வெள்ளி, 18 பிப்ரவரி, 2022

வெள்ளி வீடியோ : உருவங்கள் மாறி விடும்.. உள்ளங்கள் மாறாதே

 படத்தில் ஆறு பாடல்கள்.  நான்கு பாடல்கள் வாலி எழுத, ஒரு பாடல் கண்ணதாசனும், ஒரு பாடல் மாயவநாதனும் எழுதி இருக்கிறார்கள்.

எந்தப் படத்தில்?  "இதயத்தில் நீ" என்கிற படம்.  1963 ல் வெளியான இந்தப் படத்தின் இயக்குநர் முக்தா வி சீனிவாசன்.

ஜெமினி கணேசன், தேவிகா நடித்த இந்தப் படத்துக்கு இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி.

இந்தப் படத்தில் நடித்த ஒரு நடிகரின் பெயர் சட்டாம்பிள்ளை வெங்கட்ராமன்.  அதென்ன சட்டாம்பிள்ளை வெங்கடராமன்? 

தூக்குத் தூக்கியில் ”சட்டாம்பிள்ளை” பாத்திரத்தில் நடித்தார். இது ஒரு கனமான பாத்திரம். யதார்த்தம் பொன்னுசாமிப்பிள்ளை என்ற நடிக மேதையுடன் நடிக்கவேண்டிய கதாபாத்திரம். சிவாஜிகணேசனுக்கு எதிராக அந்த அளவில் சமாளித்து தூக்குத் தூக்கி படத்தில் அவர் சக்கைப் போடு போட்டதை அக்கால நடிகர்கள் மறந்திருக்க முடியாது. இந்த நகைச்சுவைப் பாத்திரத்தில் பிரமாதமாக நடித்து ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டுதல்களை ஒரு முகமாக பெற்று தான் ஏற்ற பாத்திரத்தையே பட்டமாகப் பெற்று கே.என்.வெங்கட்ராமன் ”சட்டாம்பிள்ளை” வெங்கட்ராமன் ஆனார்.

நாம் பார்த்த படங்களில் கதாநாயகன், நாயகி, நகைச்சுவை நடிகர் தவிர வேறு சில முகங்கள் பழகிய முகங்களாய் இருக்கும்.  மற்ற பாடங்களிலும் பார்த்திருப்போம்.  அதுபோல ஒருவர்தான் இவர்.

இவர்தான் சட்டாம்பிள்ளை வெங்கட்ராமன்.



இவரைப்பற்றி மேலும் அறிய ஆர்வமிருந்தால் இங்கு சென்று படிக்கலாம்.

இனி பாடல்களுக்கு வருகிறேன்.

முதலில் சோகமான பாடல்!  பி சுசீலா குரலில் பிரிவைப் பற்றி பாடும் பாடல்.

பழகி வந்த புதிய சுகம் பாதியிலே முடிந்தாலும் 
எழுதி வைத்த ஓவியம் போல் இருக்கின்றாய் 
இதயத்தில் ...  நீ இதயத்தில் நீ.  

உறவு என்றொரு சொல் இருந்தால் 
பிரிவு என்றொரு பொருள் இருக்கும் 
காதல் என்றொரு கதை இருந்தால் 
கனவு என்றொரு முடிவிருக்கும்  

இதயம் என்றொரு இடம் இருந்தால் 
ஏக்கம் என்றொரு நிலை இருக்கும் 
இதயம் என்றொரு இடம் இருந்தால் 
ஏக்கம் என்றொரு நிலை இருக்கும்
இன்பம் என்றொரு வழி நடந்தால்

இதயம் என்றொரு இடம் இருந்தால் 
ஏக்கம் என்றொரு நிலை இருக்கும் 
துன்பம் என்றொரு ஊர் போகும்  

பருவம் என்றொரு கை அணைத்தால் 
பாசம் என்றொரு கை தடுக்கும் 
பருவம் என்றொரு கை அணைத்தால் 
பாசம் என்றொரு கை தடுக்கும் 
பழகு என்றொரு மனம் சொன்னால் 
விலகு என்றொரு முகம் சொல்லும்  

உறவு என்றொரு சொல் இருந்தால் 
பிரிவு என்றொரு பொருள் இருக்கும் 
காதல் என்றொரு கதை இருந்தால் 
கனவு என்றொரு முடிவிருக்கும்



அதே படத்தில் இடம்பெற்ற இன்னொரு பாடல் இந்தப் பாடல் பி பி ஸ்ரீனிவாஸ் குரலில்  இனிமையாக இருக்கும்.  அமைதியான இசை.  அமைதியான குரலில் ஒரு காதல் பாடல்.

