சனி, 16 மே, 2020

பாதுகாப்பு உபகரணங்கள். பாசிடிவ் புள்ளி விவரங்கள்.







நன்றி : தினமலர் மே 13. 2020. 

==========================

கோவிட் பத்தொன்பது குறித்து சில புள்ளி விவரங்கள். நம்பிக்கையூட்டும் செய்திகள். 

முதல் விஷயம். அது பற்றி பயப்படத் தேவை இல்லை. 

மே பதினைந்தாம் தேதி காலை நிலவரப்படி: 

: உலக அளவில் :  

உலக ஜனத்தொகை : 778 கோடி. 

தொற்று உள்ளவர்கள் : 45.3 இலட்சம் பேர். (உலக ஜனத்தொகையில் 0.058 % அல்லது  பத்தாயிரத்தில் ஆறு பேர். )

நோயால் மரணம் அடைந்தவர்கள் உலக அளவில் : 303418. இது உலக ஜனத்தொகையில் - ஒரு இலட்சம் பேரில் 4 பேர். 

குணம் அடைந்து வீடு திரும்பியவர்கள் : 17 இலட்சம் பேர். இது உலக ஜனத்தொகையில் - ஒரு இலட்சம் பேரில் 22 இருபத்திரெண்டு பேர். 

நோய்த் தொற்று உள்ளவர்கள் : 25 இலட்சம் பேர். அதில் கவலைக்கிடமான, சீரியசான நிலையில் உள்ளவர்கள் : 45,500 பேர் மட்டுமே. அதாவது நூற்றுக்கு இரண்டு பேர் மட்டுமே. மீதம் உள்ள 24,54,500 பேர்களுக்கு (98% ஆட்களுக்கு) லேசான, பாதிப்பில்லாத தொற்று மட்டுமே. 

இந்திய அளவில் :  

ஜனத்தொகை :  138 கோடி. 

தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் : 82103. (இந்திய ஜனத்தொகையில், ஒரு இலட்சம் பேரில் ஆறு பேர்.) 

தொற்றால் மரணம் அடைந்தவர்கள் : 2649 பேர். (இந்திய ஜனத்தொகையில், பத்து இலட்சம் பேரில் இரண்டு பேர்.) 

குணம் அடைந்து வீடு திரும்பியவர்கள் : 27977 பேர்.  ( (இந்திய ஜனத்தொகையில், ஒரு இலட்சம் பேரில் இரண்டு  பேர்.) 

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 51477 பேர். (இந்திய ஜனத்தொகையில், பத்து இலட்சம் பேரில் நான்கு பேர்.) 

புள்ளி விவர அடிப்படையில், இந்த 51477 பேரில், 46,845 பேர் குணம் அடைவார்கள். (91%) 

இந்தியாவில் அதிக பாதிப்பு இருந்தது மே 10 ஆம் தேதி - 4353 பேர் ஒரே நாளில் நோய்த் தொற்று உள்ளவர்களாகக் கண்டறியப்பட்டார்கள். 

ஒரே நாளில் அதிக எண்ணிக்கை மரணம் நிகழ்ந்தது, மே 4 ஆம் தேதி --- 175 பேர். 

மே நான்கு to பத்தாம் தேதிதான் உச்ச கட்டம் என்று வைத்துக்கொண்டால், இனி பாதிப்பு, கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து, அடுத்த நாற்பது நாட்களில் புதியத் தொற்று / மரணம் = 0. என்ற நிலை வருவதற்கு சாத்தியங்கள் 90%. அதாவது ஜூன் 25 ஆம் தேதி இந்தியா நோய்த் தொற்றிலிருந்து முழுமையாக விடுபட்டிருக்கும். 

அதுவரை, அரசாங்கமும் மருத்துவர்களும் கூறி வருகின்ற எல்லா விதிமுறைகளையும் ஒழுங்காக கடைபிடித்தால், மிகவும் நல்லது. 

கை சுத்தம், வெளியில் அலையாதிருத்தல், ஊட்டச்சத்துள்ள உணவு வகைகளை உண்பது.  முகத்தை கைகளால் தொடாமல் இருப்பது. அவசியம் என்றால் மட்டும் வெளியே சென்று வரலாம் - ஆனால் mask அணிவது முக்கியம். வாங்கிய பொருட்களை சுத்தமாகக் கழுவி, கைகளையும் சோப்பு போட்டு இருபது வினாடிகள் கைகளில் சோப்பு நுரை இருக்கும்படி சுத்தம் செய்துகொள்ளவும்.  

===================================


காற்று வழிக் கல்வி. 

                                                          


ரமா ஸ்ரீனிவாசன் 


இன்று நான் ஒரு கதை வழியாக நம் பூமி நமக்கு ஈன்றிருக்கும் அற்புதங்களை பற்றியும் அவற்றை நாம் எப்படி படிப் படியாக நம் சுயநலத்திற்காக அழிக்க முற்படுகிறோம் என்பதை பற்றியும் பேசப் போகிறேன். 


ஒரு நாள் ஒரு வேட்டைக்காரன் காட்டிற்கு மான் வேட்டையாடச் சென்றான். 








