வெள்ளி, 29 அக்டோபர், 2021

வெள்ளி வீடியோ : கடல்நிலவாய் காட்சியிலே கலந்து நின்றோம் ப்ரேமையால்

 1960 அக்டோபர் 19 தீபாவளிக்கு வெளியான படம் பாவை விளக்கு.  அகிலனின் கதை கல்கியில் தொடராக வந்தது படமானது.  நல்ல படம் என்று பாராட்டைப் பெற்றாலும் மன்னாதி மன்னன் போன்ற படங்களோடு போட்டி போடமுடியாமல் பெட்டிக்குள் சுருண்டு விட்டதாம்.

 கே சோமு இயக்கத்தில் சிவாஜி கணேசன், சௌகார் ஜானகி, பண்டரிபாய் நடித்த இந்தப் படத்துக்கான பாடல்களை மருதகாசி எழுத கே வி மகாதேவன் இசை.  சி எஸ் ஜெயராமன் பாடிய பாடல்கள் படத்தில்.  இதில் 'ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே', 'வண்ணத்தமிழ்ப் பெண்ணொருத்தி' போன்ற சி எஸ் ஜெ பாடல்கள் இருந்தாலும், நான் பகிர இருப்பது காவியமா நெஞ்சில் ஓவியமா பாடலை.  வண்ணத்தமிழ் பெண்ணொருத்தி என்னருகே வந்தாள் பாடலில் ஆரம்பத்தில் சிவாஜியின் குரலும் ஒலிக்கும்.  கரகர குரலில் வரிகளை பாடுவார்.

கதைச்சுருக்கத்தைப் படிக்கும்போது இந்தப் படத்தின் நாயகனை பார்க்கும் பெண்களெல்லாம் விரும்புகிறார்கள் என்று தெரிகிறது.  

கொஞ்சம் நீண்ட, ஆனால் இனிமையான பாடல்.  பாடல் காட்சியில் நடுவில் சிவாஜி ஷாஜஹானாக வருவார்.

காவியமா நெஞ்சின் ஓவியமா
அதன் ஜீவியமா தெய்வீக காதல் சின்னமா
காவியமா நெஞ்சின் ஓவியமா
அதன் ஜீவியமா தெய்வீக காதல் சின்னமா
காவியமா….

முகலாய சாம்ராஜ்ய தீபமே
முகலாய சாம்ராஜ்ய தீபமே
சிரித்த முகத்தோடு நினைவில் கொஞ்சும் ரூபமெ
முகலாய சாம்ராஜ்ய தீபமே
சிரித்த முகத்தோடு நினைவில் கொஞ்சும் ரூபமே

மும்தாஜ்ஜே… ஏ..ஏ..
மும்தாஜ்ஜே முத்தே என் பேகமே
மும்தாஜ்ஜே முத்தே என் பேகமே
பேசும் முழு மதியே என் இதய கீதமே
பேசும் முழு மதியே என் இதய கீதமே

என்றும் இன்பமே பொங்கும் வண்ணமே
என்னை சொந்தம் கொண்ட தெய்வமே
என்றும் இன்பமே பொங்கும் வண்ணமே
என்னை சொந்தம் கொண்ட தெய்வமெ
அன்பின் அமுதமே அழகின் சிகரமே
ஆசை வடிவமே உலகின் அதிசயமே
அன்பின் அமுதமே அழகின் சிகரமே
ஆசை வடிவமே உலகின் அதிசயமே


என்னாளும் அழியாத நிலையிலே
காதல் ஒன்றையே தான் நாடும் இந்த உலகிலே
என்னாளும் அழியாத நிலையிலே
காதல் ஒன்றையே தான் நாடும் இந்த உலகிலே
கண்முன்னே தோன்றும் அந்த கனவிலே…
கண்முன்னே தோன்றும் அந்த கனவிலே
உள்ளம் கலந்திடுதே ஆனந்த உணர்விலே
உள்ளம் கலந்திடுதே ஆனந்த உணர்விலே
கனியில் ஊறிடும் சுவையை மீறிடும்
இனிமை தருவதுண்மை காதலே
கனியில் ஊறிடும் சுவையை மீறிடும்
இனிமை தருவதுண்மை காதலே
காலம் மாறினும் தேகம் அழியினும்
கதையில் கவிதையில் கலந்தே வாழுவோம்
காலம் மாறினும் தேகம் அழியினும்
கதையில் கவிதையில் கலந்தே வாழுவோம்


அதே 1960 ஆம் வருடம் ஏப்ரல் மாதத்தில் வெளியான படம் தெய்வப்பிறவி.  இந்தப் படம் தெலுங்கில், ஹிந்தியில் மட்டுமல்ல, சிங்கள மொழியிலும் எடுக்கப்பட்டிருக்கிறது.  

