செவ்வாய், 6 செப்டம்பர், 2011

மீண்டும் வாழ்வேன்.


"இதென்ன இங்கே படுத்திருக்கிறான் இவன்..."

வழியில் படுத்திருந்த அண்ணனைக் கண்டதும் மனம் பதறியது.

எதிரிகள் பார்த்து விட்டால்... இவ்வளவு அஜாக்கிரதை நமக்கு உதவாதே...

அருகில் சென்று எழுப்பினேன். உயிரில்லாததை உடனே உணர்ந்தேன், இதயம் நின்று துடித்தது. அப்போதுதான் சாப்பிட்டிருந்த கேக் கசந்தது. "ஐயோ...என்ன இது...யார் வேலை இது..அருகில் யாரோ இருக்கிறார்களோ.." உரக்க எழுந்த குரலை மனதிற்குள்ளேயே அடக்கினேன். ஆபத்து!

'சட்'டென ஓரமாகப் பதுங்கினேன்.

கொஞ்ச தூரத்தில் ஒருக்களித்துப் படுத்திருப்பது போலக் கண்ணில் பட்ட உருவங்கள் இதயத் துடிப்பை அதிகப் படுத்தின. பார்க்கப் போகும் காட்சி என்னவென்று அறிவுக்குத் தெரிந்து விட்ட நிலையில் மனம் 'இருக்கக் கூடாது' என்று விநாயகரை வேண்டிக் கொண்டது.

சுற்றுமுற்றும் பார்த்தபடி அருகே நெருங்கினேன். கண்ணில் நீர் முட்டியது. 'கை விட்டு விட்டாயே விநாயகா'

சத்தப்படுத்தக் கூடாது என்று அடக்கினாலும் குரல் கீச்சிட்டது.

அருகருகே ஒருக்களித்துப் படுத்தபடி உயிர் துறந்திருந்த சகோதரர்களைக் கண்டதும் ஒரு நொடி உலகே வெறுத்துப் போனது.

கொஞ்ச தூரத்தில் அடுத்த சகோதரன், கொஞ்சம் தளளி சகோதரி...

'என்ன நடந்தது...என்ன நடக்கிறது இங்கே...' நெஞ்சில் எழுந்த கேவல் அடுத்த சில நிமிடங்களிலேயே வெஞ்சினமானது.

என் மூத்த சகோதரனும் கால்களை நீட்டியிருந்தான். கால்கள் துவண்டன. குடும்பத்தில் இன்னும் யார்தான் பாக்கி...நா வரண்டதற்குக் காரணம் துக்கம் மட்டும் காரணமில்லை என்று அடுத்த சில நொடிகளில் தெரிந்தது.

'மயக்கம்... நா வறட்சி...காற்று... நல்ல காற்று வேண்டும்... என்ன செய்கிறது எனக்கு...ஐயோ...என் சகோதரர்களுக்கு நேர்ந்த கதி எனக்குமா...என்ன காரணம்...என்ன சாப்பிட்டேன் கடைசியில்....கேக்...ஆ...அந்த கேக்கில் என்னமோ...'

இப்போது அடுத்த பயம் வந்தது. என் அம்மா எது கிடைத்தாலும் என் கடைசிச் சகோதரனுக்குக் கொஞ்சம் எடுத்துக் கொண்டு போய்த் தரும் பழக்கம்...ஐயோ...அந்தக் குழந்தை...அதற்கு நல்லது கெட்டது எதுவுமே தெரியாதே...எனக்கு மட்டும் எல்லாம் தெரிந்திருந்ததா என்ன...எங்கள் விதி...ஐயோ..அம்மா....குழந்தைக்கு எதையும் தருமுன் அவர்களை ஜாக்கிரதைச் செய்து காப்பாற்ற வேண்டும்..

துவண்ட கால்களை நேராக்கி ஓட வீடு நோக்கி ஓட முற்பட்டேன். தண்ணீர் தேடும் ஆசையைத் துறந்து ஓடினேன். காற்றைத் தேடும் உயிர் இச்சையை மதிக்காமல் ஓடினேன்.

ஓடினேன் என்று நினைத்தேன். ஊர்ந்தேன். ஆனால்...

