வியாழன், 4 ஆகஸ்ட், 2022

இஸ்க்கு... .

 'ஊபர் பைக்'குக்காகக் காத்துக் கொண்டு செல்லை நோண்டிக் கொண்டிருந்தபோது வலது முழங்கையில் யாரோ தொட்டார்கள்.  சட்டையைப் பிடித்து லேசாக இழுத்தது போல இருக்க, திரும்பிப் பார்த்தபோது ஒரு உருவம் தெரிந்தது.

நான் நின்றிருந்தது வண்டிகள் பார்க்கிங் இடைவெளி அருகே என்பதால் அதற்குதான் சுரண்டுகிறார்கள், தள்ளி நிற்கச் சொல்கிறார்கள் என்று நினைத்து தள்ளி நிற்க முற்பட்டேன்.

இப்போது தோளில் கை விழுந்தது  அறிமுகமான நபர் போல தோளில் அந்தக் கை சற்றே அழுந்தியது.  தெரிந்த ஒரு முகத்தை எதிர்பார்த்து திரும்பியபோது 'அவர்' நின்றிருந்தார்.

கணுக்கால் வரை கட்டிய காவி வேட்டி, தோளில் குறுக்காக தொங்கும் மஞ்சள் பை.  நெற்றியில் கீற்றாய் விபூதி.  தோளில் கட்சித் துண்டு போல ஒரு நீண்ட துண்டு, இன்னொரு கையில் சில மஞ்சள் பைகள்..  வாட்ச் வேறு கட்டியிருந்தார்.

"என்ன?"

"டீ குடிக்கணும்.."

"குடிங்களேன்..  இங்கே கடை இல்லை.."

" பத்து ரூபாய் கொடு.."

எனக்குப் புரிந்தாலும்..  "எனக்கு டீ வேண்டாம்"  என்றேன் அவரது அணுகுமுறையில் எரிச்சலாகி..

"உனக்கு வேண்டாம்..  எனக்கு வேணும்"

"வேணும்னா போய்க் குடிங்களேன்..." பன்மைதான் வந்தது.  ஏனோ ஒருமையில் சொல்ல மனம் வரவில்லை!

"பத்து ரூபாய்க் கொடு"

எனக்கு சின்ன வயசு "பத்து பைசா கொடு, இட்லி சாப்பிடணும்" யாசகர்  நினைவுக்கு வர, சற்றே தள்ளி நின்று ஜெயம் பட நாயகி சதா போல அவருக்கு என்னைத் தாண்டிச் செல்ல இடது பக்கமாக ஸைடில் கை  காட்டினேன் ... 

பெரிதாக ஒன்றும் அலட்டிக் கொள்ளவில்லை அவர்.  

என்னைப் பார்க்காமல் தாண்டிச் சென்றவர் முன்னால் சென்று கொண்டிருந்த இருவரை அணுகினார்.  பதினெட்டு, அல்லது இருபது வயது மதிக்கத்தக்க பையனும் இருபத்தி ஐந்து வயது மதிக்கத்தக்க பெண்ணும் முன்னே சென்று கொண்டிருக்க, அந்த பையன் கையைப் பிடித்து நிறுத்தி இதே வசனத்தை கேட்டிருப்பார் என்று புரிந்து கொள்ள முடிந்தது.

பெண் என்னைத் தாண்டிச் செல்லும்போதே ஃபோன் பேசிக்கொண்டே சென்றிருந்தார். அவரின் உரத்த குரல் கவனத்தைக் கவர்ந்திருந்தது.  பையன் மௌனமாக உடன் நடந்து கொண்டிருந்தான். கவனித்திருந்தேன்.  பைக் வரும்வரை வேறு வேலை?!

அந்த இளைஞன் அல்லது பையன் அவர் பேசியதை சற்றுக் கேட்டபின் அந்தப் பெண்ணிடம் ஏதோ சொல்ல, அந்தப் பெண் வீடியோ காலில் யாரிடமோ 'மானமிருக்கா, ரோஷமிருக்கா ' என்று 'மானம் கெட்டவனே எம் குலப் பெண்டிருக்கு மஞ்சள் அரைத்தாயா' ரேஞ்சுக்கு எகிறிக்கொண்டிருந்தவர் அந்த சுவாரஸ்யத்தை இழக்க மனமில்லாமல், திரும்பிக் கூடப் பார்க்காமல்  பத்து ரூபாயை எடுத்து தம்பியிடம் தர, தம்பி அதை இவரிடம் தர, அதைப் பெற்றுக்கொண்டு நகர்ந்தார்.

வாசல் அருகே இரண்டு இளைஞர்களும் நான்கு இளம்பெண்களும் கடலை போட்டுக் கொண்டிருக்க அவர்களிடம் முயன்றார்.  கொஞ்ச நேரம் சிரிக்க சிரிக்க பேசிக்கொண்டிருந்தார்கள்.  இவரும் சிரித்த வண்ணம் பதில் சொன்னார்.  சரிதான் ஐம்பது ரூபாயாவது தேற்றி விடுவார் என்றுதான் நினைத்தேன்.  பத்து பைசா கூட கிடைக்கவில்லை.

எனக்கு இன்னும் வண்டி வரவில்லை.  பொழுது போகவேண்டுமே..  எனவே அவரைப் பார்வையால் பின் தொடர்ந்து கொண்டிருந்தேன்!

அருகில் சுற்றுமுற்றும் பார்த்தார்.  வேறு யாரும் அருகாமையில் இல்லை.  என்னை ஒரு தரம் பார்த்தார், திரும்பிக் கொண்டார்!

ரோட்டுக்கு நகர்நதவர் வந்து கொண்டிருந்த ஆட்டோவை நிறுத்தினார்.  சரிதான், வசூல் முடிந்து ஆட்டோவில் கிளம்புகிறார் என்று நினைத்தால் அருகில் நெருங்கும்போதே வசனம் கேட்டது.

"டீ குடிக்கணும்...  பத்து ரூபாய்க் கொடு!"

"என்னது?""

"டீ குடிக்கணும்...  பத்து ரூபாய்க் கொடு!"

இவரை முறைத்துக் கொண்டே கிளம்பிய ஆட்டோக்காரர் எந்த அளவு ஆக்ரோஷமாகி இருப்பார் என்று சொல்லத் தேவையில்லை!!

பழைய ஜோக் ஒன்று நினைவுக்கு வந்தது.  

வாடகைக் காரை நிறுத்துவார்கள் ஒரு தம்பதி.  'ஆஹா..  சவாரி' என்று ஆர்வமாக வண்டியை ஓரம் கட்டி அவர் நிறுத்தியதும் கதவைத் திறந்து காரில் ஏறி....

அடுத்த பக்கமாக கதவைத் திறந்து இறங்கி செல்வார்கள்.  சாலையில் தேங்கி நிற்கும் மழை நீரிலிருந்து தப்பிக்க தந்திரம்!  குமுதம் ஜோக்!

பத்து பைசாவுக்கு இட்லி வாங்கிய காலம் உண்டு.  இப்போது சாதாரண டீக்கடையில் வடை ஒன்று பத்து ரூபாய், டீ பத்து ரூபாய்!  அடையார் ஆனந் பவனில் காஃபி 37 ரூபாய்.  இப்போதும் அம்மா உணவகங்களில் ஐந்து ரூபாய்க்கு மூன்றோ நான்கோ இட்லி கிடைக்கிறது.  அங்கு வாங்குவோர் கீழ்த்தட்டு உழைக்கும் வர்க்கம்தான்.  

கோவில் வாசல்களில் அமர்ந்து யாசிப்போர் ஒரு ரகம்.  போக்குவரத்து சிக்னலில் பிச்சை எடுப்போர் ஒரு ரகம்!  (படிக்கும் காலத்தில் என் நண்பன் ஒருவனின் அப்பா அவனைத் திட்டும்போது "நீயெல்லாம் சிக்னலில் பிச்சைதாண்டா எடுப்பே" என்று திட்டுவார்.  சிக்னலில் பிச்சை எடுப்பது என்ன ஸ்பெஷலோ என்று நினைத்துக் கொள்வேன்).  அபார்ட்மெண்ட்டுகள் பெருகிவிட்ட இந்நாளில் ஒவ்வொரு வீடாக வந்து, நின்று பிச்சை எடுப்போர் இல்லை என்று நினைக்கிறேன் - அட்லீஸ்ட் நகரங்களில்!

அதே போல முன்னெல்லாம் ராப்பிச்சை வரும்.  அவர்களும் வருவதில்லை.  சும்மா தகவல்தான்.  வருத்தமெல்லாம் இல்லை.  யாசகசாலை பதிவில் எழுதியது போல முன்னர் எழுதியதில் கொஞ்சம் ரெப்படிஷனும் இருக்கும்.

முன்னர் பஸ் ஸ்டாண்டுகளில் இவர்களை சந்திருக்கிறீர்களா?  "ஊருக்குப் போக ஐம்பது ரூபாய் குறைகிறது...   கொஞ்சம் தரமுடியுமா?  உங்கள அட்ரஸ் கொடுங்கள்..  ஊர் சென்றதும் அனுப்பி விடுகிறேன்"

மானசீகமாக அக்குளில் கைவைத்து அடித்து மூடி  'இஸ்க்கு' என்று சொல்லியபடி வெளியில் 'இல்லீங்களே' என்பேன்!  'இஸ்க்கு என்றால் என்னவென்று கேட்கிறீர்களா?  அதுதாங்க 'அஸ்க்கு புஸ்க்கு!

உங்களிடம் யாசிப்பவர்களுக்கு தர்மம் செய்ய நீங்கள் என்ன வரைமுறை வரையறுத்து வைத்திருக்கிறீர்கள்?  யார் கேட்டாலும் தந்து விடுவீர்களா?  வாடகைக்கு குழந்தை எடுத்துக் கொண்டு பரிதாபமாக நின்றால் தருவீர்களா?  கோவில் வாசலில் தர்மம் செய்தால் புண்ணியம் என்று அங்கு தர்மம் செய்வீர்களா?  வயதானவர்கள் பாவம் என்று தர்மம் செய்வீர்களா?  குழந்தைகள் தர்மம் கேட்டால் என்ன தோன்றும் உங்களுக்கு?  மாதம் தர்மத்துக்கு இவ்வளவு என்று ஒதுக்கி வைத்து விடுவீர்களா?

நான் இன்று சொல்லியிருப்பது கௌரவப்பிச்சை வகை!

======================================================================================================================

சாப்பிட்ட பின் செய்யக் கூடாதவை :

 ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ உணவுப் பழக்கம் இன்றியமையாதது. எப்படிச் சாப்பிட வேண்டும் என்பதுடன், சாப்பிட்ட பின் செய்யும் விஷயங்களும் உடல்நலனைப் பாதிக்கும். அதிலிருந்து பாதுகாத்துக் கொள்ள, சாப்பிட்ட பின் செய்யக்கூடாத விஷயங்கள் என்னென்ன?

# சாப்பிட்ட பின்பு ஒருவர் சிகரெட் பிடித்தால், அது சாதாரண நேரங்களில் சிகரெட் பிடிப்பதைவிட மிகப்பெரிய கெடுதலை விளைவிக்கும். பல சிகரெட்டுகளை ஒரே நேரத்தில் பிடித்தால் புற்றுநோய் ஏற்பட எந்த அளவு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உண்டோ, அவ்வளவு பெரிய தீமை இது.