தேசிய விருதும் வாங்கி இருக்கிறது.  

கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் சிவாஜி, எஸ் எஸ் ஆர், பத்மினி நடிப்பில் ஆர் சுதர்சனம் இசையில் வெளியான திரைப்படம்.  உடுமலை நாராயணகவி இயற்றிய 'அன்பாலே தேடிய என் அறிவுச் செல்வம் தங்கம்' பாடல் இன்று பகிர்வு.  சி எஸ் ஜெயராமன் - எஸ் ஜானகி பாடிய பாடல்.

பாடல் வரிகள் கொஞ்சம்தான்.  சில வரிகள் மீண்டும் மீண்டும்...  எஸ் ஜானகிக்கு ஹம் செய்வதைத் தவிர வேறு வேலையில்லை.  

அன்பாலே தேடிய என் அறிவுச்செல்வம் தங்கம் 
அம்புலியின்மீது நான் அணிபெறும் ஓர் அங்கம் 

இன்பம் தரும் தேன்நிலவு இதற்குண்டோ  ஆனந்தம் 
ஏகாந்த வேளை வெட்கம் ஏன் வா என் பக்கம் 

உடல் நான்  ஆ.. 
உயிர் நீ ..  ஊஹூம் 
உடல் நான் அதில் உயிர் நீ என உறவுகொண்டோம் நேர்மையால் 
கடல்நிலவாய் காட்சியிலே கலந்து நின்றோம் ப்ரேமையால்

குடம் நிறைமா சறியா பொன்னே  சொல் ஏன் ஜாலம் 
போனால் வராது இது போலே காலம் இனி 

59 கருத்துகள்:

  1. இன்றைக்கு என்ன ஆச்சு... சூப்பர் சூப்பர் ஹிட் பாடல்களைப் பகிர்ந்துகொண்டிருக்கிறீர்களே

    மிக அருமையான காலத்தைக் கடந்து நிற்கும் பாடல்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன இது..   எப்பவுமே அப்படிதானே!    நம் மனதில் நிற்காத பாடல்கள் சூப்பர் ஹிட் இல்லாமல் போய்விடுமா!

      :>))

      நீக்கு
    2. சி எஸ் ஜெயராமன் குரல், சென்ற வருடம் காலமான என்னுடைய அண்ணன் விசுவேஸ்வரனுக்கு மிகவும் பிடிக்கும். இந்த இரண்டு பாடல்களையும், அவர் அதே போன்ற குரலில் பாடுவார்.

      நீக்கு
    3. நேற்றோடு அவருடைய முதல் வருஷாப்தீகம் நிறைவு பெற்றது.

      நீக்கு
  2. காலை வணக்கம் அனைவருக்கும், அல்வா தராமல் அல்ஒஆ கொடுத்த வல்லிம்மாவுக்கும் சேர்த்து

    பதிலளிநீக்கு
  3. :) அனைவருக்கும் இனிய காலை வணக்கம்..
    அன்பு நெல்லைத்தமிழனுக்கு ஸ்பெஷல் காலை வணக்கம்.
    ஏம்மா!! 2008 ல பண்ணின அல்வாவை இப்போ கொடுக்க முடியுமா:))))
    இங்கே எல்லோரும் வாங்கோ. செய்து தருகிறேன்.
    இனிய தீபாவளி வாழ்த்துகளோடு!!!

    பதிலளிநீக்கு
  4. எல்லோரும் என்றும் ஆரோக்கியம், அமைதியை இறைவன் அள்ளித் தரவேண்டும்.

