29.7.25

ஒரே ஒரு ஊரிலே - தொடர் கதை - ஸ்கை பகுதி 02

 

முன்னறிவிப்பு : 

அப்பப்போ படிச்சுடுங்க. முடிந்தபிறகு மொத்தமாகப் படிச்சுக்கலாம் என்று நினைத்தால் ரொம்பக் கஷ்டப்படுவீங்க. 

முடிவு என்ன ஆகும் என்று தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளவர்களுக்கு கதையின் கடைசி வரி : " அவர்கள் இருவரும் அதற்குப் பின் சந்தோஷமாக நிம்மதியாக வாழத் தொடங்கினார்கள்" 

= = = = = = = = =

முந்தைய பகுதி சுட்டி <<< 

ஆடுற மாட்டை ஆடிக் கறக்கணும், பாடுற மாட்டை பாடிக் கறக்கணும்... (பழமொழி) 

'ராமசாமி சாரைப் பார்க்க நானும் வருகிறேன்' என்று கூறிய சாந்தியை சந்தோஷமாகப் பார்த்தான் ராஜா.

பைக்கை எடுக்க இருவரும் ஸ்டாண்டுக்கு வந்தார்கள். சாந்தி அவன் இடது கையுடன் தன் வலது கையை நுழைத்து கோர்த்தப்படியே கூட நடந்து வந்தாள்.

பைக் இருக்குமிடம் வந்தபோது இவன் பைக்கில் சாய்ந்தபடி ஒற்றை நாமம் இட்ட ஒரு நடுத்தர வயதுக்காரர் போனில் பேசிக் கொண்டிருந்தார். "கீதாரங்கன்... நாளைக்கு நான் பெங்களூர் வந்து விடுவேன். வருகின்ற ஞாயிற்றுக்கிழமை, அதான்.. நாளை மறுநாள் ஜெயநகர் மார்க்கெட் போகலாமா? என்று பேசிக் கொண்டிருந்தவரின்தோளைத் தொட்டு "எக்ஸ்கியூஸ் மீ" என்றான் ராஜா. திரும்பிப் பார்த்தவர், 'என்ன' என்பது போல் புருவம் உயர்த்தினார். அவருடைய சிவப்பு கலர் நாமமும் கூடவே உயர்ந்தது.

"பைக் எடுக்கணும்" என்றான் ராஜா.

சாந்தி சற்றே நகர்ந்து வழிவிட்டாள்.

"ஓ... ஸாரி" என்று சட்டென நகர்ந்தவர், "என்னுடைய மனைவியையும் அழைத்து வருகிறேன்" மூணு பேருமே போகலாம்' என்றபடி நடந்தார்.

ராஜா பைக்கை எடுத்தான்.

அவன் நினைவுகள் பின்நோக்கிப் பயணித்தன.

**** 

ராஜா  பள்ளிக்கூட நாட்களிலேயே பலர் கவனத்தைக் கவர்ந்தவன். படிப்பில் சுமார் என்றாலும், பேச்சுப் போட்டி, நாடகம் நடிப்பு , விளையாட்டு எல்லாவற்றிலும் சிறந்து விளங்கினான். 

ஊரின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவர் ராமசாமி. பள்ளிக்கூட நிர்வாகிகள், விளையாட்டுப் போட்டி நடத்துபவர்கள் எல்லோரும் தலைமை தாங்க அவரைதான் முதலில் அணுகுவார்கள். அழைப்பை ஏற்பது மட்டும் இல்லாமல், அந்தப் பள்ளிக்கு தாராளமாக நிதியுதவியும் செய்வார் அவர். 

விழா அமைப்பு, பரிசுப் பொருட்கள் எல்லாவற்றிற்கும் அவருடைய நன்கொடை பெரிய அளவில் உதவும். 

பள்ளியின் ஆண்டுவிழா. 

தலைமை ஏற்றவர் ராமசாமி. 

விழாவில் இறுதியாக  " மதியூகி மந்திரி" என்ற நாடகம் . 


அதில் மந்திரியாக நடித்த மாணவனின் நகைச்சுவை நடிப்பு ஏராளமான கைதட்டல்களையும் பாராட்டுகளையும் பெற்றது. 

தலைமையுரை ஆற்றினார் ராமசாமி.

