சனி, 27 ஆகஸ்ட், 2022

"எங்களுக்கு சகோதரனாக, நாங்கள் பிரசவிக்கும் குழந்தைகளுக்கு தாய் மாமனாக ....." மற்றும் 'நான் படிச்ச கதை' (JC)

எழுத்தாளர் ராஜேஷ் குமார் பேஸ்புக்கில் பகிர்ந்திருந்த ஒரு நேர்மறைச்செய்தி... 




===================================================================================================================

நாகப்பட்டினம்--நாகையில் நடந்த சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில், பங்கேற்ற 500 கர்ப்பிணியருக்கும் சீர்வரிசை பொருட்களை வழங்கி, கலெக்டர் ஆசீர்வதித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.



நாகையில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில், மும்மதத்தைச் சேர்ந்த 500 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் அருண் தம்புராஜ், டி.ஆர்.ஓ., ஷகிலா, நாகை மாலி எம்.எல்.ஏ., பங்கேற்றனர்.நிகழ்ச்சியில் பங்கேற்ற கலெக்டர் அருண் தம்புராஜ், கர்ப்பிணி தாய்மார்களிடம், 'நான் உங்கள் சகோதரனாக வந்துள்ளேன்' என்றார்.

500 பெண்களுக்கும் தனித் தனியாக, டி. ஆர். ஓ., ஷகிலா மற்றும் சமூக நலத்துறை அலுவலர் தமிமுன் நிஷா ஆகியோரை வளையல்கள் அணிவிக்க செய்து, சந்தனம் பூச செய்தார்.பின், அவர்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கி, மலர் துாவி ஆசீர்வதித்தார். தொடர்ந்து அனைவருக்கும் ஐந்து வகையான உணவு பரிமாறினார். அவர்களுக்கு விருப்பமான உணவு வகைகளை கேட்டறிந்து கலெக்டர் பரிமாறினார்.

அப்போது, பெரும்பாலான கர்ப்பிணி தாய்மார்களின் கண்கள் கலங்கியிருந்தன.கர்ப்பிணியர் கூறுகையில், 'வழக்கமாக மேடை நிகழ்ச்சியாக நடத்தப்படும் இது போன்ற நிகழ்வுகளில் பங்கேற்கும் முக்கிய பிரமுகர்கள், மைக்கில் வாழ்த்தி விட்டு, சிலருக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கி விட்டு செல்வர்.


'ஆனால் சம்பிரதாய முறைப்படி, எங்களின் சகோதரனாக கலெக்டரே, ஒவ்வொருவருக்கும் தனித் தனியாக வளைகாப்பு நடத்தி, சீர்வரிசை வழங்கி, பாசத்துடன் உணவு பரிமாறியது வாழ்க்கையில் மறக்க முடியாதது.'கலெக்டர் வழங்கியதை எங்கள் தாய் வீட்டு சீதனமாக கருதுகிறோம். எங்களுக்கு சகோதரனாக, நாங்கள் பிரசவிக்கும் குழந்தைகளுக்கு தாய் மாமனாக கலெக்டர் காட்டிய அன்பு, எங்களின் கண்களை குளமாக்கி விட்டது' என்றனர்.

==============================================================================================================


சொந்த செலவில் தன் தெருவுக்கு சிமெண்ட் சாலை சரிதான்..   பூமிக்குள் போகுமா?

வானுார்:கிளியனுார் அருகே பழுதடைந்த சாலையை 10.50 லட்சம் ரூபாய் செலவில் புதிய சிமென்ட் சாலை யாக அமைத்துக் கொடுத்த இளைஞருக்கு பாராட்டுகள் குவிகின்றன.

விழுப்புரம் மாவட்டம் வானுார் தொகுதி கிளியனுாரில் இருந்து 5 கி.மீ.யில் உள்ளது நல்லாவூர் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் சந்திரசேகரன் 31; சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார்.கடந்த 2020ம் ஆண்டு கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அப்போது சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய சந்திரசேகரன் வீட்டில் இருந்தபடியே வேலை செய்து வந்தார்.தன் கிராமத்தில் ஈஸ்வரன் கோவில் தெருவின் சாலை மழையால் சேதமடைந்து சேரும் சகதியுமாக இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் அந்த சாலையை சரி செய்து தரக்கோரி மார்ச் மாதம் வானுார் பி.டி.ஓ. அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளார்.
'தற்போது நிதி இல்லை' என அதிகாரிகள் கைவிரித்துள்ளனர்.இதனால் பழுதடைந்த சாலையில் புதிய தார் சாலை அமைக்க எவ்வளவு நிதி செலவாகும் எனக் கேட்டு அதற்கான தொகையை தானே முன் வந்து கொடுத்து செய்து தருவதாகவும் கூறியுள்ளார்.
இதையடுத்து கடந்த மார்ச் மாதம் கலெக்டரிடம் அனுமதி பெற்ற சந்திரசேகரன் தன் சொந்த செலவில் 10 லட்ச ரூபாய் செலவில் சிமென்ட் சாலை அமைத்துக் கொடுத்துள்ளார்.அரசின் நிதியுதவி இன்றி தன் சொந்த செலவில் சிமென்ட் சாலை அமைத்துக் கொடுத்த கிராம இளைஞரை அப்பகுதி மக்கள் மட்டுமின்றி அனைவரும் பாராட்டுகின்றனர்.

==============================================================================================================

 

நான் படிச்ச கதை (JC)

**************

நூறுகள் - கரிச்சான்குஞ்சு

 

இன்று நாம் காணப்போவது மணிக்கொடி எழுத்தாளர் கரிச்சான் குஞ்சு எழுதிய நூறுகள் என்ற சிறுகதை.


