சனி, 30 ஜூலை, 2022

15 வயது ; 33 லட்சம்; ஆனால்.. மற்றும் நான் படிச்ச கதை

 நாக்பூர் : நாக்பூரைச் சேர்ந்த 15 வயது சிறுவனை அமெரிக்க நிறுவனம் ஒன்று, 33 லட்ச ரூபாய் சம்பளத்துக்கு பணியமர்த்தியும், அவரால் பணியில் சேர இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது.


மஹாராஷ்டிராவின் நாக்பூரைச் சேர்ந்த பள்ளி மாணவன் வேதாந்த் தியோகேட், இணையதள வடிவமைப்பு தொடர்பான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் அமெரிக்க நிறுவனம் ஒன்று வெளியிட்ட 'இன்ஸ்டாகிராம்' இணையதள வடிவமைப்புக்கான போட்டி குறித்த விளம்பரத்தைப் பார்த்துள்ளார்.இரண்டு நாட்களுக்குள் 2,000க்கும் மேற்பட்ட 'கம்ப்யூட்டர்' கோடுகளை எழுதி போட்டியில் பங்கேற்ற வேதாந்த், அதில் வென்றார்.

1,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்தப் போட்டியில் வென்ற வேதாந்த்தை, அமெரிக்க நிறுவனம் தங்களது மனிதவள மேம்பாட்டுக் குழுவில், ஆண்டுக்கு 33 லட்சம் ரூபாய் சம்பளத்தில் பணியாற்ற தேர்வு செய்தது. துரதிர்ஷ்டவசமாக வேதாந்துக்கு 15 வயதுதான் ஆகியுள்ளது என்பதை அறிந்த அந்நிறுவனம், வேலைவாய்ப்பை திரும்பப் பெற்றது.

இருப்பினும், அந்நிறுவனம் வெளியிட்ட செய்தியில், 'நம்பிக்கை இழக்க வேண்டாம். உங்கள் அனுபவம், தொழில்முறை மற்றும் அணுகுமுறை ஆகியவற்றால் நாங்கள் ஈர்க்கப்பட்டோம். 'பள்ளிக் கல்வியை முடித்த பின் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்' என, வேதாந்திடம் உறுதி அளித்துள்ளது.
===============================================================================================================================

ராய்ப்பூர் : சத்தீஸ்கரில் சாலையோரத்தில் இருந்து எடுத்த 45 லட்சம் ரூபாயை, போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்த போக்குவரத்து போலீஸ்காரரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் அருகே நவா ராய்ப்பூரின் கயாபந்தா போக்குவரத்து பிரிவில் கான்ஸ்டபிளாக பணியாற்றுபவர் நிலம்பர் சின்ஹா. இவர், நேற்று காலை மானா நகரில் சாலையோரத்தில் கேட்பாரற்று கிடந்த ஒரு பையை எடுத்து ஆய்வு செய்தார். அதில், 45 லட்சம் ரூபாய் பணம் இருந்தது. அதை, அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தார். ராய்ப்பூர் மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் நிலம்பர் சின்ஹாவை பாராட்டினர். அவருக்கு பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது. பணம் இருந்த பை யாருக்கு சொந்தமானது என விசாரணை நடக்கிறது
==============================================================================================================

கரூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வெண்ணைமலை பகுதி யில், தொடர்ச்சியாக நிலத்தடி நீருக்குப் பற்றாக்குறை ஏற்பட்டதால், மழை நீரை சேகரிப்பதற்கான அமைப்பை ஏற்படுத்திஉள்ள துரைசாமி: இதில் சேகரிக்கப்படும் மழை நீரை என்னுடைய தோட்ட பாசனத்துக்குப் பயன்படுத்துவதோடு குடிநீர், குளியல் உள்ளிட்ட அன்றாடத் தேவைகளுக்கும் பயன்படுத்துகிறேன்.