# உணவு சாப்பிட்ட உடனேயே பழங்களைச் சாப்பிடும் பழக்கம் பலருக்கு உள்ளது, அது கெடுதல். அது காற்றை வயிற்றுக்குள் அனுப்பி, வயிறு உப்புசத்துக்கு ஆளாக்கும் நிலையை (Bloated with air) உருவாக்குகிறது. எனவே, சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரம் முன்பு பழத்தைச் சாப்பிடுங்கள் அல்லது சாப்பிட்டு ஒரு மணி, 2 மணி நேரத்துக்குப் பின்னர் பழங்களைச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

# சாப்பிட்டவுடன் தேநீர் குடிக்காதீர்கள். தேயிலையில் அமிலத்தன்மை உள்ளது. இது உணவில் உள்ள புரதச் சத்தைக் கடினமாக்கிச் செரிமானத்தைக் கடினமாக்கும் வாய்ப்பு உண்டு.

# சாப்பிட்ட பிறகு பெல்ட்டுகளைத் தளர்த்திவிடாதீர்கள். அது குடலை வளைத்துத் தடுக்க வாய்ப்புள்ளது.

# சாப்பிட்ட உடனேயே குளிக்கும் பழக்கம் கூடாது. குளிக்கும்போது உடல், கை, கால்களுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் வயிற்றுச் செரிமானத்துக்குச் செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் குறையும் வாய்ப்பு உள்ளது. வயிற்றில் உள்ள செரிமான உறுப்புகளை இது பாதிக்கக்கூடும்.

# சாப்பிட்ட பின்பு நடப்பது நல்லது என்று விவரமறிந்தவர்கள்கூடச் சொல்வது உண்டு. நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்காமல் தடுக்க, உடனடி நடை உதவும் என்றுகூடச் சிலர் சொல்லலாம். சாப்பிட்ட பின் நடந்தால் செரிமான உறுப்புகளுக்கு உணவு போய்ச் சேர்ந்து, உணவை நன்கு செரிக்கச் செய்வதைத் தடுத்து, உணவின் சத்துகளை ரத்தத்தில் சேர்க்கவிடாமல் அந்த நடை செய்துவிடும். எனவே, இந்தப் பழக்கத்தைக் கைவிடுவது நல்லது.

# மதிய உணவு, இரவு உணவுக்குப் பின்னர் உடனே படுத்துத் தூங்கக் கூடாது. உணவு உண்ட பின் அரை மணி நேரம் கழித்தே உறங்கச் செல்ல வேண்டும். அப்போதுதான் உணவு முறையாகச் செரிக்கும்.

வாசகர் பக்கம் 

வாசகர்கள் கவனத்திற்கு... இப்பகுதிக்கு நீங்களும் பங்களிக்கலாம். உடல்நலம் சார்ந்த தகவல்களை உரிய ஆதாரத்துடன் எங்களுக்கு எழுதலாம்.

டி.எஸ்.உமாராணி- மின்னஞ்சல் முகவரி: nalamvaazha @thehindutamil.co.in

- 'தி இந்து' -

=====================================================================================================================

மியூட்டில் இருக்கும் உலகை ஒரு ரிமோட் பட்டன் அழுத்தலில் காதில் விழுவது போல சத்தம் கேட்க வைத்தால் எப்படி இருக்கும்...




அசைவுகள் மட்டுமே 
கண்ணில் படும்.
புற உலகின் சத்தங்கள் 
எதுவும் கேட்காத 
மௌன உலகு 

எவ்வளவு அழுத்தி அழுத்தி 
விட்டுக்கொண்டாலும் 
உள்ளே புகுவதேயில்லை 
எதிராளியின் பேச்சுகள், வார்த்தைகள்..

பெரிய அலறல்களும் 
சமயங்களில் 
சிறிய தெளிவான 
உச்சரிப்பில் வெளிவரும் 
சில வார்த்தைகளும்  மட்டும் காதில் விழும்!

கேட்ட காலங்களின் நினைவில் 
எதிராளியின் உதட்டசைவில் 
பழைய குரல் 
மனதில் ப்ராம்ப்ட் செய்கிறது 
வார்த்தைகளை 

வெளிப்பட்ட வார்த்தைகளை
விடுத்து 
புரிந்துகொண்ட வார்த்தைகளுக்கு 
பதில்கள் சொல்கிறார் 
செவிட்டுத் தாத்தா 

மெஷின்களும் பயனற்றுப் போன 
மௌன உலகின் 
ஆரம்பப் பதட்டங்கள் குறைந்து 
அந்திமக் காலத்தின் அருகாமையை 
அண்மையில்தான் 
உணரத் தொடங்கி இருக்கிறார்.

பொறுமையிழக்கும் எதிர்சனத்துக்கு 
தான் அனுபவிக்கும்வரை 
புரியப்போவதில்லை 
மௌன உலகின் நரகங்கள் 
 ==================================================================================================================

திரு செங்கோட்டை ஸ்ரீராம் பேஸ்புக்கில் பகிர்ந்திருக்கும் பகிர்வு இது...

இன்று காலை தினமலரில் வந்த ஒரு செய்தியை நண்பர்கள் பகிர்ந்திருந்தார்கள். அதில் மதியழகன் என்று ஒருவர் தாம் தான் வாஞ்சியின் பேரன் என்று சொல்லி, சில புனைகதைகளை விட்டிருக்கிறார். ஒரு பத்திரிகையாளனுக்கு இயல்பிலேயே அதைக் கேட்டால் சந்தேகம் வந்திருக்க வேண்டும்.
என்ன நோக்கத்துக்காக இப்படி ஒரு தகவலைச் சொல்கிறார், உண்மையில் பின்னணி என்ன இருக்கும் என்று தோண்டித் துருவியிருக்க வேண்டும். தினமலரில் இப்படி ஒரு செய்தி வந்திருப்பது வருந்தத் தக்கது.

வாஞ்சியின் பேரன் என்று கூறிக் கொள்ளும் நபர் என்றாவது குறிப்பிட்டிருக்க வேண்டும். இவர்களே உறுதிப் படுத்துவது போல், யாருக்கும் தெரியாமல் தனது தாயை வளர்த்தார்கள் என்றும், வெளியுலகம் தெரியாமல் இருக்க குழந்தை இறந்து போனதாகச் சொல்லி விட்டார்கள் என்றெல்லாம் விடும் கதைகளை உறுதிப் படுத்துவது போல் செய்தி வெளியிடுவது பெரிதும் வருந்தத் தக்கது. தினமலர் நிர்வாகம் இதற்கு நிச்சயம் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.
***
(நான் இந்த மாத கலைமகள் இதழில்) ஏ.எஸ்.ஹெச். ஹரிஹரராமசுப்பிரமணியன் அரை நூற்றாண்டுக்கு முன் எழுத்தாளர் ரகமிக்கு எழுதிய கடிதம் குறித்து குறிப்பிட்டிருக்கிறேன். அதில் வாஞ்சி குறித்து அவர் கேட்டு எழுதியதற்கு, இவர் பதில் அளித்திருக்கிறார் இப்படி...

அதன் பின்னர் ரகமி நேரில் வந்து பலரிடம் பேசி, தகவல்களைப் பெற்றிருக்கிறார்.
இப்போது யதேச்சையாக இந்தக் கடிதங்கள், தினமணி கதிரில் தொடராக வந்த வீரவாஞ்சி, ஆஷ் கொலைவழக்கு பேப்பர் கட்டிங்குகளை, ஹரிஹர ராமசுப்பிரமணியனின் மகன் ராமலிங்கம் என்ற ஸ்ரீராம் அண்ணா வீட்டில் பார்த்தேன். உடனே அதைப் பதிவு செய்துவிட்டேன்.
வாஞ்சியின் மனைவி பொன்னம்மாள் பிரசவத்துக்காக திருவனந்தபுரம் சென்றிருந்த போது, வாஞ்சியின் தந்தை ரகுபதி ஐயரும் தாயாரும் வாஞ்சியிடம்... போய் மனைவியைப் பார்த்து வருமாறு கெஞ்சுகிறார்கள். ஆனால் வாஞ்சி தனது மனைவியைப் பார்க்க திருவனந்தபுரம் செல்வதை விட புதுச்சேரிக்குச் செல்வதில்தான் ஆர்வம் காட்டியிருக்கிறார்... சற்று வள்ளென்று எரிந்துவிழுந்திருக்கிறார்....
வாஞ்சிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து இறந்து விட்டதாக தகவல் அனுப்பியிருக்கிறார்கள்... அதனால் அனைவரும் சோகத்தில் இருக்கிறார்கள். ஆனால் வாஞ்சி அதைப் பற்றி அலட்டிக் கொள்ளவில்லை.
அதன் பின்னரும் வாஞ்சியை சந்திக்கும் அழகப்ப பிள்ளை, வாஞ்சியிடம் அவரது குழந்தை இறந்த விவரத்துக்கு துக்கம் விசாரித்து அவரைத் தேற்றுகிறார். ஆனால் வாஞ்சி அது அவரவர் விதி என்று கடந்து விடுகிறார். இது அழகப்ப பிள்ளை செய்த பதிவு. வானொலியில் அரை நூற்றாண்டுக்கு முன்னரே பதிவாகிவிட்டது. பதிவு செய்தவர் சென்னை வானொலி இயக்குநராக இருந்த திரு. விஜய திருவேங்கடம். இது பற்றி ஏற்கெனவே நான் எனது பதிவுகளில் குறிப்பிட்டிருக்கிறேன்....
அதன் பிறகுதான் ஆஷ் கொலையும் தொடர்ந்து பிரிட்டிஷாரின் தேடுதல் வேட்டையும் நடந்து பாரத மாதா சங்கம் நசுக்கப் படுகிறது. ஆஷ் கொலைக்குப் பிறகு நடக்கும் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளால் எழுந்த அச்சுறுத்தலுக்குப் பிறகுதான் பலரும் தங்களை இந்தத் தொடர்புகளில் இருந்து விலக்க நினைத்தார்கள்....
அப்படி இருக்க... திருவனந்தபுரத்தில் இருந்த பொன்னம்மாளுக்கு பெண் குழந்தை பிறந்ததை... ஆஷ் படுகொலையால் எழுந்த அச்சுறுத்தலுக்கு முன்பேயே ஏன் இறந்து பிறந்ததாக அறிவித்து, குழந்தையை வேறு இடத்தில் வளர்க்க வேண்டும் என்ற சிறிய லாஜிக் கூட.. இந்தச் செய்தியை எழுதிய தினமலர் செய்தியாளருக்கு தெரியாமல் போனது ரொம்பவே வருத்தம்தான்...!
இதன் மூலம், பொய்யர்களுக்குத் துணைபோயிருக்கிறார்கள்... இப்போதைக்கு வாஞ்சி வாரிசு என்றால், வாஞ்சியின் சகோதரர் பேரன்தான் திருநெல்வேலியில் இருக்கிறார்.
நான் குறிப்பிட்ட ஏ.எஸ்.எச். ஹரிஹரராம சுப்பிரமணியன் அந்தக் கடிதத்தில், ரகமிக்கு அளித்த பதில் இது...
//வாஞ்சி இருந்த வீடு செங்கோட்டையில் தெற்கு மாட தெருவில் இருக்கிறது. அந்த வீட்டை வக்கீல் ராமசாமி ஐயர் என்பவர் வாங்கியிருக்கிறார். வாஞ்சியின் சகோதரர் கோபாலகிருஷ்ணன் பாளையங்கோட்டை மகாராஜ நகரில் வசித்து வருவதாக சொல்கிறார்கள். திருநெல்வேலி கா.கா.தே. க.,வினருக்கு முகவரி தெரியும். இவர் வாஞ்சியின் சகோதரர் ராமநாதன் என்றும் சொல்லுகிறார்கள். வாஞ்சியின் மனைவி பெயர் பொன்னம்மாள். இவரைப் பற்றிய விவரம் திருவனந்தபுரம் அட்டக்குளக்கரை கணபதி ஐயருக்கு தெரியும். பெங்களூர் யக்ஞேஸ்வர ஐயர், இவர் வாஞ்சியின் சகோதரியின் மகன் (மருமான்). வாஞ்சியின் புகைப்படம் இங்கு கிடைக்கவில்லை. கா.கா.தே.க. தலைவரிடம் இருக்கிறது. //
========================================================================================

ஒரு பழைய செய்தியை மீண்டும் படித்து மனதை உற்சாகப்படுத்திக் கொள்ளலாம்!




