27.4.26

"திங்க"க்கிழமை  :: உருளைக் கிழங்கு (R)Toasted Cutlet -- கீதா ரெங்கன் ரெஸிப்பி 

 

                     

உருளைக் கிழங்கு (R)Toasted Cutlet


தமிழில் வறுக்கப்பட்ட கட்லெட் என்று சொல்லலாமா? உருளைக்கிழங்கு சீவல் வறுக்கப்பட்ட கட்லெட்?

உருளைக்கிழங்கு ஒரு versatile கிழங்கு. உடனடியாகச் செய்வதற்கு, உருமாற்றி, எதனுடனும் சேர்த்து, பொரித்து, மசித்து, சீவி நொறுக்குத் தீனியாக விதம் விதமாகச் செய்வதற்கு.... "என்னை வைச்சு காமெடி கீமடி, அடிச்சு,  முறுக்கி என்ன வேணா செஞ்சுக்க" எனும் அப்பாவிக் கிழங்கு!

இந்த ரெசிப்பி புதியது என்று விளம்பரம் எல்லாம் செய்யமாட்டேன். நீங்களும் செய்திருப்பீங்க. இருந்தாலும் சும்மா ஒன்று போட்டு வைப்போமே! என்ன சொல்றீங்க? 

பாதியாக நறுக்கி

உருளைக் கிழங்கு நடுத்தர அளவு உங்கள் தேவைக்கேற்ப. நன்றாகச் சுத்தம் செய்துவிட்டு,  தோல் மட்டும் உரிக்க வருவது போல் ஆவியில் வேக வைச்சுக்கோங்க. Note This - உருளைக் கிழங்கு வெந்துவிடக் கூடாது. 

(பின் குறிப்பு - நான் செய்ய நினைத்தது வேறு. நான் வாங்கியிருந்தது இளைய உ கி - குழந்தை உ கி யை விடச் சற்று பெரிது என்பதால் இப்பெயர்!  ஆனால் ஆவியில் வேக வைத்து எடுத்ததும், என் மனம் மாறிவிட்டது. ரொம்ப நாளாச்சே இப்படிச் செய்து என்று....அதனால் இச்செய்முறை! )

இப்படி நறுக்கிக் கொண்டு...

நெடுக்கு வாக்கில் பாதியாக நறுக்கிக் கொண்டு பின்னர் ஒவ்வொரு பாதியையும் 3 அல்லது 4 கொஞ்சம் மெலிதான (பஜ்ஜிக்குச் சீவுவது போன்று ரொம்ப மெலிதாக வேண்டாம்) படத்தில் பார்த்தால் தெரியும் என்று நினைக்கிறேன், அப்படி நறுக்கிக் கொள்ளுங்கள்.

தேவையான உப்பு, தேவையான மிளகாய்த் தூள், பிடிக்குமானால் பூண்டுவிழுது கொஞ்சம்

ஒரு அகலமான பேஸின் அல்லது கொஞ்சம் குழிவான தட்டில் தேவையான உப்பு, தேவையான மிளகாய்த் தூள், பிடிக்குமானால் பூண்டுவிழுது கொஞ்சம் பூண்டு வேண்டாம் என்றால் பெருங்காயம் கொஞ்சம்.

கோதுமை மாவு அல்லது மைதா மாவு - நான் கோதுமை மாவு எடுத்துக் கொண்டேன் - அரிசி மாவு, சோள மாவு இவற்றை முறையே 1/2 : 1 : 1 விகிதத்தில்

கோதுமை மாவு அல்லது மைதா மாவு - நான் கோதுமை மாவு எடுத்துக் கொண்டேன் - அரிசி மாவு, சோள மாவு இவற்றை முறையே 1/2 : 1 : 1 விகிதத்தில் உங்களுக்குத் தேவையான அளவு எடுத்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் தண்ணீர் விட்டு ரொம்பத் தண்ணியாகவும் இல்லாமல் ரொம்பக் கெட்டியாகவும் இல்லாத பக்குவத்தில் கரைத்துக் கொள்ளவும்.

இந்தக் கலவையைக் கொஞ்சம் கொஞ்சமாக கலந்து வைச்சுக்கோங்க. தேவைப்பட்டால் மீண்டும் கலந்துகொள்ளலாமே! 

Bread Crumbs

தனியாக மற்றொரு பேஸின் அல்லது குழிவான தட்டில் ப்ரெட் க்ரம்ப்ஸ் Bread Crumbs எடுத்து தயாராக வைத்துக் கொள்ளவும். நான் உப்பு ப்ரெட் Crumbs எடுத்துக் கொண்டேன்.

அடுப்பை ஏற்றி, தோசைக்கல்லை அல்லது அகலமான சமமாக உள்ள இரும்பு Grill Pan இருந்தால் அதை அடுப்பின்  பெரிய பர்னரில் வைத்து தோசைக்கல்லில் / Pan ல் சிறிது எண்ணை விட்டுத் தேய்த்துக்கொள்ளுங்கள். 


சூடானதும், நறுக்கிய உருளைக்கிழங்கு வில்லைகளை ஒவ்வொன்றாக எடுத்து மாவுக் கலவையில் முக்கி
 

 பின்னர் Bread Crumbs ல் புரட்டி

தோசைக்கல்லில் பரத்தி வைக்கவும். சுற்றிலும் எண்ணை விட்டு நடுவிலும் கொஞ்சம் எண்ணை விட்டு தீயை நடுத்தர அளவில் வைத்து, வில்லைகள் தீ பரவும் இடத்தில் உள்ளது போல வைத்துவிடுங்க. மூடி போட்டோ இல்லை மூடி போடாமலோ. அடியில் சிறிது வெந்ததும், எல்லாவற்றையும் திருப்பிப் போட்டு சிவந்து வரும் வரை மெதுவாகத் திருப்பிப் போட்டு எடுத்துவிட வேண்டியதுதான். 
 

சாதத்திற்குத் தொட்டுக் கொண்டோ இல்லை ஹார்லிக்ஸ் பாப்பா மாதிரி அப்படியேவோ சாப்பிடலாம்!

அவ்வளவுதாங்க!  

-========================================================================

நன்றி - JKC அண்ணா - புத்தகத்திற்கு. இன்று நம்ம ரெசிப்பி என்பதால், அடுத்த பகுதியும் நம்மளோடது வேண்டாமே என்று, ஜெ கே அண்ணா அனுப்பிக் கொடுத்த புத்தகத்தில் "திங்க" வைச் சார்ந்த அனுபவங்களின் புத்தகம் என்பதால் அதிலிருந்து ஒரு அனுபவம் இங்கு பகிரப்படுகிறது.

புத்தகத்தின் பெயர் சிரிக்க வைக்கும் சொதப்பல்கள்.

ஆசிரியர் - ராஜலக்ஷ்மி பரமசிவம், சென்னை

வலைப்பூ - http://rajalakshmiparamasivam.blogspot.com

புத்தகம் வெளியிடப்பட்டிருக்கும் தளம் - http://FreeTamilEbooks.com

ராஜலக்ஷ்மி பரமசிவம் மின்னஞ்சல்: rajisivam51@gmail.com

ஆசிரியர் தன்னைப் பற்றிச் சொல்லிக் கொள்ளும் குறிப்பு -

என்னைப் பற்றி. நான் ஒய்வு பெற்ற ஆசிரியை மற்றும் குடும்பத் தலைவி என்பதைத் தவிர சொல்வதற்கு ஒன்றுமில்லை.. சமீப காலமாக இணையத்தில் எழுதி வருகிறேன். அதன் மூலம் பல வாசக நண்பர்கள் கிடைத்துள்ளார்கள் அவர்கள் கொடுக்கும் ஊக்கம் என்னைத் தொடர்ந்து எழுத வைக்கிறது.

அவர்களுக்கு என் நன்றி.

என் தந்தையின் எழுதும் ஆர்வம் என்னையும் விடவில்லை . என் அம்மாவோ என் எழுத்துக்களின் தீவிர விசிறி. அம்மாவினுடைய கருத்தையும் சில சமயங்களில் நான் கட்டுரையாக்கியிருக்கிறேன். ஆகவே நான் எழுதுவதற்கு காரணமான என் பெற்றோருக்கு முதல் நன்றி.

சிறு வயதில் எனக்கு நிறைய கதைகள் சொல்லி என் கற்பனைத் திறத்தை வளர்த்த என் சித்தப்பாவிற்கும் இத்தருணத்தில் நான் நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன்.

என் எழுத்துக்களின் முதல் விமரிசகரும், அங்கங்கே திருத்தங்கள் செய்து என் பதிவுகளை செம்மைப்படுத்திக் கொடுப்பவருமான என் கணவருக்கும் நன்றி. இந்த மின்னூலை தரவிறக்கம் செய்து படிக்கும் உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

============

உங்கள் சாம்பார் மட்டும் எப்படி இவ்வளவு சுவையாக வாசனையாக இருக்கிறது. உங்கள் சாம்பார் பொடி ரகசியத்தை சொல்வீர்களா?"

"உங்கள் ரசத்திற்காகவே இன்னும் கொஞ்சம் சாதம் சாப்பிடப் போகிறேன்

இவையெல்லாம் என் தோழிகளும், உறவினர்களும் என் சமையலைப் பற்றிப் புகழ்ந்து கூறும் வார்த்தைகள்.