எங்கள் தோட்டத்துக்குப் பக்கத்துலேயே, 50 சென்ட் நிலம் வாங்கிப் போட்டிருந்தேன். இங்கு தான் என்னோட அச்சகம் செயல்படுது. இந்தக் கட்டடத்தோட மொட்டை மாடி பரப்பு, 20 அடி அகலம், 80 அடி நீளம்.கடந்த 2017ல் என் தோட்டத்துல இருந்த கிணற்றில் தண்ணீர் வற்றி விட்டது. மழை நீரை சேமிக்க, 20 ஆயிரம் சதுர அடி பரப்பில் ஓர் அமைப்பை ஏற்படுத்தினேன். அதிலிருந்து வரும் நீரை சேமிக்க ஒண்ணேகால் லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைத் தொட்டியை உருவாக்கினேன். இதில் சேகரமாகும் தண்ணீரை மரங்களுக்குப் பாய்ச்சுறேன். ஒரு முறை இங்கு மழை பெய்தால், அது எங்களுக்கு இரண்டு முறை மழை பெய்த மாதிரியான பலனைக் கொடுக்கிறது. இந்தத் தொட்டி நிரம்பி வழியும் அளவுக்கு மழை பெய்யும்போது, அந்த உபரி நீரை பூமிக்குள் விட அதற்கு தனியாக ஒரு அமைப்பை ஏற்படுத்தியிருக்கேன். 14 அடி சுற்றளவு, 16 அடி ஆழத்துக்கு ஒரு கிணறு தோண்டி, அதில் வெண் கற்களைக் கொட்டி இருக்கேன். இப்படி செய்ததால், நிலத்தடி நீர்மட்டம் நாங்களே ஆச்சரியப்படுற அளவிற்கு உயர்ந்து இருக்கிறது. தண்ணீர் வற்றிப் போன, 550 அடி போர்வெல்லில், 15 அடியிலும், வற்றிப் போன, 35 அடி கிணற்றில், 10 அடி ஆழத்துலேயும் தண்ணீர் சலசலக்குது.இதற்கிடையில், 2020ல் வீடு கட்டினோம். இதோட மொட்டை மாடியில பெய்யும் மழை நீரை ஒரு குழாய் மூலமா கொண்டு வந்து சேகரிச்சு, அதை இயற்கையான முறையில சுத்திகரிச்சு குடிநீரா பயன்படுத்தக்கூடிய ஓர் அமைப்பையும் ஏற்படுத்தியிருக்கேன். இதில், இயற்கையாக வடிக்கப்பட்டு வர்ற தண்ணீர், அவ்வளவு குளிர்ச்சியாக இருக்கும். குடிநீருக்குப் போக மீதமுள்ள தண்ணீரை சமையல் செய்ய, குளிக்க, துணி துவைக்க பயன்படுத்துகிறேன்.எல்லாருமே இப்படி யோசித்து, அவரவர் வசதிக்கேற்ப, மழை நீரை சேகரிக்கலாம்!

============================================================================================================================

  

நான் படிச்ச கதை

ஜெயக்குமார் சந்திரசேகரன்

 

முன்னுரை

லிங்கம்கட்டி ஒரு விளக்கம்.

சிறு வயதிலேயே லிங்க தீட்சை பெற்று கழுத்தில் லிங்கம் அணிவிக்கப்பட்டவர். இது இஷ்ட லிங்கம் எனப்படுவதாகும். அதிகாலையில் காலைக்கடன்களை முடித்து இந்த லிங்கத்திற்கு பூஜை செய்த பின்னரே மற்ற காரியங்களை கவனிக்க வேண்டும். தீவிர சைவர்.

ஆழ்ந்த தத்துவம் உள்ள கதை இது.

 நந்த வனத்திலோ ராண்டி - அவன்

நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி

கொண்டுவந் தானொரு தோண்டி - மெத்தக்

கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி.

இந்தப் பாடலில் உள்ள தத்துவம் போன்றது தான் இக்கதையிலும் உள்ளது.

கதை : ஞானப்பால் - . பிச்சமூர்த்தி

கதை மாந்தர்கள் யாருக்கும் பெயர் இல்லை. செய்யும் தொழில் போன்ற காரணப் பெயர்களே உள்ளன. கதையின் நடுவே பல சொலவடைகளும் உள்ளன. கடைசி முடிவும் எதிர்பார்த்ததே. ஆனாலும் தத்துவம் வெண்பொங்கலில் மிளகாய் உறைக்கிறது.

