புதன், 22 செப்டம்பர், 2021

படகு அல்லது கப்பல் பயணம் போயிருக்கிறீர்களா?

 

நெல்லைத்தமிழன் : 

1. எதனால் நம் அடுத்த தலைமுறைக்கு மேற்கத்தைய அல்லது நமக்கு அந்நியமான உணவு மட்டுமே பிடிக்கிறது?  மதிய உணவு-சாதம் சாம்பார் ரசம், அரிசி உப்புமா.... போன்றவைகள் என்றால் வேண்டவே வேண்டாம் சப்பாத்தி நூடுல்ஸ் பிரட் ஓகே என்று ஏன் சொல்கிறார்கள்?

 # விளம்பரம்தான் காரணமாக இருக்கும். 

2. படகு அல்லது கப்பல் பயணம் போயிருக்கிறீர்களா?   

# கடலில் சிறு தூரம் மோட்டார் படகில் பயணித்ததுண்டு. 

& நானும் மங்களூர் கடற்கரையில், மற்றும் ஊட்டி ஏரியில் படகு பயணம் செய்துள்ளேன். 

3. எதனால் இணைய நட்புகள் ரொம்பவே நெருக்கமாக ஆகிவிடுகிறார்கள்? அதாவது அவர்களைச் சந்திக்கும்போது புதிதாகச் சந்திப்பது போலவே தோன்றுவதில்லை   

# தொடர்ந்து கருத்துப் பரிமாற்றம் செய்து வருவதால் அந்நியமாகத் தெரிவதில்லை. 

4. ஒருவருடன் போனில் அல்லது கடிதத் தொடர்பு மட்டும் வைத்துக்கொண்டிருக்கும்போது எதனால் நம் மனது அவருக்கு ஒரு உருவம் கொடுத்துவிடுகிறது? (அனேகமாக அதற்கும் நேரில் பார்க்கும் உருவத்திற்கும் சம்பந்தம் இருப்பதில்லை. ஸ்ரீராமை என் மனதில் உருவகப்படுத்தியிருந்ததற்கும் நேரில் பார்ப்பதற்கும் மிகுந்த வேறுபாடு.ஹாஹா)

# கண் காணாத இடம் / மனிதர்களுக்கு ஒரு கற்பனை வடிவம் தருவது மனதின் செயல்பாடுகளில் ஒன்று.  நினைவை சேமிக்க மூளையின் யுக்தி.

& நாமம் (பெயர்) இல்லாத ரூபங்கள் இருக்கலாம்; ஆனால், ரூபங்கள் இல்லாத பெயர்கள் கிடையாது. எனவே, ஒரு பெயரைக் கேள்விப்பட்டவுடன், ஒரு ரூபம் நமக்குள் வந்து உட்கார்ந்துவிடுகிறது. 

வல்லிசிம்ஹன் : 

1, கர்மா....இதில் நம்பிக்கை உண்டா?

# சில ஏடாகூடங்களைப் பார்க்கும்போது நம்பித்தான் ஆக வேண்டியிருக்கிறது. 

2, புனர் பூர்வ ஜன்மாக்கள் நிஜமா?

# தெரியவில்லை. 

& சில சமயங்களில் மட்டும் நிரூபணம் ஆகியுள்ளன. ஆனால் நூறு சதவிகிதம் எங்கும் நிரூபிக்கப்படவில்லை. 

3, நம் செயல்களுக்கு (நல்லதோ/கெட்டதோ) இந்தப் பிறவியிலேயே பதில் வினை கிடைக்குமா?

# நூற்றுக்கு நூறு இப்போதே சரியாவதில்லை என்பதற்கு பலத்த சான்றுகளைப் பார்க்கலாம்.

பானுமதி வெங்கடேஸ்வரன்: 

பகவத்கீதை, உபநிஷத் போன்றவைகளுக்கு யாருடைய விளக்க உரை கேட்பதற்கு, படிப்பதற்கு பிடிக்கும்?

# சின்மயானந்தா ஓம்காரானந்தா பிடிக்கும்.  ஆனால் ஊன்றிக் கேட்டதில்லை என்பதைத் தயக்கத்துடன் ஒப்புக் கொள்கிறேன்.

& நொச்சூர் வெங்கடராமன் விளக்க உரை கேட்பதற்குப் பிடிக்கும். நேரம் கிடைத்தால் இங்கே போய், கேட்டுப் பாருங்கள். அல்லது youtube ல் Nochur Venkataraman என்று தேடிக் கேளுங்கள். 

Sep.17ல் பிறந்த பெரியார், நரேந்திர மோடி ஒற்றுமை, வேற்றுமை என்ன?

# தாடி கண் கண்ணாடி ஒற்றுமை. கடவுள் நம்பிக்கை , அகில இந்திய நோக்கு வேற்றுமை.

& எனக்கு என்னவோ தாடி தவிர வேறு எந்த ஒற்றுமையும் இருப்பதாகத் தெரியவில்லை. 

= = = = =

சென்ற வாரம் நாங்கள் கேட்டிருந்த கேள்விகளுக்கு வந்த பதில்களும், படங்களுக்கு வந்த கருத்துகளும், மின்நிலா எழுபதாவது வார இதழில், பக்கம் எண் 30 ~ 33 ல் வெளியாகியுள்ளன. >>>> மின்நிலா 070 சுட்டி 

= = = = =

இந்த வார எங்கள் கேள்விகள் : 

1) உங்களுக்கு மிகவும் பிடித்த பாடலை, கர்ண கடூரமாக ஒருவர், மேடையில் பாடுகிறார் என்றால், உங்கள் எதிர் வினை என்னவாக இருக்கும்? 

2) ஹோட்டல் வாசலில் " இன்றைய ஸ்பெஷல் " என்று வைத்திருக்கும் அறிவிப்புப் பலகையில் படித்து, உள்ளே சென்று அதை பெரிதும் எதிர்பார்ப்புடன் ஆர்டர் செய்து, வந்தவுடன் பெரிதும் ஏமாந்த அனுபவம் உண்டா? எங்கு? எப்பொழுது? என்ன ஐட்டம்? 

3) உங்களுக்கு எந்த நிறம் பிடிக்கும்? ஏன்? 

= = = =

படம் பார்த்து, கருத்து எழுதுங்கள் :

1) 


2) 



3) 

= = = = 

104 கருத்துகள்:

  1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    வருங்காலம் ஆரோக்கியம், மன நலம், அமைதி நிறைந்து இருக்க இறைவன் அருள வேண்டும்.