Note: வீட்டிலுள்ளவர்கள் என் சமையலை இப்படிப் புகழ்வதில்லை. வெளியில் இருப்பவர்கள் கண்களுக்கு சமையலில் புலியாகத் தெரியும் நான் வீட்டில் இருப்பவர்களுக்கு எலியாகக் கூட தெரியவில்லை என்பதுதான் உண்மை.

அதிலும் என் கணவரிடம் கேட்டால், "ராஜி மிகவும் நன்றாக வெந்நீரும், தயிரும் செய்வாள்" என்று நக்கலடிப்பார்.

ஆனால் நான் நிஜமாகவே தயிர் உறைய வைப்பதற்கு திண்டாடின கதை இருக்கிறதே ......அது பெரிய ராமாயணம். அவருக்கு நிஜமாகவே தயிரை கண்ணில் காட்டாமல் திண்டாட விட்டிருக்கிறேன். பல வருடங்களுக்கு முன்பு.

ஸ்டாப்... ஸ்டாப் பல வருடங்கள் என்றுதான் சொன்னேன். உடனே A.D. யா B.C யா என்று கேட்காதீர்கள். 'இளம் தம்பதிகள்' நாங்கள். இப்பொழுதுதான் சமீபத்தில் மணமானவர்கள். எங்களுக்குத் திருமணமாகி ஒரு முப்பத்தாறு வருடம்தான் ஆகிறது. இளமையின் வாயிற்படியில் பேத்தி பேரன்களுடன் நிற்கிறோம்.

சரி. தயிர் விஷயத்திற்கு வருகிறேன். எங்களுக்குத் திருமணமான புதிது. டில்லி வாசம்.

புதுக் குடித்தனம், சமையல், வீட்டிற்கு சாமான்கள் வாங்குவது என்று

எல்லாவற்றிலும் trial and error தான்.

ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன்.

ஒரு முறை மாதாந்திர சாமான் லிஸ்ட் எழுதும்போது, பாயசத்திற்கு சேமியா கால் கிலோ, ஏலக்காய் கால் கிலோ (தவறுதலாக எல்லாம் இல்லை) என்று லிஸ்ட் எழுதி கடையில் கொடுத்து விட்டேன்.

மளிகைக் கடைக்காரரே அதை "எடிட் செய்து இரண்டு ருபாய்க்கு ஏலக்காய் போதும் என்று கொடுத்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

இப்படித் தப்பும் தவறுமாகத்தான் போய் கொண்டிருந்தது எல்லாம்..

ஆனாலும், அது ஒரு கனாக்காலம் தான்

இந்த ரேஞ்சில் போய்கொண்டிருந்த குடித்தனத்திற்கு, குளிர் காலம் வந்து இன்னும் கொஞ்சம் குழப்பியது.

முதல் மழை போல், முதல் குளிர் எங்களுக்கு டெல்லியில்.

எல்லோரும் ஸ்வெட்டர், ஷால் எல்லாம் போட்டுக் கொண்டு "ரோஜா" படத்தில் வரும் தீவிரவாதி போல் நடமாடிக் கொண்டிருந்ததை பார்த்து அதிசயத்தேன்.

ம்ம்ம்.நானும் அப்படித்தான்

அந்தக் குளிரில் எதை சமைத்தாலும் சட்டெனக் குளிர்ந்து போய் விடும்.

ஒரு நாள் எப்பொழுதும் போல் சாதத்திற்கு தயிர் போட்டுக் கொள்ளலாம் என்று எடுத்தால் பாலாகவே இருந்தது. முதல் நாளிரவு உறை ஊற்றின ஞாபகம் இருந்தது. உறை ஊற்றினேனா இல்லையா என்கிற சந்தேகம்.

அடுத்த நாளும் இப்படியே ஆயிற்று. அதற்கு அடுத்த நாளும் அப்படியே. ஊரே பிரிட்ஜ் மாதிரி இருக்கிறதே, அது தான் காரணமோ என்று குழம்பினேன்.

என்னவரோ, தயிராவாது சரியாக செய்வாய் என்று எதிர் பார்த்தேன். அதுவம் இல்லையா.." என்று உதட்டை பிதுக்க...எனக்கு மானப் பிரச்சினையானது. எப்படியாவது தயிர் செய்யக் கற்றுக் கொள்ளத் தீர்மானித்தேன். அதுவும் போர்க்கால அடிப்படையில்.

தயிர் செய்யக்... கற்றுக் கொள்ள வேண்டுமா.. என்ன? நினைப்பீர்கள் எல்லோரும்.

தொடர்ந்து படியுங்கள் .தயிர் செய்வது எவ்வளவு கஷ்டம் என்று உங்களுக்கே புரியும்.

என் தயிர் பாடம் இதோ

எதிர் வீட்டில் இருந்த பஞ்சாபி அம்மாவிடம் ஆரம்பித்தேன்.

உடைந்த ஹிந்தியில் என் சந்தேகத்தைக் கேட்டேன்.

அவரும், "ஆமாம் குளிரில் தயிர் உறைவது கொஞ்சம் கஷ்டம் தான்."

"Note this point என்னவரே" என்று சொல்லியாயிற்று.

ஆனால் அவர் காதில் வாங்கினால் தானே.....'எனக்குத் தெரியாது' என்று நினைக்கும் என் வாழ்க்கை துணைவரிடம் என்னத்தை சொல்ல.

அந்த அம்மா சொன்ன மாதிரி மறு நாள் உறை ஊற்றி, ஸ்டவ் மேலேயே வைத்து விட்டேன்.

மறு நாள் ஆசையாக எடுத்தால்,

"நீ ஸ்டவ் மேல் வைத்து விட்டால்....  நான் தயிராகி விடுவேனா என்ன?" என்று என்னைப் பார்த்து சிரித்தது பால்.

வேறு என்ன வழி? யோசனை பலமானது.

இப்பொழுது போல் போன் வசதியில்லையே, சென்னையிலிருக்கும் அம்மாவைத் தொடர்பு கொள்ள. கடிதப்போக்குவரத்தோ ஒரு வாரத்திற்கு மேல் ஓடி விடும், என்று யோசித்துக் கொண்டே, அஜ்மல்கான் ரோடில் நடக்கும் போது கண்ணில் தென்பட்டது ஸ்வீட் கடை. நாவில் நீர் ஊறியது ஸ்வீட்டைப் பார்த்து அல்ல கல்லாவிற்கருகில் பெரிய மண் சட்டியில் இருந்த, கட்டித் தயிரைப் பார்த்துதான்.

அட..தயிர்..  என்று காணாததைக் கண்டது மாதிரி (உண்மையில் காணாதது தானே) கத்தினேன்.

கத்தியால் வெட்டும் போல் இருந்த தயிரை வாங்கும் போது வேறு ஒரு யோசனை தோன்றியது.

ஒரு வேளை, மண் சட்டியில் உறை ஊற்றினால் தயிர் கட்டியாக உறையுமோ என்று சின்ன ஆசை வந்தது.

அதை நடைமுறைப்படுத்த மண் சட்டியைத் தேடிப் பிடித்து வாங்கிக் கொடுத்தார் என் கணவர்.

வாங்கிய அன்றே பாலைக் காய்ச்சி உறை ஊற்றின பின், ஆடாமல் அசையாமல் (இது என் கணவருக்கு அவர் ஆபிசில் கிடைத்த டிப்ஸ்) சர்வ ஜாக்கிரதையாக மெதுவாக கீழே வைத்தேன்.  தயிர் உறைந்தால் பிள்ளையாருக்கு 108 தேங்காய் உடைப்பதாக வேண்டிக் கொண்டு படுத்தேன்.

மறுநாள் காலை முதல் வேலையாக மண்சட்டி மூடியைத் திறந்துமெதுவாக... ஒரு ஸ்புனால் தொட்டேன். தயிரை டிஸ்டர்ப் செய்யக் கூடாதல்லவா?

'லொடக்" என்று ஸ்பூன் உள்ளே போனது. "நான் இன்னும் பாலாகத் தான் இருக்கிறேன்" என்று சொல்லாமல் சொல்லியது பால்.

சரி இதற்கு மேல் என்ன செய்வது? வெறுத்துதான் போனேன்.

அப்படி, இப்படி, கடையில் தயிர் வாங்கி ஓட்டிக் கொண்டிருந்தோம். இப்போழுது போல், sealed packet இல் தயிர் கிடைக்காது.

அதனால்தான் வீட்டில் தயிருக்காக பிரம்மப் பிரயத்தனம் எடுத்துக் கொண்டேன்.

அப்பொழுது ஒரு நாள் இவர் நண்பர் வீட்டிற்கு சாப்பிடக் கூப்பிட, அங்கு சென்றோம். ஆசையாய் காத்திருந்தேன்...  தயிருக்காக.

வந்தது அந்த நொடியும்.

என் தட்டில் கட்டித் தயிர். ஆசையாய் சாப்பிட்டுக் கொண்டே

என் கேள்விகள் ஸ்டார்ட்...

என்ன பால் வாங்குகிறீர்கள்?

இது வாங்கிய தயிரா? இல்லை வீட்டிலேயே உறை ஊற்றியதா?

