திங்கள், 25 மே, 2020

'திங்க'க்கிழமை : திரட்டிப் பால் - ரமா ஸ்ரீனிவாசன் ரெசிப்பி .



திரட்டிப் பால்
ரமா ஸ்ரீனிவாசன்



வேண்டிய பொருட்கள் :

பால் – ஒரு லிட்டர்

சர்க்கரை – 1 கப் (சுமாராக 100 கிராம் அல்லது உங்கள் விருப்பத்திற்கேற்ற    
           படி)

திரட்டிப் பால் காய்ச்சுவதற்கு வேண்டிய காப்பர் பாட்டம் பாத்திரம் அல்லது வெங்கல உருளி.

அந்நாட்களிலிருந்து இந்நாட்கள் வரை நம் இல்லங்களில் எந்த சுப காரியத்திற்கும் திரட்டிப் பால் ஒரு கட்டாய இனிப்பாகும்.  பல வீடுகளில் அந்த காலத்தில் பசு மாடுகள் வளர்ந்ததால், அது கன்னுக் குட்டி போடும் போது ஒரு நாளைக்கு எட்டு அல்லது 4 லிட்டர் பால் சுரக்கும்.  இதற்கு சீம்பால் என்று பெயர்.  கன்னுக் குட்டி மிஞ்சினால் ஒரு டம்ளர் பால் அருந்தும்.    பசுவின் பாலைக் கறக்கவில்லை என்றால் பால் கட்டிக் கொண்டு மாட்டிற்கு ஜுரம் வரும். எனவே, முதலாம், இரண்டாம் நாள் பாலை வீடுகளில் அருந்தாமல் வாய்க்கால்களில் விடப் படும். மூன்றாம் நாள் பாலை எடுத்து வெல்லம் அல்லது கருப்பட்டி கலந்து திரட்டிப் பால் செய்து குழந்தைகளுக்கு விநியோகம் செய்வார்கள்.  நல்ல கொழுப்பு சத்துள்ள பாலில் செய்தது என்பதனால் பெரியவர்கள் உண்ண மாட்டார்கள்.  சிவப்பு நிறமாய் இருக்கும்.  

திரட்டிப் பால் வெள்ளையாக இருக்க பாலை பாதி பாதியாக பகிர்ந்து கொண்டு முதலில் ஒரு பாதியை காய்ச்சி சிறிது சுண்டிய பின் மறு பாதியையும் சேர்த்து காய்ச்ச காய்ச்ச வெள்ளை வர்ணம் மாறாமல் இருக்கும்.




பால் காய்ச்ச காய்ச்ச ஒரு நல்ல வாசம் வரும். பால் நன்றாக வத்த வேண்டும்.  நீர் சத்து கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும். சுமார் 45 நிமிடங்கள் கை விடாமல் கிளறிக் கொண்டே இருந்தால், சீராக தோசை மாவு பதத்திற்கு மாறும்.  



பின்னர் சக்கரை சேர்க்க வேண்டும்.  சர்க்கரை சேர்த்தவுடன் பால் சிறிது நீர்க்கும்.  கிளறிக் கொண்டே இருந்தால் 10 நிமிடங்களில் கெட்டிப் படும்.  சிவந்து போகாமல் பேனின் ஓரங்களில் ஒட்டாமல் வரும்போது கீழே இறக்கி வைத்து சிறிது ஆற விட்டால் இன்னும் சிறிது கெட்டிப் பட்டு முழு திரட்டிப் பாலாக மாறி விடும். 




==============================================

68 கருத்துகள்:

  1. குறள் 412:
    செவுக்குண வில்லாத போழ்து சிறிது
    வயிற்றுக்கும் ஈயப் படும்.


    மு.வரதராசன் விளக்கம்:
    செவிக்கு கேள்வியாகிய உணவு இல்லாத போது (அதற்க்கு துணையாக உடலை ஒப்புமாறு) வயிற்றுக்கும் சிறிது உணவு தரப்படும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்போல்லாம் எல்லாருக்கும் படிக்க புத்தகமோ வாய்ப்போ இல்லை. மற்றவர்கள் பேசுவதைக் கேட்பது ஒன்றே வாய்ப்பு. அதனால்தான் செவிக்கு உணவில்லாத போது மட்டும், வயிற்றைக் கவனி என்று சொல்லியிருக்கிறார்.