ஒரு சத்திரம். அச்சத்திரம் ஒரு முதலியாருடையது. அந்த சத்திரத்தில் சமையலுக்கு ஒரு தவசிப் பிள்ளை. அவனுக்கு 15 ரூபாய் சம்பளம், மற்றும் சத்திரச் சாப்பாடு.

தவசிப்பிள்ளை ஒண்டிக்கட்டை. அவனுக்கு ஒரு உதவியாள் இருந்தான். பாத்திரம்  கழுவ,  மற்றும் சத்திரத்தைச் சுத்தம் செய்ய.  அவனுக்கு 5 ரூபாய் சம்பளம், மற்றும் சத்திரச் சாப்பாடு. ஆனால் அவன் கொஞ்ச நாட்களாக முரண்டு பிடித்துக் கொண்டு இருக்கிறான்.

சத்திரத்துக்குத் தவசிப்பிள்ளைதான் சர்வாதிகாரி. ஆகையால் சட்டமும் இல்லை நெறிகளும் ல்லை.

இப்படி இருக்கும்போது அங்கு ஒரு லிங்கங் கட்டி பரதேசி பண்டாரம் வருகிறான். வெள்ளந்தி. உயிர்  வாழ சோறு போதும், மற்றவை வீண் என்று நம்புகிறவன். ஒழுக்கமுள்ள பண்டாரம். மழுக்கிய தலை, கழுத்திலே வெள்ளிப்பெட்டி மூடிய லிங்கம், இடுப்பில் பழுப்பேரிய நாலு முழ வேஷ்டி.

லிங்கங்கட்டி தலையைத் தடவிக் கொண்டு நின்றானேயொழிய எதுவும் பேசவில்லை.

ஆனால் தவசிப்பிள்ளை பதில் சொல்லிவிட்டான். “சமையல் ஆன பிறகு சாப்பிடலாம். இப்போது எங்கே இருந்து எங்கே போறீங்க?”

பண்டாரத்துக்கு ஊரேது, பேரேது, போக்கிடமேது? சோறு கண்டால் சொர்க்கம். ஒரு கவளம் சோறு இங்கே நெதம் கிடைச்சா இது தான் போக்கிடம். அதை இதைச் செஞ்சிக்கிட்டுக் கிடந்துடுவேன்

அன்றே அங்கே வேலை செய்துக் கொண்டிருந்த ஆளுக்குத் தவசிப்பிள்ளை சீட்டைக் கிழித்து விட்டான். லிங்கங் கட்டிக்கு அந்தப் பதவி அளிக்கப்பட்டது. நல்ல சுமைதாங்கி தான் வந்திருக்கிறான்! ஒரு கவளம் சோறு செலவு! ஐந்து ரூபாய் மிச்சம்!

சத்திரத்தில் வந்து போகிறவர்கள் லிங்கங் கட்டியைப் பாராட்டாமல் போவதில்லை. ”நல்ல ஆளு! பக்திமான்! நாள் தவறாமல், மணி பிசகாமல் திருக்குளத்தில் பல்லைத் தேய்த்துத் துணி துவைத்துக் குளித்துவிட்டு பட்டையாய்த் திருநீறிட்டுக் கொண்டு கிழக்கே சூரியனைப் பார்த்துத் தவறாமல் செய்கிறாரே, அது ஒண்ணே போதும்! இந்த மாதிரி ஆளைப் பார்க்கறதே அபூர்வமாயிடுத்தே!” என்று வியப்படைவார்கள்.

சத்திரத்துக்கு வந்து போகிறவர்களில் யாராவது லிங்கங்  கட்டிக்கு இரண்டணா நாலணா கொடுத்தால், அதை மறுப்பதில்லை. மறுக்க வேண்டும் என்று தோன்றியதில்லை. வாங்கிக்கொண்டு கெட்டியாக  இடுப்பில் சொருகிக்கொள்வான்.  சில்லறை அடகு பிடித்து  வந்த கிழவியிடம் லிங்கங் கட்டி இந்த பணத்தைக் கொடுத்து வைத்திருந்தான்.