கண்டிப்பாக அந்தம்மா குழம்பிப் போயிருக்க வேண்டும். ஆனாலும் ஒரு தயிர் டிப்ஸ் கிடைத்தது.

அந்தம்மா சொன்னபடி பாலை உறை ஊற்றி கோதுமைமாவு டின்னிற்குள் டைட்டாக மூடி வைத்தேன். ம்க்கும்.... அதுவும் எனக்கு வேலை செய்யவில்லை.

என்னை சுற்றி எல்லோருமே வேண்டுமென்றே நான் தயிர் சாப்பிடக் கூடாதென்று சதி வலை பின்னுகிறார்களோ? அதுதான் தயிர் ரகசியத்தை யாருமே சரியாக சொல்ல மாட்டேன் என்கிறார்கள் என்ற சந்தேகம் வந்தது.

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறார் போல் என் கணவரோ "கவலையே பாடாதே இனிமேல் தயிர் என்று பேப்பரில் எழுதிக் கொடு பார்த்துக் கொண்டே சாப்பிட்டு விடுகிறேன்" என்று சொன்ன போது அழுகை வராததுதான் குறை..

யார் என்ன சொன்னாலும் அந்த யோசனையை நடைமுறைப்படுத்த தவறியதேயில்லை.

ஆனால் எதுவும் சரியாக வரவில்லை.

கடைக்காரர் அருளினால்தான் தயிர் சாப்பிட்டோம்.

இந்த தயிர் கூத்தும் ஒரு நாள் முடிவிற்கு வந்தது.

ஆமாம் ஒரு நாள் தயிர் உறைந்தே விட்டது. (ஒருபக்கம் ஆச்சர்யம். ஒரு பக்கம் அளவிட முடியாத சந்தோஷம் எனக்கு)

காரணம் குளிர் கொஞ்சம் குறைய ஆரம்பித்திருந்தது.

அன்று, நான் தயிருக்கு விழா எடுக்காததுதான் பாக்கி.

இப்பொழுது உங்களுக்குப் புரிந்ததா? தயிர் செய்வது எவ்வளவு கஷ்டம் என்று ஒத்துக் கொள்கிறீர்கள்தானே!

இப்பொழுது மூன்று வருடத்திற்கு முன்பாக மீண்டும் டில்லி வாசம்.

மீண்டும் "தயிர் புராணமா"? என்று சலித்துக் கொள்ள வேண்டாம்.

Nestle, Amul, Mother Dairy என்று பலரின் உதவியுடன் தயிர் சாப்பிட்டோம்.

வாழ்க்கைமுறை எவ்வளவு சுலபமானது பார்த்தீர்களா?                                              


94 கருத்துகள்:

  1. உருளை கட்லெட் வீட்டில் செய்யச் சொன்னதே இல்லை. என் ஆசை, கார ரோஸ்ட் கறி இல்லைனா அதீத வெங் பெரிதாக திருத்தி கொஞ்சம் உருளை மசித்த கறி.

    கட்லெட் ருசித்ததே இல்லை. கெச்சப்புடன் ரொம்ப நல்லா இருக்கும்னு தோணுது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை..  நேற்று நான் இதை வீட்டில் செய்து பார்த்தது தனி அனுபவம்!  உருளை ஓவராக வெந்து விட்டது!

      நீக்கு
    2. வாங்க நெல்லை....இது நல்லாவந்திச்சு. நல்லாருக்க்ம்.

      வேக வைக்காமல் தோல் நீக்கிச் செய்யலாம் அப்படிச் செய்யும் போது உருளையை கொஞ்சம் மெலிதான வில்லைகளாகப் போட்டுக்கணும். இப்படிச் செய்து தோசைக்கல்லில் போட்டதும் மூடி போட்டு ஒருபக்கம் மட்டும் அப்புறம் திருப்பிப் போட்டு மூடி போடாமல் செய்யலாம்

      கட்லெட் நா எண்ணை வைக்கணுமே ஹிஹிஹி அதான் இப்படி

      நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
    3. வெந்த உ.கி.யை ப்ரெடுடன் சேர்த்து மசித்து உப்பு, காரம், வேக வைத்து மசித்த காய்களைச் சேர்த்துக் கொண்டு நன்கு பிசைந்து கொண்டு உருட்டித் தட்டையாக வடை போல் தட்டி ப்ரெட் க்ர்ம்ப்ஸ் சேர்த்துப் பின்னர் தோசைக்கல்லில் போட்டு இரு பக்கமும் வேக வைத்து எடுத்தால் நிஜமான கட்லெட். விடுங்க. இது வங்காளிகள் கத்திரிக்காயில் அடிக்கடி செய்யும் ஓர் உணவு வகை. உ.கி.க்குப்பதிலாகக் கத்திரிக்காய் சேர்க்கணும். இப்படி வில்லை வில்லையாக நறுக்கிக் கொண்டு.

      நீக்கு
    4. கட்லெட்டுக்கு அப்படி எல்லாம் எண்ணெய் ஆகாது. இதே போல் செய்யலாம். அல்லது ஆலு டிக்கியும் பண்ணலாம். எனக்கு டிக்கி ரொம்பப் பிடிக்கும். உ.கி.வெந்ததையே அரைத்துக் கொண்டு கையால் பிசைந்தால் மைதா பிசைந்தாற்போல் வருமே. அக்டில் உள்ளே வெந்த வெஜிடபுள் கலவையை வைத்து மூடி தோசைக்கல்லில் இருபக்கமும் முறுமுறுவென வேக விட்டு எடுத்தால் பாட்டீஸ். (பாட்டி இல்லை, பட்டீஸ் அல்லது பாட்டீஸ்) இதுக்குத் தொட்டுக்க பச்சைச் சட்னி, சிவப்புச் சட்னி. ராஜஸ்தானில் அஜ்மேர் மதார்கேட்டில் இந்தப் பாட்டீஸோடு கொண்டைக்கடலை சாட் மசாலாவும் சேர்த்துக்கொடுப்பார்கள்.

      நீக்கு
    5. "அதில்" அக்டில்னு வந்திருக்கு.

      நீக்கு
  2. உருளையும் வெங்காயமும் இல்லைனா தென் இந்தியர்களுக்கு கொஞ்சம் கஷ்டம்னா, வட இந்தியர்களுக்கு ரொம்பவே.

    படங்கள் நல்லா வந்திருக்கு. செய்முறை எளிது.

    பிரட் க்ரம்ஸ் கடைகளில் கிடைக்குமா? வாழைக்காய்ல இதுபோல செய்ய முடியுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியாகச் சொன்னீர்கள். சாப்பிடுபவர்களுக்கும், சமையல் செய்பவர்களுக்கும் உருளை கடவுள் மாதிரி!

      நீக்கு
    2. நெல்லை அண்ட் ஸ்ரீராம் டிட்டோ...இது அப்பாவிக் கிழங்கு.

      ஆமாம் செய்முறை ரொம்பவே எளிது. ப்ரெட் கரம்ஸ் கடைகளில் கிடைக்குது நெல்லை, எம் கே அஹமெட் கடைகளில். லுலு மாலில் கண்டிப்பாகக் கிடைக்கும்.

      நான் உப்பு ப்ரெட்டை பொடித்துக் கொண்டேன். கொஞ்சம் உலர விட்டு..

      கீதா

      நீக்கு
    3. நெல்லை ஆமாம் வாழைக்காயிலும் செய்யலாம்

      கீதா

      நீக்கு
    4. பிரட் க்ரம்ஸ்  நேற்று கடையில்தான் வாங்கினோம்.

      நீக்கு
    5. //வாழைக்காய்ல இதுபோல செய்ய முடியுமா?// முடியும். ஒரு முறை என் பெண்ணும், மாப்பிள்ளயும் கனடாவிலிருந்து இந்தியா வந்தபொழுது சென்னை அடையாறு மத்ஸ்யாவில் பஃபே டின்னரில் வாழைக்காயில்தான் இதைப்போல செய்திருந்தார்கள். வாழைக்காய் பிடிக்காத என் அக்கா பேரனுக்கு உ.கி. என்று சொல்லி கொடுத்ததும் சாப்பிட்டு விட்டான்.
      சர்க்கரைவள்ளிக் கிழங்கிலும் செய்யலாம் என்று நினைக்கிறேன்.

      நீக்கு
    6. ஆமாம் பானுக்கா, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, புடலை, பீர்க்கங்காய், சேம்பு (வேக வைத்து) கத்தரி, ஏன் வெங்காயத்திலும், அதாவது பஜ்ஜி செய்யப் பயன்படுத்தும் எல்லாவற்றிலும்...வெங்காயத்துல செய்யும் போது கொஞ்சம் கவனமா இருக்கணும். ரவுன்ட் பிரி உதிர்ந்து வெளிய வந்துவிடுமே. கத்தரிக்காயில் செய்யறப்ப மெலிதாக நறுக்கிக் கொள்ள வேண்டும் பஜ்ஜிக்குச் செய்வது போல.

      கீதா

      நீக்கு
    7. சர்க்கரை வள்ளிக் கிழங்கு மசால் தோசை சாப்பிட்டிருக்கிறீர்களா? நன்றாக இருக்கும் ஒரு அசட்டு தித்திப்புடன். செய்து எ பி யில் இடுங்கள்.