" இந்த நாடகத்தில் மந்திரியாக நடித்த பையனின் நடிப்பு மிகவும் பிரமாதம். அந்தப் பையனின் பெயர் என்ன? " என்று கேட்டார். 

தலைமை ஆசிரியர்,  " ராஜா" என்று பதிலளித்தார்.

" அட ! மந்திரியாக நடித்தவர் ராஜா! நான் மந்திரி ஆனால் இந்த ராஜாவிற்கு பெரிய பதவியைத் தயங்காமல் கொடுத்துவிடுவேன் "  என்று உரையைத் தொடங்கினார் ராமசாமி. கூட்டத்தினர் பெருத்த கரகோஷம் செய்தனர்.

மாணவர்களின் திறமைகள் பற்றியும் அவர்களால் ஊரும் நாடும் எப்படி முன்னேற்றம் அடையும் என்பது பற்றியும் விரிவாகப் பேசினார் ராமசாமி.

விழாவின் இறுதியில் பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி. 

பேச்சுப் போட்டி முதல் பரிசு : ராஜா. 

தமிழ்க் கட்டுரைப் போட்டி: முதல் பரிசு : ராஜா. 

விளையாட்டுப் போட்டிகளில் பலவற்றில் முதல் பரிசு ராஜா. 

" தம்பீ ராஜா - இங்கே வந்து பக்கத்திலேயே நில்லு. ஒவ்வொரு முறையும் உன் பெயரைக் கூப்பிட்டு, நீ மூன்றாவது வரிசையில் இருந்து மேடை வரை வந்து, பரிசு வாங்கி திரும்பச் செல்வதற்கு நேரம் அதிகமாகுது." என்றார் ராமசாமி. மீண்டும் கைதட்டல்.

ராஜா மௌனப் புன்னகை செய்தான். 

நாடக நடிப்பிற்காக ராஜாவிற்கு பரிசு வழங்கினார் ராமசாமி. 

தலைமை ஆசிரியரிடம், 'இந்த நாடகத்திற்கு கதை , வசனம் எழுதியது யார்?' என்று கேட்டார். 

அதுவும் ராஜாதான் என்று தெரிய வந்ததும் மிகவும் ஆச்சரியப்பட்டார். 

அதற்குப் பின் ராஜா கல்லூரியில் படித்த காலத்திலும் ராஜா & ராமசாமி சந்திப்புகள்  பல முறை நிகழ்ந்தது.

நகரசபைத் தேர்தல் வந்தபோது ராமசாமியின் கட்சி மேலிடம் அவரை போட்டியிடக் கேட்டுக் கொண்டார்கள். 

பிரச்சாரம் செய்ய வேண்டும் என்றவுடன் ராமசாமியின் நினைவுக்கு வந்த முதல் ஆள் ராஜா. 

ராஜாவை அழைத்து, தன்னுடைய தொண்டர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். 

" இந்தத் தம்பி தமிழ்ப் பேச்சு, கதை, கட்டுரை எல்லாவற்றிலும் சூப்பரான ஆள். நம்முடைய பேச்சு , பிரச்சாரம் எல்லாத்தையும் இவனோடு கலந்து பேசி முடிவு செய்யுங்கள்." என்றார். 

ராஜா, தொண்டர்கள் மட்டும் இல்லாது ராமசாமிக்கும் பிரச்சாரத்திற்கு நிறைய எழுதிக் கொடுத்து யுக்திகள் சொல்லிக் கொடுத்தான். 

கல்லூரிக்கு வந்து மாணவர்களோடு கலந்து பேசி அவர்களிடம் துண்டு பிரசுரங்கள் கொஞ்சம் கொடுத்து " உங்கள் நண்பர்களுக்குக் கொடுங்கள் . உங்கள் பெற்றோர்களை எங்களுக்கு ஓட்டு போடச் சொல்லுங்கள் " என்று வேண்டுகோள் விடுத்தார். 

ஊரிலே நல்ல பெயர் என்பதால் அவருக்கு வெற்றி எளிதாகக் கிடைத்தது. 

நகராட்சி தேர்தலில் அவரை  நிற்கவைத்தது ஊர்ப் பெரிய மனிதர்,  செல்வந்தர் என்ற முறையில் இயல்பாக இருந்தாலும் பெரிய அளவில் வாக்குகள் பெற்று பிரமாண்டமான வெற்றியடைந்தது எல்லாராலும் கொண்டாடப் பட்டது. 