தவசிப்பிள்ளைக்கு லிங்கங்  கட்டியிடம் காசு சேர்ந்திருப்பது தெரிந்து விட்டது. “பணத்தைப் பத்திரமா வைச்சுட்டு என்ன பண்ணுவே?” என்று லிங்கங் கட்டியைக் கேட்டான். லிங்கங் கட்டிக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.

தவசிப்பிள்ளை தொடர்ந்தான். “ஒரு நல்ல காரியம் சொல்றேன், யோசிச்சுப்பாரு”.

கழுத்து லிங்கம் இருக்கில்லே?”

ஆமாம்

இதைக் கவுத்தாலே கட்டிப் போட்டுக்கிட்டுக் கிடக்கிறியே! இருக்கிற பணத்துக்குப் பவுனைக் கிவுனை வாங்கிச் செயின் பண்ணி லிங்கத்தை அதில் கோத்துப்பிடேன். கழுத்துக்கும் அழகாயிருக்கும். லிங்கமும் பார்வையாயிருக்கும்.”

என் கழுத்துக்கு என்னாத்துக்குங்க?”

ஒன் கழுத்துக்கா செயின்? இல்லை இல்லை லிங்கத்துக்குச் செயின் செய்யச் சொல்றேன். “

லிங்கம் கட்டி, திடீரென்று ஆசாரியிடம் போய்த் தனக்குச் செயின் செய்ய எவ்வளவு பவுன் வேண்டுமென்று கேட்டான்.

ஆசாரிக்குச் சிரிப்புத் தாங்கவில்லை. “இந்த வயதிலா கலியாணம் செய்து கொள்ளப் போகிறே?” என்று கிண்டலாகக் கேட்டான்.

இல்லை, இந்த லிங்கத்துக்கு

முக்கால்பவுனிலேருந்து செய்யலாம்.”

அதுக்குக் குறைஞ்சி?”

கூலி?”

உனக்காகப் பதினைஞ்சு ரூபாய்.”

பதினைந்து நாள் கழித்துத் திருக்குளத்தில் நீராடிவிட்டுத் திறுநீரணிந்து தங்கச் செயினும் லிங்கமும்  துலங்க, லிங்கக்கட்டி சத்திரத்துக்குத் திரும்பி வந்தான்.

நல்ல காரியம், நல்ல காரியம்என்றான் தவசிப்பிள்ளை. கண்ணிலே படாத காசாக வைத்துக்கொள்வதை விட்டுத் திருட்டுப் பயலை வருத்தி அழைப்பது போன்ற காரியத்தைச் செய்துவிட்டானே இந்த ஆள் என்று நினைத்துக்கொண்டான்.

செயின் போட்ட லிங்கங்கட்டி ஆகிவிட்டதற்காக அவன் ஒன்றும் மாறிவிடவில்லை. வழக்கம் போல சத்திரத்துக் காரியங்களைப் பார்த்துக் கொண்டான்.

இதற்குப் பிறகு நான்கு மாதம் இருக்கலாம். லிங்கங்கட்டிக்குத் திடீரென்று ஒரு நினைப்பு வந்தது.

தம்பி! திருமுலைப்பால் உத்சவத்துக்குப் போகனுமின்னு தோணுது. போயிட்டு ஒரு வாரத்திலே வந்திடறேன்என்றான் தவசிப்பிள்ளையிடம். மறுநாள் சீர்காழிக்கு லிங்கங்கட்டி புறப்பட்டு விட்டான்.

நான்காம் நாள் காலை முற்றிலும் எதிர்பாராமல் லிங்கங் கட்டி எதிரே வந்து நின்றான்.

என்ன பண்டாரம், லிங்கம் சங்கிலி ஒண்ணையும் காணோமே?”

ஆமாம்

எங்கே?”

ஏமாந்து போயிட்டேன்

எப்படிப் போச்சு?”

அதாங்க ஞானப்பால்

திண்ணையிலே யாரோ ரெண்டு ஆள் என்னவோ பதி பசு பாசம் இன்னு சத்தம் போட்டுப் பேசிக்கிட்டு இருந்தாங்க. நடுவிலே அதிலே ஒரு ஆள் பாடினாரு. கொஞ்சநேரத்துக்கெலாம்  பேச்சு அடங்கிப்போய், பாட்டாப் பாட ஆரம்பிச்சுட்டாரு. ரொம்ப நல்லாக் குயில் கணக்காப் பாடினாரு. அப்படியே சாஞ்சுக்கிட்டிருந்தவன் அதிலே சொக்கிப் போயிட்டேன்.

