வியாழன், 29 ஏப்ரல், 2021

சீக்ரெட் மிஷன் 0.5

 தியம் பனிரெண்டு மணிக்கு மேல் அங்கே சென்றது காரணமாகத்தான்.  காலை ஒன்பது, பத்து மணிக்கு மேல் எல்லாம் கூட்டமாக இருக்கும்.  இப்போது அவ்வளவு கூட்டம் இருக்காது என்பதும் ஒரு காரணம்.

"டேய்..   யார் கிட்டயும் ஒண்ணும் பேசாதே...  அப்படியே யாரையும் பார்க்காமல் நேரா வா...  உள்ளே நுழைந்ததும் இடதுபக்கம் லிஃப்ட் இருக்கும்.  உள்ளே வந்து நாலாவது மாடி... கமுக்கமா வந்துடு...   முடிச்சுடலாம்"

கொஞ்ச நேரத்திலேயே மறுபடி போன்.  "டேய்...   வேற யார் கிட்டயும் சொல்லி மாட்டி விட்டுடாதடா..."

"மாட்டேன்.  கவலைப்படாதே..."



வண்டியை சற்று தூரத்திலேயே நிறுத்தி, இறங்கி எச்சரிக்கையுடன் நடந்தோம்.  குறுகலான, நிழலான பாதை.  அதைத் தாண்டிச் சென்று வலதுபுறம் திரும்பியதும் சட்டென கண்ணில் பட்டது கட்டிடம்.  ஏற்கெனவே வந்திருக்கிறோம்.  ஆனாலும்....

யாருமே இருக்க மாட்டார்கள் என்று நினைத்ததற்கு மாறாக ஆங்காங்கே சிதறி ஏழெட்டு பேர் நின்று கொண்டிருந்தார்கள். 

திடீரென்று திரும்பிய எங்களை வெறித்துப் பார்த்தார்கள்.  அவர்கள் பார்வையில் லேசான விரோதம் தெரிந்ததோ என்று தோன்றியது.  அவர்கள் கண்களைத் தவிர்த்து, அதே சமயம் அவர்களின் கவனம்  திருப்ப, கையில் வைத்திருந்த ரெஜிஸ்டர் போன்ற புத்தகத்தைப் பிரித்து "சரி பார்த்து விட்டு" உள்ளே நுழைந்து இடது புறம் திரும்பினேன்.  என்னுடன் வந்தவர்கள் கையில் பழங்கள் கண்ணில் படுமாறு பை வைத்திருக்க அதை "சோதித்தபடியே" உள்ளே வந்தார்கள்.

ரிசப்ஷனில் இருந்த நங்கை கேள்விக்குறியுடன் நிமிர்ந்தாலும், நாங்கள் அவளை லட்சியமே செய்யவில்லை என்றதும், அசுவாரஸ்யமாக  மறுபடி வாட்ஸாப்பில்  ஆழ்ந்தாள்.  காலை நேரமாயிருந்திருந்தால் எங்களைத் தாண்டியே போக விட்டிருக்க மாட்டாள்.

லிஃப்ட் என்றதும் தலைதூக்கிய என் வழக்கமான அலர்ஜியை புறந்தள்ளி உள்ளே நுழைந்து, மற்ற மூவரையும் உள்ளே வர விட்டு ,  எண் நான்கை அமுக்கினேன்.  கைகளில் லேசான நடுக்கம் இருந்தது.  பதட்டத்தில் சரியாய் அமுக்காததால் லிஃப்ட்  கம்மென்றிருக்க, இன்னொருமுறை அமுக்க வேண்டி இருந்தது. 

மனசுக்குள் என்னென்னவோ எண்ணங்கள், குழப்பங்கள், போராட்டங்கள்... லேசான பயம்!  வெளியில் காட்டிக் கொள்ளவில்லை.

வெளியே வந்து வலது புறம் திரும்பியதும் ஒரு நிமிடம் இடம் தெரியாமல் திண்டாடி, அங்கிருந்த பெண்ணிடம் பெயர் சொல்லி விசாரித்து விட்டேன்.  உடனே நாக்கைக் கடித்துக் கொண்டேன்.  'ஆஹா...   அவ்வளவு ஜாக்கிரதை சொன்னானே...'

ஆனால் அந்தப் பெண்ணோ..  "அந்த நாலு பேர் நீங்கதானா?  உள்ளே போங்க.." என்றவள் நாங்கள் உள்ளே சென்றதும் கதவை வெளியே சாத்தினாள்!

சாத்திக்கொண்ட கதவை ஒருமுறை திரும்பிப் பார்த்தேன்.  

"உள்ளே வாங்க..."  குரல் கேட்டு திரும்பினால், 

உள்ளே இருவர் காத்திருந்தனர்.  நான் ரெஜிஸ்டரைப் பிரித்து எழுதி வைத்திருந்த விவரங்களை எடுத்து நீட்டினேன்.  மேலோட்டமாக சரி பார்த்த ஒரு பெண், "சரியாயிருக்கு..  கரெக்ட்டா வச்சிருக்கார்..." என்றவர், என் பக்கம் திரும்பி "தேங்க்யூ ஸார்" என்று விட்டு அமரச்சொன்னார்.

"உங்களுக்காகததான் காத்திருக்கோம்...   முடிஞ்சுடுச்சுன்னா நாங்களும் கிளம்பிடுவோம்"

'அவன்' பெயரைச் சொல்லி "அவன் எங்கே?" என்றேன்.

கதவு வெடித்துத் திறந்தது.

"இதோ இருக்கேண்டா..."

அவ்வளவுதான் அடுத்தடுத்து காரியங்கள் விரைவாகவும், அமைதியாகவும் நடந்தன.

பத்து நிமிடங்களில் மொத்த வேலையும் முடித்து, வந்த சுவடு தெரியாமல் கிளம்பினோம்.  அதே லிஃப்ட்டில்.  கீழே வந்து, அங்கு நின்றிருந்தவர்களின் பார்வைகளைத் தவிர்த்து,  மறுபடி நிழலான ஒற்றையடிப் பாதையில் நடந்து வண்டியை அடைந்து, கிளம்பி வீடு\வந்தபோது மணி இரண்டைத் தாண்டிக் கொண்டிருந்தது.

சட்சட்டெனக் குளித்து சாப்பிட உட்கார்ந்தபோது மணி இரண்டரை!

இவ்வளவு ரகசியமாக நாங்கள் செய்த காரியம் என்ன தெரியுமா? 

வேறொன்றுமில்லை, இரண்டாவது டோஸ் வாக்சின் போட்டுக்கொண்டோம், அவ்வளவுதான்.  

நாங்கள் முதல் டோஸ் போடச்சென்றபோது கோவிஷீல்ட் சப்ளை இல்லை என்று சொன்னார்கள் என்று சொல்லி இருந்தேன்.  சில நாட்களாகவே எந்த வாக்சினுமே கிடைக்கவில்லை.  

உண்மையில் நாங்கள் 19 ம் தேதி  அன்றே இரண்டாவது தவணை ஊசி போட்டுக்கொண்டிருக்க வேண்டும்.  நங்கள் அதை ஒத்திப்போட்டு ஒன்றாம் தேதிக்குமேல் போட்டுக்கொள்ளலாமா என்று யோசித்தது போக, திடீரென ஏற்பட்ட அதன் தட்டுப்பாடு, கிடைக்கும்போது போட்டுக்கொள்வதே நலம் என்ற முடிவுக்கு வரவைத்தது.  

கோவாக்சின் வரத்து இல்லை என்று சொன்னான் நண்பன்.  வந்தால் சொல்கிறேன் என்று சொல்ல, இரண்டு நாட்கள் ஆகியும் பதிலே இல்லாததால் வேறு இடத்தில  போட்டுக்கொள்ள முயன்றேன்.  மே ஒன்றாம் தேதி வேறு நெருங்குகிறதே...    மேலும் வரும் திங்கட்கிழமை அப்பாவின் திதி.  அதற்குள் தடுப்பூசி போட்டுக்கொண்டு அடுத்த ஒருநாளோ, இரண்டு நாட்களோ அவஸ்தைப்பட்டு முடித்து விட்டால் மற்ற வேலைகளை கவனிக்கலாம் என்று நினைத்தேன்.  

அப்போதுதான் தொலைபேசி வந்தது.  முதல்நாள் அலைந்து திரிந்து பத்து ஊசி வாங்கி வந்திருந்தானாம்.  'தீரப்போகிறது, உடனே வா...'  என்றான்.  அதற்குப் பிறகுதான் மேலே சொன்ன டெலிபோன் உரையாடல் எல்லாம்.

ஊசியை அவர்கள் அனுப்பும் பேக்கிலிருந்து வெளியில் எடுக்கும்போதே ஊசிக் குப்பியில் மேலே, அந்த பேக்கிலிருந்தது அதை வெளியே எடுக்கும் நேரத்தைக் குறித்து விடுகிறார்கள்.  என்னதான் அதை மறுபடியும் ஐஸ் பெட்டியில் வைத்திருந்தாலும் நான்கு மணிநேரத்துக்குள் செலவு செய்து விட வேண்டுமாம்.


அதேபோல ஒரு வயால் 5 எம் எல்.  0.5 சிசி யாக பத்து பேர்களுக்குப் போடலாம்.  ஆனால் அந்தக் குப்பியில் 5 எம் எல்லுக்கும் மேலே மருந்து இருக்குமாம்.  அதனால் கொஞ்சம் மிச்சமாகலாம்.  ஆனால் பெரும்பாலும் அதை உபயோகப்படுத்த மாட்டார்களாம்.  தனியார்களில் அதை கூடுதல் டோஸாக 250 ரூபாய் பார்க்க வாய்ப்பு.  இப்போது வேறு விலை ஏற்றி இருக்கிறார்களாமே...

எனக்கு ஊசி போட்டு முடித்ததும் ஊசியைப் போட்டவர் "என்ன 0.5 ccதான் போடணுமா?" என்று கேட்டு பீதியைக் கிளப்பினார்.

"ஐயோ...  எவ்வளவு போட்டீங்க..?"

"சேச்சே..   அதுதான் போட்டேன்.  சும்மா கேட்டேன்"

'அட ஏம்மா..  நீ வேற பீதியைக் கிளப்பிகிட்டு'

நண்பன் குப்பியை எடுத்து எதனை பேருக்குப் போட்டிருக்கிறது, எவ்வளவு மிச்சமிருக்கிறது என்பதைக் கணக்கு பண்ணி எங்களுக்குப் போட்ட மருந்தின் அளவு சரிதான் என்பதை நிரூபித்தான்.


மக்கள் வந்து கொண்டே இருந்தால் வாக்சின் தொடர்ந்து போட்டுக் கொண்டே இருக்கலாம்.  சட்டென இடைவெளி விழுந்தால் அந்த நேர லிமிட் தாண்டும்போது கொஞ்சம் வீணாகும்.  தமிழ்நாடுதான் மருந்தை அதிகம் வேஸ்ட் செய்யும் மாநிலம் என்கிறது ஒரு ஆராய்ச்சி.  12%.

முதல் டோஸ் போட்டுக்கொண்டவர்கள் எல்லோருமே இரண்டாவது டோஸ் போடவே லோல் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்!  இதோ வந்து விடும், அதோ வந்துவிடும் என்கிறார்கள்.  எப்போது வருமோ..

விவேக் மரணத்துக்குப்பின் தடுப்பூசி போட்டுக்கொள்வது குறையும் என்று எதிர்பார்த்திருந்தீர்கள் என்றால் ஏமாந்து போவீர்கள்.  மாறாக அதிகரித்துக்கொண்டே வருகிறது.

போதாக்குறைக்கு மே ஒன்றாம் தேதியிலிருந்து 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி என்று அறிவித்திருப்பதால் இன்னும் கூட்டம் அலைமோதும்.  அவர்கள் எல்லோரும் ஏப்ரல் 28 (நேற்று) முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாமாம்.  இதை எதிர்பார்த்தே நான் தாமதம் செய்யாமல் கிடைத்த வாய்ப்பில் இரண்டாவது டோஸை போட்டுக்கொண்டு விட்டேன்!

======================================================================================================

கடந்த ஏப்ரலில் ஃபேஸ்புக்கில் பகிர்ந்தது...