    ஸ்ரீராமுக்கும் வரப்போகும் அனைவருக்கும் நல்ல நாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  5. இரண்டுமே சி எஸ் ஜயராமன் குரலில். மிக அருமை.
    பாவை விளக்கில் 'ஆயிரம் கண் போதாதோ'' பாடல் கூட மிக நன்றாக
    இருக்கும்.
    பாவை விளக்குத் தொடராக வந்த போதே
    படித்தோம்.
    தமிழ் அவ்வளவு சுலபமாகச் சொல்லிக் கொடுத்திருந்தார்கள்
    பள்ளிக் கூடத்தில். கல்கி தான் கிடைக்காது.
    ஒரு வீட்டுக்கு இரண்டு பத்திரிக்கைகள் தான்
    நடுத்தரக் குடும்பங்களின் மாதக் கணக்கில் அடங்கும்.

    கலைமகள், விகடன் உண்டு. அப்பா தபால் அலுவலகத்திலிருந்து
    குமுதம் கல்கி எடுத்து வருவார்.

    பாவை விளக்கின் சந்திரன் பட்ட பாட்டை எல்லாம் நாங்களும்
    அனுபவித்தோம்.
    செங்கமலம்,உமா என்று விரியும் கதா நாயகிகள்.
    எல்லோரும் அவனை விரும்புவார்கள்.

    படத்தில் சிவாஜி,எம் என் ராஜம் பளிச்.
    மற்றபடி கமலா லக்ஷ்மண் நாட்டியம்
    என்று கற்பனைகள் நிறையப் புகுந்தன.

    அகிலன் கதை எல்லாம் சினிமாவுக்கு எடுபடாத நீளம்.
    எப்போழுதும் இரண்டு கதா நாயகிகள் வந்துவிடுவார்கள்.
    அமைதிக்கு ஒரு பெண். ஆர்ப்பரித்து அலைமோத ஒரு
    பெண்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பாவை விளக்கில் 'ஆயிரம் கண் போதாதோ'' பாடல் கூட மிக நன்றாகஇருக்கும்.//

      நானும் சொல்லி இருப்பதோடு சிவப்பு நிறத்தில் எழுத்துகளைக் கொடுத்திருக்கிறேன் பாருங்கள் அம்மா.  அங்கு க்ளிக்கினால் அந்தப் பாடலையும் கேட்கலாம்.

      //எப்போழுதும் இரண்டு கதா நாயகிகள் வந்துவிடுவார்கள்.அமைதிக்கு ஒரு பெண். ஆர்ப்பரித்து அலைமோத ஒரு
      பெண்.//

      அடடே..   நான் இவரின் ஒரு கதை கூட படித்ததில்லை!

      நீக்கு
    2. 😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀காவியமா நெஞ்சின் ஓவியமா.... பாடல்
      எங்கள் குரலில் வெகு நாட்கள் ஒலித்துக் கொண்டிருந்தது.
      ஏதோ ஒரு சோகம் அந்தப் பாட்டில்.
      அந்த இசையே எங்களுக்கு வேறாகத் தெரிந்தாலும் கவர்ந்தது.
      ''காலம் மாறினும் தேகம் அழியினும்
      கதையிலும் கவிதையிலும் கலந்தே வாழுவோம்"

      சந்திரனின் எழுத்தில் மனதைக் கொடுத்த இளம் பெண் உமாவின் சோகம்.
      மிக சுவையான பாடல் .
      ''நீ சிரித்தால் நான் சிரிப்பேன்" பாட்டும் நன்றாக
      இருக்கும்.

      திண்டுக்கல்லில் பார்த்த படம்.

      நீக்கு
    3. எனக்கும் அந்த வரிகள் பிடிக்கும்.  பாடல் குறிப்பாக சரணத்தில்தான் மனதில் அதிகம் இடம் பிடிக்கும்.   நான் இந்தப் படம் பார்க்கவில்லை.

      நீக்கு
    4. செங்கமலம் தேவதாசிப் பெண் கதைப்படி. ஆகவே கமலா லக்ஷ்மணன் அந்தப் பாத்திரத்தில் நடித்தார். சோபிக்கவில்லை என்பார்கள்.