      நமக்கு, வாய்க்குண வில்லாத போது சிறிது செவிக்கும் ஈயப் படும் கதையாக இருக்கு.

      நீக்கு
  2. வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்..

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
  3. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

      திரட்டிப்பால் நன்றாக வந்துள்ளது.
      கன்றுக்குட்டிகள் முட்டி முட்டிப் பால் குடிக்கும் அழகைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

      ரமா ஸ்ரீக்கு வாழ்த்துகள். தம்பி பேரனுக்கு இன்று முதல் பிறந்த நாள் அருமையாக
      ரமா செய்த திரட்டிப்பாலை இறைவனுக்கு அளிக்கிறேன்.

      நீக்கு
    2. நான் செய்வது ஒருபடி பாலுக்கு முக்கால் ஆழாக்கு சர்க்கரையும்,
      கடைசியில் இரண்டு தேக்கரண்டி நெய்யும்.
      கால்கடுக்க நின்று கிளறி,
      கால்வற்றலாகப் பால் வற்றியதும்
      சர்க்கரை சேர்ப்பேன்.
      பாலின் மணம் எங்கும் நிரவட்டும்.

      நீக்கு
    3. //கன்றுக்குட்டிகள் முட்டி முட்டிப் பால் குடிக்கும் அழகைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.//

      வல்லிம்மா... அந்த நாளும் வந்திடாதோ என்று பாடாத குறைதான். யார்தான் கன்றுக்குட்டிக்கு முட்ட முட்ட பால் ஈயறாங்க?

      நீக்கு
    4. அன்பு முரளிமா,
      மாமியார் வீட்டில் ஏகப்பட்ட மாடுகள்.
      மாமனார், கன்னுக்குட்டி குடித்தது போகத்தான் வீட்டுக்கு என்று சொல்லி விடுவார்.
      ஒரு பசுவுக்கு ஒரு கண் தெரியாது.
      அது கன்று ஈந்ததும் கூடவே நின்று மாமனார்
      பார்த்துக் கொண்டார்.
      ஆச்சாரியர் அப்போது இருந்தவர் நம் சிங்கத்தை
      மாட்டுக்காரன் பையன் தானே என்று சிரிப்பார்.
      மாமியாருக்கு ஒரே பெருமையாக இருக்கும்.
      யாதவ சிம்ஹம் என்று சொல்லிக் கொள்வார்.:)

      நீக்கு
  4. சீம்பாலில் செய்யப்படும் திரட்டுப் பாலின் சுவையே சுவை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பால் தமிழ்ப் பால் எனும் நினைப்பால் இதழ் துடிப்பால் அதன் பிடிப்பால் சுவை அறிந்தேன்.

      நீக்கு
    2. அம்பத்தூரில் இருந்தவரையிலும் எங்கள் பால்காரர்கள் மாடு கன்று போட்டால் 3 ஆம் நாள் சீம்பாலில் கருப்பட்டி போட்டுக் காய்ச்சிக் கொண்டு வந்து குழந்தைகளுக்கு எனக் கொடுத்துவிடுவார்கள் ஒரு தூக்கு நிறைய.

      நீக்கு
    3. 7ம் வகுப்பு படிக்கும்போது, அந்த மலை கிராமத்தில், சீம்பாலை, அப்படியே இட்லி போல அவித்து அந்த இட்லியைக் கொண்டுவந்து கொடுப்பார்கள் (அப்போ ஒரு மிகப் பெரிய சாக்கு நிறைய நெல்லிக்காய் 5 ரூபாய்க்குக் கொடுப்பார்கள்).

      சமீபத்தில் பெங்களூரில் ஒரு இடத்தில் சீம்பாலில் சீனி கலந்து கட்டியாக 50 ரூபாய்க்கு ஒரு பாசந்தி கிண்ணம் அளவுன்னு விற்பதைப் பார்த்தேன். சாப்பிட்டுப் பார்த்தபோது ஓகே என்று தோன்றியது.