அன்று அவனுக்கு ராசியான நாளாக அமையவில்லை. இரண்டு மணி நேரம் வேட்டையாட முயற்சித்தும் ஒன்றும் கிட்டவில்லை. மனம் வெறுத்து, வீடு திரும்ப எண்ணி, வந்த வழியே நடந்தான் / அல்லது வந்த வழியே நடக்கிறோம் என நம்பினான். நடக்க நடக்க கால்கள் சோம்பியதேயன்றி வழி சரியானதாகத் தோன்றவில்லை. ஓய்ந்து பசி, தாகத்துடன் போராடியவன் ஏதாவது உண்ணவோ அருந்தவோ கிடைக்குமா என்று சுற்று முற்றும் கண்களையலைய விட்டான். வாழ்க்கையின் முடிவிக்கே வந்து விட்டோம் என்ற பதட்ட நிலையில் மிகவும் மிரண்டு போய் மலங்க மலங்க முழித்துக் கொண்டிருந்தவன் கண்ணில் திடீரென்று ஒரு ஆப்பிள் மரம் பட்டது. அவ்வளவுதான். மகிழ்ச்சியுடன் அதனருகில் சென்று மரத்தை தன்னால் முடிந்த மட்டும் குலுக்கி பிறகு மரத்து மேலே ஏறி பத்து, இருபது ஆப்பிள்களை பறித்து கீழே எறிந்தான். 




பசியின் வலியால் முதல் ஆப்பிளை வேகமாக உண்டான். உண்டதற்கு பிறகு, கடவுளுக்கும், பூமிக்கும், இயற்கைக்கும் மாறி மாறி தன் பசியாற்றியதற்காக நன்றிகளும் வணக்கங்களும் கூறினான். இரண்டாவது ஆப்பிளும் உள்ளே சென்றது. மூன்றாவது ஆப்பிள் உள்ளே செல்லும்போது முதல் ஆப்பிள் உண்ட மகிழ்ச்சியில்லாமல் சற்று குறைந்தது. நான்காவது பழத்திற்குப் பிறகு அவனுள் நன்றியுணர்வு குறைந்துக் கொண்டை வந்தது. பத்தாவது ஆப்பிளிற்கு வரும்போது அதன் மீது ஒரு வெறுப்பே வந்து வட்டது. மீதம் இருந்த ஆப்பிள்களில் நன்றாக இல்லாதவற்றை தூக்கி எரிந்தான். உண்ண உணவே இல்லாமல் இருந்த ஒருவன் மிகுதியாகக் கிடைத்தப் பின் “ஐயோ, நன்றாக இல்லை” என்று புகார் படிக்க ஆரம்பித்தான். 



உண்ண உணவும் அருந்த நீரும் இல்லாமலிருந்தவன் ஆப்பிள் மரத்தைப் பார்த்து பசியாறிய பின் குறை கூற முற்பட்டான். பொருளாதாரத்தில் இந்த உணர்வுக்கு விளிம்பு பயன்பாட்டைக் குறைக்கும் சட்டத்தின் விளைவு என்று பெயர். இவ்வுணர்வை நாம் நன்றியுணர்வு குறையும் சட்டம் என்று கூடக் கூறலாம். உலகில் உள்ள யாவுமே நமக்காகப் பிறப்பிக்கப் பட்டன என்ற எண்ணம்தான் இதன் அடிப்படை. நாம்தான் முக்கியம்; மற்றவை யாவும் நமக்காக என்ற ஆணவமிக்க எண்ண ஓட்டம். 



இந்த உணர்வை பத்தாவது ஆப்பிள் உணர்வு என்று கூடக் கூறலாம். இந்த பத்தாவது ஆப்பிள் நமக்கே உரித்தான ஆணவத்தையும் அகங்காரத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. இயற்கைக்கு நாம் வெளிப்படுத்தும் அலட்சியத்தையும் புறக்கணிப்பையும் சுட்டிக் காட்டுகின்றது. 



நான் திரும்பவும் சொல்கின்றேன். எந்த பாதையை தேர்ந்தெடுக்கின்றோம் என்பது நமது கட்டுப்பாட்டிலும் நமது சிந்தனையிலும் இருக்கின்றது. இங்கு நான் ஒரு நிகழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகின்றேன். இது எனக்கு இணைய தளம் மூலம் வந்தது. உண்மையா என்று கூடத் தெரியாது. ஆனால், அந்நிகழ்ச்சி என்னை மிகவும் சிந்திக்க வைத்தது, குலுக்கிவிட்டது. 



இத்தாலியில் ஒரு 73 வயது முதிர்ந்தவர் உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டு, சிகிச்சையளிக்கப் பட்டு, உடல் நலம் தேறி, மீண்டும் வீட்டிற்கு செல்லும் நிலையை அடைந்தார். 




அப்போது அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர் அவரை வாழ்த்தி வழியனுப்ப வந்தார். அதற்கு முன், அவர் கட்ட வேண்டிய கட்டனத்தை கூறும் பில்லை அவரிடம் கொடுத்தார். அதில் ஒரு நாளுக்கான காற்றோட்டப்புழை (ventilator) கட்டணமும் வைத்தியத்திற்கான கட்டணமும் காணப் பட்டன.