பூ வரையும் பூங்கொடியே பூ மாலை போடவா 
பொன் மகளே வாழ்கவென்று பாமாலை பாடவா 
பாமாலை பாடவா  

நீ வரையும் ஓவியத்தை கைகளினால் வரைந்தாயே 
நீ வரையும் ஓவியத்தை கைகளினால் வரைந்தாயே  
நான் வரைந்த ஓவியத்தை கண்களினால் வரைந்தேனே 
நான் வரைந்த ஓவியத்தை கண்களினால் வரைந்தேனே 
வடிவங்கள் மறைந்து விடும் வண்ணங்கள் மறையாதே

கன்னமெனும் கிண்ணத்திலே வண்ணங்களை குழைத்தாயே 
கன்னமெனும் கிண்ணத்திலே வண்ணங்களை குழைத்தாயே  
கொஞ்சி வரும் புன் சிரிப்பில் கொஞ்சம் கொஞ்சம் இறைத்தாயே 
உருவங்கள் மாறி விடும் உள்ளங்கள் மாறாதே


= = = = =

G V in S S ( By KGG)  

1) இந்தத் தலைப்பிற்கு என்ன expansion என்று உங்களால் யூகிக்க முடிந்தால், பின்னூட்டத்தில் சொல்லவும். 

2) இந்தத் தலைப்பிற்கும், சென்ற வார வெள்ளி பதிவில்  GV சாரின் கருத்துகளுக்கும் சம்பந்தம் எதுவும் இல்லை. ஆனால் எழுத்துகளின் பின்னணி நிறம் = clue. 
***  ***  *** 
நான்கு வேதங்களில் மிகவும் பழமையானது ரிக் வேதம். 

அந்த ரிக் வேதத்தின் சில வரிகள் (தமிழில்) 

ரிக் வேதம் 7-55

நாங்கள் ஆயிரம் கொம்புகளோடு, சமுத்திரத்திலிருந்து எழும் காளை மாட்டைக் கொண்டு மனிதர்களை உறங்க வைக்கிறோம் (சூரியன் மறையும் பொழுது)

5-1-8

அக்கினியைத் துதிக்கையில் சூரியனை 1000 கொம்புகள் உடையவன் என்று வருணிக்கிறார்கள் . (அது சூரியன் பற்றியது என்று உரையாசிரியர்கள் குறிப்பிடுவர்.)

5-44-2

ஒளி வீசும் நீ, மானிடர்கள் நலனுக்காக மேகங்களை எல்லாத் திசைகளிலும் பரத்துவாயாக ; நல்ல செயல்களை நடத்தும் நீ, மக்களைக் காப்பவனாகவும் இன்னல் விளைவிக்காதவனும் ஆக இருக்கிறாய். நீ எல்லா மாயைகளுக்கும் அப்பாற்பட்டு சத்தியத்தில் நிலைத்து நிற்கிறாய்.

5-54-5

நாங்கள் சூரியனைப் போல தேயாதவனாக இருக்க வேண்டும் . 

5-54-15

நாங்கள் சூரியனைப் போல ஒளிவிட உன் அருளை வேண்டுகிறோம்.

5-81-5

நீ ஒருவனே உயிருள்ள எல்லா பிராணிகளையும் நடத்துகிறாய்; இவ்வுலகத்துக்கு எல்லாம் நீயே அரசனாக இருக்கிறாய்.

5-81-2

நீ எல்லா உருவங்களையும் ஏற்கிறாய். மனிதர்களுக்கும் கால்நடைகளுக்கும் நலத்தைத் தோற்றுவிக்கிறாய்.

5-82-9

உயிரினங்களுக்கு உயிரளிப்பவன் சவிதா /சூரியன்.

5-82-8

எப்போதும் விழித்திருப்பவன்; இரவையும் பகலையும் முந்துபவன்

7-71-1

கருப்பாயி சிவத்த ஆளுக்கு வழி விடுகிறாள் ( சூரியன் வந்தவுடன் இரவு போய்விடுகிறது) 

= = = = 

படம்: கர்ணன்
இசை: விஸ்வநாதன், ராமமூர்த்தி
வரிகள்: கண்ணதாசன்
குரல்: டி.எம்.எஸ், சீர்காழி கோவிந்தராஜன், திருச்சி லோகநாதன், பி.பி.ஸ்ரீநிவாஸ்
—————————
பாடல் வரிகள்:

ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி!
அருள் பொங்கும் முகத்தைக் காட்டி இருள் நீக்கம் தந்தாய் போற்றி!
தாயினும் பரிந்து சாலச் சகலரை அணைப்பாய் போற்றி!
தழைக்கும் ஓர் உயிர்கட்கெல்லாம் துணைக்கரம் கொடுப்பாய் போற்றி!
தூயவர் இதயம் போலத் துலங்கிடும் ஒளியே போற்றி!
தூரத்தே நெருப்பை வைத்து சாரத்தைத் தருவாய் போற்றி!
ஞாயிறே நலமே வாழ்க நாயகன் வடிவே போற்றி!
நானிலம் உள நாள் மட்டும் போற்றுவோம் போற்றி போற்றி!