தக்கையின் மீது நான்கு கண்கள்என்ற சா கந்தசாமியின் கதையில் ஆசிரியர் எப்படிகதையைக் கதையிலிருந்து எடுத்து விட்டு கதையைக் கொடுக்கிறார் என்று பார்த்தோம். ஆனால் இந்தக் கதைகதைகள்அடங்கியது. உண்மையான கதை எது என்பதை வாசகர்களின் ஊகத்திற்க்கே விட்டு விடுகிறார் ஆசிரியர். கதையில்  விறுவிறுப்பு குறைவு. படிக்கப் பொறுமை தேவை. வழக்கம் போல சுருக்கமான கதையை வண்ண மாற்றத்தில்  காட்டியிருக்கிறேன்.


அந்தத் தெருவுக்குள் புகுந்து, அந்த வீட்டை நெருங்கிப் பந்தலையும் வாழை மரத்தையும், டியூப் லைட்டையும் பார்த்த பிறகுதான் எனக்கு ஞாபகம் வந்தது. ''அடாடா, ராமய்யர் வீட்டுக் கல்யாணம் அல்லவா இன்று. காலையில் முகூர்த்தத்துக்குத் தான் போகவில்லை. சாயங்காலம் போய் கல்யாணமாவது விசாரித்துவிட்டு வந்திருக்கலாம். மறந்தே போய்விட்டது. இன்று காலையிலிருந்து வேறு நினைவே இல்லாமல் பணம் தேடிக் கொண்டிருக்கிறேன். என் இரண்டாவது பெண்ணைக் கோயம்புத்தூருக்கு அனுப்பியாக வேண்டும். ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்கு நாளைக்குக் கடைசி நாள். நாளைக்காவது புறப்படா விட்டால் மிகவும் பாடுபட்டுக் கிடைத்த இடம் பறிபோய்விடும். வீட்டில் ஒரே துக்கம். வைக்காததை வைத்து, விற்கக்கூடாததை விற்று இரு நூறு ரூபாய்கள் தேற்றிவிட்டோம். காலேஜுக்கே அறுநூறு ரூபாய் கட்ட வேண்டும். பிரயாணச் செலவும் கைச் செலவுக்கு எல்லாம் சேர்த்து இன்னும் ஐந்து நூறுகள் தோது செய்ய வேண்டும். காலையிலும் மாலையிலும் எங்கெல்லாமோ போய்ச் சுற்றிவிட்டு, அலுத்துச் சலித்துக் காரியம் ஆகாமல் வீட்டிற்குத் திரும்பி வந்து கொண்டிருந்தேன். ஏதோ ஞாபகத்தில் இந்தத் தெருவில் புகுந்தேன். கல்யாண வீட்டைப் பார்த்ததும் ஞாபகம் வருகிறது. இரவு மணி பத்து, பத்தரை இருக்குமே; இப்போது போய் என்ன செய்வது; ஆனால் அப்பொழுதுதான் சாப்பாடு முடிந்திருக்க வேண்டும். இலை கொண்டு வந்து போட்ட இடத்திலிருந்து மனிதர் கையை நக்கிக் கொண்டே நகர்ந்து கொண்டிருந்தனர். அவர்கள் விரட்டிய நாய்கள் வந்து ஒன்றை மற்றொன்று விரட்டிக் கொண்டிருந்தன. பந்தலுக்குள் எட்டிப் பார்த்தேன். சீட்டாட்டம் நடந்து கொண்டிருந்தது. நாலு சீட்டு, களத்தில் நிறையப் பணம் கிடந்தது, புரண்டது. பந்தலுக்குள்ளும் போய்விட்டேன். ராமய்யர் எதிர்பட்டார்.

''என்னய்யா இது'' என்றார்.

''மன்னிச்ரணும், ரொம்ப அவசரமான காரியம். எங்கெல்லமோ போய் அலைந்து விட்டு இப்போதுதான்.''

 ''உள்ளே வாரும், சாப்பிடலாம்.''

 ''மன்னிச்சரணும். எனக்குச் சாப்பாடெல்லாம் ஆகிவிட்டது.''

 ''சந்தனம் சர்க்கரை கொண்டு வருகிறேன் இரும்...''

''ஏழு கைதான் ஆடிக்கொண்டிருக்கு. ஒரு இடம் இருக்கிறது!'' கடைக் கையிலே போடலாமோன்னோ...'' என்று குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன். ஆடுகிறவர் அந்த இடத்தில சீட்டையும் போட்டுவிட்டார். 'நூறு ரூபாய் ஷோ... என்றான் ஒருவன். அதாவது நூறு ரூபாய் கட்ட வேண்டுமாம். அவ்வளவு இருந்தால்தான் உட்கார்ந்து ஆட அனுமதிப்பார்களாம். ஐந்தும் பத்தும் வைத்துக் கொண்டு உட்கார்ந்து சிக்கனமாக ஆடிச் சூதாட்டத்தில் விறுவிறுப்பைக் குறைத்துவிடக் கூடாதாம். நான் என் சடடைப் பையைத் தடவினேன். இருநூறு ரூபாய் இருப்பது நெருடிற்று. எப்படியும் நாளைக்குப் புறப்பட முடியாது. ஒரு சான்ஸ் பாப்போமே. அந்தப் பாக்கி நூறுகள் கிடைச்சுட்டுமே இல்லையென்றால் இருக்கும் நூறுகள் தொலையட்டுமே. இது எத்தனையோ தடவை சத்தியம் செய்திருக்கிறோம். சீட்டைத் தொடுவதில்லை என்று. நாளைக்கு நூறாவது தடவையாகச் சத்தியம் செய்துவிட்டால் போகிறது. உட்கார்ந்தேன். ஒரு நூறு ரூபாய்த் தாளை எடுத்துக் காட்டினேன்; அதிகமாக இருப்பதையும் அவர்களே பார்த்துக் கொண்டார்கள்.

