19.2.26

க்யா ரங்கு லாயி மேரி துஆ....

 

சில வருடங்களுக்கு முன்னர் சென்னையில் ட்ரேட் சென்ட்டர் சென்றிருந்தபோது இந்த வகை 'டேபிள்மேட்' பார்த்தேன்.  முந்தைய வகை சற்றே சாய்வாகவும் பலவீனமாகவும் இருந்ததால் அப்படி இல்லாமல் இது  நன்றாக இருந்தது. எனவே வாங்கி விட்டேன்.  வாங்கும்போதே இரண்டு வாங்கினேன்.  ஒன்று பொது உபயோகத்துக்கு, இன்னொன்று வரலக்ஷ்மி பூஜையில் அம்மன் முகம், கலசம் வைத்து பூஜை செய்ய வசதியாகவும்.



இதில் ஐந்து நிலைகள் உண்டு.  படத்தில் பார்ததால் முதலிரண்டு நிலைகள் இடையே பெரிய வித்தியாசம் தெரியாது.  நேரில் தெரியும்.  மனைப்பலகை போலிருப்பதிலிருந்து ஒவ்வொரு நிலையாக ஏற்றலாம்.

ஆண்டுகள் கடந்தபின் வீட்டின் தேவைக்கு மேலும் இரண்டு தேவை என்று தோன்றியது.  இதில்தான் மகன்கள், மருமகள் வீட்டிலிருந்து வேலை பார்க்க லேப்டாப் வைக்க வசதியாக இருந்தது.  வீட்டுக்கு ஒரு வயதான உறவு வந்தபோது, இதில் தட்டு வைத்து சாப்பிட்டு விட்டதால் வரலக்ஷ்மி பூஜைக்கு இதை எடுக்க முடியவில்லை.  பாஸ் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு!  எனவே இரண்டு.  அண்ணன் ஒன்று கேட்டிருந்தார்.  நண்பர் ஒருவரும் ஒன்று கேட்டிருந்தார்.  எனவே ட்ரேட் சென்ட்டர் சென்றபோது இவர் கடையைத் தேடி ஐந்து 'மடக்குமேஜை'க்கு சொல்லி வந்தேன்.  சொன்னபடி பாய் மறுநாள் காலை வீட்டில் கொண்டு வந்து போட்டு விட்டு காசு வாங்கிச் சென்றார்.

இதுவரைக்கும் எல்லாம் சரிதான்.  இப்போது பிரச்னை பாஸ் ரூபத்தில் வந்தது.  பாஸ் தன் வழியில் அவர் செய்ய கடமைப்பட்ட நெருங்கிய உறவொன்றின் பிறந்தநாளுக்கு இதை ஆர்டர் செய்யச் சொன்னார்.  முதலில் தயங்கி, தேவையா என்று யோசித்து, பின்னர் ஆர்டர் கொடுத்தேன்.  பாய் உற்சாகமானார்.  ஜி பே பண்ணச் சொன்னார்.  அதன் விலை இரண்டாயிரத்து ஐநூறு.  ட்ரான்ஸ்போர்ட்டுக்கும் சேர்த்து இரண்டாயிரத்து அறுநூறு கேட்டார்.  பேரம் பேசி இரண்டாயிரத்து நாநூறுக்கு முடித்தேன்.ஜி பே செய்தேன்.  தொடங்கியது தொல்லை.  மறுநாள் கொண்டு வந்து போடுவேன் என்று சொன்னவர், போடவில்லை.  அதற்கடுத்த நாளும் வரவில்லை.  போன் செய்தபோது எனக்கும் இன்னும் சிலருக்கும் சேர்த்து பத்து ம ம அனுப்பியதாகவும் அவர் கொடுத்தனுப்பிய ஆள் 'போலீஸ் பிடித்துக் கொண்டது, அபராதம் கட்டவேண்டும் என்று சொன்னதாகவும், அப்புறம் அப்படியே ஏமாற்றி ஓடி விட்டதாகவும் சொன்னார்.

"ஸாரி..  கஷ்டம்தான் உங்களுக்கு..  ஆனால் எனக்கு எப்போது தருவீர்கள்?" என்று கேட்டேன்.  "ஆலிக்கு ஆலி விசாரம், போலிக்கு போலி விசாரம்..  புல்லகூற வாடிக்கி புல்லகூற விசாரம்" என்பது போல! 

"நீங்கள் அனுப்பியது இரண்டாயிரத்து சொச்சம்.  என்னை  ஏமாற்றி விட்டு டெலிவரி ஆள்  எடுத்துச் சென்ற வகையில் எனக்கு இருபத்தைந்தாயிரம் நஷ்டம்" என்றார்.  இரண்டு நாள் பொறுத்துக்குங்க என்றார்.  இரண்டு நாளாச்சு பொருள் வரவில்லை.  போன் செய்தால் டென்ஷனா இருக்கேன்..  அப்புறம் போன் பண்ணுங்க என்றார்.  கோபம் வந்ததது.  சூடான உரையாடல்கள் பகிரப்பட்டன.  ஞாயிறுக்குள் கொடுப்பேன் என்று சொன்ன அடுத்த தவணையும் தாண்டியது.  போன் செய்தால் எடுக்கவில்லை.  வாட்ஸாப்பில் கடித்தேன்.  தான் போலீஸ் ஸ்டேஷனில் இருப்பதாக தெரிவித்தார்.  ஜெயிலில் இருப்பதாக சொன்னார்.  என்ன விவரம் என்று கேட்டால், ரேஷ் டிரைவிங் என்றார்.    குடித்து விட்டு ஓட்டி மாட்டிக் கொண்டதாய் முன்னுக்குப் பின் முரணாக சொன்னார்.  ஜெயிலில் உனக்கு போன்லாம் தருகிறார்களா என்று கேட்டேன்.  பயனில்லை.  கட் செய்து விட்டார்.

நான் நம்பிக்கையிழந்தேன்.  இனி அவ்வளவுதான் என்றாலும் முயற்சியைத் தொடர்ந்தேன்.  என் போனை எடுப்பதைத் தவிர்த்தார் பாய்.  பதினைந்து லட்சம் ஒரு நாயிடம் ஏமாந்திருக்கிறோம்.  இது ஒரு இரண்டாயிரத்து நானூறு ருபாய் என்ற முடிவுக்கு வந்தேன்.  ஆனாலும் விடாமல் துரத்தினேன்.  கடைசியில் வெறுத்துப்போய் கொஞ்சநாள் சும்மா இருந்தேன்.

ஒருநாள் அவரிடமிருந்து மெசேஜ் வந்தது.  பொங்கல் அன்று உங்கள் வீட்டில் டெலிவரி செய்து விடுகிறேன் என்றார்.  இவ்வளவு நாள் பொறுத்துக் கொண்டதற்கு இரண்டு டேபிளாய் தந்து விடுகிறேன் என்றார்.  முதலிலேயே அப்படி வாக்கும் கொடுத்திருந்தார்.



பொங்கலன்று நானே மறந்திருந்த நேரம் வந்து கொடுத்து விட்டுச் சென்று விட்டார்.  இரண்டு ம மே கொடுக்கவில்லை.  ஒன்றுதான்.  'இதாவது வந்ததே' என்று தோன்றினாலும் அவரே சொல்லி இருந்த காரணத்தினால் இரண்டு தருகிறேன் என்றீர்களே என்று கேட்டேன்.  கட்டுப்படியாகாது ஸார்...   ஆனாலும் ஆயிரம் ரூபாய் பெறுமானமுள்ள இந்த ஸ்டூல் தருகிறேன் என்று கொடுத்து விட்டுச் சென்றார்.   மடக்கி விட்டால் சப்பாத்தி தேய்க்கும் கல்லை விட கொஞ்சம் பெரிய உருளையாக இருப்பதைப் பிரித்தால் எங்கு வேண்டுமானாலும் போட்டுக்கொண்டு ஒரு ஆள் உட்காரும் அளவு சிறிய ஸ்டூல்.  முன்னரே வந்திருந்தால் புத்தகக் கண்காட்சியில் கால் வலித்து உட்கார இடமில்லாமல் இருந்தபோது இதை எடுத்துச் சென்று நினைத்த இடத்தில் போட்டு அமர்ந்து ஃபிலிம் காட்டி இருக்கலாம்.

இப்படியாகத்தானே அவர் நல்லவராக மாறினார்.  எல்லாம் ஒரு அனுபவம்தான்!  

இதைதான் இரண்டு வாரங்களுக்குமுன் ஒரு வெள்ளியில் படம் போட்டு இது என்ன என்று கேட்டிருந்தேன்.  கீதா மட்டும் பதில் சொல்லி இருந்தார்!

==========================================================================================

ஒரே இடத்தில் நின்று 
அலுத்த மரமொன்று
நகரும் முயற்சியில் 
இலைகளை சிலிர்த்துக்கொண்டிருக்க
நண்பனுக்கு உதவ வந்த 
தென்றல் புயலானது. 
பெயர்ந்த வேரால்
விழுந்த மரத்தின் அருகில் 
விசாரிக்க வந்தன 
அதில் வசித்த 
இரண்டு பறவைகள் 
'இயல்பை மீறி 
நடக்க முடியுமா?' 
வருத்தம் தெரிவித்து
வேறு வீடு தேடி
நகர்கின்றன
வீடிழந்த பறவைகள்.


