சனி, 20 ஆகஸ்ட், 2022

சொந்த ஊர் என்றதுமே... மற்றும் 'நான் படிச்ச கதை' (JC)

பெரம்பலுார்:சொந்த கிராமத்துக்கு, 33 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற உதவிய கிராம வாலிபருக்கு, பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

பெரம்பலுார் மாவட்டம், பூலாம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகதீஸ்குமார், 40; மலேஷியாவில் தொழிலதிபராக உள்ள இவர், 'ப்ளஸ் மேக்ஸ் ஹெல்த் கேர் பவுண்டேஷன்' சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். இதற்காக, அந்நாட்டின் மிக உயரிய விருதான, 'டத்தோ' விருது பெற்றுள்ளார்.



அவர், தன் சொந்த ஊரான பூலாம்பாடிக்கு, சாலை, குடிநீர், மின்விளக்கு, கழிவு நீர் கால்வாய் என அடிப்படை வசதிகளை செய்து தர முடிவு செய்தார். இதற்காக, ஊர் முக்கியஸ்தர்கள், மக்கள் பிரதிநிதிகளுடன் கிராமம் முழுதும் பார்வையிட்டார்.
பேரூராட்சி பகுதியாக பூலாம்பாடி இருப்பதால், பேரூராட்சி நிர்வாகத்துடன் இணைந்து, 'நமக்கு நாமே' திட்டத்தில், அடிப்படை கட்டமைப்பு வசதிக்கான பணிகளை நிறைவேற்றவும், அதற்கு கிராம மக்களின் பங்களிப்பு தொகையான, 33 கோடி ரூபாயை பிரகதீஸ்குமார் தருவதாகவும் உறுதியளித்தார்.
அதன்படி, 'ப்ளஸ் மேக்ஸ் ஹெல்த் கேர் பவுண்டேஷன்' சார்பில், முதல்கட்டமாக, 90 லட்சம் ரூபாய்க்கான வங்கி வரைவோலையை, பூலாம்பாடி பேரூராட்சி செயல் அலுவலர் சிவராமனிடம், நேற்று முன்தினம் வழங்கினார். ஓரிரு நாட்களில் கட்டமைப்பு பணிகள் துவங்க உள்ளன.
தற்போது வரை போக்குவரத்து வசதி பெரிய அளவில் இல்லாத ஒரு கிராமத்தில் பிறந்து, வளர்ந்த இளைஞர் பிரகதீஸ்குமார், மலேஷியாவில் மிகப்பெரிய தொழிலதிபராக வலம் வருகிறார்.இருந்தாலும், சொந்த ஊருக்கு, 33 கோடி ரூபாய் செலவில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற, நிதியுதவி வழங்கியிருப்பதால், அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. அவரை பாராட்ட, 99429 -88888 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
====================================================================================================

 பாகூர் : பணியின்போது நெஞ்சு வலியால் துடித்த அரசு பஸ் டிரைவர், சாதுர்யமாக செயல்பட்டு, சாலையோர கட்டையில் மோதி நிறுத்தியதால், பயணிகள் உயிர் தப்பினர்.

சென்னையில் இருந்து நாகப்பட்டினம் நோக்கி, நேற்று அதிகாலை 3.00 மணியளவில், தமிழக அரசு விரைவு பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சை, சிதம்பரத்தை சேர்ந்த முருகன், 46; ஓட்டினார். பஸ்சில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பஸ், புதுச்சேரி - கடலுார் சாலை தவளக்குப்பம் சந்திப்பு அருகே சென்றபோது, டிரைவர் முருகனுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனால், கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடியது. முருகன் வலியை பொறுத்துக் கொண்டு, பஸ்சை பாதுகாப்பாக நிறுத்த முயன்றார்.

சாலையோரத்தில் உள்ள கடையின் தடுப்புக் கட்டையில் மோதி, பஸ்சை நிறுத்தினார். வலியால் துடித்த அவரை, நடத்துனர் மற்றும் பயணிகள் மீட்டு, புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.விபத்து குறித்து தெற்கு போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

========================================================================================================================================

நான் படிச்ச கதை (J C)

தக்கையின் மீது நான்கு கண்கள்.

