செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013

முதல் பதிவின் சந்தோஷம்... தொடர்பதிவு - DD கேட்டுக்கொண்டபடி.

          
DD என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் திண்டுக்கல் தனபாலன் என்னை(யும்) ஒரு தொடர்பதிவு எழுத .அழைத்திருந்தார். சரி, ஆளைக் காணோம்...லாங் லீவில் போயிருக்கிறார், அது முடிந்து அவர் திரும்பி வருவதற்குள் எழுதி விடலாம் என்று எண்ணியிருந்தால். இன்றைய சைக்கிள் பதிவில் வந்து ரிமைன்டர் போட்டு விட்டுப் போய் விட்டார்! மெமோ கொடுப்பதற்குள் எழுதி விட வேண்டும் என்று தொடங்கி விட்டேன்.
   
உண்மையில் மூன்று நாட்களுக்கு முன்னரே முயற்சியைத் தொடங்கி விட்டேன். ராஜி மற்றும் திரு வே. நடனசபாபதி அவர்கள் பக்கம் சென்று அவர்கள் எழுதியிருப்பதைப் படித்து வந்தேன்.
    
தலைப்பு என்னவென்றால் 'முதல் பதிவின் சந்தோஷம்'.
     
பதிவுலகில் முதல் பதிவு என்றில்லாமல்...
    
அங்க இருக்கற அந்த டார்டாயிசைக் கொஞ்சம் எடுங்க..... சுருள் சுருளா விஷ்ணு சக்கரம் மாதிரி இருக்கே.....அதான்.....ஆங்...உடைந்துவிடப் போகிறது... ஜாக்கிரதையாப் பார்த்து எடுங்க....ஆங்... எடுத்துட்டீங்களா... அப்படியே ஒரு குச்சியில் சொருகி உங்கள் முகத்துக்கு எதிரே சுழற்றுங்கள்.... ஆமாங்க....ஃபிளாஷ்பேக்தானுங்க....
      
முதல் பதிவு இப்போதல்ல, என்  பள்ளிப்பிராயத்துக்குப் போகிறேன். பதின்ம வயதுகளில் என் அண்ணனும் அவன் தோழனும் 'வசந்தம்' என்ற பெயரில் ஒரு கையெழுத்துப் பத்திரிக்கை நடத்தினர். ஆர்வமான நானும் என்னுடைய ஒன்றிரண்டு படைப்புகளை அதில் வெளியிடச் சொல்ல, அவர்கள் மறுத்து விட்ட காரணத்தால் நானே 'தென்றல்' என்ற பெயரில் ஒரு கை.ப. தொடங்கினேன்.
     
பிரபல பத்திரிகைகளில் வந்த, கொஞ்சம் பழசாகி வாசகர்கள் நினைவிலிருந்து மறந்து போன பிரபல ஓவியர்களின் படங்களை ஒரு காகிதத்தில் அதன் அவுட்லைன் மட்டும் கார்பன் வைத்துப் பிரதி எடுத்துக் கொள்வேன். ஏற்கெனவே பத்திரிகைக்காக வெட்டி வைத்திருக்கும் பக்கங்களில் இரண்டில் (இரண்டு பிரதிகள் வெளியிடப்படும்.  ஒன்று 'வாசகர்'களுக்கு! இன்னொன்று அலுவலகக் காபி!!!) அந்த அவுட்லைனை பிசிறடிக்காமல்  ஒற்றி எடுத்து வைத்துக் கொண்டு அப்புறம் லேசாக அதில் பதிந்திருக்கும் அந்த அவுட்லைனில் முகம், உடல் எல்லாம் வரைந்து வண்ணம் கொடுப்பேன்.
     
அம்மா, நண்பர்கள் சொன்ன ஜோக்ஸ், காலனி நிகழ்வுகள், ஸ்போர்ட்ஸ் செய்திகள், மற்றும் வெவ்வேறு பெயரில் என் சிறுகதைகள்!
     