துக்ளக் கேள்வி பதில், அரசு பதில்கள், கல்கண்டு தமிழ்வாணன் கேள்வி பதில்கள்...
இவை யாவற்றுக்கும் முன்னோடி யார் தெரியுமா?
தமிழ்ப் பத்திரிகை வரலாற்றில் கேள்வி-பதில் பகுதியை முதன்முதலில் கொண்டு வந்தவர் 'குண்டூசி' என்கிற சினிமாப் பத்திரிகை நடத்திய திரு கோபாலன். வருடம் 1935.
அவருக்கு அதற்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தது இந்திய அளவில் ஆங்கிலத்தில் வெளியாகிக் கொண்டிருந்த ஃபிலிம் இந்தியா" என்கிற பத்திரிகை என்றாலும் அதன் ஆசிரியர் வாசகர்களுக்கு அளித்த பதில்களில் இருந்த ஆணவத்தை எடுத்து விட்டு "குண்டூசி பதில்கள்" என்று குத்தல் கலந்த பாணியில் பதிலளித்தார் கோபாலன். அப்போது அவர் ஸில்வர் ஸ்க்ரீன் என்கிற தமிழ் / ஆங்கில சினிமாப் பத்திரிகையில் பணிபுரிந்து கொண்டிருந்தார்.
அதற்கு புனைப்பெயர் தேடிக் கொண்டிருந்தபோது அந்த இதழின் ஆசிரியர் பொறுப்பில் இருந்த வி வி சடகோபன்தான் குண்டூசி பெயரை முன்மொழிந்திருக்கிறார்.
குண்டூசி குத்தும், குதறாது. தாள்களை ஒன்று சேர்த்து வைக்கும் நல்ல செயலைத்தான் செய்யும். குத்தல் என்று சொல்வதைவிட கிண்டல் என்று சொல்லலாம்.
ஒரு உதாரண கேள்வி பதில் :
தற்காலம் உள்ள நிலையில் குடும்ப ஸ்த்ரீகள் சினிமாவுக்கு வரலாமா? என்று கேட்ட ஒரு வாசகருக்கு திரு கோபாலின் பதிலாக வந்த கேள்வி : "தற்காலம் சினிமா உள்ள நிலையில் அல்லது குடும்பப் பெண்கள் உள்ள நிலையிலா?"
பின்னாட்களில் குண்டூசி என்கிற பெயரிலேயே பத்திரிகையும் தொடங்கி வெற்றிகரமாக நடத்தினார் திரு கோபாலன்.
அப்புறம் இந்த கேள்வி பதில் பகுதி பயங்கர பிரபலமாகி எல்லாப் பத்திரிகைகளும் தொடங்கின.
கொசுறுத் தகவல், மஞ்சரி ஆசிரியர் திரு தி ஜ ரவும், எழுத்து பத்திரிகை ஆசிரியர் திரு சி சு செல்லப்பாவும் ​கோ​பாலுடன் (ஜெயபாரதி) பத்திரிகையில் பணிபுரிந்திருக்கிறார்கள்.
தகவல் எடுக்கப்பட்டது திரு வாமனன் எழுதிய புத்தகத்திலிருந்து.

============================================================================================

கடந்த தேர்தலின்போது வாக்களித்த அனுபவம் பற்றி பேஸ்புக்கில்..



=========================================================================================

லாக்கர்களுக்கு வங்கி பொறுப்பில்லை தெரியுமோ....


வங்கி லாக்கர்கள் குறித்து கூறும், வங்கி முன்னாள் அதிகாரி எஸ்.கோபாலகிருஷ்ணன்:

வங்கி லாக்கர்களை உடைத்து, அதில் உள்ள பணம், நகைகள், ஆவணங்களை கொள்ளை அடித்தால், அதற்கு வங்கி பொறுப்பேற்க முடியாது. இது, மக்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் அதிர்ச்சி அளிக்கக் கூடிய அம்சமாக இருந்தாலும், இது தான் உலகம் முழுதும் பின்பற்றப்படும் நிலைப்பாடு. வங்கி லாக்கர்களில் என்னென்ன பொருட்கள் வைக்கப்படுகின்றன என்பது வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே தெரியும்.

வங்கிக்கு தெரிவிக்க வேண்டிய தேவைஇல்லை என்பதும் விதிமுறை. வங்கியும், லாக்கரில் என்ன வைத்துள்ளீர்கள் என, வாடிக்கையாளர்களை கேட்க முடியாது. வங்கி லாக்கர்களின் சிறப்பம்சமே, பாதுகாப்பு மட்டுமல்ல; ரகசியம் காக்கப்படுவதும் தான். எனவே, லாக்கரில் இருக்கும் பொருள் என்னவென்று தெரியாத நிலையில், அவை திருட்டு போனால், அதற்கு வங்கி நிர்வாகம் பொறுப்பேற்க முடியாது என்பது ரிசர்வ் வங்கியின் விதிமுறையும் கூட.மேலும், வங்கி லாக்கரை, வாடிக்கையாளர் மட்டுமே திறக்க முடியும்.

அதற்கு இரண்டு சாவிகள் இருக்கும். ஒரு சாவி வாடிக்கையாளரிடமும், இன்னொரு சாவி, வங்கி நிர்வாகத்திடமும் இருக்கும். வங்கி அதிகாரி திறந்து கொடுத்த பின், இன்னொரு சாவியை போட்டு, லாக்கரை வாடிக்கையாளரால் திறக்க முடியும். ஆனால், பூட்டுவதற்கு வங்கி அதிகாரியின் சாவி தேவைஇல்லை. அதனாலும், அதனுள் இருக்கும் பொருள் குறித்து, வங்கிகள் பொறுப்பேற்க முடியாது என்கிறது ரிசர்வ் வங்கி.அதே நேரத்தில், வங்கிக்குள் புகுந்து, கொள்ளையர்கள் லாக்கரை உடைத்து அதனுள் இருக்கும் பொருட்களை திருடிச் சென்றால், அதற்கு வங்கி நிர்வாகம் பொறுப்பேற்காது என கூறுவதை, ரிசர்வ் வங்கி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பது வாடிக்கையாளரின் கோரிக்கையாக உள்ளது.

வங்கிகளின், 'ஸ்ட்ராங் ரூம்' எப்படி இருக்க வேண்டும் என, ரிசர்வ் வங்கி வழிமுறை வகுத்துள்ளது. அதை மீறி, கொள்ளையர்கள் புகுந்தால், அது வங்கி பாதுகாப்பு ஏற்பாடுகள் மீதான குறைபாடாகத் தானே இருக்க முடியும்... எனவே, வங்கிகள், வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில், நியாயமான அணுகுமுறை அவசியம் என்ற குரல் வலுக்கிறது. அதே நேரம், வங்கியிடம் உள்ள பணத்திற்கு, காப்பீடு செய்யப்படுகிறது; லாக்கரில் உள்ள பொருட்களுக்கு காப்பீடு செய்யப்படுவதில்லை.

காரணம், வங்கி வசம் உள்ள பணத்திற்கு கணக்கு உள்ளது. ஆனால், லாக்கரில் உள்ள பொருட்களுக்கு, வங்கியிடம் கணக்கு இருப்பதில்லை.எனவே, புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, வங்கிகள் தங்கள் கட்டட பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும். ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளும் மாற்றப்பட வேண்டும். இவையே அனைவரின் எதிர்பார்ப்பு!

=======================================================================================

ஆர்வி 'சிலிகான் ஷெல்ஃப்' என்கிற தளத்தில் எழுதுபவர். நான் படித்துவரும் தளம். அவர் பகிர்ந்திருந்த ஒரு கட்டுரையை திரு RV ராஜு (இவரும் எழுத்தாளரே) பேஸ்புக்கில் பகிர்ந்திருந்தார். குமுதம் பற்றிய விரிவான வித்தியாசமான அலசல். சுவாரஸ்யமாகப் படித்துக்கொண்டே வந்தபோது கடைசி வரி... அடடே நம்ம ஜீவி ஸார் பற்றி...

இதில் எழுத்தாளர் குமுதத்தில் சுஜாதா ப்ரியா நாவலை எழுதுவதற்காக எஸ் ஏ பி அனுப்பி லண்டன் சென்று வந்தார் என்கிற தகவலை பேஸ்புக்கில் கணேஷ் பாலா மறுத்திருந்தார். லா ச ரா பற்றிய தகவல்களுக்கும் அவர் மகன் திரு சப்தகிரி லாசரா சில விளக்கங்கள் கொடுத்திருந்தார்.