    பதிலளிநீக்கு
  2. என் கேள்விகளுக்குக் கவனத்துடன் பதில் சொன்ன எபி
    ஆசிரியர்களுக்கு மிகவும் நன்றி.

    சில சமயம் சிலர் நடவடிக்கைகளைப்
    பார்க்கும் போது இதை நாம் ஏற்கனவே அறிவோம் என்ற
    நினைப்பு தோன்றுவதால்
    அந்தக் கேள்வியைக் கேட்டேன்.
    கர்மாக்களுக்கும் இந்தப் பிறவியிலேயே
    பதில் வினை கிடைக்கும் என்று ஒரு உபன்யாசத்தில் கேட்டேன்.

    சொர்க்கம் என்பது வேறெங்கோ இல்லை. நரகமும் அப்படியே
    என்றும் சொன்னார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நீங்கள் சொல்வது சரிதான்.

      நீக்கு
    2. //இதை நாம் ஏற்கனவே அறிவோம் என்ற நினைப்பு தோன்றுவதால்// - வல்லிம்மா.. காரணமே இல்லாமல் சிலரைப் பார்த்தால் நமக்குப் பிடிக்காது, சிலரை ரொம்பவே பிடிக்கும்-அவர் செய்யும் சிறு சிறு தவறுகள்கூடப் பெரிதாகத் தெரியாது, அவங்க நமக்கு நெருக்கமாக இல்லாத போதும். இதற்கும் பூர்வ ஜென்மத் தொடர்புகளுக்கும் சம்பந்தம் உண்டு.

      சுவர்க்கம் என்பது என்ன? நாம இதைப் பற்றி யோசித்தால் நமக்கே சிரிப்பாக இருக்கும். சில மதங்களில் 72 பெண் துணை கிடைப்பதுதான் சொர்க்கம் என்று நம்பறாங்க.

      கர்மாக்கள் எல்லாவற்றிர்க்கும் இந்தப் பிறவியிலேயே பதில் வினை கிடைக்கவே கிடைக்காது. எதை இயற்கையினால் பொறுத்துக்கொள்ள முடியாதோ, அதற்கு உடனடி எதிர்வினை கிடைக்கும் (அப்பாவி, ஏதிலியைத் தொடர்ந்து துன்புறுத்தினால் அவங்களோட மனதின் வருத்தம் நம்மை உடனடியாக பாதிக்கும். திட்டம் போட்டுக் கொலை போன்ற பஞ்சமா பாதகங்களுக்கு உடனடி வினை கிடைப்பதில்லை)

      நீக்கு
    3. அன்பு நெல்லைத் தமிழன்,
      குழந்தைகள் வேற்றுமுகம் காட்டுமே.
      நீங்கள் சொல்வது மிக உண்மை, சில முகங்கள்

      நமக்கு ஒத்துக் கொள்வதில்லை. பூர்வ ஜன்ம வாசனை
      என்று மாமியார் சொல்வார்.:)
      கணவன் மனைவிக்கு முதல் பார்வையில்
      ஒருவரை ஒருவர் பிடித்துப் போவது
      இந்த வகையில் தான்.

      எங்கள் பெரிய மகனும் உங்களை மாதிரிதான்.
      சட்டென்று தன் தீர்மானத்தைச் சொல்ல மாட்டான்.
      ரொம்ப superstitious.

      பூர்வ ஜென்மா, இந்த ஜன்மா கர்ம வினைகளை நம்புகிறேன்.
      இல்லாவிட்டால் பல காரியங்களுக்குக்
      காரணமே கண்டறிய முடியவில்லை.

      நீக்கு
  3. இந்த வாரத்துக்கான கேள்விகள்.

    1, ஒருவரது எழுத்தை விமரிசனம் செய்வது எப்பொழுதுமே
    புகழ்ந்து பேசுவது போல இருக்க வேண்டுமா?

    2, அதே போல அந்த எழுத்தில் காணப்படும்
    சில தவறுகளைச் சுட்டிக் காட்டுவதும் ஒரு தவறா?

    3, கருத்து வேறுபாடு இருந்தால் அதை நேரே
    சொல்வது நன்மையா இல்லையா.
    சர்க்கரை தடவிச் சொல்ல வேண்டுமா?
    மீண்டும் நன்றி சொல்கிறேன் எபி ஆசிரியர்களுக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி. பதில்கள் அளிப்போம்.

      நீக்கு
    2. பேச்சிலும் எழுத்திலும் இனிமை, மென்மையைக் கடைப்பிடிக்கும் உங்களுக்கே இந்த சந்தேகமா ரேவதி? அப்படின்னால் நானெல்லாம் "பட்"டென்று உடைச்சுச் சொல்கிறேனே! அதுக்கு என்ன செய்யறது? :))))))

      நீக்கு
    3. //"பட்"டென்று உடைச்சுச் சொல்கிறேனே!// - பலரும் எதிர்பார்ப்பது, 'அடடா.. பொரி உருண்டை இவ்வளவு சுலபமா? இவ்வளவு அழகாகச் செய்ய முடியுமா? அருமை அருமை', 'கதையை மிக அருமையாகக் கொண்டு போயிருக்கிறார். நல்ல அனுபவம் உள்ள எழுத்தாளர் என்பதை நிரூபிக்கிறார்' என்பது போலத்தான். சும்மா டிசக்ட் பண்ணினால் யாருக்கும் பிடிப்பதில்லை, அதிலும் கதையை. தேவையில்லாமல் 'உங்களுக்கு ரசனை இல்லை' என்று வாங்கிக் கட்டிக்கணும். ஹா ஹா ஹா.

      நீக்கு
    4. @Geethasambasivam,நான் ஹார்ஷா சொல்றேன்னு ஹ்ம்ம்
      நெருங்கிய உறவினர் சொன்னதால்
      இந்தக் கேள்வி வந்ததுமா:)
      உள்ளதை உள்ளபடி சொன்னாலே தப்புன்னு
      சொல்வதில் வம்பு வருகிறது:)))))

      நீக்கு
    5. @நெல்லைத் தமிழன்,
      என்னடா கலிகாலம் இது பிடிக்கலைன்னு கூடச் சொல்ல விடமாட்டேன் என்கிறார்களே.:))

      நீக்கு
    6. ஆமாம், வல்லி, உள்ளதை உள்ளபடி சொன்னால் யாருக்கும் பிடிக்காது தான்! :(

      நீக்கு
  4. உங்கள் முதல் கேள்வி கர்ண கடூரக் குரல்.
    ஹைய்யோ கேள்வியிலேயே பதில் இருக்கே.