      நீக்கு
    5. கதை ஆரம்பத்தில் வரும் விதவைப்பெண்மணி (கதையில் பெயர் நினைவில் இல்லை)யாகப் பண்டரிபாய் நடித்திருப்பார் என நினைவு. அடுத்துத் தான் செங்கமலம். கௌரி சந்திரனின் முறைப்பெண். இவளைத் தான் திருமணமும் செய்துப்பான். பின்னர் மனைவியுடன் குடித்தனம் வந்த வீட்டின் சொந்தக்காரர் பெண்ணாக உமா/ இந்த உமாவாகத் தான் எம்.என்.ராஜம் நடித்திருந்தார். பாத்திரம் பொருந்தலைனு பலரும் சொன்னார்கள். ஏனெனில் உமா ரொம்பச் சின்னப் பெண். துடிப்பான பெண். கலகலவென்று பேசிக்கொண்டே இருக்கும் பெண்.அந்தப் பாத்திரத்திற்குத் தோற்றத்தில் முதிர்ச்சியைக் காட்டிய எம்.என்.ராஜம் பொருந்தலை என்பார்கள்.

      நீக்கு
    6. உண்மைதான் கீதாமா.
      நாவலின் பாத்திரங்களுக்கும் திரையில் வந்தவர்களுக்கும் சம்பந்தம்
      இல்லாமல் இருந்ததால் தான் படம் சோபிக்கவில்லை.

      நீக்கு
  6. எங்கள் நாளைய பிரபல எழுத்தாளர். அவர் மகன் அகிலன் கண்ணன் முக நூலில்
    பழக்கம் மா.

    அவரின் வேங்கையின் மைந்தன் தொடர் விறு விறுப்பாகச் சென்றது.
    இளங்கோ என்ற கதா நாயகன்,
    வானதி கயல்விழி என்று கதா நாயகிகள் பெயர் என்று நினைக்கிறேன். கீதா வந்து சொல்வார்கள்.

    ஒரு வாரக் கல்கி இதழைப் படிக்க முடியாமல், மதுரை
    சந்தைப் பேட்டை அத்தை வீட்டுக்குச் சென்று
    படித்து விட்டு வந்தேன்.:))
    கொஞ்சம் லூசு என்று அத்தை வீட்டுக்காரரும், அத்தை மகனும் நினைத்திருக்கலாம்!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அகிலன் கண்ணன் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆமாம், அந்தக் காலத்தில் பொழுதுபோக்கு சாய்ஸ் கம்மி வேறு.. கிடைக்கும் புத்தகத்தில் கிடைக்கும் கதைகளை படிக்கும் வாய்ப்பு..

      நீக்கு

    2. வேங்கையின் மைந்தன் ராஜேந்திர சோழன் இலங்கையிலிருந்து மீட்டு வந்த பாண்டி நாட்டுக்கிரீடம், செங்கோல், ரத்தினஹாரம் பற்றிய தகவல்களைத் தாங்கி வந்த கதை அல்லவா? இலங்கை அரசன் மஹிந்தன் அவன் மகள் ரோஹிணி, ராஜேந்திர சோழன் மகள் அருள்மொழி/அருண்மொழி? வேங்கி இளவரசனை மணந்த அம்மங்கை, வந்தியத் தேவன்(இதில் தாத்தாவாக வருவார்) கொடும்பாளூர் இளங்கோ(மின்சாரம் போய்டுத்து) இருவரும் சேர்ந்து இலங்கை இளவரசி ரோஹிணியின் உதவியுடன் பாண்டிய நாட்டுச் சொத்தை மீட்டு வருவது தான் கதை! இளங்கோ/ரோஹிணி ஒருவரை ஒருவர் காதலிக்க அதை அறிந்தும் இளங்கோ மேல் ஏற்கெனவே மனதைப் பறி கொடுத்த அருண்மொழி காத்திருக்கக் கடைசியில் கல்கியில் கதை தொடராக வந்தப்போ ரோஹிணி இறந்துவிடுவதாகக் காட்டி இருப்பாங்க. ஆனால் பின்னாட்களில் புத்தகமாக வெளிவந்தப்போ இருவரையும் இளங்கோ திருமணம் செய்வதாகக் கதை மாற்றப்பட்டிருக்கும். கயல்விழி என்ற பெயரிலேயே ஒரு நாவலும் எழுதி இருக்கார் அகிலன். பாண்டி நாட்டுக் கதை! சோழர்கள் பிடியிலிருந்து பாண்டி நாடு மீண்டு மறுபடி சாம்ராஜ்யம் அமைத்த வரலாற்றின் ஆரம்பம்.