லைப்ரேரியனைக் கெஞ்சிக் கூத்தாடி புத்தகத்தை லைப்ரேரியில் போட்டு விட்டு, யாராவது படிக்கிறார்களா, அவர்கள் முகம் எப்படி மாறுகிறது என்று வேறொரு புத்தகம் படிப்பது போல பாவ்லா செய்து, பார்த்துக் கொண்டிருப்பேன். பதிவுலகம் மாதிரியேதான்! பெரும்பாலும் யாரும் சீந்துவதில்லை.
       
முதல் கதை எல்லாம் அபத்தம் என்றாலும், மரணத்தைப் பற்றிக் கவலைப் படக்கூடாது, ஆன்மா உடல் என்னும் சட்டையை மாற்றுகிறது துக்கம் கூடாது என்று எல்லாம் மேடைகளில் பேசும் சத்தியமூர்த்தி வீடுவந்ததும் தனது தாயார் மரணம் அடைந்திருப்பது கண்டு துக்கப்படுவது என்று நான் எழுதியிருந்த கதையைப் படித்துப் பலர் பாராட்டாவிட்டாலும், ஒரே ஒரு கிழவர் விசாரித்தது அறிந்து என்னைத் தேடி வந்து சிலாகித்தார்.
     
வாசகர் கடிதங்கள் கேட்டிருந்தும் எதுவும் வராததால், நண்பர்களிடம் வற்புறுத்தி கடிதம் வாங்கிப் போட்டதன் விபரீத பலன், செடி, கொடி, மலர், புயல் என்றெல்லாம் பத்திரிகைகள் முளைக்க, மிரண்டு போன லைப்ரேரியன் வசந்தம், தென்றல் உட்பட எல்லாவற்றையும் தடை செய்தார்.
     
ஆனாலும்  இலக்கிய தாகம் ( ! ) தணியாத நான் பத்திரிகையைத் தொடர்ந்து 'நடத்தி', தனிச்சுற்றில் விட்டு இலக்கியச் சேவை செய்து வந்தேன். வெவ்வேறு சுவாரஸ்யங்கள் தலைதூக்கிய நாட்களில், தாகம் சற்றுத் தணிய, புத்தகம் நிறுத்தப்பட்டது!
     
பதிவுலகில் பதிவு பற்றிய சந்தோஷம் என்றால்....
     
நான் முதலில் எழுதிய பதிவு கன்னா பின்னா என்று எக்கச்சக்க சந்தோஷத்தைக் கொடுத்தது - (எனக்கு மட்டும்!)
    
பலமுறை மீண்டும் மீண்டும் படித்துப் பார்க்கப்பட்டது - என்னால் மட்டும்.
      
அப்போது ஆரம்பகாலங்களில் எல்லாப் பதிவர்களையும் போலவே எங்கள் பதிவுகளுக்கு நாங்கள் மட்டுமே வாசகர்கள்! முதல் வெளி கமெண்ட் என்பது திரு பாலராஜன் கீதாவிடமிருந்து. இரண்டாவது  நெற்குப்பைத்தும்பியிடமிருந்து. அப்புறம் மெண்டல் பாண்டி.
     
கொஞ்சம் படிக்கிற மாதிரி நான் எழுதிய கமல்ஹாசன் பதிவுக்கு அப்பாதுரை முதல் தடவையாக பின்னூட்டம்! அப்புறம் மரணம் பற்றிய சிந்தனைப் பதிவு.
    
பதிவுகள் எழுதுவதைவிட, நண்பர்கள் தளங்களில் பின்னூட்டமிடுவது மிகவும் பிடித்திருந்தது. படைப்பை விட, விமர்சனம் எளிது! வெண்ணிற இரவுகள், புலவன் புலிகேசி, வடலூரான், சைவக் கொத்து பரோட்டா போன்ற இன்னும் பல தளங்களில் தொடர் வாசிப்பு. அப்பாதுரையின் அமானுஷ்யப் பதிவுகளுக்கும் நூடன் பதிவுகளுக்கும் பின்னூட்டம். பல்வேறு தளங்களிலும் பின்னூட்டமிட்ட வகையில் 'எங்களை'ப் பற்றி மெல்ல வெளியில் தெரியத் தொடங்கியது.
           