புரியாத 
இரண்டு விஷயங்கள் 
எப்போதுமே சுவாரஸ்யம்தான் 
காதலையும் 
கடவுளையும்தான் சொல்கிறேன்!

========================================================================================

படைப்பாளிகளுக்கு காசு....  பேஸ்புக்கிலிருந்து...

படைப்பாளியைச் சுரண்டிக் கொழுக்கும் பதிப்பகத்தார்கள்!
சமூகம்

படைப்பாளியைச் சுரண்டிக் கொழுக்கும் பதிப்பகத்தார்கள்!
-எழில் முத்து

தமிழ்நாட்டில் பதிப்பகங்களுக்கு பஞ்சம் இல்லை. ஆனால், அதில் நேர்மையாக எழுத்தாளனுக்கு பணம் கொடுப்பவர்களுக்கு தான் பஞ்சமோ பஞ்சம்! உச்சபட்ச பித்தலாட்டமும், சுரண்டலும் நிலவும் துறைகளில் பதிப்பகத் துறை முக்கியமானது. சொன்னால் நம்பமாட்டீர்கள், பல அறிவாளிகளை எல்லாம் அதோகதிக்கு ஆளாக்கியுள்ளார்கள்!
நல்ல வேளையாக எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு நேர்மையான மீனாட்சி புத்தக நிலையத்தார் அமைந்தனர்! இந்த பதிப்பகம் வருடம்தோறும் ஜே.கேவுக்கு லட்சக்கணக்கில் ராயல்டி கொடுத்தனர். அவர் இறந்த பிறகும் விற்பனையில் 15% ராயல்டி இன்றும் தந்து வருகின்றனர்.
ஆனால், பிரபல எழுத்தாளர் சுஜாதாவிற்கு அப்படி அமையவில்லை.மென்மையான சுபாவமும், யாரையும் எளிதில் நம்பிவிடுபவருமான அவர் மிகவும் ஏமாற்றப்பட்டார்! அவர் புத்தக விற்பனையை நம்பி இல்லாததால் கொஞ்சம் அசால்டாக இருந்து விட்டார். ஆனால், அவர் மறைவுக்கு பிறகு அவர் குடும்பம் அதிரடியாக தங்களை ஏமாற்றி வந்த அந்த பதிப்பாளரிடமிருந்து முற்றிலும் விலகி, தற்போது ஒரு நல்ல பதிப்பகத்தை பார்த்து பதிப்பு உரிமை தந்துள்ளனர். எழுத்தாளர்கள் சோ.தர்மனும், கி.ராவும், சாரு நிவேதிதாவும், சிவனும் கடந்த காலங்களில் தங்களின் ஏமாற்றங்களை பொதுவெளியில் பகிர்ந்துள்ளனர்.
இதே போல பிரபல எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனும் கடுமையாக ஏமாற்றப்பட்ட நிலையில் தனியாக பதிப்பகம் ஒன்றை ‘தேசாந்திரி’ என்ற பெயரில் தானே நிறுவிக் கொண்டார். இந்த லிஸ்டில் எழுத்தாளர்கள் தமிழ்மகன், சுகிசிவம், நக்கீரன், விமலாதித்த மாமல்லன்… போன்ற நிறைய பேரைக் குறிப்பிடலாம்!
பிரபல பத்திரிகையாளர் மணா அவர்கள் எழுத்தாளர்களை பதிப்பகத்தார் எப்படி எல்லாம் சுரண்டிக் கொழுக்கிறார்கள் என அவ்வப்போது தன் முகநூலில் எழுதியுள்ளார்.
எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய அறம் நூலில் ஒரு எழுத்தாளன் ஏமாற்றப்பட்டு போராடி வென்ற கதையை மிகுந்த உணர்ச்சி பெருக்குடன் எழுதி இருப்பார். அந்த கண்ணீர் நிலையில் தான் இன்றும் பல படைப்பாளிகள் உள்ளனர்.
பிரபல எழுத்தாளர் ஜீவபாரதி தன் நூல்களை ஒரு இடதுசாரி இயக்க பதிப்பகத்திற்கு தான் ஆரம்பத்தில் கொடுத்தார். ஆனால், அவர்களிடம் ராயல்டியை பெறுவதற்கு ”தீக்குளித்து போராடுவேன்..”என்ற அளவுக்கு செல்ல வேண்டியவரானார். அதன் பிறகும் அவர் வேறு சில பதிப்பாளர்களுக்கு தந்து ஏமாற்றமடைந்த நிலையில் தற்போது தான் ஓரளவு சரியான ஆட்களைக் கண்டடைந்துள்ளார். சுமார் 100 நூல்களுக்கு மேல் படைத்துள்ள கவிஞர், தோழர் ஜீவபாரதியிடம் பேசிய போது,
”பதிப்பாளர், படைப்பாளர் உறவு குறித்து என்ன சொல்வது? தற்போது என்னைப் பொறுத்தவரை சரியான முறையில் நடந்துகொள்ளும் பதிப்பாளர்களிடமே எனது படைப்புகளை தருகிறேன். அவை பல பதிப்புகள் கடந்தும் வருகின்றன. குறிப்பாக எனது நூல்களை வெளியிடும் குமரன் பதிப்பகம் மாதந்தோறும் ராயல்டியாக ௹.3000 தருகிறார். அதே போல் எனது தோழரும் பதிப்பாளர் ஜீவா பதிப்பகம் ராயல்டி-க்கு அதிகமாகவே தருகிறார். இதனை பிற பதிப்பாளர்களும் ராயல்டி தொகை விஷயத்தில் நடந்துகொண்டால் நல்லது” என்றார்.
இது குறித்து இந்த வரிசையில் ஆய்வு நூல்கள் 25-க்கு மேல் படைத்த எழுத்தாளர் குமரவேல் நம்மிடம் பேசும்போது,” பிரஸ், பைண்டிங். விற்பனையாளர்கள் யாருக்கும் பாக்கி வைக்க முடியாது – ஏமாத்த முடியாது. ஏமாத்துனா அடுத்த வேலை நடக்காது. அவங்களையும் கூட ஏமாற்றி அடுத்த பிரஸ்ல மாற்றி அச்சடிக்கும் பிராடு பதிப்பகங்களும் உள்ளன!
நீங்களே பாருங்க, சம்பாதிக்காமலா பதிப்பகத்தார் காரு, பங்களான்னு இருக்கிறாங்க. பதிப்பாளர்கள் நல்லா இருக்கட்டும். மகிழ்ச்சி. ஆனால், தாங்கள் நல்லா இருப்பதற்கு அடித்தளமிட்ட எழுத்தாளரை பொருளாதாரத்தில் என்றைக்கும் அடித் தளத்திலேயே அழுத்தி வைக்கலாமா? ஒரு பழமொழி உண்டு’ பதிப்பாளர் கார்லே போறான், படைப்பாளி இன்னும் நடந்துதான் போறான்’
நான் எழுதிய ஒரு நூலில் பல லட்சம் பார்த்தார் ஒரு பதிப்பாளர். எனக்கு ஒரு லட்சம் கூட தராமல் வெறும் பத்தாயிரம் தான் கொடுத்தார். மேலும் கூடுதலாக ஒரு பத்தாயிரத்தை வாங்குவதற்குள் 4 ஆண்டுகள் ஆகிவிட்டது.
அண்ணா, கலைஞர். / டைரி விற்பனையில் உலகம் முழுக்க வியாபித்துள்ள ஒரு நிறுவனம் எனது நூலுக்கு 50 ஆயிரம் தர வேண்டிய நிலையில், வெறும் பத்தாயிரம் மட்டுமே கொடுத்தது.
எனது நூலைப் பதிப்பத்த பதிப்பாளர்-பெரிய நட்சத்திரப் பேச்சாளர்கள். எழுதாளர்கள் – அதிகாரிகளின் நூல்களை போடக்கூடிய வியாபாரி என்னுடைய 1,500 பக்கமுள்ள எம்.ஜி.ஆர் ஆய்வு நூல் வெளியிட்டார். நூலக ஆணையும் பெற்றுள்ளார். ஆனால், எனக்கு இன்னும் 5 சதம் கூட ராயல்டி தரவில்லை.
எனவே, பெரிய பதிப்பாளர்களை எதிர்பார்க்காமல் மாற்றுப்பாதையில் பயணிக்க வேண்டும். புதிய பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். எனது மனதில் பட்டது, என்னவென்றால் ஒரே பதிப்பகம் வெவ்வேறு பெயர்களில் கடைகள் எடுப்பதை கட்டுப் படுத்த வேண்டும். ஒரு சிலர் எட்டு முதல் 10 கடைகள் வரை எடுக்கிறார்கள்! இரண்டு கடைகள் அல்லது நான்கு கடைகள் மட்டுமே ஒதுக்க வேண்டும்” – என நீண்ட ஆதங்கத்தை வெளியிட்டார்.
இன்றையச் சூழலில் பதிப்பாளர்கள், படைப்பாளர்களை மூன்று விதமாக அணுகுகிறார்கள்.
1 . ஆண்டுதோறும் புத்தக விற்பனை, அரசு நூலக ஆணை மூலம் விற்கும் தொகையில் 5% முதல் 15% வரை எழுத்தாளர்களைப் பொருத்து வழங்கிறார்கள்.
2 .அவுட்ரேட் முறையில் ஒரே முறையாக ரூ5,000 தொடங்கி 15,000 வரை தந்து விடுவார்கள்! அதற்கு பிறகு, அதனை எத்தனை பதிப்பு போட்டார்கள், விற்றார்கள் என எழுத்தாளர் கேட்க முடியாது.
3 .ஃபார்ம்-க்கு இவ்வளவு என்று – அது௹.250-ல் தொடங்கி அதிக பட்சம் 400 /- வரை வழங்குவது. இதுவும் ஒரே முறையோடு பணம் கொடுத்து முடிசிடறது. அதுக்கு மேல பல பதிப்புகள் போட்டு எவ்வளவு வேணா சம்பாரிச்சுக்குவாங்க!
இது சம்பந்தமாய் முறையான அக்ரிமெண்ட் பலரும் போடுவதாய் தெரியவில்லை. சிலர் தங்கள் மனோதர்மத்தை கடைப்பிடிக்கிறார்கள் என்பதையும் ஒத்துக் கொள்ள வேண்டும்.
மொத்தத்தில் குழுமனப்பான்மையை கைவிட்டு ஆசிரியர் பதிப்பாளர் உறவு நல்லுறவாக மாற முயற்சி எடுத்தல் வேண்டும்.
ஆயிரம் படைப்புகள் மலரட்டும் அவற்றை படைப்பவர் வாழ்வில் ஒளிவீசட்டும்.
நன்றி: அறம்