============================================================================================================

ஜோக்ஸ்...

இரண்டு ஜோக் ஒன்றாய் கீழே...   ஆனால் முதலாவதில் என்ன ஜோக் இருக்கிறது என்று புரியவில்லை!





148 கருத்துகள்:

  1. இப்படி பணம் கேட்பவர்கள் மது அருந்துவதற்கு... குறிப்பிட்ட தொகை வரும்வரை கேட்பார்கள்.

    டீக்கடையில் நம்மிடம் டீ கேட்பார்கள் கடைகாரரிடம் கொடுங்கள் என்போம் அவரிடம் வேண்டாம் காசு கொடு என்பார்கள் இது பரவலாக எல்லா ஊரிலும் நடக்கிறது.

    ஒன்று மட்டும் உறுதி இப்போது நிறைய மனிதர்களுக்கு சூடு, சொரணை கிடையாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் அம்மா இது போன்றவர்களை 'கௌரவப் பிச்சை' என்பார்!

      நீக்கு
    2. வயிற்றின் பசி, சூடு சுரணையைப் போக்கிவிடும் (உடல் நலம் பாதிக்கப்பட்டாலும் இது நடக்கும்.. அதை வேறு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன்). ஆனால் குடிக்காக கை ஏந்துவதுதான் சகிக்கலை

      நீக்கு
    3. மாகமும் அப்படித்தான். அத்திவரதர் தரிசனத்திற்குப் பிறகு இரயில் நிலையம் வந்தபிறகு தண்ணீர் தாகம். இன்னொருவரிடம் கேட்டுவாங்கிக் குடித்தேன், இரயில் வர ஆரம்பித்துவிட்டதால்.

      நீக்கு
    4. தாகமும் தாங்க முடியாது எனினும் ஏனோ எனக்கு சட்டென எங்கும் தண்ணீர் குடித்துப் பழக்கமில்லை!

      நீக்கு
  2. கவிதை எனக்காக என்னைப் பற்றியே எழுதியது போல் உள்ளது. நன்றி. ஆனால் நீங்கள் எழுதியது போல் இல்லை. கடைசி இரண்டு பத்திகளில் நான் முரண்படுகிறேன். 

    //வெளிப்பட்ட வார்த்தைகளை
    விடுத்து
     புரிந்துகொண்ட வார்த்தைகளுக்கு
     பதில்கள் சொல்கிறார் 
    செவிட்டுத் தாத்தா 

    மெஷின்களும் பயனற்றுப் போன
     மௌன உலகின்
     ஆரம்பப் பதட்டங்கள்
    குறைந்து
     அந்திமக் காலத்தின் அருகாமையை
     அண்மையில்தான் உணரத்
    தொடங்கி இருக்கிறார்.

    பொறுமையிழக்கும் எதிர்சனத்துக்கு
     தான் அனுபவிக்கும்வரை
     புரியப்போவதில்லை
     மௌன உலகின் நரகங்கள் //

    ஆரம்பப்  பதட்டம் உண்மையே 
    ஆயினும் ஒரு தெளிவு 
    அடுத்தவர் ஏசினாலும் ஒரு புன்சிரிப்பு.
    எதிரிக்கும், பார்ப்பவருக்கும் திகைப்பு. 
    சுவரில் முட்டிய எதிரிகளும் 
    அடங்கிப் போவார் அன்றோ!!
    அதுவே மௌனத்தின் சுவர்க்கம். 

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா? உங்களை நான் அந்த அளவு அறிய மாட்டேன். இது நான் அறிந்த ஒரு பெண்மணி பற்றி. கடைசி இரண்டு பத்தி பிற்சேர்க்கை!

      நீக்கு
  3. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா.. வணக்கம். பிரார்த்திப்போம்.

      நீக்கு
  4. "ஊருக்குப் போக ஐம்பது ரூபாய் குறைகிறது... கொஞ்சம் தரமுடியுமா? உங்கள அட்ரஸ் கொடுங்கள்.. ஊர் சென்றதும் அனுப்பி விடுகிறேன்"//

    இந்த அனுபவம் உண்டு, ஸ்ரீராம். ஆனால் கொடுத்ததில்லை. அதன் பின் மனதிற்குள் நினைத்துக் கொண்டதுண்டு. ஒரு வேளை அவர்கள் நிஜமாகவே கேட்டிருப்பார்களோ? ஊருக்குப் போகமுடியாமல் கஷ்டப்பட்டிருப்பாங்களோ என்று. இதற்கும் மேல் இங்கு சொல்லவில்லை...ஹாஹாஹா ஏனென்றால் அது ஏற்கனவே நான் எழுதி வைத்து வழக்கம் போல் பாதியில் நிற்பதால்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த வகை யாசகங்கள் அப்போது - டிஜிட்டல் பரிவர்த்தனை வராத நேரத்தில் - பிரபலம். இப்போது வெவ்வேறு பாணி!

      நீக்கு
  5. ஆமாம் இது கௌரவப் பிச்சை வகை. நான் புண்ணியம் என்று சொல்லி, எந்த தர்மமும் செய்வதில்லை. எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. மனதிற்கு நிஜமாகவே அது உண்மை என்று தெரிந்தால் கொடுப்பதுண்டு. அல்லாமல் இல்லை. அதுவும் சமீபகாலமாகக் கொடுப்பது இல்லை. அதுவும் ரூபாய் கொடுக்கும் வழக்கம் என்றுமே இல்லை.

    பசி என்றால் சாப்பாடு தருகிறேன் என்று சொல்லி பெற்றுக் கொண்டால் கொடுப்பது உண்டு. ஆனால் அது வேண்டாம் பைசா என்றால் கொடுப்பது இல்லை. அதே போலத்தான் படிப்பு புத்தகம், நோட்புக் என்பதெல்லாம். ரூபாயாகக் கொடுப்பது இல்லை.

    எதையும் புண்ணியம் என்று நினைத்துக் கொடுக்கும், அல்லது செய்யும் வழக்கம் அறவே இல்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாம் எல்லோருமே அந்த வகைதான் என்று நினைக்கிறேன்.

      நீக்கு
    2. ஆமாம் அதேதான் ஸ்ரீராம்.....

      கூடவே ஸ்ரீராம், எனக்கு இப்படியும் சில சமயம் தோன்றும். புனிதத் தலம் எனும் கோயிலில் கொள்ளையை விட, வருமான வரியை ஏய்த்துக் கறுப்புப் பணம் சேர்ப்பவர்களை விட, பொது மக்களைக் கொள்ளை அடிக்கும் அரசியல்வாதிகளை விட, இன்னும் பல கொள்ளைகளை விட இப்படியானவர்கள் பாவம் என்றும் தோன்றுவதுண்டு. காலையில் மேலே உள்ள கருத்தைப் போட்டுவிட்டு இக்கருத்தையும் போட நினைத்து அப்படியெ விட்டுப் போச்சு

      கீதா

      நீக்கு
    3. உண்மை.. உண்மையிலும் உண்மை.

      நீக்கு
  6. சாப்பிட்ட பின் செய்யக் கூடாதவை//

    அதே அதே. இங்கு பழக்கத்திலும் பின்பற்றுவதுண்டு. சாப்பிட்டதும் நடப்பதும் சிரமமாகத்தான் இருக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு, சாப்பிட்டபின் சிறிது நேரத்தில் ட்ரெட்மில் பண்ணினபோது அலர்ஜி வந்திருக்கிறது. அதுபோல அலர்ஜியின்போது குளித்து மயங்கிவிட்டிருக்கிறேன்.

      இப்போதும் சாப்பிட்டு ஒரு மணி நேரத்திற்குப் பிறகே, நடைப்பயிற்சி செல்வதாக இருந்தால் செல்லுவேன்.

      நீக்கு
    2. காலை மாலை நடைபபயிற்சி செய்ததுண்டு. சாப்பிட்ட பின் நடக்க முயற்சித்ததில்லை!

      நீக்கு
  7. அனைவருக்கும் வணக்கம். பிரார்த்தனைகள். குரங்கம்மை என்னும் புதிய தொற்றில் இருந்து அனைவரும் விடுபடப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  8. இந்த கௌரவப் பிச்சை நிலைக்கு நானும் குழந்தைகளும் ஒரு முறை ஒரு பிக்பாக்கெட் திருடரால் தள்ளப்பட்டு அனுபவித்திருக்கோம். :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதற்குப் பயந்துதான் மூன்று இடங்களிலாவது கேஷ் வைத்துக்கொள்ளும் வழக்கமும், கூடவே வரும் ஒவ்வொருவரும் அவர்கள் திரும்பிவர கேஷ் தன்னுடன் வைத்திருக்கணும் என்று சொல்லும் பழக்கம் எனக்கு உண்டு

      நீக்கு
    2. சென்ட்ரல் லாட்ஜில் குழந்தைகளும் நானும் டிஃபன் சாப்பிட்டோம். அப்போப் பர்ஸ் இருந்தது. வெளியில் வந்து பழங்கள் வாங்கினேன். அப்போப் பர்ஸ் இருந்தது. சாலையைக் கடந்து எதிர்ப்பக்கம் வந்து ஆழ்வார்ப்பேட்டை போகப் பேருந்தில் ஏறினோம். இத்தனைக்கும் கூட்ட நெரிசல் எல்லாம் இல்லை. அப்பா/அம்மா/அண்ணா/தம்பி குடும்பங்கள் அப்போ ஆழ்வார்ப்பேட்டை ராமசாமி நாயக்கன் தெருவில் வாசம். கனுவுக்கு அங்கே போய்க் கொண்டிருந்தேன்.

      நீக்கு
    3. பேருந்தில் ஏறிப் பர்ஸை எடுக்கலாம்னு பைக்குள் கைவிட்டால் பர்ஸ் இல்லை. வேறே பைகளைப் பார்த்தாலும் பர்ஸ் இல்லை. குழந்தைகளும் தங்களிடம் கொடுக்கலை என்றனர். அவங்க சேமிப்பாக ஐந்து ரூபாயோ என்னமோ கையில் இருந்தது. ஆழ்வார்ப்பேட்டை டர்னிங்கில் இறங்கி அங்கிருந்து ஆட்டோவில் போகணும். அதுக்குப் பணம் போதாது. டிக்கெட்டுக்கே இன்னும் பத்து ரூபாய் வேண்டுமோ என்னமோ! கண்டக்டர் கத்த ஆரம்பிச்சுட்டார். என்னை நான் பொய் சொல்லி ஏமாத்துவதாக வேறே சொல்ல ஆரம்பிக்கக் கூட வந்த பயணிகளில் ஒருவர் பத்து ரூபாயும் இன்னொருவர் ஐந்து ரூபாயும் கொடுக்க ஆழ்வார்ப்பேட்டை டர்னிங்கில் இறங்கி அங்கிருந்து பைகளைத் தூக்கிக் கொண்டு நடந்தே ராமசாமி நாயக்கன் தெருவுக்குப்போனோம். உள்ளே நுழைந்தேனோ இல்லையோ வெடித்துக்கொண்டு வந்தது அழுகை! என் வாழ்வில் முதலும்/கடைசியுமாக நான் திருட்டுக் கொடுத்தது பட்டப்பகலில் அதான்.சுமார் 300/400 ரூபாய் வரை பர்ஸில் இருந்தது சில்லறையாக 100 ரூபாய் வரை இருந்திருக்கும். தம்பிக்குக் கல்யாணம் என்பதால் அவன் மனைவிக்கு நலுங்குக்கு விளையாடல் புடைவை அவனை வைத்துக் கொண்டு வாங்கணும்னு கொண்டு போன பணம் அது. கடைசியில் அங்கே வாங்காமல் திரும்ப அம்பத்தூர் வந்து எங்களுடைய வாடிக்கைக் கடன் கொடுக்கும் கடையான அம்பிகா ஸ்டோர்ஸில் தான் புடைவை வாங்கினேன். :( ஆனால் ஒரு விதத்தில் அது ராசியான கடை! அங்கே யாருக்கெல்லாம் புடைவை வாங்கிக் கொடுத்தேனோ அவங்களுக்கெல்லாம் நிறையத் துணி சேர்ந்தது. சொல்லுவாங்க.