மறைந்த எஸ்.ஏ.பி. அண்ணாமலை குமுதத்தை ஒரு பெரும் சக்தியாக உருவாக்கியவர். ஆனால் குமுதம் பத்திரிகையின் தரம் என்பது என் கண்ணில் விகடனை விட, கல்கியை விட, கலைமகளை விட கொஞ்சம் குறைவுதான். என் வீட்டில் எது படித்தாலும் யாரும் எதுவும் சொல்லமாட்டார்கள், அதனால் பிரச்சினை எதுவும் கிடையாது. ஆனால் குமுதம் கொஞ்சம் lowbrow, சிறுவர்கள் படிக்கக்கூடாது என்று பெரியவர்கள் சொல்லி கேட்டிருக்கிறேன். (அய்யய்யோ என் வயசு எல்லாருக்கும் தெரிஞ்சுபோச்சே!)
குமுதம் நன்றாக விற்க வேண்டும் என்பதையே குதிரைக்கு கண்ணில் பட்டை கட்டியதைப் போல இலக்காக வைத்துக் கொண்டு ஓடி இருக்கிறார். சுஜாதாவிடம் அவர் “பர்சனாலிட்டி நான் இல்லை, குமுதம்தான்” என்று சொன்னாராம். நிறைய படித்திருந்தும், நல்ல ரசனை இருந்தும், தன் பத்திரிகை ஒரு “பாமரனுக்காக” என்று உறுதியாக இருந்திருக்கிறார், தன் ரசனையை விட்டுவிட்டு சராசரி குமுதம் வாசகன் என்ற ஒரு பிம்பம் என்ன நினைப்பானோ, எதை ரசிப்பானோ அதையே கொடுக்க முயற்சித்திருக்கிறார். உதாரணமாக சோமனதுடி என்ற ஆர்ட் படத்தை பார்த்துவிட்டு மறைந்த சுப்ரமணிய ராஜுவிடம் புகழ்ந்து பேசினாராம். ஆனால் அரசு பதில்களில் இதெல்லாம் ஒரு படமா என்று நக்கல் அடித்தாராம். ஆனானப்பட்ட சுஜாதா எழுதிய தொடர்கதையையே பிரச்சினை என்று வந்ததும் நிறுத்திவிட்டார்.
குமுதத்தில் அவரது சொந்தப் பங்களிப்பான அரசு பதில்கள் பெரும் வெற்றி அடைந்தது. சிறந்த டீம் ஒன்றை உருவாக்கி இருக்கிறார். ரா.கி. ரங்கராஜன், ஜ.ரா. சுந்தரேசன், புனிதன் அவருக்கு கைகளாக இருந்திருக்கிறார்கள். ஜ.ரா.சு. எழுத்தாளராக உருவானதில் அவருக்கும் பெரும்பங்கு உண்டு – குறிப்பாக அப்புசாமி கதைகளில் ஜ.ரா.சு.வை பெண்டு நிமிர்த்தி வேலை வாங்குவாராம். அவர்களை மிகச் சரியாக பயன்படுத்தினார். அறுபதுகளில் அவரும், ரா.கி.ர.வும் நிறைய கதைகள் எழுதினார்கள். அவர்கள் பாணி எழுத்துகளுக்கு வரவேற்பு குறைகிறது என்று புரிந்துகொண்டார். அவர் எழுபதுகளில், எண்பதுகளில், அவருக்கு அரசு பதில்கள், ரா.கி.ர.வுக்கு லைட்ஸ் ஆன், ஜ.ரா.சு.வுக்கு அப்புசாமி என்று தயவு தாட்சணியமே இல்லாமல் மாற்றிவிட்டார். ரா.கி.ர.வின் மாஸ்டர்பீஸான நான், கிருஷ்ணதேவராயன் விகடனிலோ கல்கியிலோதான் வெளிவந்தது.
சாண்டில்யன், சுஜாதா, ஜெயராஜ் ஆகியோரை மிகச் சரியாக பயன்படுத்தினார். சுஜாதாவை சூப்பர்ஸ்டாராக ஆக்கியதில் அவருக்கும் பங்குண்டு. ப்ரியா தொடர்கதையாக வந்தபோது, ப்ரியா இங்கிலாந்தில் நடக்கிறது, இங்கிலாந்தைப் பார்த்துவிட்டு வாருங்கள், பின்புலத்தை இன்னும் சிறப்பாக எழுதலாம் என்று சுஜாதாவை இங்கிலாந்துக்கு அனுப்பினாராம்.
அவருக்குப் பிறகு குமுதம் பெருங்காய டப்பாதான். அவருக்கும் அந்தக் கவலை இருந்திருக்கிறது. Transition plan-ஐ உருவாக்கி இருக்கிறார். பிரபஞ்சன் உட்பட்ட பலரை உள்ளே கொண்டு வந்திருக்கிறார். ஆனால் காலமும் மாறிக்கொண்டிருந்தது. பத்திரிகைகளின் பொற்காலம் போய்விட்டது. ஆனானப்பட்ட சுஜாதா கூட குமுதத்தின் ஆசிரியராக வெற்றி பெறவில்லை.
குமுதம் வணிக ரீதியாக பெரும் வெற்றி பெற்றதே தவிர நல்ல சிறுகதைகளையோ (ஆனந்த விகடன் முத்திரைக் கதைகள் மாதிரி), நல்ல இலக்கியத்தையோ தர முயன்றதே இல்லை. (ஆனால் அசோகமித்திரன், லா.ச.ரா. ஆகியோரின் எழுத்துகளை சின்ன வயதில் படித்திருக்கிறேன்). என் சம வயது நண்பர்கள் ஓரிருவர் குமுதத்தில் சில கதைகளைப் படித்து பாலியல் கிளர்ச்சி அடைந்ததை சொல்லி இருக்கிறார்கள். (நான் மிஸ் பண்ணிட்டேனே!) சாண்டில்யன் சில சமயம் (யூஸ்லெஸ்) போர்னோ மாதிரி எழுதுவார், அதை எல்லாம் எடிட் செய்ய முயன்றதாகவே தெரியவில்லை. விஜயமஹாதேவி என்ற நாவலில் நாயகன் நாயகியிடம் கப்பல் உள்ளே போக வேண்டும், போகுமா தெரியவில்லை என்றெல்லாம் பேசுவான். நாயகி வெட்கப்பட்டுக் கொண்டே இருப்பாள். கடைசியில் நீங்க நிஜ கப்பல் கடலுக்குள்ளே போவதைப் பற்றி பேசறீங்களா என்பாள். ஜெயராஜின் “கவர்ச்சி ததும்பும்” படங்கள், நடிகைகளின் ஃபோட்டோக்கள், அட்டைப்படத்தில் தவறாமல் பெண்கள், கிசுகிசு என்று அன்றைக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் போனார். இப்படி ஒரு பத்திரிகையை மலினப்படுத்தினார் என்று கூட அவர் மேல் எந்த விமர்சனமும் யாரும் வைத்து நான் பார்த்ததில்லை. உண்மையை சொல்லப்போனால் அவரைப் பற்றி யாரும் எதிர்மறையாக சொல்லி நான் பார்த்ததே இல்லை. குமுதத்தின் வணிக வெற்றி அவரது எல்லா குறைகளையும் மறைத்துவிட்டது போலிருக்கிறது.
பிரபஞ்சன் குமுதத்தில் பணியாற்றிய காலத்தைப் பற்றி எழுதி இருக்கிறார் – பகவத்கீதையும் பலான படங்களும். ஒழுங்கு ஒழுங்கு என்று பயங்கர ஆபீஸ் rituals நிறைந்த அலுவலகமாம். மீட்டிங்குக்கு போனால் கூட முதலில் பெரிய சீனியர் ரா.கி. ரங்கராஜன் உள்ளே நுழைய வேண்டும், அடுத்தது சின்ன சீனியர் ஜ.ரா. சுந்தரேசன், அப்புறம் சீனியாரிட்டிபடி எல்லாரும், கடைசியில்தான் புதிதாக சேர்ந்த பிரபஞ்சன் அறைக்குள் நுழைய வேண்டுமாம். காலையில் பத்திலிருந்து பத்தரை வரை குமுதம் ஆஃபீஸில் எஸ்.ஏ.பி. தலைமையில் பகவத்கீதை, திருக்குறள் விளக்கமாம். அதற்குப் பிறகு நடிகைகளின் எந்த கவர்ச்சிப் படத்தை இந்த வாரம் போடலாம் என்று பல சைட் போஸ், குனிந்த போஸ் புகைப்படங்களை அளைந்து அளைந்து தேர்ந்தெடுப்பாராம்.
ஆனால் எனக்கென்னவோ இது hippocrisy என்று தோன்றவில்லை. அவர்தான் கீதையை புரிந்துகொண்டிருக்கிறார் என்றுதான் தோன்றுகிறது!
எஸ்.ஏ.பி.யின் பங்களிப்பு என்பது குமுதமும் அதன் பெருவெற்றியும்தான். ஆனால் அவரும் ஓரளவு எழுதி இருக்கிறார். அவரது சில நாவல்களை ஜெயமோகன் தனது குறிப்பிடத் தக்க வணிக நாவல்கள் பட்டியலில் பரிந்துரைத்துமிருக்கிறார். அவர் எழுதி சின்ன வயதில் ஏதோ படித்திருக்கிறேன். (ஆளவந்தார் என்ற போலி ஆனால் கைராசிக்கார டாக்டர் வரும் கதை ஒன்று யாருக்காவது நினைவிருக்கிறதா? இது ரா.கி. ரங்கராஜன் எழுதியதாம், எஸ்.ஏ.பி. இல்லை. பேர் கையில்லாத பொம்மை) ஆனால் எதுவும் சரியாக நினைவில்லை. ஜெயமோகன் சின்னம்மா, மலர்கின்ற பருவத்தில், பிறந்த நாள் ஆகிய நாவல்களை நல்ல social romances என்று குறிப்பிடுகிறார்.
பொதுவாக அவரது நாவல்கள் அறுபதுகளின் உணர்ச்சி பொங்கும் திரைப்படங்கள் போன்ற உணர்வை அளிக்கின்றன. பரிச்சயமான ஒரு சமையல் குறிப்பைப் படித்து ஒன்றன்பின் ஒன்றாக பொருட்களைச் சேர்த்து சமைப்பது போலத்தான் இருக்கிறது. சமையல் குறிப்பை சரியாக செயல்படுத்தினாலும் கலையம்சம் குறைவாகத்தான் இருக்கிறது. ஆனால் அந்தக் காலகட்டத்தில் விரும்பிப் படிக்கப்பட்டிருப்பார் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை.
அவரது சமையல் குறிப்பு அணுகுமுறைக்கு சரியான உதாரணம் ‘உன்னையே ரதியென்று‘. ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கப்படும் சம்பவங்கள் அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன, பிறகு ஒன்றன்பின் ஒன்றாக அவை அவிழ்கின்றன. அதுவும் தொடர்கதை வடிவத்துக்கு நன்றாகவே ஒத்துவரும். சம்பவங்கள் நடப்பது இயல்பாக இருப்பதும் சரளமான நடையும்தான் கதையின் பலங்கள். இளம் பெண் சிவராணி; பணக்காரத் தோழி லேகா; லேகாவுக்கு நிச்சயம் செய்யப்பட்டிருக்கும் மாப்பிள்ளை சுந்தரப் பிரசாத். பிரசாத் அவ்வப்போது மது அருந்துபவன். நிச்சயம் ஆனதும் முதல் ஆனதும் மதுவை நிறுத்துகிறான். ஆனால் மது அருந்துபவர்களை வெறுக்கும் லேகாவுக்கு சிவராணி மூலம் சுந்தரப் பிரசாத் மது அருந்துபவன் என்று தெரிகிறது. திருமணம் நிற்கிறது. சிவராணி மேல் ஆசைப்படும் மணிகண்டன் பணம் சம்பாதிக்க திருட ஆரம்பிக்கிறான். சிவராணி மேல் பிரசாத்துக்கும் லேசான ஈர்ப்பு. மணிகண்டனால் சுடப்பட்டு இறக்கும்போது சிவராணிக்கு மணிகண்டன் ஏறக்குறைய நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளை என்று தெரிந்து மணிகண்டனைக் காப்பாற்றிவிடுகிறான். கதைச்சுருக்கம் எழுதும்போதுதான் சம்பவங்கள் இத்தனை செயற்கையாக இருந்தனவா என்று தோன்றுகிறது. 🙂
நீ சுமாரான வணிக நாவல். எனக்கு அன்றைய வணிக நாவல்கள் மேல் curiosity இல்லாவிட்டால் படித்திருக்கமாட்டேன். இன்று எழுதப்பட்டிருந்தால் புரட்டி இருக்கக்கூட மாட்டேன். காதலி வேறொருவனை மணக்க, காதலன் நீ கன்னியாகவே வாழ வேண்டும் என்று சத்தியம் வாங்கிக் கொள்கிறான். இதில் எத்தனை செயற்கையாக மூவரும் ஏறக்குறைய ஒரே வீட்டில் வாழும் சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறார்!
பிரம்மச்சாரி போன்ற நாவல்கள் எல்லாம் எல்லாம் குமுதத்தின் பக்கங்களை நிறைக்க எழுதப்பட்டவை.
பூவனம் தளத்தை நடத்தும் ஜீவி எஸ்.ஏ.பி.யை பெரிதும் ரசிப்பவர். எழுத்தாளர் திலகம் என்று இவரை புகழ்கிறார். அவரது நீ என்ற நாவலிலிருந்து ஒரு excerpt-ஐ இங்கே பதித்திருக்கிறார். எழுத்தாளர் கடுகு தன் நினைவுகளை இங்கே பதிவு செய்திருக்கிறார்.

- சிலிகான் ஷெல்ஃப்

=========================================================================================

டாக்டர் சொல்வதை அப்படியே கேட்கும் உத்தம நோயாளி!


அடடே... போயே போச்சே...!

சென்ற வெள்ளிக்கிழமை பதிவில் பழைய கதைகள், அதன் வரிகள் பற்றி எல்லாம் அலசப்பட்டன. எனக்கொரு ஆர்வம்.. இதோ இந்த ஜெயகாந்தன் கதை படித்திருக்கிறீர்களா? கதை நினைவிருக்கிறதா?

175 கருத்துகள்:

  1. ஜெயகாந்தன் கதை. ஒரு நடுத்தர வயது அம்மா
    மீண்டும் தாய்மை அடைவதுதானே.? மகன் வந்து தேற்றுவாரே.?

    இனிய காலை வணக்கம் ஸ்ரீராம்.
    எல்லோரும் இறைவன் அருளில் நோயிலிருந்து என்றும் விலகியே
    இருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லிம்மா...   இணைந்து பிரார்த்திப்போம்.  கதை?  படித்துப் பார்த்துச் சொல்கிறேன்!

      நீக்கு
    2. வெண்ணிற ஆடை நிர்மலா, எஸ்.எஸ்.ராஜேந்திரன் நடிச்சுத் தொடராக தூர்தர்ஷனில்/பொதிகையில் வந்தது. நல்லா இருக்கும். கதை/நாடகம் இரண்டுமே!

      நீக்கு
  2. நிஜமாகவே சீக்ரெட் மிஷன்!!!
    நல்ல த்ரில்லர். அருமையாகச் சொல்லி இருக்கிறீர்கள் ஸ்ரீராம். ஒரு
    ஊசியை ஆறு பேருக்குப் போடவேண்டுமா.
    இதெல்லாம் புது செய்தி எனக்கு.
    நல்ல வேளையாக தடுப்பூசி கிடைத்துப் போட்டுக் கொண்டீர்கள்.

    மருமகளுக்கும் முதல் ஊசி கிடைத்துவிட்டது. இரண்டாவதும் கிடைக்க வேண்டும்.
    மகன் இரண்டு மாதம் தானே சமைத்துச் சாப்பிட வேண்டுமே என்று என் கவலை:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றிம்மா...  பத்து பேர் போட்டுக்கொள்ளலாம்.  ஆனால் அதில் வேஸ்டேஜை எதிர்பார்த்து சற்று கூடுதலாகவே இருக்கும் என்பது தகவல்.  இப்பொழுதும் கோடிக்கணக்கில் தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளது என்றெல்லாம் சொன்னாலும் கிடைப்பதில் சிரமம் இருக்கிறது.

      நீக்கு
    2. ஜெயகாந்தன் கதை. ஒரு நடுத்தர வயது அம்மா
      மீண்டும் தாய்மை அடைவதுதானே.? மகன் வந்து தேற்றுவாரே.?//

      ஆ ஆ!!! பெரிய எழுத்தாளர் எழுதிய கரு! நான் எழுதி பாதியில் வைத்திருப்பது இனி நான் எழுதலமா என்று தோன்றுகிறது. ஆனால் என் கதையில் மகன் எதுவும் வந்து தேற்ற மாட்டான்..

      என் அம்மாவிற்கு 30 வயதில் மாதாந்திரம் நின்றுவிட்டது. ஆனால் அப்போது அது யாருக்கும் தெரியவில்லை...எனவே ஒரு வேளை குழந்தையோ என்று எல்லொரும் நினைத்தார்கள். அதோடு மற்றொரு உறவினர் 38 வயதில் இரண்டாவது குழந்தை பெற்றார். அதையும் லிங்க் செய்து கற்பனையில் எழுதத் தொடங்கியது. அப்படியே நிற்கிறது. இப்போது ஜெயகாந்தன் கதை பற்றி இங்கு பார்த்ததும் தயக்கம் வருகிறது.

      கீதா

      நீக்கு
    3. அட..  நீங்க எழுதுங்க...   அதுவும் எப்படி இருக்குன்னு பார்த்துடுவோம்!

      நீக்கு
  3. வாணி அவர்களின் கேலிச்சித்திரமும் வசனங்களும் மிக அருமை:)

    பதிலளிநீக்கு
  4. காலை வணக்கம் ஸ்ரீராம், வல்லிம்மா! எல்லாருக்கும்

    ஹை அம்மா மகளுக்கு முன்னே வந்தாச்சு!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வல்லிம்மா மாலை வணக்கம்

      கீதா

      நீக்கு
    2. வாங்க கீதா...    வணக்கம்.  தடுப்பூசி எபெக்ட் ஏதும் உண்டா?

      நீக்கு
    3. இல்லை ஸ்ரீராம். ஒரு வேளை நேற்று மதியம், ராத்திரி என்று டோலோ போட்டுக்க் கொள்ள ஹாஸ்பிட்டலில் கொடுத்தாங்க..இன்று காலை ஒரு டோஸ் என்று மூன்று. ஸோ இதுவரை ரொம்ப இல்லை. வீட்டு வேலைகள் செய்து கொண்டிருக்கிறேன்.