" நம்ம ராமசாமி எலக்சன்ல ஜெயிச்சு ஊர்வலமா வர்றாரு. அவருக்கு ஒரு மாலை வாங்கிப் போடு "  என்று செல்வம் தன் மகனிடம் சொன்னார்.

பலத்த கைதட்டலுக்கு நடுவே நல்ல பெரிய மாலையை அவருக்கு சந்தோஷமாக அணிவித்தான் ராஜா. அவருக்கும் அவனுக்கும் இடையே சிநேகம் இன்னும் வலுவடைந்தது. அவ்வப்போது அவரைச் சந்திப்பது,  அவர் வீட்டுக்குப் போய் சிற்றுண்டி சாப்பிடுவது என்று நெருக்கம் இறுகிக் கொண்டே வந்தது. 

இதோ இப்போது சட்டசபை தேர்தலும் வந்துவிட்டது . ராமசாமி நிற்பதாக முடிவு செய்து அவருடைய கட்சியும் அவருக்கு ஆசி வழங்கி விட்டது. 

சாந்தியையும் அழைத்துக்கொண்டு ராமசாமியைப் பார்க்கப் புறப்பட்டான் ராஜா.

*******

ராமசாமியின் வீட்டில் கட்சி ஆட்கள், நண்பர்கள், உறவினர்கள் என்று பலர் காணப்பட்டனர். தொகுதியின்  வட்டச் செயலாளர்கள், முக்கிய தொண்டர்கள் எல்லோரும் வந்திருந்தனர். 

வரவேற்பறையில் அழைக்கப்பட்டிருந்த சிலர் உட்கார்ந்திருந்தனர். 

வீட்டு வேலைக்காரர் ஒரு ட்ரேயில் கூல்டிரிங்ஸ் கொண்டுவந்தார். தனியே ஒரு பாக்கெட்டில் ஸ்டிரா இருந்தது. சிலர் மட்டும் கூல்டிரிங்ஸ் டம்ளரோடு அதை உறிஞ்ச ஸ்டிரா எடுத்துக்கொண்டனர். மற்றவர்கள் 'ரா'வாக உறிஞ்சினார்கள்! 

ராமசாமி தன்னுடைய அறையில் உட்கார்ந்து யாரோ இருவருடன் பேசிக்கொண்டு இருந்தார். 

" உண்மையாதான் சொல்றீங்களா?" 

" ஆமாம் சார் உங்க ஜாதகத்துல இப்போ சனி மகா தசை ஆரம்பம். இன்னும் 19 ஆண்டுகளுக்கு உங்களை யாரும் அசைக்க முடியாது. ராஜயோகம் தான், உங்க காட்டுல பணமழைதான்"

" முகஸ்துதி செய்யறீங்களா? " 

" நிச்சயமா முகஸ்துதி செய்யலை. நீங்க எந்த ஜோசியரிடம் வேண்டுமானாலும் உங்க ஜாதகத்தைக் கொடுத்து, கேட்டுப் பாருங்க." 

" சரி. ரொம்ப சந்தோஷம். என் வொய்ஃப் பார்வதியின் ஜாதகத்தையும் கொஞ்சம் பாருங்க. அவங்க ஏதோ சந்தேகம் கேட்கணும்னு சொன்னாங்க. ஜோஸ்ய ஆலோசனைக்கு நீங்க வழக்கமா வாங்குகிற அமௌண்ட்  உங்களுக்குத் தரச் சொல்லியிருக்கேன். " 

ஜோஸ்யர்கள் அங்கிருந்து கிளம்பியதும், ராமசாமி வரவேற்பறைக்கு வந்தார். 

****

ராமசாமி வீட்டுக்கு ராஜாவும் சாந்தியும் போய்ச் சேர்ந்தபோது நாலைந்து பேர் அப்போதுதான் அவரிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டார்கள்.

"அடேடே ! வா ராஜா" என்றவர் சாந்தியிடம் " வாங்கம்மா " என்று சொல்லிவிட்டு ஒரு கணம் தயங்கினார். 

"சார்! இது சாந்தி.  என் ஃபிரண்டு. உங்களைப் பார்க்க வருகிறேன் என்றதும் நானும் வரலாமா என்று கேட்டாள். .."