அப்புறம் இன்டலி, தமிழ் 10, தமிழ்மணம் ஆகியவற்றில் இணைத்துப் பயனடையத் தொடங்கினோம்.
             
முதல் பதிவில் என்றில்லை, இன்னும் என்  எந்தப் பதிவிலும்  சந்தோஷம் இல்லை, என் எழுத்தில் எனக்கே முழு திருப்தி இல்லாததால்.
             
ஆனாலும் ஜீவி ஸார் போன்ற ஜாம்பவான்களின் ஊக்கப்படுத்தும் பின்னூட்டங்கள், கீதா சாம்பசிவம், வல்லிம்மா  போன்ற மூத்த பதிவர்களும், ராமலக்ஷ்மி, ஹேமா அப்பாதுரை போன்ற சக, ஆனால் திறமையான பதிவர்களும் நம் எழுத்தைப் படித்தாலே சந்தோஷம்தான்.  அவர்கள் மனமுவந்து பாராட்டி ஊக்கப்படுத்தும்போது இன்னும் சந்தோஷம். நண்பர்கள் பின்னூட்டமிட்டால்தான் யார் யார் படித்தார்கள் என்று தெரிகிறது.
     
DD யாரையாவது தொடர அழைக்கலாம் என்று சொன்னாரா என்று தெரியவில்லை. எனினும் நான் மன்னை மைந்தன் மாதவனையும், பின்னூட்ட அரசி மஞ்சுபாஷிணியையும் தொடர அழைக்கிறேன். 
                

26 கருத்துகள்:

  1. ஐ ஆல்ஸோ அடிச்சிங் லாடாஃப் கும்மீஸ் இன் யுவர் ப்ளாக் யுவர் ஆனர்... 2010 யுவர் ஆனர்! இந்த ப்ளாக்கால் தான் என் ப்ளாகெல்லாம் கூட பாப்புலர் ஆச்சு. நிறைய சுவையான கட்டுரைகள், சின்னச் சின்ன செய்திகளின் கோர்வை இப்படி பல அருமையான கட்டுரைகளைத் தந்த எங்கள் ப்ளாகுக்கு நன்றிகள்! :)

    பதிலளிநீக்கு
  2. ஃபிளாஷ்பேக் = சூப்பர்...

    லைப்ரேரியன் பயந்ததும், "எந்தப் பதிவிலும் சந்தோஷம் இல்லை" (எங்களுக்கு உண்டு) பெருந்தன்மையும் சுவாரஸ்யம்....!

    /// நண்பர்கள் தளங்களில் பின்னூட்டமிடுவது மிகவும் பிடித்திருந்தது.. /// அதே அதே.. வாழ்த்துக்கள்.. மிக்க நன்றி...

    பதிலளிநீக்கு
  3. //முதல் பதிவில் என்றில்லை, இன்னும் என் எந்தப் பதிவிலும் சந்தோஷம் இல்லை, என் எழுத்தில் எனக்கே முழு திருப்தி இல்லாததால்.//

    'நான் வளர்கிறேனே, தோழர்களே!' என்கிற உணர்விற்கு இது தான் சமிக்ஞை.

    எழுதுபவர்க்கு எந்தக் காலத்தும் இந்த உணர்வு இருப்பது எழுத்தின் உன்னததிற்கு இட்டுச் செல்லும்.

    'திருப்தி அடைந்து விட்டவனுக்கும் செத்துப் போனவனும் வித்தியாசம் இல்லை' என்று 50 ஆண்டுகளுக்கு முன் நான் நீட்டிய ஆட்டோகிராப் கலர்த்தாளில் ஜெயகாந்தன் அவர்கள் எழுதித் தந்தது நினைவுக்கு வருகிறது.

    நிறைய எழுதி சாதனை படைக்க வாழ்த்துக்கள், ஸ்ரீராம்!