    சகிக்க முடியாதது அபஸ்வரம். நான் வெளியே
    போய் விடுவேன்.

    பதிலளிநீக்கு
  5. ஹோட்டல் வாசல் போர்ட் பார்த்து ஏமாந்ததில்லை.

    இதுதான் சாப்பிட வேண்டும்
    என்றே லஸ் சுக நிவாஸ், ஷாந்தி விஹார் சென்றிருக்கிறோம்.

    முதல் ஹோட்டலில் மசால் வடை.
    பின்னதில் பானி பூரி. இதெல்லாம் 25 வருடங்களுக்கு முன்:)

    பதிலளிநீக்கு
  6. 3, பிடித்த நிறம் வெளிர் நீலம். வானுக்கும் கடலுக்கும் நீல நிறம் பாடலும்
    மிகப் பிடிக்கும். என் கணவருக்கும் மிகப் பிடித்த நிறம்.

    பதிலளிநீக்கு
  7. முதல் படம்,
    அய்ய என்னடா என்ன சொன்னாலும் சிரிக்கிறே:)))
    இரண்டாவது,
    என்னை மாதிரி கைதட்டு பார்ப்போம்!!!!!!!!

    மூன்றாவது
    '' சமத்துக் குட்டி!!அக்கா மாதிரி நீயும்
    ரசித்து சாப்பிடணும்"

    பதிலளிநீக்கு
  8. படங்களில் குழந்தைகளும் செல்லங்களும் மிக அருமை.

    பதிலளிநீக்கு
  9. அன்பின் வணக்கம் அனைவருக்கும்.. இறையருள் சூழ்க எங்கெங்கும்..

    வாழ்க வையகம்..
    வாழ்க வளமுடன்...

    பதிலளிநீக்கு
  10. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  11. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  12. கேள்வி பதில்கள் அருமை... இரண்டாவது புகைப்பட - காணொளி சிறப்பாக இருக்கும்....

    பதிலளிநீக்கு
  13. கேள்விகளும், பதில்களும் மிகவும் ஆழமான கருத்துகள்.

    பதிலளிநீக்கு
  14. புனர் ஜென்மாக்கள் சில சமயங்களில்.. ஆனால் எப்போதும் -- சாதம் வெந்துவிட்டதா என்று ஒரு சில அரிசியைச் சோதித்தால் போதாதா? பத்தாயிரம் அரிசியையுமா சோதிப்பார்கள்? பூர்வ ஜென்மா உண்டு உண்டு.. எத்தனையோபேர் இதைப்பற்றி எழுதியிருக்கிறார்கள்.

    நிரூபணம் செய்வது ஒரு சில சந்தர்ப்பங்களில்தான் அமையும். ஒரு பெண், தன் பூர்வ ஜென்மாவில் அக்பரின் மனைவியான ஜோதா அக்பர் என்று சொன்னார். விஜய் தொலைக்காட்சியும் அந்தப் பெண்ணைக் கூட்டிக்கொண்டு ஆக்ரா கோட்டைக்குச் சென்றபோது சில இடங்களைக் கண்டுகொண்டார்..சிலவற்றை, பரிச்சயமாகணர்கிறேன் என்றார். மனது முழு நினைவையும் வைத்துக்கொள்வதில்லை (முந்தாநாள் சாப்பிட்ட வெந்தயக் குழம்பு சூப்பர் என்று சொல்லி, என் உப்புச்சார் இந்தாளுக்கு வெந்தயக் குழம்பா என்று மனைவியிடம் கர்ர்ர்ர் வாங்கும் நமது மூளை பூர்வ ஜென்மாவை முற்றிலும் நினைவில் வைத்திருக்குமா?

    பதிலளிநீக்கு
  15. கேள்வி பதில்கள் நச்சென்று உள்ளன. வணங்கும் குழந்தை..அதிகம் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  16. 2. படகு அல்லது கப்பல் பயணம் போயிருக்கிறீர்களா? //

    இது போன்ற ஒரு கேள்வி முன்னமேயே வந்த நினைவு...ஏன்னா நான் இதுக்கு என் பயண அருமை பெருமைகளை எடுத்துவிட்ட நினைவு! ஹாஹாஹா அதான்...அதனால் இப்போது மீண்டும் அதைச் சொல்லப் போவதில்லை..கப்பல், படகு, தோணி, கட்டமரம் நாமே தூண்டில் போட்டு ஓட்டும் படகு, பெடல் படகு என்று...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //, பெடல் படகு என்று...// - போனீங்களா? இல்லை போவது போல கனவு கண்டீர்களா?

      நீக்கு
    2. நெல்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      போயிருக்கிறேன் கனவு எல்லாம் இல்லை ஹாஹாஹா

      பல ஏரிகளிலும் வைச்சிருக்காங்களே இது

      கீதா

      நீக்கு
  17. நெல்லையின் மூன்றாவது கேள்விக்கு ஆசிரியரின் பதில் தான் நானும் டிட்டோ..

    நெல்லையின் 4 வது கேள்வி க்கான பதில் கொஞ்சம் உளவியல் ரீதி என்றும் சொல்லலாம். பொதுவாக உளவியலில் இப்படியான கேள்விகள் உண்டு. இதன் அடிப்படையில் வாழ்க்கை விஷயங்களும் கூட உண்டு. இப்ப நான் எழுதினால் நீ........ண்டு போகும்...

    பொதுவாகவே மனித மனம் கொஞ்சம் கற்பனைபடுத்திப் பார்க்கும்...ஒரு சிலரால் மட்டுமே இதிலிருந்து அப்பாற்பட்டு இருக்க முடியும் அல்லது அப்படியே மனதில் தோன்றினாலும் அதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கடந்து செல்வதாக இருக்கும்.

    அது சரி தமனாக்காவுக்கு வயசானா எப்படி இருப்பாங்க நெல்லை!!!!!!? ஹாஹாஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //தமனாக்காவுக்கு வயசானா எப்படி இருப்பாங்க// - இறைவா... இப்போவே தமன்னா, எனக்கு அக்கா மாதிரித்தானே இருக்காங்க. அவங்க சார்ம் போய் பலப் பல வருடங்களாகிவிட்டது.