= = = = =

92 கருத்துகள்:

  1. எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும்..

    வாழ்க குறள் நெறி..

    பதிலளிநீக்கு
  2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    நல்லருள் சூழ்ந்து எங்கும் நன்மையே நிறைந்து வாழ்க..

    வாழ்க வையகம்..
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  3. இன்றைய பதிவில் இடம் பெற்றுள்ள பாடல்கள் இதயத்தில் நிறைந்தவை..

    சொல்லாமல் சொல்கின்ற சேதிகள் அதிகம்..
    தமிழ் எனும் அழகின்
    ஆனந்த சிகரம்..

    பதிலளிநீக்கு
  4. 4:30 க்கு விழித்ததும் சிறிது நேரம் கஈத்து குறள் தேர்வுடன்
    ஐந்து மணிக்கு தளத்தில் நுழைந்து குறளைப் பதிவு செய்த பின் பதிவுக்கு வந்தால் ஏகப்பட்ட மகிழ்ச்சி..

    காரணம் -
    கவியரசரின் சூரியப்பாமாலை..

    பதிலளிநீக்கு
  5. பூ வரையும் பூங்கொடியே...

    - என்ன ஒரு இனிமையான பாடல்..இதயத்தில் தேனூறும்..

    பதிலளிநீக்கு
  6. ஆனால்,
    இரண்டாவது சரணத்தில் - இறைத்தாயே - என்று இருக்க வேண்டும்..

    பதிலளிநீக்கு
  7. பூ வரையும் பூங்கொடியே..

    - இலங்கை வானொலியில் எத்தனை முறை கேட்டிருப்போம்.. மகிழ்ந்திருப்போம்...

    நாளை நடத்தும்
    நாயகனே அறிவான்!..

    பதிலளிநீக்கு
  8. ஸ்ரீமதி கமலா ஹரிஹரன் அவர்களும் அவர்களது வீட்டில் அனைவரும் நலம் தானே!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நலமாக இருப்பார்கள் என்று நம்புவோம். நலமாக இருக்க வேண்டும் என்று பிரார்த்திப்போம்.

      நீக்கு
    2. வணக்கம் சகோதரரே

      உங்கள் அனைவரின் அன்பான பிரார்த்தனைகளினால் இப்போது ஜுரம் குறைந்து நலமடைந்து வருகிறேன். இரண்டு மூன்று நாட்களாக எதுவும் சரியாக சாப்பிட பிடிக்காததினால்,உடம்பு அசதியாக இருக்கிறது. இதுவும் நாளாக சரியாகி விடும். என் பேத்திக்கும் நேற்றிலிருந்து காய்ச்சல் குறைந்து விட்டது.அவள் எப்போதுமே சரியாக சாப்பிட மாட்டாள். இப்போது கேட்கவே வேண்டாம். இருவரும் நலமாகி விட்டோம்.கவலை வேண்டாம். விரைவில் நார்மலாகி விடுவோம். விரைவில் வருகிறேன்.

      இன்று வழக்கம் போல் எழுந்தவுடன் எ. பியை பார்த்தும், அதில் என் உடல் நிலைப் பற்றி சகோ துரை செல்வராஜ் அக்கறையுடன் விசாரித்திருப்பதை பார்த்ததும், கண்களில் கண்ணீரே வந்து விட்டது. நல்ல அன்பான சகோதர சகோதரிகளை வலைத்தளத்தின் மூலம் இப்பிறவியில் எனக்குத் தந்த இறைவனுக்கு நான் மிகவும் நன்றியை தெரிவித்து கொண்டேன்.🙏. அன்பு நிறைந்த உங்களனைவருக்கும் என் அன்பான நன்றிகள்.🙏.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. விரைவில் பூரண நலம் பெற வாழ்த்துகள்.

      நீக்கு
  9. அன்பின் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    ஆரோக்கியம் நிறைந்த வாழ்வு எல்லோருக்கும்
    கிடைக்க இறைவன் அருள வேண்டும்.

    பதிலளிநீக்கு
  10. இதயத்தில் நீ படம் பாடல்களுக்காகவே
    பாராட்டப் பட்ட படம்.
    நடிகை தேவிகாவுக்காக

    கவிஞர் எழுதிய பாடல்களைக் கவிஞரின் மகன்
    சிலாகித்து சொல்வார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் பெயர் அண்ணாதுரை. "டேய் அண்ணாதுரை!" என்று அவனைக் கூப்பிடும் பொழுதெல்லாம் எனக்கு ஒரு மாதிரி இருக்கும் என்பார் கவியரசர்.

      -- இது தான் கவிஞரின் மென்மையான மனோபாவம்.

