19.11.25

பணம் வாங்கிக்கொண்டு வாக்களிப்பதன் காரணம் என்னவாக இருக்கும்?

 

கேள்வி பதில்கள். 

நெல்லைத்தமிழன் : 

1. போட்டியிட்ட தொகுதிகளின் எண்ணிக்கையைக் கணக்கில் கொள்ளாமல், இந்தக் கட்சிதான் அதிக சதவிகித வாக்குகள் வாங்கியிருக்கிறது என்று சொல்வது சரியா? உதாரணமா, பீகாரில், தேஜஸ்வி யாதவின் கட்சி, தமிழகத்தில் ஸ்டாலினின் கட்சி   

# கூட்டணி கலாச்சாரம் வந்த பின் ஒரு தனிக்கட்சி யின் வாக்கு வலிமை சரியாகக் கணிப்பது இயலாது என்பது என் எண்ணம். உத்தேசமாக சரியாக இருக்கலாமோ என்னவோ தெரியவில்லை.

2. கொஞ்சம் வயதாகிவிட்டால், விமர்சனத்தைப் பொறுத்துக்கொள்ளும் மனநிலை குறைந்துவிடுகிறதா? ரொம்ப சென்சிடிவ் ஆகிவிடுகிறார்களா?  

# விமரிசனத்தை ஆக்க பூர்வமாக எடுத்துக் கொள்வது கஷ்டமான காரியம். வயது முதிர்ந்த நிலையில் அதை சகித்துக் கொண்டாலும் ஏற்றுக் கொண்டு திருத்திக் கொள்வது மிகக் குறைவு.

& கொஞ்சம் வயதாகிவிட்டால் என்றால் என்ன வயது? அஞ்சு வயதா! 👦

3.  நாம் பால் என்று வாங்குவது, நிஜமாகவே மாட்டுப்பால்தானா இல்லை செயற்கையாக உருவாக்கப்பட்டதா? அதாவது 30 சதம் பால், மீதி கலப்படம் என்று. நெய் வெண்ணெய் போன்றவற்றில் அதிக சதம் கலப்படம், வடநாட்டில் பால் ஸ்வீட்டுகளில் பெரும்பாலும் பாலின் சதவிகிதம் ஒரு சில சதவிகிதம்தான் மீதி துணிக்குப்போடும் சோப்பு போன்றவற்றின் கலப்படம் என்று படித்திருக்கிறேனே.  

# பல நாட்களாக என் மனதில் இருந்த சந்தேகத்தை நீங்கள் கேள்வியாகக்கேட்டு விட்டீர்கள். நாங்கள் வாங்கி உபயோகிக்கும் நந்தினி பால் அரசுத் துறையில் வாங்கி வழங்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கிறது. முக்கியமாக பாலாடையின் நிறம், ருசி, அடர்த்தி சில சமயம் விபரீதமாக மாறியிருக்கிறது. அரசுத் துறை என்பதால் நம்பிக்கை வைத்து வாங்கிக் குடிப்பது புத்திசாலித்தனமான செயல்தானா என்கிற ஐயம் எழுகிறது.

4. இப்போதெல்லாம் தெருவுக்கு ஒரு IVF எனப்படும் செயற்கைக் கருத்தரிப்பு மையங்களைப் பார்க்கிறேன். இதன் காரணம் என்னவாயிருக்கும்? (அந்த பிஸினெஸுக்கு இப்போ மௌஸ் ஜாஸ்தி என்று சொல்லித் தப்பிக்காதீர்கள்)   

# தரம் குறைந்த, கலப்படம் மிகுந்த உணவுப் பொருள்கள் என்பது மட்டுமே எனக்குத் தோன்றுகிற காரணம்.  சில சமயம் அடுத்த யுகம் ஆரம்பமாக இயற்கை மேற்கொள்ளும் முயற்சியின் அடையாளமோ என்று கூட நினைக்கத் தோன்றுகிறது.