      ஒரு வேளை மூன்றாவது டோஸ் போட்டு அதன் எஃபெக்ட் தீர்ந்தப்புறம் தெரியுமோ? அல்லது இரண்டாவது ஊசி போட்டப்புறம் தெரியுமோ தெரியவில்லை

      கீதா

      நீக்கு
    4. ஓ...   நானெல்லாம் வலியோ, ஜுரமோ இருந்தால்தான் அப்படி வந்தபின் மாத்திரை போட்டுக்கொண்டேன்.

      நீக்கு
    5. ஸ்ரீராம் ஹாஸ்பிட்டல்ல கண்டிப்பா எடுத்துக்கணும்னு சொல்லிக் கொடுத்தாங்க. அதனால் போட்டுக் கொண்டேன்...இல்லைனா எடுத்துக்க வேண்டாம்னு வீட்டிலேயே வாங்கி ரெடியாக வைத்துதான் சென்றோம். ஒரு வேளை ஜுரம் வலி வந்தால்னு...ஆனால் மருத்துவமனையில் கண்டிப்பாக என்று சொல்லிக் கொடுத்தாங்க...ஜுரம் வலி வரும் என்று சொல்லி...

      கீதா

      நீக்கு
    6. பொதுவாக ஏதாவது உபாதை இருந்தால் போட்டுக் கொள்ளுங்கள் என்றுதான் சொல்வார்கள்.  ஒவ்வொரு இடத்தில ஒவ்வொரு மாதிரி சொல்கிறார்கள் கீதா..   சிலபேர் ஊசி போட்ட இடத்தைத் தடவி விடக்கூடாது என்பார்கள்.  அது மெதுவாகத்தான் மருந்து ரிலீஸ் ஆகவேண்டும் என்பதால் என்பார்கள்.  சிலர் மெதுவாக அமுக்கி விடுங்கள் என்பார்கள்.  சிலர் அப்புறம் ஒத்தடம் தரக்கூடாது என்பார்கள்.

      நீக்கு
    7. ஊசியையாவது மாத்தறாங்களா இல்லையா?

      நீக்கு
    8. ஆமாம் ஒவ்வொருவரும் ஒவ்வொன்று..சரி சரி மீதத்தை எழுதலாம்னு இருக்கேன் பார்ப்போம்..ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பக்க விளைவுகள்.

      கீதா

      நீக்கு
    9. அட...  ஊசியை மாத்தாம இருப்பாங்களா?  உள்ளே இருக்கும் மருந்தை மாற்றாமாயிருந்தா சரி!  இப்போ ரெமிடிசெவிர்க்கு பரவும் வதந்தி மாதிரி!

      நீக்கு
    10. இங்கயும் 6 மாத்திரைகள் கொடுத்தாங்க. ஆனால் அதனை நாங்க தொடவே இல்லை. பிரச்சனை வந்தால்தான் மாத்திரை சாப்பிடணும். இல்லைனா அதைக் கரைக்க நிறைய தண்ணீர் குடித்தாலும் போதாது.

      நீக்கு
    11. அதேதான்.   மாத்திரை தேவை இருப்பின் மட்டும்...

      நீக்கு
  5. மறைந்த எஸ்.ஏ.பி. அண்ணாமலை குமுதத்தை ஒரு பெரும் சக்தியாக உருவாக்கியவர். ஆனால் குமுதம் பத்திரிகையின் தரம் என்பது என் கண்ணில் விகடனை விட, கல்கியை விட, கலைமகளை விட கொஞ்சம் குறைவுதான். என் வீட்டில் எது படித்தாலும் யாரும் எதுவும் சொல்லமாட்டார்கள், அதனால் பிரச்சினை எதுவும் கிடையாது. ஆனால் குமுதம் கொஞ்சம் lowbrow, சிறுவர்கள் படிக்கக்கூடாது ..........///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////100% உண்மை. பாட்டி வீட்டில் குமுதம் கிடையாது.
    எங்கள் வீட்டில் குமுதம் ,விகடன், கலைமகள் உண்டு.

    பத்து நிமிடங்கள் படிக்க அனுமதி.
    சின்னம்மா நானும் படித்திருக்கிறேன்.
    படகு வீடு, இன்றே இங்கே இப்போதே,
    ஜாவர் சீதாராமன் கதைகள் சில,ஒரு பக்கக் கதைகள்
    எல்லாம் நினைவில் இருக்கின்றன. இப்போது குமுதம்
    தரம் அதல பாதாளம் என்று தோன்றியது.
    பானு வெங்கடேஸ்வரன், ஜீவி சார் எண்ணங்களுக்குக்
    காத்திருக்கிறேன்.
    அரசு பதில்கள் அப்போது மிகப் பரபரப்பாகப்
    பேசப்படும்.
    எஸ் ஏபி சார் பற்றின தகவல்கள் மிகச் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்..   ஜீவி ஸார் வருகைக்கு நானும் காத்திருக்கிறேன்!  எஸ் ஏ பி நாவல்கள், படைப்புகள் பற்றி கீதா அக்காவும் சொல்வார்.

      நீக்கு
    2. குமுதத்தை விட இலக்கியத்தரமான ஒரு பத்திரிகையை நான் படித்ததில்லை. விகடன் போன்ற பத்திரிகைகளை படிக்கவே முடியாது. கல்கி ஓடு காத தூரம். தினமணிக்கதிர், குங்குமம், சாவி கொஞ்ச நாள் சுவாரசியமாக இருந்தது.

      நீக்கு
    3. ஹா..  ஹா..  ஹா...   பெரும்பாலானோரின் அபிப்ராயம் அப்படி அல்லவே!

      நீக்கு
    4. ..குமுதத்தை விட இலக்கியத்தரமான ஒரு பத்திரிகை..//

      இலக்கியமா?

      அந்தக்காலக் குமுதம் மினுமினுக்கும் அழகிகளின்(!) பளபள அட்டைப்படத்தோடு, லேசான பர்ஃப்யூமோடு, ஐம்பத்தி ஐந்து காசில் கடைகளில் தொங்கி அழைத்தது. அப்போது (எழுபதுகள்) அதில் ஜெயகாந்தன், சாண்டில்யன், கண்ணதாசன் ஆகியோரும் எழுதியதுண்டு அதுக்கப்புறம்....

      துக்ளக் முற்றிலும் மாறாக இரண்டு கழுதைகளை அட்டைப்படத்தில் தாங்கி பத்திரிக்கை உலகில் பிரவேசித்தது. கலக்க ஆரம்பித்திருந்தது. சோ வின் கேள்வி-பதில் ப்ராபல்யத்தின் உச்சத்தில் இருந்த காலகட்டம். ஒரு வாசகர் கேள்வி:
      உங்கள் பத்திரிக்கையைத் தொடர்ந்து, குமுதமும் அட்டைப்படமாக ஒரு கழுதையைப் போட்டுவிட்டால் ?

      சோ: நடக்காது. அப்படி நடந்தால்.. அது பெண் கழுதையாகத்தான் இருக்கும்!

      நீக்கு
    5. ஆமாம்.  வாசனை...   குமுதம் வாங்கினால் வாசனை அடிக்கும்.  என்னென்ன புதுமைகள்...

      நீக்கு
    6. குமுதமெல்லாம் பாடப் புத்தகத்துக்குள்ளே ஒளிச்சு வைச்சுப் படித்தவை! இப்போல்லாம் வாராந்தரிகளோ, மாதாந்தரிகளோ வாங்குவதும் இல்லை/படிப்பதும் இல்லை. எஸ்.ஏ.பி. எனக்கு அவ்வளவாப் பிடிக்காது. ஆனால் அரசு பதில்களுக்கு மூவரும் சேர்ந்து தான் என்பது தெரியும். நானும் கேள்விகள் எழுதிப் போட்டு பதில்கள்/சேர்ந்து அந்த வாரக் குமுதம் வாங்கி இருக்கேன்.

      நீக்கு
    7. எஸ் ஏ பியை ஆராதிக்கும் ஒருவர்..  பிடிக்காத ஒருவர்!

      நீக்கு
    8. ஒரு முறை தான் வாங்கியிருந்த வின்டேஜ் காரோடு குமு தம் அட்டைப் படத்தில் சோவின் படம் வந்தது. சோ அந்தக் காரைப் பற்றி எழுதி விட்டு, "குமுதம் அட்டைப் படத்தில் பெண்கள் படம்தான் வரும். இங்கே நான் நிற்கிறேன், ஆகவே என் பக்கத்தில் நிற்கும் இந்தக் கார் ஒரு பெண்ணாகத்தான் இருக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.  . 

      நீக்கு
    9. நினைவிருக்கிறதோ எனக்கும் என்று சந்தேகமாய் இருப்பது போல தோன்றுகிறது!

      நீக்கு
  6. ஸ்ரீராம் பதிவின் ஆரம்பமே ஹா ஹா ஹா ஏதோ நிழல் சமாச்சாரம் போல!!!

    சென்னையில் நடு ராத்திரியில் ஒரு பிசினஸ் நடக்கும் 10, 12 வருடங்களுக்கு முன் அறிந்தது அதுவும் நேரடியாக...அதை பொது வெளியில் சொல்லலாமா என்று தெரியவில்லை. ஹின்ட் சிறுநீரகம்...

    அப்படியான தொடக்கம் போல ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா...  ஹா...   நன்றி.

      நீங்கள் தந்திருக்கும் க்ளூ எப்படி இருக்கிறது தெரியுமா?  இரண்டெழுத்துத் திரைப்படம்.  முதல் எழுத்து நீ.  கடைசி எழுத்து தி.  

      ஹா..  ஹா..  ஹா...

      நீக்கு
    2. ஹா ஹா ஹா ஹா நீதி !!!!!!!!!!அப்படின்னு ஒரு திரைப்படம் இல்லையா?!

      அப்படினா சமாச்சாரம் புரிந்துவிட்டதுன்னு சொல்லுங்க!!!

      கீதா

      நீக்கு
    3. ஹிஹிஹி...   இதற்கு மேலும் புரியாமல் இருக்குமா?

      நீக்கு
  7. ஹையீயீயீயி சின்ன கீதாமா,
    அம்மா வந்தால் தான் பெண் வரமுடியும் ஹாஹ்ஹா.
    நல்ல நாளுக்கான வாழ்த்துகள் மா.

    பதிலளிநீக்கு
  8. லாக்கர் இன்சுரன்ஸ் கட்டாயம் வரவேண்டும்.
    அவர்களை நம்பிதானே அங்கே வைக்கிறோம்.
    நன்றாகச் சொல்லி இருக்கிறார் வங்கி மேலாளர்.
    சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
  9. ஸ்ரீராம் உங்கள் சீக்ரெட் மிஷன் ஆரம்பமே சொல்லிவிட்டது கோவாக்சின்னுக்கு என்று உங்கள் இரண்டாவது டோஸ் என்று..ஹா ஹா ஹா ஹா

    இதை முந்தின கருத்தில் சொல்ல விட்டுப் போச்சு. நல்லா சொல்லிருக்கீங்க

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடப்பாவி...   சஸ்பென்ஸே இல்லையா?!  மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.

      நீக்கு
    2. ஹா ஹா ஹா ஸ்ரீராம் முதல் டோஸ் பொட்டப்பவே அதை நீங்க எழுதினப்பவே ஒரு சின்ன ஹின்ட் இருந்துச்சே அதில்...!!!!!!!

      இதெல்லாம் எங்களுக்கு மறக்காதாக்கும்!!!

      கீதா

      நீக்கு
    3. நெல்லையின் நேற்றைய கருத்திற்கு எனக்குப் போட்ட கருத்திற்கு!!! 16 எல்லாம் மே 1 ற்கு அப்புறம்தானே என்பதற்கு...

      நெல்லை! அதுவும் ஸ்ரீராம் போல சீக்ரெட் மிஷனாக்கும்! அதெல்லாம் நான் இப்படி பப்ளிக்கா சொல்லுவேனா !!!! ஹிஹிஹிஹி

      கீதா

      நீக்கு
  10. இங்கு செம கூட்டம் ஸ்ரீராம். பதிவு போடலாம் என்று நினைத்திருக்கிறேன் ஆனால் யதார்த்த சிரமங்கள் சில...

    கீதா















    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்..  உங்கள் தளத்தில் பதிவு வந்து ரொம்ப நாளாச்சு இல்லே?

      பதிவுக்கு இங்கேயே இடம் ரிசர்வ் செய்திருக்கிறீர்கள் போல...!

      நீக்கு
    2. ஆமாம் ஸ்ரீராம்!!! ஹா ஹா ஹாஹா...இங்கேயே...

      கீதா

      நீக்கு
  11. தேர்தல் ஓட்டு போடும் விவரிப்பு முன்பு கொஞ்சம் வாசித்த நினைவு. குறிப்பாக பாஸ், நலிந்தவர் பற்றிச் சொன்னது...ப்ளஸ் செல்லங்கள் பற்றி சொன்னது...

    இன்று முழுதும் வாசித்து ரசித்தேன் ஸ்ரீராம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  12. குண்டூசி கோபால் பற்றி எங்கேயோ படித்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு வேளை விகேராமசாகி காமெடியோ.. ஏலே குண்டூசி கோவாலு..

      நீக்கு
    2. ஒருவேளை நீங்கள் இந்துநேசனோடு குழப்பிக் கொள்கிறீர்களோ?  இவர் குண்டூசி பத்திரிகை நடத்தியவர்.