நல்ல முரட்டுக் கைகள்; மும்முரமான ஆட்டம். நாலைந்து கலவைகள் வந்தாலே போதும், நமக்கு வேண்டிய நூறுகள் கிடைத்துவிடும்.

ஆடிக்கொண்டிருந்தேன். வருவதும் போவதுமாயிருந்தது. பீட்டை நிறையப் போட்டு ஆடினேன். பெரிய சீட்டுகள் அடிவாங்கின. ஒரு நூறு போய்விட்டது. அடுத்ததை எடுத்தேன். சற்று நிதானமாக ஆடியதில், கரைந்து கொ¡ண்டிருந்தது மெல்ல. இரவு இரண்டு மணியென்று யாரோ சொன்னது காதில் விழுந்தது. முதல் முழுகிப் போய்விட்டது. ஒருக்கால் எப்போதும் போல என்றைக்கும் ஆவது போல் இன்னும் யாவற்றையும் தோற்றுவிட்டு மிக விரைவிலேயே நூறாவது தடவையாக சத்தியம் பண்ணும் படி நேர்ந்துவிடுமோ என்ற ஓர் எண்ணம் வந்தது. வீட்டு நினைவும், என் பெண்ணின் நினைவும், அவள் காலையிலும் சாயங்காலமும் பட்ட வேதனையின் நினைவும் வந்தது.

ஆடிக்கொண்டிருந்தேன். வருவதும் போவதுமாய் இருந்தது. கண்ணும் கையும் சீட்டைப் பார்த்தன. நோட்டையும் சில்லறை நாணயங்களையும் நெருடின. வீசி எறிந்தன. அள்ளிச் சேர்த்து இழுத்தன. அள்ளாமல் தோற்று ஓய்ந்தன. தொடர்ந்து நடந்தது இது.

சிறிது நேரத்தில் சீட்டாட்டக் களத்திலிருந்து கவனத்துடன் ஒன்றியிருந்த உள்ளத்தில் மற்றொரு களம் விரிந்தது. அருகே தனியே கண்களும் காதுகளும் தனியே செயல்படத் தொடங்கியிருந்தன. அதனால் ஆட்டத்தில் சிறிதும் இடையூறு இல்லை.

சுற்றியலைந்து சலித்துப் போய் வீட்டில் நுழைந்து தொப்பென்று உட்கார்ந்தேன். சாய்வு நாற்காலியில் சிறிது நேரம் கழித்து காப்பி கொண்டு வந்து கொடுத்தாள் என் பெண். அவள் கண்கள் கலங்கியிருந்தன. என்னைப் பார்த்தவள், மெல்லச் சமாளித்துக் கொண்டு, ''அப்பா, உன்னை இப்படிக் கஷ்டப்படுத்துவதற்கென்றே நாங்கள் பிறந்திருக்கிறோமா? உங்கள் முக வாட்டமும், உடம்பின் ஓய்ச்சலும், உங்கள் நடையின் தளர்ச்சியும் எங்கள் பிறப்பையே அவமானப் படுத்துகின்றன வேண்டாம் அப்பா, வேண்டவே வேண்டாம். பெரிய உடம்பைச் சிறியதாக்கிக் கொண்டு முகத்தின் தேஜஸ்ஸை மங்கச் செய்து கொண்டு யாரிடமும் போய் கடன் கேட்க வேண்டாம். அக்காவும் பி.. படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கிறாளே, நானும் பி.எஸ்.ஸி முடித்துவிட்டு இரண்டு வருஷமாய் தண்டச் சோறு தின்கிறேனே. டிரெயினிங் போய்விட்டு வந்தாலாவது வேலை கிடைக்காதா, உங்கள் சிரமம் குறையாதா என்று பார்த்தேன். வேறு காலேஜ்களில் ஆயிரம் இரண்டாயிரம் கேட்கிறார்களே. அந்தக் காலேஜிகளில் நல்ல வேளையாக இடம் கிடைத்ததே என்று சந்தோஷப்பட்டேன்; ஆனால், இங்கும் அறுநூறு ரூபாயுடன் வர வேண்டுமென்று எழுதியிருப்பதைப் படித்தவுடனேயே எனக்குப் பகீர் என்றது. அப்போதே தீர்மானித்து விட்டேன். இது நடக்காதென்று; ஆரம்பத்திற்கே இப்படி இருந்தால், இன்னும் பத்து மாதம், ஹாஸ்டல் பீசும் மற்ற செலவுகளும் ஆகுமே. எனக்கு அடுத்தவள் காலேஜில் படிப்பதை நிறுத்தினால்கூட உங்களால் எனக்கு மாதா மாதம் அனுப்ப முடியாது. வேண்டாம் விட்டுவிடுங்கள். இனிமேலும் உங்களைக் கஷ்டப்படுத்தக் கூடாது நான்...'' என்று முடித்துவிட்டாள் கதையை.

சாயங்காலம் வெளிய கிளம்பினேன். மேற்கே போய் ரங்கனைப் பார்த்து ஏதாவது உதவி கேட்போமென்று போனேன். அவன் நல்ல பணக்காரன். ஊருக்கே பெரிய மனிதர் குடும்பத்தில் பிறந்தவன். நாற்பதைத் தாண்டிவிட்டதால் இன்னும் பாப புண்ணியங்களைப் பற்றி நினைப்பு வரவில்லை அவனுக்கு. தானதர்மங்களின் வழியே தெரியாது. அவனுக்கு என்று அவனுடைய அந்தரங்க நண்பர்களே கூறுவார்கள். ஆனால் என்னுடைய இந்தச் சந்தர்ப்பம் அவனைச் சிந்திக்கத் தூண்டாதா என்ற சபலத்தில் போனேன். அவன் வீட்டில் எனக்குத் தெரிந்த நண்பர்கள் முப்பது நாற்பது பேர் கூடி ஒரே கும்மாளமாயிருத்து.