      நீக்கு
    3. ரேவதி மாதிரி நானும் இந்தக்கல்கி, குமுதம், விகடன் பத்திரிகைகளுக்காக அக்கம்பக்கம் வெட்கம் இல்லாமல்/சூடு/சுரணை இல்லாமல் (அப்பாவோட விமரிசனம்) காத்திருந்து புத்தகத்தை வாங்கி வந்து படிப்பேன். பள்ளியில் இருந்து வரும்போதே வீட்டுக்குள் நுழையும்போதே புத்தகம் தான் தேடி ஓடுவேன். மற்றதெல்லாம் அப்புறம் தான்! :)

      நீக்கு
    4. அன்பின் கீதாமா,
      அப்பாடி !!!எழுதி வைத்துக் கொள்கிறேன்.
      கயல்விழி வேற. ரோஹிணி வேற.

      சே. ரொம்ப மோசமான மறதி இது.

      நன்றி நன்றி ஏகத்துக்கு நன்றி.
      பத்ரிக்கை என்று வரும்போது சூடாவது சுரணையாவது.
      நான் ஓடிப் படிப்பதெல்லாம் அம்மாவுக்கு மட்டுமே தெரியும்.
      அப்பா வீடு வரவே ஏழு மணி ஆகிவிடும்:)
      அதற்குள் வீட்டுப் பாடம் எழுதி சாப்பிடவும் உட்கார்ந்து விடுவோம்.:)))

      அப்பா வாங்கி வரும் பக்கோடாவுடன் சாப்பாடு.

      நீக்கு
  7. தெய்வப் பிறவி...... படம் பார்க்கவில்லை.
    சிவாஜி பத்மினி நடிப்பில் வந்த படத்தை
    பின்னால் டிவியில் பார்த்தேனோ.
    பத்மினியின் அழுகையும், அவர் S SR ஐ அடித்ததும்
    பேசும்படத்தில் பேசப்பட்ட விஷயம்.
    பாடல் மிக இனிமை.

    நம் ஊரில் எந்த மேஸ்திரி இது போல கச்சம்
    கட்டி வேட்டி உடுத்துவார் என்று நாங்கள்
    யோசித்த காலம்:)
    தெலுங்கிலிருந்து வந்ததால் இருக்கலாம்!!

    இப்ப எல்லாம் இத்தனை உணர்ச்சிகளை எதிர் கொள்ள முடியுமா
    என்று தெரியவில்லை.

    கவிதை வரிகளும், இசையும் ,கறுப்பு வெள்ளைப்
    பட தீர்க்கமும் மிக அருமை.
    பாராட்டுகளும் நன்றியும் ஸ்ரீராம். நல்ல சாய்ஸ்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் பாவை விளக்கு பார்க்கவில்லை. தெய்வப்பிறவி பார்த்திருக்கிறேன்.  தஞ்சாவூர் ஹவுசிங் யூனிட்டில் மாதாந்திர படமாகப் போட்டார்கள்!

      நீக்கு
    2. நான் இரண்டுமே தூர்தர்ஷன் தயவில் பார்த்த நினைவு.

      நீக்கு
  8. சிலப்பதிகார வரிகள் இன்னும் எத்தனை
    பாடல்களில் வந்ததோ.
    குடம் நிறை மாசறியா பொன்...

    மாசறு பொன்னே வலம்புரி முத்தே...பூம்புகார் படம்

    தெய்வப் பிறவியில் தங்கவேலு எம் சரோஜா, அங்கமுத்து
    காமெடி சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் மாசறு பொன்னே வரிகள் நினைவுக்கு வந்தன. அதே வரிகள் இன்னொரு டி எம் எஸ் பாடலிலும் வரும்.

      நீக்கு
  9. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  10. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்..

    வாழ்க வையகம்..
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  11. கடந்த மூன்று நாளாக காய்ச்சல், நெஞ்சு சளி, இருமல்..

    இரவில் சற்றும் தூக்கம் இல்லை..

    இப்போது தான் வெதுவெதுப்பாக மஞ்சள் பால் குடித்தேன்..