"  மறுக்க முடியாத அளவுக்கு க்ளோஸ் ஃப்ரெண்ட்ன்னு சொல்லு " என்று சிரித்த முகத்துடன் சொன்னவர் சாந்தியை "என்ன நான் சொல்கிறது "என்று கேட்கிற மாதிரி சிரித்தமுகத்துடன் பார்த்தார்.

சாந்தி அவருக்குக் கைகூப்பி வணக்கம் சொன்னாள்.‌

"அங்கிள் நீங்க இவரோடு பேசுங்க நான் ஹாலுக்குப் போய் வெய்ட் பண்றேன் " 

" சே சே ! அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். நாங்க ஏதும் உலக மகா ரகசியம் பேசப் போகிறதில்லை. உட்காருங்க ரெண்டு பேரும் " என்றவர் உள்ளே சென்று காபி டிஃபனுக்குச் சொல்லி விட்டு வந்து உட்கார்ந்தார்.

" ராஜா உனக்கு போன் பண்றதுக்கு அஞ்சு நிமிஷம் முன்னாடிதான் எனக்கே தெரியும்.‌  கட்சி மேலிடத்திலிருந்து போன் வந்தது. ‘நம்ம கட்சி சார்பாக எம்எல்ஏ வேட்பாளராக தேர்தலில் நிற்கிறீர்களா? என்று கேட்டார்கள். அதுக்குள்ள கிளை செயலாளர் வட்டம் மாவட்டம்னு நாலஞ்சு பேர் வந்து பாத்துட்டு எலுமிச்சம்பழம் கொடுத்து செவந்தி பூ மாலை எல்லாம் போட்டுட்டுப் போறான். இந்த எம்எல்ஏ விவகாரம் எல்லாம் நல்ல செய்தியா பொல்லாத செய்தியா என்று சரியாகப் புரியல. உன்கிட்ட கொஞ்சம் அது பற்றிப் பேசலாம் என்றுதான் கூப்பிட்டேன்."

" சார் என்ன சொல்றீங்க. அவனவன் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து சீட்டு கேட்கத் தயாராக இருக்கான்னு பேசிக்கறாங்க.  அவங்களாவே பார்த்து உங்களைக் கூப்பிடுகிறார்கள் என்றால் அது எவ்வளவு பெரிய கவுரவம் ? வேண்டாம் எல்லாம் சொல்லிடாதீங்க .  கடவுள் மேல பாரத்தைப் போட்டுட்டு தேர்தல்ல ஜெயிக்கிறதுக்கு உண்டான வேலையை பாருங்க . அதுக்கு நாங்க பலபேர் எல்லா உதவிகளையும் செய்யத் தயாரா இருக்கோம். " 

" நீ சொல்ற மாதிரி இது ஒரு பெரிய கௌரவம் தான் என்பதில் எதுவும் சந்தேகம் இல்லை. ஆனா நமக்கு இந்த எம்எல்ஏ கட்சி வரவு செலவு பந்தா காட்டுறது இதெல்லாம் சரியா வருமா என்கிற சந்தேகம் பலமா இருக்கு. சந்தேகம் என்ன பயம்ன்னே வச்சுக்கோயேன்."

" சார் மடியில கனம் இருந்தா தான் வழியிலே பயம்.  நமக்கு என்ன பயம் இருக்க முடியும் ? முதல்ல தேர்தலில் ஜெயிக்கணும். அதுக்கப்புறம் தானே வேறே புதுக் கவலையெல்லாம் ! " 

" அங்கிள் ! இவர் சொல்றது தான் சரி. என்னடா அறிமுகம் ஆவதற்கு முன்னாடியே ரொம்ப பேசுகிறாளே  என்று நினைத்துக் கொள்ளாதீர்கள் ! நீங்க கட்டாயம் தேர்தல்ல போட்டி போட்டு எம்எல்ஏ ஆகணும். உங்களைப் பத்தி இவர் ரொம்ப சொல்லி இருக்கார். "

" சார் மூன்றில்  இரண்டு பேர் மெஜாரிட்டி நீங்க நிக்கணும்னு முடிவு பண்ணிட்டோம் . அடுத்து ஆக வேண்டியதைப் பார்க்கலாம். நாளைக்கு வருகிறேன் "  என்று ராஜா சொல்லவும் கேசரி பஜ்ஜி காபி வரவும் சரியாக இருந்தது. 