      நீக்கு
    4. நான் கைப்பை எடுத்துக் கொண்டாலே நம்ம ரங்க்ஸ் கரித்துக் கொட்டுவார். பெண் கல்யாணத்தின் போது சத்திரம் பார்க்கத் தி.நகர் போனோம். என்னைக் கையை வீசிக் கொண்டு வானு சொல்லிட்டார். சரினு நானும் அவர் சொன்னபடியே செய்வோம்; கல்யாண வேலை; வாக்குவாதம் வேண்டாம்னு போயிட்டேன். சத்திரங்கள் பார்த்துட்டுத் தேதி சரியாக வராமல், சத்திரங்கள் பிடிக்காமல் வெறுத்துப் போய் என் ஓர்ப்படியின் அப்பா/அம்மா இருக்கும் சிங்காரம்பிள்ளை தெருவுக்குப் போய் அவங்க வீட்டுக்குப் போனோம். அங்கே மைத்துனர் பிள்ளை (அப்போ ஏழெட்டு வயசுக்குள் இருக்கும்.) வந்திருந்தான். குழந்தை வந்திருக்கானேனு கடைக்குப் போய் பிஸ்கட் சாக்லேட் வாங்கி வந்து கொடுத்தார். அங்கே அவங்க பாட்டி இல்லாததால் குடிக்க/சாப்பிட ஏதும் கிடைக்கலை. பரவாயில்லைனு கிளம்பிக் கூட வரேன்னு சொன்ன குழந்தையைப் பின்னர் வந்து அழைத்துப் போவதாகச் சொல்லிட்டு வெளியே வந்தோம். பனகல் பார்க் மார்க்கெட்டைத் தாண்டும்போது அவரிடம், "பசியா இருக்கு! ஏதேனும் சாப்பிட்டுட்டுப் போகலாம்!" என்றேன். முறைத்தார். என்னனு பார்த்தால் கையில் 20 ரூபாய் தான் இருந்திருக்கு. கையில் பணம் இருப்பது தெரியாமல் பிஸ்கட், சாக்லேட்டுனு வாங்கியாச்சு. அதுக்குப் பணம் கொடுக்கிறச்சேத் தான் பார்த்திருக்கார். 20 ரூபாய்க்கும் குறைவா இருக்குனு. அங்கே இங்கே பீராய்ந்து 20 ரூபாய் தேத்தி இருந்தார். திரும்ப அம்பத்தூர் போகத்தான் சரியா இருக்கும் அந்தப் பணம். அதுவே குறிப்பிட்ட பேருந்தில் போனால் தான் அதுக்குள்ளே வரும். இன்னொரு எண் எனில் பைசா ஜாஸ்தி. சரினு காத்திருந்து சாதாரணப் பேருந்து வரும்வரை காத்திருந்து அதில் ஏறி வீட்டுக்குப் போனோம். அம்பத்தூர் ஓடியில் இருந்து வீடு 2 கிலோ மீட்டர். போய்க் கொடுத்துக்கலாம்னு ரிக்‌ஷாவில் ஏறிப் போனோம். ஆட்டோக்காரர்கள் வீட்டின் விலையைக் கேட்டாங்க. அதனால் அதில் போகலை.

      நீக்கு
    5. அதுக்கப்புறமா நான் கைப்பை இல்லாமல் வெளியே போவதே இல்லை. அதோடு கூட என் சேமிப்பில் இருந்து பணம் கொஞ்சம் கூடவே எடுத்து வைச்சுப்பேன்.

      நீக்கு
    6. Geetha Sambasivam "இஸ்க்கு... . ” என்ற உங்கள் இடுகையில் இவர் புதிய கருத்து தெரிவித்துள்ளார்:

      பேருந்தில் ஏறிப் பர்ஸை எடுக்கலாம்னு பைக்குள் கைவிட்டால் பர்ஸ் இல்லை. வேறே பைகளைப் பார்த்தாலும் பர்ஸ் இல்லை. குழந்தைகளும் தங்களிடம் கொடுக்கலை என்றனர். அவங்க சேமிப்பாக ஐந்து ரூபாயோ என்னமோ கையில் இருந்தது. ஆழ்வார்ப்பேட்டை டர்னிங்கில் இறங்கி அங்கிருந்து ஆட்டோவில் போகணும். அதுக்குப் பணம் போதாது. டிக்கெட்டுக்கே இன்னும் பத்து ரூபாய் வேண்டுமோ என்னமோ! கண்டக்டர் கத்த ஆரம்பிச்சுட்டார். என்னை நான் பொய் சொல்லி ஏமாத்துவதாக வேறே சொல்ல ஆரம்பிக்கக் கூட வந்த பயணிகளில் ஒருவர் பத்து ரூபாயும் இன்னொருவர் ஐந்து ரூபாயும் கொடுக்க ஆழ்வார்ப்பேட்டை டர்னிங்கில் இறங்கி அங்கிருந்து பைகளைத் தூக்கிக் கொண்டு நடந்தே ராமசாமி நாயக்கன் தெருவுக்குப்போனோம். உள்ளே நுழைந்தேனோ இல்லையோ வெடித்துக்கொண்டு வந்தது அழுகை! என் வாழ்வில் முதலும்/கடைசியுமாக நான் திருட்டுக் கொடுத்தது பட்டப்பகலில் அதான்.சுமார் 300/400 ரூபாய் வரை பர்ஸில் இருந்தது சில்லறையாக 100 ரூபாய் வரை இருந்திருக்கும். தம்பிக்குக் கல்யாணம் என்பதால் அவன் மனைவிக்கு நலுங்குக்கு விளையாடல் புடைவை அவனை வைத்துக் கொண்டு வாங்கணும்னு கொண்டு போன பணம் அது. கடைசியில் அங்கே வாங்காமல் திரும்ப அம்பத்தூர் வந்து எங்களுடைய வாடிக்கைக் கடன் கொடுக்கும் கடையான அம்பிகா ஸ்டோர்ஸில் தான் புடைவை வாங்கினேன். :( ஆனால் ஒரு விதத்தில் அது ராசியான கடை! அங்கே யாருக்கெல்லாம் புடைவை வாங்கிக் கொடுத்தேனோ அவங்களுக்கெல்லாம் நிறையத் துணி சேர்ந்தது. சொல்லுவாங்க.

      க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், இந்தப் பின்னூட்டம் முன்னாடி இருந்தது. இப்போ இங்கே இல்லை. மெயில் பாக்ஸில் இருந்து எடுத்துப் போட்டிருக்கேன்,. :(

      நீக்கு
    7. ரொம்ப சங்கடமான நிலைமை கீதா அக்கா.. மற்றவர்கள் ஏதோ நாம் இப்படியே பிழைப்பு நடத்துவது போல பார்க்கிறார்களோ என்கிற எண்ணமும், அவர்களின் ந உ பா வும் மிகவும் சங்கடப்படுத்தியிருக்கும், வேதனை தந்திருக்கும்.

      நீக்கு
    8. கீதாக்கா ரொம்பவே தர்மசங்கடமான நிலைமை. அந்த இடத்தில் அழாமல் சமாளித்திருக்கீங்களே, எப்படியான நிலைமை என்று புரிந்து கொள்ள முடிகிறது. மனம் எவ்வளவு வேதனை அடைந்திருக்கும் அவமானத்தில் என்று புரிகிறது கீதாக்கா

      கீதா

      நீக்கு
  9. பொதுவாக வீடுகளுக்கு வந்து பிச்சை எடுப்பது இப்போதெல்லாம் குறைந்துவிட்டது. அம்மாமண்டபம் வாசலில் நிறையப் பேர் உட்கார்ந்திருப்பார்கள். சாப்பாடு எடுத்துப் போய்க் கொடுத்தால் வாங்குவதில்லை. சாப்பாட்டுக்கான பணம் குறைந்தது நூறு ரூபாய் கேட்பார்கள். துணி கொடுத்தாலும் வாங்குவதில்லை. :( பணம் தான் அவங்க எதிர்பார்ப்பே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விரைவில் ஆளுக்கொரு POS (Point of sales - card swiping மெஷின்) வைத்துக்கொண்டு உட்கார்ந்திருப்பார்கள். அதில் எல்லோரும் தங்கள் டெபிட் கார்ட் / கிரெடிட் கார்ட் மூலம் தர்மம் செய்யவேண்டும். receipt கொடுப்பார்கள்.

      நீக்கு
    2. இப்போவே போன்பே தட்டி வைத்திருப்பவர்களைப் பார்த்திருக்கிறேன்.

      நீக்கு
    3. நடக்கலாம். யார் கண்டது?

      நீக்கு
    4. அனாதைக் குழந்தைகள், முதியவர்களுக்கு இல்லம் நடத்துகிறோம், உதவுங்கள் என்று துணியோ, காசோ கேட்பவர்கள் இந்தப் புதிய வீட்டில் நான்கைந்து முறை வந்து விட்டார்கள். அவர்களை அனுப்புவதற்குள் படாதபாடு படவேண்டி இருக்கிறது. 'சின்ன அமௌண்ட்டாவது கொடுங்க' என்கிறார்கள். அவர்களை பார்த்தால் நம்பிக்கை வருவதில்லை. அதே போல அம்மனுக்கு கூழ் ஊற்றுபவர்களின் வசூல்!

      நீக்கு
    5. //இப்போவே போன்பே தட்டி வைத்திருப்பவர்களைப் பார்த்திருக்கிறேன்.//

      அப்படியா? நிஜமாவா நெல்லை?

      நீக்கு
    6. எங்க பார்த்தேன்னு சட்னு நினைவுக்கு வரலை. எதுனால போட்டோ எடுக்கலைன்னும் யோசிக்கிறேன்

      நீக்கு
    7. அதேதான்.. அடுத்தமுறை பார்த்தா போட்டோ எடுங்கன்னு சொல்ல நினைச்சேன்!

      நீக்கு
  10. அம்பத்தூரில் இருந்தப்போ அடிக்கடி ஒரு பெண்மணி தாலி வாங்கப் பணம் கேட்டு வருவார்கள். முதல்முறை வந்தப்போ அநேகமாகத் தெருவில் எல்லோருமே 50/100 எனக் கொடுத்தோம். அதே பெண்மணி ஒரு வருஷம் கழிச்சு மறுபடி வரவும் அவங்களைப் பிடிச்சுட்டோம். கேள்விகள் கேட்க எங்களுக்குச் சாபங்கள் கொடுத்துட்டுப் போனார்.