      நீக்கு
  13. அனைவருக்கும் காலை வணக்கம். கதம்பம் ஸ்வாரஸ்யம்தான், இருந்தாலும் நீங்கள் என்னதான் பில்ட் அப் கொடுத்தாலும் எங்கே செல்கிறீர்கள் என்பது உள்ளங்கை குறுஞ்செய்தியாக விளங்கி விட்டது. ஹே! ஹே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பானு அக்கா...  வாங்க...  பிளாக்கைத் திறந்ததுமே சட்டென ஊசி படம் வேறு தெரிகிறது..  என்ன செய்ய!  போனாப்போகுது போங்க...!!!

      நீக்கு
    2. //பிளாக்கைத் திறந்ததுமே சட்டென ஊசி படம் வேறு தெரிகிறது..  என்ன செய்ய! // இது வேறயா? படத்தை பார்க்கும் முன்ப கண்டு பிடித்து விட்டோமாக்கம்.

      நீக்கு
    3. சரிதான்...   தொப்பியைத் தூங்குகிறேன்!

      நீக்கு
  14. வங்கி லாக்கரில் வைக்கப்படும் பொருள்களுக்கு வங்கிகள் பொருப்பேற்பது நடைமுறை சாத்தியம் இல்லாததுதான்.
    கோவில்களில் நம்முடைய வாகனங்களை,நிறுத்தும் பொழுது ரசீது புக்கை தூக்கிக் கொண்டு ஒருவர் ஓடி வருவார்,நம்மிடம் பணம் பெற்றுக் கொண்டு ரசீது ஒன்று கொடுப்பார். அதில் வாகனங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு நாங்கள் பொருப்பேற்க முடியாது என்று அச்சிடப் பட்டிருக்கும். அந்த வண்டிகளுக்கு நிழலும் கிடையாது. பின் எதற்காக வசூல் செய்கிறார்கள்? என்று தோன்றும். ஆனால் பணம் கொடுக்காமல் இருக்க முடியாது. கிட்டத்தட்ட அப்படித்தான் இல்லையா? பாதுகாப்பு என்று நினைக்கிறோம், ஆனால் முழுமையாக இல்லை:(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான்.  சில கடைகளில் பொருள்கள் வாங்கும்போது "விற்பனை செய்யப்படபொருள்கள் திரும்ப வாங்கப்பட்ட மாட்டாது என்று சின்னதாக கீழே அச்சடித்திருப்பார்கள்.  அப்படிப் போடுவது செல்லாது என்றும் சொல்வார்கள்.  அது போலதான்.

      நீக்கு
    2. பானுக்கா, உங்கள் உதாரணம் செம. என்னைப் போன்றவர்கள் புரிந்து கொள்ள உதவும்!!!

      கீதா

      நீக்கு
  15. குண்டூசி தகவல்கக்ள் சுவாரசியம்.

    எஸ் ஏ பி பற்றியதும் வெகு சுவாரசியம். ஜீவி அண்ணா வந்து என்ன சொல்கிறார் என்று பார்க்க ஆவல்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குண்டூசி கோபால் சாதனையாளர்.  கேள்வி பதில்களுக்கு அவரே முன்னோடி!

      நீக்கு
  16. நகைச்சுவைத் துணுக்குகள் ரசித்தேன்.
    மௌனம் ஒரு பாஷை நெட்டில் தேடினேன். கதைச் சுருக்கம் கிடைத்தது.

    விஜய் டிவியில் 2 மணி நேரக் குறும்படமாக வந்ததாகவும் தகவல் அறிகிறேன்.

    கதைச் சுருக்கம் வாசித்த போது என் மாமியார் சொன்னது நினைவில் வந்தது. என் மாமியார் கடைசி குழந்தையைப் பெற்றதே தனது 40 ஐ நெருங்கும் போது. அதே சமயம் அவரது மாமியாரும் குழந்தை கருவுற்றிருந்தாராம். ஆனால் 7 மாதத்திலேயே குழந்தை மேலேறி இறந்துவிட்டார் என்று சொல்லியிருக்கிறார். இதை எல்லாம் மனதில் கொண்டு எழுதத் தொடங்கிய கதை ஹிஹிஹி..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கதைச் சுருக்கம் வாசித்த போது //

      ஸோ..  வல்லிம்மா சரியாய்த்தான் சொல்லி இருக்கிறார் இல்லையா?

      நீக்கு
    2. ஆமாம் ஸ்ரீராம்...வல்லிம்மாவின் வாசிப்பு அனுபவம் செம....நினைவும்...அதே போல இங்கு பானுக்கா, கீதாக்கா, ஜீவி அண்ணா எல்லோருமே வாசிப்புக் கில்லாடிகள் உங்களையும் சேர்த்துத்தான்..

      கீதா

      நீக்கு
  17. வங்கி லாக்கர் விவரங்கள் கொஞ்சம் தெரியும் இங்கு விரிவாகத் தெரிந்து கொண்டேன்.

    இன்ஷுரன்ஸ் என்பது கொஞ்சம் கஷ்டம்தான் என்று தோன்றுகிறது

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செய்ய மாட்டார்கள்.  உள்ளே என்னவென்றே தெரியாமல் எப்படி இன்ஷ்யூர் செய்வார்கள்!

      நீக்கு
  18. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...
    எங்கெங்கும் நலம் வாழ்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் துரை செல்வராஜூ ஸார்...   வாங்க...   அங்கே நீங்கள்தடுப்பூசி போட்டுக் கொண்டாச்சா?  பரிவை குமார் போட்டுக்கொண்டேன் என்று எழுதி இருந்தார்.

      நீக்கு
    2. இன்னும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வில்லை.. உணவகம் சார்ந்த பணிகளில் உள்ளவர்களுக்கு வரிசைப்படி போட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.. இன்னும் ஒரு வாரம் ஆகலாம்...

      தங்கள் அன்பினுக்கு நன்றி..

      நீக்கு
    3. அங்கு சீன தடுப்பூசிதான் என்றும் குமார் சொல்லி இருந்தார்.  விரைவில் போட்டுக்கொள்ளுங்கள்.

      நீக்கு
  19. இருபத்தைந்து வருடங்கள் ஆகி விட்டன குமுதம் படித்து.. குமுதம் பற்றிய அலசல் அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்போதைய குமுத்துக்கும், இப்போதைய குமுதத்துக்கும் அறுநூறு வித்தியாசங்கள்!

      நீக்கு
  20. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இணைந்து பிரார்த்திப்போம்.  வாங்க கமலா அக்கா...   வணக்கம்.

      நீக்கு
  21. வணக்கம் சகோதரரே

    இந்த வார கதம்பம் அருமை. முதல் பகுதி விறுவிறுப்பான க்ரைம் கதை போல அருமையாக இருந்தது. அந்த நிழற்படங்களும் அதை உறுதியாக்கின. நன்றாக எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

    கையில் பழங்கள் அடங்கிய பை என்றதும், உள்ளே பயங்கர ஆயுதங்கள் இருக்குமோ, எங்காவது கொள்ளை செய்யும் முயற்சியில் கதை நகர்கிறதோ, என்றெல்லாம் என்னை கற்பனை செய்ய வைத்தது.

    முதலிலிருந்தே பயங்கர பில்டப் தந்து, இறுதியில் இரண்டாவது ஊசி என்று முடித்திருப்பது சுவாரஸ்யமாக இருந்தது. இரண்டாவது ஊசியும் போட்டுக் கொண்டதற்கு சந்தோஷம். அந்த மருந்தின் தகவல்கள் அனைத்தையும் விரிவாக தந்தமைக்கும் நன்றிகள்.

    மற்றப் பகுதிகளும் நன்றாக உள்ளது. குமுதம் பற்றிய செய்திகள் படிப்பதற்கு
    சுவாரஸ்யமாக இருந்தன. குமுதம் பற்றிய விரிவான அலசல்களைப் படித்ததோடில்லாமல், அது சம்பந்தபட்ட மற்ற பதிவுகளையும் படித்து நான் எங்கோ பயணம் செய்து வந்ததில் இங்கு (எ.பிக்கு) வரவே தாமதமாகி விட்டது. மீண்டும் வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்பாடி..   உங்களிடமாவது சஸ்பென்ஸ் செல்லுபடியாயிருக்கிறதே!  நன்றி கமலா அக்கா.

      நீக்கு
  22. தடுப்பூசி மிஷன் செம...

    குண்டூசி கேள்விக்கு கேள்வி...!

    வங்கி லாக்கர் எதிர்பார்ப்பு அனைவருக்கும் உண்டு...

    பதிலளிநீக்கு
  23. அனைவருக்கும் முகம் மலர அன்பான காலை வணக்கங்கள் ! அனைவரும் நலமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் .

    இன்றைய கதம்ப பதிவு அருமை. நீங்கள் கூட்டமாக இருக்குமென்று சொல்லும் போதே யூகித்தேன், இரண்டாவது டோஸ் ஊசி போட செல்கிறீர்கள் என.

    குமுதம் படித்ததில்லை. எங்கள் வீட்டில் எப்பொழுதும் ஆனந்த விகடன் தான். அதுவும் இப்பொழுதெல்லாம் வாங்குவதில்லை. நகைச்சுவை பகுதி அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வானம்பாடி...   வணக்கம்.  இணைந்து பிரார்த்திப்போம்.

      நாங்கள் குமுதம், விகடன், இதயம், குங்குமம், சாவி, என்று எழலாம் வாசிப்போம்.  லைப்ரரி வரு இருந்தது.  அதை நாங்களே வேறு பார்த்துக் கொள்வோம்!

      நீக்கு
  24. கில்லர்ஜியின் மூத்த சகோதரர் சிறுநீரக செயலிழப்பால் இறந்து விட்டார் என்று தெரிவித்திருக்கிறார்.  அவர் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறப் பிரார்த்தனைகள்.  கில்லர் ஜி குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோதரர் கில்லர்ஜி அவர்களின் மூத்த சகோதரர் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.அவர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

      நீக்கு
    2. எங்கள் ஆழ்ந்த இரங்கல்கள். கில்லர்ஜி குடும்பத்தாரும் இதிலிருந்து மீண்டு வந்திட பிரார்த்தனைகள். ஆழ்ந்த அனுதாபங்கள்

      கீதா

      நீக்கு

    3. ஆழ்ந்த இரங்கல்கள். சகோதரர் குடும்பத்திற்கு ஆறுதலை தர இறைவனை வேண்டுகிறேன்.

      நீக்கு
  25. நெல்லை, கீதா அக்கா, ஜெயக்குமார் சந்திரசேகர் ஸார், ஜீவி ஸார் ஆகியோரை இன்னும் காணோமே...

    பதிலளிநீக்கு
  26. குமுதத்தைப் பற்றி மேம்போக்காவே தெரிந்தவர்கள் தாம் நிறையப் பேர்.
    எஸ்.ஏ.பி.யை ஒரு எழுத்தாளர், நாவலாசிரியர் என்ற கோணத்தில் இந்த தளத்தில் யாரும் அறிந்திலர் என்று இது வரை வாசித்த அளவில் தெரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான்.  மலர்கின்ற பருவத்திலே போன்ற சில கதைகளின் பெயர்கள் மனதில் நிற்கின்றன.

      நீக்கு
  27. அதனால் தான் எஸ்.ஏ.பி. என்றாலே குமுதத்தைப் பற்றி பேச ஆரபித்து விடுகின்றனர். ஆ.வி. என்றால் எஸ்.எஸ். வாசனையோ, பாலு ஸாரைப் பற்றியோ பேசுகிறார்களா என்ன? ஏன் இப்படி? சொல்லுங்கள், ஸ்ரீராம். எதைப் பற்றி நான் சொல்ல வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறூர்களோ அதைப் பற்றி மட்டும் சொல்ல முயற்சிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கட்டுப்பாடே கிடையாது ஜீவி ஸார்..   எது சொன்னாலும் உங்கள் அனுபவங்கள் எங்களுக்கு சுவாரஸ்யமாகவே இருக்கும்.

      நீக்கு
    2. குமுதம் என்றாலே எஸ் ஏ பி அவர்கள் மட்டும்தான் நினைவுக்கு வருவார். தன்னுடைய preferenceகளை குமுதத்தில் திணித்ததில்லை. நான் நாவல்களுக்கு விசிறி இல்லை என்பதால் அவரது நாவல்கள் பற்றிச் சொல்ல எனக்கு ஒன்றும் இல்லை.

      ஒவ்வொரு பத்திரிகைக்கும் ஒரு ஆன்மா இருக்கிறது. அதிலிருந்து விலகும்போது அது வாசகர்களை இழக்கிறது.

      நீக்கு
    3. அந்தக் கால நாவல்களை மறுபடி அதே சுவாரஸ்யத்தோடு இப்போது படிக்க முடியுமா என்று தெரியவில்லை.  சமீபத்தில் சோதித்தும் பார்க்கவில்லை.

