய முயற்சி செய்யலாமே!

      நீக்கு
    2. // பல வருடங்களுக்கு முன்பு எழுதி வைத்திருந்தேன். //

      //கதையை voice typing செய்து திரும்ப எழுதிய முயற்சி செய்யலாமே!//

      வயசு ஒத்துழைக்கவில்லையோ....!! :-))

      நீக்கு
  15. எனக்கு கௌதம் ஜி தானோ என்ற சந்தேகம் இருக்கின்றது!..
    :)))

    பதிலளிநீக்கு
  16. வணக்கம் சகோதரரே

    இன்றைய கதை நன்றாக உள்ளது. ஜோசியத்தை கருவாக கொண்ட கதையமைப்பு பலவிதமான சந்தேகங்களை கொண்டு பயணித்து இறுதியில் தானே தனக்கு மன சமாதானத்தை தேடியவாறு இனிதே முடிவுற்றது. கதை எழுதிய உஷா (அல்லது சகோக்கள் ஸ்ரீ ராம், கௌதமன்) அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    என்றும் இல்லாத திருநாளாக சகோதரர், ஸ்ரீராமும், சகோதரர் கௌதமன் அவர்களும் வந்து பதில் கருத்துகளை தந்திருப்பது காணும் போது "எழுதியிருப்பது யார்?" என்ற இந்த சந்தேகம் எனக்கும் வருகிறது. இதற்கு எந்த ஜோசியரை பார்த்து கேட்கச் செல்ல வேண்டும்? கதையில் சந்தேகம் தீர்ந்து விட்டது.. எங்களுக்கு.... :))

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  17. ஜோதிடத்தால் வந்த குளப்பம் பற்றி கதை செல்கிறது தெளிவு நல்ல முடிவு.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!