      கீதா ரங்கன்(க்கா), எனக்கு முந்தைய தலைமுறை நடிகைகளைப் பற்றிக் கேட்காதீங்க (என்னிடம்). இந்தத் தலைமுறை நடிகைகளைப் பற்றிக் கேட்டால் சொல்லலாம்.

      நீக்கு
    2. ஹாஹாஹா நெல்லை சைக்கிள் கேப்ல என்னவோ சொல்ல வரா மாதிரி கீது.~!!!!

      நீங்க யங்கோ யங்குனா ...சாய்பல்லவி வயசானா எப்படி இருப்பாங்கன்னு சொல்லுங்க!!! நான் அவங்க படம் எதுவும் பார்த்ததில்லைன்னு கப்ஸா விடக் கூடாதாக்கும்....அவங்க நடிச்ச படம் பார்க்கலைனாலும் அவங்க படமே பார்க்காமயா இருப்பீங்க!!!

      கீதா ரங்கன் சாய் பல்லவியே எனக்கு அக்கா ந்னு சொன்னீங்கன்னு வைங்க....அப்புறம் இப்ப கைக்குழந்தையா நடிக்கற குழந்தை பேரைச் சொல்லிடுவேனாக்கும்!!!! ஹிஹிஹி

      கீதா

      நீக்கு
    3. நான் நடிப்பிலும் அழகிலும் பார்த்து வியந்தது அ.ப. அப்புறம் பும்ராவுடன் அவரது பெயர் அடிபட்டது. அதற்கு முன்பு கௌதம் மேனன் படக் கதாநாயகி (சிம்பு), அந்த ஒரு படத்தில் மட்டும் நல்லா இருந்தார். சாய் பல்லவி... ஓகே ஓகே.

      ஆனா பாருங்க, என்னைவிட வேகமா அவங்களுக்கு வயசாகிடும். அதை மட்டும் நீங்க நினைவில் வைத்திருந்தால் போதும்.

      நீக்கு
  18. மூன்று படங்களும் செம ரொம்ப ரொம்ப ரசித்தேன்!

    கீதா

    பதிலளிநீக்கு
  19. எல்லாக் கேள்விகளின் பதில்களும் நன்கு யோசித்து உணர்ந்து சொல்லப்பட்டிருக்கின்றன. அனைத்துக்கும் நன்றி. கர்மாவின் வினையை இந்த ஜன்மத்திலேயே நன்றாக அனுபவிக்கலாம். உதாரணமாக என்னையே எடுத்துக் கொண்டால் நான் எத்தனை கோபமாக இருந்தாலும், சின்ன வயசில் அடி வாங்கினாலும் சாப்பிடாமல் இருக்கவே மாட்டேன். ஆனால் திருமணம் ஆகிக் குழந்தைகள் பதின்ம வயதில் இருக்கையில் ஒருநாள் எதற்கோ மன வேறுபாடு/கருத்து வேறுபாடு. அதில் மனம் மிகவும் நொந்து போய்ச் சாப்பிட உட்கார்ந்தவள் மனம் இல்லாமல் தட்டோடு போய்க் கொட்டினேன். வீட்டில் அனைவருக்குமே அதிர்ச்சி தான். அதற்கடுத்த இரண்டே நாளில் முதல் முறை மும்பை செல்கையில் ரயில் மும்பை வெள்ளத்தினால் பால்கரை விட்டுச் செல்ல முடியாமல் குடிக்கத் தண்ணீர் கூடக் கிடைக்கலை. ஊரெல்லாம் வெள்ளம். மும்பைக்கு எப்படிப் போய்ச் சேர்ந்தோம் என்பதைப் பதிவுகளில் பார்த்துக்கோங்க. அன்னிக்குத் தான் எனக்கு நான் செய்த தவறும் புரிந்தது. 2 நாட்கள் முன்னர் தட்டு நிறைய அன்னத்தைக் கொட்டினேன். இரண்டே நாட்களில் ஒரு வாய் சாப்பிடக் கிடைக்கலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா! ஆச்சரியமாக இருக்கிறது.

      நீக்கு
    2. இது என்ன அநியாயமா இருக்கு? நான் சாப்பிடாமல் வீம்பு பிடிப்பேன். ஆனால் சாப்பாட்டைக் கொட்டியதில்லை (என்றே நினைவு)

      நீக்கு
    3. நானும் கொட்டியதெல்லாம் இல்லை. அன்னிக்குத் தான் முதலும் கடைசியுமா! அதன் பின்னர் சாப்பாடு வேண்டாம்னு இருந்துடுவேன். கொட்டறதெல்லாம் இல்லை.

      நீக்கு
  20. அதே போல் நமக்கு யாரேனும் துரோகம் செய்தாலும் அதற்கான உடனடி பலாபலன்கள் கிடைத்துப் பார்த்திருக்கேன். நம்மையும் அறியாமலோ, அல்லது கோபத்திலோ மற்றவருக்குக் கெடுதி நினைத்தாலோ/செய்தாலோ அதன் பலன்களும் நமக்குக் கிடைத்து விடும். "அரசன் அன்றே கொல்வான்;தெய்வம் நின்று கொல்லும்!" என்பார்கள். ஆனால் இந்தக் காலத்தில் தெய்வம் உடனுக்குடன் தெரியப் படுத்தி விடுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு விநோதமான நிகழ்வு.

      நான் செய்வதை, பிறரிடம் சொல்லிவிட்டால், அந்தக் காரியத்தைச் செய்ய முடியாது தடை ஏற்படும். அதுபோல 'நான்' என்று சொன்னாலும் அந்தக் காரியம் நடைபெறாது. அநேகமா எப்போதுமே.

      உதாரணமா, நான் இப்போல்லாம் 4 மணிக்கு எழுந்து தினமும் ஒரு மணி நேரம் நடக்கிறேன் என்று யாரிடமாவது சொல்லிவிட்டால் (கொஞ்சம் பெருமைக்காக), மறுநாளே எழுந்துக்க முடியாது, அல்லது நடைப்பயிற்சி தடை பட்டுடும். ரொம்பவே gap விழுந்துடும். அதனால் என் சம்பந்தப்பட்ட விஷயங்களை பெரும்பாலும் மற்றவர்களிடம் சொல்லவே தயக்கமாக இருக்கும்.