      நீக்கு
  28. பிரபஞ்சன், ஜெயமோகன் இவர்களெல்லாம் வெகுஜன ரசனைக்கு ஒத்துவராதவர்கள். இவர்கள் பார்வைகளும் அப்படித் தான் இருக்கும்.
    உங்களுக்கும், எபி வாசகர்களுக்கும் ஒத்து வரக் கூடியவர் சுஜாதா. எஸ்.ஏ.பி. என்ற ஆற்றல் மிக்க தனி நபரின் அசாத்திய திறமைகள் பற்றி சுஜாதா என்ன சொல்லியிருக்கிறார் என்று தேடி வாசித்து எபி வாசகர்களிடம் பகிர்ந்து கொண்டால் அவர்களுக்குப் புரிந்து கொள்ளக் கூடிய அளவுக்காவது அது இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எஸ் ஏ பி பற்றி சுஜாதா தனிப்பட்டு ஏதும் சொல்லி இருக்கிறாரா என்று தெரியாது. 

      நீக்கு
  29. குமுதம் பற்றி
    எஸ்.ஏ.பி. பற்றி
    விகடன் பற்றி
    எஸ்.எஸ்.வாசன் பற்றி
    பாலு ஸார் பற்றி

    --- என்று எழுத ஆரம்பித்தால் ஒவ்வொன்றும் vast subject.
    கட்டுரைக்கான தலைப்புகள். எழுதினாலும் எத்தனை பேருக்கு இதையெல்லாம் ஆழ்ந்து வாசிக்க ஆர்வம் இருக்கும் என்று சொல்ல முடியாது.
    பதிவுலகம் என்பது எல்லா விஷயங்களையும் மேலோட்டமாக பார்க்க மட்டுமே ஆர்வம் கொண்டுள்ள உலகம். எவ்வளவு எடுத்துரைத்தாலும் புதிதாக ஒன்றைத் தெரிந்து கொண்டோம் என்றில்லாமல் தான் கொண்ட கருத்தே சரி என்று 'உன் கருத்து உனக்கு என் கருத்து எனக்கு'
    பிரிந்து போகிற உலகம்.
    'எங்கள் வீட்டில் குமுதம் படிக்க தடா' என்று அதையே பெருமை பொங்கச் சொல்லிக் கொள்வோரே அதிகம்.
    இவர்கள் பெரியவர்கள் ஆனதும் அப்படியான கட்டுப்பாடுகளைப் பற்றி என்ன கருத்து கொண்டார்கள், அப்படியென்ன வாசிக்கக் கூடாத விஷயங்கள் அதில் இருந்தது என்று யாராவது தங்கள் இளமைப் பருவம் ஆராய்ந்தார்களா தெரியாது. இப்படி சுய ஆய்வுகளே கொள்ளாதவர்களால் பொது விஷயங்களை எப்படி ஆய்வுக்கு உட்படுத்த முடியும் என்று தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை.  உண்மை.  அவசர யுகம்.  அதுவும் வலையுலகத்தில் ஆழ்ந்து படிக்கிறோமா என்பதே தெரியாது.  அவரவர் அவசரங்களுக்கு நடுவில் சற்று எட்டிப்பார்க்கும் இடம்.  பார்க் மாதிரி, பீச் மாதிரி  ஒரு ரிலாக்ஸேஷன் சென்டர். 

      நீங்கள் கொடுத்துள்ள தலைப்புகளிலேயே எழுதினால் வியாழனில் இடம் ஒதுக்கி  ஒவ்வொன்றாக வெளியிடுகிறேன்.

      நீக்கு
    2. //'எங்கள் வீட்டில் குமுதம் படிக்க தடா' என்று அதையே பெருமை பொங்கச் சொல்லிக் கொள்வோரே அதிகம்.// எனக்கு அப்படியெல்லாம் கட்டுபாடு எதுவும் விதிக்கப்படவில்லை. ஆனால் சில நாட்கள் திட்டு வாங்கியிருக்கிறேன். அன்றைக்கு ஏதாவது ஏடாகூட கதை வந்திருக்கலாம். அவை அப்போது புரியவும் இல்லை. என்னுடைய டீன் ஏஜில் 'முதலிரவு பிரச்சனைகள்' என்று ஒரு நல்ல மருத்துவ ஆலோசனை பகுதி வந்தது. அதையெல்லாம் படிக்க விடுவார்களா என்ன?

      நீக்கு
    3. //அப்படியென்ன வாசிக்கக் கூடாத விஷயங்கள் அதில் இருந்தது என்று யாராவது தங்கள் இளமைப் பருவம் ஆராய்ந்தார்களா தெரியாது//

      வாழ்க்கையில் ஆன்மீகம், கல்வி, கிளர்ச்சி ஊட்டும் சமாச்சாரங்கள் என்று பலதும் இருக்கும். அந்த அந்த வயதுக்கு ஏற்றபடி மனித மனம் இருக்க நினைப்பது இயல்பு. ஆனால் அந்தச் சுழலில் சுற்றிக்கொள்ளக்கூடாதே என்று கவலைப்படுவது பெரியவர்களின் குணம். அதனால்தான், பெண்ணைத் தொட்டுப் பேசாதே, பெண்கள்டயே பேசிக்கிட்டிருக்காதே, அவன் கூடச் சேராதே, கோவிலுக்குப் போ என்றெல்லாம் கட்டுப்பாடுகள் போடுகிறார்கள்.

      உண்மையில் யோசித்தால் கவர்ச்சி உடையில் என்ன இருக்கிறது, மனதுதானே காரணம் என்று பெரிய வயதில் தோன்றும். ஆனால் இளமை வயதில் பெரியவர்கள், சிறியவர்களைக் கொஞ்சம் கட்டுப்படுத்தி வைப்பார்கள்.

      பெரும்பாலும், 50 வயது ஆனாலும், அப்பாவிடம், 'அந்த மாதிரி மலையாளப்படம்' பார்த்தேன், இதோ பாருங்கப்பா, இந்த நடிகை ரொம்ப கவர்ச்சி டிரெஸ் போட்டிருக்கும் படம் என்று பகிர்ந்துகொள்கின்ற மனது யாருக்கும் இருக்காது என்றே நினைக்கிறேன். அதேபோல, தன் குழந்தைகளிடமும் ரொம்பவே ஓபனாக இருக்கமாட்டாங்க என்றே நினைக்கிறேன். (இந்தியாவில்)

      நீக்கு
  30. எஸ்.ஏ.பி.யின் நாவல்களில் நான் ஒரே மூச்சாகப் படித்தது "காதலெனும் தீவினிலே" என்னும் நாவல். சிநேகிதி ஒருத்தியின் வீட்டுக்குப் போயிருந்தப்போ அங்கே பொழுது போக்கக் கொடுத்தாங்க! நான் அதிலே ஆழ்ந்துவிட்டேன். மற்றபடி எஸ்.ஏ.பி.யின் ரசிகைனு சொல்ல முடியாது. பி.எம்.கண்ணன் என்றொருவர் இன்னும் அந்தக் காலக்குமுதத்தில் எழுதி இருக்கார். அவர் நாவல்கள் எல்லாம் இன்னமும் சுவாரசியமாகவும் நன்றாகவும் இருக்கும். பி.எஸ்.ராமையா கூட குமுதத்தில் எழுதி இருக்கார்னு நினைவு. இவை எல்லாம் அந்தக் காலக் குமுத பைன்டிங்கில் படிச்சேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எஸ் ஏ பி, பி எஸ் ராமையா, புனிதன் போன்றோர் எழுதிய பல பைண்டிங் புத்தகங்கள் வீட்டிலிருந்து அபேஸ் ஆகி இருக்கின்றன.  எங்கள் வீட்டில் சிறுவயதில் நான் பார்த்த பல புத்தகங்கள் இப்போது மிஸ்ஸிங்.

      நீக்கு
  31. எஸ்.ஏ.பி.அவர்களின் ஆன்மிக அறிவைப் பற்றியும் அவருடைய ஆன்மிகத் தேடல் பற்றியும் ரா.கி.ரங்கராஜன் எழுதிப் படிச்சிருக்கேன். அவரும் சரி,ஜ.ரா.சு. வும் சரி எஸ்.ஏ.பி.யை "ஆசிரியர்" என்றே குறிப்பிட்டிருப்பார்கள். இருவருக்கும் அவர் மேல் அளவு கடந்த மரியாது.
    ஆனால் பொது ஜன மனப்பான்மையில் எஸ்.ஏ.பி. அவர்கள் குமுதம் பத்திரிகையைக் கவர்ச்சிகரமாகவும், அந்தரங்கங்களை வெளிப்படுத்தியும் கொண்டு வருவதால் எஸ்.ஏ.பி. தன் ஆன்மிகத் தேடல்களையும், அறிவையும் பயன்படுத்தி எழுதினால் முன்னால் சொன்னதுக்கு/ செய்யும் பரிகாரம் என்றே பேசிக்கொள்வார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மரியாதை! "மரியாது!" என்று வந்திருக்கு.

      நீக்கு
    2. ஓஹோ..    அவரைப்பற்றி வாசகர்களாக நாம் அறிவதற்கும், உடன் இருந்த எழுத்தாளர்கள் அறிவதற்கும் வேறுபாடு இருக்கும்.

      நீக்கு
    3. ஆமாம், எங்க வீட்டிலேயே எஸ்.ஏ.பி.க்கு ஆதரவாளர்களை விட எதிர்ப்பாளர்கள் அதிகம் உண்டு. அவர் பத்திரிகை நடத்தும் விதத்தைக் கேலி செய்தவர்கள் உண்டு. மற்றபடி அவர் எழுத்துக்களை நான் ஆராய்ச்சிகள் எல்லாம் செய்து அவரைப் பற்றி எழுதி முனைவர் பட்டமா வாங்கப் போறேன்! எஸ்.ஏ.பி.யின் ஆன்மிகமும், பக்தியும் பெரிதும் கேலி செய்யப்பட்டது என்பது வரை நன்றாகத் தெரியும். நடிகைகள் பற்றி எழுதித் தன் ஆவலைத் தணித்துக் கொள்வதற்குப் பரிகாரமாகவே அவர் ஆன்மிக ஈடுபாடு கொண்டு இருந்தார் என்பவர்களும் உண்டு. மற்றபடி அவர் கதைகளோ/நாவல்களோ/ ரா.கி.ர. கதைகளோ/நாவல்களோ நான் கதை என்ற அளவைத் தாண்டி ரசித்தது இல்லை. எனினும் ஒரு சில மனதை விட்டு அகலாமல் இருக்கிறது. அப்படி இருப்பதில் எஸ்.ஏ.பியின் காதலெனும் தீவினிலே! ரா.கி.ர. எழுதின ஒரு சிறுகதை. முன்னரே சொல்லி இருக்கேன் ஒரு ஜட்ஜின் மனைவிக்கு நேர்ந்தது பற்றியும், அந்த ஜட்ஜ் கொண்ட சந்தேகம் பற்றியும் பின்னர் அது தெளிந்த விதம் பற்றியும் அதை மனைவியிடம் அவர் பகிர்ந்து கொள்ள மனைவி ஒரேயடியாக விலகிவிடுகிறாள். மனதாலும்/உடலாலும்.

      நீக்கு
    4. நான் எஸ்ஏபி தான் தமிழ்வாணன் என்று ரொம்ப நாள் நினைத்துக் கொண்டிருந்தேன்.

      ஜராசு தான் புனிதன் இல்லையோ?

      நீக்கு
    5. //ஜராசு தான் புனிதன் இல்லையோ?// கெட்டது குடி. ஜ.ரா.சு. என்பவர் பாக்கியம் ராமசாமி என்ற பெயரில் கதைகள் எழுதியவர். புனிதன் அவர்களின் இயற் பெயர் தெரியவில்லை.

      நீக்கு
    6. புனிதனின் இயற்பெயர் சண்முகசுந்தரம்.  அவர் எழுத்தாளராவதற்கு முக்கிய காரணம் தமிழ்வாணன்.  சுந்தரபாகவதர் என்கிற பெயரில் எழுதியவரும் புனிதன்தான்.

      https://tinyurl.com/ndanhpeb

      நீக்கு
  32. சீக்ரெட் மிஷன் ரொம்பவும் அருமை! அட்டகாசமாக எழுதியிருக்கிறீர்கள்! அதென்ன 0.5?
    குமுதம் பற்றிய தகவல்கள் அனைத்தும் மிக சுவாரஸ்யமாக இருந்தன!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அதென்ன 0.5?//

      நன்றி மனோ சாமிநாதன் மேடம்...    0.5 என்பது மருந்தின் டோஸ்!

      நீக்கு
  33. இரண்டாவது டோஸ் ஊசியை ரகசியமாகப் போட்டுக் கொண்டதுக்கு வாழ்த்துகள். நல்லபடியாக உடல்நலத்துடன் இருக்கப் பிரார்த்தனைகள். அட்டகாசமான எழுத்து! இங்கே ஒரு பாட்டில் கோவிஷீல்ட் ஒருத்தருக்கு மட்டும் தான் என நினைக்கிறேன். ஆனால் நான் உள்ளே போயெல்லாம் பார்க்கலை. படி ஏறணும் என்பதால் என்னை இருந்த இடத்திலேயே உட்காரச் சொல்லிட்டு அவங்க வந்து ஊசி போட்டுட்டுப் போனாங்க! :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு பாட்டில் ஒருவருக்கு என்று இருக்காது.  அதுவும் இதே மாதிரி பத்துபேருக்கு போடுவது போலதான் இருக்கும் என்று நினைக்கிறேன்.  பாராட்டுகளுக்கு நன்றி கீதா அக்கா.