      நீக்கு
  5. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். கொரோனா இல்லாத நாடாக மாறவும் எதிர் வரும் பேருந்து, ஆட்டோ, ரயில், விமானப் பயணங்களில் பாதுகாப்புடன் அனைவரும் பயணிக்கவும் சிறப்புப் பிரார்த்தனைகள். நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே போகும் கொரோனா அச்சுறுத்தல் மனதைக் கலங்க அடிக்கிறது, மும்பை முதல் இடத்திலேயே நிற்க, தமிழ்நாடு இப்போ இரண்டாம் இடத்துக்குப் போய்விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேவையுள்ளவர்கள் மட்டும் பயணிப்பதால், எல்லா பாதுகாப்பு முறைகளையும் நிச்சயம் கடைபிடிப்பார்கள்.

      நீக்கு
  6. திரட்டுப் பால் பிடிக்காதவங்களே இல்லை எனலாம். நான் கொஞ்சம் சர்க்கரை கூடப் போடுவேன். அடிகனமான உருளியில் வைத்துவிட்டு அடியில் ஓர் சின்னத் தட்டு அல்லது ஒரு ரூபாய்க் காசைப் போட்டுவிட்டு அடுப்பையும் தணித்து வைத்துவிட்டால் மற்ற வேலைகளைச் செய்து கொண்டே திரட்டுப் பாலும் கிளறலாம். அடிப்பிடிக்காது. ஏலக்காய் கட்டாயம் சேர்ப்பேன். இதையே இன்னும் கொஞ்சம் சர்க்கரை சேர்த்துக் கடைசியில் கொஞ்சம் நெய்யும் விட்டு இன்னும் சிறிது நேரம் கிளறினால் பால் கேக் தயார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா! இனிய, சுவையான செய்முறை.

      நீக்கு
    2. எங்க வீட்டில் ஸ்ராத்த தினத்தில் கூடத் திரட்டுப்பால் உண்டு. ஒரு தரம் சாப்பிட வந்தவர் நெய் கசிந்த திரட்டுப்பாலை அப்படியே தொன்னையில் அமுக்குவதைப் பார்த்ததும் அடுத்த ஸ்ராத்தத்தில் இருந்து பண்ணுவது இல்லை! :( அதனாலேயே பாலை அடுப்பில் வைத்துவிட்டுக் கிட்டே எல்லாம் இருக்க முடியாது. போய்ட்டு வந்து கிளறிக்கொடுப்போம். அதற்கெனத் தனி உருளி இருக்கு.

      நீக்கு
  7. இன்னொரு எளிதான முறை. ஒரு முழு டப்பா மில்க்மெயிடை மைக்ரோவேவ் பாத்திரத்தில் மாற்றிக் கொண்டு ஒரு டேபிள் ஸ்பூன் தயிரை அதில் சேர்த்துக் கலக்கிவிட்டு மைக்ரோவேவில் சில நிமிடங்கள் வைத்து எடுத்தால் உடனடித் திரட்டுப் பால் தயார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் நினைத்தேன் கீதா அக்கா முந்திக் கொண்டு விட்டார்.

      நீக்கு
    2. இவ்வளவு எளிதா? வாவ்

      நீக்கு
    3. எனக்கு இந்த மைரோவேவ் அவன் திரட்டுப்பால் பிடிப்பதில்லை. வீட்டில் கிளறிச் செய்யவும் நான் அனுமதி கொடுப்பதில்லை (ரொம்ப நேரம் கஷ்டப்படணுமே என்ற நினைப்பில். எப்போதாவது சிறிய அளவில் விசேஷ நாட்களில் செய்வாளாக இருக்கும்).

      ஆவின்ல திரட்டிப்பால் இருக்கு. இல்லைனா, இங்க பெங்களூர்ல நந்தினி பிராண்டில் 'குந்தா' எனப்படும் சுவை மிகுந்த திரட்டுப்பால் இருக்கு.

      எதுக்கு உருளியைத் தேடுவானேன், காசைப் போடுவானேன், கை வலிக்கக் கிளறுவானேன், அப்புறம் கால் வலிக்கிறது, கை வலிக்கிறது என்று கஷ்டப்படுவானேன்.

      என்ன நான் சொல்றது?

      நீக்கு
    4. மில்க் மெயிடில் செய்யும் திரட்டுப்பால் அருமையாக இருக்கும். கிருஷ்ணன் பிறப்புக்கு எங்க வீட்டில் திரட்டுப்பால் உண்டு. நல்ல பாலாக வாங்கிக் காய்ச்சினால் அதுவே நெய் கசியக் கசிய வரும்.