5. கோயில்களில் கூட்டம், நம்பிக்கை அதிகம், ஆனால் வாக்களிப்பது பணம் வாங்கிக்கொண்டு அல்லது திருடர்கள் என்று தெரிந்தே வாக்களிப்பது என தமிழக வாக்காளர்களில் குறிப்பிடத்தகுந்த சதவிகிதம் மாறியுள்ளதன் காரணம் என்னவாயிருக்கும்?

# முதல் காரணம் மக்களில் பலரும் " எல்லாரும் ஒரே வகைதான். எனவே காசு தருபவருக்கு வோட்டைக்  கொடு " என்று நினைப்பதுதான்.‌ 

இரண்டாவது வோட்டின் முக்கியத்துவம் பெரும்பான்மையினருக்குத் தெரியாமல் இருப்பது.‌

மூன்றாவது யாரோ ஒருவருக்கு அல்லது ஒரு கட்சி அல்லது ஜாதிக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம். மூட பக்தி மேனியா.‌

& 'அரசியலில் எவனும் யோக்கியன் இல்லை. யாராக இருந்தாலும் பதவிக்கு வந்ததும் சம்பாதிக்கப் போகிறார்கள். நீ சம்பாதிக்க நான் வோட்டுப் போடவேண்டும் என்றால், நீ ஏதாவது பணம் கொடுத்தால், அதை வாங்கிக் கொண்டு உனக்கே வோட்டுப் போட்டுத் தொலைக்கிறேன். எப்படியோ போய்த் தொலையுங்கள்' என்ற எண்ணம் கூட காரணமாக இருக்கலாம்! 

= = = = = = = = = =

எங்கள் கேள்விகள். 

1) மனிதர்களுக்கு அடிப்படை தேவைகள், உடுக்க உடை, உண்ண உணவு, தங்கி வாழ இடம் ஆகிய மூன்று என்று சொல்வார்கள். உங்கள் பார்வையில், இந்த மூன்று அடிப்படை தேவைகளுக்குப் பிறகு அடுத்து முக்கியமான தேவைகள் என்னென்ன என்று வரிசைப் படுத்தவும் - குறைந்த பட்சம் அடுத்த மூன்று. 

2) இது இல்லாமல் என்னால் இருக்கவே முடியாது என்று நீங்கள் கருத்தும் ஒரு விஷயம் எது? 

= = = = = = = = 

படமும் பதமும் :

நெல்லைத்தமிழன் :


தில்லி இந்திராகாந்தி இண்டர்நேஷனல் விமான நிலையத்தில் பார்த்த யானைகளின் சிற்பம். அழகாக வடிவமைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் கண்ணைக் கவரும், படமும் எடுத்துக்கொள்வோம்.

அங்கிருந்து பெங்களூர் விமான நிலையம் வந்தால், அங்கு, நாங்கள் என்ன தில்லிக்குச் சளைத்தவர்களா? இங்கு சந்தன மரங்கள் அதிகம். அதனால் மரத்திலேயே யானைக் கூட்டத்தைச் செய்துவைத்துள்ளோம் என்பதுபோல, விமான நிலையத்தில் பார்த்தேன். மிக அழகாக இருந்தன. 


--------------  -----------


இந்த முறை ஸ்ரீ கிருஷ்ண அனுபவம் என்ற யாத்திரை சென்றிருந்தபோது, மாடு மேய்க்கும் சிறுவனாக கிருஷ்ணரும் பலராமரும் சறுக்கு விளையாடிய இடம் என்று பாறையில் சறுக்குபோல அமைந்திருந்த இடத்தைக் காண்பித்தார்கள். அந்த இடத்தின் அருகில் இருந்த வீட்டில் மிகப் பெரிய எருமையைப் பார்த்தேன். கறுப்பு நிறத்துடன் பளபளவென இருந்தது (மடுவுமே மிகவும் பெரிது)


இன்னொரு இடத்தில் யசோதை குழந்தைகளைக் குளிப்பாட்டிய குளம் என்று ஒன்றைப் பார்த்தோம். அப்போதே நல்ல மழை. அந்தக் குளத்தின் படிக்கட்டின் அருகே மழையைப் பொருட்படுத்தாமல் நின்றுகொண்டிருந்த பிரம்மாண்டமான பொலிகாளை. அதன் வசீகரம் என்னை ஈர்த்தது. அருகில் சென்றும் படமெடுத்தேன்.