காலம் கடந்திருந்தது. அந்தக் குழந்தை...இளஞ்சிவப்பு கால்களுடன் அந்தக் குழந்தை...ஐயோ...நீயுமா....அருகிலேயே அம்மா...கடவுளே...அம்மா...நீ கூட ஏமாந்து போனாயா....

எத்தனையோ பொறிகளில் மாட்டாமல் இருக்கச் சொல்லிக் கொடுத்தாயே...

என் முடிவும் அருகில் வந்து விட்டதை உணர்ந்தேன்.

விடக் கூடாது. இவர்களை விடக் கூடாது. வருவேன். மீண்டும் வருவேன். இவர்களைப் பழி வாங்க மீண்டும் வாழ்வேன். என் கண் நிரந்தரமாக மூடு முன் எங்கள் குடும்பத்தையே காலி செய்த அந்த கேக் கண்ணில் பட்டது.


மீண்டும் வாழ்வேன்.....மீ...ண்....டும்.....வா.......ழ்.....
                   

29 கருத்துகள்:

  1. நான் கூட என்னவோ ஏதோன்னு நினைச்சேன்!
    முதல் வார்த்தையில் ஆரம்பித்தது, கடைசி வார்த்தையில தான் நிறுத்தினேன்.
    நன்றாக இருந்தது!

    பதிலளிநீக்கு
  2. கொசுவென்று நினைத்தேன்; எலியா??

    விநாயகரை அழைத்த “க்ளூ” பிடிபடவில்லை அப்போ.

    ஆனால், படிக்கும்போதே ’வேங்கை’ ஞாபகம் வந்தது. அதுலதான் கிளைமேக்ஸ்ல தனுஷ் ஏதோ இளநீ வெட்டுற மாதிரி வரிசைக்கா ‘தலை’களை வெட்டிப் போடுவார்.

    ஆமா, உங்க வீட்டில இத்தனை எலிகளா? இல்லை எலிவளையில் நீங்க ஷேரிங்கா? ;-)))))))

    “மீண்டும் வாழ்வேன்” - பார்ட் டூ எப்போ? ;-))))))

    பதிலளிநீக்கு
  3. எலி விஷ கேக் எல்லாம் நல்லா சாப்பிட்டு புஷ்டியாக வளர்கிறது என்று என் நண்பர் சொன்னது தவறா போச்சே...

    பதிலளிநீக்கு
  4. நன்றி HVL.

    ஹா...ஹா. நன்றி ஹுஸைனம்மா...பார்ட் டூ ஆசை வேறயா...அம்மாடி...//ஆமா, உங்க வீட்டில இத்தனை எலிகளா? இல்லை எலிவளையில் நீங்க ஷேரிங்கா? ;-)))))))//


    ஹா...ஹா...ஹா...ஹா..
    சும்மா கற்பனைக்கு எழுதியதுதானே...!

    பதிலளிநீக்கு
  5. ரசிக்க வைச்சிட்டீங்க. நகைக்க வைச்சிட்டீங்க.

    பதிலளிநீக்கு
  6. வெல்கம் சூர்யாஜீவா..... இப்போ புதுசா அட்டைல பசைல ஒட்டறா மாதிரி எல்லாம் எலி பிடிக்கும் அட்டை வந்துள்ளது தெரியுமோ...இந்த எலி கேக்கை மனிதர்கள் தவறுதலாய் சாப்பிட்டு விட்டால் ஆன்ட்டி டோட் விட்டமின் கே யாம்!

    நன்றி தமிழ் உதயம்.

    பதிலளிநீக்கு
  7. மீண்டும் வாழ்வேன்னு தலைப்பை படிச்ச உடனே ஏதோ திகில் கதையா இருக்குமோன்னு திக்கு திக்குன்னு மனசு அடிசுண்டுது. படம் கண்ல தெரியற வரைக்கும் ஒரு பயத்தோடதான் படிச்சேன். கதை சூப்பர்!

    Label 'ஒரு எலியின் சபதம்' அட்டகாசம்! இதை படிச்ச உடனே எலி விநாயகரை வேண்டிகொண்டது, அவரை கை விட்டு விட்டாயே என்று வேதனை பட்டது எல்லாம் செம காமெடியா இருந்துது.