அப்புறம் நெனைப்பு வந்தப்பொ கண்ணைத் துறந்து பார்த்தேன். கிழக்கு வெளுத்துக்கிட்டிருந்தது. திருவிழா அலுப்பும் அந்தப்பாட்டும்  என்னை அப்படி அமட்டிவிட்டது. நல்ல தூக்கம்ன்னு நினைத்துக்கிட்டபோது ஒரு திகில்  பிறந்தது. கழுத்தென்னவோ லேசாக இருந்தது. தொட்டுத் தடவிப் பார்த்தேன். லிங்கமா செயினா ஒண்ணையும் காணோம். யாரோ தூங்கிக்கொண்டிருந்தபொழுது அடிச்சிக்கிட்டுப் போயிட்டார்கள்!

என்ன பாக்குறீங்க பண்டாரம்என்று திண்ணையில் இருந்தவர்கள் விசாரித்தார்கள். நான் நடந்ததைச் சொன்னேன். அவர்கள் சிரித்தார்கள்

சாமி எடுத்துக்கிட்டுப் போயிருக்கும் ஞானப்பால் குடுக்க வேணாம்?” என்றார்கள்

ஞானப்பால் கிடைச்சுப் போச்சு

அப்புறம்?”

நான் போறேன்

எங்கே?”

இப்படியே நீளமா

பின்னே ஏன் வந்தே?”

சம்பளங் கொடுத்து வேறு ஆள் பாத்து வச்சுக்குங்கன்னு சொல்ல வந்தேன்

என் கூற்று.

(“ததிங்கிணத்தோம் என்று சொல்லியேஎன்ற வில்லுப் பாட்டு மெட்டில் வாசிக்கவும்)

 பற்றற்று இரு என்று சொல்லியே

கட்டி வைத்தனர் கழுத்தினில் லிங்கத்தையும் 

பற்றற்று இருந்த அவனைப் பற்றியே (பிடித்து)

பற்றினுள் தள்ளினான் ஒரு தவசிப் பிள்ளை.

பற்றியதை (செயின்) சிவனாருக்கு (பதி) அளித்திட, அவரும் 

பற்றியவன் (திருடன்) கையில் அடங்கிச் சென்றார்

பற்றை இழந்தவன் ஞானப்பால் குடித்திட

பண்டாரத்திற்கு (பசு) பற்று (பாசம்) பாடில்லை என்று தெளிந்தான்.

பட்டினத்தார்  பத்திரகிரியாரை பற்றுள்ளவன் என்று கூறிட, பத்திரகிரியாரும் தன்னுடைய ஒரே சொத்தான பிச்சை சட்டியை தன்னுடன் கூட இருக்கும் நாயின் மேல் எறிந்திட, நாய் மோட்சம் அடைந்த கதையை  இக்கதை நினைவூட்டுகிறது.

எஸ்ரா இக்கதையை நூறு சிறந்த கதைகளில் ஒன்றாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

சுட்டிகள்

ஞானப்பால். பிச்சமூர்த்தி | அழியாச் சுடர்கள்

ஞானப்பால்” – .பிச்சமூர்த்திசிறுகதை வாசிப்பனுபவம் | திண்ணை

 ஆசிரியர் பற்றிய குறிப்பு.

. பிச்சமூர்த்தி (ஆகஸ்ட் 15, 1900 - டிசம்பர் 4, 1976) தமிழ்ச் சிறுகதையின் முன்னோடிகளில் ஒருவர். மணிக்கொடி காலத்தவர். தமிழ்ப் புதுக்கவிதையின் தந்தை என்று அறியப்படுபவர். கு..ராஜகோபாலனுடன் இணைந்து செயல்பட்டு, அவருடைய இரட்டையர் என்று கூறப்பட்டவர். கு..ராஜகோபாலனின் கதைகளுக்குரிய அதே தளத்தில் ஆனால், சற்று தத்துவார்த்தச் சாயலுடன் எளிய மக்களைப் பற்றி ஆழ்ந்த மனிதாபிமானத்துடன் எழுதியவர் பிச்சமூர்த்தி.