    பதிலளிநீக்கு
  11. அப்போல்லாம் பிஎஸ் என் எல் லான்ட்லைன் மட்டுமே வீட்டில். அது வழியாகக் கூடச் சிலர் கௌரவப் பிச்சை கேட்டிருக்காங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிச்சையை ஃபோன் மூலம் அனுப்பமுடியுமா?

      நீக்கு
    2. நீங்க வேறே! தொலைபேசிப் புத்தகம் மூலம் எப்படியோ விலாசத்தைத் தெரிஞ்சுண்டு வரேன்னு சொல்லுவாங்க. இதைப் பற்றி 2006/2007 ஆம் வருடங்களில் பதிவுகள் கூடப் போட்ட நினைவு. யாரானும் சொந்தக்காரர் பெயரைச் சொல்லி விலாசம் கொடுத்தாங்க என்பார்கள்.அதோடு இல்லாமல் இந்த லாட்டரியில் பரிசு கிடைச்சிருக்கு. இந்த ஓட்டலில் பார்ட்டி அதுக்கு இத்தனை பணம் கட்டணும்னு எல்லாம் சொல்லுவாங்க. சூரியாவோட டின்னர் சாப்பிட உங்க நம்பரைத் தேர்ந்தெடுத்திருக்கோம் என்பாங்க. 5 நக்ஷத்திர ஓட்டலிலே விருந்து. அதுக்கு முன்பணமாக இத்தனை கட்டணும் என்பாங்க. எனக்கு சூரியாவையே பிடிக்காதுனு சொல்லிடுவேன். :)

      நீக்கு
    3. இப்போ இவை எல்லாமும் மொபைலில் வருகின்றன. நேத்திக்குக் கூட 50000 டாலர் பரிசு விழுந்திருப்பதாகவும் முன் பணமாக ஆயிரம் டாலர் கட்டும்படியும் சொல்லிச் செய்தி வந்திருந்தது. டெலீட் செய்தேன். :(

      நீக்கு
    4. லேண்ட்லைன் மூலம் தொடர்பு கொண்டு வித்தியாசமான முறையில் யாசகம் கேட்ட (தாலிக்கு தங்கம் - பெரியவா ஆக்ஞை) ஒருவர் - என் பெயர், என் அப்பாவின் பெயர் தன் அப்பாவின் பெயர் அதேதான் என்று சொல்லி கேட்டவர் பற்றி சில வருடங்களுக்கு முன்னர் 'ஏமாந்த அனுபவ'த்தில் எழுதி இருந்தேன்!

      நீக்கு
  12. காது கேட்காதவங்களின் மனோநிலையை அருமையாக விவரிக்கும் கவிதை.
    செங்கோட்டை ஶ்ரீராம் எழுதி இருந்ததை நானும் படிச்சிருக்கேன்.
    வீரப் பாட்டி பற்றி பாசிடிவ் செய்திகளில் வந்திருக்கணுமோ?
    ஜோக் மூலமாக சிஷ்யைக்குப் பெண் பிறந்தாவது அந்தக் குழந்தையானும் பாட்டுக்கத்துக்கட்டும்னு சொல்றார் போல!

    பதிலளிநீக்கு
  13. எனக்குத் தெரிஞ்சு கல்யாணங்களில் கொடுக்கும் தேங்காய்களை யாரும் திரும்பக் கடையில் போட்டதாகத் தெரியலை. இங்கே நவராத்திரியில் அநேகமாகப் பத்துப் பதினைந்து தேங்காய்கள் வந்துடும். வீணாகிவிடும் நிலையில் இருப்பனவற்றை உடைத்துத் துருவி ஃப்ரீஸரில் வைச்சுடுவேன். கொஞ்சம் நன்றாக இருப்பதைக் கோயிலுக்குக் கொடுப்போம். வாழைப்பழங்கள் இப்படித்தான் சிலர் நிறைய வாங்கி வந்துடுவாங்க. அப்போப் பிள்ளையாருக்குக் கொடுத்துடுவோம். ஏனெனில் வாழைப்பழம் சீக்கிரம் வீணாகிவிடும். இரண்டு பேர் எத்தனை சாப்பிட முடியும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழைப்பழத்தை ஜாம் செய்யலாமே! வேறு ஏதேனும் திப்பிச உணவு வகை செய்து பார்க்கலாம். வாழைப்பழ ஸ்வீட் போளி, வாழைப்பழ அல்வா எல்லாம் முயற்சி செய்து பாருங்க. திங்க கிழமைப் பதிவுக்கு அனுப்புங்க!

      நீக்கு
    2. வாழைப்பழக் கேக், பிரெட் (அப்பாதுரை பண்ணினாப்போல்) பண்ணலாம் தான். ஆனால் நாமே சாப்பிடுவதில் என்ன இருக்கு? வேலை செய்பவர்களுக்கும் கொடுப்பது உண்டு. அநேகமா இப்படித்தான் செலவு செய்வோம்.

      நீக்கு
    3. இதுக்குச் சொன்ன பதிலைத் தேடணும் போல! :( இந்த ப்ளாகர் பாடாய்ப் படுத்துதே! :(

      நீக்கு
    4. Geetha Sambasivam "இஸ்க்கு... . ” என்ற உங்கள் இடுகையில் இவர் புதிய கருத்து தெரிவித்துள்ளார்:

      வாழைப்பழக் கேக், பிரெட் (அப்பாதுரை பண்ணினாப்போல்) பண்ணலாம் தான். ஆனால் நாமே சாப்பிடுவதில் என்ன இருக்கு? வேலை செய்பவர்களுக்கும் கொடுப்பது உண்டு. அநேகமா இப்படித்தான் செலவு செய்வோம்.

      நீக்கு
    5. அதெல்லாம் ஜோக்குன்னு ஸ்ரீதர் அந்தக் காலத்தில் போட்டிருக்கார்... நிஜத்தில் நடந்திருக்காது!

      நீக்கு
  14. //உணவு சாப்பிட்ட உடனேயே பழங்களைச் சாப்பிடும் பழக்கம் பலருக்கு உள்ளது, அது கெடுதல். அது காற்றை வயிற்றுக்குள் அனுப்பி, வயிறு உப்புசத்துக்கு ஆளாக்கும் நிலையை (Bloated with air) உருவாக்குகிறது.// இதைச் சொன்னால் நம்மவர் ஏத்துக்கறதே இல்லை. போன வாரம் வந்திருந்த சித்தி மாப்பிள்ளையும் சாப்பிட்டு ஒரு மணி நேரமாவது ஆகணும் என்றார். ஆனால் ரங்க்ஸோ கேட்க மாட்டார். நான் வெறும் வயிற்றில் தான் பழம் எடுத்துப்பேன். அநேகமாகக் காலையில் கஞ்சி குடிக்கும் முன்னர். அல்லது மாலை சாப்பாடு சாப்பிட்டு 3 மணி நேரம் கழித்துக் காஃபி, தேநீர் குடிக்கும் முன்னர். இரவு சாப்பிட்டதும் பழமெல்லாம் சாப்பிடுவதே இல்லை. ஆனால் அவர் இரண்டு வேலையும் சாப்பிட்டுக் கை அலம்பினதும் பழத்தைத் தான் எடுத்துப்பார். :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உணவு ஜீரணிக்க இரண்டு மணி நேரம் என்றால் அரை மணி நேரத்தில் பழம் ஜீரணமாகிவிடும். ஜீரணமாகிக்கொண்டிருக்கும் உணவுக்கு முன்னே ஜீரணமான பழம் இருப்பது கெடுதல் (உணவுமண்டலத்தில்). அதனால்தால் திருமண விருந்தில் முதலில் பழமோ பழக்கலவையோ இலையில் வைக்கிறார்கள்.

      நீக்கு
    2. நான் எப்போவுமே பழங்களைக் காலை ஆகாரத்துக்கு முன்னரோ அல்லது இரவு ஆகாரத்துக்கு முன்னரோ எடுத்துப்பேன். அப்போக் கிட்டத்தட்ட வயிறு காலியாத் தானே இருக்கும்.

      நீக்கு
    3. நானும் சமீப காலாவ அரி சாப்பிட்ட உடன்தான் பழம் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். கொஞ்ச காலமாக மாற்றி இருக்கிறேன். கல்யாணங்களில் கூட சாப்பிட்டு முடித்தபின்தான் எடுத்துக் கொள்ளும் வகையில் வாழைப்பழம் வைத்திருப்பார்கள் பார்த்திருக்கிறீர்களா? ஆனால் திவசம் போன்ற நிகழ்வுகளில் பந்தி பரிமாறும் முன்னரே வாழைப்பழம் தோல் உரித்து இலையில் பரிமாறுவார்கள்.

      நீக்கு
    4. கீதாக்கா நம் வீட்டிலும் காலையிலேயே பழம் சாப்பிட்டுவிடுவது வழக்கம். சாப்பாட்டிற்கு முன்.

      ஸ்ரீராம் சில கல்யாணங்களில் முதலில் பழத் துண்டும் சர்க்கரை போடுவதுண்டே ஸ்ரீராம். திவசத்தில் முதலில் பழம்தான்..

      கீதா

      நீக்கு
    5. ஆமாம் கீதா..  அதைத்தான் சொல்லி இருக்கிறேன் (எழுத்துப் பிழைகளோடு!!!)

      நீக்கு
  15. நான் வெறும் வயிற்றில் பழம் சாப்பிடணும்னு சொல்லுவதைக் கேலி செய்வார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையில் ஏனோ அப்படி சாப்பிடத் தோன்றாது.

      நீக்கு
    2. காலைல அனேகமா 7 மணிக்குள் ஏதேனும் ஒரு பழம் சாப்பிட்டுவிட்டு (கண்டருளப்பண்ணிவிட்டு), பிறகு ப்ரெஷர் டேப்லட் எடுத்துக்கொள்வேன் (வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது என்று). அதனால் டேப்லட் சாப்பிட மறப்பதில்லை. அதற்கப்புறம் நடை

      நீக்கு
    3. காலை நாலரை மணிக்கு ஒரு சொம்பு வெந்நீர். அதனுடன் பிரஷர் மாத்திரை! உடனே பாலை அடுப்பில் வைத்து காஃபி!

      நீக்கு
    4. நான் 400-600 ml வெந்நீர் முதலில் எடுத்துப்பேன். அது மட்டும் போதுமா ப்ரெஷர் டேப்லட் எடுத்துக்க. அதற்கு முன்னால் ஏதேனும் சாப்பிட வேண்டாமா?

      நீக்கு
    5. நான்கு வருடங்களுக்கு முன் என்னிடம் மருத்துவர் சொன்னதை அப்போதிலிருந்து அப்படியே கடைப்பிடித்து வருகிறேன்!  அதுவரை மாத்திரை எடுப்பதில் இர்ரெகுலராக இருந்தேன்.