பகிர்ந்திருந்த R. கந்தசாமி ஸாருக்கு நன்றி.

================================================================================================

விகடன் ஆசிரியர் திரு எஸ் எஸ் பாலன் பற்றி...

கதை, தொடர்கதை, கட்டுரை, ஜோக் எழுதிய எழுத்தாளர்களுக்கு மட்டும் அவர் வாரிக் கொடுக்கவில்லை...
விகடன் ஊழியர்களுக்கும் ‘சுவையான’ சம்பளம் கொடுத்து, பரிசுகள் கொடுத்து வாழ்த்தியவர் எங்க முதலாளி வாத்தியார்.
ஆம்... 1993-ல், ஒரு நாள் எடிட்டோரியல் ஊழியர்களை அழைத்தார். “உங்களுக்கு தற்சமயம் ‘கல்கண்டு’ போல ஒரு சிறு தொகையை சம்பளத்தோடு வழங்குகிறேன். வாயில் ஒதுக்கிக் கொள்ளுங்கள். அடுத்து வரும் ஆறு மாதங்களில் உங்கள் செயல் திறன் கவனிக்கப்பட்டு அதற்கு ஏற்றார் போல சம்பளம் கூட்டப்படும்!” என்று அறிவித்தார்.
ஆறு மாதம் முடிந்தது. பல பேரை நிரந்தர ஊழியர்களாக மாற்றினார். பல பேருக்கு பதவி உயர்வையும்... புதிய பதவிகளையும் அளித்து கெளரவித்தார். ‘கல்கண்டின்’ மகிமையை இன்னமும் சுவைத்துக் கொண்டு இருக்கிறோம். எடிட்டோரியலில் சிறந்த கட்டுரை எழுதியவர்களுக்கு தனி கவரில் 1000, 2000... 5000 வரை அளித்திருக்கிறார்.
‘வடவீர பொன்னையா’ என்ற புனைப்பெயரில் நான் எழுதிய ‘வருச நாட்டு ஜமீன் கதை’க்கு எங்க வாத்தியார் கையால் ‘ஒரு லட்ச ரூபாய்’ பெற்ற கதையைச் சொல்கிறேன்...
அப்போது நான் வெறும் புகைப்படக்காரன்தான். நான், ‘ஜமீன் கதை’யை எழுதக் காரணமாக இருந்த முக்கிய தளகர்த்தாக்கள்...
ஆசிரியர் பாலசுப்ரமணியன், மதன், ராவ், வீயெஸ்வீ, கே.அசோகன், ரா.கண்ணன், உபைதூர், ஓவியர் சசி...மற்றும் தேனி மாவட்ட மக்கள்!
நான் வெள்ளைத்தாளில் எழுதிக் கொடுத்த முதல் அத்தியாயத்தைப் படித்துவிட்டு, ‘சக்சஸ்!’ என்று கைகொடுத்துப் பாராட்டி ஊக்கம் கொடுத்தவர் கே.அசோகன்.
ஜூ.வி.யில் 45 வாரங்கள் தொடர்ந்து நடுப்பக்கத்தில் இந்தக் கதையை வெளியிட்டு எனக்குச் சிறப்பு சேர்த்தார் நம்ம ஆசிரியர்.
சில அத்தியாயத்தை அவர் படித்துவிட்டு என்னிடம் பேசிய பழங்கதைகளை தனி புத்தகமாகவே போடலாம்.
என்ன காரணத்தாலோ தெரியவில்லை...7ஆவது அத்தியாயம் வெளிவந்த போது, வடவீர பொன்னையா எனும் கிழவன்(ஆம். அப்படித்தான் ஒன்னு போல நினைத்திருக்கிறார்கள்!) யாரென்று விசாரித்து... அதே வாரத்தில் என்னை நேரில் அழைத்து, திகைத்து சந்தாஷமாகப் பாராட்டியவர்கள்... மூப்பனார், கலைஞர், பாரதிராஜா, இளையராஜா, வைரமுத்து, இறையன்பு IAS, மற்றும் தொல்லியல் துறை நரசிம்மன். இவர்களையெல்லாம் சந்திக்க நமது வாத்தியார் பெருந்தன்மையுடன் அனுமதி அளித்தார்.
தொடர் ஆரம்பித்த 42வது வாரம்... கடைசி ஜமீன்தாரான மைனர் பாண்டியனின் கதையைச் சொன்ன அவரது வைப்பாட்டி வேலம்மா என்பவர், வறுமை நிலையில் உயிரோடுதான் இருக்கிறார் என்று எழுதி இருந்தேன். உடனே என்னை அழைத்த ஆசிரியர், அந்த வேலம்மா பற்றி விசாரித்து, அவருக்கு 10,000 ரூபாய் கொடுத்து உதவினார்.
45வது வாரம்...கதை முடிந்த அடுத்த வாரமே, கதைக்கு உயிரோவியம் வரைந்த ஓவியர் சசி அவர்களுக்கு, வயிற்றில் கேன்ஸர் வந்ததை ஆசிரியரிடம் சொன்னேன். உடனே நம்ம ஆசிரியர், அந்த ஓவியரின் சிகிச்சை செலவுக்காக 25,000/- ரூபாய் கொடுத்து உதவினார்.
கதை முடிந்ததும், 1000 ரூபாய் வீதம் கணக்கிட்டு, 45,000/- ரூபாய்க்கான காசோலையை கே.அசோகன் கையால் பெற்றுக்கொண்டேன்.
அடுத்த வாரமே, என்னை தன் அறைக்கு பிரத்யேகமாக அழைத்த என் ஆசான்... ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை என்னிடம் கொடுத்து, “நீங்கள் எழுதிய கதையை ரசித்து, இதை அளிக்கிறேன். பெற்றுக் கொள்ளுங்கள்!” என்றார்.
உடனே நான் பதறிப்போய், “சார்... மாதா மாதம் சம்பளமும் பெற்றிருக்கிறேன். கதைக்காக ஏற்கெனவே 45,000/- பெற்றுக் கொண்டுவிட்டேன்..!” என்றேன்.
“ம்ம்ம்... அது விகடன் நிறுவனம் நீங்கள் எழுதிய கதைக்கு சன்மானமாக உங்களுக்கு அளித்தது... இது, நான் உங்கள் கதைக்கு வாசகனாக... ரசிகனாக அளிக்கும் என் ‘பர்ஸனல் பணம்’!” என்றார்.
கட்டுப்படுத்த முடியாமல் நான் அழுதுவிட்டேன். இதோ அந்த சம்பவத்தை இப்போது எழுதுகையிலும் பெருகும் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் அழுகிறேன்.
மேலும் சில கடிதங்களைக் கொடுத்தார். அவை எல்லாமே, வருசநாட்டு ஜமீன் கதையைப் பாராட்டி, ஆசிரியரின் முகவரிக்கே வந்த பர்ஸனல் கடிதங்கள். அரசியல்வாதிகள், கலெக்டர், தாசில்தார்கள், அரசு நில அளவைதாரர்கள், மில் ஓனர்கள், கடவூர் ஜமீன்தார், சேத்தூர் ஜமீன்தார், பேரையூர் ஜமீன்தார் இன்னும் பலர் எழுதிய கடிதங்கள். அதில் பங்கஜம் என்கிற பெண்மணி அனுப்பிய 500 ரூபாய்க்கான காசோலையையும் கடிதத்தையும் என்னிடம் கொடுத்த என் அருமை ஆசான், “இந்தப் பெண்மணி எழுதிய கடிதம்தான் உங்களுக்கு அன்பளிப்பு தரச்சொல்லி என்னைத் தூண்டியது..!” என்றார்.
-பொன்ஸீ  ;   நன்றி வியக்தகவி ; நன்றி திரு கந்தசாமி

==============================================================================

ஏதோ நடக்கிறது...