      "அண்ண்ன் காட்டிய வழியம்மா.. இது அன்பால் விளைந்த...."

      நீக்கு
  11. // உறவு என்றொரு சொல்லிருந்தால்
    பிரிவு என்றொரு பொருளிருக்கும் //
    பாடலைப் பள்ளி இடைவேளையில்
    பாடிப் பார்ப்போம். சுசீலா அம்மாவின் குரல்

    பலவித உணர்ச்சிகளைப் புலப்படுத்தும். அருமையான வரிகள். மிக உயர்ந்த இசை.
    அது ஒரு பொற்காலம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுசீலாம்மாவின் குரலால் உயிரூட்டப்பட்ட பாடல்.

      நீக்கு
  12. சட்டாம்பிள்ளை வெங்கட் ராமன் ,
    ''அப்பா,
    மகனே,
    அந்த தண்ணியை இங்க கொண்டுவையப்பா:)

    தூக்குத் தூக்கி படம் என்றும் மறக்க முடியாது.
    நல்ல நடிகரை நினைவுக்குக் கொண்டு வந்ததற்கு மிக நன்றிமா ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  13. நீங்கள் கொடுத்த லிங்க் சென்று பார்த்தேன். இத்தனை விவரங்கள் படங்களுடன் ஒரு வலைப்பதிவை இதுவரை நான் பார்த்ததில்லை.
    மிக மிக நன்றி ஸ்ரீராம்.
    மிக நல்ல நடிகர்.
    சட்டாம்பிள்ளை நல்ல பெயர் தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி வல்லிம்மா.


      //இத்தனை விவரங்கள் படங்களுடன் ஒரு வலைப்பதிவை இதுவரை நான் பார்த்ததில்லை.//


      நானும்!

      நீக்கு
  14. வாலியின் கவி வரிகள் மிக அருமை.
    தமிழ் தான் எத்தனை இனிமை. இவர்கள் மனங்களிலிருந்து நம்மை வந்தடையும்
    வார்த்தைகளுக்குத் தான் எத்தனை பலம்!!!

    ஒரு பாடலைக் கூட நான் மறக்கவில்லை.
    மிக நன்றி மா.
    ''உருவங்கள் மாறீவிடும் உள்ளங்கள் மாறாதே''
    எத்தனை உண்மை. ஜெமினியின் நடிப்பு மிக சிறப்பு.
    உண்மையில் மென்மையான காதல் மன்னன்,.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் அந்த வரிதான் மிகவும் பிடித்திருந்தது. வரிகளுக்கும், ஜெமினியின் நடிப்புக்கும் ஏற்றவாறு பி பி எஸ்ஸின் மென்மையான குரல்.

      நீக்கு
  15. அனைவருக்கும் காலை/மாலை/மதிய வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். நான் 3 வேளைக்கும் வணக்கம் சொல்ல ஆரம்பிச்ச பின்னால் நெல்லையைக் காணவே முடியலை. அதே போல் கமலா/கோமதி அரசு ஆகியோரும்! அனைவரும் நலமே என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொன்ன அனைவரும் இங்கே வருகை தரவேண்டும் என்று வரவேற்போம்.

      நீக்கு
    2. வந்துட்டேன்... நீங்க மதிய வணக்கம் போடுவீங்க என்பதற்காக இப்போ வந்தேன்.

      நீக்கு
    3. உங்கள் கோரிக்கை பலித்து கோமதி அரசுவைத் தவிர்த்து மற்ற இருவரும் வந்துட்டாங்க கௌதமன் சார்!

      நீக்கு
    4. வாங்க நெல்லை. மதியம் என்பது 3 மணி வரை அல்லது நாலு? இருக்கு இல்லையா?

      நீக்கு
  16. சாப்பாடு ஒத்துக்காம எனக்கும் வயிற்றுத் தொந்திரவு (அடிக்கடி வருவது தானே என யாரோ சொல்றது கேட்குது! )வந்து ஞாயிறு/திங்கள்/செவ்வாய் 3 நாட்களும் ரொம்ப சிரமப்பட்டேன். உட்காரக் கூட முடியாமல் வயிற்று வலி. இப்போ நேற்றில் இருந்து பரவாயில்லை.

    பதிலளிநீக்கு
  17. போன வார வெள்ளிக்கிழமைப் பதில் போய்ப் பார்த்தேன்/பார்த்துக் கொண்டிருக்கேன். ஒண்ணும் மண்டையில் ஏறலை. :( இந்த வாரப் பாடல்கள் கேட்டவை தான். சட்டாம்பிள்ளையைப் பற்றி இன்று அறிந்து கொண்டேன். சுட்டியில் இனித் தான் போய்ப் பார்க்கணும். சூரிய வழிபாடு பற்றிய கேஜிஜியின் விவரங்கள் அருமை. கர்ணன் படத்தின் இந்தப் பாடலும் ரொம்பப் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் கீதாமா,

      என்னப்பா. எல்லோருக்கும் உடல் நலம் சரியாக வேண்டும். கோமதி கூட
      உடல்வலியால் அவஸ்தைப் படுவதாக
      கீதா ரங்கன் சொன்னார்.