''வாய்யா, விணாப்போன கிராக்கி, வாய்யா...'' என்ற வரவேற்புடன் நுழைந்தேன். ''பாவிகளா, உங்களாலேதான் நான் வீணாப்போனேன்'' என்று சொல்லியிருக்க வேண்டும். ஏனோ சொல்ல வரவில்லை எனக்கு. ஸ்வீட், காரம், காப்பி வந்தது. சாப்பிட்டேன். ''இன்னும் சிறிது நேரமிருந்தால் ஸோமபானம் உண்டு'' என்றான் ரங்கன்.

''இதெல்லாம் என்ன இன்னிக்கு'' என்றேன். எல்லோரும் சிரித்தார்கள். ஒருவன் என் காதோடு, “ரங்கன் நேற்று செஞ்சுரி போட்டான், அதற்காகத்தான் பார்ட்டி'' என்றான்.

 ''அப்படியென்றால்...'' என்றேன் புரியாமல்.

''ரங்கன் நேற்றிரவு தன் நூறாவது தோழியை...'' என்றான் ஒருவன்.

தன் வாழ்வின் லட்சியமே நிறைவேறி விட்டது போல் வெறியுடன் சிரித்தான் ரங்கன். அப்பொழுதே அங்கிருந்து விடைபெற்றுப் போயிருக்கலாம். இருந்தாலும் சிறுமை விடவில்லை. ரங்கனைத் தனியே அழைத்து, விவரமாகச் சொன்னேன். கடனாகக் கேட்டேன்.

''ஏகச் செலவு காலம், தாக்குப்பிடிக்க முடியவில்லை, என்னை மன்னித்து விடுங்கள்...'' என்றான்.

அவன் வீட்டை விட்டுப் புறப்பட்டுத் தெருவில் நடந்தேன். அடுத்த இரண்டு வீடுகளும் அவனுடையதுதான். அநேகமாக அந்தத் தெரு முழுவதுமே அந்தக் குடும்பத்திற்கே சொந்தம். அவர்களுடைய தகப்பனார் அப்படி வாங்கிச் சேர்த்துவிட்டுப் போயிருக்கிறார். இரண்டு வீடுகள் தள்ளி சீமா வீடு. அவன் ரங்கனுக்குத் தம்பி. ரைஸ்மில் வைத்திருக்கிறான். அரிசி வியாபாரமும், நெல் வியாபாரமும் செய்கிறான். காசில் கிண்டன். கடவுள் பக்தி உள்ளவன். ஆசார அனுஷ்டானங்களுடன் இருப்பவன். உபகாரி, கடன் கொடுப்பான், வட்டி அதிகம். ஆறு மாத வட்டியை எடுத்துக் கொண்டு மீதியைத்தான் கொடுப்பான். ஆறு மாதத் தவணை. மாதா மாதம் உள்ள தவணையைக் கழுத்தில் கத்தி வைத்தாவது கறந்துவிடுவான். நான் பல முறை அவனிடம் கடன் வாங்கியது உண்டு. தகராறு இல்லாமல் தீர்ந்ததும் உண்டு. தெருவோடு போன என்னைச் சீமாவே கூப்பிட்டான். தெருக்கோடியில் இருக்கும் கடையில் வெற்றிலை சீவல் போட்டுக் கொண்டு திரும்பி வந்து அவனைப் பார்ப்பதாக இருந்தேன். அவனே கூப்பிட்டதும், காரியம் பழமென்று சற்று நிம்மதியாகவே உள்ளே போனேன்; உட்கார்ந்தேன்.

 சீமா, உள்ளே பார்த்துக் கொண்டுஏய் ராமாஞ்சு, இலை போடு, பிரசாதமெல்லாம் சாதி'' என்று உத்தரவு போட்டுவிட்டு ''பார்ட்டிக்குப் போய் வருகிறீரோ ஹ¤ம் கஷ்டம், நல்ல குடும்பத்தில் பிறந்து, இப்படி நாயாய் அலைய வேண்டாம். உம்  ஸ்நேகிதர் வெட்கமில்லாமல் பார்ட்டி வேற கொடுக்கி றாரே, மஹா பாபம்...” என்றான்.

''அதற்கென்று வரவில்லை. வேறு காரியம். அவனைப் பார்க்கலாமென்று வந்தேன். பிறகுதான் கேள்விப்பட்டேன். பாபம்தான் இது!''

''சரி, வாரும், கொஞ்சம் பெருமான் பிரசாதம் சாப்பிடும்; கையை, காலை அலம்பணுமா? தண்ணீர் கொண்டு வரச் சொல்லட்டுமா?''

 ''என்ன விசேஷம்...?''

''ஒண்ணுமில்லை; இன்னிக்கு சுந்தர காண்டம் நூறாவது பாராயணம் முடித்தேன்.

 பெருமாளுக்கும் திருவடிக்கும் (ஆஞ்சேனயர்) அர்ச்சனை.''

 பிரசாதம் சாப்பிட்டேன். சீமா என் குடும்ப யோக§க்ஷமங்களை விசாரித்தான். காலம் போகிற போக்கில் என் போன்ற சம்சாரி களின் குடும்பதிற்குள்ள கஷ்டங்களைத் தானே சொல்லி அனுதாபப்பட்டான். நான் தயக்கத்துடன் என் பணமுடையைச் சொன்னேன். அவனுக்குப் புரியுமே என்று வித்யா தர்மம், புண்ணியம் என்றெல்லாம் வேறு சொல்லி என்னையே அசிங்கப் படுத்திக் கொண்டேன்.''