ராகுல் அஞ்சலி இருவரும் சிறு வயதிலிருந்தே ஆழமான நட்பு கொண்டவர்கள்.  கேலியும்,  கிண்டலும் சண்டையாக இருந்தாலும் ஒருவரை விட்டு ஒருவர் இருக்க மாட்டார்கள்.  வகுப்பறையில் ஒருமுறை ப்யார் என்றால் என்ன என்று ஆசிரியை கேட்க, கஜோல் உட்பட எல்லோரும் தெரியாது, அனுபவமில்லை என்கிறார்கள். ராகுல் மட்டும் ப்யார்? அஞ்சலி.  ப்யார் கா மத்லப் தோஸ்தி... என்கிறான்.  அதைப் பார்த்துக் கொண்டிருக்கும், கேட்டுக்கொண்டிருக்கும் அஞ்சலி மனதுக்குள் ஒரு பூ பூக்கிறது.  காதலர் தினம் அன்று தன காதலைச் சொல்ல அஞ்சலி ஓடி வருகிறாள்.  ராகுலும் ஓடி வருகிறான்.  அவன் முதலில் பேசுகிறான்..  தன் காதலை சொல்லிக் கொண்டே வருகையில் சந்தோஷத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மலரும்  முகம் அவன் டீனாவை விரும்புவதாகச் சொன்னதும் அவள் முகம் மாறுகிறது.


'குச் குச் ஹோத்தா ஹை' என்னும் இந்தப் படம் அவ்வப்போது பார்த்து ரசிப்பேன்.  கஜோல் அற்புதமாக நடித்திருப்பார்.  ஒரு காட்சியில் டீனாவுடன் ராகுல் பேசிக்கொண்டிருக்கும்போது ராகுலுக்கு இப்படி இருந்தால்தான் பிடிக்கும் என்று நினைத்து ஒரு உடை அணிந்து வந்து கஜோல் அனைவர் முன்பும் இன்சல்ட்டாக உணரும் காட்சி..

நட்பு காதலாக மாறி ஏமாற்றத்தால் வேதனையில் ஆழும் அஞ்சலி ஊருக்கு கிளம்புகிறாள். மிக உரிமையுடன் அதைத் தடுக்க வருகிறான் ராகுல்.  டீனாவுக்கு கஜோலின் மனமும் புரிகிறது.  ராகுல் மனமும் புரிகிறது. ஆனால் அவள்தான் ராகுலை மணக்கப்போகும் காதலி.  ரயில்வே ஸ்டேஷனில் உணர்ச்சிகரமான இந்தக் காட்சி..   கஜோல் அசத்தி இருப்பார்.  அசட்டுத்தனம் சேர்ந்த, குழந்தைத்தனம் நிறைந்த கேரக்டரில் வரும் கஜோல், இடைவேளைக்குப் பின் அப்படியே உல்ட்டாவாக வருவார்.  ஷாருக்கானுக்கு தான் அஞ்சலியில்லாமல் வாழ முடியாது என்று முழுவதும் புரிவதில்லை.  ஏனோ அவன் ராணி முகர்ஜியிடம் காதல் கொண்டு விடுகிறான்.  அவன் படும் வேதனையும் காட்சிப்படுத்தப் பட்டிருக்கும்.




இதன்பின் பிரசவத்தில் டீனா மறைந்துவிட, ராகுல் தன் பெண்ணை தன் தாயின் ஆதரவில் வளர்க்கிறான்.  கஜோல் வெளியூரில் இருக்கிறாள்.  அவளுக்கும் திருமணம் நிச்சயமாகிறது.  அவள் எங்கிருக்கிறாள் என்பதே இவனுக்குத் தெரியாது.  கடைசியில் உணர்ச்சிகரமான கிளைமேக்ஸ். இவன் குழந்தை அந்தக் காட்சிகளை நகர்த்திக் செல்ல, சுவாரஸ்யமாய் இருக்கும்.

வகுப்பறையில் ஷாருக்கான் "ப்யார் கா மத்லப் அஞ்சலி" என்று சொன்னதன் பிறகு வரும் பாடல்.  ஷாருக்கான் ராணி முகர்ஜியை மனதில் நினைத்துப் பாட,  கஜோல் ஷாருக்கான் தன்னை நினைத்துப் பாடுவதாக நினைத்து பரவசமாக, இனிமையான இந்தப் பாடல் உதித் நாராயண், அல்கா யாக்னிக் குரலில், ஜதின் - லலித் இரட்டையர் இசையில், பாடி இருக்கிறார்கள். காதலை உணர்ந்து பாடும் ஒருவகை பரவசம் நிறைந்த பாடல்.

========================================================================================

நான் சுவாசிக்கும் சிவாஜி! (14) - ஒய்.ஜி. மகேந்திரன்

இசைஞானி இளையராஜா என் நெருங்கிய நண்பர். அவரது, 'பாவலர் பிரதர்ஸ்' ஆர்கெஸ்ட்ராவில் பலமுறை, ட்ரம்ஸ் வாசித்திருக்கிறேன். அதனால், இளையராஜா என்னை, 'டிரம்மர்' என்று தான் கூப்பிடுவார். இளையராஜா என்னிடம் பகிர்ந்து கொண்ட சுவையான நிகழ்ச்சி இது:
கவரிமான் படத்தில், கச்சேரி பாணியில் அமைக்கப்பட்ட, 'ப்ரோவ பாரமா' என்ற பாடல் காட்சியில், சிவாஜி எப்படி நடிக்கிறார் என்று பார்க்க எனக்கு ஆசை. ரீ- ரிகார்டிங் செய்யும்போது, அந்த காட்சியை பார்த்தேன். ஸ்வரம், தாளம் ஒரு இடத்தில் கூட தப்பாமல், அனுபவம் வாய்ந்த சங்கீத வித்துவான் மாதிரி, பிரமாதமாக சிவாஜி நடித்திருந்தார், என்று, ஆச்சரியமாக கூறினார் இளையராஜா.
கடந்த, 1986ல் வெளிவந்த சாதனை படத்தில், சிவாஜிக்கு இயக்குனர் வேடம். இசை இளையராஜா. அப்படத்தில், 'நீ செய்யாத சாதனையா?' என்று, சிவாஜியைப் பார்த்து, இளையராஜா கேட்கும் வசனம் ஒன்று வரும். கவரிமான் படத்தின் பாடல் காட்சியில், சிவாஜி பிரமாதமாக நடித்ததை, இந்தப் படத்தில், இளையராஜா வசனமாக சொன்னாரோ என்று தோன்றும்.
கவரிமான் படத்தில், நெருடலான ஒரு காட்சி இடம் பெறும். சிவாஜி வீட்டிற்கு வருகிறார், அவர் மனைவி பிரமிளா, சிவாஜியின் நண்பரான ரவிச்சந்திரனுடன் படுக்கையில் இருக்கையில், சிவாஜி பார்த்துவிடுவார். 'இது தான் அண்ணே சீன், நீங்க பண்ணுங்க...' என்று, இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் கூலாக கூறினார்.
'ஏய், முத்து, இங்கே வா...இதற்கு, என்ன ரியாக்ஷன் கொடுக்கச் சொல்றே... வாழ்க்கையில் எல்லா விதமான சூழ்நிலைகளையும் அனுபவச் சிருப்போம். அதையெல்லாம் நடிப்பாக கொண்டு வரமுடியும். இப்போ நீ சொல்கிற சீன் யாருக்கும் வரக்கூடாத சூழ்நிலை. இதற்கு என்ன ரியாக்ஷன் கொடுக்க முடியும்ன்னு நினைக்கறே...' என்று கேட்டார்.
எஸ்.பி.முத்துராமன் சிரித்துக் கொண்டே, 'அதுக்குத்தாண்ணே சிவாஜி! நீங்க செஞ்சிடுவீங்க...' என்று சமாதானம் சொன்னார்.