      நீக்கு
  8. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  9. திரட்டுப்பாலின் கடைசி படம் அருமை.

    பதிலளிநீக்கு
  10. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். இனிய காலை என்று கூறுவதற்கு காரணம் ரமா கொடுத்திருக்கும் திரட்டுப்பால்.

    பதிலளிநீக்கு
  11. பால் நன்றாக கொதிக்கத் தொடங்கியதும் கொஞ்சம் தயிரை அதில் சேர்த்தால் பால் சீக்கிரம் திரிந்து வெள்ளையான திரட்டுப் பால் கிடைக்கும்.
    முன்பெல்லாம் திரட்டுப்பால் கிளறுவதற்காகவே வெங்கல உருளி வீடுகளில் இருக்கும். குமுட்டி அடுப்பில்தான் திரட்டுப் பால் காய்ச்சுவார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தகவல்களுக்கு நன்றி.

      நீக்கு
    2. பால் காய்ச்சியபின் எலுமிச்சம்பழம் பிழிந்து திரித்து வடிகட்டி கூட தி. பால் செய்வார்கள்.

      நீக்கு
    3. எங்க வீட்டில் இன்னமும் வெண்கல உருளி தான் திரட்டுப்பாலுக்கு மட்டுமில்லாமல் அல்வா, மைசூர்ப்பாகு, வெல்லப்பாகு வைக்க எல்லாவற்றுக்கும். எலுமிச்சம்பழம் பிழிந்தி திரிந்த பாலில் நான் பனீர் மட்டும் செய்து வைத்துக் கொள்வேன். அதைத் துருவிச் சர்க்கரை சேர்த்துத் திரட்டுப் பால் செய்கிறார்கள். ஆனால் எனக்கென்னமோ பிடிப்பதில்லை.

      நீக்கு
    4. வெல்லம் போட்டு செய்யும் திரட்டிப்பால் சேர்ந்தாற்போல் இருக்கும். நெய் சேர்க்க வேண்டிய அவசியம் இருக்காது. சர்க்கரை சேர்த்து செய்யும் பொழுது  உதிரியாக இருக்கும் அதனால் நெய் சேர்க்க வேண்டி வரும்.  மகளுக்கு வெல்லம் சேர்த்து செய்யும் திரட்டிப்பால்தான் பிடிக்கும். 

      நீக்கு
    5. அப்படியா? எனக்கு இது புதிய செய்தி. ஏனெனில் சர்க்கரை போட்டாலும் வெல்லம் போட்டாலும் பாலைப் பொறுத்து நெய் கசியக் கசிய வரும் என்பதே என் கருத்தும், அனுபவமும். ஆவின் சிவப்பு நிறம் கொண்ட பால் கொழுப்பு நிறைந்தது. அதில் காய்ச்சினால் கையில் உருட்டும் பதத்துக்கு நெய்யுடன் வருகிறது. பச்சையில் பரவாயில்லை. கடைசியில் கொஞ்சம் நெய் சேர்த்தால் போதும். அதுவே கறந்த பால் எனில் சர்க்கரை சேர்க்கும் முன்னரே நெய் கசிய ஆரம்பித்துவிடும்.

      நீக்கு
    6. @Sriram: எலுமிச்சம்பழம் பிழிந்தால் ரொம்பவும் திரி திரியாகி விடும்.

      நீக்கு
  12. திரட்டு பாலில் நெய் சேர்க்கமாட்டார்களோ? நான் செய்யும் போது நெய் நிறைய சேர்பதுண்டு,,, ரமா ஸ்ரீனிவாசன் செய்த திரட்டு பால் பதிவும் படமும் அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல கறந்த மாட்டுப்பால் எனில் காய்ச்சும்போது நெய் கசியக் கசிய வரும். இப்போல்லாம் ஆவின் பால் பச்சைப் பாக்கெட்டில் காய்ச்சினால் நெய் சேர்க்கவேண்டி இருக்கிறது. நெய் கசிந்தால் திரட்டுப்பால் ஒட்டாமல் வரும். வெல்லமும் போடலாம்.