 ''ஐயோ... பாவம்'' என்றான் சீமா.

சரி. காரியம் பலித்துவிட்டதென்று நினைத்துக் கொண்டேன். சிரித்தேன்.

சீமா, தன் கஷ்டங்களைச் சொல்கிறான். ''ஐநூறாவது, ஆறுநூறாவது, இப்போ ஒண்ணும் மூச்சு விட முடியாது. ஏராளமாய் ஸ்டாக் பண்ணிவிட்டேன் நெல்லை. நானே எல்லா பாங்கிலும் ஓவர்டிராப்ட் உளுந்து, பயறு வேறே நிறைய வாங்கிப் போட்டிருக் கிறேன். கவர்ன்மெண்ட் அடிக்கிற கூத்தில் ஒன்றுமே புரியவில்லை. ஆடி ஆவணியில் ஏதாவது விலை ஏறினால் வெளியே எடுக்கப் போகிறேன். மேட்டூரில் ஜலமே இல்லையாம். குறுவை என்ன ஆகப்போகிறதோ, எது எப்படிப் போனாலும் பல்லைக் கடித்துக் கொண்டுதான் இருக்கப் போகிறேன். பெருமாள் கைவிட மாட்டரென்று பூரண நம்பிக்கை எனக்கு. ஐநூறாவது அறநூறாவது நூறு இரு நூறுக்குக்கூட வழி இல்லை. உமக்குக் கொடுப்பதற்கு என்னய்யா தயக்கம்? ரொம்ப நம்பிக்கையான புள்ளி நீர்; அதுவும் தவிர படிப்புக்குன்னு கேட்கிறீர், ஐயோ பாவம். ஆனால் நம்மகிட்ட வழியே இல்லை. வேறு எங்காவது புரட்டிப் பாரும்'' சீமா முடிக்கிறான்.

சிரித்தேன்; வாய்விட்டுச் சிரித்து விட்டேனோ! உள்ளும் புறமும் இணைந்து விட்டனவோ! உள்ளே நிகழ்ந்து கொண்டிருந்த களம் மறைந்து, வெளியே, கண் எதிரே இருந்த சீட்டாட்டக் களம் மட்டுமே தெரிந்தது.

''ஐயோ பாவம். சிரிக்க மாட்டீரா, என் கையை முறிக்க வேண்டுமென்றே, சின்ன சீட்டுக்கு இவ்வளவு ரவுண்ட் வந்து, களத்தை அள்ளி வாரிவிட்டீர்; சிரித்து வேறு என் வயிற்றிரிச்சலைக் கொட்டிக்கிறீரே; ஐயகாலம். சீட்டு நன்னாப் பேசறதே உமக்கு என்று பயந்துண்டு விட்டுத் தொலைத்தேன் பெரிய சீட்டை; தொலையட்டும். ஒரு களக்காயாவது கட்டும்'' என்றான் ஒருவன்.

சீட்டுக்களைச் சேர்த்து கொசுவி, புறாவிட்டுக் கலைத்துப் போட்டேன். ஆடிக் கொண்டிருந்தேன். வருவதும் போவதுமாக இருந்தது.

''புரட்ட வேண்டியதுதான்'' என்று சீமாவுக்குப் பதில் சொல்கிறேன். இங்கே ஆட்டத்தில் எதிரே பந்தயம் போட்டுக் கொண்டிருந்தவன் தன் சீட்டைப் புரட்டி விட்டான். 'புரட்டச் சொல்லவில்லையே'' என்றேன்.

''ப்போ சொன்னீரே...''

''ஒகோ, சொன்னேனோ? இன்னும் இரண்டு பந்தயமாவது போட்டிருப்பாய்...'' என்று பேசிக் கொண்டே குறையோடு சீட்டை கலைத்தேன்.

''தூக்கக் கலக்கமோ...'' என்றான் ஒருவன்

''ஆமாம். மத்தியானம் முழுக்க ஒரே அலைச்சல், தூக்கம் கண்ணச் சுற்றுகிறது.''

''சுற்றுமைய்யா, சுற்றும். நூறு நூறாகச் சுற்றிச் சுருட்டிவீட்டீர் அநேகமாக எல்லாக் கைகளும் குளோஸ். தூக்கம் கட்டாயம் கண்களைச் சுற்றுமே...'' என்றான் ஒருவன்.

சட்டைப் பை கனத்திருந்தது; வெளியே துருத்திக் கொண்டிருந்தது. அவன் சொன்னது உண்மை, நிறையவே ஜெயித் திருந்தேன். ஏதோ ஞாபகத்தில், ''மணி என்ன?'' என்று கேட்டுவிட்டேன்.

''பதினொன்றரைதான் ஆகிறது'' என்று கிண்டல் பண்ணினான் ஒருவன்.

ராமய்யர் வந்து என்னை அவசரமாகக் கூப்பிட்டார் ''ரொம்ப அவசரம்'' என்றார்.

சிதறிக் கிடந்த ஐந்து ரூபாய் பத்து ரூபாய் நோட்டுக்களைப் பையில் திணித்துக் கொண்டு, ஒரு ரூபாய் நோட்டுக்களையும் சில்லறை நாணயங்களையும் அடுக்கி வைத்துவிட்டு எழுந்து சென்றேன். ''ஓய்... உம்முடைய ஜன்மாவிலேயே இன்னிக்குத் தான் நீர் ஜெயித்திருக்கிறீர். மணி நாலு ஆகப் போகிறது. போய் உட்கார்ந்து ஒரு நாலு ஆட்டம், சும்மா பேருக்குப் பார்த்துவிட்டு புறப்படும் வீட்டிற்கு'' என்றார்.