      நீக்கு
  34. ஸ்ரீராம், என்னுடைய மடிக்கணினியில் ஏகப்பட்ட hardware குழப்பங்கள். தட்டச்சு செய்ய முடியவில்லை. அதனால் கைப்பேசியில் தட்டுத் தடுமாறி தட்டச்சு செய்து கொண்டிருக்கிறேன். இந்த மாதிரியான பதிவுகளில் வெளிப்படும் உங்கள் ஆர்வம் புரிகிறது. இளையோர் மத்தியில் இந்த மாதிரியான எழுத்து சம்பந்தப்பட ஆர்வங்களை வளர்ந்தோங்கச் செய்ய தங்களான உதவிகளைச் செய்ய வேண்டியது அந்தத் துறை பற்றித் தெரிந்திருப்போரின் கடமை என்றே உணர்கிறேன்.
    அதனால் நீங்கள் வேண்டுகிற விஷயங்களில் எபியில் அரைப்பக்க அளவில் கட்டுரைகளாக சுவையாக எழுதிக் கொடுக்க நான் தயார். அவற்றை வியாழக்கிழமை போன்ற பொருத்தமான நாட்களில் நீங்கள் வெளியிடலாம். உங்கள் ஆசிரியர் குழுவில் யோசித்துச் சொல்லுங்கள்.
    பொறுமையுடன் என் எண்ணங்களை வாசித்தோருக்கு நண்றி.

    மிக்க அன்புடன்,
    ஜீவி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஜீவி ஸார்.  மேலேயே இதற்கு சரி என்று சம்மதம் சொல்லி இருக்கிறேன் - நன்றியுடன்.

      நீக்கு
  35. நீங்க ஓட்டளித்தது பற்றி எழுதி இருப்பதைப் பகிர்ந்திருப்பது முன்னரும் படிச்சிருக்கேன். நினைவில் இருக்கு. நகைச்சுவைத் துணுக்குகள் ஏற்கெனவே படிச்சிருந்தாலும் இந்த ஏணி வைச்சு ஏறி இறங்குவது ஒரு பாட்டி சொல்வதாகவும் வந்திருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  அது ஆறேழு வருடங்களுக்கு முன்னர்.  

      இதோ இரண்டு நாட்களில் இந்த எலெக்ஷன் ரிசல்ட் வரப்போகிறது!

      நீக்கு
  36. கில்லர்ஜியின் மூத்த சகோதரரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
    அவர் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  37. என்னுடைய வாசிப்பு அனுபவங்கள் பற்றி ஒரு பதிவு ஆரம்பித்து, அது பாதியில் நிற்கிறது. அதில் எஸ்.ஏ.பி. கால குமுதத்திற்கு தனி இடம் உண்டு. எஸ்.ஏ.பி.யின் கதைகளில் நான் படித்த முதல் கதை 'மலர்கின்ற பருவத்திலே'.  
    எஸ்.ஏ.பி., சாவி இரண்டு பேருமே நல்ல பத்திரிகையாளர்கள். கிட்டத்தட்ட ஒரே பார்முலாவை பின்பற்றினார்கள். கொஞ்சம் ஆன்மிகம், கொஞ்சம் அரசியல், கொஞ்சம் சினிமா, என்று கலந்து ஒரு முழுமையான ஜனரஞ்சக பத்திரிகை நடத்தி வெற்றி கண்டார் எஸ்.ஏ.பி. சாவிக்கு அது ஏனோ சாத்தியமாகவில்லை. சாவி தன்னை கலைஞர் அபிமானி என்று காட்டிக் கொண்டார். எஸ். ஏ.பி. என்னதான் தீவிர காங்கிரஸ் அபிமானியாக இருந்தாலும் அது தலையங்கத்திலும், சில சமயம் அரசு கேள்வி,பதில்களிலும் மட்டும் வெளிப்படும். 

    குமுதத்தின் திரைப்பட விமர்சனங்கள் நம்பிக்கைக்கு உரியவை. குமுதத்தின் இன்னொரு ஸ்பெஷல் அதற்கு வரும் வாசகர் கடிதங்கள். பெரும்பாலும் பாராட்டு கடிதங்களையே மற்ற பத்திரிகைகள் பிரசுரிக்க,  "ஆரம்பித்து விட்டீரா உம் அரைவேக்காட்டுத் தனத்தை" என்பது போன்ற வசவுகளை குமுதம்தான் பிரசுரித்தது. இது anti publicity ஆகக்கூட இருக்கலாம்.   
    ஆ.வி.யும் சாவியும் அறிமுகப் படுத்தி, வளர்த்து விட்டது போல் குமுதம் எழுத்தாளர்களை அறிமுகப் படுத்தியதாக கூற முடியாது. சுஜாதாவுக்கு அதிக ஆதரவு தந்தது சாவிதான். அவர் எழுதிய லாண்ட்ரி கணக்கை கூட பெருமையாக பிரசுரம் செய்தது சாவி. பாலகுமாரன், சுப்பிரமணிய ராஜு, மாலன்,அனுராதா ரமணன், கீதா பென்னட், சிவசங்கரி போன்ற பல எழுத்தாளர்களுக்கு சாவி கொடுத்த அபரிமிதமான ஆதரவை குமுதம் தந்ததாக தெரியவில்லை. மற்ற பத்திரிகைகள் வளர்த்து விட்டவர்களின் பிராபல்யத்தை குமுதம் பயன்படுத்திக் கொண்டது.     
    ராஜேஷ் குமாரை அறிமு கம் செய்தது குமுதம்தான்.  
    'கெட்டாலும் ஆண் மக்கள்' என்னும் சர்ச்சைக்குரிய சிறு கதையை பாலகுமாரன் குமுதத்திலேதான் எழுதினார். அதே போல் ஆ.வி.யால் வளர்ந்த சிவசங்கரியையும் இந்துமதியையும் இணைந்து இரண்டு பேர் என்று ஒரு கதை எழுத வைத்து, 'இரண்டு விபசாரிகள் சேர்ந்து ஒரு கதை எழுதினால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது' என்று பேச்சு வாங்க வைத்தது. சர்ச்சைகள் குமுதத்திற்கு சர்க்கரைக் கட்டி.   
    வெவ்வேறு துறையில் இருக்கும் இரண்டு பிரபலங்களை சந்திக்க வைத்து 'சந்திக்கிறார்கள்' என்னும் சுவாரஸ்யமான பகுதி வெளியாகும். 
    தமிழ் பத்திரிகையுலகில் கிசுகிசுவை அறிமுகப் படுத்தியது, சிறுகதையை ஒரு பக்க கதை, அரை பக்க கதை என்றெல்லாம் சிதைத்ததும்  குமுதம்தான். 

    இப்படியெல்லாம் இருந்தாலும் எஸ்.ஏ.பி. இருந்தவரை குமுதம் பிடித்தது. அதற்குப் பிறகு சுஜாதா, மாலன் போன்றவர்கள் நன்றாக பணியாற்றினார்கள். சுஜாதா காலத்தில் முதல் முறையாக குமுதத்தில் வேலை நிறுத்தம் வந்தது. அதில் சுஜாதா தொழிலாளர்கள் பக்கம் சாய்ந்ததால் வெளியேற நேரிட்டது. 
    மாலனின் விருப்பத்திற்கு மாறாக நடிகையின் கதை என்னும் மஞ்சள் பத்திரிகை சமாச்சாரங்கள் வெளியாக, அவரும் வெளியேறினார், நானும் குமுதம் வாங்குவதை நிறுத்தி விட்டேன். 
    என்னுடைய ஆதர்ச எழுத்தாளர் திரு. ரா.கி. ரங்கராஜன் என்று இங்கே சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ரிஷபனுக்கும் அவர்தான் மானசீக குருவாம்.  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விரிவான விமர்சனம்.  உங்கள் வாசிப்பனுபவம் பற்றியும் நினைவுத்திறன் பற்றியும் நன்றாய்த் தெரியும்.  மறுபடியும் அது நிரூபணமாயிருக்கிறது.  நன்றி பானு அக்கா.

      நீக்கு
    2. முன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னர் இணையத்தில் எழுத ஆரம்பித்த புதுசில் இந்த வாசிப்பனுபவம் பற்றி எழுதச் சொல்லி ஒரு தொடர் பதிவு வந்து நானும் எழுதி இருக்கேன். 10 அல்லது 12 ஆண்டுகள் முன்னால் இருக்கலாம்.

      நீக்கு
    3. பெரிய யெஸ்ஸு பாவெ கருத்துக்கு.

      அப்பா அப்பப்பா குமுதம் அந்நாளில்
      டப்பா பிறபத்தி ரிகை.

      நீக்கு
  38. ரா.கி. ரங்கராஜன் எழுதிய  'கையில்லா பொம்மை' நான் படித்திருக்கிறேன். சுமார்தான். அவருடைய மிகச் சிறந்த படைப்பான 'நான் கிருஷ்ண தேவராயன்' நாவலை அவர் விகடனில்தான் எழுதினார். 
    சுஜாதாவின் முதல் நாவலான 'நைலான் கயிறு' குமுதத்தில்தான் வந்தது. 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'கையில்லாத பொம்மை' நானும் படித்திருக்கிறேன்.  எங்கள் வீட்டு கலெக்ஷனில் இருந்த புத்தகம்.  இப்போது இல்லை.  காக்கா தூக்கிட்டுப் போயிடுச்சு!

      நீக்கு
    2. நைலான் கயிறு முதலில் குமுதத்தில் சிறுகதையாக வந்து பின்னர் நெடுங்கதையாகப் பரிமளிக்க ஆரம்பித்தது.

      நீக்கு
    3. கையில்லாத பொம்மை கதையை பிரபுவை வைத்து படமாக்கப் போகிறார்கள் என்று செய்தி வந்தது.

      நீக்கு
    4. ஆக்கவில்லை என்று நினைக்கிறேன்.  அதே போல அம்மா வந்தாள் கதையை கேபி படமாக்கப்போவதாக சுஜாதா சொல்லி இருந்தார்.  அதுவும் நடக்கவில்லை என்று நினைக்கிறேன்.

      நீக்கு
  39. உலகமே தடுப்பூசி, கோவிட் எனப் பீதியில் இருக்கையில் எதைப் பற்றிச் சொல்ல வருகிறீர்கள் என ஆரம்பத்திலேயே தெரிந்து விட்டது:). கோவாக்ஸின் குப்பியில் பத்து பேருக்கான மருந்து என நினைக்கிறேன். பத்து பேர் சேர்ந்த பிறகுதான் இங்கே குப்பியைத் திறந்து அழைக்க ஆரம்பிக்கிறார்கள். அதுவரை காத்திருக்க வேண்டும். இரண்டாவது டோஸுக்கான தட்டுப்பாடு இங்கும் உள்ளது.

    குமுதம் குறித்த அலசல் மற்றும் தொகுப்பு சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  நானே சொல்லி இருக்கிறேனே..  பத்து பேருக்கான மருந்து கோவாக்சின்.  ஆனால் அது வெளியில் எடுத்ததும் நான்கு மணிநேரம்தான் வெளி ஐஸ் பேக்கில் இருக்கலாமாம்.
      நன்றி ராமலக்ஷ்மி,

      நீக்கு
  40. ஜெயகாந்தனின் மௌனம் ஒரு பாஷை படித்ததில்லை. சமீபத்தில் ஆடியோ புக்காக கேட்டேன். 

    பதிலளிநீக்கு
  41. ஒரு தடுப்பூசிக்கு இவ்ளோ அக்கப்போரா :)) ஆனாலும் சீக்ரெட் மிஷன் அனுபவம் சுவையா எழுதியிருக்கீங்க .ஆமா அங்கே முதலில் டாக்டர்ஸ் நர்ஸ்களுக்கும் மற்றும் நெக்ஸ்ட்  வயதுவாரியா அல்லது உடல்நல குறைபாடுகள் வாரியா தடுப்பூசி போடவில்லையா ???? இங்கே அப்படிதான் முன்னுரிமையுண்டு .இப்போ 42 வயதுக்கு மேற்பட்டோருக்கு போடறாங்க 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிப்ரவரி முதல் அப்படித்தானே போட்டுக்கிட்டு வர்ராங்க!  ஆனாலும் தட்டுப்பாடு தலைவிரிச்சாடுது!  வாங்க ஏஞ்சல்!  நன்றி.

      நீக்கு
  42. அஆவ் !!! குமுதத்தை பற்றி விரிவா  அலசி துவைத்து போட்ட பகிர்வு கூடவே பானு அக்காவின் மினி பதிவு பின்னூட்டம் சூப்பரா இருந்தது வாசிக்கா 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்..   பானு அக்கா இதில் எல்லாம் ஸ்பெஷலிஸ்ட்.

      நீக்கு
    2. எல்லோருக்கும் புகழ்ச்சியை ஏற்றுக் கொண்டு ரியாக்ட் பண்ணத் தெரியாது. நான் இங்கே அசடு வழிவது நல்ல வேளை உங்களுக்குத் தெரியாது. ஹி ஹி. நன்றி. நன்றி.