சா.கந்தசாமி

*************

ஆய்வுரை 

எர்னஸ்ட் ஹெமிங்வே யின் “Old man and the Sea” என்ற புகழ் பெற்ற கதையை பி வாசகர்கள் அறிந்திருப்பீர்கள். அது ‘“கிழவனும் கடலும்என்று தமிழிலும் மொழிபெயர்க்கப் பட்டு பிரசுரிக்கப் பட்டுள்ளது, அக்கதை ஒரு கிழவனுக்கும் பெரிய மார்லின் மீனுக்கும் இடையே நடக்கும் போராட்டம் பற்றியது. 

அதைப் போன்றது தான் இந்தக் கதையும். கிழவர் மாணிக்கம் ஒரு பெரிய வாளை மீனை பிடிக்க நான்கு முறை வெவ்வேறு தூண்டில்களையும், உத்திகளையும் கையாண்டு தோற்றுப் போகிறார்.

 அவருக்கு ராமு என்று ஒரு பேரன். அவருடைய சீடன். அவரிடம் கற்ற வித்தையை கொண்டு அவரையே ஜெயித்து அந்த வாளை மீனை எப்படிப் பிடிக்கிறான் என்பதே கதை. சரி கதையில் வேறு என்ன இருக்கிறது  என்கிறீர்களா?

கதையின் சுட்டிகள் :

அழியாசுடரில்

சிறுகதைகள்.காம் இல்

தக்கையின் மீது நான்கு கண்கள்

இந்த EGO என்ற ஆங்கில வார்த்தைக்குச் சரியான தமிழ் பதம் தெரியவில்லை. இறுமாப்பு, சுய கவுரவம், தன்மானம், கர்வம், அகங்காரம், ஆணவம்  என்று எப்படி சொன்னாலும் முழு பொருள் கிடைக்கவில்லை. பெரியவர் குடும்பத் தலைவர் என்ற முறையில் ஆதிக்கம், ஆளுமை அதிகம் உள்ளவர். அனுபவத்தால் எனக்கு எல்லாம்  தெரியும் என்ற மனப்பாங்கு கொண்டவர். ஆகவே அறிவுரைகளை வெறுப்பவர். மீன் பிடிபடவில்லை என்றவுடன் அவருடைய சுபாவமே மாறுகின்றது.

விரக்தி EGO வைக் குத்த ஆணவமும் கோபமும் ஓங்குகிறது. மீன் தன்னைத் தோற்கடித்ததை ஏற்றுக் கொள்ள முடியாமல், எதிர்ப்பில்லாமல் தாங்கிக் கொள்ள முடிந்தவர்கள் மேல் தன் வீரத்தைக் காட்டுகிறார். அதற்கு இணையாக தன்னுடைய பேரன் தன்னை விடச் சிறந்த தூண்டில்காரன்  ஆனதையும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவர் பேரனையும் பகையாளியாகவே பார்க்கிறார். படிப்படியான இந்த மாற்றம் முழுக்கதையையும் படித்தாலே விளங்கும். ஆனால் அவர் தன்னை வென்றவன் பேரன் என்பதையும் மறக்கவில்லை.

அன்றிரவு அவர் மனது பேரனின் சாகசத்தை நினைத்துப் பெருமைப்படுகிறது.

வெளிப்படாத அன்பு என்பது கல்லுக்குள் தேரை இருப்பது போல, தன்னை வெளிக்காட்டிக்கொள்ளாமலே வாழ்வது போன்றது. தாத்தாவின் அன்பு யாரும் திறக்காத சிப்பிக்குள் உள்ள முத்தைப் போன்றது. அதைத் தீண்டுவதும் கைவசமாக்குவதும் என்றோ அபூர்வமாகவே நடந்தேறுகிறது.” எஸ்ரா.