      நீக்கு
  13. எங்கள் ப்ளாக் குடும்பத்தினருக்கு ஈத் பெருநாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் சகோதரரே

    சகோதரி ரமா ஸ்ரீநினிவாசன் அவர்களின் தயாரிப்பான திரட்டுப்பால் அருமை. படங்களும். செய்முறையும் மிக அழகாக உள்ளது. இன்றைய தினம் இனிப்பான உணவை தந்தமைக்கு பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  15. தளம் சனிக்கிழமை பார்க்கும் போது சரியான அளவில் ரைட் மார்ஜின் மிக சரியாக இருந்தது. இப்ப மிகப் பெரியதாகிவிட்டது Font டும் மிகப் பெரிய அளவில் இருக்கிறது. தகவலுக்காக

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துரைக்கு நன்றி. ஆய்ந்து, முடிவெடுக்கிறோம்.

      நீக்கு
    2. இப்போ இருக்கும் அமைப்பு நன்றாகவே இருக்கிறது. படிக்கவும், பார்க்கவும் எளிதாக இருக்கிறது. முக்கியமான எல்லாவற்றையும் சரி செய்துவிட்டார்கள்.

      நீலம், பச்சைக் கலர் (எங்கள் பிளாக் - பச்சைக் கலரில் உள்ளது. தளத்தின் பின்னணி நிறம் சிறிது ஆழ்ந்த வான நீலம்) பழக நாளாகும்.

      நீக்கு
  16. திரட்டிப்பால் நன்றாக செய்துள்ளார்கள்...

    பதிலளிநீக்கு
  17. திரட்டுப்பால் செய்முறை நன்றாக இருக்கு. பாராட்டுகள்.

    எங்கள் ஆசார்யரின் திருநட்சத்திரம் (பிறந்த நாள்) இன்று. அதனால் அகத்தில் இப்போ கேசரி கிளறி முடித்தாள். தளத்திலோ இன்னொரு இனிப்பு.

    என் ஒபினியன், நெய் சிறிது அதிகமாகச் சேர்த்தால் திரட்டுப்பால் இன்னும் அழகாக வந்திருக்கும் என்பது. கடைசிப் படம் பார்க்கும்போது இது தோன்றியது (ஒரு வேளை படம் எடுத்த ஆங்கிள், லைட் இவைகளும் காரணமாக இருக்கலாம்).

    பதிலளிநீக்கு
  18. திரட்டிப்பால்..இதனை நாங்கள் திரட்டுப்பால் என்போம். விரும்பி சாப்பிடுவேன்.

    பதிலளிநீக்கு
  19. திரட்டு பால் சுவையானது.

    பதிலளிநீக்கு
  20. திரட்டிப்பால் சொல்லிலேயே பொருளைக் கொண்டுள்ள ஒரு அழகான தமிழ்ச் சொல்.
    இதே அர்த்தத்துடன் தமிழில் வேறு சில சொல் உபயோகங்களும் உண்டு.

    பதிலளிநீக்கு
  21. அனைவர்க்கும் காலை வணக்கங்கள். திரட்டிப் பால் ஒரு யூனிவர்சல் இனிப்பாகும். வைனவக் குடும்பங்களில் எல்லா விஷேஷங்களுக்கும் ஏறினால் இரங்கினால் திரட்டிப் பால்தான்.
    அனைவருக்கும் நன்றி. குழந்தைகளுக்கு முடிந்த பின் தனியாக எடுத்து நெய் கலந்து ஒரு கிளரு கிளரி வைப்பேன். எங்கள் வீட்டில் யாருக்கும் ஏலக்காய் வாசம் திரட்டிப்பாலில் பிடிக்காது.
    பெரியவருக்கு கொடுக்கும்போது, நெய் கிடையாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிப்புகளில் ஏலக்காய் சேர்ப்பதே அதன் தாக்கம் வயிற்றில் போய் ஏதும் செய்யாமல் இருப்பதற்காகவே. இல்லைனால் இனிப்பு சாப்பிட்டதும் ஓரிரு ஏலக்காயை வாயில் போட்டு மென்று தின்னலாம்.

      நீக்கு
  22. திரட்டுப்பால் நன்றாக இருக்கிறது.
    படங்கள், செய்முறை சொன்ன விதம் எல்லாம் அருமை.

    பதிலளிநீக்கு
  23. சுலபாகத்தைஅ இருக்கும்போல! செய்திடலாமா?!