'சரி... என் கற்பனையில் வருவதை செய்யறேன், சரியாக இருந்தால், வைச்சுக்கோ...' என்று கூறி, நடிக்க ஆரம்பித்தார். உணர்ச்சிகளை அப்படியே கொட்டியிருப்பார்.
செட்டில் இருந்த அனைவரும், சிவாஜியின் நடிப்பில், மெய்மறந்து போயினர். டைரக்டர்எஸ்.பி.முத்துராமன், 'கட்' சொல்ல, மறந்து விட்டார்; கேமராமேன் பாபு அந்தக் காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தார். கேமரா பொருத்தப் பட்டிருந்த டிராலியை, தள்ளிக் கொண்டு வரும் கேமரா உதவியாளர், சிவாஜியை மெய் மறந்து பார்த்துக் கொண்டே, டிராலியை அதிகமாக தள்ளி விட, தடம் புரண்டு, கேமரா கீழே விழ இருந்தது. சிவாஜி, அதைப்பார்த்து, உஷார்ப் படுத்த, கேமரா காப்பாற்றப்பட்டதாக ஒளிப்பதிவாளர் பாபு என்னிடம் கூறினார்.
சிவாஜி ஷூட்டிங் என்றால், அது, நடிப்பு ஆர்வமுள்ளவர்களுக்கு ஒரு வகுப்பறை மாதிரி தான். தன்னுடைய கதாப்பாத்திரத்திற்கு, அவர் தன்னை தயார் செய்து கொள்வதைப் பார்த்தாலே, வியப்பாக இருக்கும்.
என் தந்தை ஓய்.ஜி.பி.,நாடக மேடையில் சிறப்பாக நடித்த நான்கு பாத்திரங்களை, சிவாஜி, படங்களில் கையாண்டு இருப்பார்.
'பெண்படுத்தும் பாடு' நாடகத்தில், ஆளவந்தார் பாத்திரத்தை, அறிவாளி படத்திலும், 'பெற்றால் தான் பிள்ளையா' நாடகத்தில், ஜமீன்தார் சிவலிங்கம் பாத்திரத்தை, பார் மகளே பார் படத்திலும் சிவாஜி செய்தார். கண்ணன் வந்தான்' நாடகத்தில், ஒய்.ஜி.பி., செய்த பாரிஸ்டர் ரஜினிகாந்த் பாத்திரம், கவுரவம் படத்திலும், 'பரிட்சைக்கு நேரமாச்சு' நாடகத்தில் இடம் பெற்ற நரசிம்மாச்சாரி பாத்திரத்தை, படத்திலும் நடித்திருக் கிறார். என் தந்தை நடித்த பாத்திரங் களில், சிவாஜி, படங்களில் நடித்து, மேலும் சிறப்பாக செய்தது, என் தந்தைக்கும், எங்கள் நாடக குழுவிற்கும் கிடைத்த பெரிய பாக்கியம்.
சிவாஜிக்கு கிரிக்கெட் விளையாட்டில், மிகுந்த ஆர்வம் உண்டு. ரேடியோவில் கமென்ட்ரி கேட்பது, பின், நேரம் கிடைக்கும் போது, டெலிவிஷனில் கிரிக்கெட் மாட்சுகள் பார்ப்பது அவருக்கு பிடித்தமான பொழுது போக்கு. இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் ஜி.ஆர்.விஸ்வநாத்தை அவருக்கு மிகவும் பிடிக்கும்.
மைசூரில் ஒரு முறை, நட்சத்திர கிரிக்கெட் மேட்ச் நடைபெற்றது. சிவாஜியும் அதில் விளையாடினார். இரண்டே பந்துகளில், 'அவுட்' ஆகிவிட்டார். ஆனாலும், பேட்டிங் செய்ய, அவர் நடந்து உள்ளே போகும்போதும், 'அவுட்' ஆகி, வெளியே நடந்து வந்த போதும், அவரது, 'ஸ்டைலிஷ்' நடைக்கு, அதிகமான கை தட்டல் கிடைத்தது.
[தினமலர் வாரமலர்] 5-1-2014


==========================================================================================



ஒரு படத்தை எடுத்து ரிலீஸ் செய்வதை குழந்தை பிரசவிக்கும் தாய்மார்களுக்கு நிகராக பேசுவார்கள் சினிமா வட்டாரத்தில், அந்த அளவிற்கான கஷ்டங்கள், நஷ்டங்கள் என பல காரணங்களை சொல்வார்கள். பல கோடி முதலீட்டில் துவங்கும் படங்களுக்கு, நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என பல யூனியன்களின் பிரச்னைகள், சம்பள பிரச்னைகள், கதை பிரச்னை, தியேட்டர் பிரச்னை என்று நீளும் பட்டியலில், படத்தின் டைட்டில் வைப்பதில் கூட பிரச்னைகள் எழும். அவற்றையெல்லாம் கடந்து ரிலீசானால் பைரஸி எனப்படும் திருட்டு தளங்களில் படத்தை சில கயவர்கள் ரிலீஸ் செய்து ஒட்டுமொத்த முதலீட்டிற்கும் 'ஆப்பு' வைத்து விடுகின்றனர்.
ஒரு படம் குறிப்பிட்ட தேதியில் ரிலீசாகாமல் சில மாதங்கள் தள்ளிப்போனாலே, அப்படம் பற்றிய எதிர்பார்ப்பு அனைத்தும் மாறி பட வசூலையும் பாதித்து விடுகிறது. இதற்கு சமீபத்தில் நடந்த உதாரணத்தையே காணலாம். தெலுங்கில் நடிகர் பாலகிருஷ்ணா நடித்த 'அகண்டா 2' படம் கடந்த டிசம்பர் 5ம் தேதி ரிலீசாவதாக அறிவித்தனர். படத்திற்கு அவ்வளவு எதிர்பார்ப்பு இருந்த நிலையில், கடைசி நேரத்தில் பணப்பிரச்னையால் கோர்ட்டில் வழக்கு போனது. இதனால் ஒரு வாரம் தள்ளி டிச.12ல் ரிலீசானது. ஆனால், அந்த ஒரே வாரத்தில் படத்திற்கான எதிர்பார்ப்பு, வரவேற்புகள் அடங்கி, வசூலை பெற தவறியது. 'மதகஜராஜா' போன்ற அரிதினும் அரிதான சில படங்களே பல ஆண்டுகள் கடந்து வந்தாலும் வெற்றி பெற்றுள்ளன.


இப்படியான நிலையில், ஹாலிவுட்டில் ஒரு படத்தை எடுத்து முடித்துவிட்டாலும், 100 ஆண்டுகள் கழித்தே ரிலீஸ் செய்வோம் என அறிவித்து பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர். ஆம், ராபர்ட் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில் ஜான் மல்கோவிச் நடித்த '100 இயர்ஸ்' என்ற தலைப்பினாலான இப்படம் 2115ல் நடக்கும் விஷயங்கள், சவால்கள் பற்றிய சயின்ஸ் பிக்சன் கதையில் உருவாகியுள்ளது. 2015ல் தயாரான இப்படத்தை 100 ஆண்டுகள் கழித்து 2115ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதியே ரிலீஸ் செய்ய உள்ளதாகவும் அறிவித்துள்ளனர். "நீங்கள் பார்க்கவே முடியாத திரைப்படம்" என்ற டேக்லைன் உடன் இதனை விளம்பரப்படுத்தவும் செய்துள்ளனர்.

100 ஆண்டுகள் கழித்து வந்தால் யார் பார்ப்பார்கள்? ஏன் இப்படியெல்லாம் செய்கிறார்கள்? இப்போதுள்ள தொழில்நுட்ப வளர்ச்சியில் அதுவரை இந்த படத்தை எப்படி பாதுகாப்பார்கள்? என்றெல்லாம் பல கேள்விகள் எழலாம். 2115ல் இப்படத்தை பார்ப்பவர்கள் 100 ஆண்டுகளுக்கு முன்பே இப்போது நடப்பது போல் கற்பனை செய்துள்ளார்களே என ஆச்சரியப்பட வேண்டும் என்பதற்காக இந்த 'வித்தியாசமான' யுக்தியை செயல்படுத்தியுள்ளனர்.
மிகவும் ரகசியமான, பாதுகாப்பான இடத்தில் துப்பாக்கி குண்டுகள் துளைக்காத லாக்கரில் படத்தின் 'காப்பி' வைக்கப்பட்டுள்ளது. அந்த லாக்கரில் 100 ஆண்டுக்கான டைம்மர் இணைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மணித்துளியாக குறைந்து 100 ஆண்டுகளுக்கு பிறகு தானாகவே அன்லாக் ஆகிவிடுமாம்.
அதன்பிறகு அதனை எடுத்து, படத்தை ரிலீஸ் செய்வார்களாம். இதனை அறிவிக்கும் விதமாக 'ரெட்ரோ, இயற்கை, எதிர்காலம்' என மூன்றுவிதமான டீசர்களையும் வெளியிட்டுள்ள படக்குழு, அந்த டீசரில் இருக்கும் காட்சிகள் படத்தில் இருக்காது என்றும் தெரிவித்துள்ளது.
1000 டிக்கெட்

அப்படி என்னதான் இந்த படத்தில் இருக்கிறது என ஆர்வமாக கேட்பவர்களுக்காக உலோகத்தினால் ஆன 1000 விஐபி டிக்கெட்களும் அச்சிடப்பட்டுள்ளதாம். 2115ல் ரிலீசாகும்போது, பிரீமியர் காட்சிக்கான டிக்கெட்டாக இந்த 1000 டிக்கெட்கள் விற்க உள்ளார்களாம். அதனை வாங்கும் நபர்கள், தங்கள் பேரக்குழந்தைகளாவது பார்க்கட்டும் என வாங்கிக்கொள்ளலாம்.
'எப்படியெல்லாம் விளம்பரம் செய்யுறாங்க, படம் வரும் ஆனா வராது; ஆனா இது புதுசா இருக்குண்ணே... புதுசா இருக்கு!' என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

- தினமலரிலிருந்து - 

============================================================================================






78 கருத்துகள்:

  1. இதைதான் இரண்டு வாரங்களுக்குமுன் ஒரு வெள்ளியில் படம் போட்டு இது என்ன என்று கேட்டிருந்தேன். கீதா மட்டும் பதில் சொல்லி இருந்தார்!//

    யெஸ்!!! ஸ்ரீராம். இது பற்றி தெரியும் என்பதால். நம்ம வீட்டில் இப்படி மடக்கு மேசை, ஸ்டூல் எல்லாம் கீது ஆனா இங்கு இல்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா...  ஆனால் இந்த டைப் மடக்கு மேசையாக இருக்காது..  நம்ம அண்ணாச்சி விளம்பரப்படுத்தற பழைய சாய் மாடல்...  சரியா?