      நீக்கு
    2. நானும் உங்களைப் போல்தான் என்னை உணர்கிறேன். இதில் இன்னொன்று எனக்கு யாராவது வந்தால், என்னால் அதை செய்ய முடியும்.. நான் அதைப் பண்ணுகிறேன். இதை செய்கிறேன் என ஆர்வமாக (கொஞ்சம் ஆணவம் கலந்த பெருமைதான்) கூறி விட்டு அன்று சிரமமாக இருந்தாலும்/உணர்ந்தாலும் அவர்கள் விரும்பிய உணவை அன்று முழுவதும் தடபுடலாக செய்து கொடுத்து விடுவேன்.அவர்கள் போன பின் நான் நார்மலாக இரண்டொரு நாட்கள் ஆகி விடும். வீட்டில் அனைவரிடமும் மண்டகப்படி வேறு கிடைக்கும். "அவர்களே ஒன்றை கேட்ட பின் மனசு மாறி வேண்டாமென்று மறுத்தால் கூட உனக்கு கொஞ்சம் திமிர் ஜாஸ்திதான்.." என்ற வசைபாடல்களை வேறு சூடிக் கொள்வேன். இதற்கு இந்த "நான்" என்ற என் அகந்தைதான் காரணம் என்று எனக்குள் புரிதல் வந்தும், மீண்டும் வரும் வேறு உறவுகளுக்கு மீண்டும் உபசார படலம். இப்படித்தான் என் காலம் என்னை கடக்கிறது.

      நீக்கு
    3. கமலா, நானும் உங்களைப் போல் தான் இழுத்துப் போட்டுக்கொண்டு ஆவலும் ஆர்வமுமாகச் செய்து போட்டுக் கொண்டிருந்தேன். ஒரே சமயத்தில் எரிவாயு அடுப்பில் இரண்டு பக்கமும் தோசைக்கல்லைப் போட்டுக்கொண்டு (நான் ஸ்டிக் இல்லை. இரும்புக் கல்) சுமார் 20 பேர்களுக்காவது தோசை வார்த்துப் போட்டுக்கொண்டே இருப்பேன். நம்மவர் அதன் பலன் தான் உன் கால்களில் இப்போது தெரிய ஆரம்பிச்சிருக்கு என்பார்! என்ன செய்ய முடியும்! அப்போ நம்மால் முடியும் என்னும் நம்பிக்கை அல்லது அசட்டுத் தைரியம் இருந்தது.

      நீக்கு
    4. /அப்போ நம்மால் முடியும் என்னும் நம்பிக்கை அல்லது அசட்டுத் தைரியம் இருந்தது./

      உண்மைதான் சகோதரி. அந்த அசட்டு தைரியம் மட்டும் இப்போதும் தொடர்ந்து இருந்து கொண்டுதான் நம் வேலைகள் செய்ய வைக்கிறது. இப்போதெல்லாம் எப்போதாவதுதான் உறவுகள் வருகை உள்ளது. இந்த கொரானாவிற்கு பின் தூரத்திலிருந்து வருபவர்களுமில்லை. அப்படியே வந்தாலும், நாம் அந்த அ. தைரியத்துடன் நம் பேரில் நமக்கிருக்கும் நம்பிக்கையையும் இழுத்து போட்டுக் கொண்டு செய்வோம். ஏனெனில் இது தொட்டில் பழக்கம்.:)

      நீக்கு
    5. *நம்மை வேலைகளை செய்ய வைக்கிறது எனப் படிக்கவும்.

      நீக்கு
  21. கப்பல் பயணம் போனதில்லை. நினைவு தெரிந்து படகில் பயணித்தது என்பது எண்பதுகளில் கோவா சென்றபோது தான். எங்க காரையே ஸ்டீமர் படகில் ஏற்றி அதில் அமர்ந்தவாறே வெளியே பார்த்துக்கொண்டு செய்த பயணம். குடும்பத்தோடு சென்றிருந்தோம். அதன் பின்னர் நிறையப் போயாச்சு. நவ பிருந்தாவனில் முதலை மடுவில் எங்கள் ஸ்டீமரின் நங்கூரம் சிக்கிக்கொண்டு எடுக்க முடியாமல் கஷ்டப்பட்டுப் பின்னர் என்னென்னவோ செய்து படகைக்கிளப்பினால் படகு கிளம்ப மாட்டேன் என்கிறது. படகிலோ நீரிழிவு நோய் உள்ள வயதானவர்கள் அதிகம். பின்னர் பரிசல்காரர்களைப் பிடித்துப் பரிசலில் இருந்து கயிறு கட்டி எங்கள் படகோடு இணைத்துப் பரிசல்களில் இரு இளைஞர்கள் நின்றுகொண்டு எங்கள் படகைக் கயிற்றோடு இழுத்து வந்து கரையில் சேர்த்தனர். ராமேஸ்வரம் 2 ஆம் முறையோ 3ஆம் முறையோ போனப்போ தனுஷ்கோடி போனோம். அங்கே செல்லத் தண்ணீர்/நிலம் இரண்டிலும் பயணிக்கும் ஓர் வண்டி. அபூர்வமான அனுபவம். அப்போதெல்லாம் நான் இப்படி எல்லாம் பிரபலமான எழுத்தாளர் ஆவேன்னு கனவு கூடக் காணலை. அதனால் காமிராவில் கூடப் படம் எடுத்து வைச்சுக்கலை. 98 ஆம் ஆண்டில் போனோம். அதன் பிறகும் நிறையப் படகு, ஸ்டீமர் பயணங்கள். அம்பேரிக்காவில் ஹூஸ்டனில் சென்ற ஸ்டீமர் கப்பல் பயணம், அங்கே ஸான் அன்டானியோவில் போன பரிசல் பயணம், இரண்டே பேர்தான் உட்காரலாம். அதுவே தண்ணீரின் வேகத்தில் செல்லும். இப்படி எத்தனையோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

      நீக்கு
  22. முதல் படத்தில் அந்தச் செல்லத்துக்கு எதுவோ சாப்பிடக் கொடுத்துட்டு அது உடனடியாகக் கபளீகரம் செய்ததைப் பார்த்துவிட்டு அந்தப் பெண் "என்ன இது!" என்று அசந்து போயிட்டாள்.

    இரண்டாவது குட்டிச் செல்லத்தை நிறையப் பார்த்தாச்சு. தங்கப்பாப்பா!

    மூன்றாவது செல்லத்துக்கு உணவு ஊட்டும் அந்தப் பெண்ணின் மன மகிழ்ச்சி, நிறைவு. முகத்தில் தெரிகிறது.