      நீக்கு
    8. ப்ரெட் க்ரம்ப்ஸ் வீட்டிலே செய்வது எளிது.

      நீக்கு
  3. பெண்களுக்கு மாத்திரம் திருமணமாகி முப்பத்தாறு வருடத்திலேயே பேரன் பேத்திகளோடு நின்றுவிடுகிறார்கள். ஆண்களுக்கு அப்படி நிகழாத்தின் இளமை ரகசியம் என்ன?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புரியவில்லை.  இது ஒரு விளம்பர பின்னூட்டமோ?!

      நீக்கு
    2. புதன் கேள்விக்கு அனுப்ப வேண்டியதை இங்கே அனுப்பி விட்டீர்களா நெல்லை?

      நீக்கு
    3. அதான் எழுத்தாளர் ஒல்லியிருக்கார் இல்லையா.. 36 வயது இளமையில் வாசலில் பேரன் பேத்திகளுடன்னு.

      நான்தான் சரியா படிக்கறதில்லைனா, மற்றவர்களுமா?

      நீக்கு
    4. நெல்லை சிரித்துவிட்டேன்....

      //நான்தான் சரியா படிக்கறதில்லைனா, மற்றவர்களுமா?//

      அந்த வரிய கொஞ்சம் சரியா வாசிச்சுப் பாருங்க!!!!! வயதுன்னு சொல்லவே இல்லையே!!

      //எங்களுக்குத் திருமணமாகி ஒரு முப்பத்தாறு வருடம்தான் ஆகிறது. இளமையின் வாயிற்படியில் பேத்தி பேரன்களுடன் நிற்கிறோம்.//

      இதுதானே அவர் சொல்லியிருக்காங்க!!!

      கீதா

      நீக்கு
    5. ஹிஹிஹி, நானெல்லாம் ரொம்பவே குழந்தை. கல்யாணம் ஆகி 25 வருடங்களே. பெண்ணுக்குக்கல்யாணம் ஆகிப் பேத்தி 26 ஆம் வருடத்திலே. எனக்கு 46 வயது தான். பேத்தி ரொம்ப வருடம் பாட்டினே கூப்பிட மாட்டா. :( பின்னர் ஏழு வயதில் அவளோட மாமா கல்யாணத்துக்கு வந்தப்போ தான் என்னைப் பாட்டினே ஒத்துண்டா. :(

      நீக்கு
  4. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா... வணக்கம். இணைந்து பிரார்த்திப்போம்.

      நீக்கு
  5. வணக்கம் சகோதரி

    இன்றைய திங்களில், தங்கள் செய்முறையான உ. கி ரோஸ்ட், உ கி கட்லெட் படங்களுடனும், அருமையான செய்முறைகளுடனும் அழகாக, பார்க்கும் போதே சாப்பிடத் தோன்றும் சுவையுடனும் வந்துள்ளது. சாதத்திற்கு அதுவும் மோர்/ தயிர் சாதத்திற்கு வெகு பொருத்தம். தனியாகவும் மாலை சிற்றுண்டிக்கென இதை சாப்பிடலாம். நினைக்கும் போதே மனதிற்குள் சாப்பிட்ட உணர்வு ரம்மியமாக உள்ளது.

    பிரெட் பொடிக்கு நம் வீட்டிலேயே மிக்ஸியில் பொடி செய்து கொள்ளலாமா? இல்லை கடைகளில் இது விற்பனைக்குள்ளதா? முதலில் உ. கி பற்றிய விமர்சனமும் படிக்க நன்றாக இருந்தது. மிக நன்றாகவும் பக்குவமாகவும் செய்துள்ளீர்கள் பாராட்டுக்கள்.

    எங்கள் வீட்டிலும் உ. கி அனைவருக்கும் பிடிக்கும். இது கொஞ்சம் வாய்வு பதார்த்தம். ஆனாலும் அது நம்மை ஆசையுடன் பிடிக்கிற மாதிரி நமக்கும் ஆர்வத்துடன் அதை ஒருகைப்பிடிக்கும் ஆசை நிச்சயம் வரும். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கமலாக்கா தயிர் சாதத்துக்குனல்ல கோம்போ....கூடவே குட்டீஸுக்கு ரொம்பப் பிடிக்கும் அப்படியே சாப்பிட்டுடுவாங்க

      நன்றி கமலாக்கா.

      அப்பால வாரேன்

      கீதா

      நீக்கு
    2. கமலாக்கா, வாய்வு என்பதால்தான் அதுக்குதான் கொஞ்சம் பூண்டு சேர்ப்பது.

      நன்றி கமலாக்கா

      கீதா

      நீக்கு
  6. வணக்கம் சகோதரி

    இறுதி படம் உ. கி பஜ்ஜியை நினைவூட்டுகிறது. ஆனால், இந்த உ. கி வில்லைகள் பத்திரமாக, குளிருக்கு அடக்கமாக பிரெட்டெனும் போர்வையை போர்த்தியபடி, எண்ணெய் குளத்தில் / கிணற்றில் நன்றாக முங்கி குளிக்காமல், குளித்தோமென ஒரு பாவ்லா செய்தபடி வந்திருக்கிறது. "எல்லாம் உங்கள் நன்மைக்கே" என்ற ஒரு பெருமித பார்வை வேறு பார்க்கிறது. சூப்பர் செய்முறை. உங்கள் பொறுமைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். இது போல கத்திரிக்காய், வாழைக்காய் அனைத்தையும் செய்யலாம். நானும் செய்துக் பார்க்கிறேன். நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கத்தரி ரொம்பவே குழைந்துவிடுமே. நல்லா வேகலைனா அரிக்கும். பஜ்ஜி நினைவில் எழுதியிருப்பாரோ?

      நீக்கு
    2. இல்லை சகோதரரே. கத்திரி பஜ்ஜி நன்றாக சுவையுடன் இருக்கும். உப்புக்கார மாவுகளுடன் (ருசிக்கு கடலைமாவு கண்டிப்பாக அவசியம்.) சேர்ந்து விடும் போது அரிக்காது . இரண்டாவது அன்றைய தினத்தில் நமக்கென அமையும் கத்திரியின் (யோகம் நமக்கா , கத்திரிக்கா என்பது வேறு விஷயம்) யோகத்தையும் குறிப்பிட வேண்டும். மேலும், இதை எண்ணெயில் முங்கி குளிக்கச் சொல்லி விட்டால், அதன் ருசியே அலாதி. ஆனால் சகோதரி கீதாரெங்கன் போல நானும் கத்திரியை வைத்து தோசைக்கல்லில் இவ்வாறு செய்து (பிரெட் பொடி இல்லாமல்) ஒரு பதிவு போட்டிருக்கிறேன் என நினைக்கிறேன். அந்த நினைவில் சொன்னேன். நன்றி.

      நீக்கு
    3. சில நாட்களாகவே எனக்கு கத்தரி பஜ்ஜி சாப்பிடும் ஆசை இருக்கிறது.  வீட்டிலும் செய்வதில்லை.  கடைகளிலும் கிடைப்பதில்லை.  இப்ப நீங்க வேற நினைவு படுத்திட்டீங்க..  என்னவோ போங்க..

      நீக்கு
    4. கத்திரி பஜ்ஜி போல் பீர்க்கங்காய் வைத்து பஜ்ஜி செய்தால் அது இன்னமும் சுவையாக இருக்கும். எண்ணெய் என்ற எண்ணம்தான் இந்த பஜ்ஜி வகைகளை சாப்பிட செய்யாமல் தடுத்து வருகிறது. இருப்பினும் நேற்று குழந்தைகளுக்காக வீட்டில் பூரி செய்தோம் . எனக்கு நாலு பூரி (சிறியதாகத்தான்) தொண்டையை கொஞ்சம் பதம் பார்த்தது.

      நீக்கு
    5. எனக்கு எங்கம்மா பண்ணிப்போடாத எதுவும் பிடிக்காது, பண்ணச் சொல்ல மாட்டேன், பண்ணினால் சாப்பிட மாட்டேன். யாத்திரையில் ஒரு தடவை கத்தரி பஜ்ஜி சாப்பிட்டு ரொம்பவே பிடித்துப்கோக, மனைவியைப் பண்ணச் சொல்லுவேன். அதுக்காக நல்ல பெரிய கத்தரி வாங்கிவருவேன்.

      அதுவும் கெச்சப்பும் யம்மி யம்மி.

      எனக்கு புடலை வட்டமாகத் திருத்திய பஜ்ஜி பிடிக்கும். வாழைக்காய் பஜ்ஜினா வெளீல கிடைக்கும் நீள பஜ்ஜிதான் ரொம்பப் பிடிக்கும். முன்பு எனக்கு வெங் பஜ்ஜியும் தயிர் சாதமும் ரொம்பப் பிடிக்கும். பஜ்ஜி மிளகாய் மனைவி பல தடவைகள் செய்வாள், என் வாய் சும்மா இருக்காமல் உள்ளே ஸ்டஃப் செய்திருப்பதை ஒவ்வொரு முறையும் ஏதோ சொல்ல, அந்த பஜ்ஜி பண்ணுவதையே நிறுத்திவிட்டாள். பஜ்ஜி மிளகாய் வாங்கிவந்தாலும் கிடையாது.