அதேபோலச் செய்துவிட்டுக் கிளம்பினேன். ஒரே இருட்டு எப்படியோ வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். வீட்டின் வாசற் கதவு திறந்திருந்தது. வெளிச்சமும் தெரிந்தது. கையில் இருந்ததை ஓரமாக எறிந்துவிட்டு, ''எங்கேந்து வந்தாகிறது? விடிந்ததும் கிளம்ப வேண்டுமே குழந்தை? கூடப் போகிற உத்தேசம் உண்டோன்னோ?” என்றாள் மனைவி.

''விடிந்தும் விட்டது. புறப்பட வேண்டியது தான்'' என்று சட்டையைக் கழற்றினேன். நோட்டும் நாணயமும் சட்டைப் பையிலிருந்து சிதறின. ஏழெட்டு நூறுகள் இருக்கும்.

ஆய்வுரை.

ஆசிரியர் கரிச்சான் குஞ்சு இந்த வண்ணத்தில் உள்ள கதையைத்தான் முதலில் எழுதியிருக்கிறார். கதையின் நீளம் குறைவானதால் கதையை நீட்ட இந்த வண்ணத்தில் உள்ள கதையை எழுதிச் சேர்த்திருக்கிறார் ((வார்த்தைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப சன்மானம் கொடுக்கப்பட்ட காலம் அல்லவா அது! )). இரண்டு கதையையும் சேர்க்க அஷ்டாவதானி  போல் மனம் இரண்டு கதையையும் ஒரே நேரத்தில் சிந்திப்பது போன்று (சீட்டாட்ட  கதை, மற்றும்  ரங்கன், சீமாவிடம் கையேந்திய கதை) சேர்த்திருக்கிறார். இது  என் அனுமானம். இது தவறாகவும் இருக்கலாம். மாற்றுக் கருத்துக்கள் உள்ளவர்களும்  அவரவர் கருத்துக்களைக்  கூறலாம்.

 நூறுகள் என்ற தலைப்பிற்கு ஏற்ப நூறுகள் என்ற வார்த்தையை கதையில் பல இடங்களில் தூவியிருக்கிறார்.

//ஒரு சான்ஸ் பாப்போமே. அந்தப் பாக்கி நூறுகள் கிடைச்சுட்டுமே இல்லையென்றால் இருக்கும் நூறுகள் தொலையட்டுமே. //

//இது எத்தனையோ தடவை சத்தியம் செய்திருக்கிறோம். சீட்டைத் தொடுவதில்லை என்று. நாளைக்கு நூறாவது தடவையாகச் சத்தியம் செய்துவிட்டால் போகிறது. உட்கார்ந்தேன்./ /

//நல்ல முரட்டுக் கைகள்; மும்முரமான ஆட்டம். நாலைந்து கலவைகள் வந்தாலே போதும், நமக்கு வேண்டிய நூறுகள் கிடைத்துவிடும்.//

//”ரங்கன் நேற்றிரவு தன் நூறாவது தோழியை...'' என்றான் ஒருவன்.//

//''ஒண்ணுமில்லை; இன்னிக்கு சுந்தர காண்டம் நூறாவது பாராயணம் முடித்தேன்.//

//''விடிந்தும் விட்டது. புறப்பட வேண்டியது தான்'' என்று சட்டையைக் கழற்றினேன். நோட்டும் நாணயமும் சட்டைப் பையிலிருந்து சிதறின. ஏழெட்டு நூறுகள் இருக்கும்.//

 சிலேடையை கவனித்தீர்களா?

கதையின் சுட்டிகள்.

அழியாச்சுடர்கள்

 வலைத்தமிழ்.காம்

 ஆசிரியர் பற்றிய குறிப்பு

 

 

ஆர். நாராயணசாமி என்ற இயற்பெயர் கொண்ட கரிச்சான் குஞ்சு (1919 - 1992) எட்டு வயது முதல் பதினைந்து வயது வரை பெங்களூரில் வேதமும் வடமொழியும் கற்றார்.

மதுரை ராமேஸ்வர தேவஸ்தான பாடசாலையில் ஐந்தாண்டுகள் (17 முதல் 22 வயது வரை) தமிழ் பயின்றார்.

கு. . ராஜகோபாலனின் (கு..ரா) சீடர்களுள் ஒருவராக இருந்த நாராயணசாமி அவர் மீது கொண்ட பற்றால்கரிச்சான் குஞ்சுஎன்ற பெயரில் எழுதத் தொடங்கினார். (கு..ராவின் புனைபெயர்கரிச்சான்”)

கும்பகோணத்தில் ஆசிரியராகப் பணியாற்றும்போது எழுத்தாளர்கள் கு.. ராஜகோபாலன் , தி.ஜானகிராமன், எம்.வி.வெங்கட்ராம் ஆகியோருடன் நெருங்கிய நட்பு கொண்டவர்.

பசித்த மானுடம்என்ற அரிய நாவலை எழுதி, தமிழ் நாவல் உலகில் தனக்கெனத் தனி இடம் பிடித்தவர் கரிச்சான் குஞ்சு.

மாலன்  இவரைப் பற்றி ஒரு நீண்ட கட்டுரை அவரது தளத்தில் எழுதியுள்ளார். அதிலிருந்து சில வரிகள்.

அள்ளி முடிந்த வெள்ளிக் குடுமி. நெற்றி நிறைய வரி வரியாத் திருநீறு. அறுபது வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் ஒரு பார்ப்பனக் கிழவர், “தேர்தல் பாதை திருடர் பாதை!’ என்ற நக்சலைட்களின் கோஷத்தை ஊர்வலத்தில் உரக்க முழங்கிக் கொண்டு போவதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?

பார்த்திருந்தால் உங்களுக்குத் தெரிந்திருக்கும், அவர்தான் கரிச்சான் குஞ்சு!”