    பதிலளிநீக்கு
  23. எங்க வீட்டில் என்னைத் தவிர எல்லோரும் நன்றாய்ப் பாடுவதால் இந்தக் கேள்விக்கு அவங்க யாரானும் தான் பதில் சொல்லணும். ஆனால் ஒரு விஷயம்! நான் மேடையில் பேசுவது தவிர்த்து/சாப்பிடுவது தவிர்த்து மற்றவற்றிற்கு வாய் திறக்கவே மாட்டேன்.

    இன்றைய ஸ்பெஷல் போய்ப் பார்த்து ஓட்டலில் சாப்பிட நேர்ந்தால் ஏமாற்றம் தான் வரும். அநேகமாக இருக்காது. அதோடு முன்னெல்லாம் அபூர்வமாகச் செய்வதை இப்போதெல்லாம் பெரிய அளவில் செய்து சாப்பிட்டு அலுத்துப் போவதால் ஓட்டலின் இன்றைய ஸ்பெஷலுக்கு மதிப்பே இல்லாமல் போய்விட்டது.

    பதிலளிநீக்கு
  24. மேகங்களே இல்லாத ஆகாயத்தைப் பார்த்திருப்பீங்க தானே? அதன் அடர் நீலம் அசர அடிக்கும். அதோடு இந்தக் கோடிக்கு அந்தக் கோடி ஒரே மாதிரியான நீலம் பரவிக்கிடக்க அதன் கீழே நாம் இத்தனூண்டுக்கு இருப்போம். இப்படி அண்டவெளியில் அதன் பிரம்மாண்டத்துக்கு முன்னால் நாம் எத்தனை சின்னவர்கள் என்பதை உணரும் ஒவ்வொரு விநாடிக்காகவும் அந்த நீலம் பிடிக்கும். நீலம் என்றாலே இதான் நினைவில் வரும். அதைத் தவிர்த்து மாலை நேர அந்திச்சூரியனின் வர்ண ஜாலங்களும் பிடிக்கும். அதில் கிடைக்கும் நிறங்கள்! அடடா! அற்புதம்! அந்த ஒளிவெள்ளத்தில் நடுவே கருமேகப் பின்னணியில் மின்னல் கீற்று மாதிரி ஒரு வெளிச்சம் வரும்! அந்த நிறம் வெள்ளியைப் போல் மினுமினுக்கும். வெள்ளிக்குக் கூட அத்தனை மினுமினுப்பு இருக்காது.

    பதிலளிநீக்கு
  25. 1. கருத்து வேறுபாடு என்பது அப்பா/பிள்ளை, அம்மா/பெண், கணவன்/மனைவி, சகோதரன்/சகோதரி என்றிருப்பவர்களுக்குள்ளேயே இருக்கையில் மற்றவர்களுடன் கருத்து வேறுபாடு கொள்வது தவறா?

    2. எந்த ஒரு விஷயத்துக்குமே மாறுபட்ட கருத்துகள் இருக்கத்தான் செய்யும். அதை நாம் ஏற்றே ஆகவேண்டுமா? நம் கருத்து நம்மோடு/மற்றவங்க கருத்து அவங்களுக்கு என்று விலகிச் செல்வது தவறா?

    3. ஒரு பிரபலத்தைப் பற்றிய கருத்து அனைவருக்கும் ஒரே மாதிரித்தான் இருக்கணுமா? உதாரணம் அரசியல் தலைவர்கள்/திரைப்பட நடிகர்கள் பற்றிய கருத்து. அதில் மாறுபட்டால் தப்பா? என் கருத்தை ஒட்டித் தான் பேசணும் என்று நான் சொல்லலாமா?

    உதாரணமாக ரஜினி பற்றிய என் கருத்து அப்படி ஒண்ணும் உயர்வாக இருக்காது.ஆகவே ரஜினி ரசிகர்கள் யாரேனும் என்னுடன் ரஜினி படம் பற்றிய வாதம் செய்தால் அவங்க என் கருத்தை ஒட்டியே தான் வாதம் செய்யணுமா? அப்படி நான் அவங்களை வற்புறுத்தலாமா?

    தெளிவாக் குழப்பிட்டேனோ? அப்புறமா வரேன்.

    பதிலளிநீக்கு
  26. கேள்வி பதில்கள் நன்று.

    குழந்தையும் பசுக்கன்றும் இரண்டுமே வெள்ளை மனம் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  27. கடலில் சிறு தூரம் மோட்டார் படகில் பயணித்ததுண்டு.// போட்டிங் போவது பயணம் செய்வதாகுமா?

    பதிலளிநீக்கு
  28. எங்கள் வீட்டில் பிள்ளைகளுக்கு இன்னும் இப்போதைய சாப்பாட்டு மோகம் அத்தனை வரவில்லை. எங்களின் பாரம்பரிய உணவுதான்.

    படகுப் பயணம் குறிப்பாக மோட்டார் படகு நிறைய செய்திருக்கிறேன் கப்பல் பயணம் செய்ததில்லை

    கர்மா நம்பிக்கை உண்டு.

    ஹோட்டலுக்குச் சென்றால் பெரும்பாலும் தோசைதான் என்பதால் இன்றைய ஸ்பெஷல் என்பதெல்லாம் பார்ப்பதில்லை. கேரளத்தில் அப்படியான போர்டுகள் வெகு குறைவு.

    பிடித்த நிறம் லைட் ப்ளூ. பிங்க்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  29. கடலில் சிறு தூரம் மோட்டார் படகில் பயணித்ததுண்டு.// போட்டிங் போவது பயணம் செய்வதாகுமா? - ஆகும் என்றால் நிறைய படகு சவாரி செய்ததுண்டு. ஒரு முறையாவது கப்பலில் பயணிக்க ஆசை.