    நேற்று காய்ச்சலான நேரத்திலும் மனம் முணுமுணுத்துக் கொண்டிருந்த பாடல் -
    " வண்ணத் தமிழ்ப் பெண்ணொருத்தி "

    இன்றைக்கு அந்த வகைப் பாடல்களைக் கண்டு மலைத்தேன்.. மனம் களித்தேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு நேற்று முதல் தொண்டையில் எச்சில் விழுங்க முடியா நிலை, தொடர் இருமல்.   நானும் இரண்டு நாட்களாய் தூங்கவில்லை.  வண்ணத்தமிழ்ப் பெண்ணொருத்தி பாடலும் இணைப்பு கொடுத்திருக்கிறேன் பாருங்கள்!

      நீக்கு
    2. துரை அண்ணா, ஸ்ரீராம் இருவரும் உடலநலத்தைப் பார்த்துக்கோங்க.

      கீதா

      நீக்கு
    3. ஶ்ரீராம், நான் முன்னர் சொன்ன பவுடரை வெந்நீரில் போட்டுச் சாப்பிடுங்க. சுக்கு, மிளகு, அதிமதுரம், சித்தரத்தைப் பவுடர்கள்/ அனைத்தையும் கலந்து வெந்நீரில் போட்டுக் கலந்து குடிக்கவும். விரைவில் குணம் தெரியும்.

      நீக்கு
    4. கால நிலை மாற்றத்தால் உடல் நிலை சரியில்லையா இருவருக்கும்?
      உடல்நலத்தை பார்த்துக் கொள்ளுங்கள்.
      தொண்டை கர கரப்புக்கு கீதா அவர்கள் சொன்ன மருந்து பயன் அளிக்கும்.

      நீக்கு
    5. துரைக்கும் உடல்நலம் சரியில்லை என எழுதி இருப்பதை இப்போதே கவனித்தேன். :( உங்கள் உடல் நலத்தையும் கவனித்துக் கொள்ளுங்கள் துரை.

      நீக்கு
  12. ஷாஜஹான் மீது பல விமர்சனங்கள் இருந்தாலும் இப்படியாக மும்தாஜைக் கொஞ்சியதற்காக சும்மா விட்டு விடலாம்..

    ஆனால் - மும்தாஜ் தான் பாவம்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மும்தாஜ் வேறொருவர் மனைவி. ஷாஜஹான் அவளைப் பார்த்து மோகித்துத் தூக்கிக் கொண்டு வந்து காதல் மணம் புரிந்தார்.

      நீக்கு
    2. //மோகித்துத் தூக்கிக் கொண்டு வந்து காதல் மணம் // - வாக்கியமே அர்த்தம் சரியா வரலையே... மும்தாஜ் வராமல் இருந்திருந்தால் அவள் ஹஸ்பண்டுக்கு என்ன ஆயிருக்குமோ... என்னத்த காதலோ என்னத்த மணமுடிப்பதோ... இராமர் காட்டிலிருந்து திரும்ப வருவதற்குள் 14 குழந்தைகளைப் பெற்று முடித்துவிடுவது என்று திட்டமிட்டிருப்பாங்களோ?

      நீக்கு
    3. நெல்லை! தமிழே தெரியலையோ? மோகம் முப்பது நாட்கள் ஆசை அறுபது நாட்கள் என்னும் வழக்கைக் கேட்டதில்லையா? ஷாஜஹான் மும்தாஜ் திருமணமே கட்டாயத் திருமணம்.

      நீக்கு
  13. இரண்டு பாடல்களும் ரசித்த, ரசிக்கும் பாடல்கள். காணொளி பிறகு தான் பார்க்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் சகோதரரே