******  *****   *****

மறுநாள் காலையில், ராஜா, ராமசாமியைப் பார்க்கப் புறப்பட்டான். அவருடைய வீட்டில், அவர் அறைக்குள் நுழைவதற்கு முன்பு சற்று நிதானித்தான். அறையிலிருந்து யாரோ ஒருவர் வெளியே வந்துகொண்டிருந்தார்.

"ஆடுற மாட்டை ஆடிக் கறக்கணும், பாடுற மாட்டை பாடிக் கறக்கணும்.." என்று பாடியவாறு ராமசாமியின் அறையிலிருந்து வெளியே வந்தான் ஒரு ஆள்.

அறையின் உள்ளே வந்துகொண்டிருந்த ராஜாவின் மேல் மோதியவன் " சாரி பிரதர்" என்று சொல்லியபடி சென்றான்.

" சார் ! யார் இந்த ஆளு?"

" கட்சி மேலிடம் அனுப்பி இருக்கற ஆள். பெயர் வரதன்."

" இப்போ எந்த மாட்டு கிட்ட பால் கறக்கப் போகிறார்?"

" பாடிக்கிட்டு போறதால ஏதாவது பாடற மாடா இருக்கும்"

" ஏனோ எனக்கு அந்த ஆளைப் பிடிக்கவில்லை"

" எனக்கும்தான் பிடிக்கவில்லை . என்ன செய்வது? கட்சி கொடுக்கின்ற நிதியை அவன் மூலமாக ஆடுற, பாடுற, ஓடுற உட்கார்ந்திருக்கிற மாடுகளிலிலிருந்து வோட்டு கறக்க செலவழிக்க வேண்டுமாம். "

" நீங்கள் வேண்டாம் என்று சொல்ல வேண்டியதுதானே"

" தம்பீ தேர்தல் என்று வந்துவிட்டால் ஜெயிப்பதுதான் இலக்கு."

" அப்படி ஒரு வெற்றி தேவையா?"

" கட்சி என்னை இங்கே போட்டியிட தேர்ந்தெடுத்திருப்பதற்கு காரணம், தொகுதியில் நல்ல பெயர், தொகுதி மக்களுக்கு அறிமுகமானவன், மேலும் இந்தத் தொகுதியில் என்னுடைய ஜாதி ஆட்கள் அதிகம். "

" ஜெயிப்பதற்கு அந்த தகுதிகள் போதாதா?"

" போதாது என்கிறது கட்சி மேலிடம்"

" ஏன்?"

" அதுதான் அந்தப் பாட்டிலேயே பாடி விட்டானே வரதன்"

" அந்த ஆளு என் பக்கம் வந்தான் என்றால் அவனைக் கண்டபடி பேசிடுவேன்."

" வந்தான் என்றால் என்னிடம் சொல்லு"

***  *** ***

மாப்பிள்ளை சார் ‘செல்வா மீனா டெக்ஸ்டைல்ஸ்’ கடையில் பெரிய மரியாதைக்குரிய ஆள். முதலாளி செல்வத்தின் பால்ய  சிநேகிதருடைய மாப்பிள்ளை. அதிகம் படிக்காத நபர்.  நாலாவது அஞ்சாவதுதான் படித்திருப்பார். ஆனால் அனுபவ அறிவு ரொம்ப ரொம்ப அதிகம். சினேகிதத்தில் கேட்டுக் கொண்டதற்கு இணங்க செல்வம் அவருக்கு கடையில் ஒரு வேலை போட்டுக் கொடுத்தார். கற்றுக் கொள்ளும் ஆர்வம், நாணயமான நடத்தை காரணமாக அவர் விரைவில் கடையில் ஒரு உன்னத ஸ்தானத்தை எட்டி விட்டார்.  கல்லாவில் உட்கார்ந்து கொண்டு கம்ப்யூட்டரில் தகவல்களை உள் செலுத்துகிற அளவுக்கு அவரது அஞ்சாங்கிளாஸ் அறிவு விசாலமாகி இருந்தது.