பிச்சமூர்த்தி கும்பகோணத்தில் தன் பள்ளிப் படிப்பையும் கல்லூரிப் படிப்பையும் முடித்தார். தத்துவத்தில் பட்டம் பெற்று, சென்னை சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்றார். 1925 முதல் 1938 வரை வழக்கறிஞராகப் பணிபுரிந்தார். 1939 முதல் 1959 வரை இந்து அறநிலையத்துறை அதிகாரியாகப் பணிபுரிந்தார்.

பிச்சமூர்த்தி, நவ இந்தியா பத்திரிகையில் சிறிது காலம் பணியில் இருந்தார். இவரின் எழுத்துக்கள் சுதேசமித்திரன், சுதந்திர சங்கு, தினமணி, மணிக்கொடி போன்ற பத்திரிகைகளில் வெளி வந்திருக்கின்றன.

நன்றி: விக்கி

15 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் எல்லோருக்கும்!

    இன்றைய செய்திகளில் என்னை மிக மிக ஈர்த்த செய்தி
    //கரூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வெண்ணைமலை பகுதி யில், தொடர்ச்சியாக நிலத்தடி நீருக்குப் பற்றாக்குறை ஏற்பட்டதால், மழை நீரை சேகரிப்பதற்கான அமைப்பை ஏற்படுத்திஉள்ள துரைசாமி: //

    என் ஆர்வத்திர்க்குரிய விஷயம் என்பதால்...அவர் செய்த முறைகளையும் குறித்துக் கொண்டிருக்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  2. வேதாந்த் விஷயம் கூகுள் செய்திகளில் மொபைலில் வந்தது. பார்த்த செய்தி. அவருக்கு வாழ்த்துகள்!

    போலீஸ்காரர் திரு நிலம்பன் சின்ஹாவைப் பாராட்டுவோம்.

    கீதா



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேலே என் கருத்தையும் போட்டுவிட்டு கூகுள் சொல்கிறது பாருங்கள்!!

      //500. அது ஒரு பிழை.

      பிழை ஏற்பட்டது. பிறகு மீண்டும் முயற்சிக்கவும். எங்களுக்குத் தெரிந்தது அவ்வளவே.//

      அதென்ன //அது ஒரு பிழை.......எங்களுக்குத் தெரிந்தது அவ்வளவே//

      சிரித்துவிட்டேன்..

      கீதா

      நீக்கு
  3. இதைக் கவுத்தாலே கட்டிப் போட்டுக்கிட்டுக் கிடக்கிறியே! இருக்கிற பணத்துக்குப் பவுனைக் கிவுனை வாங்கிச் செயின் பண்ணி லிங்கத்தை அதில் கோத்துப்பிடேன். கழுத்துக்கும் அழகாயிருக்கும். லிங்கமும் பார்வையாயிருக்கும்.”//

    தவசிப்பிள்ளை முதலில் பவுனில் செயின் பண்ணிப் போட்டுக்கொள் என்று சொல்லிவிட்டு அதன் பின் லிங்கக்கட்டி அப்படிக் கோர்த்துப் போட்டுக் கொண்டு வரும் போது...

    //கண்ணிலே படாத காசாக வைத்துக்கொள்வதை விட்டுத் திருட்டுப் பயலை வருத்தி அழைப்பது போன்ற காரியத்தைச் செய்துவிட்டானே இந்த ஆள் என்று நினைத்துக்கொண்டான்.//

    என்றும் நினைத்துக் கொள்கிறானே அதே தவசிப்பிள்ளை!

    கீதா

    பதிலளிநீக்கு
  4. இனிய காலைப் பொழுது..

    அன்பின் வணக்கங்களுடன்.. நல்லோர் நலம் பெறுக..

    வாழ்க வையகம்
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  5. வேதாந்த் நல்ல எதிர்காலம் அமைய வாழ்த்துகள்.

    போலீஸ் நிலம்பன் சின்ஹா அவர்களின் நேர்மைக்கு இராயல் சல்யூட்.