    பதிலளிநீக்கு
  8. கடைசி தம்பியை காப்பாற்ற ஓடும் போது நானும் பதைபதைக்க கூட ஓடினேன்.கடைசியில் இப்படி ஆகிவிட்டது..
    இருந்தாலும் எலியும் ஒரு உயிர்தானே?

    பதிலளிநீக்கு
  9. ரொம்ப அருமையாக எழுதியுள்ளீர்கள்:)! எலிப்படம் கடைசியில் வந்தாலுமே கொஞ்சம் சஸ்பென்ஸை உடைக்கிறதோ?

    பதிலளிநீக்கு
  10. நன்றி மீனாக்ஷி...இந்த மாதிரி ரசனைகள் ஊக்கம் தருகின்றன.

    ஈடுபாட்டுடன் படித்ததற்கு நன்றி ராம்வி...

    நன்றி ராமலஷ்மி...கடைசியில் கூடச் சொல்லவில்லை என்றால் சரியாக வராதே..!!

    பதிலளிநீக்கு
  11. மனுஷன் இல்லேன்னு தெரிஞ்சாலும் . சரியா அனுமானிக்க முடியல..
    நல்லா இருக்கு..

    பதிலளிநீக்கு
  12. நான் சொல்ல வந்தது எலியை எழுத்திலே கொண்டு வந்து வேறுபடம் தேர்வு செய்திருக்கலாமோ என்று. சஸ்பென்சை படத்தால் உடைத்திருப்பதும் அருமையே. என் கண்கள்தான் எந்தப் பதிவில் நுழைந்தாலும் முதலில் படத்தைப் பார்த்து விடுகின்றன:)!

    பதிலளிநீக்கு
  13. // என் கண்கள்தான் எந்தப் பதிவில் நுழைந்தாலும் முதலில் படத்தைப் பார்த்து விடுகின்றன:)!//

    PIT, PIT !! :-))

    பதிலளிநீக்கு
  14. கடைசியில் நல்ல ட்விஸ்ட். இறந்தது எலிகள்தான் என்றதும் முதலில் கொஞ்சம் அமைதி, பின்னர் எலி உயிர் மட்டும் சாதாரணமானதாக நினைத்தோமே என்ற குற்ற உணர்வு வந்ததையும் ஒத்துக்கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  15. நல்லதொரு சஸ்பென்சோட கொண்டு போயிருக்கீங்க..

    பதிலளிநீக்கு
  16. நன்றி மாதவன்.

    நன்றி கீதா சந்தானம், நிஜமாகவே சிவந்த கால்களுடன் குட்..ட்..டி எலி ஒன்றும் ஒருக்களித்து இறந்திருந்ததைப் பார்த்ததும் எழுந்த கற்பனைதான் இது!

    நன்றி அமைதிச்சாரல்.

    பதிலளிநீக்கு
  17. அந்த துடிப்பு வேதனை அழுகை விநாயகரை வேண்டி கேட்கும் கோரிக்கை எல்லாமே அத்தனை தத்ரூபமாக கொண்டு வந்து கதையில் கடைசியில் ரேட் பாய்சன்னு காமிச்சப்ப ஒரு செகண்ட் அப்படியே அசையாமல் உட்கார்ந்துவிட்டேன்....

    திரும்ப முதலில் இருந்து படிக்க ஆரம்பித்தேன்..ஏன் சொல்லுங்க பார்ப்போம்? அதாவது முதல் வரில இருந்து படிச்சுட்டே வந்தப்ப இலங்கையில் மனித உயிர்கள் வேட்டையாடியதை சொல்றீங்களா அப்டின்னு படிச்சுக்கிட்டே வந்தேன். அப்புறம் குடும்பத்துக்கே யாராச்சும் மொத்தமா விஷம் கலந்த பண்டம் கொடுத்துட்டாங்களா அப்டின்னு எண்ணத்தை மாற்றிக்கொண்டு படித்தேன்.. அப்புறம் கடைசியா எலி என்று படித்தப்ப..... திரும்ப எலி என்று நினைத்துக்கொண்டு முதலில் இருந்து படித்தேன்....