இதில் அதிசயம் என்னவென்றால், வைத்தியச் செலவை விட காற்றோட்டப்புழை கட்டணம் அதிகமாக இருந்தது. இவை யாவும் ஒரே நாள் வைத்தியத்திற்கு. 



அந்த பில்லை சிறிது நேரம் பார்த்த அந்த முதியவர் கண்ணீர் விட முற்பட்டார். அருகில் இருந்த மருத்துவர் “ஒன்றும் கவலைப் படாதீர்கள். பில்லை நாங்கள் எப்படியாவது குறைக்க ஏற்பாடு செய்கின்றோம்” என்றார். ஆனால் அந்த முதியவர் சொன்ன பதில் அங்கிருந்த அத்தனை மருத்துவர்கள், செவிலியர், உதவியாளர்களையும் அழ வைத்து விட்டது. அப்படி அவர் என்ன கூறினார்? 



“நான் பில்லையும் அதன் கட்டணத்தையும் பார்த்து அழவில்லை. எவ்வளவு கட்டணம் வெண்டுமானாலும் கட்டும் வசதியான நிலையில் நான் இருக்கின்றேன். நான் கடவுள் வரமாகத் தந்த காற்றை எழுபத்து மூன்று வருடங்களாக சுவாசித்துக் கொண்டிருக்கின்றேன். எந்தக் கட்டணமும் இல்லாமல். ஆனால், இன்று ஒரு நாள் இம்மருத்துவமனையில் நான் காற்றோட்டப்புழை மூலம் சுவாசிக்க எனக்கு 5,000 யூரோக்கள் பில்லாகக் கொடுத்துள்ளீர்கள். அப்படியென்றால், நான் கடவுளுக்கு எவ்வளவு கடன் பட்டிருக்கின்றேன் என்று யோசித்தேன். நான் அவருக்கு ஒரு நாள் கூட இதற்கு நன்றி கூறியதில்லை. அதை நினைத்துதான் அழுகின்றேன்” என்றார். 



அம்முதியவரின் வார்த்தைகள் என்னை யோசிக்கவும், சிந்திக்கவும் வைத்தன. நாம் யாவரும் நலமாக இருந்து வளைய வரும்போது நாம் இனாமாக சுவாசிக்கும் காற்றின் அருமையும் பெருமையும் நமக்கு புரிவதில்லை. அதே காற்றை சுவாசிக்க முடியாமல் போகும் தருணத்திலும் காசு கொடுத்து மருத்துவமனையில் சுவாசிக்கும்போதும்தான் அதன் அருமையும் இன்றியமையாத் தன்மையும் புரிகின்றது. 



மக்களே, நாம் பார்க்கும் கண்ணோட்டத்தை மாற்றி கொண்டால், நாம் பார்க்கும் பொருட்களும் மாறுபட்டுத் தெரியும். நன்றியுணர்ச்சி என்பது ஒரு அழுத்தமான, சக்தி வாய்ந்த நம்முள் ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் உணர்வாகும். சில நேரங்களில் நாம் அனுபவிக்கும் இயற்கையின் பரிசுகளுக்கு இன்னும் அதிகமான விழிப்புணர்ச்சியையும் அதிக நன்றியுணர்ச்சியையும் நாம் வெளிக் கொணர வேண்டுமோ என்று கூட எண்ண வைக்கின்றது அம்முதியவரின் உரையாடல். 



இயற்கையிடம் நாம் காட்டும் இந்த நன்றியுணர்ச்சி நமது நோய் எதிர்ப்பு அமைப்பை வலுவாக்குகின்றது. அதே சமயம், மன அழுத்தம் என்பது நம்மை தொய்வடையச் செய்யும் இயல்பு கொண்டது. 



எப்போதெல்லாம் நான் நன்றியுணர்ச்சியுடன் வாழ்கின்றேனோ அப்போதெல்லம் என்னுள்ளே எந்த பய உணர்ச்சியும் எழுவதில்லை என்பது என் வாழ்க்கையில் நான் இன்றுவரை அனுபவித்த ஒரு அழிக்க முடியாத உணர்ச்சியாகும். இவை இரண்டும் கை கோர்த்துச் செல்ல வழியில்லை. 



எனவே, விழிப்புணர்வுடன் இருங்கள். “நன்றி” என்பது நாம் நாள் முழுவதும், மாதம் முழுவதும், வருடம் முழுவதும், ஏன், வாழ்க்கை முழுவதும் ஜபிக்க வேண்டிய ஓர் ஜபமாகும். அந்த “நன்றி” என்ற வார்த்தை நம் குடும்பத்தினரிடமாக இருக்கலாம், நம் நண்பர்களிடமாக இருக்கலாம், நம் உயர் அதிகாரிகளிடமாக இருக்கலாம், இல்லை நமக்கு வாரி வாரி வழங்கும் இயற்கையிடமாகவும் இருக்கலாம். ஏனெனில், சகோதரர்களே, நாம் எவ்வளவுக்கெவ்வளவு அதிகம் “நன்றி” என்ற சொல்லைப் பிரயோகப் படுத்துகின்றோமோ, அவ்வளவுக்கவ்வளவு நமக்கு அதிகமாக நல்லவை நடக்கும் அல்லது எதிர் கொள்ளும். 