      கவலையாக இருக்கிறது கமலா ஹரிஹரன், நீங்கள் ,கோமதி அனைவரும் சீக்கிரம்
      உடல் நலம் பெற வேண்டும்.
      பத்திரமாக இருங்கள்.

      நீக்கு
    2. //சூரிய வழிபாடு பற்றிய கேஜிஜியின் விவரங்கள் அருமை இ ல் லை // ஹா ஹா. காரணம்... ஒரிஜினல் வரிகளையும் மொழிபெயர்ப்பையும் சேர்த்துப் போட்டால்தான் என்னான் கமெண்ட் செய்யமுடியும். 'மறை' எதையும் நேரிடையாகச் சொல்லாது. அதனைக் கூர்ந்து கவனித்துப் புரிந்துகொள்ளவேண்டும்.

      என்னிடம் ஒரு தடவை என் மாமனார், ஆச்சு வயசு.. எப்போ போவோம்னு இருக்குor something like this சொன்னார். நான் சொன்னேன்..தினமும் சந்த்யாவந்தனத்தில், இறைவா நான் இன்னும் நூறு வருஷங்கள் சூரியனைப் பார்க்கணும், இன்னும் நூறு வருஷங்கள் வாழணும்... என்று மந்திரம் சொல்றீங்க. அப்போ ப்ரார்த்தனை செஞ்சுட்டு, இப்போ போகணும்னா இது கடவுளுக்கே குழப்பமா இருக்காதா என்றேன். மந்திரத்தின் ஓரளவு பொருள் புரிந்தால் போதும்...தமிழில் சொல்லணும்னு அவசியமில்லை.. அவ்வளவு ரசனையாகவும் இருக்காது என்பது என் எண்ணம்.

      சுகந்தி என்று பெண்ணைக் கூப்பிடுவதற்கும், வாசனையானவளே என்று கூப்பிடுவதற்கும் உள்ள வித்தியாசம்தான்

      நீக்கு
    3. இருக்கும்வரையிலும் சூரியனைப் பார்த்துக் கொண்டும் வணங்கிக் கொண்டும் இருக்கணும் என்பதற்காக உங்க மாமனார் சொல்லி இருக்கலாம். இப்போ நமக்கு எவ்வளவு மனக்கசப்பு, வருத்தம், வேதனை இருந்தாலும் குளிக்கவோ/சமைக்கவோ/சாப்பிடவோ செய்யாமல் இருக்கோமா? அது பாட்டு நடக்கிறது இல்லையா? ப்ரார்த்தனை என்பது தினசரிக்கடமைகளில் ஒன்று. அதில் உள்ள வரிகளும் அதன் அர்த்தங்களும் ஏற்கெனவே உள்ளவை. அதைத் திடீரென மாற்றவா முடியும்? அவருக்கு அது தானாகவே வரும். இது சொல்வது அவரது தனிப்பட்ட வேண்டுமோள்.

      நீக்கு
  18. தூயவர் இதயம் போலத் துலங்கிடும் ஒளியே போற்றி!
    தூரத்தே நெருப்பை வைத்து சாரத்தைத் தருவாய் போற்றி!''''''''

    உயிரோட்டமான கண்ணதாசனின் பாடல். வேதம் போலவே ஒலித்த பின்னணிக் குரல்கள். எங்கள் உள்ளங்களை அப்போது அதிர வைத்துக் கவர்ந்த
    வரிகள்.

    ஆதித்ய ஹ்ருதயம் என்னும் ஸ்லோகத்தை எங்கள் அப்பா
    தினமும் எங்களை ஒப்பிக்க சொல்வார்.
    சூரியனே நம் எல்லோருக்கும் சாட்சி ,
    காப்பவன், அளிப்பவன் என்ற பொருள்பட
    இந்தப் பாடலும் மனத்தை நிலை பெற வைக்கும். கண் முன்னே தோன்றும்
    கடவுள் கதிரவன்.
    மிகப் பாசிட்டிவான பாடலுக்கு நன்றி மா ஸ்ரீராம்.


    கௌதமன் சார் சொல்லி இருப்பதை என்னால்
    யூகிக்க முடியவில்லை மா.

    வேத வார்த்தைகளைப் படித்ததில் மிக மகிழ்ச்சி.
    வாழ்வை வளமாக்கும் இறைவனுக்கு நன்றி.

    இசைக்கு நன்றி. அன்பு வாழ்த்துகள் மா.



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்துகளுக்கு நன்றி.