    இன்றைய வெள்ளி பாடல்கள் மூன்றும் அருமை. மேலும் இனிமை. அடிக்கடி கேட்டிருக்கிறேன். பழைய கால படங்களும், பாடல்களும் இப்போதும் ரசிக்கத்தக்கவைதான். (இது நமக்கு மட்டுந்தானா எனவும் தெரியவில்லை. இப்போதுள்ள இளைய தலைமுறைகளுக்கு இவ்வகையான பாடல்கள் பிடிக்காமல் இருக்கலாம்.) பாடகர்கள் சி. எஸ் ஜெயராமன், கண்டசாலா குரல் வளத்தில் அப்போதுள்ள பாடல்கள் இனிமைதான். இன்றைக்கு பகிர்ந்த பாடல்கள் காலத்தால் அழிக்க முடியாமல் நெஞ்சில் குடி கொண்டவை. இப்போதும் கேட்டு ரசித்தேன். "வண்ணத்தமிழ் பெண்ணொருத்தி" துவக்க இசை மறக்க முடியாதது. இந்த இரு படங்களையும் நான் பார்த்ததில்லை. படங்களைப் பற்றி நீங்கள் தந்த தகவல்களும் சுவாரஸ்யமாக இருந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    காலையிலிருந்து எனக்கு நண்பர்கள் பதிவில் இரண்டு வாரங்களுக்கு முன்பு (அதுவும் உண்மையில்லை) எ. பியில் வேறு பாடல்கள் பகிர்ந்திருப்பதாக காட்டுகிறது. என்னவென்று தெரியவில்லை. என் கைப்பேசிக்கும் வயதாகி விட்டதா? இல்லை கூகுள் தவறா எனத் தெரியவில்லை. அப்படியும் பொறுத்துப் பார்த்து பாடல்களுக்கு (அந்தக்கால படங்களில் வருவது போல) சுவரேறி சுற்றி வந்து விட்டேன். ஹா.ஹா.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      எழுத ஆரம்பித்து விட்டால், கருத்துரை சுருக்கமாக தர இயலவில்லை. இதுவும் பழைய கால திரைப்படங்களின் ஸ்டைல்தான்.ஹா.ஹா.ஹா. பொறுமையாக படிப்பதற்கு நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    2. எனக்கும் காட்டியது ,
      வேறு ஒரு நாள் போட வேண்டிய பாடல் முந்தி கொண்டு வந்து விட்டது போல!

      நீக்கு
  15. இரண்டு பாடல்களுமே நிறைய கேட்டிருக்கிறேன் ஸ்ரீராம். இலங்கை வானொலியின் உபயத்தால். முதல் பாடல் கொஞ்சம் சோகம் இருப்பது போல் தோன்றும்.

    படங்கள் எதுவும் பார்த்ததில்லை பாடல்கள் இடம்பெற்ற படங்கள் கூட இப்போதுதான் தெரிகிறது .

    கீதா

    பதிலளிநீக்கு
  16. இரண்டுமே பிடித்த பாடல்கள். அதிலும் பாவை விளக்குப் படத்தின் பாடல்கள் அனைத்துமே நன்றாக இருக்கும். மீண்டும் ரசித்துக் கேட்டேன்.

    பதிலளிநீக்கு
  17. எப்போவோ பெப்ரவரி/மார்ச்சில் போட்ட ரெசிபிக்கள் (என்னோடது) இன்னமுமா ஓடிட்டு இருக்கு? ஙேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ

    பதிலளிநீக்கு
  18. @ கீதா அக்கா...

    // மும்தாஜ் வேறொருவர் மனைவி. ஷாஜஹான் அவளைப் பார்த்து மோகித்துத் தூக்கிக் கொண்டு வந்து காதல் மணம் புரிந்தார்..//

    அதனால் தான் பாவம் என்றேன்!..
    தவிரவும்,

    மும்தாஜுக்கு முன்னால் ஷாஜகான் மொகலாயர் வழக்கப்படி போட்டுத் தள்ளப் பட்டிருந்தாலோ அல்லது இயற்கையாகவே போய்ச் சேர்ந்திருந்தாலோ மறுபடியும் எவனாவது - பாவப்பட்ட அந்தப் பெண்ணைத் தூக்கிச் சென்றிருப்பான்..

    பதிலளிநீக்கு
  19. இரண்டு பாடல்களும் கேட்டிருக்கிறேன். படம்பார்த்ததில்லை.



    பதிலளிநீக்கு
  20. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  21. பாடல்கள் மிகவும் அருமையான பாடல்கள்.
    காலத்தை வென்ற பாடல்கள்.
    பிடித்த பாடல்கள் கேட்டு மகிழ்ந்தேன்.
    வண்ணத் தமிழ் பாடலும் கேட்டேன்.

    செய்திகளை படித்தேன்.

    இனிமையான பாடல் பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!