      நீக்கு
    2. பையனிடம் இருக்கு ஸ்ரீராம். முடிஞ்சா அவனிடம் ஃபோட்டோ எடுத்து அனுப்பச் சொல்கிறேன். ஆனா பாருங்க....அவன் ஃபோட்டோ எடுத்துப் போடுவதற்கு யுகமாகும்!

      கீதா

      நீக்கு
  2. முதல் கவிதை சூப்பர் வித்தியாசமான சிந்தனை! ரசித்தேன், ஸ்ரீராம்

    இரண்டாவது நான் அடிக்கடி நினைத்துக் கொள்வது!

    ஆனால் இதில் காதல் நிஜமாகவே புரியாத ஒன்று.

    கடவுள் என்பதை நாம் உருவம் கொடுத்து அலங்காரம் செய்து தேடுவதால் கிடைக்கமாட்டேன்றார்! அதனாலதான் உலகநாயகன் ஒரு வசனம் பேசினார். அவரைப் போன்று பலர்! ஆனால்....அவருக்குத் தெரியலை அது உள்ளுணர்தல்...அதுக்குக் கடவுள்னு சொல் எதுவும் தேவையில்லை என்று

    அந்த சுவாரசியம் கிடைக்க நாம ரொம்ப அட்வான்ஸ்ட் லெவலுக்குப் போகோணும்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கீதா... இது மாதிரி இன்னொன்று முன்னர் எழுதி இருந்தேன்..

      கண்மூடி காத்திருக்கிறேன்
      கனவுகளுக்காக
      காத்திருந்தால்
      வருவதே இல்லை
      கடவுளும், கனவுகளும்

      என்று!!

      நீக்கு
  3. டேபிள் மேட் கதை, என்னிடமிருந்து 1600 ரூபாய் லவட்டிக்கொண்ட, DTDC கொரியர் கம்பெனியில் வேலை பார்த்த சதாம் ஹுசேன் என்ற திருநெல்வேலியைச் சேர்ந்த ஃப்ராடை நினைவுபடுத்தியது. அங்கு வேலை பார்த்துக்கொண்டிருக்கும் மேனேஜர் பொன்னையா போலப் பேசி என்னிடம் பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றிவிட்டான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை..  அநேகமாக நீங்கள் சொல்வது பழைய மாடல் சாய்ந்த வாக்கு டேபிள் மேட்.  ஏனென்றால் அதுதான்  அந்த விலைக்கு வரும்!

      நீக்கு
    2. மடக்கு மேசை இல்லை. நெல்லை ஜங்ஷன் சாந்தி விலாசிலிருந்து இனிப்பு காரம் வாங்கி அனுப்புவதற்காக நான் அனுப்பிய பணம். கொரியருக்கான பணத்தையும் கேட்டு வாங்கிட்டான் அந்த சதாம் ஹுசைன். பெயரைப் பார்த்ததுமே யோசிச்சிருக்கணும், ஆனால் பொன்னையா பேசறேன் என்று மேனேஜர் போலப் பேசி ஏமாத்திட்டான்.

      நீக்கு
    3. அடப்பாவி பாய்...

      நீக்கு
  4. விகடன் ஆசிரியர் பாலசுப்ரமணியம் அவர்களைப் பற்றிப் படித்தது நிறைவாக இருந்தது. இறந்தும் பலரும் நினைவுகூறும் வகையில் அவர் வாழ்ந்திருக்கிறார். படித்த வாசகர்களுக்கும் அவர் மீது மனநிறைவுதான், மதனை வெளியேற்றி பெருச்சாளி கையில் விகடனைக் கொடுத்ததைத் தவிர.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மதனை வெளியேற்றியது அவரா என்று தெரியவில்லை.  அல்லது கூட இருந்து யாரும் குழி பறித்திருக்கலாம்.

      நீக்கு
    2. இல்லை ..தன் மகன் ஶ்ரீநிவாசனுக்கு மதன் கூட ஒத்துப் கோகலை என்பதற்காக அவர் சொல் கேட்டு வெளியில் அனுப்பிவிட்டார். மகன் விகடனை திமுக பத்திரிகையாக மாற்றிவிட்டார்.

      நீக்கு
  5. காதல் கூட எந்தவித எதிர்பார்ப்பில்லாமல் unconditional ஆக வந்தால் அதுவும் ஒரு இன்பம்தான்.

    அதே unconditional காதலை அந்த மாபெரும் சக்தியின் மீது கொண்டால் அது மிகப் பெரிய பேரானந்தம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. த்சு.... த்சு..... த்சு....... த்சு...... த்சு...... எங்கேயோ போயிட்டீங்க கீதா...

      நீக்கு
  6. ஆனால், பிரபல எழுத்தாளர் சுஜாதாவிற்கு அப்படி அமையவில்லை.மென்மையான சுபாவமும், யாரையும் எளிதில் நம்பிவிடுபவருமான அவர் மிகவும் ஏமாற்றப்பட்டார்!//

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காபி பண்ணினீங்க ஓகே...   உங்க அக்கருத்தைக் காணோமே....   உயிர்மைப் பதிப்பகம்தான் அவரை ரொம்ப ஏமாற்றியது என்று படித்திருக்கிறேன்.  மேலும் சுஜாதா கொடுப்பதை வாங்கி கொள்ளும் டைப் என்றும், அவராக யாரிடமும் போய் எதுவும் கேட்க மாட்டார் என்றும் அவர் மனைவி சொன்ன நினைவு..  தனக்கு வரவேண்டிய தொகையையே கேட்க மாட்டாராம்.   அவ்வை ஷண்முகி மணிவண்ணன் மாதிரி கூச்ச சுபாவம் போல!!

      நீக்கு
    2. உண்மையாகவே!

      //அவர் புத்தக விற்பனையை நம்பி இல்லாததால் கொஞ்சம் அசால்டாக இருந்து விட்டார்.//

      இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். அவரோ அல்லது அவர் மனைவியோ இது பற்றிச் சொல்லியிருக்கிறாரோ?

      கீதா

      நீக்கு
    3. ஸ்ரீராம் கருத்து அடிக்கறதுக்குள்ள, கோட் பண்ணியது வெளியாகிடுச்சு....கூடவே கருத்து அடித்ததும் போகாமல் நிற்க, நான் இடையில் வீட்டு வேலைக்குப் போக....வந்து இப்பதான் பார்த்து வெளியிட்டேன்!

      பாருங்க மீண்டும் என் ஐடியிலிருந்து கருத்துவழங்கமுடியலைன்னு....

      கீதா

      நீக்கு
    4. ஹா.. ஹா.. ஹா... தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத....

      நீக்கு
  7. காதல் பெரும்பாலும் ஏமாற்றம் தரக்கூடியது. என்ன அப்பழுக்கின்றி இருந்தாலும் சரியான புரிதல் பல நேரங்களில் கொள்ளாதது. மனிதர் இரு சாரார் சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களும் இப்படித்தான்.
    ஆனால் கடவுளின் மேலான காதல் மட்டும் இதற்கு நேர் மாறானது. கடவுளின் மீதான உங்களின் காதல் பெரும்பாலும் ஏதானும் தேவை சம்பந்தப்படது.உங்களின் மீதான கடவுளின் காதலை உணர்வது தான் பேரின்பம்! அதற்கு ஈடு இணை இப்பூவுலகில் வேறேதும் இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜீவி சார்... நல்ல கருத்து. காதல் எதிர்பார்ப்பின்றி இருந்தால் அல்லது ஏமாற்றம் இருந்தாலும் அது அவன் வழக்கம் என்று மாறா காதல் இருந்தால் அதுவும் நல்ல காதல்தான். சிற்றின்பம் பேரின்பம் வேறு வகையறா...

      நீக்கு
  8. நிஜமாகவே எழுத்தாளர் பதிப்பக உரிமை இவ்வளவு மோசம் என்பதன் பின்னணி லேசாகத் தெரிந்திருந்தாலும் இப்பதான் இன்னும் விரிவாகப் புரிகிறது. அந்தக் கணக்கு வழக்குகள்.

    அப்படியும் ஏன் அச்சுவெளியீட்டிற்குச் செல்கிறார்கள் என்பதும் ஆச்சரியம். கையைக் கடித்துக் கொள்வானேன் என்றும் தோன்றுகிறது. ஆனால் எழுத்தை மட்டுமே நம்பி இருப்பவர்களுக்குப் பெரும்பாடுதான்.