      நீக்கு
  43. இங்கே வெளிநாட்டில் லாக்கருக்கு வங்கி பொறுப்புகிடையாது  என்பது உண்மைதான் .சமீபத்தில் ஒரு சீக்கிய பாட்டி பற்றி நியூஸ்பேப்பரில் படிச்சேன் பெரிய பெட்டியில் குடும்ப நகைகளை போட்டு  வச்சிருந்தாங்க அது காணோம்னு படிச்சேன் 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடப்பாவமே...  ஒரே நாளில் ஏழையாகி இருப்பாங்க!

      நீக்கு
    2. எல்லாத்தையும் லாக்கரில் வைக்க பாட்டி ஏமாளியில்லை :) அவர் பாதிதான் அங்கே வச்சிருப்பார்  சில ரகசியங்கள் அது இங்குள்ள  சில ஆசிய  மக்களுக்கு மட்டுமே அறிந்த விஷயம் எங்கே ஒளிக்கிறாங்கன்னு தெரிஞ்சு இப்போ கள்வர் மெட்டல் டிடக்டரும் யூஸ் பண்ராங்க 

      நீக்கு
  44. ஹிஹி குமுதம்லாம்  படிச்சதில்லை ஆ..வி படிச்சதுண்டு அதையும் ட்ரெயினில் போகும்போது வாங்கி படிச்சிட்டு அங்கேயே வச்சிடுவோம்ல ..ஜூ .வி நக்கீரன் மட்டும் ஒளிச்சி படிச்சிருக்கேன் .இப்போ எல்லாத்தையும் படிக்க தடையில்லை ஆனா புக்தான் இங்கில்லை :) அதோட படிக்க நேரமுமில்லை .என்னத்தை சொல்ல 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆ வி யா இருந்தாலும் நீங்க சொல்ற காலம் வேற..    பழைய குமுதம், கல்கண்டு ஆ வி வேற...!

      நீக்கு
    2. நான் சொல்வது அறுபது எழுபது காலங்கள்!

      நீக்கு
  45. காலைலயே படித்துவிட்டேன். கரண்டி பிடிக்கும் வேலை மற்றும் என்னுடைய மற்ற வேலைகளில் ரொம்பவே பிஸியாயிட்டேன்.

    முதல் இரண்டு வரிகளிலேயே, இது தடுப்பூசியைப் பற்றியது என்று தெளிவாகத் தெரிந்துவிட்டது.

    கேரளாவில் வேக்ஸின் வீணாக்கப்படவில்லை, தமிழகத்தில் மிக அதிகம் வீணாக்கினாங்க என்று படித்தேன். இதற்கு முதல் காரணம், இதனை எதிர்த்த எதிர்கட்சிகள் என்று நான் புரிந்துகொள்கிறேன்.

    பெங்களூர்ல நம்ம ஊரைவிட தடுப்பூசியின் முக்கியத்துவம் தெரிகின்றது. அதனால் பெரும்பாலும் வீணாவதில்லை என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன திடீரென்று கரண்டி பிடிக்கும் வேலை?  வீணானதற்கு காரணம் எதிர்க்கட்சிகள் என்னசெய்யும்?  அபுரி!

      நீக்கு
    2. ஆரம்பத்தில் இந்திய வேக்ஸின்களைப் பற்றி எதிர்கட்சி அரசியல்வாதிகள் குறை சொன்னதையும், அதனால் ஆரம்பத்தில் தடுப்பூசி போட ஆளே இல்லாத நிலைமையும் உங்களுக்குத் தெரிந்திருக்கும் இல்லையா?

      கரண்டி பிடிக்கும் வேலை - கிச்சன் இன்சார்ஜ் ஹாஹா

      நீக்கு
  46. நம்ம ஊர்ல தடுப்பூசியைப்பற்றி புரிந்துகொள்ளவில்லை என்று நினைக்கிறேன். நூறு சதவிகிதம் பொட்டியைக் கட்டவேண்டியது என்று எடுத்துக்கொண்டால், தடுப்பூசி அதனை 40 சதவிகிதம் என்று குறைக்கும். அதனால் மாஸ்க், மற்ற முன்னெச்சரிக்கைகளில் நாம் காம்ப்ரமைஸ் செய்துகொள்ளக்கூடாது.

    ஸ்ரீராம் கொரியரில் பிரேமா விலாஸ் முந்திரி அல்வா அனுப்பினாலும், அந்த பாக்கெட்டை வாங்கி அங்கேயே வைத்துவிட்டு, இரண்டு நாட்கள் கழித்துத்தான் எடுத்துக்கணும். ஹாஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு வாரமாக எனக்குத் தோன்றுவது இப்போது கொரோனா பொய் எனும் கோஷம் மிகவும் குறைந்துள்ளது என்று.  கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருக்கிறார்கள்.  ஆனால் கொரோனா அவர்களை ரொம்பக் கொடூரமாகப் பழி வாங்குகிறது.

      நீக்கு
  47. குமுதத்தைக் குறை சொல்பவர்கள் (அதாவது எஸ் ஏ பி காலம்) என்னைப் பொருத்தவரை நேர்மையான ஒபினியன் சொல்வதில்லை என்று நினைக்கிறேன்... இல்லை ஒருவேளை அவங்க 'Award Film'-அதாவது தியேட்டர்ல அங்கொன்றும் இங்கொன்றுமாக பத்து பேர் உட்கார்ந்து படம் பார்த்துக்கிட்டுருப்பாங்களே, மட்டும் பார்ப்பவங்களாக இருக்குமோ?

    குமுதம் நம் பொழுதுபோக்கு படிப்புக்கு முழு தீனி போட்டதுன்னு நினைக்கிறேன். இப்போ உள்ள குமுதத்தில், 'ஆண்டாளின் கதை' சிந்துபாத் தொடர்மாதிரி வெளியிடறாங்க. எஸ் ஏ பி கால குமுதத்துல மொத்தமே இதனை 1/4 பக்கம்கூட வெளியிட்டிருக்கமாட்டார்னு நான் அனுமானிக்கிறேன்.

    இப்பவும் 78-85ல் வந்த குமுதம், விகடன், கல்கி, துக்ளக் எனக்குக் கொடுத்தால், முதலில் குமுதம் முழுவதும் படிப்பேன். பிறகு துக்ளக் கேள்வி பதில். பிறகு விகடன் சில பகுதிகள், கல்கி-நேரம் கிடைக்கும்போது படித்துக்கலாம், ஓரிரண்டு பகுதிகளைத் தவிர..என்பது என்னுடைய preference.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் முதலில் குமுதம்தான் படிப்பேன்.  பின்னர் ஆர்டர் மாறும்!

      நீக்கு
  48. வங்கிகளின் லாக்கர்கள் - அவங்க பாதுகாப்பா வச்சிருப்பாங்க என்றுதான் அங்க வைக்கிறோம். ஆனால் உள்ள இருக்கும் பொருட்களுக்கு அவங்க பொறுப்பாளியாக முடியாது. இதை வைத்திருக்கிறேன் என்று வெளிப்படையாக எழுதி, அதற்கு இன்ஷ்யூரன்ஸ் பாலிஸி என்று ஒன்று கொண்டுவரலாம். ஆனால் நான் எழுதியுள்ளது மிடில் கிளாஸ் நேர்மையானவனின் மனநிலை. பொதுவாக லாக்கர்ல பதுக்கி வைப்பதுதான் அதிகம் இல்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிடில் க்ளாஸிலும் லாக்கரில் என்ன வைத்திருக்கிறேன் என்று சொல்ல விரும்பாதவர்களே அதிகம்!

      நீக்கு
  49. நீங்க சொன்னப்பறம்தான், இங்க ஓசில தடுப்பூசி போட்டவங்க, ஒரு பாட்டில்லேர்ந்து 5 பேருக்குப் போட்டாங்களா இல்லை 6 பேருக்குப் போட்டாங்களான்னு சந்தேகம் வருது. (அப்படீல்லாம் பண்ணியிருக்க மாட்டாங்க). ஆனால் எப்படி 30 வயசுப் பெண் தடுப்பூசி போட்டுக்கிட்டாள்னு யோசித்தேன்.

    இரண்டாவது தடுப்பூசில இரண்டாவது நாள் கொஞ்சம் வலி இருந்தது. அவ்ளோதான். பயந்தமாதிரி எதுவுமே இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சந்தேகம் என்று வந்து விட்டால் நிறைய வரும்.  முதலில் தடுப்பூசிதான் போட்டார்களா?  அப்புறம் அதிலிருந்து எடுத்துதான் போட்டார்களா?  அப்புறம் சரியாய் 0.5 எடுத்திருக்கிறேன் என்று எல்லோரிடமும் காட்டி விட்டா போடுகிறார்கள்?  இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.  எனக்கும் இரண்டாவது டோஸ் அவ்வளவு படுத்தவில்லை.  இன்றோடு  ஒரு வாரம் ஆகிறது.

      நீக்கு
  50. வணக்கம் சகோதரரே

    இந்த வார கதம்பம் அதற்கு வந்த கருத்துக்கள் அனைத்தும் அருமை. பேஸ்புக்கில் பகிர்ந்தவைகளும் சுவாரஸ்யமாக உள்ளது. குமுதம் போன்ற பத்திரிக்கைகள் பற்றிய அலசலும் கருத்துரை அலசல்களும் படிக்க நன்றாக இருந்தன.

    நான் அம்மா வீட்டில் இருந்த வரைதான் இந்த பத்திரிக்கைகள் வாங்கி படிக்கும் பழக்கம். அதன் பின்னும் அவர்கள் வாங்கினார்கள்.படித்தார்கள். என் புகுந்த வீட்டில் பத்திரிக்கைகள் அவ்வளவாக வாங்கியதில்லை. வீட்டின் பெரியவர்களை கவனிப்பது, வேலைகள், உறவினர் வருகை என அப்போது நேரங்களே சரியாக இருக்கும். என் படிக்கும் ஆவலைக் கண்டு குழந்தைகள் பிறந்து ஒரளவு வளர்ந்த பின் லைப்ரரியில் உறுப்பினராக சேர்ந்து கணவர் புத்தகங்கள் வாங்கி தந்துள்ளார். நிறைய படித்துள்ளேன். அதில் ஜெயகாந்தனின் இந்தக்கதையும் படித்ததாக நினைவு.
    ஜோக் இரண்டும் நன்றாக உள்ளது. இன்றைய பதிவும் மிக சுவாரஸ்யம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  51. இரண்டாவது டோஸ் ஊசி போட்டுக் கொண்டதை திகில் கதை போல் சொல்லி முடித்து விட்டீர்கள்.
    வாக்களித்த அனுபம் மீண்டும் படித்தேன் அருமை.

    பதிலளிநீக்கு
  52. ஜெயகாந்தனின் மெளனம் கதையை இப்போது கேட்டேன். அப்புறம் பாலசந்தர் நாடகமாக பார்த்தேன். வெண்ணிற ஆடை நிர்மலா, எஸ் .எஸ் .ஆர் நாடகம் நடித்த நாடகம் பார்த்தேன். நன்றாக இருந்தது. தாய்மையை சொல்லும் கதை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜெயகாந்தன் அவர்கள் கதையை கொஞ்ச நாள் முன்பு கேட்டேன்.
      நாடகம் இங்கு மகன் வீட்டுக்கு வந்தபின் பார்த்தேன்.

      நீக்கு
    2. நீங்கள் கொடுத்திருக்கும் லிங்க் குறித்து வைத்துக்கொண்டு நானும் கேட்கிறேன் அக்கா.  நன்றி.

      நீக்கு
  53. https://www.youtube.com/watch?v=0TKLKzGj6pY
    Mounam Oru Bashai


    மைக்ரோ தொடர் .

    பதிலளிநீக்கு
  54. சிலிகான் ஷெல்ஃப் படித்தேன், சிரிப்புகள் நன்றாக இருக்கிறது.
    கதம்பம் நன்று.

    பதிலளிநீக்கு
  55. அன்பின் திரு. கில்லர் ஜி அவர்களது சகோதரர் இயற்கை எய்திய செய்தி அறிந்து மனம் வருந்தினேன்..

    அன்னாரது ஆன்மா இறைநிழலில் சாந்தியடைவதற்கு பிரார்த்திக்கின்றேன்..

    பதிலளிநீக்கு
  56. சீக்ரெட் மிஷன் சொல்லி சென்றவிதம் அருமை

    பதிலளிநீக்கு
  57. இடுகையின் துவக்கமே திடுக் திடுக் பாராட்டுகள் இந்த வியாழனும் சிறப்பு

    பதிலளிநீக்கு
  58. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  59. உங்கள் பதிவே ஒரு ’குமுதம்’ இதழ் படித்தது போல்தான் இருந்தது. முதலில் ஒரு மர்மக்கதை, அதையடுத்து ‘குண்டூசி’ கோபாலன் பற்றி வரலாற்றுத் துணுக்கு, பின்னர் பெட்டகப் பாதுகாப்புச் சட்டம் பற்றி நாட்டு நடப்புச் செய்தி, அதற்குப் பின் வெற்றியடைந்த இதழுலகப் பெரும்புள்ளி ஒருவரைப் பற்றி விரிவான கட்டுரை, கடைசியாக இரண்டு நகைச்சுவைத் துணுக்குகளும் புதிரும்! மொத்தத்தில் ஒரு பல்சுவை இதழ் படித்த நிறைவு! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் வருகைக்கும் முத்தான கருத்துக்கும் நன்றி.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!