      நீக்கு
    6. நெல்லை இப்படி எல்லாம்னா எதுவுமே சுவைத்துப் பார்க்க முடியாது பாருங்க, இப்ப கத்தரி பிடிச்சிப் போய் சாப்பிடறீங்க.

      கமலாக்கா அதேதான். கத்தரி, சேம்பு, வெங்காயம், ச வ, எல்லாத்துலயும் செய்யலாம் மேலே சொல்லிருக்காப்ப்ல..

      //பஜ்ஜி மிளகாய் மனைவி பல தடவைகள் செய்வாள், என் வாய் சும்மா இருக்காமல் உள்ளே ஸ்டஃப் செய்திருப்பதை ஒவ்வொரு முறையும் ஏதோ சொல்ல, அந்த பஜ்ஜி பண்ணுவதையே நிறுத்திவிட்டாள்.//

      ஹாஹாஹா பாவம் அவங்க.

      //பஜ்ஜி மிளகாய் வாங்கிவந்தாலும் கிடையாது.//

      ஹாஹாஹா பின்ன அவங்க தன் சுயமரியாதையை விட்டுக் கொடுப்பாங்களா!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

      கீதா

      நீக்கு
    7. சேப்பங்கிழங்கில் இப்படிச் செய்வதை நான் கல்யாணம் ஆகி வந்தப்புறம் தான் தெரிந்து கொண்டேன். மாமியார் வீட்டில் எண்ணெய்க்கோ அல்லது சேப்பங்கிழங்குக்கோ பஞ்சம் இல்லை. சேப்பங்கிழங்கு வயல் வரப்பில் நிறையக் கிடைக்கும். தென்னந்தோப்பு இருந்ததால் எண்ணெய்க்குப் பஞ்சம் இல்லை. ஆகவே வாரம் ஒரு நாளாவது மாமியார் பண்ணுவாங்க. பின்னர் நான் ராஜஸ்தான் வந்ததும் பக்கத்து வீட்டு மராட்டிக்காரங்க மூலமாகப் பிஞ்சு வெண்டைக்காய்ச் சின்னச் சின்னதாக ஒரே மாதிரி அங்கெல்லாம் கிடைக்கும். அதில் பண்ணக் கற்றுக் கொண்டு, கத்திரிக்காயிலும் இந்த மாதிரி தோசைக்கல்லில் போடக் கற்றுக்கொண்டு பண்ண ஆரம்பித்தேன். மாம்னாருக்குப் பிடித்தது. ஊரில் போய்ச் சொல்லிப் பின்னர் அவங்களும் பண்ண ஆரம்பித்தனர். வெண்டைக்காய் மட்டும் சின்னச் சின்னதாக இருக்கணும். காம்பை அதிகம் வெட்டாமல் விட்டுட்டு நுனியில் மட்டும் பிளந்து கொண்டு வெண்டைக்காய இரு பகுதிகளாக ஆக்கிக் கொண்டு, மஞ்சள் பொடி, உப்பு, மிளகாய்ப் பொடி, பெருங்காயம் சேர்த்து வெண்டைக்காய்க்குள் அடைத்துச் சிறிது நேரம் வைச்சுட்டுப் பின்னர் கடலைமாவில் பஜ்ஜிக்குக்கரைக்கிறாப்போல் கெட்டியாகக் கட்ரைச்சு இந்த வெண்டைக்காயை அதில் போட்டு முக்கி எடுத்துப் பொரிச்சு எடுக்கணும். எண்ணெய் வைச்சே ஆகணும்.

      நீக்கு
    8. கத்திரி, பீர்க்கை போன்றவை தோசைக்கல்லில். பீர்க்கை அப்படியும் எண்ணெய் குடிக்கும். புடலையை நான் வட்டமாக நறுக்காமல் வாழைக்காய் பஜ்ஜிக்குப் போல் நீள வாட்டத்தில் நறுக்கிப்பேன்.

      நீக்கு
    9. பீர்க்கங்காய் கொஞ்சம் தண்ணீர்காய் இல்லையாக்கா அதனால் எண்ணை குடிக்கும்.

      நானும் புடலையை வட்டமாவும் வாழைக்காய் போல நீளமாவும் செய்து பஜ்ஜி செய்திருக்கிறேன். கீதாக்கா.

      கீதா

      நீக்கு
    10. வெண்டை பஜ்ஜியும் நல்லாருக்கும்...கீதாக்கா. உங்க அனுவபவங்களும்..நானும் அப்படிக்கற்றுக் கொண்டதுதான்.

      கீதா

      நீக்கு
  7. தயிருக்கே இவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறாரே... அப்படியானால் குளிர் காலத்தில் இட்லி, தோசை எல்லாம் கனவில்தான் சாப்பிட்டிருப்பாரா?

    மாவுப் பாத்திரத்தைச் சுத்தி கம்பளியால் மூட வேண்டும் அல்லது அவனில் வைக்கணும் எனப் படித்திருக்கிறேன்.

    தில்லி வெங்கட் வந்து சொன்னால்தான் உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த ராஜலக்ஷ்மி பரமசிவம் மேடம் பதிவுகளுக்கு நான் சென்றிருக்கிறேன்.  அவரும் இங்கு வந்து பின்னூட்டங்கள் இட்டிருக்கிறார்.  பரமசிவம் ஸாரும் அப்படியே..  முகநூலில் இன்னமும் அவர் எனது நண்பர்.

      நீக்கு
    2. ஸ்ரீராம் எனக்கும் பெயரைப் பார்த்ததும் எங்கேயோ பார்த்த நினைவு இருக்கே என்று தோன்றியது. எபிலதான் பழைய பதிவுகள்னு லைட்டா நினைவுக்கு வந்தது. அவங்க தளம் போனதில்லை.

      கம்பளி இல்லைனா ஓவனில் சூடு செய்துவிட்டு ஆஃப் செய்து வைத்தால். உறைந்துவிடும். என் தங்கை எல்லாம் திருமணம் ஆனதிலுரிந்து பல வருடங்கள் தில்லி வாசம்தானே. அதுவும் அவங்க மாமனார் மாமியார் வடக்கேதான் வாசம் எங்கள் உறவாக இருந்தாலும்.....அவங்க வீட்டில்தான் தயிர் உறையவைப்பாங்க.

      சரியான சூடு பதம் வேண்டும் குளிரில் உறைய வைக்க. மகனும் வீட்டில்தானே உறைய வைக்கிறான். அங்கு மைனஸ்ல 13, 18, 21 கூட போயிருக்கு...அவன் ப்ரெட் மெஷினில் தயிர் உறைய வைத்துவிடுகிறான்.

      கீதா

      நீக்கு
    3. 74 ஆம் ஆண்டில் முதல் தரம் ராஜஸ்தான் போனப்போவே நம்ம ரங்க்ஸ் இங்கெல்லாம் குளிர் ஜீரோ டிகிரிக்குக்கீழே மைனசில் இருக்கும். தயிர், மாவு போன்றவற்றை இரண்டு நாட்கள் முன்னரே தயார் செய்யணும் என்பார். அவன் அப்போல்லாம் இல்லை. ஆனால் ஹீட்டர் இருந்தது. ஆகவே சமையலறையிலேயே பாலைக் காய்ச்சினதும் கொஞ்சம் வெதுவெதுப்பாக இருக்கும்போதே இரு தேக்கரண்டி உறை மோரை விட்டு நன்கு கலக்கிட்டு ஹீட்டர் பக்கம் வைச்சுடுவேன். மாவையும் காலையிலேயே அரைச்சு (மத்தியானம் அரைச்சால் கையெல்லாம் இழுக்கும்.) சமையலறையிலேயே ஹீட்டர் பக்கம் வைச்சிருப்பேன். ராத்திரி படுத்துக்கும்போது ஹீட்டரை அணைச்சுட்டு மாவைக் கொஞ்ச நேரம் கழிச்சு அதன் மேல் வைச்சுடுவேன். சமையலறை சூடாக இருக்கும் என்பதால் மாவு இரு நாட்களில் பொங்கிடும். புளிக்காது. புதன்கிழமைக்கு மாவு வேண்டுமெனில் ஞாயிற்றுக்கிழமையே அரைச்சு வைப்பேன். அதிகம் சிரமப்பட்டதில்லை.

      ஆனால் ஆதி வெங்கட் தயிர் உறையாமல் சிராப்பட்டதைப் பதிவாகப் போட்டாங்க. டெல்லியில் இருந்தப்போவா என்னனு நினைவில் இல்லை.

      நீக்கு
    4. ராஜலக்ஷ்மி பரமசிவம் நல்ல சிநேகிதி. என் பதிவுகளுக்கு அவரும், அவர் பதிவுகளுக்கு நானும் விடாமல் போயிருக்கோம். திடீரெனப் பதிவுகளே வரலை. காணாமல் போனார். இதே போல் ராஜராஜேஸ்வரி என்னும் பதிவரும். ஆனால் அவர் இறந்து விட்டதாக அவர் மகன் அவரோட பதிவில் போட்டிருந்தார். பரமசிவம் அவர்களை நான் முகநூலில் பார்த்தது இல்லை.