    நம்மில் புத்தகங்கள் வெளியிட்டோர் அதாவது அச்சிலும் சரி, இணையத்திலும் சரி என்ன சொல்கிறார்கள் என்று அறிய ஆவல்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நூல்கள் அச்சிடுவது எதற்காக என்று தெரிந்தால், இந்த எழுத்தாளர் --பதிப்பக சிக்கல்கள் சுலபமாகப் புரியும்.

      நீக்கு
    2. என் அப்பாவிடம் கேட்க முடியாது!  ஜீவி ஸார் புத்தகம் வெளியிட்டிருக்கிறார்.  அவர் சொல்லலாம்.

      நீக்கு
    3. ஓ..  நீங்களே பதில் சொல்லி விட்டீர்களா ஜீவி ஸார்?  நல்லது.  நூலக ஆர்டர் வாய்ப்பு?

      நீக்கு
    4. எனக்கு க் கூடவே ஒரு கேள்வியும் எழுகிறது. எத்தனை நூல்கள் விற்கின்றன என்பது எழுத்தாளருக்குத் தெரிய வருமா?

      கீதா

      நீக்கு
    5. அதையும் பதிப்பித்தவர்கள்தான் - அதாவது எழுத்தாளர்கள்  - சொல்ல வேண்டும்.  அதையே மறைத்து சொன்னார்கள் என்று எங்கோ படித்த நினைவும் இருக்கிறது.

      நீக்கு
    6. நூல்கள் அச்சிடுவது எதற்காக என்று தெரிந்தால், இந்த எழுத்தாளர் --பதிப்பக சிக்கல்கள் சுலபமாகப் புரியும்.//

      ஆனால் முதல் அச்சு அனுபவத்தில்தானே புரியவரும் இல்லையா? உடனே உஷாராகி அடுத்த வெளியீட்டிற்கு வேறு பதிப்பகத்தை நாடலாம் இல்லையா?

      கீதா

      நீக்கு
    7. இதில் ஏதோ ஒன்று இருக்கிறது.. அது என்ன என்று புரியவில்லை!

      நீக்கு
  9. ஆனந்த விகடன் பாலசுப்ரமணியம் அவர்கள் தன் தந்தையைக் குறித்து சொல்லியிருந்த பகுதியை வாசித்த நினைவு அவரைப் போன்றே மகனும் இருந்தது வியப்பில்லை. வாசிக்க ரசனையாக இருந்தது என்னவொரு நல்ல உள்ளம் என்றும். அது சரி மதன் விலகியது எப்போது? விலகினாரா விலக்கப்பட்டாரா?

    கண்டிப்பாக மதன் அவர்களின் எழுத்து ஆவியின் விற்பனைக்குப் பெருமளவில் உதவியது என்றால் அது மிகையல்ல.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அங்கு வேறு ஈகோ பிரச்னை இருந்தது என்று நினைக்கிறேன்.

      நீக்கு
  10. வித்தியாசமான வியாழனாக இருக்கிறது. நீங்கள் ஏமாந்த கதை(ஆந்த 15 லட்சம் கிடைக்கவேயில்லையா? மேஜைக்கு பதில் ஸ்டூல் கிடைத்த மாதிரி, 15 லட்சத்திற்கு பதிலாக பாதியாவது கிடைக்க பிரார்த்தனைகள்) ஆ.வி. ஆசிரியர் பாலசுப்பிரமணியம் குறித்த செய்தி படிக்க சந்தோஷமாக இருக்கிறது.
    சிவாஜி பற்றிய ஒய்.ஜி.மகேந்திரன் பகிர்ந்திருக்கும் விஷயங்கள் அவர் நிறைய தளங்களில் சொல்லியிருப்பதுதான்.
    ஆறு வெட்டினேன், குளம் வெட்டினேன் ஜோக் ஹாஹா!
    பதிப்பகங்கள் செய்யும் மோசடி அதிர்ச்சியளிக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பானு அக்கா.  அந்த 15 லட்சம் ஏமாற்றியது சலீம் என்கிற EEE பில்டர்.  கோரோனா காலத்தில் வழக்கு போட்டு வி. இ. நீ ஆனது.  

      நீக்கு
  11. குச் குச் ஹோதா ஹை என் மகளுக்கு மிகவும் பிடித்த படம், அவள் அளவு இல்லாவிட்டாலும் எனக்கும்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  இளம் உள்ளங்களுக்குப் பிடிக்கும்.  நான் இப்போ கூட இன்னொரு வாட்டி பார்ப்பேன்!

      நீக்கு
  12. குச் குச் ஹோத்தா ஹை படம் பற்றிக் கேட்டதுண்டு, ஸ்ரீரம. தமிழிலும் வந்ததோ?

    இங்கு பார்த்த காணொளிகளில் காஜோல் தான் கவர்கிறார் நடிப்பில்!!!

    பாடல் கேட்டதும் கேட்ட நினைவு வருது அதுவும் குச் குச் ஹோதா ஹைன்னு சொல்லும் போது அட கேட்ட பாடல்னு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழில் வரவில்லை. படம் முழுவதும் பார்க்கலாம் கீதா. சுவாரஸ்யம். Feel Good Movie.

      நீக்கு
    2. எஸ், ஸ்ரீராம், எனக்குப் பார்க்க வேண்டும் போல் ஆர்வம் வந்துவிட்டது. கண்டிப்பாக யுட்யூபில் இருக்கும் பார்த்துவிடுகிறேன். அப்படியே ஹிந்தியும் கற்றுக்கலாமே ஹிஹிஹி...

      கீதா

      நீக்கு
    3. கட்டாயம் பார்த்துட்டு பத்து வரில ஒரு விமர்சனம் எழுதி கொடுங்க..  அது இருக்கட்டும்..  பாட்டு கேட்டீங்களா?  காட்சிகள் பார்த்தீர்களா?

      நீக்கு
    4. ஆமாம் ஸ்ரீராம், பாட்டும் - இசையும் சீனும் இரண்டும் நன்றாக அலைன் ஆகிறது.

      அதில் கடைசியில் காஜோல் ஒரு எக்ஸ்ப்ரஷன் கொடுக்கறாங்க பாருங்க குச் குச் ஹோதாஹைன்னு ராணிமுகர்ஜி ஷாலை விரித்துப் பாடும் போது அடுத்த குச் குச் ஹோதாஹைக்கு கேமரா காஜோலுக்குப் போகிறது...அந்த இடம்...

      கீதா

      நீக்கு
    5. பாட்டு சரி.. மற்ற காட்சித் துணுக்குகள்?

      நீக்கு
  13. கடவுளும் காதலும்
    புரியாத புதிர்கள் தாம்
    காதலியை கைபிடிக்கும் வரை
    புதிர் புரியும்போது
    இதற்குத்தானா ஆசைப்பட்டாய்
    பால(சுப்ரமணிய) குமாரா
    என்று கடவுள் கேட்டார்.
    கடவுளை புரிந்துகொண்டேன்.

    கனவுகளும் கடவுளும்

    கண்மூடி காத்திருந்தபோது
    தூக்கத்தில் கனவு
    த்யானத்தில் கடவுள்
    வந்து சென்றதை அறியவில்லை.

    அட்வான்ஸ் என்று வாங்குபவர் எல்லோரும் வாக்குகளை மறந்து விடுவார்கள். அதிலும் ஆன்லைன் வர்த்தகம் மிகவும் மோசம். நானும் ஆன்லைனில் நிறைய ஏமாந்திருக்கிறேன்.

    ஜோக்குகள் ஓகே ரகம்.

    எம் வி வெங்கட்ராம் கூறியது போல் எழுத்தை மட்டுமே நம்பி உயிர் வாழமுடியாது. இது சங்க காலம் முதல் இந்த காலம் வரை பொருந்தும். சுஜாதா மனதிருப்திக்காக எழுதினார். பணத் திருப்திக்காக அல்ல.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா வாங்க ஜெயக்குமார் ஸார்..   பால(சுப்பிரமணிய) குமாரா ரசித்தேன்!  சூப்பர்.

      ஆனால் இது ஆன்லைன் அல்ல.  அவரை பெர்சனலாக தெரியும்.

      நீக்கு
    2. கடவுளும் காதலும்
      புரியாத புதிர்கள் தாம்
      காதலியை கைபிடிக்கும் வரை
      புதிர் புரியும்போது
      இதற்குத்தானா ஆசைப்பட்டாய்
      பால(சுப்ரமணிய) குமாரா
      என்று கடவுள் கேட்டார்.
      கடவுளை புரிந்துகொண்டேன்.//

      ஜெ கே அண்ணே எங்கேயோ போய்ட்டீங்க போங்க!!!! ஸ்ரீராம் எழுதியதற்கு அவரை இணைத்தே சூப்பர்....ரசித்தேன் ஜெ கே அண்ணா.

      கீதா

      நீக்கு
  14. ஓய்ஜி சிவாஜி பற்றிச் சொல்லியது சுவாரசியம். இ ரா ஒய்ஜிக்கு நல்ல நட்பா!!? அது போல இ ரா சிஜாவி பத்தி சொல்லியிருப்பது புதுசு எனக்கு. இதுவரை ராஜாவும் சிவாஜியும் படங்களில் இணைந்ததில்லை என்றே நினைத்திருந்தேன். நமக்கு அம்புட்டுத்தான் CK!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன கீதா..  தியாகம், பட்டாக்கத்தி பைரவன், தீபம், நல்லதோர் குடும்பம், சாதனை...  இன்னும் உண்டே...