பானுமதி வெங்கடேஸ்வரன் :


இங்கிருக்கும் நூல் நிலையம். (கனடா) 




குழந்தைகள் பிரிவில் சிறு குழந்தைகள் விளையாடுமிடம். 


வருகைக்கும்,வாசிப்பிற்கும் காத்திருக்கின்றன இருக்கைகளும், புத்தகங்களும். 

= == = = = = = = = = = = = = =

KGG பக்கம்: 

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கி.. 

சிறிய வயதிலிருந்தே எனக்கு துப்பறியும் கதைகள் என்றால் மிகவும் பிடிக்கும். நானும் பெரிய ஆளாக ஆனதும், துப்பறியும் நிபுணர் ஆகவேண்டும் என்று அடிக்கடி நினைப்பேன். 

துப்பறியும் திறனில் எனக்கு ஈடுபாடு வந்ததற்கு என்னுடைய இரண்டாவது மற்றும் மூன்றாவது அண்ணன்களும் முக்கிய காரணம். சில நிகழ்வுகளை அவர்கள் இருவருமே அலசி ஆராய்ந்து பல விஷயங்களை கூறுவார்கள். 

துப்பறியும் வேலை செய்ய எந்த காலேஜில் என்ன படிப்பு படிக்க வேண்டும் என்பது தெரியாததால், மூன்றாவது அண்ணன் படித்த பொறியியல் துறையையே (எங்க ஊர்ல அப்போ வேற கல்லூரிகள் கிடையாது!) நானும் தேர்ந்தெடுத்தேன். 

ஆனாலும் வேலை பார்த்த தொழிற்சாலையில், எனக்கு வாய்த்த சில projects என்னுடைய துப்பறியும் ஆர்வத்திற்கு தீனியாக அமைந்தது என்னுடைய அதிர்ஷ்டம் என்று சொல்லலாம்! 

நிற்க. 

நான் படித்த - து கதைகளில் அடிக்கடி யாராவது ' கொலை பற்றி துப்பு எதுவும் கிடைத்ததா ' என்று விசாரிப்பார்கள். 

துப்பு என்றால் என்ன என்று அடிக்கடி எனக்குத் தோன்றும். 

ரயில்வே நிலையங்களில், " இங்கே துப்பு " என்று ஒரு போர்டு எழுதி, ஒரு தொட்டி வைத்திருப்பார்கள். சிலர் அந்த போர்டு, தொட்டி எல்லாவற்றிலும் வெற்றிலை போட்டு மென்ற எச்சில் துப்பி மொழுகி வைத்திருப்பார்கள்! 


சரி - துப்பாக்கி, துப்பறிவது எல்லாம் வருகிறதே என்று ஒரு திருக்குறளை ஆராய்ந்தால் .. 

"துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை" என்ற குறளின் பொருள், உணவுப் பொருள்களை விளைவிப்பதுடன், பருகுவோருக்குத் தானும் ஒரு உணவாக இருப்பது மழையாகும் என்பதாகும். அதாவது, மழை நீரால் உணவுப் பயிர்கள் உருவாகின்றன, மேலும் அந்த மழையே அருந்துபவர்களுக்கு ஓர் உணவாகவும் பயன்படுகிறது. 
  • துப்பார்க்கு: உண்பவர்களுக்கு
  • துப்பாய: உணவாக இருக்கும் / தக்க உணவாக இருக்கும்
  • துப்பாக்கி: உணவை உண்டாக்கும் பொருள்களை
  • துப்பார்க்கு: பருகுபவர்களுக்கு
  • தூஉம்: தானும்
  • மழை: மழையாகும் 

இந்தக் குறள், வான்சிறப்பு அதிகாரத்தில் இடம்பெற்றுள்ளது, இது மழையின் முக்கியத்துவத்தை விளக்குகிறது. 

என்னுடைய அம்மா அடிக்கடி ' உப்பு அறி(?)ஞ்சயோ , துப்பு அறி(?)ஞ்சயோ ' என்று கூறுவார்கள். அதற்கு என்ன அர்த்தம் என்று இதுநாள் வரை எனக்குத் தெரியவில்லை. 