அன்பு வெளிப்படாததன் காரணம் அந்த EGO தானே? அன்பு எனும் முத்தை சிப்பியைத் திறந்து பரிசாகக் கொடுக்கப்படுவதை தடுப்பது அந்த EGO தானே.

எஸ்ரா இந்தக்கதையை நூறு சிறந்த சிறுகதைகளில் ஒன்றாகத் தேர்ந்தெடுத்துள்ளார்.

சா கந்தசாமியுடைய எழுத்தின் பிரதான அம்சமாக இருப்பது, கதைத் தன்மையல்ல; வாழ்வின் விசித்திரங்களும், அதன் பிடிபடாப் புதிர்த்தன்மைகளுமே அவருடைய எழுத்துக்கான வசீகரங்களாக இருக்கின்றன. அந்த வசீகரமே இந்த வாழ்க்கைக்கு சுவாரஸ்யமும் அர்த்தமும் கொடுப்பதாகக் கந்தசாமி கருதுகிறார்.”

கதையை கதையிலிருந்து வெளியேற்றுவதே தன் அழகியல்என்று அறிவித்துக்கொண்டவர் சா.கந்தசாமி. நிகழ்ச்சிக்கோவைகளால் மட்டுமே ஒரு மைய உணர்வை அல்லது புரிதலை நோக்கி வாசகனைக் கொண்டுசெல்லும் தன்மை கொண்டவை அவருடைய ஆக்கங்கள்.”  ஜெயமோகன்.

குழப்புகிறாரா? இரண்டு முறை நிதானமாக படித்துப் பாருங்கள். தெளிவு பிறக்கும். விடையும் கிடைக்கும்.  

 ஆசிரியர் பற்றிய குறிப்பு.

சாகித்திய அகாடமி விருது பெற்ற சா.கந்தசாமி (1940-2020), தமிழின் முக்கியமான சிறுகதை ஆசிரியர். இவரதுசாயாவனம்நாவல் தமிழில் குறிப்பிடத்தக்கது. ஓவியம், நுண்கலைகள் மீது அதிக ஈடுபாடுகொண்ட சா.கந்தசாமி, குறும்படம் மற்றும் ஆவணப் படங்களைத் தயாரித்து வருகிறார். சா.கந்தசாமி தொகுத்ததற்காலத் தமிழ்ச் சிறுகதைகள்தொகுப்பு, மிகக் கவனமாகவும் நுட்பமாகவும் தொகுக்கப்பட்டது. இவருடைய கதைகள் பல்வேறு இந்திய மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. ‘சா.கந்தசாமி கதைகள்என்ற பெயரில் இவரது சிறுகதைகள் மொத்தமாகவும் தொகுக்கப்பட்டுள்ளன.”

 மீண்டும் கதையின் சுட்டிகள் :

அழியாசுடரில்

சிறுகதைகள்.காம் இல்

தக்கையின் மீது நான்கு கண்கள்

இக்கதை என்னை ஈர்த்ததற்கு ஒரு சொந்தக் காரணம் கூட உண்டு. அது எங்கள் தென் ஆர்க்காடு மாவட்ட பேச்சு வழக்கு சொற்கள் எம்மாம், செத்த, குந்து, அம்புட்டுபோன்ற சொற்பிரயோகம் தான்.

இக்கட்டுரை எழுதும்போது ஏனோ, மறைந்த முதிய பதிவர் முனைவர் பழனி. கந்தசாமி அவர்கள்  நினைவில் வந்தார். அவருக்கு என்னுடைய நினைவு அஞ்சலிகள்.


28 கருத்துகள்:

  1. பிரகதீஸ்குமார் போன்ற உள்ளங்களால்தான் உலகம் இன்னும் முழுமையாக அழியாமல் இருக்கிறது.

    வாழ்க அவரது சந்ததிகள்.

    பதிலளிநீக்கு
  2. பிரகதீஷ்குமார், முருகன் இவர்களது மனித நேயம் மனதை நெகிழ வைக்கிறது.

    பதிலளிநீக்கு
  3. இனிய காலைப் பொழுதில் அன்பின் வணக்கங்களுடன்..