    பதிலளிநீக்கு
  24. ஆஹா... திரட்டுப் பால் - எனக்கும் பிடிக்கும். இங்கே கிடைக்கும் ஃபுல் க்ரீம் பாலில் நன்றாகவே வரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமா இல்ல? நான் ராஜஸ்தான், குஜராத்தில் இருந்தப்போ அப்போக் கறந்த புத்தம்புது பசும்பாலில் திரட்டுப்பால் காய்ச்சுவேன். அந்த ருசியே தனி! வெள்ளை வெளேரென மணல் போல வரும்

      நீக்கு
  25. தளம் வண்ண மையமாக அழகாக இருக்கிறது ...


    சுவையான திரட்டு பால் ...இப்பொழுதே செய்யும் ஆசை வருகிறதே

    பதிலளிநீக்கு
  26. திரட்டுப்பால் நன்றாக வந்திருக்கிறதே, ரமா. செய்முறை விளக்கம் எல்லாம் நன்றாக இருக்கு.

    ஊர்ல இருந்தப்ப ஆ ஊ ந்னா எங்க வீட்டுல திரட்டுப்பால் அதுவும் கறந்த பாலில் செய்வாங்க. வெள்ளையாகவும், கோல்டன் கலரிலும் என்று. என் அப்பாவழிப்பாட்டி சும்மானாலும் வெல்லம் போட்டு செய்வார். அதுவும் ஒரு சுவை. தேங்காய்திரட்டுப் பால் எங்க வீட்டுல அதுவும் செய்வாங்க.

    கீதா

    பதிலளிநீக்கு
  27. திரட்டுப்பால் செய்யும் கலை நன்றாக அறிந்தவன் நான். இப்போது கிடைக்கும் ஆவின் பாலில் அவ்வளவு தரமான திரட்டுப்பால் கிடைப்பதில்லை.

    பதிலளிநீக்கு
  28. திரட்டுப்பாலுக்கு நெய் சேர்க்காமலேயே கறந்த பாலில் காய்ச்சி திரண்டு வரும் போதே நெய் விடும்..கறந்த பால் சில சமயம் தண்ணியா இருக்கும் (குறிப்பா பசும்பால்) அப்படினா கொஞ்சம் கோல்டன் ப்ரௌன் கலரில் வரும்ம் திரட்டுப்பால். ரொம்ப டேஸ்டியா இருக்கும். ஸோ வீட்டுல இதுக்குன்னே கறக்கற வீட்டுல சொல்லி வைச்சு தண்ணி விடாமல் வாங்கிவருவாங்க. கூடக் கொஞ்சம் காசு கொடுக்க வேண்டி வரும். இதெல்லாம் ஊர்க்க்கதை. அப்புறம் நான் செய்தது பெரும்பாலும் பாக்கெட் பால் தான். சில சமயங்களில் மட்டுமே கறந்த பால் பாண்டிச்சேரியில் இருந்த வரை கறந்த பால் தான். சென்னையிலும் கறந்தபாலும் வாங்குவதுண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாங்க அம்பத்தூரில் இருந்தவரைக்கும் நல்ல அருமையான கறந்த பால் தான் வாங்கிக் கொண்டிருந்தோம். இங்கேயும் திருவானைக்காவில் இருந்து பசும்பால் வருகிறது என்றாலும் தரம் சுமார் தான். ஆனால் அதிலும் ஏதோ வெண்ணெய் எடுக்கிறேன். ஆகவே திரட்டுப்பால் காய்ச்சினால் நெய் வரும் எனத் தோன்றுகிறது.

      நீக்கு
  29. அனைவருக்கும் ரமலான் வாழ்த்துகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
  30. இன்னும் செவ்வாய் இடுகையை வெளியிடலையா என்னு கேஜிஜி சாரை டென்ஷனாக்கப் போவதில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதற்கு இன்னும் 15 நிமிடங்கள் உள்ளன என்று நான் சொல்லப்போவதில்லை!

      நீக்கு
    2. ஹா ஹா ! இது நல்லா இருக்கே!

      நீக்கு
  31. பார்க்கவே நல்லா இருக்கு. நாங்க கருப்பட்டி வெல்லம் போட்டுச் செய்வோம் :)

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!