    பதிலளிநீக்கு
  6. அனைத்து செய்திகளும் அருமை.

    வேதாந்திற்கு வாழ்த்துக்கள்.
    காவல் துறை அதிகாரியின் நேர்மைக்கு பாராட்டுக்கள்.
    மழை நீர் சேமிப்பு மிக அவசியம்.
    இங்கு தினம் மழை பெய்கிறது அத்தனையும் சேமித்தால் எதிர்காலத்தில் தண்ணீர் கஷ்டம் இருக்காது.

    பதிலளிநீக்கு
  7. அழியாசுடரில் இந்த கதை படித்து இருக்கிறேன்.

    //எஸ்ரா இக்கதையை நூறு சிறந்த கதைகளில் ஒன்றாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்...//
    எஸ்ரா அவர்களை பற்றியும் அவரின் 100 சிறு கதை தொகுப்பை பற்றி முன்பு ஒரு பதிவு போட்டேன், அதில் படித்த கதைகளை பற்றியும் சொல்லி இருந்தேன்.
    மகன் ஊரில் அந்த புத்தகம் வாசித்தேன்.

    முன்னுரை நன்றாக இருக்கிறது.
    கதை பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  8. வழக்கம் போல இன்றைய செய்தித் தொகுப்பு அருமை..

    பதிவில் சொல்லப்பட்டிருக்கும் கதையை எப்போதோ படித்திருக்கின்றேன்..

    பதிலளிநீக்கு
  9. வேதாந்த் பற்றிய செய்தி தினசரிகளில் படித்தேன். விரைவில் அவனுக்கு நல்லபடியாக வேலை கிடைத்து முன்னுக்கு வர வாழ்த்துகள்.
    நேர்மையான போலீஸ் அதிகாரிக்குப் பாராட்டுகள்.
    மழைநீர் சேமிப்பு நாங்களும் அம்பத்தூர் வீட்டில் போட்டிருந்தோம். பெரிய தொட்டி கட்டி அதில் கல், மணல், ஜல்லிக்கற்கள் எல்லாமும் போட்டு மாடியிலிருந்து கொட்டும் மழைநீரை அதில் சேமித்துச் சுத்தம் செய்து நேரே கிணற்றுக்குப் போகும்படி விட்டிருந்தோம். கிணற்றில் நீர் வற்றியதே இல்லை. அக்கம்பக்கம் உள்ளவர்கள் வந்து நீர் இறைத்துக் கொண்டு போவார்கள். போரும் இருந்தது. அதிலும் தண்ணீரின் நிறமும் ருசியும் மாறியது.

    பதிலளிநீக்கு
  10. கதை படிச்ச கதை. கடைசியில் பண்டாரத்துக்குத் தெளிவு பிறந்தது.

    பதிலளிநீக்கு
  11. நல்ல உள்ளங்களை வாழ்த்துவோம்.

    மழை நீர் சேகரிப்பு நல்ல பயன் .பலருக்கும் முன் மாதிரியாக இருக்கும்.

    கதை முன்பு படித்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  12. வேதாந்த் பற்றி செய்திகளில் வாசித்தேன். அப்பையனை கன்சிடர் பண்ணுவதாகச் சொல்லியிருக்கிறார்களே பள்ளிப் படிப்பை முடிந்ததும், எனவே நல்ல எதிர்காலம் இருக்கிறது. வாழ்த்துகள்.

    நேர்மையான போலீஸ் அதிகாரிக்குப் பாராட்டுகள்.

    மழை நீர் சேமிப்பு மிக மிக அவசியம். அப்படிச் செய்வது வெள்ளம் வரும் நேரத்தில் கூட நிறைய பாதிப்புகளைத் தடுக்கவும் முடியும். நிலத்தடி நீர் உயரும்.

    செய்திகள் அனைத்தும் நல்ல செய்திகள்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  13. கதை பற்றிய முன்னுரை விளக்கம் நன்றாக இருக்கிறது.

    கதை தத்துவம் வாழ்க்கையில் எல்லோருக்குமே ஒரு காலகட்டத்தில் வருமோ என்றும் தோன்ற வைத்தது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!