    பதிலளிநீக்கு
  4. மிக சுவராஸ்யமாகச் சொல்லியிருக்கிறீர்கள். கையெழுத்துப் பத்திரிகை நடத்தியது இப்போதுதான் முதன்முறையாகப் பகிருகிறீர்கள் என எண்ணுகிறேன். நல்ல திட்டமிடலுடன் பல்சுவை இதழாக இருந்திருக்கிறது ‘வசந்தம்’ இன்றைய ‘எங்கள் ப்ளாக்’ போலவே.

    தனபாலன் சொல்லியிருப்பது சரி. நிறைய சந்தோஷத்தை வாசகருக்கு அளித்திருக்கிறது எங்கள் ப்ளாக். தொடருங்கள். தொடருகிறோம்:)!

    பதிலளிநீக்கு
  5. மரணத்தைப் பற்றிக் கவலைப் படக்கூடாது, ஆன்மா உடல் என்னும் சட்டையை மாற்றுகிறது துக்கம் கூடாது என்று எல்லாம் மேடைகளில் பேசும் சத்தியமூர்த்தி வீடுவந்ததும் தனது தாயார் மரணம் அடைந்திருப்பது கண்டு துக்கப்படுவது//
    கதை மிக நன்றாக இருக்கும் போலவே!
    முதிர்ந்த எழுத்தாளர் பாணியில் எழுதி இருக்கிறீர்கள்.
    அதை உங்கள் பதிவில் பகிர்ந்து இருக்கிறீர்களா?
    படிக்க ஆவல்.
    வயதானவர் ஒருவர் பாராட்டி இருக்கிறாரே! அது பெரிய பரிசு அல்லவா?
    ஜீவி சார் சொல்வது போல் வளர்ந்த எழுத்தாளார் தான்.
    பிளாஷ்பேக் உத்தி அருமை.
    மேலும், மேலும் உங்கள் நல்ல பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்.


    பதிலளிநீக்கு
  6. அப்போதே எழுத்தின் மீதும் கையெழுத்துப் பத்திரிக்கையின் மீதும் உங்களுக்கு இருந்த ஆர்வம் கண்டு யாம் வியக்கோம் :-))))))

    எங்கள் பிளாக் எப்போதுமே என் பேவரைட் ரைட்டர்ஸ் பிளாக் :-)))))

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் அண்ணா...

    முதலில் நான் எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன், தாங்கள் என்னை அழைத்த தொடர் பதிவை இன்னும் என்னால் எழுத இயலவில்லை. தங்கள் இந்தப் பதிவும் (உங்கள் முதல் பதிவின் அனுபவம்)அழகாக உள்ளது வழக்கம் போல...

    பதிலளிநீக்கு
  8. விரைவில் விரைந்து எழுதிவிடுகிறேன்,,, இடையில் இணையம் கொஞ்சம் புட்டுகிட்டது எனக்கு, ஆதலால். இயலவில்லை...

    பதிலளிநீக்கு
  9. முதல் பதிவு இட்டது
    முதல் இரவு நினைவுக்கு வந்தது.
    முதல் நிலவு பார்த்தது.
    எல்லாமே
    முதுமை தொட்டு விட்டது என்
    முதுகை என்று சொல்கிறதோ ???
    PLEASE SEE COUNT DOWN FOR TAMIL BLOGGERS MEET AT CHENNAI AT
    www.vazhvuneri.blogspot.com
    சுப்பு தாத்தா.
    www.subbuthatha72.blogspot.com

    பதிலளிநீக்கு
  10. முதல் பதிவு என்னன்னு சொல்லவே இல்லையே! அதுக்கு இணைப்பு கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். சரி. நாங்க பின்னோக்கி போய் பாத்துடறோம்.

    பதிலளிநீக்கு
  11. ஸ்ரீ ராம் சார்,
    உங்கள் முதல் பதிவு அனுபவம் அருமை.
    உங்களுக்கு ஏன் உங்கள் பதிவில் திருப்தியில்லை என்று புரியவில்லை.
    உங்கள் பதிவை படித்தது பற்றி நான் மட்டுமில்லை, என் கணவரும் படித்தார் என்பதை "கணவரின் கனவுக் கன்னி" என்ற பதிவில் எழுதியிருக்கிறேன்.பாருங்கள்.
    நன்றி பகிர்விற்கு.