தமிழ்ப் பண்டிதர்களை உருவாக்கஓரியண்டல் ஸ்டடீஸ்என்று ஒரு படிப்பு இருந்தது. நுழைவுத் தேர்வு  எழுதி வெற்றி பெற்றால்தான் சேர முடியும். கரிச்சான் குஞ்சு அதில் தேறி அந்தப் படிப்பில் சேர்ந்தார்.”

"ஒரு முறை தி.ஜா.வின் அறைக்குப் போயிருந்த கரிச்சான் குஞ்சு அங்கிருந்த பாரதியார் கவிதைகள் நூலைப் படிக்க எடுத்துக் கொண்டு வந்தார். முதல் வாசிப்பிலேயே அவரைக் கிறங்க அடித்தான் பாரதி. கவிதைகளை வாய்விட்டுப் படிப்பதும், பாடுவதுமாக இருந்தார். அப்போது இந்தியா விடுதலை பெற்றிருக்கவில்லை. பாரதியைப் படிப்பது குற்றம் எனச் சொன்ன அவரது ஆசிரியர்கள் அதை நிறுத்தச் சொன்னார்கள்.

ஒருநாள் கையும் களவுமாகப் பிடிபட்டார். இரண்டு நாளைக்குச் சாப்பாடு கிடையாது என்றும் பாடசாலையை விட்டு வெளியேற வேண்டும் என்றும் தண்டனை விதிக்கப்பட்டது. அவரிடமிருந்த பாரதியார் கவிதைகள் பறித்து வீசப்பட்டன.

குலைப்பட்டினி கிடந்த அந்த நாள்களை, பின்னால் சிரித்துக் கொண்டே நினைவு கூர்ந்து, “பாரதி, படிப்பவனுக்கு பசி கொடுப்பான்என சிலேடையாகச் சொல்லி கடகடவென்று சிரிப்பார்

கட்டுரைக்கான சுட்டி      கரிச்சான் குஞ்சு – maalan

25 கருத்துகள்:

  1. அன்பின் வணக்கங்களுடன்

    வாழ்க நலம்.

    பதிலளிநீக்கு
  2. நாகை - சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில், 500 கர்ப்பிணியருக்கும் சீர்வரிசை பொருட்களை வழங்கி, கலெக்டர் ஆசீர்வதித்த நிகிழ்ச்சியை நாளிதழில் அறிந்திருந்தேன்...

    இங்கும் அந்தச் செய்தி..

    வளையல் தானம் அறங்களுள் ஒன்று.. காலகாலமாக நடப்பது..

    மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  3. கரிச்சான் குஞ்சு அவர்கள் எழுதிய கதை என்று எதுவுமே படித்ததில்லை....

    படிப்பதற்கு வாய்ப்பு அமையவில்லை.. அவ்வளவுதான்..

    பதிலளிநீக்கு
  4. வளைகாப்பு சம்பவம் மனதை நெகிழ வைத்தது.

    திரு. சந்திரசேகரன் போல் எல்லா பட்டதாரிகளும் வாழவேண்டும்.

    பதிலளிநீக்கு
  5. கரிச்சான்குஞ்சுவைப் பிடித்து இங்கு பறக்கவிட்டதற்கு நன்றி.

    இப்போதும் நல்ல தரமான எழுத்தைத் தேடிப் படிப்போர் கிட்டத்தட்ட இல்லை. (சிலபல காரணங்களைக் கொண்டு தூற்றுவோர் என்னவோ உண்டு). அப்போது தேடி இலக்கியம் வாசித்தவர்கள் இருந்தார்கள். ஆனால் படித்தால் குற்றம். பாடசாலையை விட்டு வெளியேற்றம். குலைப்பட்டினியே பரிசு! அடடா... பாருக்குள்ளே நல்ல நாடு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “பாரதி, படிப்பவனுக்கு பசி கொடுப்பான்” இதில் தான் எத்தனை அர்த்தங்கள். அவருக்கும் இருந்தது வயிற்றுப பசி, சுதந்திர பசி, இலக்கிய பசி. அவரிடம் இருப்பதைத்தானே மற்றவருக்கு கொடுக்க முடியும். இந்த சிலேடையை நான் ரசித்தேன்.

      நீக்கு
  6. போற்றுதலுக்கு உரியவர்கள், போற்றுவோம்

    பதிலளிநீக்கு
  7. அனைவருக்கும் வணக்கம். சொந்த செலவில் ஊருக்கு சாலை அமைத்த இளைஞர் பற்றிய செய்தி மட்டும் ஏற்கனவே படித்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  8. பானுமதி வெங்கடேஸ்வரன்27 ஆகஸ்ட், 2022 அன்று AM 9:00

    பாலகுமாரனின் இரும்புக் குதிரைகள் நாவலில் வரும் நாராயணசாமி என்னும் கதாநாயகியின் தந்தை கதாபாத்திரம் கரிச்சான் குஞ்சுதான் என்பார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கரிச்சான் குஞ்சுவிற்கு நான்கு பெண்கள். அவர்களுக்கு தி ருமணம் செய்ய முடியாமல் முதிர் கன்னிகளாகவே வாழ்ந்தனர்.இரும்புக் குதிரைகள் படித்ததில்லை. வருகைக்கு நன்றி.

      நீக்கு
  9. உதவும் நல்லுள்ளங்களை வாழ்த்துவோம்.

    கரிச்சான் குஞ்சு கதைகள் கேள்விப்பட்டிருக்கிறேன் படித்ததில்லை நல்லதோர் கதை பகிர்வு.