சில சமயங்களில் அவர்களே, என்னிடம், ' ஒரு வேலை சொன்னால் அதை ஒழுங்காக முடிக்கத் துப்பில்லையே உனக்கு என்பார்கள். 

எல்லோருக்கும் கடலை மிட்டாய் ஆளுக்கு ஒன்று என்று கொடுக்கும்போது, எனக்கு இரண்டு வேண்டும் என்று அடம் பிடிப்பேன் நான். அப்போ அம்மா, துப்பு கெட்டவனுக்கு இரட்டைப் பங்கு என்பார்கள். 

அக்பர் பீர்பால் கதை ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது. 

எல்லோரும் விருந்து உந்துகொண்டு இருந்தார்கள். 

அக்பர், தான் சாப்பிட்ட பேரிச்சம்பழங்களின் கொட்டைகளை பீர்பால் சாப்பிட்ட தட்டின் அருகில் ஒவ்வொன்றாக போட்டு விட்டு, அதை விருந்தினர்கள் எல்லோரிடமும் காட்டி, "இங்கே பாருங்க - துப்பு கெட்ட ஒருத்தர் நாம் சாப்பிட்ட பேரீச்சம்பழங்களில் இரட்டைப் பங்கு சாப்பிட்டிருக்கிறார்" என்று வேடிக்கையாக குறிப்பிட்டார். 

அதற்கு பீர்பால் மிகவும் அமைதியாக, " அது பரவாயில்லை மஹாராஜா - ஆனா இங்கே ஒரு பரக்காவெட்டி பேரீச்சம் பழங்களை கொட்டையோடு முழுங்கி வைத்துள்ளது" என்றாராம். 

------     ---------- 

நம்ம செ நு சொல்வது : 

துப்பு” என்ற தமிழ் சொல்லுக்கு பல அர்த்தங்கள் உள்ளன. பயன்பாட்டைப் பொறுத்து வேறுபடும்:

துப்பு – முக்கியமான பொருள்கள்

  1. சுடுதல் / துப்பாக்கி சுடுதல்

    • துப்பாக்கி துப்பு → Gun firing

    • சுடும் செயல்.

  2. துப்பல் / துப்புவது (Spit)

    • வாயில் இருக்கும் துப்பை வெளியே விடுவது.

  3. துப்புரவு / சுத்தம் செய்வது (Clean / dust-off)

    • வீடு துப்பு → வீட்டை சுத்தம் செய்.

  4. தேடுதல் / விசாரித்தல் (Search / investigate)

    • துப்பு வேலை → களவுத் தடயங்களைத் தேடும் வேலை.

  5. தூள் அல்லது நுண்துகள் (Fine dust / powder)

    • மணல் துப்பு → மணல் தூள்.

  6. சிறிய துளி / துளைத்த துளி (speck / tiny drop)

    • தண்ணீர் துப்பு → சிறிய துளி.

= = = = = = = = = = = = 


30 கருத்துகள்:

  1. கனடாவின் லைப்ரரிபடங்கள் கவர்ந்தன. நேற்று எங்கள் டவரின் (ஒவ்வொரு அடுக்குமாடி குடியிருப்பிலும் சில வசதிகள் உண்டு. எங்கள் டவரில் லைப்ரரி, யோகா ரூம், ஜிம் இருக்கின்றன. இது தவிர ஒவ்வொரு டவரிலும் விசேஷங்களைக் எஒண்டாட இடம் உண்டு) லைப்ரரிக்குச் சென்றோம். யார் இப்போதெல்லாம் ஒரு இடத்தில் அமர்ந்து புத்தகங்கள் படிக்கிறார்கள் என்று தோன்றியது. ஒருவேளை மனைவியின் தொல்லையைத் தவிர்க்க லைப்ரரிக்கு (அரசு அமைத்துள்ள) சென்றுவிடுகிறார்களோ என நினைக்கிறேன்.