    பதிலளிநீக்கு
  30. 4. கொஞ்சம் கஷ்டமான கேள்வி கௌதமன் சார். தினமும் நான் ஜிமெயில் லாகின் பண்ணுகையில் "cannot sync to sivamgss@gmail.com /geethasmbsvm6@gmail.com/sambasivam6geetha@gmail.com என்றே வருகிறது. இந்த 3 மெயில் ஐடியில் எதில் லாகின் செய்தாலும். connection failed/ error 105/learn more என்றே வருகிறது. இது கொரோனா காலத்தில் ஆரம்பித்ததால் ஆரம்பத்தில் எல்லாம் பயம்மாவே இருந்தது. அப்புறம் பழகிட்டேன்னு வைச்சுக்குங்க. ஆனால் இரண்டு வருஷம் ஆகியும் இன்னமும் இப்படித் தான் வந்துட்டு இருக்கு. சுமார் நாலைந்து முறையாவது இந்த மாதிரி வந்த பின்னர், "போனால் போகுது!" னு இணைப்புக் கொடுக்கும் கூகிள். நானும் தொ.நு.நி. எல்லோரையும் கூப்பிட்டுக் கேட்டாச்சு. இப்படி எல்லாம் வர வாய்ப்பே இல்லைனு சொன்னாங்க. வீட்டுக்கே கூப்பிட்டுக் காட்டினேன். தலை சுத்திப் போனாங்க. அப்புறமாத் தொடர்பிலேயே இல்லை. இஃகி,இஃகி, இஃகி, நம்ம ராசி அப்படினு நினைக்கிறேன். அந்த எரரில் போய்ப் பார்த்தால் எனக்குத் தலை சுத்த ஆரம்பிச்சது. சரினு விட்டுட்டேன். இது எப்போ, எப்படிச் சரியாகும்னு உங்களால் சொல்ல முடியுமா? மெதுவா அடுத்த புதன்கிழமைக்குச் சொன்னால் போதும். :))))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு ஜிமெயில் அக்கவுண்டுக்கு 15GB தான் கிடைக்கும், மேல்கொண்டு வேண்டுமானால் எக்ஸ்ட்ரா காசு கொடுக்க வேண்டி வரும். ஒரு சிலர் காசு கொடுக்காமல் பல அக்கௌண்டுகள் தொடங்குகிறார்கள். அதை தவிர்க்க எர்ரர் உண்டாகலாம்.

      நீக்கு
    2. எல் கே க்கு கேள்வியை அனுப்புங்கள். அவர் பதில் சொல்லக்கூடும்.

      நீக்கு
    3. என்னோட ஜிமெயில் அக்கவுன்டுகள் அனைத்தும் ஆரம்பித்துச் சுமார் பத்து வருடங்களுக்கும் மேல் ஆகின்றன. இது இப்போத் தான் 2020 ஆம் ஆண்டில் இருந்து வருது. எல்கேயைக் கேட்ட நினைவு. அவர் புரிஞ்சுக்கலைனு நினைக்கிறேன். :)

      நீக்கு
  31. அதே போல் கின்டிலிலும் என்னால் புத்தகங்களைத் தரவிறக்கி (இலவசம் கொடுக்கும் சமயங்களில் தான். என்னோட புத்தகமே தரவிறக்க முடியலை.)ப் படிக்க முடியறதில்லை. என்னென்னமோ பண்ணிப் பார்த்தாச்சு. சமீபத்தில் ஏகாந்தன் சொல்லி இருந்தாப்போலும் (வாட்சப்பில்) செய்து பார்த்தாச்சு. ம்ஹூம்! அதே போல் வாட்சப் கால் வந்தாலும் என்னோட மொபைலில் பல சமயங்களில் மணி ஓசை வருவதில்லை. பையர், பெண் இருவரும் கோவிச்சுக்கறாங்க! இத்தனைக்கும் வாட்சப் காலுக்கு எனத் தனியாக ரிங்டோன்! அப்படியும் கேட்பதில்லை. பின்னாடி மிஸ்ட் கால் பார்த்துட்டு நானாகக் கூப்பிடும்படி இருக்கு. என்னவோ போங்க! எனக்குனு எல்லாமே வியர்டாவே அமைகிறது. என்னத்தைச் சொல்லறது? கோவிஷீல்ட் ஊசி போட்டுக்கொண்ட சான்றிதழை என்னோட மொபைலிலே இருந்து தொ.நு.நி.களுக்குக் கூடத் தரவிறக்க முடியலை. அதுக்கு முன்னாடி தோற்றுப் போய் அவங்க மொபைலில் தரவிறக்கி எனக்கு வாட்சப்பில் ஷேர் செய்தாங்க! இதுக்கெல்லாம் என்ன செய்யலாம்? முடிஞ்சா பதில் சொல்லுங்க. இல்லைனா வேண்டாம். யாரானும் என்னை அடிக்க வரதுக்குள்ளே ஓடியே போயிடறேன். நாளைக்குப் பிழைச்சுக் கிடந்தாப் பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அம்பேரிக்காவில் வாங்கிய கிண்டில் இந்தியாவில் புஸ்தக தரவிறக்கங்களுக்கு உபயோகிக்கமுடியாது. காரணம் பேமெண்ட். விலை 0 ரூபாய் ஆனாலும் பேமெண்ட் டாலரில் கொடுக்க வேண்டும். மேலும் அமெரிக்க கிண்டில்கள் அமேசான் நெட்ஒர்க்கில் வேலை செய்பவை. அமேசான் இன்டர்நெட் சேவை இந்தியாவில் சரியில்லை. AWS என்று கேள்விப் பட்டிருப்பீர்கள்.  இது அமேசான் கிளவுட் ஸ்டோரேஜ். இதை உபயோகிக்க சந்தா கட்டவேண்டும். 

      கூகிள் playstore இல் இருந்து மொபைலில் kindle app தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.இதை உபயோகித்து கிண்டில் இலவச புத்தகங்களையும் இரக்கம் செய்யலாம். இல்லை என்றால் மொபைலில் amazon app நிறுவிக்கொண்டு amazon தளத்தில் சென்று 0 ரூபாய் புத்தகங்கள்  வாங்கலாம். அதே போன்று கம்யூட்டரிலும்.


      facebook whatsappஐ  வாங்கியவுடன் என்னமோ செய்திருக்கிறார்கள். அதனால் பழைய அண்ட்ராய்டுகளில் சரியாக இயங்காது. அதற்கு மொபைல் whatsapp uninstall செய்துவிட்டு மீண்டும் தரவிறக்கம் செய்து  நிறுவுங்கள். நான் அப்படி செய்தென். 

      வீடியோ கால்களுக்கு கூகிள் duo உபயோகியுங்கள்.நான் அதைத்தான் உபயோகிக்கிறேன். 

      Jayakumar

      நீக்கு
    2. உங்களுக்கு ஒன்று தெரியுமா? கணினியிலும் whatapp நிறுவி உபயோகிக்க முடியும். Headset (மைக்+headphone) வேண்டும். கணினி அல்லது லேப்டாப் WIFI வழியாக இணைக்கப்பட்டிருக்க வேண்டும். அதற்கு  திரையில் வரும் QR கோடை போனில் ஸ்கேன் செய்யவேண்டும்.