      நீக்கு
  16. முதல் ஜோக் என்ன என்று எனக்குப் புரிகிறதை சொல்கிறேன். பாடகர் பாட்டு சொல்லித் தந்தார். சிஷ்யப் பெண்ணுக்குக் கல்யாணம் ஆகிவிட்டது. அந்தப் பெண்ணுக்கு ஒரு பெண் பிறந்தால் - அதற்கு நாட்டியம் சொல்லித்தர தனக்கு ஒரு சந்தர்ப்பம் + வருமானம் கிடைக்கும் என்று நினைக்கிறார், நட்டுவனார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டுமே சரி இல்லையோ? நீங்க நாட்டியம்னு சொல்வதை நான் பாட்டுனு சொல்லி இருக்கேன். அம்புடுதேன்! :))))

      நீக்கு
    2. முதலில் சொல்பவர் பாகவதர். அதற்கு பதில் சொல்பவர் நட்டுவனார். பாகவதர் பாட்டு சொல்லி கொடுப்பார். நட்டுவனார் நாட்டியம் சொல்லிக் கொடுப்பார். பாட்டு கல்யாணத்திற்கு முன்பு பெரும்பாலும் பெண்கள் கற்றுக்கொள்வார்கள். பெண் பார்க்க வரும்போது (அந்தக் காலத்தில்) பாடத் தெரியுமா என்று கேட்டால் பாடிக் காட்ட. ஆனால் நாட்டியம் சிறுவயது முதலே பெண்களுக்கு கற்றுக்கொடுப்பார்கள்.
      எனவே என்னுடைய அனுமானம் சரி என்று கனம் கோர்ட்டார் அவர்களிடம் தெரிவித்துக் கொள்கிறேன்.

      நீக்கு
    3. கேஜிஜி சொல்ல யிருப்பது சரி என்று தோன்றுகிறது.

      நீக்கு
  17. நாங்க இங்கே குடித்தனம் வந்த புதுசில் இருந்த ஒரு செக்யூரிடிக்கு விசேஷ நாட்களில் சாப்பாடு கொடுத்தால் அது இல்லையா? இது இல்லையா? இது என்ன சாப்பாடுனு கொடுக்கறீங்க என்றெல்லாம் கேட்பார். ஒரு முறை சாம்பார் சாதம் பொட்டலம் வாங்கி வந்தது மிஞ்சிப் போகவே அவரைக் கூப்பிட்டுக் கொடுத்தால் வெறும் சாம்பார் சாதம் மட்டும் கொடுத்தால் எப்படிச் சாப்பிடுவேன்? அப்பளமாவது கொடுக்க வேண்டாமா என்றார். அப்பளம் பொரித்துக் கொடுக்கும்படி ஆயிற்று. :)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடப்பாவமே... ஆமாம், இதற்கு ஏதோ பழமொழி கூட உண்டு, இல்லை?

      நீக்கு
    2. தானம் கொடுத்த மாட்டின்.........?

      கீதா

      நீக்கு
    3. ம்ம்ம்.. சொல்லலாம்... இன்னும் கூட பொருத்தமாக ஒன்று இருக்கோ...

      நீக்கு
  18. பிச்சை அளிக்கும் மனநிலை எப்போதாவது தோன்றும். அளிப்பேன். மற்றபடி சிக்னல் பிச்சை, குழந்தைப் பிச்சை, கைக்குழந்தைப் பிச்சை இவற்றைப் பொருட்படுத்துவதில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அபுதாபியில் ஓர் முறை மாலை ஆறு மணியளவில் நான் தங்கியிருந்த கட்டடத்திலிருந்து இறங்கி காருக்கு சென்றேன் பி.எம்.டபிள்யூ கார் (எனது கார் சர்வீசுக்கு சென்று இருந்ததால் நண்பரது காரை இரவல் வாங்கிது)

      கோட் ஸூட் போட்டு டிப்டாப்பாக அரபி வீட்டு திருமணத்துக்கு சென்றேன். காரில் அமர்ந்ததும் ஒரு தமிழர் வந்து ஸார் ஓமன் நாட்டிலிருந்து வந்தேன் பர்ஸ் தொலைந்து விட்டது.

      பெட்ரோல் போடணும் நூறு திர்ஹாம்ஸ் கொடுங்க நான் போய் அனுப்புறேன். என்றார், நம்புவது போலவும் இருந்தது மேலும் நான் இருந்த நிலையும் என்னை பெரிய ஆள் மாதிரி காட்டி விட்டது.

      ஆள் பார்த்துதான் கேட்கிறான். நூறு திர்ஹாம்ஸ் என்பது இந்திய ரூபாய்க்கு அன்று 1500 வரலாம் மொபைல் வராத காலகட்டம்.

      பாவமாகவும் இருந்தது, இருபத்து ஐந்து திர்ஹாம்ஸ் கொடுத்தேன். ஒரு பேப்பரை எனது அட்ரஸ் என்று நீட்டினான். வேண்டாம் என்று புறப்பட்டு சென்றேன்.

      நீக்கு
    2. ஆமாம். நானும் என் மனதுக்குப் படும்போதுதான் பணம் தருவேன். ரெகுலராக வழக்கப்படுத்திக் கொள்வதில்லை. பேஸ்புக்கில் இந்தக் கேள்வி கேட்டபோது வந்த பதில்கள் வித்தியாசமாக இருந்தன. அதில் ஒருவர் பப்ளிக்காக சொல்லாமல் என் உள்பெட்டியில் வந்து சொன்ன சில விஷயங்கள் நெகிழ்ச்சியூட்டின.

      நீக்கு
    3. தேவகோட்டை ஜி.. சமயங்களில் புறச் சூழல்களும் தவிர்க்க முடியாமல் யாசகம் செய்ய வைத்து விடும்!

      நீக்கு
  19. சமீபத்தில் திருப்பதி யூனிவர்சிட்டியில் ஆகம்ம் முதலாண்டு முடித்த ஒரு பையரைச் சந்திக்க நேர்ந்தது (13 வயது). அவருக்கு 500ரூ சம்பாவனை பண்ணணும்னு உடனே செயல்படுத்தலை. அவரது அப்பா சென்னையில் ஒரு கோவிலைப் பார்த்துக்கொள்கிறார். அதனால் கொடுக்க நினைப்பதை உடனே செயல்படுத்தணும் என்று சொல்றாங்க. யோசித்தால் வாய்ப்பு தவறிவிடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அளிக்க வேண்டும் என்று தோன்றினால் உடனே கொடுத்துவிட வேண்டும். தட்டி இரப்பவர்களிடம் அனுதாபம் வருவதில்லை (மின்சார இரயில்களிலும், பெங்களூர் சிக்னல்களிலும் உண்டு)

      நீக்கு
    2. நானெல்லாம் கொடுத்துட்டுத் திரும்ப அதை நினைப்பது கூட இல்லை. ஆனால் வேண்டாம்னு தோன்றினால் நிச்சயம் கொடுக்க மாட்டேன். :)

      நீக்கு
    3. கொடுத்துட்டு திரும்ப நினைக்கக்கூடாது. ஆனால் இங்க, கொடுக்கணும்னு அப்போ சட்னு தோணினதைச் செயல்படுத்தலை என்ற வருத்தம்தான்

      நீக்கு
    4. ஆமாம்.. கொடுக்க வேண்டும் என்று தோன்றினால் தாமதப்படுத்தாமல் செயலாற்றிவிட வேண்டும்! இல்லா விட்டால் மனம் மாறிவிடும்!

      ஒன்றே செய்க, நன்றே செய்க, அதை இன்றே செய்க என்பார்கள். வலது கை கொடுப்பதை இடது கை அறியும் முன்னரே கொடுத்து விட வேண்டும் என்று சொல்லப்படுவதைதான் நாம் இடது கைக்கு கூட தெரியாமல் ரகசியமாக கொடுக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்கிறோம்!

      நீக்கு
    5. அதே கொடுப்பதை உடனே கொடுத்துவிட வேண்டும் அதே சமயம் ஸ்ரீராம் சொல்லியிருப்பது - காஞ்சிப் பெரியவர் சொல்வது வலதுகை கொடுப்பது இடதுகைக்குக் கூடத் தெரியக் கூடாது என்று!!

      நானும் கொடுத்ததை நினைத்துப் பார்க்க மாட்டேன்.

      ஸ்ரீராம் ரகசியமாக என்பது ஒரு விதத்தில் பார்த்தால் விளம்பரம் இல்லாமல் என்பதாகவும் கொள்ளலாம் இல்லையா?

      கீதா

      நீக்கு
    6. ​அது பொதுவான அர்த்தம் கீதா... இது ஸ்பெஷல் அர்த்தம்.

      நீக்கு
  20. கவிதை, தனித்திரு விழித்திரு என்பதை நினைவுபடுத்துகிறது. பிறர் சந்தோஷத்தில் பங்குபெற இயலாது. அதுதான் செவிகேட்புத் திறன் இல்லாதவர்களின் பிரச்சனை. அவர்களைத் தனியே விடமுடியாத்து, கூட இருப்பவர்களின் பிரச்சனை

    பதிலளிநீக்கு
  21. பதில்கள்
    1. நல்லது. சுமார்தான்! ஆனால் இப்படியும்தான் வந்தன ஜோக்குகள்!

      நீக்கு
  22. கவிதை எனக்கு அப்படியே பொருந்திப் போகிறது ஸ்ரீராம். அருமை. இதற்கு முன் எழுதிய செவி கேட்காத நிலை பற்றி ஒரு கவிதை எழுதியதும் நினைவுக்கு வந்தது. உங்கள் அம்மாவைப் பற்றி எழுதியதும் நினைவுக்கு வந்தது.

    இது வரை மூன்றாவது காதினால் ஓடிக் கொண்டிருக்கிறது. அதுவும் வேலை செய்யாத காலம் வந்துவிட்டாலோ?!! அதற்கும் என்னைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும்.

    ஆனால் பாருங்கள் ஸ்ரீராம், மூன்றாவது காது பொருத்திக் கொள்ளாதவரை எனக்குப் பல சமயங்களில் அது என் உலகில் சஞ்சரிக்க உதவும். கெட்ட வார்த்தைகள் காதில் விழாது. அது ஒரு தனி உலகம். எனவே சில சமயம் நல்லது என்று தோன்றும்தான்...

    இருந்தாலும் சிலப்போ முக்கியமானவற்றிற்கு முக்கியமாகச் சம்சாரிக்க இந்த மூன்றாவது காது வேண்டியிருக்கே!!! குறிப்பாக மகனோடு, நெருங்கிய சொந்தங்கள், நட்புகளோடு பேச வேண்டுமே!

    //பொறுமையிழக்கும் எதிர்சனத்துக்கு
    தான் அனுபவிக்கும்வரை
    புரியப்போவதில்லை
    மௌன உலகின் நரகங்கள் //

    இது உண்மைதான், ஸ்ரீராம்.

    அதாவது அவர்களுக்கு இப்படி நேர்ந்தால் என்று நினைப்பதில்லை. ஏனென்றால் அனுபவங்கள்தான் காரணம். ஆனால் சிலர் இதைக் குறிப்பிட்டுக் கேலி செய்தோ, இல்லை சலித்துக் கொண்டாலோ கொஞ்சம் வருத்தம் வரத்தான் செய்யும். நான் மௌனமாக ஒதுங்கிவிடுவதுண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கனவுலகில் சஞ்சரிப்பவர்களுக்குப் பிரச்சனை கிடையாது. பிறரிடம் கம்யூனிகேட் பண்ணும் குணம் உள்ளவர்களுக்கு காது கேட்காமல் போய்விடுவது மிகவும் கொடுமையானது. என் மாமனாருக்கு அந்த நிலைமை வர ஆரம்பித்தது. ஆனால் சட்னு அவர் போய்ட்டார். இல்லைனா ரொம்பவே கஷ்டப்பட்டிருப்பார். அவருக்கு பிறரிடம் பேசுவதுதான் பொழுதுபோக்கு.

      நீக்கு
    2. எதையும் (உடல் பிரச்சனையையை) கேலி பண்ணுவதைப் போன்ற மோசமான குணம் கிடையாது என்று நினைக்கிறேன். நமக்கு அதே பிரச்சனை வருவதற்கு நொடிப்பொழுது கூட ஆகாது என்பதை எப்போதுதான் உணரப்போகிறோமோ..