    மாறி வரும் உலகில், லெப்ரரிக்கு இடம் இருக்கிறதா என்ன?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை...  இடம் இருக்கிறதோ இல்லையோ..  மறுபடி ஒரு எளிமையான லைப்ரரிக்கு செல்ல வேண்டும் என்கிற ஆசை எனக்குள் கொஞ்ச நாட்களாய் இருக்கிறது. 

      அதென்ன எளிமையான லைப்ரரி? 

      கன்னிமாரா, அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் போன்றவை பிரம்மாண்டமாய் பயமுறுத்துகின்றன.  எங்கு செல்வது, எதை, எப்படி எடுப்பது என்கிற தடுமாற்றம் இருக்குமே என்கிற தயக்கம்!

      நீக்கு
  2. உணவு, உடை, இருப்பிடம். அடுத்தபடியாக பொழுதுபோக்கு. இது தொலைக்காட்சி, ஓடிடி, திரைப்படங்களாக இருக்கலாம்). அடுத்தது பயணம். இது கோயில், புது இடங்கள், பார்க்காத பகுதிகள் என இருக்கலாம்). இதற்கு அடுத்துதான் நம் பசங்களின் குடும்பத்திற்கான உதவி என்று வரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொழுதுபோக்குக்கு ஒரு எளிய வழி, இனிமையான வழி...

      தூக்கம்!

      அழகாக பொழுது போய்விடும். நேரம் ஓடியதே தெரியாது!

      நீக்கு
    2. இதுல ஒரு சிக்கல் இருக்கு ஶ்ரீராம். நம் உடம்புக்கு இவ்வளவுதான் ரெஸ்ட் என இருக்கும். பகலில் நன்கு தூங்கினால் ராத்திரி தூக்கம் வராது இல்லை அகாலத்தில் முழிப்பு வரும். நம் தூங்கும் ஓய்வெடுக்கும் சுழற்சி பாதிக்கும். ரொம்ப வயதானவர்கள் மிக அதிக நேரம் தூங்குவதைக் கண்டிருக்கிறேன், குழந்தைகள் போல

      நீக்கு
    3. சித்திரமும் கைப்பழக்கம்; நித்திரையும் கண பழக்கம்!!! 

      பழகிடும் நெல்லை. 

      கொஞ்சம் பழகிட்டா அனாயாசமா தூங்கலாம்!!!!

      நீக்கு
  3. துப்பு கெட்டு துப்பை ஆராய்ந்திருக்கிறாரோ கௌதமன் அவர்கள்? துப்பறியும் பணி புரிபவர்கள், புலனாய்வுப் பத்திரிகைகளில் பணி புரிந்து புலனாய்வு செய்பவர்கள், தங்களுக்குக் கிடைக்கும் ஊதியம் தவிர, அறிந்துகொண்ட ரகசியங்களை வைத்து அநியாயமாகச் சம்பாதிப்பதுதான் அதிகம் என்ற எண்ணம் எனக்குண்டு. நல்லவேளை.. அந்தப் பாவத்தைச் சம்பாதிக்கும் வாய்ப்பு கேஜிஜி அவர்களுக்குக் கிடைக்கவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யார் யாரெல்லாம் துப்பி இருக்கிறார்கள் என்று அறிவதுதான் துப்பறிவது இல்லையா?  துப்பு துலக்குவது பற்றி பஞ்சதந்திரம் படத்தில் கமல் பேசும் டயலாக் நினைவிருக்கிறதா?

      நீக்கு
    2. சமீபத்தில் நெல்லையில் தங்கியிருந்த ஹோட்டலில் பஞ்சதந்திரம் பட நகைச்சுவைக் காட்சிகளை மீண்டும் கண்டு ரசித்தோம். இந்த டயலாக் நினைவில்லை

      நீக்கு
    3. பிணம் என்று நினைத்ததை பாலத்தினடியில் போட்டு விட்டு வந்து கான்பரன்ஸ் காலில் பேசுவார்கள் இல்லையா?  அந்தக் காட்சியில் கமல் சொல்வார்.

      நீக்கு
    4. @நெல்லை://துப்பு கெட்டு துப்பை ஆராய்ந்திருக்கிறாரோ கௌதமன் அவர்கள்?//என்ன இப்படி சொல்லி விட்டீர்கள்? துப்பு(திறமை) இருப்பதால்தான் இந்த ஆராய்ச்சி சாத்தியமாகியிருக்கிறது.