மாப்பிள்ளை சாரின் அசல் பெயர் சில பேருக்குதான் தெரியும். அவர்களே கூட அவரைப் பேர் சொல்லி கூப்பிட மாட்டார்கள். இப்படியாக அவர் எல்லோருக்கும் மாப்பிள்ளையாக விளங்கினார். தேவை வரும்போது எந்த வேலையானாலும் செய்கிறவர். ரவிக்கைத் துண்டுகளை கத்திரித்துப் போடுவதிலிருந்து கல்லா கம்ப்யூட்டர் வரை அவர் அதிகாரம் எங்கானாலும் கொடி கட்டிப் பறக்கும்.

(தொடரும்) 


பின்குறிப்பு :

முதல் பகுதிக்கு வந்திருந்த கடிதங்களில், கதையை வேறு திசையில் நகர்த்திக் செல்லவும் ஆலோசனைகள் சொல்லப்பட்டிருப்பதைப் பார்த்தேன்.  யதா ராஜா ததா ப்ரஜா என்பது போல யதா வாசகாஸ் ததா கதா  என்று மாற்றி விடலாமா என்று கூட யோஜித்துக் கொண்டிருக்கிறேன். அவ்வளவு சுவாரஸ்யமான கற்பனைகள்.  மொத்தமாக கதையை அனுப்பாமல் அவ்வப்போது அனுப்புவது கூட வசதிதான் என்று தோன்றுகிறது.  

யார் ஸ்கை என்பது பற்றிய விவாதங்கள் சுவாரஸ்யமாக இருந்தன.  புன்னகைத்தேன்.  உங்கள் ஆர்வமும் அன்பும் என்னை புதிதாக்கி மெருகேற்றுகின்றன.  ஒரு புதிய தொடக்கத்துக்கான விடியலாக பார்க்கிறேன்.

என்றும் அன்புடன் 
ஸ்கை 
= == = = = = = 

24 கருத்துகள்:

  1. "கீதாரங்கன்... நாளைக்கு நான் பெங்களூர் வந்து விடுவேன். வருகின்ற ஞாயிற்றுக்கிழமை, அதான்.. நாளை மறுநாள் ஜெய் நகர் மார்க்கெட் போகலாமா? என்று பேசிக் கொண்டிருந்தவரின்தோளைத் தொட்டு "எக்ஸ்கியூஸ் மீ" என்றான் ராஜா. திரும்பிப் பார்த்தவர், 'என்ன' என்பது போல் புருவம் உயர்த்தினார். அவருடைய சிவப்பு கலர் நாமமும் கூடவே உயர்ந்தது.//

    ஹாஹாஹாஹா....கீதா, நெல்லை.....ரெண்டு பேருமேவா...சிரித்துவிட்டேன்

    போன வாரம் நடந்ததையும் சேர்த்துருக்கீங்க!!!!

    அது சரி எங்க சீன் இம்புட்டுத்தானா? இன்னும் நம்ம எபி கேரக்டர்ஸ் இடம் பெறுவாங்கன்னு தோணுது!

    கௌ அண்ணா என்று நடை சொல்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யாருடைய நடை கௌ அண்ணா என்று சொல்கிறது.
      இருங்க இந்த வார பகுதியை படிச்சிட்டு வரேன்.

      நீக்கு
    2. ஓஹோ வரதன் தேடிப் போகும் (நடக்கிற) மாடு - நடைப் பயிற்சி சென்றிருந்த நானா !

      நீக்கு
    3. ஹாஹாஹா கௌ அண்ணா!!!

      உங்களின் எழுத்து போலத் தெரியுதேன்னு!

      கீதா

      நீக்கு
  2. ஊரின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவர் ராமசாமி.//

    இவரைப் பற்றி அடுத்தடுத்த வரிகளில் வாசிக்கறப்ப ஏனோ இந்த வீரேந்திர ஹெகடே நினைவுக்கு வந்து தொலைக்கிறார். கதையில் இந்த ராமசாமி எப்படியோ? பார்க்க வேண்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கௌ அண்ணா, வீ ஹெ தானே இப்ப ஹாட் டாப்பிக்!!! தர்மஸ்தலா விஷயம் பத்திக்கிட்டு எரியுதே!!! தோண்டத் தோண்டப் பிணங்கள் அப்படினு ஹிஹிஹி பாருங்க நானும் தமிழ் பேப்பர்கள், சானல்கள் போல சொல்லியிருக்கிறேன்.

      கீதா

      நீக்கு
    2. ஓஹோ ! பார்க்கவேண்டும்.