    ஸ்ரீராம் கதை நிஜம்மாவே ரொம்ப மனதை தாக்கும்படி இருந்திச்சுப்பா, மனிதனோ விலங்கோ பக்‌ஷியோ எறும்போ உயிர் உயிர் தானே? அதனால் தான் இத்தனை மனித நேயத்தோடு மனிதன் துடிப்பது போல தானே மற்ற ஜீவராசிகளும் துடிக்கும் என்பதை அத்தனை தத்ரூபமா படிக்கும் வாசகர்களையும் நினைக்கவெச்சது ஹாட்ஸ் ஆஃப் ஸ்ரீராம்...

    இனி தவறாமல் படிக்கனும் உங்க படைப்புகளை இங்கே...

    அன்பு வாழ்த்துகள் ஸ்ரீராம் அருமையான படைப்புக்கு...

    பதிலளிநீக்கு
  18. நல்ல விருவிருப்பான படைப்பு. . .அருமை சகா. . .

    பதிலளிநீக்கு
  19. நல்ல புனைவு...கொசுவை விட எலிகளை கொடுமையாகத்தான் கொல்கிறோம்.. நீலகிரி நாட்களில் பொறியில் மாட்டிய எலியை (களை)இரண்டு கிமீ தள்ளி காட்டிற்குள் விட்டு வந்த நாட்கள் நினைவுக்கு வருகிறது...

    பதிலளிநீக்கு
  20. கொஞ்சம் ஆடித்தான் போய்விட்டேன் ஸ்ரீராம்! படித்தப்புறம் எலிகளையும் கொல்ல வேண்டாம்னு தோணுது ஸ்ரீராம்!

    பதிலளிநீக்கு
  21. பாராட்டுகளுக்கு நன்றி மஞ்சுபாஷிணி...உங்கள் கமெண்ட் படிப்பதே தனி அனுபவமாக பல தளங்களில் படித்ததுண்டு. இங்கும் அதே போல மனம் விட்டு அருகிலிருந்து பேசும் தோழி போல் பின்னூட்டமிட்டிருப்பது சந்தோஷம்.

    நன்றி பிரணவன்.

    கொன்ற நாட்களை விட கொல்லாமல் விட்ட நாட்கள் அதிகம்தான் பத்மநாபன்.இரண்டு கிலோ மீட்டர் தள்ளியா...அடேங்கப்பா...!

    நன்றி வானம்பாடிகள்.

    நன்றி மோகன்ஜி

    பதிலளிநீக்கு
  22. //இரண்டு கிலோ மீட்டர் தள்ளியா.// தள்ளி விட்டால் மீண்டும் வராது எனும் நம்பிக்கை .. காட்டெலிகளாக மாறியிருக்கும்

    பதிலளிநீக்கு
  23. கடைசி வரி வரை சரியா யூகிக்க முடியாமலே சொல்லி இருக்கீங்க.
    நல்லா இருக்கு.

    பதிலளிநீக்கு
  24. எத்தனையோ பொறிகளில் மாட்டாமல் இருக்கச் சொல்லிக் கொடுத்தாயே../

    யுத்தகள பரபரப்பு!

    பதிலளிநீக்கு
  25. ஆமா, உங்க வீட்டில இத்தனை எலிகளா? இல்லை எலிவளையில் நீங்க ஷேரிங்கா? ;-)))))))///

    ஹுசைனம்மா, எங்க நிலைமை இப்போ இதான். :))))) எலிவளையிலே ஷேர் பண்ணிட்டோமோங்கற அளவுக்கு இருக்கு நிலைமை!

    ஹிஹி, எங்கள் ப்ளாக் அப்படி எல்லாம் இளகிய மனம் எனக்கு இல்லை; நாங்களும் விஷம் வைத்துத் தான் எலிகளைப் பிடிப்போம்; ஆனால் அந்த விஷம் தோய்ந்த உணவுப் பொருளாலே அணில், குருவிகள், மற்றப் பறவைகள்னு எல்லாமும் உயிர் துறக்க நேரிட, கடைசியில் பொறி வைச்சுப் பிடிச்சுக் கொண்டு விட்டுடறோம்.

    பொறியும் மாட்டினால் உடனே எலி சாகும்படியான பொறியும் இருக்கு. கழுத்தில் கம்பி சுருக்காக மாட்டிவிடும். அதைப் பார்த்தாலும் கஷ்டமாய் இருக்கும். ஆனால் பொருட்கள் நாசம் ஆகின்றன, ஆகையால் எலிகளை வேட்டையாடியே தீரவேண்டி இருக்கு. :((((((

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!