      நீக்கு
    2. ச்சாயா ஸ்ம்ஜ்ஞா ஸமேத ஸ்ரீ ஸூர்ய
      நாராயண ஸ்வாமிநே நம:

      ஒருவனே கடவுள் என்று குறுகி விடாமல் எல்லா இயற்கை படைப்புகளிலும் இறைவனைப் பார்த்தது வேத கால நாகரீகம்.

      நீக்கு
    3. //ஒருவனே கடவுள் என்று குறுகி விடாமல்// - வேத கால நாகரீகம் 'ஒ ரு வ ன் தா ன் க ட வு ள்' என்று சொல்கிறது. நாராயண பரோ ஜ்யோதிர் ஆத்மா நாராயண பர:, சஹஸ்ர ஸீர்ஷா புருஷ: ஸஹஸ்ராக்ஷ ஸஹஸ்ர பாத்.... என்று எதை எடுத்துக்கொண்டாலும், ஒருவனே தேவன் என்றே சொல்கின்றன.

      நீக்கு
    4. கடவுள் வேறு - தேவன் வேறு

      (இது இன்னும் குழப்பலாம்)

      நீக்கு
    5. பஞ்ச பூதங்கள் தாம் வேத கால கடவுளர்கள்.

      நீக்கு
    6. வேத காலத்தின் பிற்பகுதியில் வசுக்கள், ருத்திரர்கள், ஆதித்தர்கள் + இந்திரன், பிரகஸ்பதி என்று 33 கடவுளரை வழிபட்டதாகத் தெரிகிறது.

      நீக்கு
    7. பிரஜாபதி என்று திருத்தி வாசிக்க வேண்டுகிறேன்.

      நீக்கு
  19. இன்று அழகான பாடல்கள். நல்ல இசை. அமுதமான குரல்.

    லதா மங்கேஷ்கர்தான் எல்லாம் என்பதுபோல அவரைத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுபவர்களுக்கு சுசீலாவைத் தெரியுமா? அவரது சாதனைகள்தான் புரியுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏகாந்தன் சார். நீங்கள் கேட்டிருப்பது தீர்க்கமான கேள்வி. அதற்கான காரணங்கள் உண்டு. சொன்னால் பலருக்கு கசக்கும். விட்டுத் தள்ளுங்கள்...

      நீக்கு
    2. ஹிந்தியில்  லதா மங்கேஷ்கர் பாடிய நிறைய பாடல்களை தமிழி பி சுசீலா பாடி இருப்பார்.  சட்டென எனக்குப் பிடித்த இரண்டு பாடல்களை இங்கே சொல்கிறேன்.  இரண்டுமே ஒரே படம்.  தமிழில் யார் நீ?  ஹிந்தியில் Woh Kaun Thi/  எனக்கு தமிழ் வெர்ஷன்தான் மிக நன்றாய் இருப்பதாகத் தோன்றும்.

      https://www.youtube.com/watch?v=9w5iETwBs2o
      https://www.youtube.com/watch?v=jvG7oj-U2Lc

      https://www.youtube.com/watch?v=TFr6G5zveS8
      https://www.youtube.com/watch?v=YmtqemtBX5U

      நீக்கு
    3. இருவருமே அவரவர் பாணியில் சிகரத்தை எட்டியவர்கள். ஹிந்தியில் வாணி ஜெயராம் சோபிக்க முடியாமல் போனதுக்கு லதா மங்கேஷ்கர் காரணம் என்பதைப் போல் தமிழிலும் சோபிக்க முடியாமல் போனதுக்கு சுசீலாவைச் சொல்வோமா? அல்லது சொல்கிறோமா? :))))) பாலிவுட் திரைப்படத்துறையில் கவிதா கிருஷ்ணமூர்த்தி கூட ரொம்பக் கஷ்டப்பட்டிருக்கார் முன்னிலைக்கு வர.

      நீக்கு
    4. @ ஜீவி, @ கீதா சாம்பசிவம், @ கௌதமன், @ ஸ்ரீராம் :

      இது ஒரு டெலிகேட் சப்ஜெக்ட். Pandora's box . திறந்தால் நார்த்-சவுத் என என்னென்னவோ வந்து விழும் ! இருந்தும் உண்மைகள் என சில உண்டுதானே..