    பதிலளிநீக்கு
  12. .. ஜாக்கிரதையாப் பார்த்து எடுங்க....ஆங்... எடுத்துட்டீங்களா... அப்படியே ஒரு குச்சியில் சொருகி உங்கள் முகத்துக்கு எதிரே சுழற்றுங்கள்.... ஆமாங்க....ஃபிளாஷ்பேக்தானுங்க....//

    ம்ஹூம், லொக், லொக், லொக், இருமல் தாங்கலை! புகை!!! :)))

    ஒன்று 'வாசகர்'களுக்கு! இன்னொன்று அலுவலகக் காபி!!!)//

    ஆஹா, ஆஹா, இப்போவும் வைச்சிருக்கீங்களா?

    மற்றும் வெவ்வேறு பெயரில் என் சிறுகதைகள்!//

    இன்னொரு ரா.கி.ர. வந்திருக்கணுமோ? :)

    அந்தக் கிழவர் உங்கள் தூரத்துச் சொந்தமோ? ஹிஹிஹி, செடி, கொடி, மரம், மலைனு எல்லாம் புத்தகங்கள் முளைச்சுதா? ஹாஹாஹா

    பதிலளிநீக்கு
  13. நானெல்லாம் எழுதறதுக்கு உங்களோட எழுத்தெல்லாம் திருப்தி தரலைனு நீங்க சொல்றது கொஞ்சம் ஓவரா இல்லையோ? அதிலேயும் முகநூலில் இன்னும் வெளுத்துக் கட்டறீங்க! எனக்கு ஒரு சந்தேகம்!

    அப்புறமா ஆப்பீச்ச்சு வேலை, இந்த ப்ளாக் எழுதற வேலை, பின்னூட்டம் கொடுக்கிற வேலைக்கெல்லாம் நேரம் எப்படிக் கிடைக்குது! உண்மையில் முகநூல்காரங்களை நினைச்சாலே கொஞ்சம் ஆச்சரியமாத் தான் இருக்கு. என்னாலே பத்து நிமிஷத்துக்கு மேல் இருக்க முடியலை! :)))))

    பதிலளிநீக்கு
  14. ஹாஹா, என்னோட முதல் பதிவுக்கு நான் மட்டுமே தான் வாசகர்! :)))))அதுக்கு நீங்க பரவாயில்லை ரகம். பின்னூட்டப் புயல் மஞ்சுபாஷிணியை அழைச்சிருக்கீங்களா? நல்ல தேர்வு தான். :))

    பதிலளிநீக்கு
  15. முதல் பதிவே பிரமாத பதிவாக இருக்கும் போல இருக்கே.
    எங்கள் ப்ளாக் படிப்பதன் மூலம் எத்தனையோ நன்மை. உங்கள் ரைட்டர்'ஸ் லிஸ்ட் பார்த்துவிட்டுத்தான் பல ப்ளாகிற்குப் போவது வழக்கமாகவிட்டது.அசத்தல் பதிவு.

    பதிலளிநீக்கு
  16. எங்கள் பிளாக் நாங்கள் எங்கள் பிளாக் என்று படித்து ரசிக்கிறோம்... இன்னும் திருப்தியான பதிவு எழுதவில்லையா?

    பதிலளிநீக்கு
  17. //உங்கள் ரைட்டர்'ஸ் லிஸ்ட் பார்த்துவிட்டுத்தான் பல ப்ளாகிற்குப் போவது வழக்கமாகவிட்டது.

    me too வல்லிசிம்ஹன். but i stopped.

    பதிலளிநீக்கு

  18. நன்றி அநன்யா... முதலில் வந்த இரண்டு மூன்று பேர்களை மட்டும் குறிப்பிட்டேன்!

    நன்றி DD ... பழைய நினைவுகளை அசைபோட வாய்ப்பளித்தமைக்கு நன்றி!

    ஜீவி ஸார்... வாழ்த்துக்கும், வருகைக்கும் நன்றி. நீங்கள் தரும் வரிகள் ஒவ்வொருமுறையும் என்னை உற்சாகப்படுத்துகின்றன.