      நீக்கு
    5. முன்பு குமுதத்தில் 'பொழுது போகாத பொம்மு' என்று ஒரு பகுதி வரும், நினைவு இருக்கிறதா?

      நீக்கு
    6. // /துப்பு கெட்டு துப்பை ஆராய்ந்திருக்கிறாரோ கௌதமன் //

      ஹிஹிஹி எனக்கும் கொஞ்சம் உறுத்தியது என்பதை சொல்லலாமா வேண்டாமா என்று பார்க்கிறேன் (இந்த பாணிக்கு நன்றி செல்லப்பா ஸார்) 

      வாங்க பானுக்கா...'பொழுது போகாத பொம்மு' பாமா கோபாலன் - வேதா கோபாலன் கைங்கர்யம் - எடிட்டர் யோசனையில்.  நான் இதை வெட்டி அரட்டை என்று வியாழனில், சமயங்களில் பேஸ்புக்கிலும் சொல்கிறேன்!

      நீக்கு
  4. நெல்லையின் படங்கள் ஏற்கனவே பகிரப்பட்டுவிட்டன என நினைவு. ஶ்ரீராம் தில்லி விமானநிலையம் படம் தவிர மற்றவற்றை வெளியிட்டுவிட்டார் என நினைக்கிறேன் (கேஜிஜி காணாமல்போனபோது)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட..  ஆமாம்...  நீங்கள் கூட தொடர்ச்சியில் ஒரு படம் விட்டுப் போனதாகக சொல்லி இருந்தீர்கள்!

      நீக்கு
  5. இது இல்லாமல் இருப்பது கடினம்... 1. எப்படியாவது 10,000 ஸ்டெப்ஸ் தினமும் நடப்பது. கடந்த 950 நாட்களாகத் தொடரும் விஷயம் இது. நான் அடிக்கடி பயணிப்பவன், பல யாத்திரைகளில் காலை ஐந்து மணிக்கே கிளம்பணும், சில நேரங்களில் ஒரு நாள் முழுவதும் இரயில் பயணம், இதற்கிடையில் உடல்நிலை சரியில்லாமல் போகும் வாய்ப்பு... இதையெல்லாம் மனதில் வைக்கவும்.

    2. உணவுக்குப் பின் இனிப்பு. அன்றைய முக்கிய உணவுக்குப் பின் இனிப்பு சாப்பிடணும். அது காலை உணவோ மதியமோ இல்லை இரவோ, ஏதோ ஒன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடா... இரண்டுமே என்னால் தொடர்ந்து செய்ய முடியாதது!

      நீக்கு
  6. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.....

    கேள்வி பதில்கள் நன்று..... காசுக்கு ஓட்டு - நிதர்சனம்.

    படங்களும் நன்று..... நூலக படம் மனதைக் கவர்ந்தது .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வெங்கட்...   போண்டா சாப்பிட்டுக்கொண்டே எங்களை மேய்ந்து விட்டீர்கள் போல....  ஹா..  ஹா..  ஹா...

      நீக்கு
    2. அவர் போண்டா பற்றி முகநூலில் காலையில் எழுதினாரா? நம்ம செயல்கள் எல்லாம் பிறருக்குத் தெரியும் என்பதால்தான் கணிணி துறையில் இருந்தபோதும் சோஷியல் மீடியா பக்கமே வரலை)

      நீக்கு
    3. அவர் தளம் சென்று பார்க்கும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன்!

      :))

      நீக்கு
  7. கேள்விகளும், பதில்களும் மிக அருமை.
    காசுக்கு ஓட்டு என்றாலும் யார் கொடுத்தாலும் வாநி கொண்டு தனக்கு பிடித்தவருக்கு ஓட்டு போடும் ஆட்களும் உண்டு.
    படமும் பதமும் படங்களும் அந்த படம் பற்றிய செய்திகளும் அருமை.

    கெள்தமன் சாரின் துப்புக்கு விளக்கம் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டது நன்றாக இருக்கிறது.