      சுசீலா ஒரு அபூர்வமான திறன் கொண்ட பாடகி. தமிழில் நிறையப் பாடியிருக்கிறார் என்பதால் அவரைப் புகழவில்லை. அவரது குரலோடு, இதமான ஹம்மிங், தமிழ் உச்சரிப்பு என நிறைய அடுக்கலாம்..லதா மங்கேஷ்கர் ஒரு பாடகியாக, வடக்கத்தி அசடுகளால் over-rated என்பது என் நீண்டநாள் அபிப்ராயம். நான் அவரது திறமை, சாதனையைக் குறைக்க முயற்சிக்கவில்லை. (கிரிக்கெட் உலகில் கவாஸ்கர் வளர்ந்து வரும் (அந்தக்கால) நட்சத்திரங்களான கபில்தேவ், ஸ்ரீகாந்த், திலிப் தோஷி போன்றோரைக் காலை வாரிவிட்டு அவ்வப்போது வேடிக்கை பார்த்ததுபோல்), (வாணி, கவிதாவுக்க்கு முன்_ கீதா தத் என்கிற சூப்பர்-டேலண்ட்டட் சிங்கரை வளரவிடாமல் விஷமம் செய்து தடுக்கிவிட்டுக்கொண்டிருந்த அம்மணிதான் இந்த லதா.

      கீதா தத்! நான் என்ன சொல்வேன்... எப்பேர்ப்பட்ட குரல். ’பாபுஜி தீரே சல்னா.. ப்யார் மே.. zara ஸம்பல்னா... (கேட்டிருக்கிறீர்களா!), அப்புறம், அந்த ஒரு மாதிரி தாக்கத்தைத் தரும் சுரய்யாவின் குரல்... அடடா.. திறமை, கலை எனப் பார்த்தால், இவர்களுக்குப் பக்கத்தில்கூட லதாவினால் வந்து நிற்கமுடியாது என்பது என் மனம் சொல்வது.

      நீக்கு
    5. கீதா தத்தின் குரல் மிகவும் இனிமை. லதாவை விட உஷாவின் குரல் இனிமை. அவர் இன்னும் வெர்சடைல்.
      சுசீலாவின் குரலின் சிறப்பு மெல்லிய குரலாக இருந்தாலும் ஷ்ரீக் இல்லாத கனமான குரல்.

      நீக்கு
    6. ஷ்ரேயா கோசலோடு ஒப்பிட்டால் லதா ஒன்றுமில்லை என்றுதான் கூற வேண்டும்.

      நீக்கு
    7. @கீதா அக்கா: வாணி ஜெயராம் தமிழில் சோபிக்கவில்லையா? யார் சொன்னார்கள்? எம்.எஸ்.வி. மட்டுமல்ல, இளையராஜா, சங்கர் கணேஷ், போன்றவர்களின் இசையமைப்பிலும் நிறைய பாடியிருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராட்டி, ஒரியா போன்ற பல மொழிகளில் பாடியிருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் வருகைக்குப் பிறகு இவர்களுக்கும் வயதாகி விட்டது. அவர் கணவரின் மறைவுக்குப் பின்னர் புட்டபர்த்தியில் செட்டிலாகி விட்டார் என்று கேள்வி.

      நீக்கு
    8. // ஷ்ரேயா கோசலோடு ஒப்பிட்டால் லதா ஒன்றுமில்லை என்றுதான் கூற வேண்டும்.// கரெக்ட்.

      நீக்கு
    9. @ஏகாந்தன், கீதா தத், சுமன் கல்யாண்பூர், சுரய்யா ஆகியோரின் குரல்களில் வந்த பாடல்களையும் கேட்டிருக்கேன். பொதுவாக நான் லதாவின் குரலை அவ்வளவாய் ரசிப்பதில்லை. :) வெகுஜனக் கருத்து அவரைப் போற்றிக் கொண்டே இருப்பது.

      நீக்கு
  20. திரைப்பட ஆய்வில் முனைவர் பட்டம் வாங்கி இருப்பார் போல. அந்தச் சுட்டியில் உள்ள விஷயங்கள் ஆச்சரியம் அளிக்கின்றன. நல்ல ஆராய்ச்சி தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாமே சிறப்பான பாடல்கள் ஜி
      சுட்டிக்கு செல்கிறேன்...

      நீக்கு
  21. //அக்கினியைத் துதிக்கையில் சூரியனை 1000 கொம்புகள் உடையவன்//
    //ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி!//
    வேதத்தில் சூரியன் ஆண்பால். ஆனால் கவிஞரோ "தாயே" என்று பெண்பாலாக்கி விட்டார். மேலும் சூரியன் கர்ணனின் தந்தையும் கூட. இவ்வாறு தாயே என்பதில் வேறு ஏதேனும் அர்த்தம் உளதோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாமும் இவரைக் குழப்புவோமே, நம்ம பங்குக்கு.

      சந்திரன் என்பது ஆண் பால் (அவனுக்கு மனைவி உண்டு).

      ஆனால் நாம் சந்திரனை எப்போதுமே பெண்ணுக்கு உவமையாகச் சொல்கிறோம்.

      ஏன் இந்த முரண்பாடு?