    வாழ்க தமிழ் வாழ்க வாழ்க..

    பதிலளிநீக்கு
  4. மக்கள் நலத் திட்டங்களுக்கு வழங்கப்படும் நிதியில் கை வைக்கின்ற அரசு அலுவலர்கள் பிரகதீஸ்குமாருடைய பெருந்தன்மையைக் கண்டு நாக்கைப் பிடுங்கிக் கொள்ள முடியாத நிலையில் இருக்கின்றார்கள்..

    பதிலளிநீக்கு
  5. பிரகதீஸ்குமாருக்கு ரொம்பவும் தான் நெஞ்சழுத்தம்..

    பதிலளிநீக்கு
  6. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  7. JC அவர்கள் அறிமுகம் செய்கின்ற கதைகளில் காணப்படும் மற்றவர்களது விமர்சனங்கள் மனதை மிகவும் கலவரப்படுத்துகின்றன...

    இந்தத் தமிழை அர்த்தம் செய்து கொள்ள முடிய வில்லையே என்று...

    இதற்காகத் தான் இந்தப் பக்கம் வருவதில்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியாகச் சொன்னீர்கள். நானும் உணர்ந்தது தான். ஒன்றை வாசிப்பதினால் தனக்கேற்படும் சொந்த அனுபவத்தை வெளிப்படுத்தும் சந்தோஷமே வேறு மாதிரி தான். JC ஸார் இதைக் கவனத்தில் கொள்வார் என்று நினைக்கிறேன்.

      நீக்கு
    2. என்றைக்கோ யாரோ எழுதிய விவரங்களை அப்படியே எடுத்துப் போடுதல் அதற்கான சுட்டி கொடுத்தல் -- இதெல்லாம் வாசிப்போர் ஆர்வத்தைக் குறைக்கும். பிறர் எழுதியது என்றாலும் அது பற்றிய தன் கருத்தைப் பதியும் போது அந்த விஷயமே வாசகர் ரசனையைக் கூட்டலாம். இந்தப் பகுதியில் ஜெமோவின் வாசகங்களை அந்த வழியில் உபயோகித்துக் கொண்டிருக்கலாம்.
      'கதையைக் கதையிலிருந்து வெளியேற்றும் அழகியல்' பற்றிய உங்கள் புரிதலைச் சொல்லியிருந்தால் அது பற்றி எங்களுக்கும் புரிதல் கிடைத்திருக்கலாம்.

      நீக்கு
    3. //சரியாகச் சொன்னீர்கள். நானும் உணர்ந்தது தான். ஒன்றை வாசிப்பதினால் தனக்கேற்படும் சொந்த அனுபவத்தை வெளிப்படுத்தும் சந்தோஷமே வேறு மாதிரி தான். JC ஸார் இதைக் கவனத்தில் கொள்வார் என்று நினைக்கிறேன்.//என்னைத் தவிர்த்து. அல்லவா? எல்லோரும் அவங்க அவங்க சொந்த அனுபவங்களை நினைவு கூரலாம். நான் மட்டும் சொன்னால் அது தப்பு இல்லையோ? அதே போல் உண்மைக்கதைகளும் எல்லோரும் எழுதலாம்.என்னைத் தவிர்த்து. இல்லையா?

      நீக்கு
  8. இரண்டு செய்திகளுமே பாசிட்டிவ் முதல் செய்தி பிரகதீஸ்குமார் போன்றவர்கள் பாராட்டப்பட வேண்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  9. ஒரு வேளை, ஆள்பவர்கள் கொள்ளை அடிக்கிறார்கள் மக்கள் நலப்பணித் திட்டங்கள் எதுவும் செய்வதில்லை என்பதால் இனி இப்படி பிரகதீஸ்குமார் போன்றவர்கள்தான் முன்னெடுத்துச் செய்ய வேண்டும் போல...