      நீக்கு
    5. சிரமப்பட்டதை "சிராப்பட்டதை" நு வந்திருக்கு. :(

      நீக்கு
  8. கஹ மேடமே வந்தாச்சு. இந்த ஶ்ரீராமுக்கு என்ன ஆச்சு?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா.க. ஹ வுக்கு "திங்க" ஆர்வம் என்கிறீர்களா? ஆனாலும், இப்போது ருசிக்காக எதையும் சாப்பிட மனமும், நாவும் ஒத்துழைக்கவில்லை. பசிக்காக மட்டுமே..! சகோதரர் ஸ்ரீராம் க. வே யில் பிஸியாக இருப்பார். நன்றி.

      நீக்கு
    2. கமலா அக்கா சொல்வது ஓரளவு உண்மை நெல்லை..   மேலும் கீதா வந்து பதில் கொடுப்பார் என்று காத்திருந்தேன்.  அவர் இன்னமும் காணோம்!

      நீக்கு
    3. ஆமாம்..! அவரையும்( சகோதரி கீதாரெங்கன்) இதுவரை காணவில்லையே..! நானே அதிசயமாக வந்து விட்டேன். அவர் பதிவுக்கு முதலில் வருபவராயிற்றே.. பஜ்ஜி மாவு இன்னமும் தீராமல் வேறு ஏதாவது திப்பிச வேலைகளில் ஈடுபட்டுள்ளாரோ. ?

      நீக்கு
    4. கஹ மேடம்... இப்போதும் ருசிக்காகவே நான் சாப்பிடுவேன். தினமும் என் எடை பார்த்து எழுதும் வழக்கம் உள்ளதால், எண்ணெய் மிக்க் குறைவாகவே உபயோகிப்பாள் எனக்காகச் செய்யும் எல்லாவற்றிலும். அதுபோல எனக்கு கண்ணாடி ஜவ்வரிசி பெரிய சைஸ், சேமியா போட்டு பாயசம் மாதிரி ஆனால் ஜீனி மிக்க் குறைவாகச் செய்து தரச் சொல்லுவேன் (நல்லா இரண்டு பெரிய கப்). அதற்கும் என் பையன் வேட்டு வைத்துவிட்டான். நல்லா எப்போதும் பண்ணற மாதிரி பாயசம் ஒரு கரண்டி சாப்பிடுவது, ஜீனி குறைவாக இரண்டு பெரிய கப் சாப்பிடுவதைவிட பெட்டர்னு சொல்லிட்டான்.

      நீக்கு
    5. ஸ்ரீராம், இன்று திங்கக்கிழமை வீட்டில் திங்க செய்யணுமே அதுவும் கம்பு இடியாப்பம், மோர்க்குழம்பு, வாழைக்காய் வதக்கல், மதியத்திற்கு வரகரிசி இட்லி!!

      கீதா

      நீக்கு
    6. நெல்லை, சூப்பர் உங்க பையன். நல்ல பாயின்ட்!!!!

      கீதா

      நீக்கு
    7. அது சரி, யாரோ இங்க கேட்டாப்ல நினைவு...."என்னாது ஜவ்வரிசி பாயஸ்மா?" கஞ்சின்னு சொல்லுங்கன்னு!!!!ஹாஹாஹாஹாஅ.....

      கீதா

      நீக்கு
    8. இடியாப்பம் செய்யும் மிஷின் வாங்கினாலும் வாங்கினீங்க.. கம்பு, ராகினுலாம் விதவிதமா செய்யறீங்க. சூப்பர்.

      சேவை மாதிரி ஒரு டிபன் கிடையாது. அதில் ரொம்ப எண்ணெய் (தேங்காயெண்ணெய்) விடாமல் செய்யும் கலந்த சாதங்கள் ரொம்பவே பிடிக்கும்.

      நீக்கு
    9. தி/கீதா, கம்பில் இடியாப்பமா? நான் செய்து பார்த்ததில்லை. இங்கே பகிருங்கள். செய்யப் போறதில்லை. மாமா இல்லை என்பதால் அவ்வளவெல்லாம் ஆர்வம் இல்லை. சும்மா தெரிஞ்சுக்கலாம். அதோட என் சேவை நாழியை நான் எங்க வீட்டில் வேலை செய்யும் பெண்ணிடம் கொடுத்துட்டேன். மாமா போனதுமே அதெல்லாம் இனிமே எதுக்குனு தூக்கிக் கொடுத்துட்டேன்.

      நீக்கு
    10. வரகு அரிசியில் இட்லி, தோசை, அடை, பொங்கல், தேன்குழல், குழி ஆப்பம்னு எல்லாமும் பண்ணியாச்சு. பண்ணிண்டும் இருந்தேன். எங்க குடியிருப்பு வளாகத்தில் ஒரு சிநேகிதி வரகரிசியில் வெண்பொங்கல் நான் நன்றாகச் செய்வதாகச் சொல்லுவார்.. சாதமாக வடித்துக் கொண்டு பிசைந்த சாதங்களும், வெஜிடபுள் சாதம், தக்காளி சாதமாகவும் பண்ணலாம். பண்ணி இருக்கேன். வரகு அரிசி, குதிரை வாலி இரண்டும் இங்கே கூடக் கொண்டு வந்திருக்கேன். ஆனால் எனக்கு மட்டும் என்பதால் பண்ணுவதில் அவ்வளவு ஆர்வம் இல்லை.

      நீக்கு
    11. புதன் கேள்வி - கௌதமன் சார் பார்ப்பாரா?

      நம் ஒருவருக்குத்தான் என்று வந்துவிட்டால், ஏன் நன்றாக வித விதமாகச் சமைக்கும் எண்ணம் வரமாட்டேன் என்கிறது? எதையோ பண்ணிச் சாப்பிட்டால் போதும் என்ற எண்ணம் ஏன் வருகிறது? சமைப்பது என்பதே மற்றவர்களுக்கு ருசியாகச் செய்யும் எண்ணம் காரணமாகத்தானா?

      நீக்கு
    12. ஆமாம், நெல்லை. சாப்பிடனு ஒருத்தர் இருந்தாத் தான் எதுவுமே பண்ணத் தோன்றும். இங்கே தினசரி சாப்பாட்டில் பையர், மருமகள் எல்லாம் சிம்பிளாக ஏதோ ஒண்ணுனு சாப்பிட்டுக்கறாங்க. ராத்திரி தான் ஏதேனும் புதுசா. அதை மருமகள் பண்ணிடுவா எல்லோருக்கும் சேர்த்து. லீவு நாட்களில் அவங்களுக்குனு சமைத்து முடிக்கையில் ஒன்றரை மணி ஆயிடும். ஏன்னா எழுந்துக்கறதே எட்டரைக்குப் பின்னர் தான். ஆகவே நான் அன்னிக்கும் என் பாட்டைப் பார்த்துக்கொண்டு விடுவேன். சாதமும் அந்தத் தக்காளிச் சாறு ரசமும் ரொம்ப போரடிச்சா அதிலேயே கொஞ்சமாகப் பருப்பைப் போட்டு முள்ளங்கியோ, பாகற்காயோ போட்டு சாம்பார் மாதிரிப் பண்ணிப்பேன். வீட்டில் ஏதேனும் சிப்ஸ் இருக்கும். அதைத் தொட்டுக்குவேன். இன்னிக்குக் கூட அப்படித் தான். முள்ளங்கியை வேக வைத்துப் பருப்புச் சேர்த்துத் தக்காளிச் சாற்றில் சாம்பார்ப்பொடி போட்டுக் கொதிக்க வைத்தது. சாதம், தயிர்/மோர், மாங்காய்த் துண்டம் ஊறுகாய். ஊறுகாய் அவங்களுக்குக் கடையில் வாங்கறாங்க. ஆனால் நான் என் வரை பண்ணி வைச்சுக்கறேன். இதோடு தனியா எலுமிச்சை, மாங்காய்,, இஞ்சி, பச்சை லிளகாய், பச்சைப் பட்டாணி, கொண்டைக்கடலை, வெந்தயம் எல்லாம் போட்டு ஒண்ணு பண்ணி வைச்சிருக்கேன். சப்பாத்திக்குத் தொட்டுக்கலாம்னு.

      நீக்கு
    13. இடியாப்பம் செய்யும் மிஷின் வாங்கினாலும் வாங்கினீங்க.. கம்பு, ராகினுலாம் விதவிதமா செய்யறீங்க. சூப்பர்//

      ஹாஹாஹா நெல்லை....சிரித்துவிட்டேன்

      கீதா

      நீக்கு
  9. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    சகோதரி ராஜலட்சுமி பரமசிவம் அவர்கள் தயிருடன் பட்ட பாட்டை நல்ல நகைச்சுவையுடன் கூறியுள்ளார்.படித்து ரசித்தேன். இங்கு பெங்களூர் குளிருக்கே சென்ற தடவை நான் தயிரை காணாது கொஞ்சம் அவஸ்த்தைப்பட்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒருவேளை ஒரு வாரத்துக்கு முன்னரே உரை குத்தியிருக்க வேண்டுமோ என்னவோ..   இந்தப் பதிவுக்கு நான் சென்ற நினைவு.  அப்புறம் இந்த தயிர் உறைதல் பற்றி நிறைய பேர் பதிவிட்டார்கள்.