      நீக்கு
    2. அது ஏன் ஜேகே அண்ணாவுக்கு மட்டும் எது சொன்னாலும்/எழுதினாலும் அதில் ஏதேனும் உள்ளர்த்தம் இருப்பதாகவே தோன்றுகிறது?!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

      நீக்கு
    3. // வேதத்தில் சூரியன் ஆண்பால். ஆனால் கவிஞரோ "தாயே" என்று பெண்பாலாக்கி விட்டார். //
      கண்ணனை பாரதியார், தெய்வமாக, குழந்தையாக, காதலியாக சேவகனாக எல்லாம் வைத்துப் பாடவில்லையா? அது போலதான் இது. தன்னுடைய தாய் யார் என்று தெரியாத கர்ணனுக்கு சூரியன் தாயுமானவர்தானே!!

      நீக்கு
    4. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
      மெய்ப்பொருள் காண்பது அறிவு.

      நீக்கு
    5. ஒரு முறை மும்பையில் பானு என்னும் பெயரை முதல் முறையாக கேட்பதாக கூறிய ஒரு சிறுமியிடம் பானு என்றால் சூரியன் என்று பொருள் என்றதும் சூரியன் ஆண், ஒரு ஆணின் பெயரை பெண்ணாகிய நீ எப்படி வைத்துக் கொள்ளலாம் என்று கேட்டாள்.

      நீக்கு
    6. இங்கு கேரளத்தில் பானு என்ற பெயர் கொண்ட ஆண்கள் உண்டு, ஒருவர் என்னுடைய அலுவலகத்தில் பணி புரிந்தார்.
      Jayakumar

      நீக்கு
    7. என் அலுவலகத்தில் என்னோடு வேலை பார்த்தவர் பெயர் இந்திரபானு. எங்கள் ஊரில் ஒரு ஹோட்டல் உரிமையாளர் பெயர் உதயபானு.

      நீக்கு
  22. இனிமையான பாடல்கள்... முதல் பாடல் பிரிவாற்றாமை அதிகாரத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்களில் ஒன்று...

    பதிலளிநீக்கு
  23. 'சென்ற வார வெள்ளி பதிவில்...'

    'இலக்கிய சாரல்' என்று தலைப்பிடலாம்.

    பதிலளிநீக்கு
  24. கர்ணன் படப் பாடல்கள்.... மறக்கவே முடியாதவை.

    நம் மனசு இருக்கும் நிலையைப் பொறுத்து ஒவ்வொரு பாடலும் நமக்கு ஒவ்வொரு விதமான உணர்வை அளிக்கும். உள்ளத்தில் நல்ல உள்ளம்... நம் மனம் நெகிழ்வு நிலையில் இருந்தால் கண்ணில் நீர் வருவதைத் தடுக்க இயலாது.

    பதிலளிநீக்கு
  25. இம் மூன்று பிரபல பாடல்களும் நான் கேட்டிருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  26. நலமற்றிருக்கும் எ பி அன்புள்ளங்கள் அனைவரும் உடல் நலமாக வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  27. பூ வரையும் பூங்கொடியே மிகவும் இனிமையான பாடல். உறவு என்றொரு சொல் இருந்தால் பாடலும் நிறைய கேட்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  28. ரிக் வேதத்தின் பொருள் சிறப்பு!

    பதிலளிநீக்கு
  29. பாடல்கள் எல்லாம் நல்ல தேர்வு.
    அடிக்கடி கேட்க்கும் பாடல்கள் தொலைக்காட்சியில் இப்போது பழைய பாடல்கள் நிகழ்ச்சியில்.

    பதிலளிநீக்கு
  30. இவர்தான் சட்டாம்பிள்ளை வெங்கட்ராமன் அவர்கள் "காதலுக்கு மரியாதை" படத்தில் நடித்தார் பார்த்தேன். பாட்டும் ஆட்டமும் ஆடுவார் படத்தில் ஷாலினியுடன்.

    பதிலளிநீக்கு
  31. இரு பாடல்களும் கேட்டிருக்கிறேன். நல்ல பாடல்கள்.

    சட்டாம்பிள்ளை வெங்கட்ராமன் பல படங்களில் பார்த்திருக்கிறேன். அவரைப் பற்றிய தகவல்கள் வியக்க வைக்கின்றன எழுதியவரையும் பார்த்து வியக்கிறேன். நானும் ஒரு சினிமா ரசிகன் தான் என்றாலும் அதை எழுதிய அன்பரின் ஆர்வம் வியப்புதான்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதை எழுதிய அன்பரின் ஆர்வம் வியப்புதான். ஆம்.

      நீக்கு
  32. கர்ணன் படப் பாடலைத் தவிர மற்ற இரண்டும் கேட்டதில்லை.

    முதல் பாடல் வேறு ஏதோ ஒரு பாடலின் மெட்டை நினைவுபடுத்துகிறது

    இரண்டாவது பாடலை ரொம்ப ரசித்தேன். அழகான ராகம் பிருந்தாவன சாரங்கா!!! மயக்கும் ராகம்.

    கீதா

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!