நண்பர்களே, மீண்டும் வலியுருத்துகின்றேன். அந்த பத்தாவது ஆப்பிள் உணர்வானது நமக்கு கடவுளும் இயற்கையும் அள்ளி அள்ளி அளித்திருக்கும் அளவு கொள்ளா வாழ்க்கை வளங்களையும் பரிசுகளையும், நன்றியற்ற தன்மையை நம் மேல் திணித்து, நம்மை நன்றியற்றவர்களாக்கி விட வழி செய்ய வேண்டாம். நாம் வாழ்க்கையில் இன்று வரை உயிருடன் இருப்பது இறைவன் மற்றும் இயற்கை கொடுத்த வரம் என்பதை அனுதினமும் எண்ணி நன்றியுடன் இருப்போம். 



இந்த உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் உயிர் கொல்லி நோயான கோவிட்-19னின் கோரத் தாண்டவத்தில் சிக்கி சிதறிக் கொண்டிருக்கும் நாம் தினம் தினம் உயிர் வாழ்ந்து கொண்டிருப்பதை எண்ணி மகிழ்வோமாக. 



இன்று நன்றியுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்வோம். அப்படி வாழ்ந்தால், “நாளை நமதே; இந்த நாளும் நமதே”.


================================================   
   

45 கருத்துகள்:

  1. அனைவருக்கும் இனிய நாளுக்கான காலை வணக்கங்கள்.

    அரபு நாடுகளிலிருந்து உதவி செய்த நண்பர்கள் நீடு வாழவேண்டும்.
    இங்கே சரியான உபகரணங்கள் இல்லை என்ற புகார் முன்பு இருந்தது. நிலைமை மாறி இருக்கிறது.

    கோவிட் பற்றிய விவரங்கள் மன உற்சாகத்தை அளிக்கின்றன.
    மிக மிக நன்றி எங்கள் ப்ளாகிற்கு.
    ரமா ஸ்ரீயின் அருமையான கதையும் அது சொல்லும் செய்தியும்
    மிக மகத்தானது.

    இருக்கும் வரை எடுத்துக் கொண்டு இல்லாத போது
    புலம்புவது உலக வழக்கம் தானே. மாறும் இனிமேல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி, நன்றி, நன்றி!

      நீக்கு
    2. அனைவருக்கும் காலை வணக்கங்கள். கௌதமன் சார், என்னால் சமையல் வேலைகள் மற்றும் வீட்டுப் பெரியோருக்கு உணவு அளித்து விட்டு இப்போதுதான் இங்கு வர முடிகிறது. எனக்கு முன் வந்து என் வேலையை நீங்கள் செய்து கொண்டிருக்கின்றீர்கள். மிக்க நன்றி. மே 13, 2020 தினமலர் செய்தியை படிக்கும்போதே பெருமையாய் இருக்கின்றது.
      வல்லி மாமி, மிக்க நன்றி.

      நீக்கு
  2. நான் இயல்பாகவே நன்றியுணர்வு அதிகமாக உள்ளவன். எல்லாவற்றுக்கும் எதற்கும் நன்றி சொல்வேன்.

    இதைப்படித்த பிறகு இனி இயற்கையை மறக்கவே கூடாது என்ற உணர்வு வருகிறது.

    வாழ்க வையகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இதைப்படித்த பிறகு இனி இயற்கையை மறக்கவே கூடாது என்ற உணர்வு வருகிறது//. இந்த உணர்வு உலகில் யாவருக்கும் வந்தால் நான் எழுதிய பயனை அடைவேன். நன்றி கில்லர்ஜீ.

      நீக்கு
  3. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. அனைவருக்கும் காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  5. 'நன்றி' என்னும் தெய்வம் புதிதாகத் தோன்றியிருக்கிறது. நாம் எவ்வளவுக்கெவ்வளவு நன்றியை மற்றவர்களுக்குத் தெரிவிக்கிறோமோ அந்த அளவுக்கு அத் தெய்வம் நம்மை ஆசீர்வதிக்கிறது - என்று ச்ரீ அரவிந்த அன்னை கூறியிருப்பது நினைவுக்கு வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செல்லப்பா சார், நானும் ஸ்‌ரீ அரவந்தர் மற்றும் அன்னை வழி நடப்பவள். நீங்கள் என் கட்டுரையை படித்து விட்டு அவரை பற்றி நினைவு கூர்ந்தது மிகவும் மகிழ்ச்சியைத் தருகின்றது.

      நீக்கு
  6. ஆஹா! பாசிட்டிவ் செய்திகள் மற்றும் ரமா ஶ்ரீனிவாசனின் கதையோடு கூடிய கட்டுரை நிம்மதியும் மகிழ்ச்சியும் அளிக்கின்றன. நன்றி.

    பதிலளிநீக்கு
  7. முதியவர் நிகழ்வு பல நாட்களுக்கு முன்பே புலனத்தில் வந்தது...

    // நான் கடவுள் வரமாகத் தந்த காற்றை எழுபத்து மூன்று வருடங்களாக சுவாசித்துக் கொண்டிருக்கின்றேன்... //

    // நான் அவருக்கு ஒரு நாள் கூட இதற்கு நன்றி கூறியதில்லை... //

    இன்றைய தீநுண்மி பலருக்கும் பலவற்றை உணர்த்துகிறது...