       Jayakumar

      நீக்கு
    3. ஹாஹாஹா, நான் கின்டில்/அமேசான் தளத்தில் கணக்கு ஆரம்பித்ததே போன வருஷம் என்னோட சமையல் புத்தகங்களை வெளியிடுவதற்காகத் தான். அப்போத்தான் வெங்கட் சொல்லிக் கின்டிலில் புத்தகங்கள் தரவிறக்க வேண்டியவற்றைச் செய்தால்! ம்ஹூம்! அசைந்தே கொடுக்கலை. வெங்கட்டுக்குத் தலை சுத்த ஆரம்பிச்சது! அதன் பின்னர் அதைப் பத்திப் பேசவே நடுங்கறார்னா பார்த்துக்குங்க! இப்போ வீட்டுக்கே வந்து சரி செய்து தரேன்னு சொன்னார். ஆனால் என்னோட கெட்ட நேரம்/அவரோட நல்ல நேரம். அவர் வரேன்னு சொன்னது மாலை நேரத்தில். அப்போ என்னால் கணினியில் உட்கார முடியாது! மறுநாள் அவர் ஊருக்குக் கிளம்பிட்டார். அப்பாடானு இருந்திருக்கும் அவருக்கு! :)))))))

      நீக்கு
    4. திரு தனபாலன் ஒரு முறை கணினியில் வாட்சப் நிறுவதற்கான வழிமுறைகளை அனுப்பி இருந்தார். ஆனால் நான் அப்படி ஒண்ணும் அடிக்கடி வாட்சப் பயன்படுத்துவதில்லை. குழந்தைகளைப் பார்க்கவும்/பேசவும் தான் அதிகம் வாட்சப். மற்றபடி குழுக்களில் வருவனவற்றைக் கூடப் படிச்சுட்டுப் பதில் சொல்லத் தோணினாத் தான் சொல்வேன். இல்லைனா சில நாட்கள் போகக்கூட முடியாமல் இருக்கும்.

      நீக்கு
  32. 1. உட்கார்ந்து பொறுமையாக கேட்பேன். கடைசியில் கையும் தட்டுவேன்.
    2. இன்றைய ஸ்பெஷல் என்ற ஐட்டங்கள் பெரும்பாலும் ஏமாற்றம்தான் தந்திருகின்றன.
    3. எனக்கு பிடித்த நிறம் மஞ்சள். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் மாம்பழ மஞ்சள், காரணம் தெரியாது. மஜெந்தாவும் பிடிக்கும். ஒரு விஷயம் தெரியுமா? மஞ்சள் நிறம் பிடித்தவர்கள் உற்சாகமானவர்களாம்.

    பதிலளிநீக்கு
  33. இன்றைய பதிவில் இரண்டாவது படத்தைக் கவிதை என்றேன்.. அந்தக் கவிதைக்கு ஒரு கவிதை..

    காலையிலேயே எழுதி விட்டேன்.. பதிவேற்றம் இப்போது தான்!..

    கன்றோடு கன்றென்று
    கைகூப்பி நின்று
    கனிகின்ற நல்மனம்
    வாழ்கவே நின்று!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் துரை செல்வராஜ் சகோதரரே

      நானும் யதேச்சையாக கருத்து தெரிவித்து விட்டு பின் பார்த்தால், உங்கள் கவிதை வரிகள் என் கருத்துக்கு ஒத்துப் போகின்றன. கவிதை அருமையாய் இருக்கிறது. உங்களுக்கும் என் வந்தனங்கள். 🙏. நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    2. கவிதையும் கருத்துரைகளும் நன்று. நன்றி.

      நீக்கு
    3. அருமையான கவிதை துரை. பொருத்தமான வார்த்தைகள்.

      நீக்கு
  34. அனைத்து கேள்விகளும், அதற்கு பதில்களும் நன்றாக இருக்கிறது.

    சகோ துரை செல்வராஜூ அவர்களின் கவிதையும் நன்றாக இருக்கிறது.


    //மதிய உணவு-சாதம் சாம்பார் ரசம், அரிசி உப்புமா.... போன்றவைகள் என்றால் வேண்டவே வேண்டாம் சப்பாத்தி நூடுல்ஸ் பிரட் ஓகே என்று ஏன் சொல்கிறார்கள்?//

    நீங்கள் சொன்னது போல் விளம்பரம் , மற்றும் மாற்றம் அவர்களுக்கு தேவைபடுகிறது போலும்.

    படகில் நிறைய தடவை பயணம் செய்து இருக்கிறேன். நடுக்கடலில் நின்ற கப்பலில் ஏறி அந்த பெரிய கப்பலை என் அப்பாவுடன் , என் கணவருடன் சுற்றிப்பார்த்து இருக்கிறேன். தூத்துக்குடி துறைமுகத்தில். அப்புறம் ராமேஸ்வரத்தில்.

    பதிலளிநீக்கு
  35. வணக்கம் சகோதரரே

    இன்றைய கேள்வி பதில்கள் எப்போதும் போல் அருமை. அருமையான கேள்விகளை கேட்டவர்களுக்கும், அதை அநாயசமாக எதிர்கொண்டு தக்க பதில்கள் தந்தவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.பாராட்டுக்கள்.நன்றிகள்.

    மூன்று படங்களும் நன்றாக உள்ளது. செல்லங்களுடன் அவர்கள் அடையும் மகிழ்ச்சியான தருணங்களில் நெகிழ்ச்சி அவர்களின் முகங்களில் தெரிகிறது. அதில் கள்ளங்கபடமற்ற குழந்தையும், இளங்கன்றும் உள்ள படம் மிகவும் ரசிக்கத்தக்கதாக உள்ளது. கையெடுத்து அந்த இரு ஜீவன்களை வணங்கலாம் போல நமக்குள் ஒரு நெகிழ்ச்சி உண்டாகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

  36. பாலைப் பொழிந்துதரும் பாப்பா, - அந்தப்
    பசுமிக நல்லதடி பாப்பா;
    வாலைக் குழைத்துவரும் நாய்தான் - அது
    மனிதர்க்குத் தோழனடி பாப்பா.

    பாரதியின் பாப்பா பாடல் நினைவுக்கு வருது, நீங்கள் பகிர்ந்த படங்களை பார்க்கும் போது. குழந்தைகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். பசு கன்றுடன், வளர்ப்பு செல்லம் நாயோடு.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!