      நீக்கு
    2. பெங்களூர்ல குளிரா? ஓ பல மாதங்களுக்கு முன் உள்ள நிலையா? இப்கோ வெயில் அதிகம். மாவு ரொம்ப பொங்குது. இரண்டு நாளில் கெட்டுப்போகுது கடையில் வாங்கும் மாவு.

      நீக்கு
    3. கமலாக்கா. பெங்களூர்ல உறைந்துவிடுமே மதியமே உறை போட்டு வைத்துவிட்டால் மறுனாள் சரியாக உறைந்துவிடும் இல்லைனா குக்கர் பாத்திரத்திற்குள் வைத்து மூடி போட்டு வெயிட்டையும் போட்டு விட வேண்டும். அடுப்புல இல்லைங்க....!!!!ஹிஹிஹி

      நெல்லை சொல்லியிருப்பது போல் இப்ப பொங்கோ பொங்குன்னு பொங்குது. நான் கொஞ்சமாக அரைத்துக் கொள்கிறேன். ஒரு நாள் ஒன்றரை நாள் வராப்ல. ஃப்ரிட்ஜில் வைக்கும் வழக்கமும் இப்ப இல்லை...அதனால்

      கீதா

      நீக்கு
    4. நெல்லை, தயவு செய்து யாராக இருந்தாலும் சரி. இட்லி, தோசை மாவை வெளியில் அரைச்சுத் தருவது மட்டும் வாங்காதீங்க. வயிறு கெட்டுப் போவது நன்றாகத் தெரியும். கொஞ்சமாக அரைக்கணும்னால் ப்ரீத்தி மிக்சியும் ஜாரும் சரியா வரும். உளுந்தை அரை மணி, ஒரு மணி ஊற வைச்சால் போதும். அப்போவே ஒரு செம்பில் ஜலத்தைக் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கணும். பின்னர் மாவு அரைக்கையில் முதலில் ஜலமே விடாமல் அரைச்சுட்டுப் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாகக் குளிர்ந்த நீரை விட்டு அரைச்சால் உளுந்து மாவு நன்கு அரைபட்டுப் புசுபுசுவென வந்துடும். பின்னர் அரிசியைக் கொஞ்சம் நைசாகவே அரைச்சு மாவில் சேர்த்து உப்புப் போட்டு வைச்சுட்டால் தேவையானால் மாலை தோசை, மறுநாள் காலை உணவுக்கு இட்லி, இரவுக்கு ஊத்த்ப்பம் அல்லது மறுபடி தோசைனு பண்ணிக்கலாம். அளவாக அரைச்சால் போதுமே. மாவெல்லாம் வாங்கவே வாங்காதீங்க.

      நீக்கு
    5. இங்க பக்கத்துல ஒருத்தர் வித வித மாவுகளை அரைத்து விற்கிறார் (நம்மூர்க்காரர்). எனக்கு தோசை சாப்பிடணும் என்று தோன்றும்போது அங்கு போய் மாவு வாங்கிவருவேன். மனைவி கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்பாள். எந்த தோசை மாவு வேணும்னாலும் நானே அரைத்துவிடுகிறேன், வெளியில் வாங்கினால் உடலுக்கு நல்லதில்லை என்பாள். ஆனால் பாருங்க, கடையில் வாங்கி கொஞ்சம் மிஞ்சிவிட்டால் அல்லது இரண்டு நாட்களுக்கு மேல் ஆகிவிட்டால் தூரப்போடச் சொல்லிவிடுவேன். ஆனால் மனைவி அரைத்து, இரண்டு நாட்கள் சாப்பிடாமல் இருந்தால், எதுக்கு வம்பு?

      நீக்கு
    6. @ Nellai! வீட்டில் அளவாக அரைச்சால் நான்கு நாட்களுக்குள் தீர்ந்துடும். இல்லைனாலும் மிஞ்சின மாவோடு கொஞ்சம் அரிசி, பருப்பு, வெந்தயம் சேர்த்து ஊறவைத்து அரைத்துச் சேர்த்தால் புளிப்பை எடுத்துடும். ரொம்பவும் ஊறவைச்சுச் சேர்க்கக் கூடாது. மாவு நிறைய ஆயிடும். கடைசி நாள் மாவு அப்படியும் மிஞ்சினால் அதில் மைதாமாவு/க்டலைமாவு சேர்த்துக் காரம் போட்டு இஞ்சி, பச்சை மிளகாய், கருகப்பிலை போட்டுக் கடலைப்பருப்பை ஊற வைச்சுச் சேர்த்துத் தேவையானால் மி.பொடி சேர்த்துக் கரைச்சு வைச்சுட்டுப் பின்னர் குழி ஆப்பச் சட்டியில் ஊற்றி இருபக்கமும் வேக வைத்துச் சாப்பிடலாம். எந்தவிதச் சட்னியும் சரியா வரும். வெங்காயம் வேணும்னால் அதையும் வதக்கிச் சேர்த்துக்கலாம்.

      நீக்கு
  11. ​உருளைக்கிழங்கு விலை குறைவு. கிலோ 25 ரூ தான். காஸ் கிடைக்க கஷ்டப்படும் இந்நாட்களில் நிறைய சாப்பிட்டு நிறைய காஸ் உற்பத்தி செய்யலாம்.

    கட்லெட்டும் இல்லாமல் பஜ்ஜியும் அல்லாமல் இரண்டும் சேர்ந்த ஒன்றான இன்றைய கட்லெட் பஜ்ஜி பார்க்க நன்றாக உள்ளது.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஜெ கே அண்ணா. இப்ப காஸ் தட்டுப்பாடு என்பதால் செய்யாதீங்க. பூண்டு பேஸ்ட் போட்டுச் செய்வதால் வாய்வு அவ்வ்ளவு இருக்காது. நல்லாவும் இருக்கும்.

      கீதா

      நீக்கு
  12. உருளை கட்லட் செய்முறையும் படங்களும் நன்றாக இருக்கிறது.
    நீங்கள் சொல்வது போல் செய்ய உருலையை பக்குவமாக வேக வைக்க வேண்டும். பதமாக இருந்தால் தான் கட் செய்ய முடியும் அழகாய் இல்லையென்றால் உடைந்து விடும். பஜ்ஜிமாவு போல தோய்த்து கொண்டு பிரட் தூளை தூவி ரோஸ்ட் செய்து இருக்கிறீர்கள். இந்த முறையில் பிள்ளைகள் வரும் போது செய்து பார்க்கிறேன்.

    நீங்கள் சொல்வது போல வெட்டி மிளக்கு தூள் உப்புத்தூள் போட்டும் தோசை கல்லில் ரோஸ்ட் செய்யலாம். எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம் இவற்றுக்கு நன்றாக இருக்கும்.


    நான் ரஸ்க் தூலில் புரட்டிக் கொண்டு ரோஸ்ட் செய்து இருக்கிறேன்.
    வீட்டில் உருளை கறி மிச்சம் இருந்தால், பிரட் சாண்ட்விஜ்க்கு செய்த உருளை மசாலா மீதி இருந்தால் இப்படி கட்லட் செய்து விடுவேன் முன்பு குழந்தைகள் இருந்த போது . மகன் தனியாக உருளை நிறைய செய்து கட்லட் செய்து தர வேண்டியது தானே என்று கேட்பான்.

    பூரிக்கு செய்யும் உருளைகிழங்கு மீதியானால் கூட அதில் கோதுமை மாவை கலந்து வட்டமாக தட்டி ரஸ்க் தூளை தூவி மாலை நேரம் தோசை கல்லில் போட்டு செய்து கொடுத்து விடுவேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதிக்கா, பிள்ளைகளுக்கு ரொம்பப் பிடிக்கும். உகி அவங்களுக்குப் பிடிக்குமே

      //நீங்கள் சொல்வது போல வெட்டி மிளக்கு தூள் உப்புத்தூள் போட்டும் தோசை கல்லில் ரோஸ்ட் செய்யலாம். //

      ஆமாம் செய்ட்திருக்கிறேன் அக்கா. ரொம்ப நல்லாருக்கும்.

      //நான் ரஸ்க் தூலில் புரட்டிக் கொண்டு ரோஸ்ட் செய்து இருக்கிறேன்.//

      சூப்பர்...

      உருளை கறி மிச்சம் இருந்தால், பிரட் சாண்ட்விஜ்க்கு செய்த உருளை மசாலா மீதி இருந்தால் இப்படி கட்லட் செய்து விடுவேன் //

      இங்கும் அதேதான் வாழைக்காய் மீந்தாலும் இப்படித்தான்.

      //மகன் தனியாக உருளை நிறைய செய்து கட்லட் செய்து தர வேண்டியது தானே என்று கேட்பான்.//

      ஹாஹாஹா அந்த வயசு!

      பூரிக்கு செய்யும் உருளைகிழங்கு மீதியானால் கூட அதில் கோதுமை மாவை கலந்து வட்டமாக தட்டி ரஸ்க் தூளை தூவி மாலை நேரம் தோசை கல்லில் போட்டு செய்து கொடுத்து விடுவேன்.//

      சூப்பர் கோமதிக்கா. ஆமாம் இதுவும் நல்லாருக்கும்

      ப்ரெட் க்ரம்ஸ் இல்லைனா ரஸ்க் தூளும் நல்லாருக்கும்.