    மனிதருக்கு மந்திரச் சொல்லாக மனதில் வைத்துக் கொள்ளக்கூடாதது :- நன்றியும் பாராட்டும்...

    பதிலளிநீக்கு
  8. //இந்த உணர்வுக்கு விளிம்பு பயன்பாட்டைக் குறைக்கும் சட்டத்தின் விளைவு என்று பெயர். //  உங்கள் கட்டுரையில் இதைப்போன்ற கடினமான சொற் பிரயோகங்களை தவிருங்கள் அல்லது அடைப்பு குறிக்குள் அதன் ஆங்கில பிரயோகத்தையும் குறிப்பிட்டால் தொடர்வது சுலபமாக இருக்கும். விளிம்பு பயன்பாட்டை குறைக்கும் சட்டத்தின் விளைவு என்பதை விட Law of diminishing marginal utility என்பது இன்னும் சுலபமாக புரிகிறது. (இதற்கு என்னை எத்தனை பேர்கள் கோபிக்கப் போகிறார்களோ? கடவுளே காப்பாற்று!)
     

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'விளிம்பு பயன்பாட்டை குறைக்கும் சட்டத்தின் '...//

      @ பானுமதி வெங்கடேஸ்வரன்: இதற்கான ஆங்கிலத்தை நீங்கள் அடைப்புக்குறிக்குள் கொடுத்ததால்தான் மூர்ச்சையாகிவிடாமல், மிச்சமிருக்கும் காஃபியை என்னால் உறிஞ்சமுடிந்தது! இல்லாவிட்டால் நானே விளிம்புநிலைக்குப் போயிருந்திருப்பேன்!

      @ ரமாஸ்ரீனிவாசன் : ’Law of Diminishing Marginal Utility’ என்பதில் வரும் 'Law ' என்கிற ஆங்கில வார்த்தையை ‘சட்டம்’ என மொழியாக்கக்கூடாது. இது Law என்றால் பொதுவாக மனதில்கொள்ளும் 'சட்டம்'- அதாவது ’legal matter' அல்ல! இந்த இடத்தில் Law என்பது ‘விதி’ என்றே வரவேண்டும். (நியூட்டனின் 'Laws of Motion' என்பதை ’நியூட்டனின் இயக்க விதிகள்’ என்பதைப்போலவே). ஏனேனில் இது ஒரு ’பொருளியல் விதி’ (Law of Economics) அல்லது கோட்பாடு. ’Law of Diminishing Marginal Utility’-என்பதை, ’குறையும் விளிம்புப் பயன்பாட்டு விதி’ அல்லது ’குறைந்துசெல் விளிம்புப் பயன்பாட்டு விதி’ என மொழியாக்கம் செய்யலாம். இன்னமும் பொருத்தமாக அமையும்.

      தயவு செய்து இதனை, உங்கள் எழுத்தின் ஒரு விமரிசனமாக எடுத்துக் கொள்ளவேண்டாம். கொஞ்சம் சரி செய்யலாம் என்கிற நோக்கத்தில்தான் எழுதுகிறேன். இத்தகைய துறைசார்ந்த தமிழ்ச் சொற்கள் உங்களுக்குப் பழக்கமில்லை என்பது தெரியும். {எனக்கும்தான் அவ்வளவு பழக்கமில்லை! (அவ்வப்போது புதுச் சொற்களை, சொல்லாடல்களைக் கண்டால் குறித்துக்கொள்கிறேன்.) நானும் ஆங்கில மீடியத்தில்தான் ‘பொருளியல்’ பட்டம் பெற்றேன் -Courtesy: Delhi University!}.

      நீங்கள் தமிழில், பொருளார்ந்த நெடிய கட்டுரைகளை எழுதுவதே, தமிழ் மொழி தொடர்பாக, குறைந்த காலத்தில் நிறையக் கற்றுக்கொண்டிருக்கிறீர்கள் என்பதை, உங்களது உழைப்பைக் காட்டுகிறது. பொதுவாக, உங்களின் இன்றைய கட்டுரை சமயத்துக்கேற்ற சிந்தனையைத் தூண்டுவது; நன்றாக இருக்கிறது. பாராட்டுகள்.

      என்னுடைய பின்னூட்டம் நீண்டுவிட்டது - இங்கே தவிர்க்கமுடியவில்லை!

      நீக்கு
    2. சரியாகச் சொன்னீர்கள் ஏகாந்தன் சார். சில சொற்றொடர்கள் தமிழில் படித்து மனதிற்குள் மொழி பெயர்த்து புரிந்து கொள்வதை விட ஆங்கிலத்தில் படித்தால் எளிதாகப் புரிகிறது.

      நீக்கு
    3. அவசியம் உங்களின் கருத்துக்களை மனதில் கொண்டு வரும் எழுத்துக்களில் சேர்த்துக் கொள்கின்றேன்.