      நீக்கு
    3. உண்மை கீதா.. நான் பார்ப்பதை / பார்த்ததை சொல்லி இருக்கிறேன். உணர்ந்ததில்லை. நீங்கள் உஙர்ந்து சொல்கிறீர்கள். என் மாமியாருக்கு இப்போதெல்லாம் பல விஷயங்கள் அவர்களுக்கு தெரிய வருவதில்லை என்பது பெரிய குறை! ("இப்பல்லாம் பல விஷயங்கள் என் காதுக்கு வருவதே இல்லை" - அவர். "இதற்குமேல் கத்தினா அடுத்த தெருல சண்டைக்கு வர்றாங்க..."- பாஸ்)

      நீக்கு
    4. நெல்லை அதே....எனக்கு கம்யூனிக்கேஷன் ரொம்ப முக்கியம். பேசாமல் இருக்க முடியாது. பிறவியிலேயே செவி கேட்காது என்பது வேதனை என்றால், இடையில் திறன் இல்லாமல் ஆகும் போது...அது ஒருவித சங்கடத்தை ஏற்படுத்திவிடுகிறது. எனக்கு இடையில் வந்த பிரச்சனைதானே. அம்மாவுக்கு இருந்த பிரச்சனை...அப்பாவுக்கு சமீபகாலமாகத்தான் கேட்கவில்லை வயதானதால்...

      ஸ்ரீராம் ப்ராக்கெட்ல பாஸ் சொல்வதாக உள்ளது போலத்தான் நான் அப்பாவிடம் சொல்லுவதுண்டு, என்னவோ எனக்கு காது ஷார்ப் என்பது போல!!!! மூன்றாவது காதுதானே உதவிக் கொண்டிருக்கு. அப்பாவுக்கும் இப்போது என் மாமா பயன்படுத்தாமல் வேண்டாம் என்று சொல்லிக் கொடுத்ததை அப்பாவுக்குப் போட்டு விட்டிருக்கிறேன். ஓரளவு ஓடுகிறது.

      கீதா

      நீக்கு
  23. யார் பணம் கொடுப்பார்கள் என்று அவர்களின் மனநிலையும், யார் யாருக்கு பிச்சை இடுகிறார்கள் என்று அவர்களின் மனநிலையும் பற்றி சிந்தனை செய்தது உண்டு... பல நிகழ்வுகள் வியப்பைத் தரும்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதை ஆராய்ச்சி செய்தால் பல மனோ விவரங்கள் வெளிப்படும்!

      நீக்கு

  24. // Mute-ல் இருக்கும் உலகை //

    அப்படியா இருக்கிறது...?

    பதிலளிநீக்கு
  25. ரகமி எழுதிய ஆஷ் கொலை வழக்கு வீட்டில் இருக்கிறது. மாமனார் தொகுத்து பைன்ட் செய்து வைத்திருந்த புத்தகம். இப்படிச் சிலர் கிளம்புவதுண்டே. வீரபாண்டியகட்ட பொம்மன் குடும்பம் என்றும் கூட சமீபத்தில் செய்தி அடிபட்டதே.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீர பாண்டியக் கட்டபொம்மன் பற்றி நிறைய எழுதலாம். அத்தனை தகவல்கள்! முன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னே பதிவுலகுக்கு வந்த புதுசில் எழுத ஆரம்பித்து அதற்கு வௌவால் என்பவர் கொடுத்த பின்னூட்டங்கள் இரவு வரை போய்க்கொண்டே இருக்க, "முடியலைடா சாமி!" என்று தோன்றி விட்டது. பின்னர் தொடரலைனு நினைக்கிறேன். ஆனால் எட்டயபுரம் போய்ட்டு எட்டப்பன் குடும்பத்தாரைச் சந்தித்து விட்டு வந்தார் எங்க மின் தமிழ்க் குழுமத்தில் இருந்த சீதாலக்ஷ்மி அம்மா. உடல்நலம் சரியில்லாமையால் இப்போ இணையம் வர முடியலை. அவங்களும் பல ஆய்வுகள் நடத்தி இரண்டு குடும்பத்தாரையும் நேரில் கண்டு பேசி அவற்றைப் பகிர்ந்தார். உண்மையில் எட்டப்பன் கெட்டவன் அல்ல.

      நீக்கு
    2. காந்தியை எப்படி மஹாத்மா என்று கொண்டாடுகிறோமோ அதே மாதிரித் தான் வீரபாண்டியக் கட்டபொம்மன் தியாகி ஆனதும். :(

      நீக்கு
    3. வீரபாண்டியய கட்டபொம்மு பற்றி சொல்லபப்ட்டவை கால்டுவெல் கட்டிய கதை என்று சொல்வதுண்டு. தமிழ்வாணன் கூட ஏதோ எழுதினர்.

      நீக்கு
  26. பாட்டி ஜான்சி ராணி பரம்பரையாக இருப்பாரோ! ரசித்தேன். கூடவே விக்ரம் படத்தில் அப்பெண்மணி சண்டை போடும் காட்சியும் நினைவுக்கு வந்தது. நான் ரசித்தக் காட்சி அது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா.. ஹா.. இடம் தெரியாமல் மாட்டிக் கொண்டார்கள் திருடர்கள்.

      நீக்கு
  27. ஜோக்ஸ் ஓகே....சிரிக்க முடியவில்லை. செல்லங்கள் ஜோக் கூட சிரிப்பு வந்தாலும் கூடவே வருத்தமும் வந்தது,

    தேங்காயைக் கடையில் கொடுப்பார்களா என்ன?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //தேங்காயைக் கடையில் கொடுப்பார்களா என்ன?// - சால்வைகள் திரும்ப ஜவுளிக்கடைக்குச் செல்வதில்லையா என்ன?

      நீக்கு
    2. சால்வைகள், சொம்புகள், பஞ்சபாத்ர உத்ரணிகள்...,.

      நீக்கு
  28. நல்லதொரு வியாழன்..

    அன்பின் வணக்கங்களுடன்..

    வாழ்க வளமுடன்
    வாழ்க வையகம்..

    பதிலளிநீக்கு
  29. இப்போதெல்லாம் பிச்சையெடுப்பவர்கள் கிராமப் புறங்களில் குறைந்து விட்டனர்..

    கும்பகோணம் திருவையாறு போன்ற ஊர்களில் படித்துறைப் பக்கமாக ஏராளம்..

    தஞ்சாவூரில் பெரிய கோயிலின்
    பக்கமாக சோழன் சிலையருகில் தினந்தோறும் அன்னதானம் வாங்குவதற்கு ஒரு கூட்டம்.. பலரும் சோறும் தண்ணீரும் வாங்கிக் கொடுப்பதால் அதன் அருமை புரிவதில்லை..

    காசு ஒன்றே பிரதானம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பலரும் சோறும் தண்ணீரும் வாங்கிக் கொடுப்பதால்// - இந்த அன்னதானத்தின் அர்த்தமே பல இடங்களில் அர்த்தமிழந்துவிட்டதாக எனக்குத் தோன்றும். உதாரணமா நான் மேல்கோட்டை வைரமுடி திருவிழாவுக்குச் சென்றிருந்தபோது, நிறைய இடங்களில் அன்னதானம் செய்தனர். அதில் குறிப்பாக நாங்கள் தங்கியிருந்த இடத்தின் எதிரில் ஒரு மடத்தில். அங்க மைசூர்பாக்கு இனிப்பும் கொடுத்தார்கள். இனிப்பு கியூவில் இருந்தவர்களிடம், அன்னதானம் பெற்றுக்கொண்டால்தான் இனிப்பு உண்டு, இல்லையானால் கிடையாது என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். காஞ்சீபுரம் கருடசேவையின்போது ஒரு மினி லாரி கொண்டுவந்து புளியோதரை, தயிர்சாதம், லட்டு விநியோகித்தார்கள். அந்த இடங்களிலெல்லாம் (ரோடில்) லட்டு, சாதம் போன்றவை கிடந்தன.

      நீக்கு
    2. கோவில்களில் தினசரி இலவச மதிய உணவு, ஆங்காங்கே அன்னதானம் இவை எல்லாம் ஊரெங்கும் காணப்படும் யாசகர்களை குறைத்து விட்டன போலும்!

      நீக்கு
  30. இன்று தெரியாத நம்பரை எடுத்து விட்டேன் மறுபக்கம் சத்தமே இல்லை வைத்து விட்டேன், உடனே வாட்ஸ் அப்பில் இணைந்து கொண்டு தொண்டு நிறுவனம் என்று பணம் அனுப்ப சொல்லி செய்தி அனுப்புகிறார்கள்.

    வீதியில் இப்படி தொடர்பவர்களுக்கு சாப்பாடு கொடுத்தாலும் வாங்க மாட்டார்கள் காசு தான் வேண்டும்.

    இப்போது டீ குடிக்க , சாப்பாட்டுக்கு என்று தான் பணம் கேட்கிறார்கள்.
    உடல் உழைப்பு செய்ய முடியாத வயதானவர்கள் யாசகம் கேட்டால் கொடுக்காமல் இருக்கமுடியாது. கோவிலுக்குள்ளேயே வயதானவர்கள் கேட்கிறார்கள்.
    அடுக்கு மாடி குடிபிருப்புக்கு வருபவர்கள் சீதா கல்யாணம், ராதா கல்யாணம் என்று பணம் வசூல் செய்பவர்கள் வருகிறார்கள்.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கோமதி அக்கா. இந்தத் தொல்லை நிறைய இருக்கிறது.

      நீக்கு
    2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
  31. என் மாமனார் சாப்பிட்டவுடன் சிறிது நடப்பார்கள், சாப்பிட்டவுடன் வாழைபழம் சாப்பிடுவார்கள். (105 வயது வரை இருந்தார்கள்)

    எங்கள் அம்மா சாப்பிட்டவுடன் குளிப்பவர்களை பார்த்தாலே குளிக்க வேண்டும் என்று சொல்லி சாப்பிடும் முன் குளிக்க வைப்பார்கள்.
    இந்தக் காலத்து சில குழந்தைகள் விடுமுறை என்றால் முதலில் சாப்பாடு அப்புறம் குளியல் என்று செய்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவரவர்கள் பழக்க வழக்கங்களுக்கு அவரவர்கள் உடம்பு மாற்றி ஒத்துழைக்கிறது என்று நினைக்கிறேன்.

      நீக்கு
  32. மெளன உலகு கவிதை மனதை சங்கடப்படுத்துகிறது.
    பழைய செய்தி பகிர்வில் உள்ள வயதானவர் வியக்க வைக்கிறார்.
    கல்யாணவீட்டில் தரும் தேங்காயை இவரிடம் விற்று விட்டு போய் விடுவார்களா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேங்காயை அப்படி எல்லாம் விடமாட்டார்கள் என்றுதான் நினைக்கிறேன்! நன்றி கோமதி அக்கா.

      நீக்கு
  33. இன்றைக்கெல்லாம் பிச்சைக் காரர்கள் வெகுவாகக குறைந்து போனார்கள்.. திருவையாறு படித்துறை கும்பகோணம் இங்கெல்லாம் போய்த்தான் பார்க்க வேண்டும்.. தஞ்சை பெரிய கோயிலுக்குப் பக்கமாக சோழன் சிலையருகில் தினந்தோறும் அன்னதானம் செய்கின்றார்கள்.. அமாவாசை அது இது என்றால் ஊர்க்காரர்கள் சாப்பாட்டு எடுத்துக் கொண்டு போனால் கையில் பணமாக கொடுக்கும்படி கேட்கிறார்கள்.. மிதமிஞ்சிப் போவதால் உணவின் மதிப்பு தெரிவதில்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உணவு மலிந்து போனது! வயிற்றுக்கு கேட்பதற்கு பதில் மற்றவற்றுக்கு கேட்கிறார்கள் - பணமாக!