      கீதா

      நீக்கு
    2. நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
    3. ரவா கிச்சடி, சேமியா கிச்சடி வெஜிடபிள் போட்டது மிஞ்சினாலும் அதோடு கூட ஒரு உ.கி. வேக வைச்சதும் ப்ரெடும் சேர்த்துப் பிசைந்து கொண்டு கட்லெட்டாகவே தட்டி எடுக்கலாம். சாஸ் இருந்தால் ஓகே. இல்லைனா இருக்கவே இருக்கு பச்சைச் சட்னி, சிவப்புச் சட்னி. சிவப்புச் சட்னி எங்க வீட்டில் எப்போவுமே ஸ்டாக் இருக்கும்.

      நீக்கு
    4. சாபுதானா கிச்சடி, ஆலு போஹா போன்றவை மிஞ்சினாலும் இப்படிப் பண்ணிடலாம்.

      நீக்கு
  13. கீதா உருளை ரோஸ்ட் என்று போட்டு, சாதத்திற்கு தொட்டுக் கொள்ளலாம் என்று குறிப்பிட்டிருந்தாலும், எல்லோருக்கும் கட்லெட் என்றுதான் பதிவாகியிருக்கிறது.
    செய்முறை படங்களோடு சிறப்பு. உடனே செய்து பார்த்துவிட தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பானுக்கா சரியா பிடிச்சீங்க !!!!! ஹாஹாஹாஹா....செய்து பார்த்துடுங்க பானுக்கா அங்கு பேத்திகள் வேறு இருக்காங்களே. அவங்களுக்குப் பிடிக்கலாம்.

      நன்றி பானுக்கா

      கீதா

      நீக்கு
  14. ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள் என் பதிவுகளுக்கு தொடர்ந்து வருவார், என் பதிவுகளை வலைச்சரத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

    'புத்தகத்தின் பெயர் சிரிக்க வைக்கும் சொதப்பல்கள்.'

    அவர் பதிவை பகிர்ந்தமைக்கு நன்றி.
    அவர் பதிவில் இப்படி இடை இடையே நிறைய எழுதுவார்
    இப்போது ஸ்ரீராம் மூலம் முகநூலில் இருக்கிறார் என்று அறிந்து கொண்டேன்.

    நல்ல நகைச்சுவையாக தயிர் உறை ஊற்றிய அனுபவத்தை பகிர்ந்து இருக்கிறார். வலைதளத்திலும் பகிர்ந்து இருக்கிறார் என நினைக்கிறேன்.
    படித்த நினைவு .

    முன்பு மகள் வீட்டுக்கு டெல்லி போய் இருந்த போது தயிரை ஹாட்பேக்கில் தான் உறை ஊற்றி வைப்பேன். அதன் மேலும் கம்பிளியை சுற்றி வைப்பேன். அவள் தயிர் உறை ஊற்ற மெஷின் வாங்கி இருந்தாள் அதில் உறை ஊற்றி வைப்பதை விட ஹாட்பேக்கில் வைப்பது நன்றாக விரைவில் உறைந்து விடும்.

    பதிலளிநீக்கு
  15. ராஜலக்ஷ்மி பரமசிவம் வலைத்தள சுட்டி மூலம்

    கம்பனும் Passport

    அவர் பாஸ்போர்ட் தேடலையும், கம்பனின் பாடல் வரிகள் விளகத்தையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  16. ராஜலெக்ஷ்மி பரமசிவம் அவர்களைப் போலவே நானும் கூட பெங்களூர் வந்த புதிதில் தயிர் சரியாகத் தோயாமல் கஷ்டப்பட்டேன். மைக்ரோ வேவ் அவனை ப்ரீ ஹீட் பண்ணி அதற்குள் வைத்தால் தயிர் புளித்துப் போய் விடும். டில்லியிலிருந்து வந்த என் மருமகள் தயிர் தோய்த்த பாத்திரத்தை கம்பளியில் சுற்றி வைத்தால் தயிர் நன்றாகத் தோயும் என்றாள். அதன்படி செய்தோம், நல்ல தயிர் கிடைத்தது. எங்கள் வீட்டில் தயிர் பாத்திரத்தை சுற்றி வைக்க தனியாக கம்பளி வைத்திருக்கிறோம்.
    இங்கே கனடாவில் என் மகள் தயிர் தோய்த்து, அதை ஓவனில் வைத்து, ஓவன் லைட்டை ஆன் செய்து வைத்து விடுவாள். தயிர் தோயும் ஆனால் கட்டியாக இல்லாமல், தோசை மாவு போல கொழ கொழவென்று இருந்தது. நான் ஓவனில் கீப் வார்ம் என்னும் ஆப்ஷனை தேர்ந்தெடுத்து ஓவனை சூடாக்கி விட்டு, அதில் தோய்த்த பாத்திரத்தை வைத்தேன். பிறகு ஓவன் லைட்டை ஆன் செய்வேன். பாத்திரத்தை ஓவனுக்குள் வைத்ததும் , கீப் வார்ம் என்பதை ஆஃப் பண்ணிவிட வேண்டும். சூப்பர் தயிர் கிடைக்கும்.
    இட்லிக்கு அரைக்கும் பொழுதும் இதே முறையை கடைபிடித்தால் மாவு நன்றாக பொங்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தயிர், மாவு - டிட்டோ பானுக்கா....

      கீதா

      நீக்கு
  17. இன்று தஞ்சையில் தேரோட்டம்
    கீழராஜவீதியில் இருக்கின்றேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா!!! நல்ல தரிசனம் கிடைக்கட்டும். அண்ணா வெயில் அதிகமாக இருக்குமே. தண்ணீர் குடித்துக் கொண்டே இருங்க. மோர் கிடைச்சா அதுவும் தேரோட்டத்துக்கு நீர் மோர் பந்தல் இருக்குமே. கவனமா இருங்க துரை அண்ணா

      கீதா

      நீக்கு
  18. இன்றைய குறிப்பு

    ஆகா....
    ஆனால் உ.கி.சாப்பிடுவது இல்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தெரியும் துரை அண்ணா. உங்களுக்கு ஒவ்வாது என்று.

      நன்றி துரை அண்ணா

      கீதா

      நீக்கு
  19. உ.கி. சாப்பிடுவது குறைவிலும்
    குறைவு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெரும்பாலானோர் உ கி சாப்பிடுவது இல்லைதாம்

      நன்றி துரை அண்ணா.

      கீதா

      நீக்கு
  20. ​பிரெட் க்ரம்ப்ஸ் எனப்படும் ரொட்டித் தூள் கடைகளில் உண்டு, கிடைக்கவில்லை என்றால் அவல் பொடித்து, பொரி பொடித்தது, ஓமப்பொடி/காராப்பூந்தி பொடித்து, உப்புமா ரவை, ரஸ்க் பொடி, என்பவற்றை உபயோகிக்கலாம். இவை கட்லட் உடையாமல் சேர்ந்து ஷாப்பில் நிற்க தண்ணீரை உறிஞ்சும் பொருட்கள் ஆகும்.

    அசைவர்கள் முட்டை வெள்ளை கரு உபயோகிப்பது உண்டு.

    Jayakumar

    பதிலளிநீக்கு
  21. பஜ்ஜி போல் இருந்தாலும் எ.பி.வாசகர்களுக்கு ஒரு புதிய செய்முறையை அறிமுகப்படுத்தினதோடு அல்லாமல் தயிர் உறைய வைக்கவும் கற்றுக் கொடுத்திருக்கும் தி/கீதாவுக்கு ரொம்பவே நன்றி. பாராட்டுகள். நான் இங்கே இதெல்லாம் செய்து பார்ப்பது கஷ்டம். என் வரை பத்தியம் மட்டும் சமைச்சுப்பேன். ஆகவே இந்த மாதிர் முன்னால் பண்ணினதை நினைச்சுக்கறேன். :))))))))

    உருளைக்கிழங்கு வேக வைத்துத் தட்டில் போட்டிருக்கும் படம் கண்ணைக் கவர்ந்தது. பஜ்ஜி போல் பண்ணித் தட்டில் போட்டிருப்பதும் பார்க்க அருமை. பொதுவாகப் படங்கள் உங்களைப் போன்ற தேர்ந்தவர்களால் எடுக்கப்படும்போது நன்றாகவே வருகின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஆகவே இந்த மாதிர் முன்னால் பண்ணினதை நினைச்சுக்கறேன்// நானும் பெரும்பாலான இனிப்புகளை விட்டுவிட்டேன். ஆனாலும் இனிப்பு கடைகளுக்குச் சென்று கண்ணால் எல்லா இனிப்புகளையும் பார்த்துவருவேன். விலையையும் பார்ப்பேன். அதுவே சாப்பிட்ட எண்ணத்தைத் தந்துவிடும். ஹா ஹா ஹா

      நீக்கு
  22. உருளை ரோஸ்ட் நன்றாக வந்துள்ளது.

    உருளை +கரட் சேர்ந்த கட்லட் எங்கள் வீட்டில் பிடிக்கும். குஜராத்தி பிண்டி அடைத்த ப்ரையும் செய்வோம்.

    கதை சுவாரசியமாக இருந்தது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!