      நீக்கு
    4. ரமா நான் சொல்ல நினைத்ததை பானுக்காவும் ஏகாந்தன் அண்ணாவும் சொல்லிட்டாங்க. குறைந்துசெல் விளிம்புப் பயன்பாட்டு விதி -

      ஆ ஆ ஆ ஆ !!ஏகாந்தன் அண்ணா !!!! கீதா, பிஞ்சு போல க........ரு.........த்.......து ஹா ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
    5. ரமா நீங்க தமிழ்ல நல்லா எழுதறீங்க. ரொம்ப ஃபாஸ்டா கத்துக்கறீங்க மொழிபெயர்க்க. சூப்பர்!

      எனக்கு ஆங்கிலமும் சரியா வராது தமிழும் சரியா வராது. ரெண்டாங்கெட்டான் ஹா ஹா ஹா ஹா

      மொழிபெயர்க்கறப்ப கூகுள் மொழிபெயர்ப்பை மட்டுமே நம்பிடாதீங்க...ஹா ஹா ஹா அதுவும் குறிப்பாக டெர்மினாலஜி...

      tamilcube, விக்சனரி இந்த ரெண்டையும் கேட்டீங்கனா உதவும். டமில் க்யூப் ல ஒரு வார்த்தைக்கு நிறைய சொற்கள் கொடுக்கும் அதுல எது நம்ம மொழிபெயர்ப்புக்குப் பொருந்தும்னு பார்த்து சேர்த்துக்க்கலாம். ஆனா டமில்க்யூப்ல டெர்மினாலஜி கிடைப்பது கடினம். ஒரு வார்த்தையைத்தான் ஏற்கும். லா என்றால் லா மட்டுமே அடிக்க வேண்டும். அப்புறம் டிமினிஷிங்க் அதுக்குத் தனியா அடிச்சு பொருள் எடுக்கணும் இப்படி...இது உதாரணத்துக்குச் சொன்னேன்.

      இது உங்களுக்கு உதவியா இருக்குமோ என்ற எண்ணத்தில்.

      கீதா

      நீக்கு
    6. .. கீதா, பிஞ்சு போல க........ரு.........த்.......து ஹா ஹா//

      கீதா வந்தாச்சு. பிஞ்சைக் காணோமே.. வந்து கொட்டவில்லையே இன்னும்!

      நீக்கு
  9. காலை வணக்கம் அனைவருக்கும்.

    நல்ல செய்திகள் மனமகிழ்வூட்டுகின்றன.

    கோவிட் புள்ளிவிவரம் - வேடிக்கை. அவனவன் அவனது மற்றும் நெருங்கியவர்களைப் பற்றி பயம் கொண்டிருக்கும்போது இந்தப் புள்ளிவிவரத்தில் என்ன ஆறுதல் கிட்டும்?

    பதிலளிநீக்கு
  10. இறப்பில் புள்ளிவிவரம் நம் விநோத ஆட்டிடியூட்டைக் குறிக்கிறது.

    நம் இந்த மனநிலையால்தான், ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்கள், இதில் 18 பேர் ரயில்வே டிராக்கில் செத்தாங்களாம், பஸ் மோதி 27 பேர் சாவாம்... ஒண்ணும் பெரிய விஷயமில்லையே. வேறு என்ன செய்தி இருக்கு என்று பார்க்கத் தோணுகிறதோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புள்ளி விவரங்கள் நம்பிக்கை ஏற்பட ஒரு பற்றுக்கோல். ஒரு அலுவலகத்தின் தலைமை அலுவலக அதிகாரி புள்ளிவிவரங்களில் அதிக ஈடுபாடு கொண்டவராய். புதிதாக பொறுப்பு ஏற்றுக்கொண்ட கிளை அலுவலக மேலாளர் அவருக்கு அனுப்பிய கடிதத்தில்,
      ஐயா,
      இந்த அலுவகத்தில் இருந்த மொத்த ஆட்களில் அறுபது சதவிகித்தினர் ஆண்கள். நாற்பது சதவிகிதத்தினர் பெண்கள். திருமணம் ஆனவர்கள் இருபது சதவிகிதம். சென்ற மாதம் இங்கே வேலை பார்த்த 40 சதவிகித ஆண்கள், இங்கு வேலை பார்க்கின்ற நூறு சதவிகித பெண்களைத் திருமணம் செய்து கொண்டார்கள். திருமணம் ஆன பெண்கள் எல்லோரும் இன்று வேலையிலிருந்து ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்திருக்கிறார்கள். ராஜினாமாவை ஏற்றுக் கொள்வதா?

      நீக்கு
    2. ..இங்கே வேலை பார்த்த 40 சதவிகித ஆண்கள், இங்கு வேலை பார்க்கின்ற நூறு சதவிகித பெண்களைத் திருமணம் செய்து கொண்டார்கள்..//

      அடேங்கப்பா! புள்ளி ’விவரமானவராக’ இருப்பார் போலிருக்கிறதே!

      நீக்கு
  11. அனைவருக்கும் காலை வணக்கம்.

    முதல் செய்தி சிறப்பு. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    புள்ளி விவரம் - என்ன சொல்ல? இழப்பு அதிகமோ குறைவோ, இழப்பை தடுக்க விரைவான தீர்வு தேவை. அதற்கான ஆராய்ச்சிகள் இப்போதைய அத்தியாவசிய தேவையும் கூட.