    நன்றி ராமலக்ஷ்மி... கையெழுத்துப் பத்திரிக்கை பற்றி முன்பே ஒருமுறை குறிப்பிட்டிருக்கிறேன். ஹேமா பதின்ம நினைவுகள் தொடர்பதிவு எழுத அழைத்தபோது என்று நினைவு! நான் நடத்தியது (!) தென்றல். அண்ணன் பத்திரிகைதான் வசந்தம்!

    வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி கோமதி அரசு மேடம்... நான் எங்கும் பகிரவில்லை.

    நன்றி சீனு.

    நன்றி சூரி ஸார்...

    நன்றி TNM... பகிரும்படி இருந்திருந்தால் பகிர்ந்திருக்க மாட்டேனா...!!

    நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் மேடம்...நீங்கள் தரும் ஊக்கம் மகிழ்ச்சி அளிக்கிறது. உங்கள் பதிவு படித்து, கருத்திட்டு விட்டேன்!

    நன்றி கீதா மேடம்... அலுவலக காபி எல்லாம் எப்பவோ தொலைந்துபோய் விட்டது. இருந்திருந்தால் படமெடுத்துப் படம் காட்டியிருப்பேனே....ஹிஹி...

    ரா கி ர....ஹிஹிஹிஹி... அந்தக் கிழவர் இல்லை. அப்போதுதான் முதன்முதலில் பார்த்தேன். பின்....னால் எங்கேயோ ஒரு ப்ளாக்கில் இருந்தார்.

    முகநூலில் கட்டறேனா.... அங்க மற்ற எல்லோரும் வீடு கட்டறாங்க... நானெல்லாம் ஜுஜுபி!

    நன்றி வல்லிம்மா... உங்கள் பாராட்டில் தெரிவது உங்கள் அன்பு!


    வருகைக்கும் ஊக்கத்துக்கும் நன்றி சே. குமார்.

    வருகைக்கு நன்றி அப்பாதுரை.

    பதிலளிநீக்கு
  19. /கையெழுத்துப் பத்திரிக்கை நடத்தியது, கதைகள் கையாலேயே எழுதியது, பத்திரிகையில் வந்த பிரபல ஓவியர்களின் படங்களின் அவுட்டரை வரைந்து முகம் வரைந்து நூலகரின் உதவியுடன் நூலகத்தில் வைத்தது, படித்தவர்கள் கருத்தை அங்கேயே கேட்டு அடுத்த இதழில் 'பிரசுரித்தது',/

    ஆம், சொல்லியிருக்கிறீர்கள். இனி மறக்காது, இதுவும் /தென்றல்/. நன்றி:)!

    பதிலளிநீக்கு
  20. போச்.. போச்… ஆரம்பமே ரணகளமா?? குச்சி எடுத்து கொசுவர்த்தி சுருள் எடுத்து முகம் முன்னாடி சுத்தனுமா ஹச்… ஹச்ச்… ஹச்ச்ச்…. கலாட்டா தொடங்கியாச்சு.. ஸ்ரீராம் சார் அப்டின்னா அமைதி அமைதி அமைதின்னு தான் நினைச்சுட்டு இருந்தேன்.. இந்த பகிர்வு படிச்சப்பின் தான் தெரியுது அமைதி இல்லை இவர்.. அமைதிப்படையின் தளபதின்னு… செம்ம தொடக்கம்..

    அட எழுத்துப்பயணம் பதின்ம வயசுலயே தொடங்கிடுத்தாப்பா?? ஆச்சர்யம் தான்… அண்ணனும் அண்ணனின் நண்பன் மட்டும் தான் கையெழுத்துப்பத்திரிகை நடத்தனுமான்னு நீங்க தனியா கை.ப தொடங்கினது ரொம்ப பெரிய விஷயம்.. பாராட்டக்கூடியது கூட.. இப்ப இவ்ளோ நல்லா எழுதுறீங்கன்னா அதுக்கு காரணம் அப்போத்திலிருந்து இடைவிடா தொடர் முயற்சி தான்னு சொல்ல வரீங்க அப்டி தானேப்பா??