      நீக்கு
  34. காலையில் வந்து கும்பிடு போட்டு விட்டு ரெண்டு கருத்தும் சொல்லிட்டுப் போனேன்..

    அதுக்கு என்னாச்சு?.. தெரியலை..

    இப்போ மறுபடியும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருக்கே.. கமெண்ட்ஸை எல்லாம் கொண்டு வந்து போட்டு விட்டேன் பாருங்க...!

      நீக்கு
  35. தாழ்த்தப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணை சாரட்டில் எற்றி அக்ரஹாரம் வழியாக கலெக்டர் ஆஷ் அனுப்பி வைத்தது பிடிக்காமல் தான் சனாதன வாஞ்சி அவரை சுட்டுக் கொன்றார் என்றும் செய்தி இருக்கின்றது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது என்ன புதுக்கண்டுபிடிப்பு? இதுவரை கேள்விப்பட்டதில்லையே. இப்போ புதிது புதிதாக கதை எழுத ஆரம்பித்துவிட்டார்களா? யாரோ சொன்னார்கள், சுதந்திரப் போராட்டத்தில் ஆஷ் துரை பங்கெடுக்க முனைந்ததாகவும் அது பிடிக்காமல்தான் அவர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும்... ஹா ஹா ஹா

      நீக்கு
    2. இது மாதிரி நான் கேள்விப்பட்டதில்லை.

      நீக்கு
    3. // சுதந்திரப் போராட்டத்தில் ஆஷ் துரை பங்கெடுக்க முனைந்ததாகவும் அது பிடிக்காமல்தான் அவர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும்... ஹா ஹா ஹா //

      :))

      நீக்கு
    4. இதுவரை கேள்விப்படாதக் கதை.

      நெல்லை - ஹாஹாஹாஹா சிரித்துவிட்டேன்

      கீதா

      நீக்கு
  36. கும்பகோணம் மகாமகக் குளக்கரையில் அமாவாசை தர்ப்பணம் செய்யப் போனால் அங்கே சமுதாயக் குற்றவாளிகள் பிச்சைக்காரர் களாக அலைகின்றார்கள்.. ஐயரிடம் காய்கறிகளை வாங்கிக் கொள்கின்றனர்.. வருபவர்களிடம் அடாவடி.. வசூல் வேட்டை.. ஐயர் கண்டித்தால் மறுநாளைக்கு என்ன நடக்குமோ தெரியாது..

    மூன்று மாதங்களுக்கு முன்பு நான் மாட்டிக் கொண்டேன்.. என்னை உட்காரவே விடவில்லை.. காசு.. காசு..
    எப்படியோ நிறைவேற்றி விட்டு மிகுந்த வருத்தத்துடன் திரும்பி வந்தேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மக்களின் நம்பிக்கைகளை பயன்படுத்தி மிரட்டி காசு பார்க்கிறார்கள். இவர்களை என்ன செய்ய..

      நீக்கு
  37. நமது நாட்டில் சிக்னலில் நின்று கேட்கும் பழக்கம் அண்மையில் ஆரம்பித்துள்ளது. கொடுப்பதில்லை.

    கோவில் மடங்களில் தங்கியிருக்கும் வயதானவர்களுக்கு கொடுப்பதுண்டு இவர்கள் குடும்பத்தினரால் கைவிடப்பட்டவர்கள் உணவு மடத்திலே கொடுப்பார்கள் இடை நேர உணவு தேநீர் வேறு செலவுகளுக்குமாக, கொடுத்தால் வாங்கிக் கொள்வார்கள். பலரும் வாயால் கேட்க மாட்டார்கள்.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கு கோவில்களில் அப்படி தங்கி இருப்போர் என்று யாரும் கிடையாது.  நன்றி மாதேவி.

      நீக்கு
  38. யாரேனும் யாசித்தால், மனதை சங்கடப்படுத்தும்படி இருந்தால் பல சமயங்களில் டக்கென்று ரூபாய் கொடுத்துவிடுவதுண்டு.

    ஆனால் ஏமாந்ததும் உண்டு. முன்பெல்லாம் ஜேப்படித்திருடன் இப்போது ஆன்லைன் திருடன்கள் பெருகிவிட்டார்கள். பொதுவாக ஆன்லைனில் நான் பரிவர்த்தனை செய்வதில்லை. சில மாதங்களுக்கு முன் பேங்க் விஷயமாக ஏதோ செய்தி வந்ததும் அதை அழிக்க நினைத்துத் தொட்டால் அது உள்ளே சென்றிட என் அக்கவுன்ட் நம்பர் ப்ரெச் ஆகிட என்ன இது என்று நான் வெளியில் வருவதற்குள் 3000 ஆயிரம் ரூபாய் போயே போச்சு. நல்லகாலம் அந்த அக்கவுன்டில் 3000 ஆயிரம் ரூபாய்தான் இருந்தது. அதிகம் பயன்படுத்தாத கணக்கு. உடனே வங்கியைத் தொடர்பு கொண்டேன். அது அவர்களது செய்தி அல்ல என்று தெரியவந்தது. அதிலிருந்து இன்னும் உஷாராகிவிட்டேன்.

    என்றாலும் மனம் மிகவும் சங்கடமாகிவிட்டது. 3000 போய்விட்டதே என்று. அதுவும் மிகவும் கவனமாக இருப்பவன் நான்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடப்பாவமே..   ஆன்லைன் திருட்டுகளை நினைத்தால் பயமாகவும் கவலையாகவும்தான் இருக்கிறது.

      நீக்கு
  39. அந்த வயதானவர் படம் உங்களிடம் 10ரூ கேட்டவரோ?

    ம்யூட் உலகம் - கவிதை யதார்த்தம். மனதை மிகவும் தொட்டது. தினமும் பார்த்து வருகிறேனே. என் அக்காவிற்குப் பிறவியிலேயே செவி கேட்கும் திறன் இல்லாமல் அதனால் வாய் பேசவும் இல்லாமல்தானே இத்தனை வருடங்கள். 70 நெருங்கிக் கொண்டிருக்கிறார்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // அந்த வயதானவர் படம் உங்களிடம் 10ரூ கேட்டவரோ? //

      ஆம். அவர்தான் "அவர்"!!

      நீக்கு
  40. அந்த மூதாட்டி இந்த வயதிலும் வீரசாதனை செய்திருக்கிறாரே. பதட்டமடையாமல், அடித்திருக்கிறாரே. நல்ல தைரியசாலிதான். பாராட்டப்பட வேண்டியவர்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  ஆனால் பழைய செய்தி அது கீதா.  தேதி வருடம் பார்த்தீர்கள் அல்லவா...

      நீக்கு
    2. ஹையோ ஸ்ரீராம், நான் துளசியின் மலையாளம், ஆங்கிலம் கலந்த தமிழைக் கஷ்டப்பட்டு எழுத்து புரியாமல் இங்க தரேன் தான்... இது துளசியின் கருத்து. என் கருத்து அல்ல. ஹிஹிஹி

      கீதா

      நீக்கு
    3. சரி.. பெயரை மட்டும் மாற்றி விடலாம்!!!

      நீக்கு
  41. சாப்பிட்டபின் செய்யக் கூடாதவையில் இரண்டு செய்கிறேன். சமீபகாலமாகத்தான் வாக்கிங் போகத் தொடங்கியிருக்கிறேன். இரவு சாப்பிட்டபின், கையில் நாயையும் பிடித்துக் கொண்டு நடப்பது வழக்கமாகியிருக்கிறது. சாப்பிட்டபின் குளிக்கும் பழக்கமும் சில சமயங்களில் செய்கிறேன். இனி கவனத்தில் கொள்கிறேன்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  இது நிறைய பேருக்கு வழக்கமாயிருக்கிறது.

      நீக்கு
  42. வணக்கம் சகோதரரே

    இன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை.

    முதல் பகுதி நன்றாக எழுதியுள்ளீர்கள். இது எப்போதும் இருப்பதுதான். கொடுப்பதை கொடுங்கள் என தான் பிச்சை கேட்பதாக பிறர் எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதற்காக இப்படி தடாலடியாக பத்தைக்கொடு, இருபதை கொடு என மிரட்டுகிற பாவனையில்... கெளரவ பிச்சை இந்தப்பெயர் நன்றாக உள்ளது.

    இப்போதுள்ள காலகட்டத்தில், பிள்ளைகளிடம் தங்களின் வயதான காலத்தில், இயலாமை காரணமாக பார்த்துக் கொள்ளும்படி பெற்றோர் கேட்பதும் ஒரு கௌரவ பிச்சைதானோ?

    கவிதை நன்றாக உள்ளது. பாராட்டுக்கள். /பொறுமையிழக்கும் எதிர்சனத்துக்கு
    தான் அனுபவிக்கும்வரை
    புரியப்போவதில்லை
    மௌன உலகின் நரகங்கள் /

    உண்மை... எதையுமே அனுபவங்கள் என்ற பாடந்தான் ஒருவருக்கு கற்றுத்தரும். ஆனால் அவர் அதை அனுபவத்துடன் உணரும் போது, தன்னால் பாதிக்கப்பட்டவரின் மனவலிகளையும் புரிந்து கொண்டால் நல்லது.

    அனைத்தும் அருமை. இன்றைய தாமதத்திற்கு மன்னிக்கவும்.எட்டு பேருக்கு மேல் சமையல், சாப்பாடு என பத்து நாட்களாகவே வேலைகள் அதிகம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கமலா அக்கா..   பணிந்து கேட்பதைவிட, அதட்டலாக அலலது உரிமையுடன் கேட்பது போல கேட்பது வழக்கமாகி வருகிறது போல!

      //இப்போதுள்ள காலகட்டத்தில், பிள்ளைகளிடம் தங்களின் வயதான காலத்தில், இயலாமை காரணமாக பார்த்துக் கொள்ளும்படி பெற்றோர் கேட்பதும் ஒரு கௌரவ பிச்சைதானோ?//

      இதை நான் ஒத்துக்கொள்ள மாட்டேன்.

      //எட்டு பேருக்கு மேல் சமையல், சாப்பாடு என பத்து நாட்களாகவே வேலைகள் அதிகம்.//

      விருந்தினர் வருகையா?  உடல் நலத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள்.



      நீக்கு
    2. வணக்கம் சகோதரரே

      தங்கள் கருத்துக்கு நன்றி. என் கருத்து ஏதோ என் மனதின் அங்கலாய்பில் வந்தது.

      விருந்தினர் வருகை இல்லை. உறவுகள்தான்..சமய சந்தர்ப்பத்திற்காக செய்யும் உதவி. முடிகிறதோ இல்லையோ பாசத்திற்காக செய்யும் வேலைகள். என் உடல் நலனை கவனித்துக் கொள்ளும்படி நீங்கள் சொன்னதற்கு என் அன்பான நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  43. தானம் கேட்பவர் பல ரகம். நன்றாகச் சொல்லியுள்ளீர்கள்.

    சாப்பிட்ட பின்... குறிப்புகள் கவனத்தில் கொள்ள வேண்டியவை.

    கவிதை நன்று. தாத்தாவின் நிலைமை நெகிழ்வு.

    நல்ல தொகுப்பு.

    பதிலளிநீக்கு
  44. வயதான நிலையிலும் கல்வி , போற்றுவோம்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!