    பதிலளிநீக்கு
  10. வளைகாப்பு நிகழ்வு புதுசா இருக்கு. இதையே அரசு செய்திருந்தால் திமிலோகப் பட்டிருக்கும். விளம்பரங்கள், பானர்கள், ஃப்ளெக்ஸ் பானர்கள், சிவப்புக்கம்பளங்கள், பரிசுப் பெட்டிகள்னு அமர்க்களப்படுத்தி இருப்பாங்க. வீட்டு விசேஷம் போல் நடத்திய மாவட்ட ஆட்சியருக்குப் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  11. கரிச்சான் குஞ்சு சிறுகதைகள் நிறையப் படிச்சிருக்கேன்.

    பதிலளிநீக்கு
  12. செய்திகள் எல்லாம் நல்ல செய்திகள்.
    அனைவரும் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  13. கதை பகிர்வும், ஆசிரியர் பற்றிய குறிப்பும் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  14. செய்திகள் மூன்றுமே நல்ல செய்திகள்.

    கலெக்டர் - வளைகாப்பு விழா வித்தியாசமான நிகழ்வு.

    அனைவரையும் வாழ்த்துவோம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  15. கரிச்சான் குஞ்சு எழுத்தாளர் பெயர் கேள்விப்பட்டதுண்டு ஆனால் இதுவே நான் வாசித்த முதல் கதை, ஜெசி அண்ணாவுக்கு நன்றி.

    கதையை வாசிக்கும் முன் மாலன் அவர்களின் சுட்டிக்குச் சென்று வாசித்தேன். ஆசிரியர் பற்றியும் அறிந்ததோடுபுத்தகம் வெளிவர எத்தனைக் கஷ்டங்கள், எழுத்தாளரின் நிலை, ஆனால் கூடவே எத்தனை நல்ல உள்ளங்கள் என்று தெரியவந்தது.

    கதை பற்றி அடுத்து வருகிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
  16. எளிய நடை, எளிய கதைதான். ஆனால் அதைச் சொல்லும் போது நமக்கும் கூடவே காட்சிகள் விரிகின்றன. முடிச்சுகள் எதுவும் இல்லாத நேராகப் பயணிக்கும் கதை.

    வறுமை..கடன் கேட்டு அலையும்கதாபாத்திரம்...ஆனால் வறுமைக்கான காரணம்? வீட்டுத் தலைவன் வேலை செய்யவில்லையா? அல்லது வேலை செய்யாமல் வெட்டியாய் இருப்பவனா? அல்லது வேலை செய்து கிடைப்பதை சீட்டில் தொலைப்பவனா? கடன் வாங்க அலைவதை வாசித்த போது ஏனோ மனதில் வருத்தம் எதுவும் ஏற்படவில்லை. அப்படி அந்தக் கதாபத்திரத்தின் குணாதிசயங்கள் விளக்கப்பட்டதால் இருக்கலாம், சீட்டாட்டத்தில் கிடைக்கும் காசை தன் பெண்ணின் ஆசிரியப் பயிற்ச்சிக் கட்டணத்திற்குக் கட்டுகிறான்!

    எனக்குப் புரிவது இப்படியான குணாதிசயம் கொண்ட ஒரு அப்பா, வீட்டுத் தலைவன்....அதைச் சித்தரிக்கும் ஒரு நிகழ்வைச் சொல்லி கதை

    கீதா

    பதிலளிநீக்கு
  17. கரிச்சான் குஞ்சு அவர்களின் வேறு கதைகளை வாசித்துப் பார்க்க வேண்டும்..

    கீதா

    பதிலளிநீக்கு
  18. இந்தக் கதையிலிருந்து தெரிவது, நாம் சும்மானாலும் அந்தக்காலம் இந்தக்காலம்னு ஒப்பிட்டு அந்தக்காலம் ரொம்ப உசத்தின்னு சொல்வது....நிச்சயமக இல்லை. அப்போதைய சூழல் பல கதைகளிலும் வெளிப்பட்டதுண்டே. ஆனால் அவை வெளியில் தெரிவது கொஞ்சம் அல்லது வாசிப்பவர்கள் அச்சூழலைப் பற்றிப் பேசியதில்லை. இப்போது எல்லாமே வெட்ட வெளிச்சத்தில் தெரிவதால் அதிகம் பேசப்படுவதாகவே தெரிகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
  19. குலைப்பட்டினி கிடந்த அந்த நாள்களை, பின்னால் சிரித்துக் கொண்டே நினைவு கூர்ந்து, “பாரதி, படிப்பவனுக்கு பசி கொடுப்பான்” என சிலேடையாகச் சொல்லி கடகடவென்று சிரிப்பார்”//

    ஆசிரியர் பற்றிய குறிப்பில் இதை மிகவும் ரசித்தேன். நிறைய அர்த்தங்கள் இருக்கின்றன, பசி என்றால் வயிற்றுப் பசி மட்டுமல்ல, அறிவுப் பசியும் சேர்த்துத்தான்....படைப்புப் பசி, ஆசிரியரைப் பற்றியும் தெரிய வருகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
  20. பாசிட்டிவ் செய்திகள் அனைத்துமே அருமை. தன் செலவில் ரோடு போட்ட இளைஞர், ஒரு சகோதரன் போன்று வளைகாப்பு நடத்தி ஆசிர்வதித்த கலெக்டர் மனதைத் தொட்ட செய்திகள். கலெக்டர் ஆசீர்வதித்த பெண்களின் குழந்தைகள் நாளை மாமாவைப் போல வர வேண்டும் என்று வாழ்த்துவோம்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  21. கரிச்சான் குஞ்சு பெயரே வித்தியாசமாக இருக்கிறது. கேட்டதுமில்லை.

    கதை யதார்த்தமாக இருக்கிறது. இப்போதும் இப்படியானவர்கள் இருக்கிறார்கள். ஆனால் சீட்டாட்டம் அதன் மற்றொரு வகையான சூதாட்டம், குடி என்று இருக்கத்தான் செய்கிறார்கள்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!