    பத்தாவது ஆப்பிள் - இயற்கை அன்னையைப் போற்றுவோம் - மிகச் சிறப்பான கட்டுரை. எழுதிய திருமதி ரமா ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
  12. பாஸிடிவ் செய்திகளுக்கு நன்றி.
    ரமா ஸ்ரீனிவாசன் கட்டுரை அருமை.

    நாம் எப்போதும் எல்லோருக்கும், இயற்கைக்கும், இறைவனுக்கும் நன்றி சொல்லிக் கொண்டே இருப்போம்.

    பதிலளிநீக்கு
  13. நன்றி என்ற வார்த்தை பிரயோகம் சொல்வோரையும் மகிழ்வுறச் செய்யும் .

    இயற்கை நமக்கு தந்த கொடைகள் பல நாம் அவற்றை பேணினால் இயற்கை நம்மைக்காக்கும்.
    சிறப்பான பகிர்வு.

    பதிலளிநீக்கு
  14. கோமதி மற்றும் மாதேவி, நன்றி என்பது ஒரு 'two way tool'. It blesseth him that says and him that takes. இதை நாம் புரிந்துக் கொண்டால் போதும்.

    பதிலளிநீக்கு
  15. நம்பிக்கை முக்கியம் அது பிறர் சொல்லி வருவதல்ல எல்லாம் ஒக்கே பிறருக்கு சொல்லும்போது தன்னைக் கிள்ளி வலிதெரிய வெண்டுமென்பார்கள் நம்பிக்கை ஊட்டும் செய்திகள நன்று வெறும் புள்ளி விவரங்கள் நம்பிக்கை ஊட்டுமா

    பதிலளிநீக்கு
  16. மனதில் மகிழ்ச்சியை ஊட்டும் முதல் செய்திக்கு நன்றி. புள்ளி விபரங்கள் ஏற்கெனவே படிச்சேன். எங்கேனு தெரியலை! வாட்சப்பில் வந்ததோ? ரமா ஸ்ரீநிவாசனின் கட்டுரைப் பெரியவர் முகநூலில் கொஞ்ச நாட்கள் வலம் வந்தார். ஆனாலும் மனிதனுக்கு நன்றி உணர்வு குறைவு தான். அது மனிதராகட்டும், கடவுளாகட்டும். நன்றி சொல்லுவதையே தான் செய்யும் உயர்ந்த செயலாக நினைத்துக் கொள்வான். இயற்கைக்கு மட்டுமின்றி சோம்பலின்றிச் செயல்படும் சூரிய, சந்திரர்களுக்கும் நம் நன்றியைக் காட்டுவோம். இந்த கிரஹங்கள் தான் ஒண்ணுக்கொண்ணு வக்கரித்துக் கொண்டிருக்காம். அது எல்லாம் கூடிய விரைவில் சரியாகவும் பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தப் புள்ளி விவரங்களை வேறு எங்கும் படித்திருக்கமுடியாது. ஏன் என்றால், இதை தயார் செய்தது நானே. இங்கே மட்டும்தான் வெளியிட்டுள்ளேன். வேறு எங்கும் இதை நான் வெளியிடவில்லை.

      நீக்கு
    2. ஓ! அப்படியா? ஆனால் கிட்டத்தட்ட இதே போன்ற புள்ளி விபரங்களை தினம் தினம் பாலிமர் தொலைக்காட்சியில் பார்ப்பதால் எனக்குப் புதுசாகத் தோன்றவில்லைபோல! அங்கே உலக நாடுகளின் வரிசைக்கிரமம், இந்தியாவில் வரிசைக்கிரமம் எனக் கொடுக்கிறார்கள். உங்கள் பதிலைப் படித்ததும் எங்கே பார்த்தோம்னு யோசிச்சால், இப்போத் தான் தொலைக்காட்சியில் தினம் தினம் வருதே என்றார் நம்மவர்!

      நீக்கு
  17. தலைப்பும் கட்டுரையும் அது சொல்ல வந்த செய்தியும் அருமையாக மனதில் பதிவாகின, சகோதரி ரமாஸ்ரீ. மிக்க நன்றி.

    இடையில் வந்த அந்த முதியவர் கதை அல்லது அந்த நிகழ்வின் போதனை அட்சர லட்சம் பெறும். கட்டுரையின் சரியான இடத்தில் அதை மிகச் சரியாகக் கையாண்டுள்ளீர்கள்.

    எல்லோருக்கும் கிடைக்கும் அத்தனையையும் இலவசமாகக் கிடைப்பதாக எண்ணுகிற மனப்பாங்கு தான் இது.
    எனக்கு மட்டுமே கிடைப்பதற்கு மட்டுமே நான் காசு கொடுப்பேன் என்ற தாத்பரியம். இன்றைய நாகரீக உலகின் வாழ்க்கைத் தத்துவத்தின் மனோபாவம் இது. நிலம், நீர், வானம் என்று அத்தனை இயற்கை கொடைகளிலும் கோலோச்சும் கொடூரம்!