    என்னை பொறுத்தவரை துப்பு திறமை என்று தான் அர்த்தம்.
    ஏன் என்றால் துப்பு கெட்டவன், துப்புஇல்லை என்ற சொற்களை கேட்டு கேட்டு ஒரு செயலை சரியாக செய்ய முடியாதவர்களை அப்படி சொல்லி திட்டுவதால் நான் நினைக்கிறேன்.
    துப்புரவு செய்பவர், நன்றாக சுத்தம் செய்பவர்.
    துப்பு க்கு படமும் விளக்கமும் அருமை. இங்கே துப்பு என்பதில் சரியாக துப்புகிறார்கள் என்றால் நல்லதுதான், கண்ட இடத்தில் சிவப்பு சிவப்பாக துப்பாமல்.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி அக்கா...  துப்பு என்பதற்கு திறமை என்று பொருள் வரும் என்றுதான் நானும் நினைத்தேன்.   நன்றி கோமதி அக்கா.

      நீக்கு
  8. வயதாகிவிட்டால் விமர்சனம்... பதில் சரியாகத் தோன்றவில்லை. சின்ன வயதில் பெரியவர்கள் விமர்சனம் செய்தால் கடுப்பாக இருக்கும், மனதுக்குள் இவரென்ன யோக்கியமோ எனத் தோன்றும். அதற்குமேல் வேறு எண்ணம் வராது. இங்கு வயதாவது என்பது மற்றவர்களைச் சார்ந்து இருக்கும் வயது அல்லது ஐம்பதுக்கு மேல். அப்போ சிறிய விமர்சனங்களையும் பொறுத்துக்கொள்ள முடியாது. சாஃப்டா விமர்சனம் இல்லைனா ரொம்ப கடுப்பாயிடுவாங்க. (குழம்பு இன்னைக்கு கொஞ்சம் காரம். பிடிக்கலை...... ஆமாம். குழம்பு நல்லா இருந்தபோது எப்போ பாராட்டியிருக்காரு. குறை சொல்ல மாத்திரம் தெரியுது. நீங்க அவதானித்தால் தெரியும். விமர்சனத்தை நமக்குப் பொறுத்துக்கொள்ள முடியலை என்றால் நமக்கு வயதாகிவிட்டது என்று)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விமர்சனத்தை சரியான முறையில் எடுத்துக் கொள்பவர்கள் என்னையும் சேர்த்து! மிகவும் குறைவு - ஹிஹிஹி...

      நீக்கு
  9. துப்பு போலவே தவறாகப் புரிந்துகொள்வது, அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு என்பதில் பயிர்ப்பு என்பதன் அர்த்தம். தன்னைச் சாராதவர்கள் தன் மேல் பட்டால் ஏற்படும் அசூயை, பயிர்ப்பு என நினைக்கிறேன். கூட்டமான இடங்களில் செல்ல நேரிடுவதால் பயிர்ப்பு இப்போ பெண்களிடத்தில் உயிர்ப்போடு இருக்காது என நினைக்கிறேன். ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறிப்பாக நடிகைகளிடம்! 

      ஆனால் இதற்கான பொருள்கள் வாட்சாப் தகவல் போல பல தகவல்கள், பொருள்கள் சொல்லப்பட்டு கொண்டே இருக்கும்.  தொல்காப்பியரையும் அகதியரையும்தான் எது சரி என்று கேட்கவேண்டும். 

      அகத்தியர் சிரஞ்சீவியாம்..  எங்காவது கண்ணில் படுகிறாரா என்று பாருங்கள். 

      சிரஞ்சீவி என்றதும் ஆந்திரா பக்கம் போகாமல் இருந்தால் சரி!!

      நீக்கு
  10. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  11. உங்கள் கேள்விகளுக்கு என் பதில்:
    1.கல்வி, வருமானம்,நல்ல குடும்பம்(வாழ்க்கைத் துணை+குழந்தைகள்)
    2. புத்தகங்கள், செல்ஃபோன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "நல்ல மனைவி நல்ல பிள்ளை நல்ல குடும்பம் தெய்வீகம்" பாடல் நினைவுக்கு வருகிறது!

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!