    கீதா

    பதிலளிநீக்கு
  10. ஜெகே அண்ணா சொல்லியிருக்கும் இந்தக் கதையை வாசித்திருக்கிறேன்.. இதில் அந்தத் தாத்தாவுக்கு அகந்தை இருக்கிறதுதான்...யதார்த்தம் என்னவென்றால், நம் வீட்டிலும் கூட நம் பெரியவர்களில் சிலர் சிறியவர்களை ரொம்பவே அதட்டிஉருட்டி ஒன்றும் செய்ய இயலாது தனக்குத்தான் தெரியும் என்று சொல்லும் பெரிசுகளை சிறியவர்கள் ஒவர் டேக் செய்வது இயல்பு,

    அடுத்து பொதுவாகவே அடுத்த தலைமுறை வித்தியாசமாகச் சிந்தித்து, பெரியவர்கள் செய்த விஷயங்களில் வித்தியாசமாகச்சிந்தித்துச் செய்து வெற்றி காண்பது என்பதும் உண்டு. தாத்தா, அப்பா எட்டடி பாய்ந்தால் அடுத்த தலைமுறை பல அடிகள் பாயும் என்பதும் கதையில் உள்ளதாக நான் காண்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  11. கதைக்கான கருத்து போட்டது வரவில்லையே...ஸ்பாமில் இருக்கானு பாருங்க ஸ்‌ரீராம். வழக்கமாக வேர்டில் அடித்து காப்பி பேஸ்ட் செய்வேன் இன்று அவசரம் என்பதால் இங்கு நேரடியாகத் தட்டினென்...எனவே அடித்த கருத்தின் காப்பியும் இல்லையே....

    கீதா

    பதிலளிநீக்கு

  12. //மறைந்த முதிய பதிவர் முனைவர் பழனி. கந்தசாமி அவர்கள்//

    அன்னார் மறைந்த செய்தி இப்போது தான் அறிந்து கொண்டேன். அதிர்ச்சியாக இருக்கிறது. அசப்பில் நடிகர் சத்யராஜ் போல் இருப்பதாக தோன்றும். அவருடைய கட்டுரைகள் அறிவார்ந்தும் நகைச்சுவையாகவும் இருக்கும். எப்போது மறைந்தார்? என்ன ஆயிற்று?

    வைஷ்ணவி

    பதிலளிநீக்கு
  13. செய்திகள் இரண்டும் சமூக பொறுப்புகள் உள்ள நல்ல மனிதர்களை பற்றிய செய்தி. பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் இருவருக்கும்.

    பதிலளிநீக்கு
  14. கதை பகிர்வு நன்றாக இருக்கிறது.

    //முனைவர் பழனி. கந்தசாமி அவர்கள் நினைவில் வந்தார். அவருக்கு என்னுடைய நினைவு அஞ்சலிகள்.//

    இந்த வரிகளை படித்தவுடன் பழனி. கந்தசாமி ஐயா அவர்களின் தோற்றம் கண்முன் தெரிந்தது., அவரின் பதிவுகளும் நினைவுக்கு வந்தது.
    அவருக்கு வணக்கங்கள்.

    பதிலளிநீக்கு
  15. ஜீவி அண்ணா அவர்களுக்கு

    //கதையைக் கதையிலிருந்து வெளியேற்றுதல்..//

    இதெல்லாம் அறிவு சால் அன்பர்களுக்கானது.. உண்மையில் இந்த வித்தை என்னவென்று புரியவில்லை..

    பதிலளிநீக்கு
  16. கதையைக் கதையிலிருந்து வெளியேறி விட்டால் மிச்சம் எதுவும் இருக்காதே!..

    பதிலளிநீக்கு
  17. ஹஹ்ஹ்ஹா. அதனால் பெற்ப்படுவது அது தான். ஜெஸி ஸார் இது பற்றி ஏதாவது சொன்னால் அது பற்றித் தெரிந்து கொள்ளலாமே என்பதற்காகத் தான் கேட்டேன். ;))

    பதிலளிநீக்கு
  18. கதை என்பது தான் பெற்ற அனுபவம் ஒன்றில் வேண்டிய அளவுக்கு கற்பனை சேர்த்து மெருகூட்டி வாசிப்போரின் உணர்வுகளை தான் பெற்ற அனுபவத்தோடு கலக்கச் செய்வது. இது உண்மையிலேயே திறமையான ஒரு கலானுபவம். தன் மனதில் விளைந்த அந்த அனுபவத்தை எழுத்தில் எழுதி வெளிப்படுத்திய கலைஞர்களை அதனாலேயே எழுத்தாளர் என்றோம்.