    ரசித்து வாசித்தேன்.. நீங்க கார்பன் காப்பி எடுத்து ஔட்லைன் போட்டு வரைந்த படங்களும் காதில் கேட்டது அங்க இங்க எடுத்து ஜோக்ஸ் போட்டது… அட கதை எல்லாம் அப்பவே எழுத தொடங்கியாச்சாப்பா? கிரேட்பா… நிஜம்மா தான் சொல்கிறேன்…


    இவ்ளோ திறமைகள் இருந்திருக்கே.. பதிவுலகில் முதல் பதிவு.. அதன்பின் படைப்புகள் படைப்பதை விட கருத்து எழுதுவது எளிதுன்னு சொன்னீங்க பாருங்க.. கைக்கொடுங்கப்பா சீக்கிரம்.. நீங்களும் நானும் ஒரே மாதிரி.. ஆமாம் எனக்கும் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப பிடித்த விஷயம் கருத்து எழுதுவது…பிடித்த விஷயம் செய்வது கண்டிப்பா எளிது தான்…

    பதிலளிநீக்கு
  21. ஜாம்பவான்களின் பின்னூட்டங்களில் எங்கள் வெளியே தெரிய ஆரம்பித்தது போல.. எனக்கும் தெரிஞ்சுதேப்பா.. எங்கள் பிளாக் பற்றி.. கதம்பமாக நிறைய விஷயங்கள்… நிறைய வலைப்பூ… நிறைய தகவல்கள் இப்படி எல்லாம் எங்கள் பிளாக் மூலமாக தான் தெரியவந்தது தெரியுமா?? சுவாரஸ்யம்பா….
    உங்க எழுத்து எல்லோரும் பாராட்டியது போல கண்டிப்பா அசத்தலானது தான்பா…. லைப்ரேரியன் திடிர்னு தென்றல் வசந்தம் செடி கொடி எல்லாத்தையும் தடை செய்தது எனக்கு வருத்தம் தான்பா..

    ஆனால் என்ன எங்கள் பிளாக் தான் எப்போதும் களைக்கட்டுதேப்பா…
    இனிமே ஒழுங்கா வண்டு பின்னூட்டம் போடுகிறேன்பா…

    அதென்ன உங்க எழுத்தில் உங்களுக்கு திருப்தி இல்லைன்னு எப்படி சொல்லலாம்?? கோபத்தோடு தான் கேட்கிறேன்…

    உங்க எழுத்துகளை ஒரு வயசானவர் பாராட்டி இருக்கார் முதன் முதல்.. அப்டின்னா என்ன அர்த்தம்? சின்ன வாண்டுகள் எல்லாம் ஒழுங்கா திறன்பட வாசிப்பதில்லை.. ஆனால் பண்பட்ட முதியவர் படித்து பாராட்டி இருக்கார்.. எவ்ளோ பெரிய விஷயம் இது…

    எல்லாம் சரி என்னை கோர்த்துவிட்டீங்களே உங்களை என்ன செய்யலாம்??

    ரைட்டு இப்ப தானே உங்க பதிவு படிச்சேன்.. அடுத்த பதிவு நீங்க சொன்னதை எழுதறேன்பா..

    ரசித்து வாசித்தேன் உங்க அனுபவங்களை…. அசத்தல்பா…

    பதிலளிநீக்கு
  22. போட்டுட்டேன்பா... நீங்க சொன்னது போல... கூகுள் ஷேர் பண்ணியாச்சு...

    பதிலளிநீக்கு
  23. Sir.. thanks for inviting me..

    I will write soon on this topic..(may be 3-4 days)..

    Thanks..

    பதிலளிநீக்கு
  24. அட! கையெழுத்துப் பத்திரிக்கை நடத்தி இருக்கிறீர்களா? அப்போ உண்மையான seasoned எழுத்தாளர்தான்.

    முதல் பதிவின் சந்தோஷம் என்றென்றும் தொடரட்டும்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!