      நீக்கு
    2. நீங்க வேற.... ஸ்ரீராம்....பாட்டு கேட்டிருப்பேன் ஆனா அது என்ன சினிமா....என்று தெரிந்தால்தானே அதை எல்லாம் இணைத்து நினைவு இருக்கும்...!! ஸ்ரீராம், அந்த அளவுக்கு மோசம் நான். அதுவும் அப்ப....ஊர்ல இருந்தவரை. அதன் பின் திருமணமான பின் திருவனந்தபுரம் என்பதால் கொஞ்சம் மலையாளம் பாடல்கள் பரிச்சயம் அல்லாமல் வீட்டில் சினிமா வாசனை கிடையாதே! கூடவே அந்த நாட்களை நான் நினைத்துக் கூடப் பார்ப்பதில்லை. நடுவில கொஞ்சம் பக்கங்களைக் காணோம் எனும் வகையில் தள்ளிவிட வேண்டியவை.

      கீதா

      நீக்கு
    3. பிடித்த பாடல்.. மனதுக்கு பிடித்து விட்டது என்று வரும்போது அது யார் இசை என்று தெரிந்து கொள்ள மகன்களைக் கேட்பேன்.

      நீக்கு
  15. இன்று மூலிகைப் பண்ணை...
    இரத்தப் பரிசோதனை....

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  16. இன்று பதிவை வாசிப்பதற்கு வாய்ப்பு இல்லை

    பதிலளிநீக்கு
  17. என்னய்யா இது 100 வருஷம் கழிச்சுதான் படம் வரும்னா முதல்ல அதை இயக்கிய டைரக்டர், கதைக்காரர், என்று அந்த சினிமா டீம் இருக்க வேண்டுமே!!! சரி அன்லாக் ஆகட்டும் தானாகவே டைமர் செட் எல்லாம் ஓகே அப்ப அன்லாக் ஆகும் போது அதை வெளியிடும் உரிமை யாருக்கு? அந்த உரிமையாளர் இப்போது இருந்தால் அப்போதும் இருக்க வேன்டுமே....அப்ப வெளியிடப் போகும் நபர் இப்போது பிறந்திருந்தாலும் அத்தனை வருடங்கள் இருக்க வேண்டுமே! ரொம்ப வினோதமாக இருக்கிறது. பணம் டீல் எல்லாம் எப்படி இருக்கும்?

    பிறப்பும் இறப்பும் நிச்சயமில்லாத உலகினில் இது ரொம்ப விசித்திரமாக இருக்கிறது!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். இப்படியும் மனிதர்கள்.. செலவு செய்ய பணம்!

      நீக்கு
  18. இந்த அசடு ஜோக், மதியச்சாப்பாடு ஜோக் முன்னயே வந்திருந்த நினைவு, ஸ்ரீராம்.

    மற்றவை ஓகே!

    கீதா

    பதிலளிநீக்கு
  19. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  20. டேபிள்மேட் நன்றாக இருக்கிறது. மேலும் வேண்டும் என்று ஆசை பட்டது தவறா? எத்தனை சோதனை கடைசியில் மேஜைக்கு பதில் ஸ்டுல் வந்து சேர்ந்து இருக்கே! அதுவும் நல்லா இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். இது பலவகையில் வசதியாக இருக்கிறது. நல்ல பலமானதாகவும் இருக்கிறது.

      நீக்கு
  21. //'இயல்பை மீறி
    நடக்க முடியுமா?'
    வருத்தம் தெரிவித்து
    வேறு வீடு தேடி
    நகர்கின்றன
    வீடிழந்த பறவைகள்.//

    உங்கள் கவிதையில் பறவைகளின் வருத்தம் தெரிகிறது.

    பறவைகள் வீடு தேடி போகும் காலம் தான் இப்போது எங்கும்.
    எங்கள் குடியிருப்புக்கு இரண்டு பக்கமும் காடு மாதிரி காலி மனைகள் இருந்தன் பறவைகள் தங்கும் வனமாக. இப்போது அவை அழிந்து காங்கீர்ட் வனம் ஆகி விட்டது வீடு தேடி எங்கோ போய் விட்டன பறவைகள். பறவைகள் கானம் இப்போது கேட்பது இல்லை.
    குயில்கள் பாடும், மயில்கள் அகவும் , தவிட்டு குருவிகள் , மைனாக்கள் சண்டையிட்டு கூச்சல் போடும் இவை ஒன்றும் இப்போது இல்லை
    புறாக்கள் மட்டும் இருக்கிறது , அவைகளும் கூடு கட்ட இடம் இல்லாமல் தவிக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கோமதி அக்கா. மரங்கள் நடக்க ஆசைப்பட்டால் என்று கற்பனை எழுந்தது.

      நீக்கு
    2. மரங்கள் நடக்க ஆசைப்பட்டால் எங்கு போய் நிற்கும் அதற்கும் இடம் வேண்டுமே! பறவைகள் மாதிரி அதுவும் தவிக்கும் இடம் தேடி.

      நீக்கு
    3. அதைதான் இயல்பு மீறி நடக்க முடியாது, கூடாது என்று எழுதி இருந்தேன்!!

      அவரவர்க்கு வாய்த்த இடம்
      அவன் போட்ட பிச்சை
      அறியாத மானுடர்க்கு 
      அக்கரையில் இச்சை 

      என்று கண்ணதாசன் பாடி இருக்கிறாரே...

      நீக்கு
  22. படைப்பாளிகளின் நிலை அன்றும், இன்றும் ஒரே மாதிரிதானா?
    கையில் காசு பார்ப்பது கஷ்டம் தான் போலவே!

    திரு எஸ் எஸ் பாலன் போன்ற நல்லவர்களும் இருக்கிறார்கள் எங்கிறது முகநூல் செய்தி.

    நான் சுவாசிக்கும் சிவாஜி! (14) - ஒய்.ஜி. மகேந்திரன் பகிர்வு அருமை.


    குச் குச் ஹோத்தா ஹை' படம் மிகவும் பிடிக்கும் தொலைக்காட்சியில் போடும் போது எல்லாம் அடிக்கடி பார்ப்பேன்.
    பாடல் பகிர்வு காட்சிகள் பகிர்வு பார்த்தேன்.

    //ஒவ்வொரு மணித்துளியாக குறைந்து 100 ஆண்டுகளுக்கு பிறகு தானாகவே அன்லாக் ஆகிவிடுமாம்.//

    புதுமை நல்லாதான் இருக்கிறது.


    ஆபீஸ் நகைச்சுவை பகிர்வு நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கோமதி அக்கா. நீங்கள் அந்த ஹிந்திப் படம் ஏற்கனவே பார்த்திருக்கிறீர்கள் என்பது வியப்பு.

      நீக்கு
  23. இன்று தமிழ் தாத்தா உ.வே சாமிநாதையருக்கு 171 வது பிறந்த நாள்
    கீதா சாம்பசிவம் பதிவு போடுவார்கள். அவர்களிடமிருந்து பதிவை எதிர்பார்த்தேன். இங்கும் அவர்களை காணவில்லையே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர்கள் நேரம் வேறு அல்லவா? இனிதான் வருவார்கள்.

      நீக்கு
    2. நேற்று மருத்துவமனைக்குத் திடீரெனச் செல்ல நேர்ந்ததால் ஷெட்யூல் பண்ணிட்டுப் போனேன். காலம்பரப் பார்த்தால் வரலை, மறுபடி பார்க்கிறேன். நினைவு வைத்துக் கொண்டதுக்கு நன்றி.

      நீக்கு
    3. :(நேற்றெல்லாம் கணினியில் உட்கார்ந்து வேலை செய்ய முடியாதபடிக்குக் கால் முட்டி வலி. ஆகவே சாயங்காலமாய் மருத்துவமனை போனோம். இங்கெல்லாம் நேற்றிலிருந்து ரமதான் விரத நாட்கள் ஆரம்பித்து விட்டதால் அலுவல்கள் இயங்கும் நேரம் மாற்றம் காரணமாக மாலை ஆறு மணிக்கு மேல் தான் மருத்துவமனையே திறக்கிறாங்க. முன் பதிவு செய்யாததால் அரை மணி காத்திருப்பு. முடிந்து பரிசோதனைகள் முடிந்து வீட்டுக்கு வர இரவு ஒன்பது மணி. அதுக்கப்புறமாய்ச் சாப்பிட்டதில் ஒத்துக்கலை. அதோடு இந்த வலி நிவாரண மாத்திரைகளினால் வயிறு கடபுடா! :(

      நீக்கு
  24. பாஸ் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு!

    பதிலளிநீக்கு
  25. //கீதா மட்டும் பதில் சொல்லி இருந்தார்!// அநியாயமா இல்லையோ? நானெல்லாம் எப்போதாவது தானே அவங்களுக்குத் தெரிஞ்சிருக்கணுமே. அதான் சொல்லிட்டாங்க. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!