    பதிலளிநீக்கு
  19. கற்பனை என்பது மனத்தில் விளைவது. அந்த மனோவியல் ரசவாதம் வாய்க்கப் பெறாதவர்கள் மனம் சம்பந்தப்படாத எழுத்துக் குவியலாக தமக்கு அனுபவப்பட்டவைகளைச் சொல்ல ஆரம்பித்தார்கள். அதற்கேற்றவாறு எழுத்தாளர் என்பதைக் கதைசொல்லி என்றும் மாற்றிக் கொண்டனர்.

    பதிலளிநீக்கு
  20. இதனால் நாளாவட்டத்தில் கற்பனை கலக்காத நிகழ்வுகளை அப்படி அப்படியே கதைகள் என்ற பெயரில் சொல்லும் போக்கு அதிகரிக்க ஆரம்பித்து அதுவே இன்றைய கதைக்களம் ஆகிவிட்டது.

    இந்த வெற்று கதை பண்ணும் வேலையைத் தான், கதையிலிருந்து கதையை வெளியேற்றும் வேலை என்று ஜெயமோகன் சொல்கிறார் போலும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதைகளாகச் சொல்லப்படும் ஜெயமோகனின் 'யானை டாக்டர்', 'அறம்' போன்றவை உண்மை நிகழ்வுகளின் அடிப்படையானவை.

      நீக்கு
  21. இருவருமே பாராட்டப்பட வேண்டுயவர்கள். பாராட்டுவோம்

    பதிலளிநீக்கு
  22. ‘கதையை கதையிலிருந்து வெளியேற்றுவதே தன் அழகியல்’ என்றுஅறிவித்துக்கொண்டவர் சா.கந்தசாமி.

    நிகழ்ச்சிக்கோவைகளால் மட்டுமே ஒரு மைய உணர்வை அல்லது புரிதலை நோக்கி வாசகனைக் கொண்டுசெல்லும் தன்மை கொண்டவை அவருடைய ஆக்கங்கள்.”
    ஜெயமோகன்.

    “The beauty lies in removing the story from the story”. இந்த ஆங்கில வாக்கியம் கொஞ்சம் புரியவைக்கும் என்று நம்புகிறேன். இந்தக் கருத்தைக் கூறுபவர் கந்தசாமி அவர்கள். ஜெமோ அதைச் சொல்லி இக்கதையில் உட்கதையை நிகழ்வுகளால் மட்டுமே ஆசிரியர் கொண்டு செல்கிறார் என்கிறார்.

    சிறுகதை வடிவங்கள் பல. இரண்டு உதாரணங்கள் மட்டும் கூறுகிறேன். ஒரு சிலர் நாடகம் போன்று கதாப் பாத்திரங்களின் உரையாடலிலேயே கதையை சொல்லி முடித்து விடுவர். பெரும்பாலும் துரை செல்வராஜூ அவர்களின் கதைகள் இது போன்றவை. மற்றொன்று நிகழ்வுகளின் கோர்வைகளாக (sequence of scenes), சார்லி சாப்ளின் சினிமா போன்று நிகழ்வுகளை தொகுத்து தரும் முறை.. இக்கதை அந்த வர்க்கத்தில் பட்டது.

    இக்கதையின் மையக் கருத்தாக நான் உணர்ந்தது தாத்தாவின் பொறாமையும், பேரனின் கற்கும் திறமையும் தான். மீன் பிடிக்கும் போட்டி அல்ல. இதைத் தான் கந்தசாமி கூறாமல் கூறுகிறார். இது என் கருத்து.

    கருத்துகள் கூறியமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  23. உதவும் கரங்கள் என்றும் வாழ்க.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!