      நீக்கு
  3. கேசரி, பஜ்ஜி, காஃபி//

    பொண்ணு பாக்கப் போறப்ப உள்ள மெனுவா இருக்கே!! ஹிஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பொண்ணு பாக்கப் போறப்ப உள்ள மெனுவா இருக்கே!!// அதே அதே!

      நீக்கு
    2. ஆஹா - நான் பொண்ணு பாக்கப்போனபோது வெறும்
      கேசரி மட்டும் கொடுத்து ஏமாத்திட்டாங்க.

      நீக்கு
    3. இப்பவும் இந்த மெனு இருக்கிறதா? நான் பெண் பார்க்கப் போகாததால் இவை கிடைக்கலை. இப்போ என்ன பண்ணறது?

      நீக்கு
  4. ராமசாமி நல்லவராகத் தெரிகிறார். அரசியல்ல நல்லவராக இருப்பது என்பது முள்ளின் மேல் நடப்பதானது. பார்ப்போம் இதனால் ராமசாமிக்குப் பாதகமா, நல்லது விளையுமா என்று.

    ப்ரச்சாரத்திலேயே கட்சியின் பணம் விளையாடப் போவது தெரிகிறது.

    நல்ல எண்ணத்துடன் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தனியாகச் சமூக சேவை ஆற்றலாம். அரசியல் தேவையே இல்லை. அந்த அளவிற்கு அரசியல் மேம்பட்டால் ஒழிய அரசியல்வாதிகள் பக்குவமடைந்தால் ஒழிய....இது சாத்தியமா என்றால் இப்போதைக்கு இல்லை.

    அப்படி கட்சிகள் நல்ல கட்சிகளாக இருந்திருந்தால் தர்மஸ்தலா பிரச்சனைகளுக்கு எப்பவோ நீதி கிடைத்திருக்க வேண்டும். இப்பவும் கூட கிடைக்குமா அந்த இடம் பாதுகாப்பாக மாறுமா என்பது கேள்விக்குறியே. ஏன்னா எல்லாக் கட்சிகளும் அந்த மனிதரிடம் கை ஏந்துகின்றன. எந்த ஒரு ட்ரஸ்டிலும் கோவிலாகவே இருக்கட்டும், பணம் அதீதமானால் இப்படித்தான். பள்ளிகளும் கல்லூரிகளும்.

    கதையில் அரசியல் வருவதால்...இப்படி எண்ணங்கள்.

    கண்டிப்பாக ஏதோ நடக்கவிருக்கிறது. ஊகிக்க முடிகிறது. ஒரு வேளை இக்கருத்தைப் பார்த்து அடுத்த வாரம் கதையில் மாற்றங்கள் வரலாம்!! ஹாஹாஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரசியலும் வந்துவிட்டதா? அப்போ
      எனக்கு இது அவுட் ஆஃப் சிலபஸ்.

      நீக்கு
  5. ஸ்கை என்பது யார் என்பது தெரிகிறது. என்றாலும் இங்கு அந்தக் குட்டை உடைக்கமாட்டேன்!!!

    ஆசிரியர்களே அப்புறம் உடைப்பாங்க என்று நினைக்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்கைதான் தான் யார் என்று சொல்லவேண்டும்.

      நீக்கு
  6. இப்போல்லாம் மூஞ்சில புதரோட வர்ற கதாநாயகன்களைப்
    பிடிப்பதில்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதே, அதே. எனக்கும் பிடிக்காது.
      ஆனால் இந்தப் பதிவில் இருக்கும்
      படம் வில்லன் என்று நினைக்கிறேன்.

      நீக்கு
    2. அப்ப வரதன் வில்லன்னு சொல்றீங்க.

      கீதா

      நீக்கு
    3. அப்ப இல்லை இப்ப

      நீக்கு
    4. துரை செல்வராஜு சார்... மூஞ்சீல புதரோடு வர்ற கதாநாயகன் - இப்போ அனேகமா எல்லா இளைஞர்களும் அப்படித்தான் இருக்காங்க (90 சதம்). கடவுளின் கருணை.. பெண்கள் அப்படி வருவதில்லை

      நீக்கு
  7. இன்றைய கதைப்பகுதி படித்தேன். கதையில் நிறைய சம்பவங்கள், ஒருவேளை பெரிய கதைக்காக அடிபோடுகிறாரா கதாசிரியர்?

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!