    விளிம்பு பயன்பாட்டைக் குறைக்கும் சட்டத்தின் விளைவு -- இந்த மாதிரி கடபுடா தமிழ் சத்தியமாகப் புரியவில்லை.
    இந்த மாதிரி தான் மாணவர்களின் பாடப்புத்தகங்களிலும் இன்றைய தமிழ் சின்னாப்பின்னமாகிறது. ஆங்கிலத்திலிருந்து
    நேரடியாக தமிழ் என்றில்லாமல் ஆங்கில வாசகம் கொடுக்கும் பொருளை நம் பழகு தமிழில் கொடுத்தால் எளியவர்களுக்கும், மிகச் சுலபமாகப் புரியும். இந்த மாதிரியான கட்டுரைகளின் பயன்பாடு எல்லோருக்கும் போய்ச் சேர வேண்டும் என்ற எண்ணத்திலேயே இதைச் சொல்ல நேரிட்டது. வரப்போகிற கட்டுரைகளில் இப்படி வேண்டாம். அருள் கூர்ந்து தவறாக நினைக்க வேண்டாம்.

    உதாரணத்திற்கு ஒன்று:

    ஊட்டி மலைப்பாதைகளில் எச்சரிக்கை பலகைகளில் குருட்டு வளைவு என்று எழுதப்பட்டிருக்கும். BLIND CURVE -- என்பதனை அப்படி தமிழ்படுத்தியிருக்கிறார்களாம். இந்த மாதிரியான தமிழாக்கங்கள் எளியோருக்கானவை அல்ல என்பதனை நாம் நன்றாகவே அறிவோம். எளியவர்களுக்கு என்று வரும் பொழுது சுலபமாக புரியும் தமிழாகவே இருக்கட்டும் என்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.


    பதிலளிநீக்கு
  18. மிகவும் நல்ல பாசிட்டிவ் செய்திகள் புள்ளிவிவரங்கள் வடிவில்.

    கட்டுரை மிக மிக அருமை. உண்மையை உரைக்கிறது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  19. முதல் செய்தி மிக மிக பாராட்டிற்குரியது என்றால்

    ஆஹா ஆஹா தினமலர் புள்ளிவிவரங்கள் ஹப்பா மனசு கொஞ்சம் இதமாகிறது இதைப் பார்த்து. வெரி பாசிட்டிவ்!!

    கடைசியில் சொல்லியிருப்பது மிக மிக அவசியம். இந்தப் புள்ளிவிவரப்படி ஜூன் 25 போல எல்லாம் கட்டுப்பட்டுவிடும் என்றால் நாமும் மருத்துவர்கள் சொல்வதைக் கடைப்பிடிக்க வேண்டும் அதன் பின்னும் கூட கடைப்பிடித்தால் மிக மிக நல்லது.

    கீதா

    பதிலளிநீக்கு
  20. ரமாவின் கட்டுரை செம. அந்த முதியவர் செய்தி நானும் வாசித்திருக்கிறேன். நல்ல செய்தி

    ரமா நீங்கள் சொல்லியிருக்கும் அந்த நன்றி சொல்லும் கருத்துகள் எங்கள் வீட்டில் நாங்கள் அடிக்கடி சொல்லிக் கொள்வது. தினமும் இயற்கைக்கு நன்றி சொல்ல வேண்டும் அப்படி நினைக்கும் போது நம்மால் இயன்றவரை நாம் இயற்கைக்க்குத் தீங்கும் விளைவிக்காமல் கொஞ்சமேனும் பொறுப்புடம் இருக்கவும் கற்போம் இல்லையா. அருமையான கட்டுரை. வாழ்த்துகள் பாராட்டுகள்

    கீதா

    பதிலளிநீக்கு
  21. வணக்கம் சகோதரரே

    இன்றைய பாஸிடிவ் செய்திகள் அருமை.
    முதல் செய்தி மனிதாபிமானத்தை காட்டுகிறது. பாஸிடிவ் புள்ளி விபரங்கள் குறித்து தெரிந்து கொண்டேன். அடுத்த மாத இறுதியில் தொற்றின் பிடி இளக வாய்ப்புள்ளது என்பது மனதுக்கு மிகவும் ஆறுதலாக உள்ளது.

    சகோதரி ரமா ஸ்ரீநினிவாசன் அவர்களின் கட்டுரை மிகவும் அழகாக உள்ளது. இயற்கைக்கு நாம் எப்போதும் நன்றி உடையவர்களாக இருந்தால். இயற்கையும் நம்மை மதித்து நமக்கு உபகாரமாகவே செயல்படும். அழகான உதாரணங்கள் கூறி சிறந்த வாக்கியங்களுடன் கட்டுரையை சிறப்புற தொகுத்து தந்த சகோதரிக்கு மனமார்ந்த பாராட்டுக்களுடன் நன்றிகளும்.. பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  22. நம் கண்ணுக்குப் புலப்படாமல் நம்மை சுற்றி இருப்பது காற்று. இந்தக் காற்று இல்லை என்றால் நம் சுவாசம் இல்லை. இதை நாம் அறிந்தாலும் நாம் காற்றுக்கு நன்றி சொல்வதில்லை. இந்தக் கருத்தை மிகவும் அழகாகக் கூறியிருக்கிற ரமா ஸ்ரீனிவாசனுக்கு நன்றி . இதற்கு அவர் கொடுத்துள்ள கதை விளக்கங்கள் மிகவும் அருமை
    .மகாலட்சுமி ரவீந்திரன்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!